அடுத்த
வீட்டு அகிலாண்டம் கட்டிக்கொண்ட தாலி எட்டாம் மாதம் அறுக்கப்பட்டது.
அவளை மணந்தவருக்கு இருமல் வியாதி என்று ஊராருக்குத் தெரியும்.
ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி
தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால், ஜாதகம்
பார்த்த ஐயர், ஜாம் ஜாமென முடிக்கலாம் முகூத்ர்தத்தை. ஜாதகப்
பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன் பூவைத்தும்
கேட்டேன்! என்று கூறினார். கலியாணம் முடிந்தது. களிப்புக்
கொஞ்சம் ஆடிற்று. அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை.
சனிக் குற்றமென்றார் ஐயர். விளக்கேற்றிப் பார்த்தார்கள்.
வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி
விம்மி அழுகிறாள் விதவை. இதைக் கண்டீர்கள் கண்ணால். எத்தனையோ
பொருத்தம் பார்த்தாரே ஜோதிடர், எல்லாம் என்னாயிற்று என்ற
கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீரிகளா! இல்லை! உங்கள்
வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ முடி ஏற வேண்டுமென்ற எண்ணம்
பிறந்ததும், கூப்பிடு ஜோதிடரை என்கிறீர்கள். முன்பு பார்த்தது
என்ன ஆயிற்று என்ற கேட்டீர்களா! கண்ணால் கண்டீர்கள், கருததிலே
தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள். அதுதானே இல்லை. ஐயோ தோழரே!
ஐயர் பார்த்த ஜோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, ஜோதிடம்
கேட்டவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர்களா?
இல்லையே. வழியிலே குழியிருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவனை,
வழியற்றவன் என்றுரைப்பர். உங்களின் கருத்து குருடானதைக்
கூறினாலோ கடுங்கோபங் கொள்கிறீர். தெரிந்தும் தெளிவு கொள்ள
மறுக்கிறீர்?
(திராவிடநாடு - 10.01.1943)
|