அறிஞர் அண்ணாவின் குறும்புதினங்கள்

தழும்புகள்
3

சட்டம் இடங்கொடுக்காதுதான் இல்லை, அக்கிரமக்காரனைத் தண்டிக்காவிட்டால் பணமூட்டை பாதுகாப்புத் தரும்பொழுது மாகாளி மீண்டும் அந்தச் சிற்றூர் சென்று மிராசுதாரர் கிராமத்துக்குப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டது பற்றியும், கிராமத்தைத் தாக்கி, கிராமத்தைக் கொளுத்தி நாசம் செய்தது பற்றியும், ஊராரிடம் சொல்லி நியாயம் பெற நினைத்தான். கிராமத்துக்குச் சென்றபோது, பெண் தற்கொலை செய்து கொண்ட சேதியும், மிராசுதாரருக்கு எதிராகச் சாட்சி சொல்ல கிராமத்தார் அச்சப்பட்டுக் கொண்டிருப்பதையும் அறிந்து பதறினான். கிராமத்து மக்கள் அவனிடம் பரிவுகாட்டினர். ஆனால், துணிவு பெற மறுத்துவிட்டனர். மாகாளி கோபித்துக் கொண்டார். கிராமத்து மக்களோ, ‘அந்த மிராசுதாரருடைய பகையைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களுக்குக் கிடையாதப்பா! எங்களை மன்னித்துவிடு. ஆனால் இங்கே நீ இருப்பதுகூட ஆபத்து. மிராசுதாரன் மோப்பம் பிடித்தபடி இருக்கிறான்; போலீசில் சிக்க வைத்து விடுவான். வீணாகத் தொல்லையைத்தேடிக் கெள்ளாதே’ என்று கூறினர்.

‘இப்படிப் பயந்து பயந்து செத்துப் பிழைப்பதைக் காட்டிலும் ஒரே அடியாக அக்கிரமத்தை எதிர்த்து நின்று கொல்லப்பட்டுச் செத்துத் தொலைக்கலாமே! நீங்கள் இப்படிக் கோழையாக இருப்பதனால்தான் அக்கிரமக்காரர்கள் கொட்டம் அடிக்கிறார்கள். கொடுமை கொடிகட்டிப் பறக்கிறது. தூ... தூ...’ என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டு வேறு ஊருக்குச் சென்றுவிட்டான்.

‘அக்கிரமத்தைத் தடுத்திட முடியவில்லை. ஆனால் எதிர்த்து நின்றேன். என் கடமையைச் செய்தேன். அந்த மிராசுதாரன் இனி இவ்விதமான அக்கிரமம் செய்ய எண்ணும் போதெல்லாம் என் நினைவல்லவா வரும். நான் தெரிவேனல்லவா அவன் மனக்கண் முன்பு – அவ்வளவுதான் என்னால் சாதிக்க முடிந்தது. அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்ளாது இருந்திருப்பாளானால் கிராமத்தார் ஒத்துழைக்காவிட்டால்கூட நான் மிராசுதாரருடைய மாளிகையில் அவர் குடியேறுவதற்கான காரியத்திலே ஈடுபட்டு, அதிலேயே மாண்டு போக நேரிட்டாலும் மகிழ்ச்சியோடு மரணத்தைத் தழுவிக் கொண்டிருப்பேன். இப்போது எனக்கு இருக்கும் திருப்தி நாம் நமது கடமையைச் செய்தோம் என்பதுதான். அதனை எனக்கு அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டிருப்பவை இந்தத் தழும்புகள். பலமான தாக்குதல்! பல மாதங்கள் எனக்கு வலி இருந்தது. என்னென்னமோ பச்சிலைகள் மெழுகுகள் தைலங்கள் புண்ணைக் குணப்படுத்த. மேலேதானே புண் ஆறுகிறது. நெஞ்சிலே ஏற்பட்ட புண்? அது எங்கே ஆறப்போகிறது. மாற்ற எவ்வளவோ பேர் நமக்கென்ன என்று இருந்துவிட்டாலும் நாம் நமது கடமையைச் செய்தோம் என்ற மகிழ்ச்சி எனக்கு இந்தத் தழும்புகளைப் பார்த்துக் கொள்ளும்போது’ என்று மாகாளி கூறினான்.

மற்றும் சிறுசிறு நிகழ்ச்சிகள் பலப்பல கூறினான். ஒரு நிகழ்ச்சி, என் உள்ளத்தில் ஆழமான இடம் பெற்றது. அதனையும் நிகழ்ச்சி நடைபெறுவது போன்ற வடிவத்திலேயே தருகிறேன்.

(ஓர் ஊருக்குச் சற்றே வெளிப்பகுதியில் உள்ள ஒரு கல்லாலான கட்டிடம்; மாகாளி ஒருபுறம் சுருண்டு படுத்துக் கொண்டிருக்கிறான்.

இரு வாலிபர்கள் சிகரெட் பிடித்தபடி வருகிறார்கள்.

அங்கு ஒரு பக்கமாக உட்காருகிறார்கள், மாகாளி படுத்துக் கொண்டிருப்பதைப் பார்க்காமலேயே...)
தாமு : சோமு! நீ அதிர்ஷ்டக்காரண்டா... எதுவாக இருந்தாலும் உன் வலையிலே வீழ்ந்துவிடுகிறது.

சோமு : போடா ஃபூல்... அதெல்லாம் நம்ம Face Cut Personality. தரித்திரப் பயலே அது தனி Art தனிக்கலை.

தாமு : நான் நம்பவே இல்லை, நளினா உன் வலையில் விழுவாளென்று...

சோமு : சும்மா சொல்லக் கூடாது, தாமு. நளினா, நெருப்பு, நெருப்பு போலத்தான் இருந்தாள். ஆனால்...
தாமு : எப்படிடா... சொல்வேன்... நல்ல இடத்துப்பெண்...

சோமு : படித்துக்கூடத்தான் இருக்கிறாள்... பல்லைக் காட்டியதும் பரவசமாகிவிடக்கூடிய ஏமாளி அல்ல... கண்டிப்பான சுபவாம்...

தாமு : அதுதானே, எனக்கும் ஆச்சரியம் எப்படி?

சோமு : (கேலியாக) எப்படி...! சொல்லி வருமா அந்த வித்தை... என் பேச்சு, பார்வை, அப்படி! பாகாக உருகினாளே, நான் கண்கலங்கியபோது...

தாமு : கண் கலங்கினாயா...?

சோமு : ஆமாம்! அப்படி ஒரு போஸ். நளினா! என்னால் நீ இன்றி நான் உயிர் வாழ முடியாது... என்னால் வேதனையை இனியும் தாங்கிக் கொள்ள முடியாது... நாளைக் காலையில் கோவில் திருக்குளத்திலே என் பிணம் மிதக்கும்... என்று டயலாக்.... அதற்குத் தகுந்த ஆக்ட்... போஸ்... நளினா என்ன, சிலைகூடச் சம்மதம்! சம்மதம்!என்று கூறும்டா, கூறும்.... மண்டு! உனக்கெங்கே தெரியப்போகிறது, அந்த வித்தை! ஒரு புன்னகை தவழ்ந்தது... கண்களிலே ஒரு மகிழ்ச்சி... உடனே.

தாமு : உடனே?

சோமு : சத்தியம் செய்தேன்! “தாயின் மேல் ஆணை; தந்தை மேல் ஆணை... தூய காதல்மேல் ஆணை! உன்னைத் தவிர வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. நீயே என் உயிர் – என் இன்பம்” என்றேன்.
தாமு : சொன்னதும்...?

சோமு : (கேலியாக) சொன்னதும்... போடா போ! நடக்க வேண்டியதெல்லாம் நடந்தது. நடந்து கொண்டே இருக்கிறது...

தாமு : (தழுதழுத்த குரலில்) நல்ல அழகு...

சோமு : (கேலியாக) ஏண்டா உருகறே... ஏய்!... தந்தத்தால் செய்த பதுமையடா அவள்... அடா, அடா! சிரிக்கும்போது அவள் கன்னத்திலே ஒரு குழி விழும். ஆஹா... ஹா...ஹா.... அற்புதமா இருக்கும் பார்க்க... விழுங்க விழுங்க.... இது என்ன கன்னமா, பச்சரிசி மங்காயா, என்று கொஞ்சுவாள். கன்னத்தைக் கிள்ளும்போது.... அடா அடா, அடா! இத்தோடு இருபத்தி இரண்டு போதும் என்பாள்...

தாமு : இருபத்தி இரண்டா... என்னது...

சோமு : முத்தம்டா, முத்தம்... பரிபூரணமாக நம்புகிறாள்... என்னை... திருமணத்துக்கு நாள் பார்த்தாகிவிட்டதா... கண்ணா என்பாள்... ஓ... என்பேன்... எப்போ... என்று ஆவலாகக் கேட்பாள்... அதோ அந்தச் சந்திரன் மேகத்திற்குள் மறைந்ததும்... இப்போதே... இங்கேயே என்பேன்... போங்கள் எப்போதும் விளையாட்டுத்தானா, என்பாள்.

தாமு : நீ....?

சோமு : (கேலியாக)... நீ? உடனே நாள் நட்சத்திரம் பார்த்துச் சொன்னேன். என்று எதிர்பார்க்கிறாயா... பைத்தியக்காரா... அப்படியே என் மார்மீது சாய்த்துக் கொண்டேன். அன்பே என்றாள்; இன்பமே என்றேன். என்னைக் கைவிடமாட்டீர்களே என்றாள். நானா என்னையா கேட்கிறாய், அந்தக் கேள்வி என்றேன். கேட்டபடி அவள் முகத்தை என் கரங்களில் தாங்கிக் கொண்டு என் முகத்தருகே கொண்டு சென்றேன். பார்! என் முகத்தைப் பார். இந்தக் கண்களைப் பார்! உன்னைக் கைவிடும் கயவனுடைய முகமா இது என்றேன்.

தாமு : அவள்?
சோமு : அவளா! அதற்குமேல் முடியுமா அந்தப் பேதைப் பெண்ணால், ஆனந்தத்தை அணைபோட்டுத் தடுக்க! நான் நம்புகிறேன். முக்காலும் நம்புகிறேன் என்றாள். இதழ் என்னிடம் – இன்ப இரவு – இணையில்லா ஆனந்தம்.

தாமு : (பெருமூச்சுடன்) கொடுத்து வைத்தவனடா நீ... அதுசரி, நளினாவைத் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கே வந்து விட்டாயா?

சோமு : முட்டாள் வருவன் அந்த முடிவுக்கு... நானா? நளினா ஒரு ‘ஒன்வீக்’... ஒரு வார விருந்து. பிறகு...
(மகாகாளியின் பலமான பிடி சோமுவின் கழுத்தில் விழுகிறது. பதறுகிறான்.
உடனிருந்தவன் ஓடிவிடுகிறான். கழுத்தைப் பிடித்துத் தூக்கிச் சோமுவை நிறுத்தியபடி மாகாளி கடுங்கோபத்துடன்.)

மாகாளி : பெண்ணைக் கெடுத்த பேயனே! ‘ஒன்வீக்’ ஒருவார விருந்தா அவள் உனக்கு... (தாக்குகிறான்.) மயக்க மொழி பேசி, அவளை நம்ப வைத்தாய்! பரிபூரணமாக நம்புகிறாள். நீ அவளைக் கெடுத்துவிட்டு அதை ஒரு கலை என்று இங்குப் பேசிக் கொட்டம் அடிக்கிறாய்... பைத்தியக்காரப் பெண்ணே! பசப்பு வார்த்தையைக் கேட்டுப் பாழாகிப் போனாயே அம்மா! (மீண்டும் தாக்கி) அடப்பாதகா! உன்னை நம்பிய அந்தப் பெண் உன்னை உத்தமன் என்று எண்ணிக் கொண்டு, என்ன என்ன ஆசைக்கனவுகள், இன்ப எண்ணங்கள் கொண்டிருக்கிறாளோ! உள்ளத்தில் இடமளித்தோம் இனி ஊர் அறிய – உலகமறியக் கூறி மகிழவேண்டும். மாலை சூட்டுவான், மக்கள் வாழ்த்துவார்கள், மணாளனுடனே மதிப்புடன் வாழ்வோம் என்றெல்லாம் எண்ணி அவள் மனத்திலே மகிழ்ச்சி பொங்கும்.. இங்கு நீ ஒரு வாரம் என்று துளிகூட, பழிபாவத்துக்கு அஞ்சாமல், யார் இருக்கிறார்கள் நம்மைக் கேட்க என்ற தைரியத்தில் உன் வீரப்பிரதாபங்களைப் பேசிக் கொண்டிருக்கிறாய்.

(தாக்குகிறான்; அவன் அடிதாளமாட்டாமல்)
சோமு : ஐயோ... ஐயையோ... என்னைக் கொல்லாதே! நான் தாங்கமாட்டேன். சத்தியமா இனி அப்படிப்பட்ட தப்பு தண்டாவுக்குப்போகமாட்டேன்.

மாகாளி : இனி தப்புத் தண்டாவுக்குப் போகமாட்டியா! அயோக்கியப்பயலே! இப்ப நடந்ததற்கு என்ன சொல்றே... நடந்தது நடந்ததுதானா... யார் அந்தப் பெண்? எங்கே இருக்கிறாள்?
சோமு : பெரிய இடத்துப் பெண்ணய்யா... விஷயம் தெரியக்கூடாது... இனி அவ்விதம் நான் நடந்தா, கேள்... கொன்று போடு...

மாகாளி : அடப் பாதகா! ஒரு பெண்ணைக் கெடுத்துவிட்டு... அவள் கதி என்னவென்று கூறாமல்,... உன்னிடம் என்ன பேச்சு (இழுத்தபடி) நட! அந்தப் பெண்ணைக் காட்டு... அவள் காலில் விழுந்து கதறு... நான் மட்டும் இங்கே இல்லாதிருந்தால், அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகியிருக்கும்? புறப்படு... இப்போதே திருமணமாக வேண்டும்... அவள் வாழ வேண்டும்.

சோமு : ஆகட்டும்... என்னை விட்டுவிடு... நான் அவளையே கலியாணம் செய்து கொள்கிறேன்.
மாகாளி : (கேலியாக) அப்படிங்களா... அப்போ, போயிட்டு வாங்க... கலியாணத்தன்று, நான் வருகிறேன். (கேவலமாக) ஏண்டா! உன் பேச்சை நம்பச் சொல்கிறயா... நீதான், ‘போஸ்’ கொடுப்பியே, ‘போஸ்’; கேட்டுக் கொண்டுதான் இருந்தேன், உன் பேச்சை... நான் என்ன ஏமாளிப் பெண்ணா, உன் பசப்பிலே மயங்க... (தாக்கியபடி) நம்ம ‘பாஷை’ புரியுதா! புரியதேல்லோ...
(சோமு திணறுகிறான்.)

மாகாளி : அதனாலே, என்னோடு பேசி, தப்பித்துக் கொள்ளலாம் என்று எண்ணாதே... புறப்படு... அந்தப் பெண் வீட்டுக்கு...
(இழுத்துச் செல்கிறான்.)

சோமு : (மெல்லிய குரலில்) நாலுபேர் பார்த்தா கேவலமாகப் பேசுவாங்க! என் கையை விடுங்க... நான் ஓடிவிடமாட்டேன்... சத்தியமா...

மாகாளி : ஓஹோ! துரைக்கு இது கேவலமாத் தெரியுதா! நாலுபேர் பார்த்தா கேலியாகப் பேசுவாங்களேன்னு சுருக்குன்னு தைக்குது... ஏண்டப்பா (ஊச்ஞிஞு இதt) இதற்கே உனக்கு இப்படித் தோணுதே, அந்தப் பெண்ணைக் கெடுத்துக் கைவிட்டுவிட்டா, அவளுக்கு எவ்வளவு கேவலம்... இழிவு! உம்! நீ ஏன் அதைப் பத்தி எண்ணி இருக்கப் போறே... நீதான் ‘ஒன்வீக்’ – போதும். என்பவனாச்சே.

(தலையைக் கவிழ்த்துக் கொள்கிறான் சோமு.

(இருவரும் நடக்கிறார்கள்; எதிரே சில பெண்கள் வருகிறார்கள்.

‘இவளா? அவளா?’ என்று கேட்பதுபோல மாகாளி ஜாடை செய்கிறான்.

இல்லை இல்லை என்பதைச் சோமு ஜாடையால் தெரிவிக்கிறான்.

எதிர்ப்புறமிருந்து வள்ளி சைக்கிளில் வருகிறாள்.

சோமுவின் கண்களிலே திருட்டுத்தனம் தெரிகிறது.)

மாகாளி : வருஷம் பத்து ஆனாலும் விடமாட்டேன்... தெரியுதா... இப்படிப்பட்ட ஆசாமியைக் கண்டா, நமக்கு விருந்து... புரியுதா..

(சோமு வள்ளியைப் பார்க்கக் கண்டு.)

மாகாளி : அதோ வருதே, ஒரு பொண்ணு சைக்கிளில்...

சோமு : (மெல்லிய குரலில்) அந்தப் பொண்ணுதான்...

(சைக்கிள் அருகே வருகிறது. தன்னை யாரோ இருவர் தடுத்து நிறுத்துவாக எண்ணிக்காண்டு வள்ளி திகிலடைகிறாள்.)

மாகாளி : சைக்கிள் சவாரியா... பட்டத்தரனை நானே கூட்டிக்கிட்டு வந்திருக்கிறேன்... இறங்கு...கீழே. (திகைக்கிறாள்.)

மாகாளி : இறங்கு... ஏமாளிப் பொண்ணே! வா, இப்படி... ஏன் இப்படி விழிக்கறே...

வள்ளி : (திணறி) யாரு... என்ன... என்னய்யா இது... என்னை ஏன் மிரட்டறே... யாரு நீங்க?

மாகாளி : (சோமுவைப் பிடித்திழுத்து வள்ளி எதிரே நிறுத்தி) புரியுதா, ஏன் உன்னைக் கூப்பிட்டேன் என்கிறது வந்திருக்காரே உன்னை வாழ வைக்கும் மணாளர். வாம்மா வா!... என்னா, நம்ம காதலரை, யாரோ ஒரு முரட்டுப் பய இழுத்துக் கொண்டு வருகிறானேன்னு திகைக்கறியா... வேறே வழி இல்லை.... அதனாலே இப்படி...

வள்ளி : என்ன சொல்றீங்க... ஒண்ணும் புரியலையே...

மாகாளி : (கோபமாக) இரகசியம் தெரிந்து விட்டதே என்று திகைப்பா? இப்படி மூடி மூடி மறைத்துத்தானே, நாசமாகப் போறீங்க! இப்படிப்பட்ட பயல்களும் உங்களை நம்ப வைத்து நாசமாக்க முடிகிறது...

வள்ளி : (சோமுவையும் மாகாளியையும் மாறி மாறிப் பார்த்தபடி)
ஒன்றும் விளங்கவில்லையே... என்னய்யா இது...

மாகாளி : இப்போதும் இவனுக்கு எங்கே மனக்குறை வந்து விடுகிறதோ என்றுதானே பார்க்கிறாய்? புத்தி கெட்ட பெண்ணே! இவன் உன்னை ஏமாற்றிவிடப் பர்த்தான். காதலித்தானே, அதே காதகன் ‘கண்ணே!’ என்றானே, ‘மணியே’ என்றானே, அதே கயவன்! உன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை... ஒருவாரம் போதுமாம்! என் காதால் கேட்டேன், இவன் பேசியதை. நல்ல வேளையாகக் கேட்டேன்... கேட்டதால், கெட இருந்த உன் வாழ்வு, அழிய இருந்த உன் கற்பு, போக இருந்த உன் மானம் மீண்டும் கிடைக்க வழி ஏற்பட்டது. வா, உன் வீட்டுக்கு! உன் அப்பா யார்?... பார்த்துப் பேச வேண்டும்... இவனும் வருவான்... திருமண நாள் குறிப்போம்... நாளென்ன நாள்! நல்லது நடக்கும் நாளெல்லாம் நல்ல நாள்தான்... புறப்படு.... புறப்படு...

வள்ளி : (சிறிது புன்னகையுடன்) திருமணம் எனக்கா...

மாகாளி : ஆமாம், ஆமாம்... ஒத்துக் கொண்டான்...

வள்ளி : (சிரிப்புடன்) யார், இவ...ரா?

மாகாளி : (வெறுப்புடன்) ஆமாம்... பரிபூரணமாகத் தான் நம்பினாயே இவரை...

வள்ளி : (மேலும் சிரித்தபடி) பைத்தியமே! பைத்தியமே! அவர் யாரோ, நான் யாரோ? ஐயா! உம்மிடம் நல்லதுக்குப் போராடும் வீரம் இருக்கிறது... ஆனால் சுலபத்திலே ஏமாந்து விட்டீர்... எனக்கும் இவருக்கும், முன்பின் பழக்கமே கிடையாது...

மாகாளி : ஏய்! என்னது... இது... (என்று கூறி சோமுவைத் தாக்க.)

(வள்ளி குறுக்கிட்டு)
வள்ளி : முரட்டுத்தனத்தாலே என்ன காரியத்தைச் சாதிக்க முடியும்... இப்போதுதான் எனக்குக் கொஞ்சம் விஷயம் விளங்குகிறது.. காதலித்தவளைக் கைவிட இருந்தார் இந்த ஆசாமி... கண்டு பிடித்துவிட்டீர்... அந்தப் பெண்ணுக்காக, அவள் வாழ்வுக்காக, மானத்துக்காகப் போராடுகிறீர்.

மாகாளி : ஆமாம்..

வள்ளி : ஆனால் அந்தப் பெண், நான் அல்ல...

மாகாளி : இவன் காட்டினானே உன்னை...

வள்ளி : அடிதாங்கமாட்டாமல், யாரையாவது காட்டித் தப்பித்துக் கொள்ளலாம் என்று, சுலபத்தில் – ஏமாற்ற முடியும் உம்மை என்ற எண்ணத்தால்...

மாகாளி : (கோபத்துடன்) அட பழிக்கஞ்சாத பாதகா! (நோக்கி) இப்படியுமா ஒரு சுபாவம்!... நான் ஒரு முட்டாள்... உன்னை நம்பிவிட்டேன்...

வள்ளி : பார்த்தீர்களா! நீங்களே இவன் பேச்சை நம்பி விட்டீர்களே! ஒரு பெண் ஏமாந்ததிலே என்ன ஆச்சரியம்... அடிக்காதீர்கள்... பக்குவமாகப் பேசி...

மாகாளி : (கேலியாக) வாடா, என் ராஜா! (என்று கொஞ்சி) புண்ணியவானே, அந்தப் பெண்ணை ஏற்றுக் கொள் என்று சொல்லிக் காலிலே விழ வேண்டுமா...

வள்ளி : ஒரு பெண்ணுடைய வாழ்வுக்காக இவ்வளவு பரிந்து பேசும் உங்கள் குணம் தங்கம்... தங்கமய்யா தங்கம். ஆனால், முறை தெரியவில்லை... தாக்கித் தாக்கியா திருத்த முடியும்... சாகடிக்கலாம்...

மாகாளி : இப்படிப்பட்ட ஈனர்கள் செத்தால் என்ன... சாகடித்தால்தான் என்ன...

வள்ளி : ஒன்றுமில்லை... எந்தப் பெண்ணுடைய நல்வாழ்வுக்காகப் பாடுபடுகிறீரோ, அந்தப் பெண்ணின் கதி என்ன ஆகும்... நாசமாய்ப் போகும்... அழிக்கத்தான் தெரிகிறது உமக்கு... வாழ வைப்பது இந்த முறையால் அல்ல...

மாகாளி : (வெறுப்புடன்) இந்த முறை அல்ல! வேறே என்னவாம்? ஒரு பள்ளிக்கூடம் நடத்தி இவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கச் சொல்கிறாயா... பெண்ணே! உனக்குப் பேசத் தெரிகிறது... சும்மா இரு...
(சோமுவின் கழுத்தைப் பிடித்திழுத்து)

யார் அந்தப் பெண்? உண்மையைச் சொல்லு! உதைபட்டுச் சாகாதே!

வள்ளி : சொல்லய்யா... யார் அந்தப் பெண்... இதோ பார், ஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்குவது தர்மமா நியாயமா... உங்களை எவ்வளவு நம்பி தன்னை ஒப்படைத்தாள்! துரோகம் செய்யலாமா...

மாகாளி : இந்தக் கல் நெஞ்சனிடம் உன் கனிவான பேச்சு, பலிக்குமா, அம்மா... அவனுக்குப் புரிவது ஒரே ஒரு பாஷைதான்.
(தாக்குகிறான். வள்ளி குறுக்கிட்டுத் தடுக்கிறாள்.)

மாகாளி : (கோபமாக) தா, பெண்ணே! இதிலே குறுக்கிடாதே! நீ அல்ல, இவனிடம் ஏமாந்தவள்.. பிறகு உனக்கென்ன வேலை இங்கே? போ, பேசாமல்... நான் பார்த்துக் கொள்கிறேன்.

வள்ளி : தெரிகிறதே நீங்கள் பார்த்துக் கொள்கிற இலட்சணம். பக்குவமாகப் பேசி, உண்மையைத் தெரிந்து கொள்ளத் திறமை இல்லை; புத்தி புகட்டி, மனத்தை மாற்றத் தெரியவில்லை.
மாகாளி : அம்மா, மகராசி! அந்தத் திறமை எல்லாம் உங்களோடு இருக்கட்டும்.. என் திறமை அவனுக்குத் தெரியும் (சோமு அடிபட்ட இடத்தைத் தடவிக் கொடுக்கிறான்.) உனக்கு எப்படித் தெரியும்... உனக்குச் சம்பந்தமில்லாத விஷயம்.. தலையிடாதே... போ, பேசாமல்.

வள்ளி : எனக்குச் சம்பந்தமில்லாத விஷயமா... சரி, உமக்கு மட்டும் என்ன சம்பந்தம்... இவனால் கெடுக்கப்பட்டவள் யார்? உன் அக்காவா, நான் தலையிட...

வள்ளி : நீதிக்காகப் போராடுபவர்கள் இலட்சத்தில் ஒருவர்கூட இருப்பது கஷ்டம்... ஆடவர்களிலே இப்படிப்பட்ட ஓர் அபூர்வ மனிதர் இருப்பது கண்டு நான் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறேன் தெரியுமா... பெண் குலத்தின் சார்பிலே வாதாட, போராட இப்படிப்பட்ட வீரர்கள் தேவை... நிரம்பத் தேவை.. வீரம் இருக்கிறது, தங்களிடம் நிரம்ப... விவேகம் இல்லை...

மாகாளி : முட்டாள், முரடன் நான்... அதைத்தானே அம்மா, நாசுக்காகச் சொல்கிறாய்... சரி, நான் இவனை இழுத்துக்கொண்டு போய், முச்சந்திக்கு முச்சந்தி நிறுத்திப் பேசப் போகிறேன்... அந்தப் பெண்ணின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் வரையில் வேறு வேலை எனக்குக் கிடையாது...

வள்ளி : நீ முச்சந்திகளிலே இவனை நிறுத்தி வைத்து முரட்டுத்தனமாக நடத்துவாய் – ஊரார் இவனுக்கு வேண்டியவர்கள் – போலீஸ் – எல்லாம் கைகட்டி, வாய் புதைத்து, ஓஹோ! ஓர் இலட்சியவீரன் போராடுகிறான். நாம் குறுக்கிடக்கூடாது என்று இருப்பார்கள் என்றா எதிர்பார்க்கிறாய்? உள்ளத்திலே நல்ல எண்ணம் இருக்கிறது... உலகம் தெரியவில்லையே... யாரும் துணை இல்லாததால் இவன் சும்மா இருக்கிறான்... நாலு பேர், தெரிந்தவர்களைக் கண்டால் போதுமே, காகாவென்று கூச்சலிட்டு ‘திருடன், திருடன்! முரடன்! கத்தியால் குத்தவந்தான்! பணத்தைப் பறித்துக் கொண்டான்’ என்று கூவுவான்... ஊர் பாயும் உன் மீது... உன் வலிவு பயன்படாது... போலீஸ் வரும்... கோர்ட்டிலே நிறுத்துவார்கள்... கையில் விலங்கு போட்டு... நீ கூறுவாய் இவன் ஒரு பெண்ணைக் கெடுத்த பேயன், திருத்தப் பார்த்தேன் என்று கோர்ட்டிலே; கைகொட்டிச் சிரிப்பார்கள், ஆழ்வார்கள், நாயன்மார்களுக்குப் பிறகு அவதரித்திருக்கிறார் ஐயா இந்த மகான்! என்று கூறி, வழிப்பறி நடத்திய குற்றத்திற்காக ஆறு வருடம் தண்டனை தருவார்கள்... இவன் வெற்றிச் சிரிப்புடன் வேறு வேட்டைக்குக் கிளம்புவான் – இவனால் நாசமாக்கப்பட்டபெண், குளத்தைத் தேடுகிறாளோ விஷத்தைத் தேடுகிறாளோ, யார் கண்டார்கள்...

மாகாளி : நன்றாகத்தான் பேசுகிறாய்... நியாயமாகத்தான் பேசுகிறாய்.. உலகம் அப்படித்தான் இருக்கிறது... ஆனால்... அந்தப் பெண்ணின் வாழ்வு நாசமாகலாமா... நீயும் ஒரு பெண்... சொல்லம்மா, சொல்லு... இந்தப் பேயனைச் சும்மா விடலாமா...

வள்ளி : (சோமுவிடம் கனிவாக) ஐயா! பழிபாவத்துக்கு அஞ்ச வேண்டாமா... அடுக்குமா உமது போக்கு? அபலையை நாசமாக்கலாமா... உம்மிடம் கொஞ்சி இருப்பாள். கெஞ்சி இருப்பாள்... சத்தியம் சத்தியம் என்று கூறி நம்ப வைத்திருப்பீர்... அவளைக் கைவிட்டால் அவள் மானமிழந்து வாழ்வாளா... நமது சமூகத்துக்கே இழிவு அல்லவா... ஐயா!

தாயின் வயிற்றில் பிறந்தீர்! தாய்க்குலத்துக்கு இழிவு தேடலாமா! அக்கா தங்கை இல்லையா உமக்கு! உமது காதலை நம்பினாளே அந்தப் பெண், அவளிடம் சரசமாடிக் கொண்டிருக்கும்போதே, அவளைச் சாகடித்து விட்டிருக்கலாமே! அது எவ்வளவோ மேல், இதைவிட!
(சோமு கண்கலங்குகிறான். மாகாளி அதைக் காண்கிறான்.)