அவன் பட்டபாடு, அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள்
அந்த நூ-லே விளக்கப்பட்டிருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை;
நீக்ரோக்கள் விஷயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள்
இழைக்கப் பட்டன என்பதனை எடுத்துக்காட்ட மட்டுமே "டிரம்'
பற்றிய ஏட்டினைக் குறிப்பிட்டுக் காட்டினேன். அத்தகைய
நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து
அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசய மல்லவா!!
"மனிதன்' எனும் ஏடு அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான
கருநிறத்தான் என்னென்ன அல்ல லுக்கும் ஆபத்துக்களுக்கும்,
இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான்
என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
பொறுத்தார் பூமியாள்வார்;
கல்வி எவரையும் உயர்த்தும்; காலம் மெள்ள மெள்ள, ஆனால்
உறுதியாக மாறித் தீரும் என்று அறிவுரைகள் அளிக்கப்படுகின்றன.
தாழ்ந்த இனம் அல்லது தாழ்த்தப்பட்ட இனம், தத்தளிக்கும்
சமூகம் என்ற நிலை இருப்பினும், அதிலேயும் நல்முத்துக்கள்
தோன்றிடின் மதிப்பளித்தே தீருவர் என்று பேசி மகிழ்வர்,
தீவிரமான மாறுதலைத் திட்டமிட்டு ஏற்படுத்தத் துணிவற்றவர்கள்;
மனமற்றவர்கள்; வழி அறியாதவர்கள், தமது வாதத்தை வலிவுள்ளதாக்கிட
உழைப்பால் உயர்ந்த உத்தமர்களின் கதைகளை ஆதாரமாகக் கூறுவர்.
அவ்விதமான "மணிகள்' நீக்ரோ சமுதாயத்திலே தோன்றாமலில்லை;
உயர் பதவிகளிலே அமர்ந்து நற்பெயர் ஈட்டாமலில்லை. ஆனால்,
அவர்கள் வகித்த பதவி தந்திடும் மயக்கத்தில் தம்மை மறந்து
அத்தகைய "கருப்பர்களை'ப் பாராட்டினார்களேயன்றி, கருப்பர்
இனத்தை அல்ல! கருப்பரிலும் இத்தகையவர்கள் உள்ளனரே என்று
வியந்து பேசினர். கருப்பரிலா இப்படிப்பட்டவன் தோன்ற முடிந்தது
என்றும், இந்த நிபுணன் நீக்ரோ இனமா? உண்மையாகவா? விசித்திரமாக
இருக்கிறதே என்றும் பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டனர்.
வெள்ளை நிற வெறியர் இதுபோலக்
கருதினர் என்றால், நீக்ரோக்களில் புரட்சி எண்ணம் கொண்டவர்கள்
தம் இனத்திலே ஒரு சிலர் இவ்விதமான "உயர் இடம் பெறுவது,
இனத்தின் விடுதலைக்கோ மேம்பாட்டினுக்கோ பயன்பட வில்லை;
அதற்கு மாறாக, மேலும் அந்த இனத்தை அழுத்தி வைக்கவே பயன்படுகிறது;
பலர் கோடரிக்காம்புகளாக்கப் படுகின்றனர்; அவர்களை உலகுக்குக்
காட்டி நீக்ரோ இனம் ஒரு குறையுமின்றி வாழுகிறது என்று
உலகுக்குக் கூறி உண்மை நிலைமையை மறைத்து விடுகின்றனர்;
கழுத்துப் புண்ணை மறைத்திட (மாட்டின் கழுத்தில்) கட்டப்படும்
வெண்கலமணி போன்றவர் இவர்! என்று கருதினர்; கூறிவந்தனர்.
புக்கர் டி. வாஷிங்டன் கல்வித்
துறையில் பணியாற்றிய வித்தகர்; நீக்ரோ: சோர்ந்த உள்ளம்
கொண்டவர்களுக்குப் புக்கர் டி. வாஷிங்டன் வரலாற்றை எடுத்துரைத்து,
தன்னம்பிக்கையுடன் பணியாற்றி வந்தால், தகுதிகளைத் தேடிப்
பெற்றால், மேம்பாடு அடைய முடியும், சமூகத்தில் உயர்ந்த
மதிப்புப் பெற்றிட முடியும் என்று எடுத்துக்காட்டாத அறிவாளர்
இல்லை என்று கூறலாம். அவ்விதம் "எடுத்துக் காட்டு'க்குப்
பயன்பட்டவர் புக்கர் டி. வாஷிங்டன்; கருநிறத்தவர்.
பள்ளிக்கூடங்களில் பாடப்புத்தகமாக்கப்பட்டிருக்கிறது
புக்கர் டி. வாஷிங்டன் வாழ்க்கை வரலாறு.
எபினேசர் பேசெட் ஜொனாதன்
ரைட், ஜெபர்சன் லாங், பிளான்ச் ப்ரூஸ், ராபர்ட் வீவர்,
பிரடரிக் மாரோ, ரால்ப் ப்ன்ச், ஆண்ட்ரூ ஹாட்சர், கார்ல்
ரோவன், இப்படிப் பட்டியல் இருக்கிறது, பல்வேறு துறைகளிலே
வித்தகர்களாக விளங்கிய நீக்ரோக்களைப் பற்றி. எனினும் இந்த
நிலைமை, உழைத்தால் உயரலாம், தகுதியைத் தேடிப் பெற்றுக்
கொள்ளலாம் என்ற பாடங்களைப் போதிக்கப் பயன்பட்டனவேயன்றி,
நீக்ரோ சமுதாயத்தைப் பிறவி காரணமாகவே, நிறம் காரணமாகவே
வெறுத்தொதுக்கியும் இழித்தும் பழித்தும் இன்னல் விளைவித்தும்
வந்த வெள்ளை வெறியரின் போக்கை மாற்றிடப் பயன்படவில்லை.
இந்தச் சூழ்நிலையில் வெள்ளை
மாளிகைக்கு ஒரு கருநிறத் தலைவர்! என்கிறபோதுதான், வியப்புடன்
கூடிய வெடவெடப்பு எடுக்கிறது நிறவெறியர்களுக்கு.
எந்த ஆண்டு இந்த அதிசய
நிகழ்ச்சி நேரிட்டது என்று நூலாசிரியர் குறிப்பிடவில்லை;
அமெரிக்காவில் இன்றுள்ள மனப்போக்கைக் கொண்டு இதற்கான ஒரு
"நாள்' முன்கூட்டிக் குறிப்பிடுவது இயலாது என்பதால் போலும்.
கென்னடி, அதற்குப் பிறகு
லிண்டன் ஜான்சன் ஆகியோர் காட்டும் உறுதி கலந்த போக்கைக்
கவனிக்கும் போது, எல்லாத் துறைகளிலும் நீக்ரோக்கள் சமஉரிமை
பெற்றுவிடுவது வெகு விரைவில் என்று எண்ணிடத் தோன்றுகிறது.
ஆனால் வெறியர்கள் இன்றும் நடாத்தி வரும் கொடுமைகளைப் பார்க்கும்
போது எத்தனைத் தலைமுறைகள் பிடிக்குமோ நீக்ரோக்கள் மனித
உரிமை பெற்றிட என்று திகைத்திடத் தோன்றுகிறது.
என்றோ ஓர் நாள், வெள்ளை
மாளிகையில், ஆட்சித் தலைவராக ஒரு கருநிறத்தவர் நுழைந்தால்,
நிலைமைகள் என்னென்ன வடிவமெடுக்கக் கூடும், எந்தெந்த புற்றிலிருந்து
என்னென்ன அரவு கிளம்பி வந்து தீண்டக்கூடும் என்பது பற்றி,
"கற்பனையாக', ஆனால், எல்லையற்ற பெருவெளியிலே பறந்திடாமல்,
ஆசிரியர் கதையொன்றைத் தீட்டித் தந்திருக்கிறார்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவர்
தமது பதவிக் காலத்தில் இறந்துபடுவாரானால், உடனடியாகத்
துணைத் தலைவர் தலைவராக்கப்படுவார். இது அங்கு மரபு. அந்த
மரபின்படிதான், கென்னடியைக் கொடியோன் சுட்டுக் கொன்றதும்,
அப்போது துணைத் தலைவராக இருந்து வந்த -ண்டன் ஜான்சன் குடியரசுத்
தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கென்னடி இருந்திருந்தால்
எவ்வளவு நாட்கள் குடியரசுத் தலைவராக இருந்திருப்பாரோ,
அந்த நாள் வரையில் துணைத் தலைவராக இருந்த ஜான்சன் தலைவராகப்
பணியாற்றினார்.
பிறகு புதிய தேர்தல் வந்தது.
அதிலே ஈடுபட்டு, ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது
குடியரசுத் தலைவராக இருந்து வருகிறார்.
குடியரசுத் தலைவர் இறந்துபடும்போது,
"இடைக்காலத் தலைவராக, துணைத் தலைவர் நியமிக்கப்படுகிற
மரபின்படி, பலர் தலைவராகப் பணியாற்றியுள்ளனர்.
அவனி புகழ் நிலைபெற்ற ஆபிரகாம்
லிங்கன் ஒரு கொடிய வனால், நாடக அரங்கமொன்றில் சுட்டுக்
கொல்லப்பட்டதனை, தம்பி! அறிந்திருப்பாய். அப்போதும், துணைத்
தலைவர், தலைவராக்கப்பட்டார்.
ஆரிசன், டைலர், கார்பீல்டு,
மக்ஸ்லீ, ஆர்டின்சு, ரூசிவெல்ட், இப்படிப் பலர், தலைவர்
பதவியில் இருந்தபடியே உயிர் நீத்தனர். அப்போதெல்லாம்,
துணைத் தலைவர்களே தலைவர்களாயினர்.
இந்த "மரபை'ச் சற்று விரிவுபடுத்தி,
அதன் அடிப்படையிலேதான், தமது கற்பனையை அமைத்திருக்கிறார்
இர்விங் வாலாஸ்.
தலைவர் இறந்துபட்டால்,
துணைத் தலைவர், துணைத் தலைவரும் இறந்துபட்டால்? பாராளுமன்றத்
தலைவர்! அவரும் இறந்துபட்டால்? பாராளுமன்ற மேலவைத் தலைவர்!
இப்படி ஒரு மரபுபற்றி ஆசிரியர் குறிப்பிட்டுக் கொண்டு,
தமது "கற்பனையை'க் கட்டியிருக்கிறார்.
மேலவைத் தலைவர், குடியரசுத்
தலைவராகும் நிலை எப்போது ஏற்படுமென்றால், எதிர்பாராத வகையில்
தமது பதவிக் காலத்தின்போதே, ஒரே சமயத்தில், குடியரசுத்
தலைவர், துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகிய மூவரும்
இறந்துபட்டிருக்க வேண்டும்.
அவ்விதமான ஒரு சூழ்நிலையை
நம்பத்தகாத முறையில் அல்ல, இருக்கக்கூடும் என்று எவரும்
கூறிடத்தக்க விதத்தில், "மனிதன்' என்ற ஏடு உருவாக்கிக்
காட்டுகிறது. திடீரென்று அமெரிக்கக் குடியரசின் துணைத்
தலைவர் இறந்துபடுகிறார். குடியரசுத் தலைவர், நண்பர் இறந்ததால்
ஏற்பட்ட துக்கத்தைத் துடைத்துக் கொள்ளவும் நேரமின்றி,
ஐரோப்பாவில், பிரான்சு நாட்டில் ஓர் ஊரில் சோவியத் அதிபரைச்
சந்தித்து ஆப்பிரிக்கப் பிரச்சினை பற்றிப் பேசவேண்டி ஏற்பட்டுவிடுகிறது.
அந்த மாநாட்டுக்குச் சென்றிருக்கிறார். அமெரிக்கத் தலைநகரில்,
மற்ற அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்களுடன்,
மாநாட்டு இடைவேளையில், "தொலைபேசி' மூலம் பேசுகிறார், குடியரசுத்
தலைவர் - சோவியத் அதிபரின் போக்குபற்றி, தான் மேற்கொள்ள
இருக்கும் ராஜதந்திரம் பற்றி, கேட்டு, வியப்படைவதும்,
தமது கருத்துக்களைக் கூறுவதும் மேலும் விளக்கம் கேட்பதுமாக
- அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் இருக்கையில், "தொலைபேசி'
நின்றுவிடுகிறது; ஏதோ இயந்திரக் கோளாறு. பதை பதைக்கிறார்கள்,
பாதியிலே பேச்சு நின்றுவிட்டதே என்று. நிமிடங்களி ஆண்டுகள்போல
நகருகின்றன. பிரான்சிலே, குடி அரசுத் தலைவர்; வாஷிங்டனிலே
அவருடைய பேச்சைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கும் ஆட்சிக்குழுவின்
பல்வேறு தரமுள்ள அதிகாரிகள்.
"அய்யோ'' என்று அவர்கள்
அலறும்படியான செய்தி வருகிறது தொலைபேசி மூலம். நம்ப முடியவில்லை;
அதிர்ச்சி, குழப்பம், கலக்கம்.
தொலைபேசி தெரிவிக்கிறது,
குடியரசுத் தலைவர் திடீரென்று இறந்துவிட்டார். மாநாடு
நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மாளிகையின் மேற்பகுதி இடிந்து
விழுந்துவிட்டது. அந்த இடத்திலேயே குடியரசுத் தலைவர் மாண்டுபோனார்!
தம்பி! எப்படி இருக்கும்
இந்தச் செய்தியைக் கேள்விப் பட்டால். கதை என்பதால் உருக்கம்
அந்த அளவுக்கு வராது; எனினும், எப்படி இருந்திருக்கக்
கூடும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ளும் விதமாக அல்லவா,
தாஷ்கண்டில் லால்பகதூர் மறைந்த செய்தி தாக்கிவிட்டது.
வாஷிங்டனில், குடியரசுத்
தலைவர் நடாத்தும் மாநாட்டின் தகவல் அறிந்துகொள்ளத் தொலைபேசி
பக்கத்தில் திரள்கிறார்கள் அதிகாரிகள், அமைச்சர்கள், அவர்களுக்குக்
கிடைப்பதோ, குடியரசுத் தலைவர் இறந்துபட்டார் என்பது.
துணைத் தலைவரோ ஏற்னவே மறைந்து
போனார்! தலைவரோ, பிரான்சிலே பிணமாகிக் கிடக்கிறார். எத்தனை
சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியும்! தத்தளித்தனர். அந்தத்
தத்தளிப்புக்கு இடையிலேயே "மரபு' குறிப்பிடுகிறபடி பாராளுமன்றத்
தலைவர், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டுமே. அவருடைய
முதல் அலுவலே, அந்தோ! முன்னாள் குடியரசுத் தலைவரின் உடலை
வரவேற்று, உரிய முறையில் அடக்கம் செய்து, அனுதாபம் தெரிவிப்பதாக
அமைகிறது. என்ன செய்வது! அவர் போன்ற ஒரு தலைவரை மறுபடியும்
எங்கிருந்து பெற முடியும்? பத்து நிமிடங்களுக்கு முன்பு
எவ்வளவு உற்சாகமாகப் பேசினார், "தொலைபேசி' மூலம். வேடிக்கை
மூட்டுகிற முறையிலேகூடப் பேசினாரே! இப்போது!! என்று எண்ண
எண்ண அவர்கள் மனம் சுக்குநூறாகிறது. ஆயினும் அரசு நடைபெற்றாக
வேண்டுமே, எனவே, துக்கம் உள்ளத்தைப் பிய்த்துக் கொண்டிருக்கும்
நிலையிலும், "சேதி அனுப்புக!' உடனடியாக! பாராளுமன்றத்
தலைவரை, குடியரசுத் தலைவராக்கும் சட்ட ஒழுங்கு நடைபெற்றாக
வேண்டுமே! கூப்பிடுக அவரை!'' என்றார் ஓர் அமைச்சர். "அவர்
இங்கு எங்கே இருக்கிறார்? அவருமல்லவா, மாநாட்டில் கலந்து
கொள்ள, குடியரசுத் தலைவருடன் சென்றிருக்கிறார்'' என்று
விவரமளிக்கிறார் வேறொருவர். மீண்டும் பரபரப்பு, பதைப்பு!
விபத்து நடந்தபோது "அவர்' எங்கே இருந்தார்? அவருக்கு எதுவும்
நேரிடவில்லையே! என்ற பதைப்புப் பேச்சு. தொலைபேசி வேலை
செய்கிறது. அடிபட்டவர்களில் அவரும் ஒருவர். ஆனால், உயிர்
போகவில்லை. மருத்துவமனையில் கிடத்தப் பட்டிருக்கிறார்
என்ற செய்தி கிடைக்கிறது. இவ்வளவு கேடுகளுக்கிடையில் இந்த
ஒரு நல்ல செய்தியாவது கிடைத்ததே! அவருக்கு ஒன்றும் இல்லை!
மருத்துவமனையில் இருக்கிறார். காயம்; அவ்வளவுதான் என்று
ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டு தைரியத்தைத் தருவித்துக்
கொண்டிருக்கும்போதே அவர்கள் அனைவரையும் அடித்துக் கீழே
தள்ளிவிடத்தக்க தாக்குதலை நடத்திற்று தொலைபேசி; "அவரும்
இறந்துவிட்டார். மருத்துவமனையில்'' என்ற செய்தியைத் தெரிவித்து.
ஒரு அடி விழுந்ததும் மற்றொன்று;
அதைத் தொடர்ந்து இன்னொன்று விழுவதுபோல, கொடுமையான செய்திகள்
கிடைத்தன அவர்கள் திகைத்தனர், தேம்பினர், தத்தளித்தனர்.
இப்படியா ஒரு சங்கிலித் தொடர்போல இழப்புகள்! எப்படித்தான்
ஒரு நாடு "இவ்வளவை'த் தாங்கிக் கொள்ளும்? தலைவர், துணைத்
தலைவர், பாராளுமன்றத் தலைவர் மூவருமல்லவா மறைந்தனர்! இனி,
இனி. . . ? என்று கண்ணீர் பொழிந்த நிலையினர் குமுறினர்;
"இனி, குடியரசுத் தலைவராக வேண்டியவர், பாராளுமன்ற மேலவைத்
தலைவர்!'' என்றார் ஒருவர்; அவர் யார் என்பது பற்றிய நினைப்புமற்ற
நிலையில் சோகத்துடன் "ஆம்' என்றனர் மற்றையோர். அந்த மேலவைத்
தலைவர்தான் தம்பி டக்ளஸ் டில்மன் எனும் ஒரு நீக்ரோ!!
எப்படிப்பட்ட சூழ்நிலையைத்
தீட்டி, ஒரு நீக்ரோவைக் குடியரசுத் தலைவர் ஆக்கிக் காட்டியுள்ளார்
ஆசிரியர் பார்த்தனையா!!
தகுதியற்ற ஒருவர் தலைமைப்
பதவியைச் சூழ்ச்சித் திறத்தால் பிடித்துக் கொண்டு விட்டால்,
பிறகு தகுதி மிக்கவர்களும், அச்சத்தால் தாக்கப்பட்டு,
அடிபணிந்து கிடக்கின்றனர், காண்கின்றோம்.
டக்ளஸ் டில்மன், காட்டிலே
திரிந்துகொண்டிருந்த ஒரு தற்குறி அல்ல, நாட்டு ஆட்சி மன்றத்தில்
ஒன்றான செனட் சபையின் தலைவர். தகுதி காரணமாக அந்த நிலை
பெற்றார். வழக்கறிஞர். போதுமான அளவு வசதி பெற்றவர்; புகழ்
ஈட்டிக் கொண்டவர். பதவிப் பசி கொண்டவரல்ல. எதிர்பாராத
அழைப்பு! எட்டி எட்டிப் பார்த்தாலும் தொட்டுப் பார்த்திட
முடியாத ஒரு பதவியில் அவர் "நிலைமை'யால் இழுத்துச் சென்று
அமர்த்தப்பட வேண்டி ஏற்படுகிறது.
டக்ளஸ் டில்மன் - செனட்
தலைவர்! அப்படியென்றால்? மரபு கூறுகிறது. அவர்தான் குடியரசுத்
தலைவர் வேலை பார்க்க வேண்டும் என்று. குடியர.சுத் தலைவராகவா?
ஒரு நீக்ரோவா?
செனட் சபையின் தலைவர் டக்ளஸ்
டில்மன்!
ஆமாம்! அவர் ஒரு நீக்ரோ!
கருநிறத்தான்! கனவானாக இருக்கலாம், கற்றறிவாளனாக இருக்கலாம்!
வழக்கறிஞராக இருக்கலாம்! ஆனால், அவர் ஒரு நீக்ரோ!!
மரபு இருக்கிறதே, தலைவர்,
துணைத் தலைவர், பாராளுமன்றத் தலைவர் ஆகியோர் இறந்துபடின்,
செனட் சபைத் தலைவரே. குடியரசுத் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட
வேண்டும் என்று.
மரபு அது! ஆமாம்! ஆனால்
டக்ளஸ் டில்மன், ஒரு நீக்ரோ! ஒரு நீக்ரோவா, அமெரிக்கக்
குடியரசுத் தலைவராவது! எந்த அமெரிக்காவில் அடிமையாகக்
கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டானோ அந்த நீக்ரோவின் வழி
வழி வந்தவன், அந்த இனத்தவன், அவன் படித்தவனாக இருக்கட்டும்,
பண்புள்ள வனாக இருக்கட்டும், மரபு ஆயிரம் கூறட்டும், அந்த
நீச்ரோ, அமெரிக்கக் குடியரசின் தலைவனாகப் பதவி ஏற்பதா!
அதை அனுமதிக்கலாமா! வெள்ளை இனத்தவர் ஏற்றுக் கொள் வார்களா!
யார் உங்கள் குடியரசுத் தலைவர் என்று உலகினர் கேட்கும்போது,
எப்படி மனம் ஒப்பி ஒரு நீக்ரோ கனவான் எமது தலைவராக இருக்கிறார்
என்று கூறமுடியும். மாநாடு நடத்தச் சென்ற குடியரசுத் தலைவரைச்
சாகடித்ததே, மண்டபம் இடிந்து விழுந்து; அது அவரை மட்டும்
அல்லவே, நமது இனத்தின் மானத்தையே அல்லவா நொறுக்கிவிட்டிருக்கிறது.
வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர்!! காது குடைகிறதே கேட்கும்போதே;
இரத்தம் கொதிக்கிறதே கோபத்தால்; கண்கள் இருளடைகின்றனவே
அதிர்ச்சி தரும் மயக்கத்தால்! டக்ளஸ் டில்மன், அமெரிக்கக்
குடியரசுக்குத் தலைவரா!! ஆமாம்! மரபு கட்டளையிடுகிறதே!
எப்படி அந்த மரபை மீற முடியும்? ஆனால் எப்படி, ஒரு கருப்பரைத்
தலைவராகக் கொள்ள முடியும்? எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?
சவுக்கடிப்பட்ட இனம்! கட்டிவைத்து
சுட்டுக் கொல்லப் பட்ட இனத்தினன். நமது வேட்டை நாய்கள்
இவன் இனத் தவனை முன்பு துரத்தித் துரத்திக் கடித்திட,
கடிபட்டவன் கதறிக் கதறித் துடித்திட, வெள்ளைச் சீமாட்டிகள்
காட்சியினைக் கண்டுகண்டு கைகொட்டிச் சிரித்தனர் முன்பு!
அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவன் - நீக்ரோ - ஆட்சித் தலைவனா!
நமக்கா!!
இப்போது நீக்ரோ அடிமை அல்ல!
சந்தைச் சதுக்கத்திலே அவனைக் கட்டிவைத்து அடிக்க, சட்டம்
இடம் கொடுப்ப தில்லை. இப்போது அவன் அங்காடிப் பொருள் அல்ல;
ஆபிரகாம் லிங்கன், அடிமை முறையை ஒழித்ததால்! ஆனால், இப்போதும்
நீக்ரோ தானே! அடிமை அல்ல! ஆனால் கருநிறம்! மட்டம்! தாழ்வு!
அந்த இனத்தவனல்லவா, டக்ளஸ் டில்மன்.
இப்போதும், வெள்ளை இனத்தின்
உயர்விலும் தனித் தன்மையிலும் நம்பிக்கைக் கொண்டவர்கள்,
கருப்பர்களைப் பள்ளிகளில், விடுதிகளில், படக்காட்சிக்
கொட்டகைகளில் சேர்க்க மாட்டார்களே! ஒதுக்கித்தானே வைத்திருக்கிறார்கள்?
ஓரத்தில்தானே இன்றும் தள்ளப்பட்டுக் கிடக்கிறான்; உழைக்கிறான்
என்பதால் வேலை தருகிறோம்; வேலை செய்வதால் நாம் நடமாடும்
இடத்தில் அவனும் நடமாடுகிறான்! ஆனால் நாமும் அவனும் ஒன்றா!
ஒப்புக்கொண்டு விட்டோமா? இல்லையே! வேட்டையாடிப் பிடிப்து,
சங்கிலிகளால் பிணைப்பது, சந்தையிலே நிறுத்தி வைத்து விற்பது,
சவுக்காலடிப்பது, இவை இல்லை! கூடாது என்கிறது சட்டம்;
அதனால். ஆனால் வெள்ளை வெள்ளைதான், கருப்பு கருப்புதானே!
வெள்ளை ஆளும் இனம்! கருப்பு, அடிமை இனம்தானே! உயர உயரப்
பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகிவிடுமா! நீக்ரோ, படிப்பால்,
பணத்தால், பட்டத்தால், வெள்ளையனாகி விடுவானா? அமெரிக்காவில்
பிறந்தான், வளர்ந்தான் என்பதாலேயே அவன் அமெரிக்கனாகி விடுவானா!
அமெரிக்கன் என்று மக்கள் தொகைக் கணக்குக்காகக் கூறினாலும்
நீக்ரோ வெள்ளையன் ஆகிவிடுவானா! அமெரிக்கா, எவருடைய நாடு?
வெள்ளையர் நாடு! வெள்ளையர் நாட்டுக்கு ஒரு கருப்பர் தலைவராவதா!!
தம்பி! நிறவெறி கொண்டவர்களிலே,
சற்று ஆத்திரத்தை அடக்கிக் கொள்ளத் தெரிந்தவர்களே இவ்விதமெல்லாம்
தான் பேசியிருந்திருக்க முடியும்! டக்ளஸ் டில்மன் எனும்
நீக்ரோ, வெள்ளை மாளிகை அமர்ந்து குடியரசுத் தலைவராகப்
போகிறார்; மரபு அவ்விதம் அமைந்திருக்கிறது என்று கூறப்பட்டபோது.
டக்ளஸ் டில்மன்! குடியரசுத்
தலைவர்; அமெரிக்காவுக்கு.
வெள்ளை மாளிகையின் கூடத்திலே
குழுமியிருந்த அமைச்சர்கள், உயர்நிலை அதிகாரிகள், தமக்கு,
"அதிபராக'ப் போகும் டக்ளஸ் டில்மனைப் பார்க்கிறார்கள்;
சிறிது தொலைவில் நிற்கிறார் டக்ளஸ்! அவர்களின் கண்களிலே
பொறி பறக்கிறது. டில்மன்? திகைத்துப் போயிருப்பார்! வேறு
எப்படி நிலை இருந்திருக்க முடியும்.
மரபின்படி, உயர்நீதிமன்றத்
தலைவர் வருகிறார், பதவிப் பிரமாணம் செய்துவைக்க!
பைபிள்! ஆம்! வெள்ளையருக்கு
ஒன்று, கருநிறத்தவருக்கு வேறு ஒன்றா இருக்கிறது! இல்லையே!
இரு நிறத்தவருக்கும் ஒரே பைபிள்!
கட்டினவனே காத்திடுவான்.
அதைத்தவனே பாதுகாப்பான்
அவன் துணையின்றிப் பாதுகாவலன்
எதையும் பாதுகாத்திட முடியாது
என்ற கருத்து கொண்ட மணிமொழியுள்ள
பகுதியைத் தேர்ந்தெடுத்து, அதனையே தமது "பிரார்த்தனை'யாகப்
படிக்கிறார் டில்மன்!
பதவிப் பிரமாணம் செய்து
வைக்கப்படுகிறது.
அமெரிக்க நாட்டுக்கு அமைந்துள்ள
அரசியல் சட்ட திட்டத்தையும் ஒழுங்கையும் காப்பாற்றியும்
அதற்குக் கட்டுப்பட்டும் நான் ஆட்சி நடத்தி வருவேன் என்று
உறுதிமொழி கூறுகிறார் டில்மன்.
"அமெரிக்கக் குடியரசுத்
தலைவரே, வாழ்க! கர்த்தர் தங்களை - அமெரிக்கக் குடியரசுத்
தலைவரை - அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அமரும் முதல்
நீக்ரோவைக் காத்திடுவாராக! - என்று உயர் நீதிபதி கூறுகிறார்.
சூழ நிற்கிறார்கள் வெள்ளை இனத்தவர்! அவர்கள் அனைவரும்
எந்தக் குடியரசுத் தலைவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடந்து
தீரவேண்டுமோ, அந்தக் குடியரசுத் தலைவர் நிற்கிறார்; ஒருவரை
ஒருவர் பார்க்கிறார்கள் - ஓராயிரம் வகையான எண்ணங்கள் குமுறி
எழுகின்றன!
வெள்ளை மாளிகையில் ஒரு "கருப்பர்'
அதிபராகிறார்! பிறகு? என்கிறாயா, தம்பி! துவக்கம் இது!
தொடர்வது என்ன என்கிறாயா? அடுத்த கிழமை கூறுகிறேன் இப்போது,
காணக் கிடைக்காத காட்சியைக் காண்பதோடு திருப்தி அடைவோம்;
வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர் அதிபராகி விட்டிருக்கிறார்.
அண்ணன்,
6-2-66