அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - (7)
சதிக்குள் சதி-1

பண்பு நிறைந்த காதலர்கள்
சாகசக்காரி சாலி வாட்சன்
சாலி தலை குனிந்தாள்!
அருங்குணக் குன்று டில்மன்

தம்பி,

அமெரிக்கக் குடியரசுத் தலைவரிடம் "கலந்து பேசவும்', "உடன்பாடு காணவும்' "உதவி பெற்றிடவும்' உலகில் பல்வேறு நாட்டின் தலைவர்கள் வருகை தருவர். அப்போது அளிக்கப்படும் விருந்துகளில், உபசரிக்க - அளவளாவ - குடியரசுத் தலைவரின் துணைவியார் உரிமை பெறுகிறார். குடியரசுத் தலைவரின் துணைவியார், நாட்டின் முதல் ஆரணங்கு எனும் அரியநிலை பெறுகிறார். டக்ளஸ் டில்மன் தாரமிழந்தவர்; எனவே துணைவி யாருக்குப் பதிலாக, பண்புள்ள ஒரு மாது இந்தப் பக்குவமான காரியத்தைக் கவனித்துக்கொள்ளத் தேவை. இதனை அறிந்தே, வாட்சன் எனும் செனட்டரின் மகள் சாலி வாட்சன், அந்தப் பதவியைக் கேட்டுப் பெற்றாள்.

குடியரசு தலைவர் நடத்திடும் விருந்துகளுக்கு, "தக்காருக்கு' அழைப்பு அனுப்புவது, விருந்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்வது, விருந்தில் கலந்து கொள்ள வருபவர்களிடம் உரையாடி மகிழ்விப்பது என்பவைகள் சாலி வாட்சன் மேற்கொண்ட அலுவல்கள்.

தனக்குத் துணைவியில்லாததால். இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டது என்பதனால் மட்டுமல்ல, இது பொருத்த மானது என்பதாலும் டில்மன் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும். வெள்ளை மாளிகையில் எல்லாமே "கருப்பு மயம்' ஆகிவிட வில்லை; குடியரசுத் தலைவர் மட்டுமே "கருப்பு'. ஆனால், விருந்தினை நடத்திவைக்க, உரையாட, உபசரிக்க அமர்த்தப் பட்டிருப்பவரும் கருப்பு அல்ல; வெள்ளை இனமாது!! - என்பதிலே வெள்ளை இனத்தவர் மிகுந்த மகிழ்ச்சி
கொள்வரல்லவா!

துணைவியார் இறந்தபிறகு டில்மன் தனியாக இருந்து வந்தார்; ஆனால் அவருடைய உள்ளம் மெள்ள மெள்ள வேறோர் மாதிடம் ஈர்க்கப்பட்டு வந்தது. அறிவும் அடக்க உணர்வும், பண்பும் நிறைந்த ஒரு மாதினை அவர் உளமார நேசித்தார். திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு அவர் வருகிற சமயத்திலேதான், குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டார்!

அந்தப் பெரிய பதவியில் இருந்துகொண்டு திருமணத்தை நடத்திக்கொண்டால், மிகச் சிறப்பாக அல்லவா இருக்கும்; நாடே விழாக்கோலம் கொள்ளுமே; உலகின் பல நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக் கூறிட வருவார்களே, எத்தனை கோலாகலமாக நடத்திக் கொள்ளலாம்! ஏன் டில்மன் தாம் விரும்பிய மாதைத் திருமணம் செய்து கொண்டு வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்ல வில்லை? சென்றிருந்தால் சாலி வாட்சன் தேவைப்பட்டிருக்க மாட்டாரே. நாடகம் நடந்திடவே இடம் கிடைத்திருக்காதே என்றுதான் எண்ணிடத் தோன்றும் - எவருக்கும்! ஆனால் டில்மன் மனதில் வேறுவிதமான கருத்து!

ஒரு நீக்ரோ, குடியரசுத் தலைவரானது மட்டுமல்லாமல், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, திருமணமும் செய்துகொண்டு விழா நடத்திக் கொள்கிறான், எத்தனை வீண் பெருமை! என்று வெள்ளையரில் வெறியர் கேலி பேசுவர். வெள்ளை மாளிகையில் தலைவர் மட்டுமல்ல, அவருடைய துணைவியாரும் கருநிற இனம், எப்படித் தாங்கிக் கொள்வது சகித்துக் கொள்வது என்று வெறுப்புடன் பேசுவர். எதற்காக வீண் வம்பைத் தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று டில்மன் எண்ணியிருந்திருக்க வேண்டும். அதனால்தான், அவர், தாம் மிகவும் விரும்பிய வாண்டா கிப்சன் எனும் மாதைத் திருமணம் செய்துகொள்வது தமது நிலைமைக்கு முறையாக இருக்காது என்று கருதிக் கொண்டார்.

தமக்குக் கிடைத்த பதவியைத் தமது பெருமைக் காகவும் சுவைக்காகவும் துளியும் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதிலே அவ்வளவு அக்கறை காட்டினார்.

வாண்டா கிப்சன், கருநிறம்கூட அல்ல; கவர்ச்சிமிக்க மாந்தளிர் மேனி! நீக்ரோ இனம் என்றுகூடக் கூறிவிடுவதற்கில்லை. நீக்ரோ- வெள்ளையர் கலப்பிலே பிறந்து, ஒரு தலைமுறை கடந்த இனம்! முலாட்டோ என்பது அவர்கட்கு இடப்பட்டிருந்த பெயர். டில்மன்போலவே, கிப்சன் பெருந்தன்மை கொண்டவராக இருந்திருக்க வேண்டும் எனத்தெரிகிறது. நூற்றிலே தொண்ணூறு பெண்கள், தன்னை விரும்புவர், தகுதிமிக்க இடம் பெற்றிடும் போது, திருமணம் செய்துகொள்ளும்படி அல்லவா வற்புறுத்துவார்கள்! கண்ணைக் கசக்கிடுவர்! அன்றோர் நாள் சொன்னதனை அடியோடு மறந்தீரோ என்று கேட்பர்; உயர்ந்த விட்டீர், உள்ளத்திலிருந்து என்னைத் தூக்கி எறிந்து விட்டீர் என்று கோபத்துடன் பேசுவர், பார்க்கிறோம்; கதைகளிலே மிகச்சுவையான கட்டங்களாக இவை அமைந்திருப்பதை. வாண்டா கிப்சன், தன் காதலனுக்குத் துளியும் சங்கடம் ஏற்படத் தக்கவிதமான எந்த நிலைமையும் எழக்கூடாது என்ற பெருங்குணம் கொண்டவராக இருந்திருக்கிறார்.

ஆகவே டில்மன் திருமணம் செய்துகொள்ளவில்லை; சாலி வாட்சன் வெள்ளை மாளிகையில் சீமாட்டி வேலை பார்த்து வந்தாள்.

குடியரசுத் தலைவருடன் நெருங்கிப் பழகும் நிலை.

விருந்து, வைபவம் ஆகியவற்றினை ஏற்பாடு செய்திடும் அலுவல்; ஆகவே எப்போதும் அணிபணிபூண்டு, நகைமுகம் காட்டி இருந்திடும் நிலைமை.

மனதைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் திறனற்றவர்களின் மனம் நெகிழ்ந்து போவதும், தவறுகள் நேரிட்டு விடுவதும், நெருக்கடிகள் விளைவதும், இத்தகைய சூழ்நிலையில்தானே!!

ஆளப்பிறந்தவர்கள் என்ற அகம்பாவத்துடன் நடந்து கொள்ளும் வெள்ளையர்மீதே ஆட்சி நடத்தும் வாய்ப்புக் கிடைத்தாலே போதும், தலை சுற்றும்; கால் பூமியில் அழுத்தமாக அமைந்திடாது, கொடுமை செய்திடத் தோன்றும்; கோலாகலமாக நடந்திடத் தோன்றும்; எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிடத் தோன்றும்! அதுமட்டும் போதாமல், அழகிய இளமை மெருகு குலையாத, ஆடிப்பாடி மகிழ்விக்க வல்ல ஒரு வெள்ளைச் சீமாட்டியும், தன் பக்கம் நின்று, பாசம் நிறைந்த பார்வையை வீசியும், பாகு நிறைந்த சொல்லினைத் தந்தும் வந்திடின், கிடைத்தது இன்ப வாழ்வு! என்று கருதி, களியாட்டத்தில் அல்லவா மூழ்கிடத் துடிப்பர், நூற்றுக்கு அறுபதுபேராகிலும். டில்மன் மனதிலே இறுமாப்போ, மயக்கமோ, தூய்மையற்ற எண்ணமோ, துளியும் இடம் பெறவில்லை. இருந்தும், அவர்மீது சாலி வாட்சன் என்ற வெள்ளை மாதினைக் கற்பழிக்க முயன்றதாகக் குற்றச்சாட்டு; சாலியே தொடுக்கிறாள் அந்தக் குற்றச் சாட்டை!

வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு விருந்து நடை பெறுகிறது. சுவைமிகுபானம்! சொக்க வைக்கும் பேச்சுக்கள்! ஒளிவிடு பார்வை! ஒய்யார நடை! போதைமிகுந்திடும் நிலை! டில்மன் இந்த மயக்கம் எதிலும் சிக்கவில்லை. விருந்தளிப்பது, தனது கடமையின் ஒரு பகுதி என்று மட்டுமே கருதி அதிலே கலந்துகொண்டார்.

சாலி? உல்லாசியாகக் காட்சி தந்தாள்! அளவுக்கு அதிகமாகவே உட்கொண்டாள்; ஆனால் உட்கொண்ட போதைப் பொருளைவிடக் கொடிய சதி எண்ணம் அவள் மனதிலே நிரம்பிக் கிடந்தது. எப்படியும் அன்றிரவு டில்மனுடைய இரகசியக் குறிப்புகளைக் கண்டறிந்து, அவற்றினை ராஜாங்க மந்திரியும் தன் காதலனும் - எதிர்காலக் கணவனுமான - ஈட்டனிடம் தந்துவிடுவது என்று துணிந்து விட்டாள்.

விருந்து மண்டபம் விட்டு டில்மனும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த விருந்தினர்களும் வேறோர் கூடம் சென்று ஏதோ ஓர் படக்காட்சி காண ஏற்பாடாகி இருந்தது. தனக்குத் தலைவலியாக இருப்பதாகவும், வீடுசெல்வதாகவும் கூறிவிட்டு, விடைபெற்றுக் கொள்கிறார் சாலி வாட்சன்.

வீட்டுக்கு அல்ல, டில்மனுடைய படுக்கை அறைக்குச் செல்கிறாள்! - அவருடைய குறிப்பு ஏடுகளைக் கண்டெடுக்க! கிடைத்துவிடுகின்றன. அவைகளைத் தனியே தனித் தாட்களில் குறித்துக்கொள்கிறாள் விரைவாக. திடீரென யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது. ஒரு கணம் மிரட்சி! மறுகணம் சதி தயாராகி விடுகிறது; விளக்கை அணைத்து விடுகிறாள். மயங்கி விழுந்தவள் போல, கட்டலிலே சாய்ந்து கொள்கிறாள்.

உள்ளே வெண்ணிற நாகம் இருப்பது அறியாமல் நுழைந்த டில்மன், படுக்கை அறைக் கதவினைத் தாழிட்டு விட்டு விளக்கைப் பொருத்துகிறார்; காட்சி அவரைத் திணறச் செய்கிறது.

நள்ளிரவு நேரத்தில், சாலி வாட்சன், தன் கட்டிலின் மீது! அலங்காரப் பதுமை! ஒய்யார உருவம்! வெள்ளை மாது! சிங்காரவல்லி! அவள் படுத்துக்கிடக்கிறாள், ஆடை நெகிழ்ந்த நிலையில். அறையையோ தானே தாளிட்டிருக்கிறார்.!

வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பர், குடியரசுத் தலைவர்! அவர் படுக்கை அறையில் ஒரு வெள்ளை மாது! நள்ளிரவில்! கட்டிலின்மீது! என்ன கருதுவர் வெள்ளை மாளிகை அலுவலர்கள் இது கண்டிடின்! அமெரிக்காவே அதிர்ச்சி அடையுமே இது பற்றிக் கேள்விப்பட்டால்! வெள்ளையர் மனம் எரிமலையென வெடிக்குமே. அவர் மனத்திலே, அந்தச் சமயம் என்னென்ன அதிர்ச்சி தரத்தக்க எண்ணங்கள் கிளம்பித் தாக்கினவோ, எவ்விதமான திகைப்பும், திகிலும் கொண்டாரோ, யாரறிவார்? எப்படி இருந்திருக்கும் அவர் நிலை என்பதை எண்ணும்போதே நடுக்கம் பிறந்திடும் பலருக்கு.

அருகே செல்கிறார், உற்றுப் பார்க்கிறார், மிகுந்த வேதனையை அடக்கிக்கொண்டு, அவள் மயங்கிச் சாய்ந்திருப்பது போலத் தெரிகிறது, தோற்றம்; அவள் நடிப்பு அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது.

குடிமயக்கத்தில் இடம் புரியாமல் வந்து படுத்துக் கொண்டாள் என்று எண்ணிக்கொண்ட டில்மன், சாலியை எழுப்பினார்.

தொட்டு எழுப்பும் வரையில் எழுந்திருப்பாளா - தூங்காமல் தூங்கும் சாலி! எங்கோ கனவு உலகிலிருந்து திரும்புவது போல ஒரு பாவனை காட்டினாள். கண்களைத் திறந்தாள், மீண்டும் மூடிக்கொண்டாள், மறுபடி திறந்தாள் ஒரு மிரட்சிப் பார்வை !

யார்.... இங்கே எப்படி நீங்கள்.. ஏன் வந்தீர்கள்...? அய்யோ! .... நான் எங்கு இருக்கிறேன்....!

தம்பி! வழக்கமான திகைப்பு, வியப்பு, அதிர்ச்சி! நாடகத் திலே நாம் பார்க்கிறோமல்லவா, சாகசக்காரிகள் தம்மிடம் சிக்கிக்கொள்ளும் ஆடவரைச் சாய்த்திடும் காட்சியினை.

"என் படுக்கை அறையில் வந்து படுத்துக்கொண்டாய் சாலி! யார் கண்களிலாவது பட்டிருந்தால் என் கதி!'

உங்கள் படுக்கை அறையா....? அய்யோ...! ஆமாம்.... தலைவருடைய தனி அறைதான்.... இங்கு எப்படி நான் வந்தேன்....? ஏன் என் தலையிலே இவ்வளவு குடைச்சல்...?

"விருந்திலே சற்று அதிகமாக உட்கொண்டு விட்டேன், மயக்கமாக இருக்கிறது, வீடு செல்கிறேன்; தலைவலி' என்று சொல்லி புறப்பட்டாயே சாலி!

ஆமாம்.... இப்போதுதான் நினைவிற்கு வருகிறது... மயக்கம்.... தடுமாற்றம்... எங்காவது சென்று படுத்துத் தூங்கியாகவேண்டும் என்ற நினைப்பு.... இது வேறு ஏதோ ஒரு அறை என்று எண்ணி..... மன்னிக்கவேண்டும்....

பரவாயில்லை.... இப்படியெல்லாம் சில வேளைகளில் நடந்துவிடுவதுண்டு... பரவாயில்லை.. எழுந்திருந்து ஆடையைச் சரிப்படுத்திக்கொள் சாலி! மோட்டார் வரவழைக்கிறேன்.... வீட்டுக்குப் போ!

அய்யோ! ஆடைகள் இப்படியா அலங்கோலமாகவா படுத்துக் கிடந்தேன்..... என்ன தவறு செய்துவிட்டேன்.... பெருந்தவறு....

நான் அந்தப் பக்கமாகச் சென்றுவிடுகிறேன், சாலி! நீ எழுந்திருந்து ஆடையைச் சரிப்படுத்திக் கொள்.

சாலி திடுக்கிட்டுவிட்டதுபோலப் பாவனை காட்டி எழுந்திருக்கிறாள்; படுக்கைமீது இருந்த அவளுடைய "கைப்பை' கரம்பட்டுக் கீழே விழுகிறது; விழும்போது அதற்குள்ளே இருந்த பொருள்கள்-குறிப்பு அட்டைகள் - கீழே சிதறி விழுகின்றன. டில்மன் அவைகளை எடுக்கிறார்.

அவள் அலறுகிறாள்! வேண்டாம்! வேண்டாம்! நான் எடுத்துக்கொள்கிறேன்! ஒன்றுமில்லை.... சாதாரண குறிப்பு அட்டைகள்.... நானே எடுத்துக் கொள்கிறேன்....

டில்மன், குறிப்பு அட்டைகளைப் பார்த்துவிடுகிறார்; எல்லாம் விளங்கி விடுகிறது. ஆத்திரம் அல்ல, அளவற்ற வருத்தம் பிறக்கிறது அவருக்கு.

நிறவெறி காரணமாக எவ்வளவு கீழ்த்தரமான செயலுக்கும், இழித்தன்மைக்கும் சென்றுவிடத் தோன்றுகிறதே என்பதுபற்றி எண்ணி வருத்தப்பட்டார்.

ஒன்றும் இல்லை; தவறாக எண்ணிக் கொள்ளாதீர்கள்.... குறிப்புகள் எடுத்தேன்.... உங்கள் வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் எழுதப் போகிறேன்... ஒரு நாள்... அதிலே சேர்ப்பதற்காக இந்தக் குறிப்புகள்....

புரிகிறது சாலி, புரிகிறது! இதற்காகத்தானா இங்கு வந்தாய்! ஈட்டனுக்கு வேலை செய்ய, என்னிடம் வேலைக்கு அமர்ந்தாய்.... தெரியும்.... போ! இந்த இடத்தை விட்டு.... உன் குறிப்பு ஏடுகளைக் கொடு ஈட்டனிடம்.... வேலையை முடித்துவிட்டேன் என்று கூறிவிடு....போ! சாலி! இனி இங்கு வரவும் வேண்டாம்....

"ஈட்டனைப் பற்றி எனக்கென்ன கவலை? அவனுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவன் மணமானவன்.... மனைவி இருக்கிறாள்... நான் அவனுக்காக எதையும் செய்யவில்லை... எங்களுக்குள் என்ன தொடர்பு? எங்கள் இருவரையும் இணைத்துப் பேசாதீர்....

நாடே பேசுகிறது! நானும் அறிவேன்.... ஈட்டன் குடியரசுத் தலைவர் வேலை பார்க்க விரும்புகிறான்.. அவனுக்காக இங்கு வேலை பார்க்கிறாய்... புரிகிறது....

உண்மையைச் சொல்லி விடுகிறேன்.... கூச்சத்தை விட்டு... ஈட்டனுக்காக நான் எதுவும் செய்யவில்லை.... குறிப்பு எடுத்தது புத்தகம் எழுதத்தான்.... இங்கு வந்தது குறிப்பு எடுக்க அல்ல... தனியாகச் சந்திக்க... பழகி... பாசமாக இருந்திட .... விரும்புவதால்... அன்பினால்....

சீமாட்டி சாகசம் நடத்திட முனைந்தால் எப்படி இருக்கும் என்பதுபற்றி அதிகமான விவரமா தர வேண்டும்?

வெள்ளை மாளிகையில், அந்த நள்ளிரவில், கட்டிலறையில், கருப்பு இன டில்மன் கரங்களைப் பற்றிக் கொண்டு, வெள்ளை இன சாகசக்காரி காமப் படுகுழிக்கு அழைப்பு விடுகிறாள்; தழுவிக் கொள்ளத் துடிக்கிறாள்.

தனியாகத் தவிக்கிறீர்கள், பாவம்.... என் மனம் பாகாய் உருகிவிட்டது.... என் நேசம் வேண்டாமா... நானே உம்மிடம் நேசமாக இருந்திடத் துடிக்கிறேன்.. அதனால்தான் இங்கு வந்தேன்; உங்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன்.... அதுவரையில் பொழுதை ஓட்டவேண்டுமே... அதனால் உம்முடைய குறிப்பு ஏடுகளைப் புரட்டினேன்.... சிலவற்றைக் குறித்துக்கொண்டேன், புத்தகம் எழுதப் பயன்படும் என்பதற்காக.

கைப் பையில், குறிப்புத் தாட்களைத் திணித்து அவளிடம் கொடுத்தான் டில்மன்; வெறுப்பும் கண்டிப்பும் கலந்த குரலில் கூறினான் போ! உடனே! வெளியே!- என்று.

சாலி கடைசிக் கணையையும் ஏவிட முனைந்தாள்....

பயமா... நான் வெள்ளை மாது என்பதால் பயமா? வெளியே தெரிந்தால் பகை கிளம்புமே என்ற பயமா! எனக்குக் கருப்பு இனத்தின் மீது வெறுப்புக் கிடையாது. நிறபேதம் கிடையாது.... சொல்லப்போனால் கருப்பு இனத்தின்மீது எனக்கு விருப்பம்கூட.... ஆமாம் பலருடன் பழகி இருக்கிறேன் கருப்பு இனத்தவரிடம் ..... எனக்கு மிகவும் விருப்பம்.... பயம் வேண்டாம், துளியும். நான் என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன், ஏற்றுக் கொண்டிடுங்கள்...

இணங்க மறுத்தான் டில்மன். அடிபட்ட புலியானாள் சாலி!

மாதின் மனதை அறிந்து கொள்ள முடியாத மதியிலி! சுவை உணர முடியாத மிருகம்!

ஒரு பெண்ணின் உள்ளத்தை மகிழ்விக்கத் தெரியாத உலுத்தன்!!

சுடுசொற்கள் மளமளவெனக் கிளம்பின. அந்தத் தூற்றலுக்கு இடையிலே அவள் டில்மனுக்கு எதிராக உருவாகிக்கொண்டு வரும் சதி பற்றியும் கோடிட்டுக் காட்டினாள்.

இரு கால் மிருகமே! இன்னும் எத்தனை நாளைக்கு உனக்கு இந்த வெள்ளை மாளிகை வாசம். உன் காலம் முடிகிறது, வெகுவிரைவில். வெள்ளை மாளிகையில் இன்னும் எத்தனை நாளைக்குக் காட்டுமிராண்டி கொலு இருந்திட முடியும்? இந்த இடத்திற்கு ஏற்ற பெரிய மனிதர் வருகிறார், புறப்பட, வெளியேறத் தயாராகிவிடு!

ஏற்கனவே ஈட்டன் என்ற வெள்ளைப் பேரதிகாரியும் நிறவெறி கொண்ட இதழாசிரியர்களும், டில்மனை விரட்டிவிடத் துடிதுடித்தபடி இருந்தனர்.

எதிர்த்துப் பேசுவதோ, இறுமாந்து கிடப்பதோ தனது முறையாக்கிக் கொண்டிருந்தால், டில்மனை ஒழித்துக் கட்டும் வேலையை அவர்கள் எளிதானதாக்கிக் கொண்டிருந்திருப்பார்கள்.

துளியும் தன்னலம் காட்டாமல், தலைக்கனம் கொள்ளாமல், பதவியைத் தன் உயர்வுக்காகவோ, தனக்கு வேண்டியவர்களின் உயர்வுக்காகவோ பயன்படுத்தாமல், நேர்மையாக, நாணயமாக நடந்துகொள்கிறார். ஆனால், அதே நேரத்தில் எவருடைய மிரட்டலுக்கும் வளைய மறுக்கிறார். குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு அளித்திடும் செய்தி என்ற பெயரில் உரை நிகழ்த்துவதும், அந்த உரையைப் பெரிய அதிகாரிகள் தயாரித்துக் கொடுப்பதும், தயாரித்துத் தரப்பட்ட உரையையே தம்முடைய பேருரை என்று படித்து முடிப்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த ஒரு பழக்கம்; முறை. அதன்படி டில்மனுக்கு வெள்ளைப் பேரதிகாரிகள் உரை தயாரித்து அனுப்புகிறார்கள். அதிலே இன்ன குறை இருக்கிறது, இப்படி மாற்றவேண்டும், இன்ன கருத்தைச் சேர்க்கவேண்டும் என்றுகூடக் கூறவில்லை, கலந்து பேசவில்லை, வாதாடவில்லை; அதற்கு மாறாக, எனக்காக உரை தயாரித்துக் கொடுத்ததற்கு எனது நன்றி. ஆனால் நானே பேருரை தயாரித்துக் கொண்டுவிட்டதால், தாங்கள் அனுப்பிய உரையைத் திருப்பி அனுப்பி இருக்கிறேன். பெற்றுக் கொள்ளவும். எனக்காகத் தாங்கள் எடுத்துக்கொண்ட கஷ்டத்திற்கு என் நன்றி - இவ்விதமாக அல்லவா கடிதம் அனுப்புகிறார்!

குடியரசுத் தலைவராக்கப்பட்ட கருப்பனாக நடந்து கொள்ள மறுக்கிறார்; குடியரசுத் தலைவராகவே நடந்து கொள்ள விரும்புகிறார்; இது தாங்கிக் கொள்ள முடியாத தொல்லை; அனுமதிக்கப்பட முடியாத ஆபத்து என்று வெள்ளைப் பேரதிகாரிகள் முடிவு செய்தனர். அவர்களுக்குத் தலைமை வகித்திருந்தான், ராஜாங்க மந்திரி வேலை பார்த்து வந்த ஈட்டன். அவன் எதிரில் போய் நின்றாள் சாலி வாட்சன், ஆடை கிழிக்கப்பட்டு, அலங்கோல நிலையுடன்! உடலிலே கூடச் சில கீறல்கள்!

என்ன அலங்கோலம்? என்ன நேரிட்டது....

கருப்பு வெறியன் என்னைக் கற்பழிக்க...

அவ்வளவு அக்கிரமம் செய்யத் துணிந்தானா அற்பன்? முயன்றான்.... பெரும் போராட்டம்.... தப்பித்துக் கொண்டேன்-அந்தப் பயங்கரமான முரட்டுப் பிடியிலிருந்து.... இதோ கீறல்கள்....

ஆமாம்! இரத்தகாயம்! கருநிற மிருகம் இனியும் உலவக் கூடாது...

கட்டிப் போட்டாக வேண்டும்.....

விரட்டவேண்டும் வெள்ளை மாளிகையிலிருந்து.

ஏற்கனவே குவிந்துள்ள குற்றச் சாட்டுகளுடன்

இதோ புதிய, பயங்கரமான, நாட்டு மக்கள் காதில் விழுந்ததும் கொதிப்பினை மூட்டத் தக்க குற்றம்... கற்பழித்தல்..

கற்பழிக்க முயற்சித்தல்...

வெள்ளை மாதை.... சீமாட்டியை.... செனட்டர் வாட்சன் திருக் குமாரியை.

டில்மன் மீது இத்தகைய முறையில் கண்டனக் கணைகள் தொடுத்ததும், அவனைப் பதவியிலிருந்து விரட்டிவிடத் தீர்ப்பாகிவிடும்.

அந்தத் தீர்ப்பு கிடைத்ததும் அன்பே! குடியரசுத் தலைவர் ஆகவேண்டியது... யார்.....?

நான்தான்..... ராஜாங்க மந்திரி ஈட்டன்தான் அடுத்த குடியரசுத் தலைவர்! முறை அதுதான்....

ராஜாங்க அமைச்சர் ஈட்டனா! என் காதலர் ஈட்டன்! என் கணவர் ஈட்டன்!...

ஆமாம், ஆரூயிரே! உன்னை மறந்தா.... பதவி எவ்வளவு உயரினும், உன்னிடம் நான் கொண்டுள்ள அன்பு குறையுமா....

எப்போது, உமது மனைவி என்று கூறிக் கொள்பவ ளிடமிருந்து விடுபடப் போகிறீர்? எப்போது விவாக விடுதலை? எப்போது சாலி வாட்சன், சாலி ஈட்டன் ஆகிவிடுவது?

சதி, தம்பி, ஒரே ஒரு வட்டம் அல்ல; வட்டத்திற்குள் வட்டம்; வட்டங்கள் என்ற முறையில்தான் இருந்திட முடியும்.

ஈட்டன், சதி செய்கிறான் குடியரசுத் தலைவர் ஆகிவிடுவதற்காக.

சாலி சதி செய்கிறாள் ஈட்டனின் மனைவி ஆவதற்காக.

ஈட்டனுக்காகச் சாகசம் காட்டி வேலை செய்கிறாள் சாலி! கற்பழிக்க முயற்சித்த குற்றம் சுமத்தப் படுகிறது டில்மன்மீது. தீர்ப்பைப்பற்றிய சந்தேகம் எழவே நியாயமில்லை. மிகப்பெரும் அளவு வெள்ளையர்கள் - அதிலும் நிறவெறி பிடித்தவர்கள் கொண்ட அவையில், ஒரு கருநிறத்தான் வெள்ளை மாதைக் கற்பழிக்க முயன்றதாக மெய்ப்பிக்கப்பட்டுவிட்டால், பிறகு அவன் கீழே உருட்டப்படுவான் என்பதிலே என்ன சந்தேகம் எழ முடியும்?

கண் சிமிட்டினான்! பச்சைச் சிரிப்பு சிரித்தான்! அந்தத் தோட்டத்து மலர் எனக்குக் கிடைக்குமோ என்று கேட்டான்!

என்ற இவ்விதமான "குற்றச் சாட்டுகளுக்கே' கருப்பரை, அடித்துக் கொன்று மரத்திலே தொங்கவிட்டிருக்கிறார்கள்! நிறத் தூய்மையைக் காத்தாக வேண்டும் என்ற முறையை வெறியாக்கிக் கொண்ட அமெரிக்காவில்.

வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, டில்மன்மீது கண்டனக் கணைகளைச் சரமாரியாகத் தொடுத்துக் கொண்டி ருக்கும்போது, இதழ்கள் வெறுப்பையும் கோபத்தையும் கக்கியபடி இருந்தபோது, தீர்ந்தது இவன் காலம் என்று மக்கள் பேசிக் கொண்டிருந்தபோது, மற்றோர் விசித்திரமான விபரீதம் நடக்கிறது.

சாலி ஈட்டன் ஆகப்போவது உறுதி; வெள்ளை மாளிகையின் ஆரணங்கு ஆகப் போகும் நாள் விரைவில் என்று எண்ணி அகமகிழ்ச்சியுடன் இருந்து வந்த சாலி வாட்சன் தற்செயலாக, ஈட்டன் நடத்தும் சதியைக் கண்டறிகிறாள்.

உனக்காகத்தான் இவ்வளவும் என்று சாலி கூறியபோது உன்னோடு சேர்ந்துதான் வெள்ளை மாளிகைக்குச் செல்லப் போகிறேன் என்று பசப்பிய ஈட்டன், திருநாள் உறுதி என்று தெரிந்ததும், எங்கே நெடுந் தொலைவில் இருந்து வந்த தன் மனைவிக்கு அழைப்பு அனுப்புகிறான்! நான் குடியரசுத் தலைவராகப் போகிறேன்; வெள்ளை மாளிகை உன்னை அழைக்கிறது; உடனே வந்திடுக! என்று; அவளும் வந்து சேருவதாகச் சேதி அனுப்புகிறாள்.

இது தெரிந்ததும் சாலி சீறுகிறாள்; ஈட்டன் தன்னை ஏமாற்றுவது அறிந்து பதறுகிறாள்.

டில்மன் மீது தொடுக்கப்பட்ட வழக்கிலே நெருக்கடியான கட்டம்!

அதே நேரத்தில், சாலி - ஈட்டன் தொடர்பிலே நெருக்கடி!

ஆத்திரம் பீறிட்டுக் கொண்டுவந்த நிலையில், சாலி வாட்சன் , தன் தவறு பற்றியும், டில்மன் மாசற்றவன் என்பது குறித்தும், குற்றச்சாட்டு பொய் - இட்டுக் கட்டப்பட்டது என்பது பற்றியும் - தன் தகப்பனாரிடம் ஒப்புக் கொள்கிறாள். அவளுடைய வாக்கு மூலம், சட்டமுறைப்படி தயாரிக்கப்படுகிறது. அதை எடுத்துக்கொண்டு போகிறார் வாட்சன்; தனது மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறார் டில்மனிடம்.

"வீணான பழி சுமத்தினார்கள் என்பதை உணருகிறேன். இதோ என் மகள் தந்த வாக்குமூலம். இதனைத் தாங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்று கூறி செனட்டர் வாட்சன் தன் பெருந்தன்மையை எடுத்துக் காட்டுகிறார்.

அதனைக் காட்டிலும் மேலான பெருங்குணம் தமக்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் டில்மன் அந்த வாக்குமூலத்தை வாட்சனிடமே கொடுத்துவிட்டு உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களே அதுபோதும் எனக்கு என்று கூறுகிறார்.

ஆனால் வாட்சன்! இந்த ஒரு விஷயம், வீண்பழி என்பதாலேயே, நான் உமது பக்கம் இருப்பேன் வழக்கிலே என்று எண்ணிக்கொள்ளாதீர். வழக்கு விவரம் முழுவதும் அறிந்து, நேர்மையின் பக்கம்தான் நிற்பேன், என் மகள் பழி சுமத்தினாளே என்ற பரிதாபத்துக்காக உம்பக்கம் நிற்பேன் என்று நம்பிவிடா தீர்கள் என்று அந்த முதியவர் கூறகிறார். நேர்மையின் பக்கம் நின்றிடுவதை நான் வரவேற்கிறேன் என்று ஒப்பம் அளிக்கிறார் டில்மன்.

இப்படிச் சித்திரவதை செய்வதைவிட, டில்மனை வெள்ளை வெறியர்கள் ஒரே அடியாகக் கொன்று போட்டு விட்டிருக்க லாமே என்று கேட்கத் தோன்றும்.

ஆபிரகாம் லிங்கனைக் கொன்றுவிடவில்லையா! கென்னடி யைச் சுட்டுக் கொன்றுவிடவில்லையா! டில்மன் மீது மட்டும் கொலைகாரர்கள் பாயாமலா இருந்திருப்பார்கள். பாய்ந்தனர்! தப்பித்துக் கொண்டார். அந்தக் கொலை முயற்சியை யொட்டியும் ஒரு உள்ளம் உருக்கும் நிகழ்ச்சி இருக்கிறது. அடுத்த கிழமை அதுபற்றிக் கூறுகிறேன்.

அண்ணன்,

27-3-66