யோகி பாரதியாரின் காதல் கவிதை
பொங்கல் நாளிலே பல்துறையினர்க்கும் பரிசளித்திடுக!
இளங்கோ
காட்டும் மதுரை மாநகர மகளிரின் இன்ப வாழ்க்கை
உதுமானிய சாம்ராச்சியத்தின் உடைபாடு
இந்தியப் பேரரசு என்பது போலித் தத்துவம்
தம்பி!
என் உள்ளத்தைக் கொள்ளை
கொள்ளும் உன் குறும்புப் புன்னகையின் பொருள் எனக்கு
விளங்காமலில்லை. இந்த விழா நாளன்று, எவரெவரோ தத்தமது
உடன்பிறந்தார்கட்கு விரும்பித் தருவர் விதவிதமாகப் பொருள்
பட்டும் பொன் இழையும் பாங்காகச் சேர்த்தமைத்த வண்ணம்
சிறந்திடும் நல்ஆடை வகைதானுண்டு மெல்லியதாய்த், துல்லியதாய்,
மேனி அழகினைச் சுட்டிக் காட்டுவதாய்; எழிலூட்டி வளம் காட்டும்
எத்தனையோ, வகையான அணிபணிகள் பெற்றளிக்க அங்காடியா இல்லை
சுவையூட்டும் பண்டங்கள் தொகை தொகையாய் உள்ளனவே எனக்கென்று
நீ இன்று எடுத்து வந்தளிப்பதுதான் என்ன என்றறிய ஆவல் கொண்டுள்ளேன்,
ஏன் இனியும் ஓட்டுகிறாய் என் காலம் வீணாக, கொண்டுவந்த
பொருள்தனைக் கொடுத்திடு, கோலம் காண்போம், இன்று என்
வருவேன், கடுகி என்றுரைத்து, நேற்று அந்திப்போதினிலே
செப்பிவிட்டேன் நண்பரிடம்; அவரெல்லாம் எனைக் கண்டு, ஐயையே!
இதுதானா? என இழித்துப் பேசிடவா, அண்ணா நீ எனைவிடுவாய்,
இல்லை! இல்லை! நானறிவேன்! எனக்கென்றே நல்ல பொருள் எடுத்துத்தான்
வந்திருப்பாய். எனக்கன்றி வேறு எவர்க்குமில்லை! நீயன்றிப்
பொருள் எனக்களிப்பாரும் வேறு இல்லை! இருவருமே இதனை மிக
நன்றாக அறிந்துளோமே! எனினும், காலமதை வீணாக்கி அலைக்கழித்து,
எனை வாட்டி நிற்கின்றீர், எடுத்திடும் என் பொருளை! கொடுத்திடும்
இப்போதே!! - என்றெல்லாம் கேட்டிடுது, உன் பார்வை, நானறிவேன்.
ஆனாலும், அன்புத் தம்பி! எப்பொருளைப் பெற்றாலும், அது
என்ன வகை என்றாலும், பொன்னுடன் நேர்செய்து, பார்த்திடும்
போதினிலே, என்னவோ அவ்வளவு ஏற்றமிலையோவென்று அங்காடி
மனத்தினர் அறிவித்துவிட்டாலும், ஒன்றை மறவாதே, இன்றல்ல
நேற்றல்ல, நம் நெஞ்சம் நேசத்தால் நெகிழ்ந்திட்ட நாள் தொட்டு,
என்னால் இயன்றதனை இம்மியும் வஞ்சமின்றி எடுத்து வந்து
தருகின்றேன், ஏற்கின்றாய்; மகிழ்கின்றாய்! முத்து இது
அல்ல, மூலையில் போட்டுவிடு என்றுரைக்கும் தாய் உண்டோ,
தன் சிறுமதலை தரும் கடலலையால் ஒதுங்கிவந்து உடைபட்டு கிளிஞ்சல்
துண்டு! அஃதேபோல அளித்திடும் பொருளுக் கெல்லாம், அங்காடிக்
கணக்கைவிட்டு, அகத்திலே ஊறுகின்ற அன்பு பெய்திட்டதென்று,
ஆங்கதனைத்தான் கொண்டு அக மகிழ்ந்து இருப்பதுதான், உடன்பிறந்தார்
காட்டும் உவகைமிகு பாசமாம். இன்றும் அதுவே முறை! என்றென்றும்
அம்முறையால், வாராது எக்குறையும்! குன்றின்மேல் வீழும்
கொன்றை, கண்ட நம் புலவோர் பேழையுள் கிடந்திட்ட பொன்னுக்கு
நிகர் என்றார்; அது பண்பு. அவர் வழியில் நாம் வந்தோம்,
நாம் தாழ்ந்தால், அவர் தம்மைப் பிறர் இகழவைக்கின்றோம்
என்றாகும். ஆகையினால், என்றென்றும் நம் நெஞ்சில், தமிழ்ப்பண்பு
ஏற்றம் பெற்றாளட்டும்.
அண்ணன் தருகின்ற பொருளைப்
பெறுங்காலைத் தந்த பொருள், தர எண்ணும் பொருளைச் சுட்டிக்காட்டிடும்
வகைதான் என்று எண்ணவேண்டும். மலர் தொட்ட கரம் காட்டும்
மணத்தைக் கண்டால், மலர்த் தோட்டம் பெற வேண்டும் என்ற
எண்ணம் எழுதல்வேண்டும்; அஃதேபோல, அண்ணனால் இயன்றதனை அளிக்கின்றான்,
அதனைப் பெற்று, அவனால் ஆகாதனவற்றை நாம் முடித்து வெற்றி
காண்போம், என்றெண்ணி இகல் வென்று, வாழ்க நீயும். இனிதாக
நீ வாழுங்காலை, நானும் இடுக்கணிலா உழன்றிடுவேன்? இல்லை!
வாழ்வேன்!!
இன்றுனக்கு விழா! இல்லம்
புதுக்கோலம் கொள்ளும் நாள்! அந்தக் கோலம், அழகளிக்கும்,
ஏனென்றால், காணும் போது, உள்ளம் களிப்புப் பொங்கும்
காரணத்தால். பொங்கற் புதுநாள் போந்தது என்றால், மங்கிக்
கிடந்ததெல்லாம் தங்கமென் றாகும் காண்! வெளியெல்லாம் பொன்பரப்பி,
வேலியெல்லாம் மணி இழைத்து, வைத்திருக்கும் இந்த எழில்,
தந்ததெவர்? உழைப்பாளி! அவர், சதிராடிக் காட்டிடும் கதிராளைக்
கண்டதாலே, மயங்கிடாமல், நின்றவளை, அழைத்து வந்தார். மனைதனுக்கு!
அவள் ஏறிவரும் வண்டிக்கு எருதுகள்தான் பூட்டியது, என்றாலும்,
எழிலரசி ஏழெட்டுக் குதிரைகளைப் பூட்டியதோர் நல்இரதத்தில்
புறப்பட்டு உலா வந்தால்; ஊர் என்ன கவின்பெறுமோ - அதற்கு
நேர் இஃது, இல்லை, அதனையும் மிஞ்சிடும் எழில்மிக்க காட்சி
இது என்பதனை, இன்றல்ல, என்றோ அறிந்தார், நம் தமிழர்,
அதனால்தான், மன்னவனைக் கண்டிட்ட மாப்புலவர் கூறி நின்றார்,
நின்கரத்துச் செங்கோற்குக் காப்பு எது கூறுவன், கேள்!
ஏரடிக்கும் சிறுகோல்!! என்றியம்பினர்; வியந்தார்.
இன்றும், ஏதேதோ தொழில்,
ஏற்றம், மாற்றமிகு வினை பலவும், காண்கின்றோம், களிக்கின்றோம்,
என்றாலும், அச்சாணி யாக இன்றும், அமைந்து இருப்பது முன்
ஆன்றோர்கள் மெச்சிப் புகழ்ந்திட்ட உழவுதான்; மறுப்பு
இலை. அந்த உழவு, கனிவு பெற்றளிக்க, அந்தச் சுவை உண்டு
மகிழ்ந்திடத்தான், மனை தோறும் கூடுகின்றார், மாடுகன்றும்
போற்றுகின்றார், பொங்கலோ பொங்கலென்று! பாடி மகிழ்கின்றார்,
திருநாள் கொண்டாடும் திரு இடத்து மாந்தரெலாம். அந்த நன்னாளிலே,
அருகே கரும்பிருக்க, அதைக் காண மனமின்றி, ஆரணங்கின் மொழிகேட்டு,
பலவின் கனிமொய்க்கும் பான்மையிலே, நீ இருக்க, எனை என்ன,
உனக்கேற்ற பொருள் அளிக்கும் திறன் பெற்றோன், என்றா எண்ணப்போகின்றாய்?
உம்! நானறிவேன், இன்றுனக்கு, பொன்னும் பொருளும் மின்னலிடையாள்
வீசும் கன்னல் மொழியில் உண்டு! குழலுண்டு! யாழுண்டு!
கூத்துண்டு! பாட்டுண்டு!! இவை எல்லாம் இருக்கையிலே, உனக்கின்று,
நானென்ன உயர்ந்த பொருள் அளித்திடுவேன்! முயற்சியும் வீணே!
பூத்தமலரின் புதுத்தேனைத் தானுண்டு, பாடி வட்டமிடும் வண்டினுக்கு,
நான் இன்று, "பருகப் பால் உண்டு!' என்றழைக்க வருவது, நன்றல்ல,
நானறிவேன்.
மகிழ்ந்திருக்கும் இவ்வேளை,
மகிழ்ச்சியே வினையென்று, மயங்கிடுதல் கூடாது என்று மூதறிஞர்
இயம்பியதை மட்டும், மறவாதிருப்பதுதான், மாண்பு; தமிழர்
நெறி.
மகிழ்ச்சியே மயக்கம்; மன்னுயிரைத்தான்
மாய்க்கும்! என்று கூறினோர் அல்லர் நம் தமிழர், எனினும்,
மகிழ்ச்சியே வினை; வேறு செயல் வேண்டாம், என்றிருத்தல்
நன்றன்று; வினை வித்து; மகிழ்ச்சி, விளைவு; அந்த விளைவு
அவ்வளவும், தின்று தீர்த்திட்டால், பின்வினைக்கு வித்து
ஏது? எனவே, விளைவு அளிக்கும் சுவையினை உண்டு மகிழ்ந்திருப்பதுடன்,
இருந்திடாது "வித்து' எடுத்து வைத்து, மீண்டும் வினைமேற்கொளல்வேண்டும்;
அங்ஙனம், முறை வகுத்துக்கொண்டால்தான், வாழ்வில் வளம்
காண வகை கிடைக்கும், தொடர்ந்து.
மகிழ்ச்சி, மயக்கமாகுதல்
கூடாது; மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனிதகுலம்!
மகிழ்ச்சி, புது முயற்சிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து;
மருவன்று.
கரும்பளித்த கழனி, மீண்டும்
கரும்பளிக்கக் காண்கிறோம்; மண்தான்; எனினும் மதிமிக்க
செயலன்றோ! மனிதன், அதனினும் மேம்பட்டன்றோ இருத்தல்வேண்டும்?
எனவே, ஒரு விளைவு, மறுவினைக்குத் துவக்கம்; மகிழ்ச்சி
வினையின் இறுதி முடிவு அல்ல; வினைப்பயன்; புதிய வினைக்கு
அழைப்பு. புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும்
இஃதல்ல; பொருள் பொதிந்த உண்மை; தமிழர்க்கு இது புதிதுமன்று.
தாயின் அழகைப் பெற்றிடும்
மகவு, பிறகு தாயுமாகித், தன் அழகளித்துச் சேயை அளித்திடும்;
காண்கிறோம் அன்றோ!
அதுபோலவேதான், மகிழ்ச்சி
பெறுகிறோம் விழாக் காரணமாக, எனில், அந்த மகிழ்ச்சியில்
திளைத்துப் பிறகு, தொடர்ந்து, தொகை தொகையாக, வகை வகையாக,
மகிழ்ச்சி பெற்றிடச் செயலில் ஈடுபடவேண்டும்.
குழலில் உள்ள துளைகளின்மீது
விரல் சேர்க்கும் இசை வல்லான், என் செய்யக் காண்கிறோம்?
எல்லாத் துளைகளையும் இறுக மூடிவிட்டால், இசை தானும், எங்கிருந்து
எழும், கூறு? இசையின் வகைக்கேற்ப, அளவுக்கேற்ப, இன்னின்ன
நேரத்தில், இன்னின்ன முறையோடு, விரலுக்கும் குழலிலுள்ள
துளை கட்கும் தொடர்புண்டு என்பது இசைவல்லோன், கண்டறிந்த
இலக்கணம், அதற்கேற்ப, மூடுகிறான் ஓர் துளையை, முற்றும்
ஒலி பிறக்கும் நிலையிலே வேறோர் துளையை விட்டுவைத்துக்
காட்டுகிறான், தொட்டும் தொடாததுமாய் விரல் இருக்கும்
சில துளையில், பாதி, கால், அரைக்கால் என்று பாங்கறிந்த
அளவு முறை தானறிந்து, விரல்களையே வினை செய்ய விடுகின்றான்;
அதனால்தான் ஏழிசையின் இனிமைதனை, மானிடர் கேட்டு இன்புற்று
மகிழ்ந்து இருக்கின்றார்; நாகமும் தீண்டாதாம், நஞ்சு கொண்டதெனினும்!
வாழ்க்கையே, அதுபோல்தான்.
அளவு, தொடர்பு, அறிந்து
வினை செய்து, எதற்கும் முறை வகுத்து, இன்பம் காண்பது,
வாழ்வு! அதுவும், மூழ்கிச் செயலற்றுப்போக அல்ல; அது மடமை!
துய்த்திடலாம் வாழ்வின் சுவை; துஞ்சிட அல்ல; வினை மேற்கொள்ள;
தொடர்ந்து செயலாற்ற; ஏனெனில், இயங்குதல் வாழ்க்கையின்
இலக்கணம்; இனியன புரிதல் அறநெறியாகும்; அறநெறியதனை அடவி
ஏகாமல், மாடும் மனையும் சூழ இருந்திடும் மாண்புமிகு இல்லறம்
அதனிலேயே, பெற்றிட இயலும் என்று கூறினர், தமிழர்; துறவோரும்,
இவரில்லை எனில் இல்லை யாங்கண் என்றார் உணர்ந்து.
இல்லறத்தாருக்கு நல்ல விழாவாக
அமைந்திருப்பதுதான், பொங்கற் புதுநாள், எனவேதான், இன்று,
ஈசன் திருவடி நிழலைச் சேர்ந்திடும் காதைபற்றிப் பேசிடும்
கவலை இல்லை; பொங்கிற்றா பால்! என்று ஒருவருக்கொருவர்
கேட்கும், பூரிக்கும் காட்சி காண்கிறோம்.
"எப்படியும் வந்திடுவார்
என்றாள். அவள் ஆரூடம் இப்படிப் பலிக்குமென்று, எண்ணவே
இல்லை'' என்று இருபதாண்டு தாங்கும் எழிற்கொடியைத்தான்
பார்த்து, இதுபோல மும்மடங்கு ஆண்டு கண்ட முதியவன் கூறி
நிற்க, "நானென்ன அவருக்காக, ஏக்கமா கொண்டிருந்தேன்? அவர்
வந்த காரணமும், எனைக் காணத்தானா? இப்பக்கம் ஏதேனும் அலுவல்
இருந்திருக்கும்; அக்காரணம்பற்றி வந்திருப்பார், மனைவரையில்''
என்றந்த மலரணையாள், இடிக்கின்றாள் சொல்லாலே. வெடுக் கென்று
இதழ் கடிக்கும் தன் மகவுக் கன்னத்தை. இதுகேட்டு, இலேசாகத்
தட்டுகிறான் பெற்றெடுத்தோன்; "ஏதேது! மெத்தவும் நீ; போக்கிரியாகிவிட்டாய்!
உன்னைக் கட்டித் தழுவி நான், கசக்கிவிடப்போகிறேன், பார்!''
என்று கூறுகிறான், குழவிக்காம் அப்பேச்சு! ஆனால், பார்வை?
அவள்மீது!!
இதைப் பாரண்ணா! இதைப் பார்!
பால் பொங்குகிறது பார்! பொங்கலோ பொங்கல்! பொங்கலோ
பொங்கல்!! என்று கூவுகிறாள், அவன் உடன்பிறந்தாள்; அவள்
செங்காய்!
***
"ஏடா உன் அண்ணன், ஏதுகூற
முனைந்திடினும், இழுத்து வந்து பேசுவானாம் காதல் கதை எல்லாம்;
கடிந்துரைத்தார். ஓர் "கனம்' கால்வாய் திறப்பு விழாவன்று;
அவர் உரைத்தது போலவா உன் அண்ணன் பேசுகிறான்?'' என்று
கேட்டிடுவார், காதற் காவியத்தின் கடைசி ஏடு வரை, படித்து
முடித்திட்ட முதியோர், இல்லத்துப் பெரியோர். அவரல்ல
பேசுவது; அமைச்சர்! அவர்க்கும் கோபம், காதல் மீதல்ல;
என்மீது! அதற்கும் காரணம், காதல் அவர்க்கெல்லாம் காஞ்சிரமுமல்ல!!
எனினும், ஏன் இதுபோல் அவர் பேசித்திரிகின்றார் என்பாயேல்,
மாசு எனக்குச் சேருமாம்; மனப்பால் குடிக்கின்றார். அறம்
பொருளை உரைத்ததுடன், வீடு காண அழைத்துச் சென்றாரில்லை,
அருங்குறளை ஆக்கியோனும், "இன்பம்' தந்தார்; அஃது இயற்கை
எனும் காரணத்தால். அஃது அற்றுப்போமேல், உயிரில்லை, ஊரில்லை,
ஊராளும் முறையுமில்லை; ஊராள் வோர்க்கோ இது புரியவில்லை.
நானுங்கூடத் தீதோதான் காதற்றிறமுரைத்தல்,
ஆன்றோரெல்லாம், அதனை வெறுத்துத்தானா கூறியுளார் என்பதனைக்
கண்டறிய, ஏடு பலவும் பார்த்தேன், அதனுள் இருப்பதனை எடுத்தியம்பிய
வல்லோர் தம்மை அடுத்துக் கேட்டுப் பார்த்தேன்; அமைச்சர்
பேசும் பேச்சு, பேச்சாக இருத்தல்கூட, அமைச்சராய் அவர்
இருக்கும் காரணத்தாலேதான்; வாழ்வுக்கு நல்லோர்கள் வகுத்த
நல்லறமே காதல் என்கின்றார்; அறிகின்றேன்.
காதலே யுலகம்! காதலே வாழ்க்கை!
காதற் களிப்பே கடவுட் களிப்பாம்;
காதலின் மறுப்பே கவலையுந் துயரும்!
காதலின் அளிப்பே கட்டறு மின்பம்!
காதலால் உயிரைக் கடவுள் படைத்தான்.
காதலித் தின்னுங் கண்ணிலம் பெருகவே!
விண்மீன் கணங்களு மிளிர்வன காதலில்!
தண்ணுங் காற்றுந் தவழ்வன காதலில்
உண்கனி விளைவதும் உள்ளக் காதலால்!
புன்னகை யொன்றாற் பூத்திடுங் காதல்;
கண்கள் கதுவிக் கனவுகள் காணும்;
இன்னிய காதலால் எண்ணம் உயரும்;
பொன்னொளிர் வனப்பும், புதுப்புது மகிழ்வும்,
நாளொரு மேனியும், நாண்மல ரழகும்,
வாழ்விழி நோக்கின் வரப்பிர சாதம்.
புள்ளின் பாட்டும், பூவின் மணமும்
கள்ளுண் வண்டும், காற்றின் உயிர்ப்பும்
அன்னமும், மானும், அழகிய கிளியும்,
வன்ன வியற்கையும், வசந்தப் பசுமையும்,
காதலர் தூதே! காசினி யெல்லாம்
காதலர் கடிதம், காதலர் பேச்சு!
காலமும் இடமும் காதலை வெல்லா;
கால மிடத்தைக் காதலே வெல்லும்;
காதலே காய கற்பமு மாகும்;
காதலே தேவர் சோதிக் கனவாம்;
கண்களாற் பேசிக் கருத்திரண் டணைத்துப்
புண்களை யாற்றிப் புலன்களைப் பற்றி,
இமையவ ரின்பமும் இணையிலா இன்பம்
இமையி னளித்திடும் இன்பமே காதல்.
காதல் வாழ்க! காதலர் வாழ்க!
காதலால் வாழ்வுக் கற்பக மோங்குக!
ஓங்குயர் காதலே உயிர்க்கடை யாளம்
நீங்காக் காதலே நித்திய வாழ்வு;
காத லற்றவர் கட்டையைப் போல்வர்;
உயிரின் இன்பமே, உயிரெனும் பசிய
பயிரினை வளர்க்கும் பைம்முகி லேயுனைப்
பிரிந்து வாழேன்; பிதற்றியுன் பெயரை
விரிந்த வுலகெலாம் வெளிகொண் டலைந்தேன்;
நீவே றில்லை; நான்வே றில்லை;
பூவே றில்லை; நிறம்வே றில்லை;
நானுன் யாக்கை; நீயென் னாவி;
நானுன் வாழ்க்கை; நீயென் வையம்;
உள்ளந் தாராய்; உயிரைத் தாராய்;
உள்ளம் வணங்கும் ஒன்றிய காதலே!
எப்படித் தம்பி, கவிதை!!
ஏதேது, அமைச்சர்கள் சொல்லச் சொல்ல, அண்ணன் அகவலாகக்
கொட்டுகிறான்போலும், காதல்பற்றி; என்றுதானே எண்ணிக்கொள்கிறாய்;
தம்பி! இது நான் தொடுத்த கவிதையே அல்ல!! வாழ்வு எனும்
மாயப் பைசாசத்தின் பிடியில் அகப்பட்டு உழன்று, பேரின்பம்
பெறவே முடியாத வகையில் சிற்றின்பச்சேற்றில் அழுந்திக்
கிடந்திடும், அறம் மறந்த ஒருவரின், வேட்கை குழம்பி வெளிப்பட்டதுமல்ல.
இளைஞர் மனத்தினை ஈர்த்துக் கட்சிக்கு வலிவு தேடும் "கதை
கூறி'யின் பேச்சுமல்ல. கண் கவரும் காட்சி காட்டிக் காசுதனைப்
பறிக்கக் கலையை விலையாக்கும் காதகரும் அல்ல இவர்! தூயவர்!
ஆம்! அங்ஙனம் நான் கூறுவதை அமைச்சரும் ஒப்புவர்! மேலவர்!
அவர் அறிவு கண்டோர் கூறுவர் அதுபோல்! அதுமட்டுமன்று
தம்பி! புலன் அடக்கி வாழ்கின்றார், புதுயோகி இவர்; என்று,
அமைச்சர் போன்றார் போற்றினர், நாடறியும். அரவிந்தர்
அமைத்த நல் ஆசிரமம்தனில் இருந்து; அறம் வளர்த்தார், இவர்
துறவி என்று அநேகர் கூறினர். அந்தத் துறவி தந்த அருங்கவிதைதான்,
இங்கு நான் இணைத்துத் தந்தது. காதலின்பம், மாண்பு கூறிடுதல்
தீதென்றால், இக்கவிதைக்கு என்ன பெயர்? இதனைத் தந்த துறவியை
அறிவர் நாட்டார்; சுத்தானந்த பாரதியார்.
அவர் பாடி அளித்திட்ட இந்த
அரும் கவிதை கண்ட அமைச்சர்கள், நாவெல்லாம் அசையாது இருந்தது
ஏன்? பசைபோட்டு அவர் நாவை ஒட்டிவைத்தனரோ, எவரேனும்?
கதைக்கின்றார் இதுபோது, "கழகம் உள்ளோர், காதற்கதை பேசி
வளர்க்கின்றார், கேடு' என்று; அன்று துறவி தொடுத்த கவிதை
கண்டு, வாய் அடைத்துக் கிடந்திடக் காரணம் என்ன? அவர் கவி
பாடினார்; கட்சி நடத்தவில்லை, நாம் கவி பாடவுமில்லை, கட்சி
ஒன்றில் ஈடுபட்டோம்; அந்தக் கட்சியின் வளர்ச்சி கண்டதால்
அவர்க்குக் கசப்பு! உள்ளே வெந்தால், வாயும் கசக்கும்,
என்றுரைப்பர் மருத்துவம் அறிந்தோர், இவர்தம் கசப்புக்கு
இஃதே காரணம். வாய்க்கசப்புடையோர் வட்டில் தன்னில் பழச்சாறு
பெய்து தந்திட்டாலும், ஐயோ! எரியுது! ஆகாது, இது தீது!
என்றே அலறுவர்! குறை, அவர் நாவில்!! நமது பேச்சில் இல்லை.
அகம் என்றும், புறம் என்றும் அன்று புலவோர் வகுத்த காலை
இவ்விதம் சில பேர் குமுட்டல் கொண்டோர் வருவர் என்று
துளியேனும் எண்ணவில்லை. போகட்டும்! அவர் நோய். விரைவில்
தீரட்டும்! விழாநாளன்று, அவர்க்கும் நல்வாழ்த்தளிப்போம்,
அவரும், தமிழர் ஆதலாலே.
***
இல்லற இன்பம், மாண்புடையது
என்பதைச் சுவை பட எடுத்துக்காட்டும் விழாவாக, பொங்கற்
புதுநாள் இருப்பதனால்தான், தம்பி! தமிழகத்திலே புதியதோர்
எழில் அந்நாளில் பூத்திருக்கிறது.
வேட்டுச்சத்தம் கொட்டு
முழக்கு இல்லை!
தாளமும் மேளமும் தோற்றிடும்
அளவில், "கைலையும் வைகுந்தமும்' கிலிகொண்டு கிடுகிடுத்து,
ஆங்குள்ள கடவுளர் அவரவர் வாகனம் கிடைத்திடினும் மேய்ந்திட
எங்கேனும் போயிருப்பினும், இனியும் தாமதித்தால், இக்கூச்சல்
நம் உலகினைத் துளைக்கும் என்று அஞ்சி ஓடிவந்து, என்ன வேண்டும்?
என்று கேட்டு, வரம் தந்து போகவேண்டும் என்று கூறும் வகையில்,
கோவிந்தன் பெயரையோ பரமசிவன் நாமந் தனையோ, பல்வேறு வகையான
ஒலியாலே எழுப்பிடும், பஜனைக் கோஷ்டிகள் பாற்பொங்கல்
நாளன்று இருப்பதில்லை.
வளைஒலி எழும்பிடும்; வண்ணக்
கலவையால் கோலம் போடுவர்! வீடு அழகு பெறும்; வீட்டுளார்
புத்தாடை புனைவர்; மாடு கன்று நீராட்டல் பெறும்; அவற்றினுக்கும்
புதுக்கோலம் புனைவர்; மஞ்சளும் இஞ்சியும், அவரையும் துவரையும்,
பூசுணையும் பிறவும் கொட்டி இருக்கும்! வாழையுடன் கரும்பிருக்கும்;
வடித்தெடுத்த சோற்றினிலே சுவையும் குழம்பி யிருக்கும்;
உண்டு மகிழ்ந்திருப்பர்; உரையாடிக் களித்திருப்பர்; இது
தமிழர் திருநாள்.
தம்பி! எனக்கொரு ஆசை: சிற்சில
ஊர்களிலே ஓரளவு செய்கின்றனர், நமது தோழர்கள்.
தமிழர்கள் திருநாள், அந்த
ஊருக்கே, மகிழ்ச்சி தரும் நாள்! எனவே, ஊர் மக்கள் அனைவரும்,
விழாக்கோலம் பூண்டிருக்கும் அந்நாள், உழைப்புக்கும்,
அறிவுக்கும், எழிலுக்கும், ஏற்றத்துக்கும், ஊர் மன்றம்
புகழ்மாலை சூட்டிப் பெருமைப்படுத்தவேண்டும்.
உழவுத்திறன் காட்டச் சொல்லி,
உழவர்க்குப் பரிசு அளித்தல்,
வலிவுத்திறம் விளக்கிடும்
விளையாட்டுப் போட்டிகள் நடாத்தி வெற்றிகொள்வோருக்குப்
பரிசளித்தல்.
நேர்த்திமிக்க ஆடை நெய்தவர்க்குப் பரிசு,
ஊர் மக்கள் நோய்தீர்த்த உத்தமருக்குப் பரிசு,
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியருக்குப் பரிசு,
முதல்தரமான பசு,
நல்ல காளை,
அழகான கன்று,
எடுப்பான தோற்றமுள்ள சேவல், கோழி,
அழகான குழந்தை,
ஆடல் பாடலில் வல்லோர்,
புதிய கவிதைகள் புனைந்தோர்,
நல்ல ஏடு தருவோர்,
இப்படிப்பட்ட, சிறப்பு இயல்புகளுடையோரைத்
தேர்ந் தெடுக்க ஊர் மன்றம் கூடிப் பரிசளித்து, மகிழ்ந்து
கொண்டாட வேண்டும்.
அன்றலர்ந்த பூத்தொடுத்த
அழகான மாலையோ,
புத்தாடையோ,
பொற்பதக்கமோ,
பரிசுப்பொருள், எதுவாக
இருப்பினும், அன்று பெறுவதிலே ஓர் தனி மகிழ்ச்சியுண்டு;
அத்தகைய ஓர் ஏற்பாடு விழாவினுக்குச் சிறப்பளிக்கும்.
களம் சென்று மட்டுமே உள்ளவுரம்
காட்டவேண்டும் என்று தமிழர் இருந்தார் இல்லை.
ஊரார் கண்டு மகிழ, தம்மையொத்தவர்
வியந்திட, வீர விளையாட்டுகளில் ஈடுபட்டு, வெற்றிபெற்று,
விருது பெற்றனர்; விழாக்களிலே இவை தனிச்சிறப்பான இடம்
பெற்றிருந்தன.
மல்லர்கள், தமது திறம்
காட்டினர்.
மாடு அடக்குதல், வீர விளையாட்டாகத்
திகழ்ந்தது.
கூடிப்பாடுதல், கைகோத்து
ஆடுதல் - இவை மகிழ்ச்சிப் பெருக்கைக் காட்டின.
விழாக்களில், ஈடுபடும்போது
புது எழிலைப் பெற்றனர் - அணிபணியாலும் ஆடை வகையாலும் ஆடவரம்
ஆரணங்குகளும்.
செல்வம் சீரளித்தது என்பதனை
எடுத்துக் காட்டுவனவாக, விழாக்கள் இருந்து வந்தன என்பது
மட்டுமல்ல, விழாக்கோலம், கலை அழகு வளர்ந்திட, வாய்ப்பு
அளித்தது என்பதும் தெரிகிறது; இலக்கியம் பயிலும்போது,
கசங்கிய கண்ணினராக, கூப்பிய
கரத்தினராக, வாழ்வைச் சுமையாகக் கருதிக் காதலை வெறுத்து
மாதரை மாயப்பிசாசு என்று இழித்துக்கூறி, தமிழர் வாழ்ந்தாரில்லை.
வாழ்க்கையும் ஒரு கலை என்று
அறிந்திருந்தனர்.
வாழ்க்கைக் கலையினை விளக்கத்
தனியாக நூலொன்று தந்தாரோவெனில், இல்லை. ஆனால், அறநெறி
உரைத்திடத் தமிழ்ப்புலவோர் ஆக்கி அளித்த காப்பியங்களிலேயே,
மக்கள் வாழ்ந்த வகையினை அழகுற எடுத்துக் கூறும்போது,
கலை அறிவுடன் அவர்தம் வாழ்க்கை அமைந்து இருந்ததை எடுத்துக்
காட்டினர்.
பூம்புகார், மதுரை மாநகர்
இரண்டிலேயும், மாந்தர் வாழ்க்கை, சிறப்பாக மகளிர் வாழ்க்கை
இருந்த விதத்தைப் படம் பிடித்துக் காட்டும் பான்மையிலே
தந்தவர் துறவி, இளங்கோ அடிகள். மலரணி கொண்டை மாதர்க்கு
அழகு!
இளங்கோ அடிகள், மதுரை
மகளிர், மலரணிந்து மகிழ்ந் திருந்தனர் என்று மட்டுமல்ல,
மலர்கள் பல வண்ணங்களாக உள்ளன அல்லவா? அவற்றினை ஒன்றாகத்
தொடுத்து, அணிந்தனர் என்பதையும் கூறுகிறார்.
மலர், மணம் தருகிறது! எனவே,
மாதர்தம் கூந்தலுக்குச் சேருகிறது.
ஆனால், இது, கலை அழகும்
பெறுகிறது, கலை அழகு உணர்வு மிகுந்தவர் மதுரை மகளிர் என்பதைக்
காட்டுகிறது. அவர்கள் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை,
செங்கழுநீர்ப்பூ முதலியவற்றினைத் தொடுத்து அணிந்துகொண்டனர்
என்று அடிகளார் கூறும்போது.
அந்த மலர்களையும், மதுரை
மகளிர், முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்திருந்தனராம்.
பாண்டிநாடு முத்துடைத்து அல்லவா!
செல்வம், சீர், கலை உணர்வு,
வாழ்க்கையை வெறுத்திடாத தன்மை, இவ்வளவும் விளங்கும் வகையில்,
மதுரை மகளிர் முல்லை, குவளை, நெய்தல், மல்லிகை, செங்கழுநீர்ப்பு
முதலிய வற்றை முத்தாரங்களுடன் தொடுத்து அணிந்தார்கள்
என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.
வாழ்க்கை இவ்விதம் இருத்தல்தான்
முறை; மதுரை மகளிர் இப்படி இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
இதனை, அடிகள், எப்போது காட்டுகிறார்? கண்ணகி, கணவன் அன்பைத்
திரும்பவும் பெற்றுப் புதுவாழ்வு தொடங்கப் பொருள் தேட
முயலும் நோக்குடன் கோவலனுடன் வருகிறபோது!
மதுரை மகளிர், முத்தாரமும்
மலரும் தொடுத்து அணிந்துள்ளனர்; வணிகக் கோமான் மகள்,
கண்ணகி இதனினும் மேலாக, அணிபணி பூண்டு வாழ்ந்திடலாம்.
ஆனால், காற்சிலம்பு விற்றால்தான்,
கைப்பொருள் கிடைக்கும் என்ற நிலை!
என்றாலும், மகிழ்ந்து இருக்கும்
மதுரைமகளிரைக் கண்ட போது, புதுவாழ்வு கிடைக்கும்; அப்போது,
இதுபோல. . .! என்ற எண்ணம் கண்ணகிக்கும் தோன்றியிருக்குமோ,
என்னவோ!
காலத்துக்கு ஏற்றபடி, தம்மை
அழகுபடுத்திக்கொள்வது, நுண்ணிய கலை உணர்வைக் காட்டுவதாகும்.
இப்போதும், ஜப்பான் நாட்டுப்
பெண்கள் தமது இல்லத்தையும், தம்மையும், வண்ணங்களின் வகை
அறிந்து அழகு படுத்தும் நுண்கலை மிகுதியாகப் பெற்றவர்கள்
என்று கண்டறிந்தோர் கூறுகின்றனர்.
காலத்துக்கு ஏற்ப, ஊர் கோலம்
கொள்கிறது - இயற்கை அப்படிக் கோலத்தை மாற்றிக் காட்டுகிறது.
அந்தக் கோலத்துக்கு ஒத்ததுபோல
ஆடை அணி புனைவது, கலை அழகினை நன்கு உணர்ந்தால் மட்டுமே
முடியும்.
அத்தகைய கலை உணர்வு மதுரை
மகளிருக்கு இருந் திருக்கிறது என்பது வாடைக்காலத்துக்கு
ஏற்ப அரத்தப் பூம்பட்டையை, மகளிர் அணிந்திருந்தனர் என்று
சிலப்பதிகாரம் கூறுவதிலிருந்து தெரிகிறது.
பூம்புகார் நகரத்துப் பெண்கள்
பகலில் பட்டு ஆடையும், இரவில் பருத்தி ஆடையும் உடுத்தினராம்.
ஆரணங்குகள் மட்டுமல்ல;
ஆடவரும், அணிபணி பூண்டு, தம்மை அழகுபடுத்திக்கொண்டனர்.
வெள்ளி நாரால் தொடுக்கப்பட்ட பொற்குவளை மலர்களை, ஆடிடும்
விறலியர் அணிவராம்.
வெள்ளியால், நார்! பொற்குவளை!
- வண்ணங்களை அடுக்கி அழகுபெறும் கலைத்திறனை, கலையால் கவர்ச்சி
யூட்டும் விறலியர் பெற்றிருப்பது மிகப்பொருத்தமல்லவா?
ஆடவரோ, கடகம் கழல் எனும்
அணிகள் பூண்டிருந்தனர்.
அவை, செல்வத்தைக் காட்டுவன
மட்டுமல்ல; வீர வெற்றிகள் பெற்றவர் என்பதையும் காட்டுவன.
கொள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே.
- புறநா: 11
எரியகைந் தன்ன வேடி தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூ-ன் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணிய
- பொருந: 159-62
(வேடி - சிவந்த (பொன்,
அழகிய); பித்தை - கூந்தல்; பாடினி - பாடுபவள்.)
அணிவன, சூடுவன என்பதில்
மட்டுமல்ல, பூசுவனவற்றிலே, பல பொருள், பல முறைகள் இருந்திருக்கின்றன.
மாதவி, தன் கூந்தலைப் பத்து
வகைப்பட்ட துவர், ஐந்து வகைப்பட்ட விரை, முப்பத்து இரண்டு
வகை ஓமாலிகைகள் முதலியன ஊறின நல்ல நீராலே கழுவி, வாசனைப்
புகையூட்டி கஸ்தூரி, சவ்வாது கலந்த தைலத்தைத் தடவி அழகுபடுத்திக்
கொண்டாள் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது.