இந்தப் போக்கு இனிக் கூடாது என்ற உண்மையினை நாம் உணர்ந்துகொள்வதற்கு
இந்தத் தோல்வி ஒரு பாடமாக அமையட்டும் என்பதற்காக.
உண்மை எது, பொய் எது என்று
கண்டுகொள்வது மிக எளிது என்று எண்ணிவிட்டோம்; பலர் அவ்விதம்
எண்ணிக் கொள்கிறார்கள். மெய்யும் பொய்யும் கிட்டத்தட்ட
குயிலும் காகமும்போல என்று கொள்ளலாம்; பலரால் இதுவா அதுவா
என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட முடிவதில்லை. அதிலும்
பொய் பொன்னாடை அணிந்துகொண்டும், மெய் புழுதி படிந்த மேனியுடனும்
உலா வரும்போது பலருக்கு மயக்கம் - பொய்யின் பக்கம் ஈர்க்கப்பட்டுவிடுகின்றனர்.
நாம், தம்பி! உண்மை நமக்குப்
புரிவதால், எல்லோருக்கும் உண்மை புரியத்தானே செய்யும்
என்று எண்ணிக்கொள்கிறோம்.
உண்மையின் பக்கம் நாம்
இருக்கிறோம் என்பது மட்டும் போதாது. உண்மையின் பக்கம்
அனைவரும் வந்து சேரும்படி செய்யவும் வேண்டும். அதற்கான
முறைகளைத் திறமையாக, செம்மையாகச் செய்தே வெற்றி பெற முடியும்.
அதிலே நாம் தவறிவிட்டோம்; காரணம், திறமைக் குறைவு என்று
கூடக் கூற மாட்டேன்; உண்மையை உண்மை என்று மெய்ப்பிக்க
வாதாடவும் வேண்டுமா என்று எண்ணிக்கொண்டு விட்டதால்,
இது எப்படிப்பட்ட அரசு என்பதுபற்றியும்,
இந்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் நாட்டு மக்கள்
படும் அல்லல் பற்றியும், இந்த அரசு நடத்திக் காட்டிய அடக்குமுறைக்
கொடுமைபற்றியும், மக்கள் மிக நன்றாக அறிவார்களே; அப்படிப்
பட்ட மக்கள், தேர்தலில் எப்படிக் காங்கிரசை ஆதரிக்க முடியும்!
என்று எண்ணிக்கொண்டோம்.
மக்களில், அரசியல் பிரச்சினைகளை
அறிந்தவர்கள், இந்த அரசின் இயல்பினைப் புரிந்துகொண்டுதான்
இருக்கிறார்கள்; அதிலே எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.
ஆனால், அரசியல் பிரச்சினைகளைத்
தாமே நேரடியாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்பவர்கள் என்று
ஒரு பகுதி, மற்றவர் கூறிடும் முடிவினை ஏற்றுக்கொள்ளும்
ஒரு பகுதி என்ற முறையில்தான் சமூகம் இருக்கிறது என்பதனை
நாம் மறந்துவிடக் கூடாது.
மக்களாட்சி முறையின் மாண்பினை
நன்கு உணர்ந்துள்ள நாடுகளில், தாமாகவே அரசியல் பிரச்சினைகளை
ஆய்ந்தறிந்து தக்க முடிவினை மேற்கொள்வோரின் அளவு அதிகம்,
இங்கு இருப்பதைக் காட்டிலும்.
எனவேதான், இங்கு உண்மைக்காகப்
பரிந்துரைக்கும் பணியிலே மும்முரமாக ஈடுபட்டாகவேண்டி இருக்கிறது.
இந்தப் பணி எந்த அளவுக்குத் தேவை என்பதை மறந்த நிலையில்
தருமபுரி சென்றோம்; விளைவு நமக்கு வேதனை தந்துவிட்டது.
இந்த அரசு நடாத்திய அடக்குமுறை
பற்றிய கருத்தினைத் தெரிவிக்கும் கடமையைக் காட்டிலும்,
இவருக்கா அவருக்கா ஓட்டு என்ற முறையிலேயும், இன்னின்னார்
சொல்கிறார்கள் என்பதற்கா, அவர்களெல்லாம் சொல்கிறார்கள்
என்பதற்கா? எதற்கு நாம் கட்டுப்படுவது என்ற முறையிலும்,
தருமபுரி மக்கள் இந்தத் தேர்தலைக் கவனித்தார்கள்.
சுட்டு வீழ்த்தப்பட்டவர்களிடம்
இரக்கமற்றவர்களாக, இழப்புக்கு ஆளானவர்களின் வேதனையைத்
துடைக்க வேண்டும் என்ற எண்ணமற்றவர்களாக, தருமபுரி மக்கள்
இருந்திருக்க முடியாது - எவரும் அவ்விதமானவர்களாக இருந்திட
மாட்டார்கள்.
ஆனால், அந்தக் கருத்தைத்
தெரிவிக்கும் வாய்ப்பு இந்தத் தேர்தல் என்ற எண்ணத்தைவிட
வேறு பலவிதமான எண்ணங்களை அவர்கள் கொண்டுவிட்டனர் என்றே
தோன்றுகிறது. நாமோ இதயமுள்ளவர்கள் எவரும் இவ்வளவு கொடுமைகளைச்
செய்த ஒரு ஆட்சியை நடத்திவரும் கட்சியை ஆதரிக்கமாட்டார்கள்
என்ற நம்பிக்கையை அளவுகடந்த முறையிலே கொண்டுவிட்டிருந்தோம்.
மக்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய
நீதி நியாய உணர்ச்சி, பரிவுபச்சாதாப உணர்ச்சி ஆகியவற்றினைக்
கூட உருக்குலையச் செய்திடும் வல்லமை, காங்கிரஸ் கட்சியினருக்கு
உண்டு என்பதைத் தருமபுரி எடுத்துக்காட்டிவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு உள்ள
இந்த வல்லமை, போற்றுதலுக்குரியதாகாது; நச்சுப்பை கொண்டுள்ள
தற்காகப் பாம்பினைப் பாராட்டுவார் இல்லை,
நாம் செய்த தவறு, காங்கிரஸ்
கட்சி இந்த நச்சுப் பரப்பிடும் செயலுக்கேற்ற திறமை பெற்றுள்ளது
என்பதுபற்றி அறிந்து கொள்ளாதது என்றும் கூறுவேன்.
நாமோ குற்றம் செய்துவிட்டோம்;
மக்களோ நம்மை மன்னிக்கமாட்டார்கள். தண்டிக்கத்தான் போகிறார்கள்
என்ற அச்ச உணர்ச்சியால் உந்தப்பட்ட காங்கிரஸ் கட்சி, இரண்டு
திங்கள், ஒரு சிற்றூர் விடாமல் தமது பணியாளர்களை ஏவி,
மக்கள் மனத்திலே இருந்து வந்த கொதிப்பை மாற்றவும், அவர்கள்
முன் வேறு பிரச்சினைகளை வைக்கவும் முனைந்து வந்தபோது,
கழகம் அதனைப் பெரிதாகக் கருதவில்லை, தடுத்திடவும் முனையவில்லை.
முதலிலே அறிவிக்கப்பட்ட
தேர்தல் நாள் ஒத்தி வைக்கப் பட்டது; வேறோர் நாள் குறிக்கப்பட்டது;
அந்த இடைவெளியின் போது, இச்சகம் பேசிடவும், நச்சுக்குழியைப்
பச்சை இலை போட்டு மூடிமறைத்திடவும், நாவிலே தேன் தடவிவிடவும்,
காங்கிரசார் மெத்தத் திறமையுடன் பயன்படுத்திக்கொண்டனர்.
திண்ணைப்பேச்சு, சாவடிப்பேச்சு,
கூட்டுறவு அமைப்பு களில் கூடிக்குலவுதல் போன்ற முறைகளைக்
காங்கிரஸ் கட்சி தன் வெற்றிக்குப் பயன்படுத்திக்கொண்டது.
இந்த முறைகளைக் கழகம் மேற்கொள்ளவில்லை;
முயல வில்லை; காரணம்? மக்கள் எப்படியும், அடக்குமுறையை
அவிழ்த்துவிட்ட காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிப்பார்கள்
என்ற நம்பிக்கை.
கழகத் தோழர்கள் மட்டுமல்ல,
பொதுமக்களிலே ஒரு பகுதியினரே கூட, சென்ற தேர்தலின்போது
காணப்பட்ட புள்ளி விவரத்தைக் கொண்டு ஒரு தவறான முடிவுக்கு
வந்திருந்தனர். வெற்றிபெற்ற சுயேச்சை உறுப்பினர் மறைந்த
திரு. வீரப்ப செட்டியாருக்குக் கிடைத்த 24 ஆயிரம் வாக்குகளும்,
காங்கிரஸ் எதிர்ப்பாளரின் வாக்குகள், ஆகவே, இம்முறையும்
அந்த 24 ஆயிரம் வாக்குகளும் காங்கிரசுக்கு எதிர்ப்பாகவே
இருக்கும், ஆகவே, அவை அவ்வளவும் கழகத்துக்குச் சேரும்
என்று கணக்கிட்டனர்.
அந்தக் கணக்கு பொய்த்துவிடுமா
என்பதுபற்றிய எண்ணம் கூட எழவில்லை; அவ்வளவு நிச்சயமாக
இருந்துவிட்டோம். தேர்தல் முடிவு, அந்தக் கணக்கு தவறு
என்பதைக் காட்டி விட்டது; அந்த வாக்குகளைக் காங்கிரஸ்
கட்சி பெற்றுக்கொள்ள எல்லா முறைகளையும் பயன்படுத்திக்கொண்டது.
அந்த வாக்குகள் நம்மை விட்டுவிட்டு வேறு எங்கும் போய்விடாது
என்று எண்ணினோம்; தோல்வி கண்டோம்.
இவற்றை நான் கூறுவதன் காரணம்,
தம்பி! தோல்வி எதிர்பார்த்ததுதான் என்று வாதாட அல்ல; வெற்றி
நிச்சயம் என்று அதிக அளவு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு
விட்டோம், தொகுதியின் நிலைமையை நன்கு ஆராயாமல் என்பதைக்
காட்டத்தான்.
இன்றுகூட, தனித்தனியாகத்
தருமபுரி தொகுதி மக்களைக் கண்டு,
இந்தி ஆட்சி மொழியாக்கப்படுவது
நியாயமா?
மாணவர் கிளர்ச்சியை இரக்கமற்ற
விதமாகத் தாக்கித் தகர்க்க முற்பட்டது நியாயமா?
அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு
59 பேர் துப்பாக்கிக்குப் பலியாகிடச் செய்தது நியாயமா?
என்று கேட்டால், நியாயம்
அல்ல என்றுதான் கூறுவார்கள்.
ஆனால், காங்கிரஸ் பணியாளர்
இரண்டு திங்களாக நடத்திவந்த பிரசாரம், அதற்காக நடப்பது
அல்ல இந்தத் தேர்தல் - தருமபுரி தலைநகராக வேண்டுமா வேண்டாமா?
தலைநகர் வேண்டும் என்றால், காங்கிரஸ் வெற்றி பெற்றாக வேண்டும்,
அதற்காகத்தான் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது என்பதுதான்.
இந்தி ஆட்சி மொழியாவதைக்
கண்டிக்கிறோம், அடக்கு முறையைக் கண்டிக்கிறோம். ஆனால்,
அதேபோது தருமபுரி தலைநகராக வேண்டும் என்றும் விரும்புகிறோம்,
அதற்காகவே காங்கிரசுக்கு ஓட்டுப் போடுகிறோம். என்ற எண்ணத்துடன்,
தருமபுரியின் குறிப்பிடத்தக்க புள்ளிகள் முனைந்து நின்று
பணியாற்றினர். காங்கிரசின் வெற்றிக்கு அது மிக நல்ல வாய்ப்பாக
அமைந்தது.
மறுப்பார்கள் காங்கிரஸ்
கட்சியினர்; எனினும், நான் மனதார நம்புவதை எனக்கு அறிவிக்கப்பட்டதை
நான் சொல்லுகிறேன்: காங்கிரசுக்கு எதிராகப் பணியாற்ற முனைபவர்கள்,
பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப் படுவார்கள் என்ற
திண்ணைப் பேச்சு, தருமபுரித் தொகுதியில் மிக வேகமாகப்
பரவிற்று.
அமைச்சர்களோ, தரமுள்ள தலைவர்களோ
இந்தத் தவறான பிரசாரம் செய்தார்கள் என்று நான் கூறவில்லை.
ஆனால், காங்கிரசுக்கு ஓட்டுத் திரட்டச் சென்ற பணியாளர்கள்,
அதிக அளவில் அரசியல் தெளிவில்லாதாரிடம் இந்த அச்சம் எழச்செய்துவிட்டிருந்தனர்
என்று அறிகிறேன்.
கருணாநிதியைப் பார்க்கிறீர்களல்லவா?
வழக்குக் கூடப் போடாமல் உள்ளே பிடித்து அடைத்துவிட்டார்கள்,
பாதுகாப்புச் சட்டப்படி!
என்று பேசி, பலருக்கு,
உண்மைதானே! ஒரு பெரிய கட்சியின் பொருளாளருக்கே இந்தக்
கதி என்றால், நாம் காங்கிரசை எதிர்த்தால், என்னதான் செய்யமாட்டார்கள்!
நமக்கேன் வீண் வம்பு! காங்கிரசுக்கே வேலை செய்வோம்! என்ற
எண்ணம் எழுந்தது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
அடக்குமுறை கண்டு அருவருப்பும்
ஆத்திரமும் எழுவது போலவே, சமூகத்தில் ஒரு பகுதியினருக்கு
அச்சம் ஏற்பட்டுவிடுவது இயற்கை. இந்த அச்சம் காரணமாகப்
பலர் காங்கிரசுக்கு ஓட்டுத் திரட்டும் வேலையில் தம்மை
ஈடுபடுத்திக்கொண்டார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
இவற்றைக் கூறும் நான், ஆகவே,
தருமபுரியில் நாம் தோற்றது வியப்பல்ல என்று வாதாடவில்லை;
இந்த நிலைமை களை மீறி நாம் பணிபுரிந்து வெற்றி பெற்றிருக்க
வேண்டும். கழகத்தின் பணி, சூது சூழ்ச்சிகளை முறியடிக்கத்
தக்கதானதாக வலிவு பெற்றாக வேண்டும். தருமபுரித் தோல்வி
இந்தப் பாடத்தைத்தான் நமக்கு அளிக்க வேண்டும்.
தம்பி! மகனை இழந்த மாதா
மனம் நொந்து கதறிக் கிடக்கிறாள். கணவனை இழந்த காரிகை கண்ணீர்
வடிக்கிறாள்; அண்ணனை இழந்த தம்பி புரண்டு அழுகிறான்! இத்தனைக்கும்
காரணமான அடக்குமுறையை அவிழ்த்துவிட்ட ஆட்சியின் பொறுப்பினை
ஏற்றுக்கொண்டுள்ள கட்சி தேர்தலிலே வெற்றி பெறுகிறது என்றால்
இது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போன்றதல்லவா, இது
நடந்துவிட்டதே தருமபுரியில்!!
"சுட்டோம், சுடுவோம்!''
என்று ஆட்சியினர் ஆர்ப்பரித் தாலும் வியப்பில்லையே!
சுட்டோம், ஓட்டளித்தனர்
என்று வாதாடிடவும் முனைவரே வன்கணாளர்கள். எதை எதையோ எண்ணிக்
கொண்டு, தருமபுரி மக்கள் நடந்துகொண்ட போக்கு, ஆட்சியாளர்களுக்கு,
நாம் எப்படியும் நடக்கலாம், எதையும் செய்யலாம், எத்தனை
முறையும் சுடலாம், எத்தனை பிணமும் விழலாம், யார் என்ன
கேட்க முடியும் என்ற எண்ணத்தை அல்லவா உண்டாக்கிவிடும்.
தோற்றது கழகமா! இல்லையே! அடக்குமுறைக்கு ஆளான மக்களின்
இதயக் குமுறலை அல்லவா, இந்தத் தேர்தல் தோல்வி, பொருளற்றதாக்கி
விட்டது. நல்லாட்சிக்கான முயற்சிக்கல்லவா பலமான அடி விழுந்து
விட்டது!
வீழ்ந்துபட்ட மக்களின் சார்பில்
நின்றோம், நம்மை வீழ்த்தி விட்டார்கள். வேதனைப்பட்டவர்களின்
துயர் துடைக்க முனைந்தோம். தோற்கடித்துவிட்டார்கள். இந்தத்
தோல்வி, விழிப்புற்ற தமிழர்களுக்கன்றோ பெருந் தோல்வி என்றாகி
விட்டது. தேம்பித் தவித்திடும் தமிழ்த்தாயே! உன் கண்ணீரைத்
துடைத்து, நீதியை வெற்றி பெறச் செய்ய முடியாமற் போய்விட்டது.
என்னை மன்னித்துவிடு! என்றன்றோ! நாம் ஒவ்வொருவரும் மண்டியிட்டு
முறையிட்டுக்கொள்ளவேண்டி ஏற்பட்டுவிட்டது.
மகனே, மனம் தளர்ந்து போகக்கூடாது.
நீதியின் பக்கம் நின்றாய், மகிழ்ச்சி! எனக்காகப் பரிந்து
பேசிப் பணியாற்றினாய், பெருமைப்படுகிறேன். உன் வல்லமை
வளரும், தோல்வி வெற்றிக்கு வழி அமைக்கும் என்று கூறித்
தமிழ்த்தாய் நம்மைத் தேற்றுவாள் என்பது உறுதி.
நியாயம் சில வேளைகளில் வெற்றிபெறாமற்
போய்விடக் கூடும், அதனாலேயே நியாயத்தின் பக்கம் நிற்கத்
தேவையில்லை என்ற முடிவுக்கு அறிவாளர் எவரும் வரமாட்டார்கள்.
நியாயம் வெற்றி பெறத்தக்க விதமாக உழைப்பதற்கான வலிவினைத்
திரட்டிக் கொள்வோம் என்ற உறுதியைப் பெறுவதே தீரர் கடன்.
நஞ்சு கொடுத்துச் சாக்ரடீசைச்
சாகடித்துவிட்டதாலேயே, சாக்ரடீசின் கொள்கையைச் சாகடித்துவிட
முடிந்ததா! இரண்டு அங்குல நீளமே உள்ள தேள், கொட்டினால்
ஆறடி ஆள்கூடத் துடிதுடிக்கிறான்; அதனாலேயே ஆளைவிடத் தேள்
வலிவுள்ளது என்றாகிவிடுமா; ஆளிடம் அந்தத் தேள் சிக்கவில்லை,
கொட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை நிலை. தருமபுரியில்
கழகத்தைத் தோற்கடித்துவிட்டதாலேயே காங்கிரசுக்கு எதிராகத்
திரண்டுகொண்டிருக்கும் எதிர்ப்பும், அந்த எதிர்ப்பை உண்டாக்கிக்
கொடுக்கும் மக்களின் எழுச்சியும் மடிந்துவிட்டது என்றாகிவிடாது.
தருமபுரியில் பெற்ற வெற்றி
காரணமாகக் காங்கிரஸ் கட்சி தனது வல்லமைபற்றி மிக அதிகமான
கணக்குப் போட்டுக் கொள்ளுமானால் அது நமக்கு நல்லதுதான்.
தொடர்ந்து தவறுகளைச் செய்யவும், மக்களின் மனக் கொதிப்பை
அதிகமாக்கக்கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடவும், அடக்கு முறையை
அவிழ்த்துவிடுவதிலே சுவை காணவும், தனது ஊழலாட்சியைத் திருத்திக்கொள்ளாதிருக்கவும்,
துணிந்துவிடும். அந்தக் கட்டம் வேகமாக வளரும்போது, இது
வரை அக்கறையற்று இருந்துவந்த மக்களும் சீறி எழுவார்கள்;
ஆசைக்கு ஆட்பட்டு அநியாயத்துக்குத் துணைபோனவர்களும் தமது
தவற்றினை உணர்ந்து நீதியின் பக்கம் நிற்பார்கள்; அஃது
காங்கிரசாட்சியை வீழ்த்தும் வலிவை மக்களுக்கு அளித்திடும்.
அந்த நம்பிக்கையுடன் கழகம்
பணியாற்றிவரும்; தருமபுரித் தோல்வி அந்தப் பணியின் தரத்தையும்
வேகத்தையும அதிகமாக்கி விடுமேயன்றித் துவண்டிடச் செய்யாது
என்பதனையும் நான் மறந்திடவில்லை.
என்ன கொடுமை செய்தாலும்
நமக்குத்தான் "ஓட்டு' என்ற எண்ணம் காங்கிரஸ் கட்சிக்குத்
தடித்துவிடச் செய்கிறது தருமபுரி.
நமக்கோ, உன் வலிவு போதாது,
வளர வேண்டும்; முறை செம்மைப்படுத்தப்பட வேண்டும்; முயற்சியில்
புது முறுக்கு ஏற வேண்டும், உண்மைக்காகப் பரிந்து பேசினால்
மட்டும் போதாது, உண்மை வெற்றி பெறத் தக்கவிதமான வலிவு
உண்மைக்குக் கிடைத்திட வழி கண்டாக வேண்டும் என்ற பாடத்தைத்
தருகிறது.
வெற்றி எந்த நேரத்தில் எந்தக்
கட்சிக்குக் கிட்டுகிறதோ, அந்தக் கட்சியை வலிவுள்ள கட்சி
என்று எண்ணிக்கொள்வதும், வலிவு இருக்கிற காரணத்தாலேயே
அது நியாயமான கட்சி என்று எண்ணிக்கொள்வதும் கூர்த்தமதி
படைத்தோரின் போக்கல்ல; தெளிவற்றோர் பெற்றிடும் மன மயக்கம்.
கழகம் நடாத்துவோர், வலிவுள்ள
கட்சியில் தஞ்சம் புகுந்து தகத்தகாயம் பெற முனைந்தவர்கள்
அல்ல; சாதாரணக் கட்சியை வலிவுள்ளதாக்கியவர்கள்! ஒளி உள்ள
இடம் ஓடி வெளிச்சம் போட்டுக் கொண்டவர்கள் அல்ல கழகத்தினர்;
இருண்ட இடத்தில் ஒளி எழத் திருவிளக்கு ஏற்றிவைத்தவர்கள்;
எங்கே சென்றால் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று அலைந்து
அதற்கோர் இடம் கண்டுபிடித்தவர்களல்ல, தேர்தலில் வெற்றி
கிடைக்கத்தக்க வலிவினை உழைத்துப் பெற்றிடும் உறுதி கொண்டு
பணிபுரிவோர். கழகத் தோழர்கள் விளைந்த காட்டுக் குருவிகளுமல்ல,
மரம் பழுத்தது கண்டு பறந்தோடி வரும் வௌவாலும் அல்ல, அரைக்க
அரைக்க மணம் எழும்பும் சந்தனம் போன்ற இயல்பினர். தருமபுரித்
தோல்வியை நமது சிந்தனையைக் கிளறி, முறைகளைச் செம்மைப்படுத்தும்
ஓர் வாய்ப்பாக மாற்றிட வல்லவரே, கழகத் தோழர்கள்.
இந்த நமது இயல்பை மேலும்
விறுவிறுப்பானதாக்கிட, வெற்றிபெற்ற காங்கிரசார் ஏவிடும்
தூற்றலையும் பயன்படுத்திக் கொள்வோம். வெந்த புண்ணிலே வேல்
பாய்ச்சிவிட்டனர்; ஆம்! குருதியைத் துடைத்துக்கொண்டு,
தொடர்ந்து பணியாற்றி வருவோம் துயரம் காரிருளெனக் கப்பிக்கொண்டிருக்கும்,
உணருகிறேன்; ஆனால், தம்பி! விடிவதற்கு முன்பு கருக்கல்
அதிகமாகத்தான் இருக்கும். பொழுது புலரும், பொறுத்துக்
கொள்; பணியாற்று.
அண்ணன்
18-4-1965