★ சூழ்நிலைக் கைதி - முதலமைச்சர்!
★ இரண்டாண்டுகளாகக் "கிழமைக்
கடிதம்' இழந்து தவிக்கிறேன்!
★ நலந்தானா?
★ மனிதத் தன்மையை நம்புகிறேன்!
★ பொங்கல் திருநாளுக்கு
ஒப்பான விழா உலகமெங்கிலும் இல்லை!
★ "தமிழ் நாடு' பெயர் சட்டத்தில்
ஏறிவிட்டது!
★ மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள்
தேவை!
★ வெளிநாட்டுப் பல்கலைக்
கழகங்களில் தமிழ்த் துறைகள்!
★ மூன்று பல்கலைக் கழகங்களில்
திருக்குறள் ஆராய்ச்சிக்கு இடம்!
★ பொங்கல் திருநாள் இருக்கும்
இடத்திற்காக! மற்றவை போகும் இடத்திற்காக!
★ தமிழ்ப் பண்பாட்டினை எடுத்துக்
கூறுவது பிளவு மனப்பான்மையாம்!
★ வெள்ளம் அழித்திடும்!
வாய்க்கால் வளமூட்டும்!
★ உழைப்பே செல்வம்! உழைப்பே
உயர்வு!
★ காலத்தை வீணாக்காமல் சமூகத்
தொண்டாற்றுக!
தம்பி!
எந்தப் பணி எனக்கு இனிப்பும்
எழுச்சியும் தந்து வந்ததோ,
எந்தப் பணியிலே நான் ஆண்டு
பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்திருந்தேனோ,
எந்தப் பணி மூலம் என்னை
உன் அண்ணனாக நீ உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு, பெருமிதத்துடன்,
உலகுக்கு அறிவித்து வந்தனையோ,
எந்தப் பணி வாயிலாக என்
கருத்துக்களை உனக்கு அளித்து உன் ஒப்புதலைப் பெற்று அந்தக்
கருத்துக்களின் வெற்றிக்கான வழியினைக் காண முடிந்ததோ,
எந்தப் பணியின் மூலம் தமிழகத்தை
அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும் வழி
கிடைத்து வந்ததோ,
எந்தப் பணி மூலம், எப்போதும்
உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அது குறித்து
நான் அளவற்ற அகமகிழ்ச்சி பெற முடிந்ததோ,
அந்தப் பணியினை முன்புபோலச்
செய்ய முடியாத வனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால்
தாக்கப்பட்டு, சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன்
என்பதனை அறிவாய்.
"சூழ்நிலையின் கைதி' -
என்ற சொற்றொடருக்குத்தான், முதலமைச்சர் என்று முத்திரையிட்டிருக்கிறார்கள்.
தம்பி! தம்பி! தம்பி! -
என்று கிழமை தவறாமல், பலப் பல ஆண்டுகள் உன்னை அழைத்து
உரையாடி அளவளாவி வந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளாக அந்த
விருந்தினை இழந்து தவிக்கின்றேன்.
முதலமைச்சர் என்ற முறையில்
பல பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை அறிக்கைகள், சொற்பொழிவுகள்,
சட்டமன்ற உரைகள் மூலம் நாட்டுக்குத் தந்துவிட முடிகிறது
- தனிமையாக உன்னிடம் உரையாடி மகிழ்ந்திட என்று நான் வகுத்துக்கொண்ட
"கிழமைக் கடிதம்' எழுதிட இயலவில்லை.
பிரச்சினைகளை விளக்கிட,
ஐயப்பாடுகளைப் போக்கிட, அச்சம் துடைத்திட, மறுப்புக்கு
மறுப்புரைக்க, "வாழ்க வசவாளர்' என்று அவர்களையும் வாழ்த்திட,
"தம்பிக்குக் கடிதம்'' மிக நேர்த்தியான முறையில் பயன்பட்டு
வந்தது.
எனக்குத் தோன்றும் எண்ணங்களை
உன்னிடம் கூறிடுவதிலே, தனியானதோர் மகிழ்ச்சி.
எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியினை
உன்னோடு பங்கிட்டுக் கொள்வதிலே ஓர் இன்பம்.
கவலை குடையும்போது, மன உளைச்சல்
ஏற்படும்போது, உன்னோடு உரையாடி, தம்பி உடையான் படைக்கு
அஞ்சான் என்ற எழுச்சி பெற்று வந்தேன்.
இப்போது? அந்த இன்ப நாட்களை
எண்ணி எண்ணி ஏக்கம் கொள்கிறேன். சுமக்கும் பளுவினாலே கூனிக்
குறுகி வாடுகிறேன். எத்தனை எத்தனையோ பிரச்சினைகளைப் பற்றிய
கருத்துக்களைக் கூற நேரமோ வாய்ப்போ இன்றித் தவித்திடுகிறேன்.
ஆயினும், முன்பு செலவிட்டதைக்
காட்டிலும் அதிக நேரம், வேலைக்காக ஒதுக்குகிறேன். இலக்கியச்
சுவை நுகர்ந்திட நேரமில்லை. கலை அழகினை எண்ணிட நேரமில்லை.
வேலை! வேலை! வேலை! ஓயாத வேலை! உடலும் உள்ளமும் அலுத்துப்
போகும் அளவு. கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கவே காலம்
போதவில்லை - களிப்புப் பெற்றிட உன்னிடம் உரையாடிட நேரத்தைக்
கண்டறிவதே மிகச் சங்கடமாகிவிட்டது.
இந்தக் கிழமை எப்படியும்
தம்பிக்குக் கடிதம் எழுதிட வேண்டும் என்று தீர்மானித்து
எழுதத் தொடங்குவேன். தொலை பேசி மணி ஒலிக்கும். . .
சீப் பா. . .
ஆமாம், நான்தான். . .
எங்க ஊர் வாய்க்கால் விஷயமாக
மனு அனுப்பினது பற்றி. . .
பரிசீலனையில் இருக்கிறது.
அண்ணா! நீங்க பார்த்து முடிவு
செய்யவேண்டியது தானே, இதற்கு என்ன பரிசீலனை தேவை?
அப்படி அல்லவே. இலாக்கா
பரிசீலனை செய்தாக வேண்டுமே. . .
அதெல்லாம் எங்களுக்குத்
தெரியாது. . . . எப்படியும்
முடித்துக் கொடுத்தாக வேண்டும்.
சரி, சென்னைக்கு வரும்போது
விளக்கமாகக் கூறுகிறேன்.
உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்
அண்ணா!
ஆகட்டும். ஆகட்டும்!
வேலைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
இளைப்பும் களைப்பும் அதிகமாகத் தெரிந்தது போன மாதம் பார்த்தபோது.
தம்பி! என் மனத்துக்கு இனிமை
தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியவில்லையே
என்ற கவலை ஒரு புறம்; அத்துடன்
பின்னிப் பிணைந்துகொண்டு என் உடல் நிலையைப்பற்றிய கவலை
ஒரு புறம்.
என் பேரப் பெண், இளங்கோவனின்
மகள் கண்மணி தன் மழலை மொழியில் பாடுகிறாள்.
நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும்
நலந்தானா?
என்று. எனக்கென்னவோ அந்தப்
பாட்டைக் கேட்கும் போதெல்லாம், என் தம்பிகள் தங்கைகள்
நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை நலந்தானா? என்று கேட்பதுபோலவே
தோன்றுகிறது. கடந்த ஓராண்டாகவே, இந்தக் கேள்வி கிளம்பியபடி
இருந்தது. அமெரிக்கா சென்று அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளவேண்டிய
அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது. ஆனால், அதனால் ஏற்பட்ட
கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும் கனிவும் நாடு
முழுவதிலுமிருந்து கிடைத்தது. அரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே
பலரும் கனிவு காட்டிடக் கண்டேன் - மனிதத் தன்மை அடியோடு
மடிந்துவிட வில்லை என்பதனை உணர்ந்தேன்.
தம்பி! அந்த மனிதத் தன்மையிலேதான்
முழுக்க முழுக்க நம்பிக்கைக்கொண்டிருக்கிறேன். மனிதத்
தன்மை திகழ்ந்திடச் செய்வதைக் காட்டிலும் மகத்தான வேறோர்
வெற்றி இல்லை என்றே கருதுகிறேன். அரசுகள் அமைவதே, இந்த
மனிதத் தன்மையின் மேம்பாட்டினை வளர்த்திடத்தான் என்று
கருதுகிறேன். என்னால் எந்தப் பிரச்சினையையும் மனிதத் தன்மை
கலந்ததாக மட்டுமே கொள்ள முடிகிறது. அதனால் கொடுமை நேரிட்டுவிடும்போது
குமுறிப் போகிறேன். அக்ரமம்
நடைபெற்றிடும்போது நெஞ்சில் வேல் பாய்கிறது. இந்நிலை உடலைப்
பாதிக்கிறது; மருத்துவர்கள் பலர் என் உடல்நிலை தேறிடத்
துணை நிற்கின்றனர். ஆனால், உன் புன்னகை தவழும் முகத்தை
மனக் கண்ணால் காணும்போதுதான் உண்மையான "மாமருந்து' கிடைக்கிறது.
கிடைத்தற்கரிய அந்தச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சிப்
பெருக்கிலே திளைத்திருக்க எண்ணும் என்னை, தம்பி! நான்
மேற்கொண்டுவிட்ட "கடமை' வேலையைக் கவனி! வேலையைக் கவனி!
என்று முடுக்குகிறது.
இன்று எப்படியும் எழுதுவது
- ஆண்டுக்கோர் நாள் - அருமைமிகு திருநாள் - பொங்கற் புதுநாள்
- அதற்காக வெளிவரும் மலரில் எப்படியும் எழுத வேண்டும்
என்று எண்ணிக் கொண்டு ஏடெடுத்தேன் எழுத! எடுத்து?
நிதிக் குழுவினருடன் பேசவேண்டிய
பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களுடன் நிதித்துறைச் செயலாளர்,
அமைச்சர் மாதவனுடன் வந்தார்! ஒரு மணிக்குமேல் உருண்டோடிவிட்டது
- சிக்கலான பிரச்சினைகள் - பேசித் தீர்த்தாகவேண்டிய பிரச்சினைகள்
- நமது மாநிலத்து வருவாய்த் துறையை எந்தெந்த முறையிலே
செப்பனிட முடியும் என்பதுபற்றி ஆய்ந்தறிய வேண்டிய கட்டம்.
உன்னை மறந்தேன் என்ற பொருள் கொள்வாயோ! விவரமறிந்த தம்பியாயிற்றே!!
உனக்காகவும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிற வேலை என்பதனை
அறிவாயே. பிரச்சினைகளைப் பேசினோம். புள்ளி விவரங்களைச்
சரிபார்த்துக்கொண்டோம். தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய
முறைகளை வகுத்துக்கொண்டோம்.
அதற்குப் பிறகுதான் எழுத
ஆரம்பித்தாயா அண்ணா? என்றுதானே கேட்கிறாய்.
அதற்குப் பிறகு அல்ல, தம்பி!
அதைப்போல மூன்று நான்கு தவிர்க்க முடியாத வேலைகளைக் கவனித்தான
பிறகு, எழுத வேண்டும் என்ற முடிவு எடுத்ததற்கும் எழுதத்
தொடங்கியதற்கும் இடையில் ஆறு ஏழு மணி நேரம் சென்றுவிட்டது.
இந்நிலையில் நான் இருந்திடினும் பொங்கற் புதுநாள் வாழ்த்தினைத்
தெரிவித்துப் பெற்றிடும் மகிழ்ச்சியினை மட்டும் நான் இழந்து
விடமாட்டேன். நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா அல்லவா அது.
எத்தனையோ இன்னல்கள் தாக்கிடினும், அவைகளை மறந்து, ஒரு
நாள் மனைதொறும் மனைதொறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட என்று
அமைந்த நாளல்லவா பொங்கற் புதுநாள். பேச்சிலே ஓர் இசை கலந்திடும்
நாள் இத்திருநாள்! இந்நாளில், உனக்கு வாழ்த்துக் கூறுவதிலே
பெற்றிடும் இன்பம் ஈடற்றதல்லவா? எனவேதான், எப்படியும்
எழுதுவது என்று உட்கார்ந்தேன்.
உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை
ஒரு முறைக்கு மும்முறை கண்டு வந்தேன். அங்கு எங்கும் -
விழாக்கள் பலப் பல நடாத்தப்படினும் - தமிழகத்தின் பொங்கற்
புதுநாள் போன்றதோர் பொன்விழா இல்லை. நிச்சயமாக இல்லை.
கோலாகல விழாக்கள் உள்ளன; பரபரப்பூட்டும் விழாக்கள் நடத்தப்படுகின்றன;
கேளிக்கைகள், மதுபான விருந்துகள் மிகுதியாக; எனினும் ஆர்ப்பரிப்பின்றி
ஆனால் அக மகிழ்ச்சியுடன், போலிப் பூச்சுகளின்றி ஆனால்
புதியதோர் பொலிவுடன், வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி
மகிழ்ந்திருக்கும் நமது பொங்கற் புதுநாளுக்கு ஒப்பான விழா
அங்கு எங்கும் இல்லை. நாட்டியக் கூடங்களிலே அமளி! பாதைகளிலே
புதுவேகம், மோதல், உயிர்ச் சேதம்! அங்காடிகளிலே ஆரவாரம்!
இவைகள் ஏராளமான அளவு! ஆனால் இங்கு வீடுதோறும் எழுகிறதே!
முதியவரும் மூதாட்டியும் இளைஞரும் இளநங்கையும், சிறுமியரும்
கலந்து எழுப்பும் பொங்கலோ! பொங்கல்! என்ற இசை, அது அங்கு
எங்கும் இல்லை. இருந்திடத்தக்க விதமான சமூக அமைப்பே இல்லை.
தம்பி! வறுமை வாட்டுகிறது,
இல்லை என்று கூறவில்லை. எண்ணிடும் திட்டங்களை நிறைவேற்றிட
வசதிகள் கிட்டவில்லை. அதனை மறைத்துப் பயனில்லை. வளம் கொழித்திட
வழிதேடிய படிதான் இருந்து வருகிறோம். இன்னும் பொழுது புலரவில்லை.
இவ்வளவும் உண்மை. ஆனால் தமிழகத்தில் பன்னெடுங் காலத்துக்கு
முன்பிருந்து நாடு பல, தனது எல்லையை வகுத்துக் கொண்டு
அரசு அமைத்துக் கொண்டு நிலவத் தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு
முன்பே, நாம் பெற்றிருந்த கருத்துச் செல்வத்தை எண்ணிப்
பார்த்திடும் போது, நமக்கு இன்றுள்ள எல்லாத் துயரங்களையும்
ஒரு கணம் மறந்து, வேறு எவரும் பெற முடியாத ஓர் பெருமித
உணர்வினை நாம் பெற முடிகிறது.
அத்தகைய கருவூலத்தை நமக்குத்
தந்த தமிழ் நாட்டுக்கு, நாம் இதுநாள் வரையில் அரசியல்
சட்ட திட்டத்தில், தமிழ் நாடு என்ற பெயரைக்கூடப் புகுத்தத்
தவறினோமே, மறுத்து வந்தோமே, எதிர்த்து வந்தோமே என்று காங்கிரஸ்
கட்சியினர் எண்ணி வருத்தப்படுகிறார்களோ இல்லையோ, நானறியேன்
- நாம் - இவர்களால் என்ன ஆகும்? என்ற ஏளனக் கணைகளால் தாக்கப்பட்ட
நாம் - நாம் ஆட்சிப் பொறுப்பினை பெற்றதன் விளைவாக இந்தப்
பொங்கற் புதுநாளிலிருந்து, நாம் உலகுக்கு அறிவிக்க முடிகிறது,
இது தமிழ் நாடு என்பதாக. பெயரில் என்ன இருக்கிறது என்று
பேசிடும் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் - ஆனால்
பாடினாரே பாரதியார்,
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே!
என்று. அந்த "கவிதா வாக்கியம்'
பெரிய இடத்தில் அமர்ந்து கொண்டு "சின்னத்தனம்' பேசிடும்
பலருடைய ஏளனத்தைப் பொருட்படுத்த வேண்டாம். உயர்ந்த எண்ணம்
கொள்! என்றன்றோ கட்டளையிடுகிறது. "நாம்' தமிழ்நாடு என்ற
பெயர் பெற்றிடக் காரணமாக இருந்தோம் என்ற தித்திப்புக்
கலந்திடும் பொங்கற் புதுநாள், இந்த ஆண்டு.
போதும் என்று நான் கூறவில்லை.
அத்துணைப் பேதமை என்னைப் பிடித்தாட்டவில்லை.
தமிழகத்துக்கு வளமளிக்கவேண்டிய
பருவ மழை தவறி விட்டது. ஏரி குளம் குட்டைகள் வறண்டு கிடக்கின்றன.
வயல்கள் வெடித்துக்கிடக்கின்றன. பல மாவட்டங்களில் எண்ணிடும்
போதே கவலையும் கலக்கமும் மிகத்தான் செய்கிறது. எனினும்
இந்த நிலையை மனத்திலே எண்ணி, இதம்தரும் பல செயல்களை அந்த
இடங்களிலே மேற்கொள்ளும்படி திட்டமளிக்கப்பட்டிருக்கிறது.
"தமிழ் நாடு' - என்ற பெயர்
கிடைப்பதால் கிடைத்திடும் பெருமிதம் காலமெல்லாம் நிலைத்து
நிற்கும்; நமது வழிவழி வருவோருக்கெல்லாம் நம்மைப்பற்றி
அறிவிக்கும்; வரலாற்றில் இடம் பெறும்; பருவமழை தவறுவதும்
வறட்சி மிகுவதும் பஞ்ச நிலை தலை தூக்குவதும் என்றென்றும்
இருப்பதல்ல; திங்கள் சில.
எனவேதான், தம்பி! எப்போதுமே
எழுச்சியுடன் நடாத்திடும் பொங்கற் புதுநாளை இவ்வாண்டு
புதியதோர் எழுச்சியுடன் கொண்டாடிடக் காரணம் இருக்கிறது
என்பதனை நினைவு படுத்துகின்றேன்.
உடையார்க்கே, - விழாவெல்லாம்
ஏழையர்க்கு ஏது? என்ற கேள்வியிலே தொக்கியுள்ள நியாயத்தை
நான் மறுப்பவனல்ல. தமிழக முழுவதும் விழாக்கோலம் கொள்ளக்கூடிய
விதமான வளம் கொழித்திட வேண்டும் என்று விரும்புகிறேன்;
அதற்கான வழிகள் யாவை என்பதுபற்றி ஆய்வாளர்களிடம் அறிவுரை
கேட்டுப் பெறுகிறேன்; திட்டம் பல தீட்டப்படுகின்றன; ஆனால்,
அவைகளை நிறைவேற்றத் தேவைப்படும் பணம், இந்தியப் பேரரசிடமல்லவா
முறையிடவேண்டி இருக்கிறது. முறையிடு கிறேன் - கனிவும்
பணிவும் குறையாமல்; வம்வு வல்லடிப் போக்கு துளியுமின்றி
- ஆனால் கிடைக்கிறதா? நிரம்ப காரணங்கள்! நியாயங்கள்! வாதங்கள்!
எதற்கு?
இவ்வளவுக்கு மேல் பணம்
தருவதற்கு இல்லை என்பதற்கு! என் செய்வேன்? அண்ணன் ஏன்
எப்போதும் கவலைப்பட்டபடி இருக்கிறான் என்று சில தம்பிகள்
கேட்கவே செய்கிறார்கள். நான் கவலைப்படாமல் எப்படி இருக்க
முடியும்?
ஆகவேதான் மாநிலங்கள் அதிக
அளவில் அதிகாரங் களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல்
சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதுபற்றி வாய்ப்புக்
கிடைக்கும்போதெல்லாம் எடுத்துக் கூறி வருகின்றேன்.
இதற்கான நல்லாதரவு நாளுக்கு
நாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலே எனக்குத் தனியானதோர்
மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும்
இப்போது இதனை வலியுறுத்த முன்வந்துள்ளன. அரசியல் கட்சிகளைச்
சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர். "நாம்'
அரசு நடாத்தியதால் கிடைத்திருக்கின்ற நற்பலன்களிலே இதனை
ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.
தமிழகத்தின் தனித் தன்மைகள்,
சிறப்புகள் குறித்துப் பேசுவதனையே இந்திய ஒருமைப்பாட்டுக்குக்
கேடு பயப்பதாகும் என்று பேசுவார் உளர் இங்குகூட! அங்கு
உள்ளவர்கள் அக மகிழ்வார்கள் என்ற நினைப்பினர்!
தமிழகத்திற்கென்று இருக்கின்றனவே
தனிச் சிறப்புகள் - என் செய்வது? எப்படி மறப்பது? எப்படி
மறைப்பது?
யாதும் ஊரே; யாவரும் கேளிர்
பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்
மெய்ப் பொருள் காண்பது அறிவு
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு
இவைகளை எங்ஙனம் மறந்திட
இயலும்? வேறு எங்கும் இந்த எண்ணம் ஏற்படாத நாட்களில் இவை
தமிழகத்திலே மலர்ந்தன என்ற உண்மையை எப்படி மறைக்க முடியும்?
ஏன் மறைக்க வேண்டும்?
சிலர் எதிர்க் கூச்சலைக்
கிளப்பியபடி இருப்பினும், இன்றையத் தமிழர், தமிழகத்தின்
தனிச் சிறப்பினை பெருமளவிற்கு உணர்ந்து எழுச்சி பெற்று
வருகின்றனர். தமிழகத்து வரலாற்றுத் துறையிலும், இலக்கியத்
துறையிலும், பண்பாட்டுத் துறையிலும் மேலும் மேலும் ஆராய்ச்சிகள்
மேற்கொள்ளப்படின் தமிழரின் தனிச் சிறப்புகள் முழு அளவு
கிடைக்கப்பெறும் என்பது மட்டும், அதனைத் தரணி அறிந்து
போற்றிடத்தக்க வாய்ப்பும் மிகுந்திடும்.
இப்போதே, அமெரிக்க ஐரோப்பியப்
பல்கலைக் கழகங்கள் பல, தமிழ்த் துறைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு
வருகின்றன.
தமிழரின் தனிச் சிறப்புகளை
ஆய்ந்தறியும் ஏற்பாடு, இங்கு இன்னமும் போதுமான அளவுக்கு
மேற்கொள்ளப்படவில்லை. உலகமே ஏற்றுக்கொண்ட உயர் நூலாம்
திருக்குறளுக்கான ஆராய்ச்சியேகூட அல்லவா இங்கு மேற்கொள்ளப்படாமலிருந்து
வந்தது?
"இதுகள்' என்ற ஏளனத்தைச்
சுமந்துகொண்டிருக்கும் "நாம்' ஆட்சி நடத்தத் தொடங்கியதன்
தொடர்பாக நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டிலே திரட்டிய பணத்தில்
ஒன்பது இலட்சம் வெண் பொற் காசுகளைக் கொடுத்தல்லவா மூன்று
பல்கலைக் கழகங்களையும் திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபடும்படி
ஊக்குவித்திருக்கிறோம்.
வேறெல்லா விழாக்களும், "போகும்
இடத்திற்காக'' - பொங்கற் புதுநாள் இருக்கும் இடத்திற்காக
என்பதனைத் தம்பி! ஆண்டு பலவாக நீ எடுத்துக் கூறி வந்திருக்கின்றாய்.
துவக்கத்திலே இது கேட்டு
வெகுண்டெழுந்தோ ரெல்லாம் கூட, இப்போது உண்மைதானே! என்று
கூறிட முன்வந்துள்ளனர். பொங்கற் புதுநாளை ஒட்டி, தம்பி!
உன்னால் இயன்ற அளவுக்கு, தமிழரின் தனிச் சிறப்புகளைக்
குறித்து எடுத்துரைக்கும் பணியிலே ஈடுபடக் கேட்டுக்கொள்கிறேன்.
நீ முயன்றால் முடியாததும் இருக்கிறதா! என்னையே முதலமைச்சர்
ஆக்கிவிட முடிந்திருக் கிறதே உன்னால் - வேறு எதுதான் செய்திட
உன்னால் முடியாது? முயன்றிடு! முனைந்திடு!
போலிப் பெருமைத் தேடிக்கொள்ளவோ,
நாட்டின் பிற பகுதிகளைத் தரக்குறைவாகக் கருதுவதற்காகவோ
அல்ல தம்பி! தமிழகத்தின் தனிச் சிறப்புகள் பற்றி நாம்
அறிந்திட வேண்டும், அக மகிழ்ந்திட வேண்டும், எழுச்சி பெற்றிட
வேண்டும் என்று நான் கூறுவது, பிற பகுதிகளும், உலகின்
பல்வேறு நாடுகளும் கேட்டு இன்புறத்தக்க, அறிந்து மேற்கொள்ளத்தக்க
பண்பாடு நம்முடையது, அத்தகைய கருவூலத்தை இழந்துவிடுவது
நமக்கும் நாட்டுக்கும் மட்டுமல்ல உலகுக்கே நட்டம் என்பதாலேயே,
தமிழகத்துத் தனிச் சிறப்பு இயல்புகளை நாம் நன்கு அறிந்திட
வேண்டும் என்று கூறி வருகிறேன். குறுகிய மனப்பான்மை என்கின்றனர்
இதனை. அவர்கள் குறைமதியாளர் என்று கூறிடத் தோன்றுகிறது.
பண்பாடு அந்த உணர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. பிளவு
மனப்பான்மை என்றும்கூடக் கூறுவார் உளர்! எதனை என்று பார்த்திடும்போது
சிரிப்பே வருகிறது.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
என்ற பண்பாட்டினை எடுத்துக்
கூறுவது, பிளவு மனப்பான்மை யாமே! யாழ், காது குடைச்சலை
உண்டாக்குகிறது; தேன் குமட்டலைத் தருகிறது, தென்றல் வெப்பத்தை
மூட்டுகிறது என்று கூறுவதுபோல அல்லவா இருக்கிறது, தமிழ்ப்
பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையை
மூட்டிவிடும் என்று கூறுவது? கூறுகின்றனர், உரத்த குரலிலேகூட!
உயர்ந்த இடத்திலே இடம் பெற்று விட்டவர்களும்! ஆயின் என்ன?
மிகப் பெரிய இடத்திலே உள்ளவர்கள் கூறுகின்றனரே, அவர்தம்
கருத்துக்கு மாறாக நாம் நடந்துகொள்ளப்போமா என்ற எண்ணம்
எழும்போது தம்பி!
நெற்றிக் கண்ணைக்
காட்டிடினும்
குற்றம் குற்றமே!
என்பது செவியினில் வீழ்கிறது.
உண்மையை உரைத்தாக வேண்டும் என்ற உறுதி பிறக்கிறது.
வான்கோழி கண்டால் வருத்தப்படுமே
என்று எண்ணித் தோகையை கீழே உதறிப் போட்டுவிடுமா கலாப மயில்?
காக்கைக்கு வருத்தமாக இருக்குமே என்பதற்காகப் பச்சைக்
கிளி கருப்புப் பூச்சைத் தேடிக்கொண்டிருக்குமா? பிற நாடுகளும்,
நமது நாட்டின் பிற பகுதிகளும் பெற்றிராத கருத்துக் கருவூலத்தைத்
தமிழகம் பெற்றிருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுவது
எந்த வகையிலும் தவறு அல்ல. எத்தகைய தீமையும் தந்திடாது
எவருக்கும்.
தமிழரின் தனிச்சிறப்பினை
அறிந்திடப் பயன்படும் நமது இலக்கியச் செல்வத்தை நினைவிற்கொள்ளவும்,
மற்றையோர்க்கு எடுத்துக் கூறவும் பொங்கற் புதுநாள் ஏற்றது
என்பதாலேயே பெரியோர்கள் இதனைத் தமிழர் திருநாள் என்றழைக்கின்றனர்.