அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

தழும்புகள்
2

திருமணத்தின்போது வள்ளியாச்சியார் என்பது பெயர்.

வள்ளியிடம் நான் பேசியதுகூட படுத்துக் கிடப்பதனைப் பற்றிய சேதி தெரிந்து கொள்ள அல்ல; பெரிய இடத்திலே வாழ்க்கைப்பட்ட வள்ளி ஏன் கணவனை விட்டுப் பிரிய நேரிட்டது என்பது பற்றிய தகவல் பெறத்தான். வழக்கம்போல வள்ளி அந்தத் தகவல் தர மறுத்துவிட்டாள். மாகாளி பற்றிய தகவலைக் கூறலானாள். மெல்ல மெல்லத்தான் எனக்கு மாகாளி பற்றிய தகவலில் சுவை ஏற்பட்டது. வள்ளி தந்த தகவலைத் தொடர்ந்து, மாகாளியிடமும், அவன் இருந்துவந்த குப்பத்து ஆட்களிடமும், தொடர்புள்ள வேறு பலரிடமும் கேட்டுப் பல தகவல்களைத் தெரிந்துகொண்டு ‘தழும்புகள்’ என்ற தலைப்பிட்டு ‘மரபு’ இதழுக்கு அளித்தேன். அவர் என்னையும் வருத்தப்படவிடக்கூடாது, ‘மரபு மேற்கொண்டுள்ள மரபும் பாழ்படக்கூடாது’ என்று ‘தழும்புகள்’ தனி ஏடாக வெளிவர ஏற்பாடு செய்தார். அதன் துவக்கப் பகுதியைத்தான் இதுவரை நீங்கள் பார்த்தீர்கள். இனி மாகாளி பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்களில் சிலவற்றைத் தருகிறேன். நிகழ்ச்சி நடைபெறுவது போன்ற வடிவத்தில்.

(ஒரு சிற்றூரின் சாலை வழியில் ஓர் இரட்டை மாட்டு வண்டி செல்கிறது. சலங்கை மணி பூட்டப்பட்ட பெரிய காளைகள் வண்டியில் பூட்டப்பட்டு உள்ளன.)

உடற்கட்டும், அழகான தோற்றமும் உள்ள வாலிபன், வண்டியை ஓட்டிச் செல்கிறான். வண்டிக்குள் திண்டு போட்டுச் சாய்ந்து கொண்டிருக்கிறார். நாற்பத்தைந்து வயதான ஒரு மிராசுதாரர். சில்க் சட்டையும் வேட்டியும் போட்டுக் கொண்டு இருக்கிறார். காதிலும் கைவிரல்களிலும் வைரம் மின்னுகிறது. நெற்றியில் சந்தனப் பொட்டு இருக்கிறது.

வெள்ளிப்பூண் போட்ட அலங்காரத் தடி அவருக்குப் பக்கத்திலே இருக்கிறது.

வெள்ளி வெற்றிலைப் பெட்டியும் வெட்டிவேர் விசிறியும் வண்டியில் இருக்கின்றன. வழியில் வருவோர் போவோர் அவரைக் கண்டதும் மரியாதை செய்கிறார்கள்.

மிராசுதாரர் : டே, மாகாளி! தட்டி ஓட்டேண்டா மாட்டை! தடவிக் கொடுக்கறியே... ஓட்டு, ஓட்டு சுருக்கா....

மாகாளி : வாயில்லா ஜீவனாச்சிங்களே... வேகமாத்தான்
போகுது... தா! தா!

(மெதுவாகத் தட்டுகிறான்; வேகமாக வண்டி செல்கிறது.)

வயல் காட்சிகளைப் பார்த்து மாகாளி ரசித்துக் கொண்டிருக்
கிறான்.

மிராசுதாரர் எதையோ எண்ணி, மகிழ்ந்து கொண்டு இருக்கிறார்.

ஓர் இரயில்வே கேட் தெரிகிறது.

இரயில், தொலைவில் வருகிறது.

கேட், மூடிவிடுகிறார்கள். வண்டி நிற்கிறது. இரயில் செல்கிறது.

கேட் திறக்கப்பட்டு வண்டி செல்கிறது.

மாகாளி : (ஆவலாக) ஏங்க... இரயிலைப் பாருங்க, முதமுதல் கண்டுபிடிச்சது...

மிராசு : (கோபமாக) ஆ... உங்க பாட்டன்... ஓட்டேண்டா, வண்டியை, பெரிய விசாரணை நடத்தறான்.

மாகாளி : (சலித்துக்கொண்டு) தெரியல்லேன்னா தெரியாதுன்னு சொல்லிட்டுப் போங்களேன். அதுக்கு ஏங்க இப்படி எறிஞ்சி விழறீங்க. நீங்களெல்லாம் படிச்சவங்களாச்சே, தெரிஞ்சிருக்கும்னு கேட்டேன்.

மிராசு : வரவர உனக்கு வாய்த்துடுக்கு அதிகமாயிட்டுது; கிண்டல் பேச்சு, விதண்டாவாதம் வளருது... அன்னக்கி ஒருநாள் நீ என்ன கேட்டே, எமனுக்கு எருமைக்கடா வாகனம்; எப்படிப் பொருந்தும்னு கேட்டல்லே நீ... இரு, இரு, உன்னை...

மாகாளி : (சிரித்தபடி) நீங்க ஏங்க அதுக்காக இவ்வளவு கோபப்படறிங்க... பூலோகம் வந்து, பாசக் கயிறு வீசி, உயிர்களைப் பிடித்துக்கொண்டு போகிறவன்தான் எமன்; அவனுக்கு ஒரு வாகனம் எருமைக்கடான்னு சொல்லவே, அவசரமான வேலையாச்சே, ஒரு குதிரையாவது வாகனமா இருக்கப்படாதா, எருமைதானா இருக்கணும், அது அசைஞ்சு அசைஞ்சு அல்லவா நடக்கும்னு கேட்டேன்...

மிராசு : ஏன் கேட்கமாட்டே... நம்ம வீட்டுச் சோறு அப்படிப்பட்டது...

மாகாளி : நீங்க தின்ன மிச்சம்தானுங்களே, நமக்கு.

மிராசு : சரி, சரி... ஓட்டு.

(கிராமம் வந்து சேருகிறது, வண்டி; ஒரு பெரிய ஆலமரத்தடியைக் காட்டி...)

மிராசு : வண்டி இங்கேயே இருக்கட்டும்... நான் ஊருக்குள்ளே போயி காரியத்தைப் பார்த்துவிட்டு வர்றேன்... டேய்! மாட்டைப் பார்த்துக்கோ... ஜமக்காளம் இருக்கு, திண்டு கிடக்கு, நீ பாட்டுக்கு, எங்காவது சுத்தக் கிளம்பிடாதே...

(வெள்ளி வெற்றிலைப் பெட்டியையும், தடியையும் எடுத்துக் கொண்டு மிராசுதாரர் கிராமத்துக்குள்ளே செல்கிறார்.)

வண்டியை அவிழ்த்து விட்டுவிட்டு, மாடுகளுக்கு வைக்கோல் போட்டுவிட்டு, மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு, ஆட்டுக்குட்டிகள் துள்ளி விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறான் மாகாளி.

மாலை நேரம் வருகிறது; பறவைகள் கூட்டம் கூட்டமாகக் கூடுகளை நோக்கிப் பறந்து செல்கின்றன.

ஆடுகளை மடக்கி சிறுவன் ஊருக்குள்ளே ஓட்டிக்கொண்டு போகிறான்.

வாத்துகளை, வயலில் மேயவிடுகிறான் ஒருவன்.

இருள் மெல்ல மெல்ல வருகிறது.

“டேய்! மாகாளி! மாகாளி! டேய்!” என்று பதறிக் கூவியபடி மிராசுதாரர் ஓடிவருகிறார் அலங்கோலமாக.

அருகே வந்துகொண்டே, ‘கட்டுடா, வண்டியை பூட்டுடா சீக்கிரம்’ என்று மேல்மூச்சு வாங்கும் நிலையில் கூறிக்கொண்டே மிரள மிரள, ஊர் பக்கம் பார்க்கிறார். வண்டியைப் பூட்டித் திருப்பி நிறுத்துகிறான் மாகாளி.

“விடாதே! விடாதே! பிடி! டேய் நில்லு!” என்று கூவிக் கொண்டே தடிகளுடன் நாலைந்து பேர் மிராசுதாரை நோக்கி ஓடி வருகிறார்கள் தாக்க.

மிராசு : (நடுநடுங்கி) மாகாளி! கொலைகாரப் பசங்களைப் பாருடா.

என்று கதறுகிறார்.

முதலில் தடியை ஓங்கினான் ஒருவன். மாகாளி, தடியைப் பிடித்து இழுக்க, அவன் கீழே விழுந்துவிட்டான். தடி மாகாளியிடம் சிக்கியது.

(மற்றவர்களைத் தடியால் தாக்க ஆரம்பித்தான். மாகாளி மிராசுதாரர் வண்டியின் மறைவில் நின்று கொள்கிறார் சுழன்று சுழன்று தாக்குகின்றான். தாக்க வந்தவர்கள் மிரண்டோடுகிறார்கள். மாகாளி, மிராசுதாரரை வண்டியில் ஏறச்சொல்லி ஜாடை காட்டிவிட்டு வண்டியை ஓட்டுகிறான்.)

மிராசு : வேகமாக ஓட்டுடா மாகாளி! விஷக்கடி வேளைடா... ஊருக்கு இருட்டறதுக்குள்ளே போயிடலாம்.

மாகாளி : பொழுது இன்னும் சரியாச் சாயக்கூட இல்லே, அதுக்குள்ளே வழிமடக்கி அடிக்க வந்தானுங்களே!

மிராசு : வழிமடக்கி அடிக்கிறவனுங்க இல்லேடா அவனுங்க; கொலைகாரப் பசங்க. என்னைத் தீர்த்துக் கட்டிவிட வந்தானுங்க, தடியும் தாம்பும் தூக்கிக்கிட்டு.

மாகாளி : எதனாலே விரோதமுங்க... ஏதாவது நிலத் தகராறு?

மிராசு : வண்டியை ஓட்டுடா வேகமா! விவரம் கேட்டுகிட்டு இருக்க இதுவா நேரம்.

மாகாளி : பயப்படாதீங்க! நான் இருக்கறேன்... என்னை அடிச்சிப் போட்டுட்டுதானே உங்ககிட்ட வரவேணும்; பயப்படாதீங்க.

மிராசு : படுபாவிப் பசங்க! இந்த மாதிரித் திட்டம் போடுவாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் அந்தச் சனியனுக்கு ஆசைப்பட்டே இருக்கமாட்டேன்.

மாகாளி! உன் மனசோட போட்டு வை. அந்தக் கிராமத்திலே நமக்கு வேண்டியவ ஒருத்தி இருக்கறா.
(மாகாளியின் முகம் இலேசாக மாறுகிறது.)

எப்படியோ, கர்மம், அந்தச் சிநேகம் ஏற்பட்டுப் போச்சி.

(மாகாளி கோபம் கொள்கிறான்.)

மிராசு : மூணு முடிச்சி போடுங்க, மூணு முடிச்சுப் போடுங்கன்னு சொல்லிக்கிட்டே இருப்பா. அவ என்னத்தைக் கண்டா. ஊருக்கு அவமானம், குலத்துக்கு அவமானம்னு யாரோ கலகம் செய்து விட்டாங்க... ஆகட்டும் பார்க்கலாம், ஆகட்டும் பார்க்கலாம்னு சொல்லிக்கிட்டே இருந்தேன்.

மாகாளி : அடுக்குமா இந்த அக்கிரமம்? நம்பினவளைமோசம் செய்யலாமா... அவ கதி என்ன ஆகும்?

மிராசு : அதாண்டா மாகாளி, அப்படி எல்லாம்தான் கூவி, கொக்கரிச்சி, கோவிலுக்கு வா, சாமி எதிரே அவளுக்குத் தாலி கட்டு என்று சொல்லி, இழுத்துக்கிட்டுப் போனாங்க...

மாகாளி : நீங்க அவங்களை ஏமாத்திவிட்டு தப்பித்துக் கெண்டு வந்துட்டிங்க...

மிராசு : அது தெரிஞ்சிதான், தடி தூக்கிகிட்டு ஓடி வந்தாங்க, என்னைக் கொன்றுபோட.
(வண்டியின் வேகம் குறைகிறது. மாட்டுக் கயிற்றை இழுத்துப் பிடிக்கிறான் மாகாளி.)

மாகாளி : நான் இருந்தேன், மடையன் – அவங்களைத் துரத்திவிட்டு, தர்மப் பிரபுவைக் காப்பாத்த...

(வண்டியை எதிர்ப்பக்கம் திருப்புகிறான்.)

மிராசு : டே! டே! என்னடா இது? என்னடா இது...

மாகாளி : இதுவா... வண்டி கிராமத்துக்குப் போகுது. அநியாயக்காரப் பாவி! ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ளவா பார்க்கறே...

(மிராசுதாரர் வண்டியை விட்டுக் கீழே குதிக்க முயலுகிறார். ஒரு கரத்தால், அவரை இழுத்துப் பிடித்துக் கொண்டு.)

மாகாளி : அவங்களை ஏமாத்தினதுபோல என்கிட்டே செய்தே, எலும்புக்கு ஓர் அடின்னு எண்ணி எண்ணி கொடுப்பேன்... நான் ஒரு மடப்பய! என்ன விஷயம், ஏன் துரத்திகிட்டு வர்றாங்கன்னு கேட்டனா? பாவம், அவனுங்களை, தாக்கினேன் பலமா...

மிராசு : மாகாளி! மாகாளி! உன்னைக் கையெடுத்துக் கும்பிடுகிறேண்டா! காலிலேகூட விழறேண்டாப்பா வண்டியை நிறுத்து... கிராமம் போகாதே! வெட்டிப்போட்டு விடுவாங்கடா.
மாகாளி : நீ செய்திருக்கிற காரியத்துக்கு வெட்டிப் போடாமே, விருந்து வைத்து அனுப்புவாங்களா?

மிராசு : ஆயிரம், ஐந்நூறு வேணுமானாகூடக் கொடுத்துடறேண்டா மாகாளி!

மாகாளி : யாருக்கு, எனக்குத்தானே?

மிராசு : அவளுக்கும் வேணுமானா தர்றேண்டா அப்பா.

மாகாளி : எதை? பணத்தைத்தானே! பணம் தவிர வேறு என்ன இருக்கு உன்னிடம் கொடுக்க? பணம் இருக்குது, என்ன பாவம் வேணுமானா செய்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நெஞ்சழுத்தம். நல்லவேளை வழியிலேயாவது நான் என்ன விஷயம்னு கேட்டனே! இல்லையானா உன்னுடைய அக்கிரமத்துக்கு நானும்தானே உடந்தையாகி இருப்பேன்.

மிராசு : மாகாளி! என்னை என்னதான் செய்யப் போறே! அந்தப் பயல்களிடம் விட்டுக் கொலை செய்யச் சொல்லப் போறியா?

மாகாளி : செய்வேனா அப்படி! அப்புறம் அந்தப் பொம்பளையோட கதி என்ன ஆகிறது. கூட்டிக்கிட்டு வாங்கய்யா கோவிலுக்கு என்பேன். பெரியவங்களைப் பெத்தவங்களைக் கூப்பிடுன்னுவேன். உம்... ஆகட்டும்னு சொல்லுவேன். மறுபேச்சு பேசாமே, அந்தப் பொம்பளை கழுத்திலே தாலியைக் கட்டணும். நான்தான் தோழி மாப்பிள்ளை. நடந்தா அந்தக் கலியாணம் நடக்கணும். இல்லே, நிச்சயமா கொலை நடக்கும்.

(கிராமத்துக்குள் வண்டி வருகிறது. கிராமத்து ஆட்கள்) ‘டேய்! வந்துட்டான்டா ஊருக்குள்ளேயே’ என்று கூவி கும்பலாகச் சேருகிறார்கள். தொலைவிலிருந்து சிலர் கற்பனை வீசுகிறார்கள், மாகாளியைக் குறிவைத்து. மாடுகள் மிரளுகின்றன. மாகாளி ஏர்க்காலில் நின்று கொண்டு, மாடுகள் மிரண்டு ஓடாதபடி கயிற்றையும் இழுத்துப் பிடித்துக் கொண்டு கிராமத்து மக்கள் போடும் கூச்சலை அடக்கும் அளவுக்குக் குரலை உயர்த்தி...

மாகாளி : பெரியோர்களே! தாய்மார்களே! அமைதி! அமைதி! நான் சொல்வதைக் கேளுங்கள்.
(‘போடா, டோய்!’ என்ற கூச்சல் கிளம்புகிறது. கற்கள் மாகாளி மீது விழுகின்றன. இரத்தம் கசிகிறது.)

மாகாளி : ஆத்திரம் வேண்டாம், இதோ மிராசுதாரரை அழைத்து வந்திருக்கிறேன்... கலியாணம் செய்து கொள்ள வந்திருக்கிறார்....

(பலர் கை தட்டுகிறார்கள். சிலர், மற்றவர்களைக் கூச்சல் போடாதீர்கள் என்று அடக்குகிறார்கள்; சத்தம் அடங்குகிறது.)

மாகாளி : முதலிலே எனக்கு உண்மை தெரியாததால், கிராமத்து மக்களை அடித்து விட்டேன். மன்னிக்க வேண்டும் என்னை. இப்போது, நான் உங்கள் பக்கம்... கிராமத்தார் பக்கம்..
(கை தட்டுகிறார்கள்.)

நீதியின் பக்கம் நிற்கிறேன். அக்கிரமத்துக்குத் துணை போக மாட்டேன். மிராசுதாரர் வந்திருக்கிறார். கோவிலுக்குப் போகலாம்... பெண்ணைக் கூப்பிடுங்கள்...

அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தோடு, மாகாளியிடம் வருகிறார்கள். மிராசுதாரர் வண்டியிலிருந்து கீழே இறக்கப்படுகிறார்.

தலைவிரி கோலமாக இருக்கும் பெண் இழுத்து வரப்படுகிறாள். மாகாளியின் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.

ஓர் ஆள் ஓடி வந்து,‘கோவிற் கதவைப் பூட்டிக் கொண்டு ஐயர் எங்கோ போய்விட்டார்’ என்று கூறுகிறான்.

மாகாளி : பரவாயில்லை! மேலே நிலவும் நட்சத்திரங்

களும்! சுற்றிலும் உற்றார் உறவினர்! ஊர்ப்பெரியவர்கள்! கோவிலாவது மனிதன் கட்டியது; இந்த இடம் – நாம் நிற்கும் இடம் – கடவுளே படைத்த கோவிலைவிடச் சிறந்தது. கொண்டு வாருங்கள், தாலிக்கயிறு. உட்காருங்கள் அனைவரும்...

(தாலியை ஒருவர் கொண்டு வருகிறார்.

மாகாளி, மிராசுதாரர் கையில் அதைக் கொடுக்கிறான்.

மிராசுதாரர் தயக்கமடைகிறார். மாகாளி அவன் காலை அழுத்தி மிதிக்கிறான் யாருக்கும் தெரியாமல்.

மிராசுதாரர் தாலி கட்டுகிறார். அவள் அவன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாள்.

மாடோட்டும் வாலிபன், குழலில் இசை எழுப்புகிறான்.

காற்று பலமாக அடிக்கிறது. மலர்கள் காற்றால் வந்து விழுகின்றன.

மாகாளி மகிழ்ச்சி அடைகிறான்.)

நிலவு ஒரு மேகத்திலிருந்து மற்றோர் மேகத்துக்கு ஊர்ந்து செல்வதுபோல் தெரிகிறது.

மாகாளி சாவடித் திண்ணையில் உட்காருகிறான். எதிரே சிலர் உட்காருகிறார்கள்.

“பால் வேணுமா? பழம் வேணுமா?” என்று கேட்கிறார்கள்.

மாகாளி : நமக்குக் கட்டிவருமா பாலும், பழமும்? சோறும் ஊறுகாயும். இல்லையானா கூழும் வெங்காயமும்.

(இரண்டு மூன்று பேர் ஓடுகிறார்கள்.)

(ஒரு மாது சோறும் ஊறுகாயும் கொண்டு வருகிறாள். தண்ணீர் ஊற்றி உப்பு போடுகிறாள் மாது. மாகாளி அதைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.)

ஒருவர் : ஏண்டாப்பா! எப்படி உனக்கு, இப்படிப்பட்ட தைரியம் வந்தது...

மாகாளி : இது என்ன பெரியவரே, அதிசயம்... கோழிக் குஞ்சை அடிச்சிக்கிட்டுப் போக பருந்து வருதே, அப்ப கோழி போடுதே, சண்டை, வீராவேசமா...

(சிறுவர் சிலர் கை தட்டுகிறார்கள்.)

ஒருவர் : தம்பிக்கு எந்த ஊரு...

மாகாளி : கருவூரு...

ஒருவர் : எந்தப் பக்கம்...

இன்னொருவர் : திருச்சிராப்பள்ளிப் பக்கம்னு சொல்லுவாங்க.

மாகாளி : நான் அந்தக் கருவூரைச் சொல்லலே. கரூர்னு நான் சொன்னது, கரு...கரு..தாயுடைய கருதானே, நம்ப ஊரு, அதைச் சொன்னேன்...

பெரியவர் : நிஜமான பேச்சு...

மாகாளி : எல்லா ஊரும் எனக்குச் சொந்தமான ஊர்தான்.

பெரியவர் : அப்பா, அம்மா?

மாகாளி : (சோகமடைந்து) யாருமில்லை.

(தலையசைத்துக் கொண்டு கூறுகிறான்.)

(மேற்கொண்டு சாப்பிட முடியவில்லை. மாகாளியால். பேச்சும் ஓடவில்லை. படுத்துக் கொள்கிறான். சிலர், அங்கேயே படுத்துக் கொள்கிறார்கள்.)

(நகரில் மிராசுதாரர் வீடு. கோவில் ஐயர் ஓடி வருகிறார். மிராசுதாரர் மகனிடம் குசுகுசுவெனப் பேசுகிறார். அவன் வேலையாட்களைக் கூப்பிடுகிறான். அவர்கள் பல பக்கம் ஓடுகிறார்கள்.)
வேறிடத்தில்...

(மணமானவள் பாத்திரத்தில் பாலும், தட்டில் சோறும் வைத்துக் கொண்டு, மிராசுதாரரிடம் வந்து நிற்கிறாள். மிராசுதாரர் திகிலும், சோகமும் கொண்ட நிலையிலே இருக்கிறார்.)

மிராசு : என் உயிரை வாங்காதே... என் மனம் சாந்தியாக இல்லை. பசி இல்லை. தொல்லை செய்யாதே...
(அவள் பாயும் தலையணையும் மிராசுதாரருக்குப் போட்டுவிட்டுத் தரையில் ஓர் ஓரமாகக் கையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக்கொள்கிறாள்.

சாவடியில் படுத்துக் கொண்டு இருக்கும் மாகாளிக்குத் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருக்கிறான்.

மோட்டார் சத்தம் காதில் விழுகிறது. ஒருவர் விழித்துக் கொண்டு, ‘தம்பி! தூக்கம் வரலியா...கொசுக்கடியா?’ என்று கேட்கிறார்.

மாகாளி பதில் கூறாமல் உற்றுக் கேட்டவண்ணம் ‘உஸ்! உஸ்!’ என்று சத்தம் செய்யாதிருக்கும்படி ஜாடை காட்டுகிறான்.

சத்தம் வரவர, பலமாக இருக்கிறது. மாகாளி எழுந்து உட்காருகிறான்; கூட இருந்தவர்களும் உற்றுக் கேட்கிறார்கள், அச்சத்துடன்.

மோட்டார் வெளிச்சம் தொலைவில் தெரிகிறது. பல விளக்குகள் தெரிகின்றன. ஒரு பெரியவர் மெதுவாக, “தம்பி! போலீசா!” என்று கேட்கிறார். பலத்த சத்தத்துடன் ஒரு ஜீப்பும, நாலு லாரிகளும் வருகின்றன.

ஊருக்குள் நுழையும்போதே, காட்டுக் கூச்சல் போடுகிறார்கள், லாரியில் வந்தவர்கள்.

மிராசுதாரர் வெளியே வருகிறார். ஜீப்பைப் பார்த்ததும் துள்ளிக் குதித்து ‘சபாஷ்டா சபாஷ்!’ என்று கூறிக்கொண்டே ஜீப்பை நோக்கி ஓடுகிறார்.

‘அப்பா!’ என்று அழைக்கிறான் ஜீப்பில் வந்த வாலிபன்.

மிராசு : பயல்களை விடாதீர்கள். வெட்டிப் போடுங்கள். வந்தது வரட்டும். மாகாளியை முதலில் ஒழித்துக் கட்டுங்கள்...
(என்று மிராசுதாரர் கொக்கரிக்கிறார்.)

பெருங்கூச்சலுடன் அடிதடி நடக்கிறது. மாகாளி, எங்கும் சுற்றிச் சுழன்று சண்டை போடுகிறான். லாரிமீது ஏறிக்கொண்டு சண்டை போடுகிறான். லாரியை ஓட்டுகிறான் டிரைவர் வேண்டுமென்றே!
பக்கத்து லாரியில் தாவிக் குதித்துவிடுகிறான் மாகாளி. கிராமத்து மக்கள் சுருண்டு, சுருண்டு விழுகிறார்கள்; தாய்மார்கள் மிரண்டு ஓடுகிறார்கள்.

‘அப்பா! நாம போகலாம்! ஊரைக் கொளுத்தி விட்டுத்தான் நம்ம ஆட்கள் திரும்புவார்கள்... எல்லா ஏற்பாட்டுடனும் வந்திருக்கிறார்கள். நாம் இருக்கவேண்டாம்.

(என்று கூறுகிறான். ஜீப் புறப்படுகிறது.)
மாகாளி பலமாகத் தாக்கப்படுகிறான். கிராமத்தார் பலருக்குப் படுகாயம்.

மூர்ச்சையாகிக் கீழே விழுந்த மாகாளியை லாரியில் தூக்கிப் போட்டுக் கொண்டு செல்கிறார்கள். வழியில் ஓர் ஆற்றிலே போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள்.

மாகாளி கண் விழித்துப் பார்க்கிறான்.

ஓர் எருமையின் முதுகில் சாய்ந்து கொண்டிருப்பதையும், எருமை, அதிக ஆழம் இல்லாத ஆற்றில் நடந்து செல்வதையும் அறிகிறான். கீழே இறங்கி, எருமையைப் பார்த்து,‘என் உயிரைக் காப்பாத்தினாயே! உன்னைப்போய், எமனுக்கு வாகனம்னு சொல்லி வைச்சிருக்காங்களே’ என்கிறான்.

(தள்ளாடி நடக்கிறான். ஒரு மூட்டை வண்டியில் செல்கிறான். பல ஊர்களில் நடக்கிறான்; கடுங்கோபம் கொண்ட நிலை பெறுகிறான்.)
மோட்டாரைப் பார்த்தால் கோபம்.

செல்வவான்களைப் பார்த்தால் கோபம்...

ஓர் ஆள் : யாரப்பா, நீ, ஊருக்குப் புதுசா?

மாகாளி : (கோபமாக) நான் யாராக இருந்தா உனக்கென்னய்யா?

அவர் : அட இதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

மாகாளி : கோபித்துக் கொண்டா என்ன செய்து விடுவே!

அவர் : சுத்த வம்புக்காரனா இருக்கறியே! முரட்டுப் பய!

மாகாளி : தெரியுதேல்லோ பார்த்ததும்... ஒதுங்கிக்கோ என் பேச்சுக்கு வராதே...
வேகமாக நடக்கிறான்.

லாரிகளில் மூட்டைகளைத் தூக்கிப் போடுகிறான்.

லாரிக்காரர் : என்ன தரணும் கூலி!

மாகாளி : பெரிய பிரபு இவரு! கொடுக்கறதைக் கொடய்யா.

(ஒரு சிறிய ஓட்டலில்)
மாகாளி : நாலு இட்லி.

ஓட்டல்காரன் : நெய் போடட்டுமா?

மாகாளி : வெண்ணெய் போடு, வெண்ணே! ஆளைப் பார்த்து வியாபாரம் செய்யேன்யா! நெய் கேட்குதா நெய்! இட்லி போதும்! மிளகா சட்னிபோடு.

(அதிகமான பாரமுள்ள வண்டியை இழுக்க முடியாமல் கஷ்டப்படுபவனைப் பார்த்துவிட்டு வண்டியை முட்டித் தள்ளிவிட்டு.)

மாகாளி : ஏன் ஐயா! இப்படி உன் சக்திக்கு மீறின வேலை செய்து சாகறே!...

வண்டிக்காரன் : என்னப்பா பண்றது! வயிறு ஒண்ணு இருக்குதே!

மாகாளி : உனக்கு இருக்குது ஒட்டிப்போயி.

(கடையில் உட்கார்ந்திருக்கும் ஆளைக்காட்டி)

அவனைப் பாரு வயிறுன்னா அது வயிறு!

(வண்டிக்காரன் சிரிக்கிறான்.)

(ஒரு குளத்தங்கரையில் நிற்கிறான்; ஒரு புரோகிதர் பார்த்துவிட்டு.)

புரோகிதர் : புண்ணிய தீர்த்தம்டா! தர்ப்பணம் பண்ணணுமா?

மாகாளி : என்னா பணம்!

புரோகிதர் : இஷ்டப்பட்டதைக் கொடு.

மாகாளி : அட, நான் அதைச் சொல்லவில்லை. தர்ப்பணம்னு சொன்னயே!

புரோகிதர் : அதுவா உங்க குடும்பத்திலே யாராவது காலமாயிருப்பாங்களே, அவாளுக்காகத் தர்ப்பணம் செய்தரா மோட்சத்திலே அவாளுக்குச் சௌக்கியம் கிடைக்கும்.

மாகாளி : அவாளுக்கு அங்கே! இங்கே நான் சாகறேன். அதுக்கு ஒரு வழியைக் காணும்.

புரோகிதர் : அதுக்கு வேண்டியது பணம்.

மாகாளி : (சிரித்தபடி) கெட்டிக்கார ஆசாமிதான் நீ. அங்கே இக்கிறவங்களுக்குத் தர்ப்பணம்... இங்கே இருக்கிறவங்களுக்குப் பணம்.

புரோகிதர் : ஆமாம்...

மாகாளி : எனக்கு இப்ப எந்தப் பணமும் வேண்டாம். குணம் கெட்டவங்களை எல்லாம் கொன்று குவிச்சாப் போதும்.

புரோகிதர் : சட்டம் இடம் கொடுக்குமோ.