அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


அந்தச் சமயத்திலே!

“அன்னாய் வாழி வேண்டன்னை
நம்முர்ப்பார்ப்பனக் குறுமகப் போலத்
தாழங்குடுமித் தலையமன்ற
நெடுமலை நாடானூர் தமாவே” (ஐங்குறுநூறு)

“அம்மா! அவர், குதிரைமீதேறி வருகிறார் கெம்பீரமாக.”
“யாரடி, வருவது?”

“பெரிய மலைகள் சூழ்ந்த நாட்டுக்குடைய, தலைவன் பரிமீதேறி வருகிறார்.”

“சரி! அதிலென்ன வியப்பு காண்கிறாய்?”

“அந்தக் குதிரை, தலையை அசைத்துக்கொண்டு வருகிறதே, அது வேடிக்கையாக இருக்கிறதம்மா.”

“அதிலென்னடி வேடிக்கை! மகா வேடிக்கை!”
“குதிரை தலையை அசைக்கும் போது கொத்தாக இருக்கும் குடுமியும் கூடவே கூத்தாடுகிறது. அதைப் பார்த்தால் சிரிப்புண்டாகிறது.”

“குதிரைக்குத் தலையிலே குடுமி ஆடினால், சிரிப்புவரக் காரணம் என்னடி?”

“ஏனம்மா! நமது ஊரிலே உள்ள பார்ப்பனர் தலையிலே உள்ள உச்சிக்குடுமி, அவர்கள் நடக்கும் போது கூத்தாடுகிறதே, அதைப்போல இல்லையா? அந்தக் காட்சி? அதுதான் எனக்குச் சிரிப்பு உண்டாயிற்று.”

“போடி குறும்புக்காரி.”

வீதிவழியே செல்லுகிறான் குதிரை வீரன், குதிரை தலையசைக்க, அதன் குடுமி ஆடுகிறது, இதைக் கண்ணுற்ற தோழிக்குப், பார்ப்பனரின் குடுமி நினைவிற்கு வருகிறது; நகைக்கிறாள், கண்டதையும் கொண்ட கருத்தையும், தலைவிக்குக் கூறுகிறாள் பழந்தமிழகத்திலே. இக்கருத்துக்கொண்ட கவிதையே, மேலே குறித்திருப்பது. ஐங்குறு நூறு, எனும் ஏட்டிலுள்ளது; எடுத்துக் கட்டியதுமன்று, ஈரோட்டுச் சரக்குமன்று!

ஒரு காலம் இருந்தது, தமிழர்கள் ஆரியரை, நகைப்புக்குரிய நடமாடும் உருவங்களாகக் கருதிய காலம். ஆரிய இனம் வேறு, என்ற எண்ணம் மங்காதிருந்த காலம், ஆரியத்தைக் கேலிக்கூத்தாகக் கருதிய காலம்! இன்றோ ஆரியரைப் போன்ற புத்தி கூர்மை, ஆசார அனுஷ்டானம், நேமநிஷ்டை, பூஜை புனஸ்காரம்; நடையுடை பாவனை இருப்பது தமிழருக்குச் சீலத்தையும் சிலாக்கியத்தையுந் தரும் என்ற தவறான கருத்து தழைத்துக் கிடக்கிறது. காலம் முளைக்கச் செய்த இந்தக் கள்ளி படர்ந்திருப்பதாலேயே, நாச நச்சரவுகள். இங்கு நாசமாடி, தமிழர் சமுதாயத்தைத் தீண்டித்தீய்த்து வருகின்றன.

ஆரிய கலாசாரம் வேறு திராவிடக் கலாசாரம் வேறு என்பதுபற்றி கூறியுள்ளனர். ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களே, முதலிலே, ஆரிய நாகரிகம், மொழி, கலை ஆகியவற்றினை வானளாவப் புகழ்ந்தனர். மாக்ஸ் முல்லர் எனும் ஜெர்மானியர், இப்பணியிலே ஈடுபட்டபோது, இங்கு அக்ரகாரம் ஆனந்தக்கூத்தாடிற்று, “வேதம், ஸ்மிருதி என்பவைகளுக்கு, மேனாட்டார் எவ்வளவு மதிப்பு தருகின்றனர் பாரீர். எமது புகழ் எங்கும் பரவிடக் கேளீர்” என்று பேசினர், பூரித்தனர். ஆபிடியூபா போல, ஆரிய இனத்தின் இயல்பினைக் கடிந்துகூறாமல், புகழ்ந்து பேசிய ஜெர்மன் ஆராய்ச்சியாளர்களின் புல்லறிவினைப் பொசுக்கப் புதிய ஆராய்ச்சிக்காரர் தோன்றலாயினர். இந்தியாவிலே, முதன் முதல் நாகரீகத்தைப் புகுத்தியவர்களே ஆரியர்தான் என்ற பொய்யுரை ஒழியக் காலம் பிடித்தது. ஆரியத்தின் துணையின்றி, மிகப் பழங்காலந்தொட்டு இங்கே வளமானவோர் நாகரிகம், ஓங்கியிருந்த உண்மையை உலகு உணர நாட்களாயின. பண்டைத் தமிழரின் வாழ்வு பாழ்பட்டதும், வீரம் சரிந்ததும், கலை கறையானதும், நிலை குலைந்ததும், ஆரியத்தின் கூட்டுறவால் நேரிட்ட அவதிதான் எனும் உண்மையை, உலகு முதலிலே தெரிந்து கொள்ளவில்லை. இந்தியாவை ஆரிய வர்த்தகமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே, ஆரிய நாகரிகம் என்று மொழிந்தும் உலகு கிடந்தது. பேராசிரியர் சர். ஜான்மார்ஷல் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறிய போதுதான், மேனாட்டாரின் கண்களிலிருந்த கறையும் கருத்திலிருந்த மாசும் நீங்கிற்று. பிறகு ஆரியம், திராவிட நாகரிகத்தை எவ்வளவு பாழ்படுத்திற்று என்ற ஆராய்ச்சி வளரலாயிற்று. இயற்கை, இன்பத்தை நுகர்ந்து, வீரத்தை வணங்கி, அறத்தை ஓம்பி வாழ்ந்த திராவிடரிடை, கட்டுக் கதைகளைப் புகுத்திக் கோழைத்தனத்தை வளர்த்தவர் ஆரியரே என்பதும்; ஆரியக் கோட்பாடுகள் புகாமுன்னம் திராவிடர் அறிவுத்துறையிலே ஆர்வங்
கொண்டிருந்தார்களேயல்லாமல், கண்ணுக்குப் புலனாகாதும், கருத்துக்கு எட்டாததும், வாதத்திற்குக் கட்டுப் படாததும், பிரத்யட்சப் பிரமாணத்துக்கு ஒத்துவராததுமான கொள்கைகளிலே மூழ்கிக் கிடக்கவில்லை என்பதும், பிறகு ஆராய்ச்சியாளர்களால் விளக்கப்பட்டது. ஆனால், இவை யாவும் பிரேத விசாரணையாகக் கருதப்பட்டதே யல்லாமல், வீழ்ச்சியுற்ற இனத்திற்குத் திருப்பள்ளி எழுச்சியாக உபயோகிக்கப்படவில்லை. சாதாரணக் கல்வியும் பொது அறிவும், அதிகம் பரவாத திராவிடச் சமுதாயத்தினிடையே, புதிய ஆராய்ச்சி முடிவுகள் பரவ வழி இல்லாமற்போய்விட்டது. ஆகவேதான் ஆரியம் அழிவைத்தருவது, திராவிடம் தீரரை வளர்ப்பது என்ற நற்கருத்து இன்றும் நமது இனத்தவரிடை புகவில்லை.

கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது, இந்தத் துறையிலே சற்று உழைப்பார் களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல், உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு, மறைந்து புகழ வாழ்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும்! எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டையப் பெருமையை மறந்து, எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ, அந்த இனம், அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்.

“எமைநத்துவாய் என, எதிரிகள் கோடி, இட்டழைத் தாலும் தொடேன்” என்று இனஎழுச்சியே உருவமானது போன்ற நமது கவி கனகசுப்புரத்தினம், (பாரதிதாசன்) பாடுகிறார்! தொடேன் - என்று உறுதியும், ஆவேசமும் மிளிர, அந்தப்பதம், உயிர்க்கவியின் உள்ளத்திலிருந்து, பீறிட்டுக் கொண்டு வெளிக்கிளம்புகிறது. எதிரிக்கு அடிமையாகமாட்டேன்! கோடி தரினும் என்று கூறுகிறார். கோடி ரூபாய் - பவுன் - வைரக்கற்கள், நவரத்தினக்குவியல் எதை நீ கோடியாகக் குவித்து என் எதிரே வைத்தாலும் சரியே, உன்னிடம் நான் அடிவருடியாக மாட்டேன், என்று கவி கூறுகிறார். கோடி என்ற பதத்துடன் எந்தப் பொருளைக் குறிக்கும் பதத்தையும் அவர் இணைத்தாரில்லை! ஏன்? இன்ன பொருள் என்று குறித்துவிட்டால், சரி, வேறு பொருள் கோடி தருகிறேன், என்று எதிரிகேட்க இடமுண்டல்லவா? கோடி ரூபாய்த் தருகிறேன், என்று எதிரி கூறுகிறான், தமிழன் வேண்டேன் என்று மறுக்கிறான், உடனே தந்திரமுள்ள எதிரி, கோடி வராகன் தருகிறேன் என்று கூறலாமல்லவா? அந்தப் பேரப்பேச்சுக்கே, கவி, இடங்கொடுக்கவில்லை. எதுவாகவேனும் இருக்கட்டுமய்யா, கோடி குவித்தாலும் வேண்டாம் என்று முடிவாகக் கூறுகிறார். தொடேன், என்று கவி கூறியதிலே, கையினால் தொடேன் என்ற பொருள் மட்டுமன்று, கருத்தினாலும் தொடேன் என்ற பொருளும் தொக்கியிருக்கிறது. இப்போது, மறுமுறை கூறிப் பாருங்கள், அந்தக்கவிதையை, “எமை நத்துவாய் என, எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன்.” இந்த உணர்ச்சியும், உறுதியும் சுயநலத்தைப் பற்றித் துளி நினைப்பும் இல்லாத மனப்பான்மையும், சபலத்திற்கு இடங்கொடுக்காத தன்மையும், வீரமும், இருப்பின், கோடி ஈட்டிகள் தமிழரின் மார்புக்கு நேரே நீட்டப்பட்டாலும், எதிரி வெல்லமுடியாதே! எங்கே, காண்கிறோம் அந்த உறுதியை! எவரிடம் கேட்கிறோம் இத்தகைய வீரப்பேச்சினை?

“நமக்கென்ன” என்று கூறும் சுயநலமிகளும், ‘நம்மால் ஆகுமா’ என்று பேசும் தொடைநடுங்கிகளும் ‘ஏன் வீண்வம்பு’ என்று சொல்லும் கோழைகளும் ‘எனக்கு இது பிடித்தமில்லை’ என்று முடுக்காகக்கூறும் கோடரிகளும், தமிழகத்திலே உலவக் காண்கிறோம்!

மானமொன்றே நல்
வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்த என் மறவேந்தர்
பூனைகள் அல்லர்
அவர் வழிவந்தோர்
புலிநிகர் தமிழ்மாந்தர்!

என்ற வீர முழக்கம் என்று தமிழர் மனை தோறும், கேட்கிறதோ, என்றையத் தினம் தமிழர் உள்ளம் இந்த நிலை பெறுகிறதோ, அன்றே ஆரியர் கனகவிசயனைக் கல்லெடுக்க வைத்த சேரன் மரபினர், மீண்டும் தமிழராயினர், இனி நமது கடை நடவாது என்பது தெரிந்து, பல்லெலாம் தெரியக் காட்டி நிற்பர், பணிவர். போரிட்டு அடக்கிய வரலாறே ஆரியருக்குக் கிடையாது. பெரிய போர்களிலே, அவர்களுடைய பெயர் சம்பந்தப்பட்டதே கிடையாது. புராண இதிகாசங்களிலே நடைபெற்றதாகக் கூறப்படும் போர்கள், வெறும் புளுகு, என்ற போதிலும், அதிலும் வீரத்தால் வெற்றி கிடைத்ததாகக் கதை கிடையாது, வேள்வியால் வெற்றி, பரமன் அருளால் பலம், மாய அஸ்திரங்களால் எதிரி தோற்றான், என்றுதான் இருக்கும். திராவிட வரலாறுகளிலோ வீரமே முதலிடம் பெற்றிருக்கும். ஆரிய இனம் போரிட்டுப் புகழ் ஈட்டியதில்லை, பிறரின் புத்திகெட்டபோது ஆரியரின் கொட்டம் வளரும்.

போதை ஏறியவன், கல் தடுக்கியோ காற்று அடித்ததாலோ கீழே வீழ்வான். ஆரியரும், திராவிட இனத்திடையே, கருத்திலே போதை மூண்டிடச் செய்துவிட்டுப் பிறகு, கீழே உருட்டிவிட்டனர். திராவிடன், ஆரிய வீரத்தால் வீழ்த்தப்படவில்லை. ஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமைதாங்கியானான், சோர்ந்தான், சுருண்டான். இந்தச் சூட்சுமத்தை உணராதார் தமிழர் வரலாறு அறியாதாரே!

“ஐயன்மீர்! இதுபோது நீவிர் வணங்கும் உருவாரங்கள், ஆரியக் கற்பனை” என்று கூறுவோரை, மேதாவிகளென்று தம்மை எண்ணிக்கொண்டுள்ள தமிழர்கள், நம்புவதில்லை, நையாண்டி செய்கின்றனர். எதற்கெடுத்தாலும், ஆரியச்சூது, ஆரியச்சதி, ஆரியப் புரட்டு என்று கசடர்கள் கூறுகிறார்கள் என்று இந்த மேதாவிகள் கூறுகின்றனர். “மழையாம் மழை! மழை நம்மை என்ன செய்யும்” என்று எருமை கூறுவதில்லை, அதன் நடவடிக்கை, அதனுடைய நினைப்பை நமக்குக் காட்டுகிறது. தமிழரிலே தடித்த தோலர் உளர், நாற்காற் பிராணிகளிலே எருமை இருத்தலைப்போல, வீணான மனப்பிராந்தியால் சிலர் இதுபோல, ஆரியர் - திராவிடர் எனப் பிதற்றுகின்றனர், என்று கூறும் ஏமாளிகளுக்கு, எத்தனை ஏடுகளைக் காட்டினாலும், கருத்து துலங்குவதில்லை. சுயமரியாதைக் காரர்களுக்குத்தான், ஆரியரிடம் வீணான துவேஷமிருக்கிறது, என்று எளிதிலே கூறிவிடுகிறார்கள். சுயமரியாதை இயக்க சம்பந்தமே இல்லாத, அறிவுத்துறையிலே ஈடுபட்டுள்ள பேராசிரியர்களின் கருத்துரைக்கு என்ன குற்றங்கூற முடியும்?
ஆரியர், தங்களுடைய கருத்துக்களையும், கடவுட் கதைகளையுங் கூற வரும்போது, அறிவுக்கு இவை பொறுத்தமா, ஆராய்ச்சிக்கு ஈடு கொடுக்குமா என்பதுபற்றிய கவலையே கொள்ளவில்லை. ஆண்டை அடிமைக்குக் காரணம் கூறிக்கொண் டிருப்பானா? குழந்தையை மிரட்டக் கிழவர்கள், ஐந்து கண்ணனைப் பற்றியும், ஆறுகாலனைப்பற்றியும் கதைகூறும்போது, குழந்தைகள் மிரட்சியுடன் கேட்டு, வாய் பொத்திக் கொண்டிருக்குமே யன்றி, ‘தாத்தா! இதை நான் நம்ப முடியாது’ என்று கூறுவதுண்டா! குழந்தைப் பருவம், மனித சமுதாயத்துக்கு இருக்கும்போதுதான், இடி தேவன், மின்னல் மாதா, மழை மாகாளி, தீக்கடவுள், எனக் கடவுட் கதைகள் கட்டிவிடப்பட்டன! உலகிலே இதுபோலத் தோன்றிய கதைகள் அறிவுப்பருவத்தை அவனியோர் பெற்றதும் மறையலாயின! ஆனால், இங்கு மட்டும், ஆரியர் அந்த நாள் ஆபாசத்தை இன்றும் விடாப்பிடியாக வைத்துக் கொண்டிருப்பதுடன், அதே கருத்துகளை மக்களிடை பரப்புவதையே தங்கள் பிழைப்பாக வைத்துக்கொண்டனர். அதனாலேயே, அறிவு சூன்யமே ஞானமாதாவும், இருப்பதை இல்லை என்று கூறுவது வேதாந்தமென்றும், இல்லாததை உண்டு என்று நம்பச் செய்வது மார்க்கமெனவும் போதிக்கப்பட்டு விட்டது. அபின் விற்று வாழுபவன், போதை கூடாது என்ற பிரசங்கம் புரிவானா?

மற்ற மக்களுக்குத் தெரியாதது தங்கட்குத் தெரியுமென்றும், மற்றவர்களால் சாதிக்க முடியாததைத் தாங்கள் சாதிக்க முடியுமென்றுங் கூறிடுபவனை, ஆராய்ச்சியுடையோர், அவன், ஓர் புரட்டன் என்று ஏசி ஒதுக்குவர்; ஆராயுந்திறனற்றோரோ, அப்படியா! என்று ஆச்சரியத்தால் வாய்பிளக்க நின்று கேட்பர், கைகூப்புவர். இந்த முறையிலேயே, ஆரியம் தமிழரிலே, தன்னுணர்வு, அறிவு துணுக்கம் அற்றவர்களைப் பலிகொண்டது. வீராவேசம் கொண்ட வேங்கை யானாலும், சதுப்பு நிலத்திலே, படுகுழியிலே, வீழ்ந்துவிட்டால், சாகத்தானே வேண்டும். நீள் வையம் எதிர்த்தாலும், எமக்கு நிகர் இங்கில்லை என்று கூறிப்போரிடும் மறத்தமிழரும், ஆரியமதக் குழியிலே வீழ்ந்ததால் அறிவு, ஆற்றல், ஆண்மை, மரணம் எனும் பண்புகளை இழக்க வேண்டி நேரிட்டது. “இந்தியாவில் ஆரிய ஆட்சி” என்றோர் நூல் ஹாவல் என்பார் எழுதியுள்ளார். அதிலே, “மதச்சடங்குகளைச் செய்விக்கும் புரோகிதத் தொழிலிலே பிராமணர்கள் ஏகபோக உரிமை பெற்றனர். இதனால் சுரண்டிப் பிழைக்கவும், ஆபாசமான, காட்டுமிராண்டித்தனமான, மூடநம்பிக்கைகளைப் பரப்பவும் முடிந்தது.

மந்திரத்தால் ஆகாதது ஒன்றுமில்லை! போரிலே ஜெயமோ அபஜெயமோ, மந்திர உச்சாடனத்தாலே சாதிக்க முடியும், சமஸ்தானங்களின் க்ஷேமத்துக்கு, எதிரியின் வாயை அடக்குவதற்கு, இருமலை நீக்க, சடை வளர, எதற்கானாலுஞ்சரியே மந்திரத்தால் பலன் உண்டு! நித்யகர்மானுஷ்டானங்களிலே, பிரமாத காரியமோ அல்ப விஷயமோ, எதற்கும் அந்த மந்திரம் அவசியம், தேவை என்று ஆரியர் கூறி வைத்தனர்!” என்று ஆசிரியர் கூறுகிறார். இவர், ஈரோட்டு வாசியா, பெரியாரின் சீடரா, சுயமரியாதைப் பிரசாரகரா? ஏன், சுரண்டிப்பிழைக்க, “மந்திரம்” என்று மயக்க மொழி பேசிப் பார்ப்பனர் வாழ்ந்தனர் என்பதை எழுதுகிறார். ஆரிய மாயையிலே சிக்கி, நம்மவர்மீது “துவஜம்” தொடுக்கும் தமிழர்கள், இந்த ஆராய்ச்சியாளரின் கண்டனத்தைப்பற்றி யோசிக்கக்கூடாதா? “வேதகாலமுதற்கொண்டு ஆரியர்கள் அனுஷ்டித்து வந்த யாகம், பிராமணருக்கு, மற்றவரைக் கொடுமைப்படுத்தவும், ஏமாற்றவும், ஒரு கருவியாக உபயோகப்பட்டது” என்றும் ஹாவல் எழுதுகிறார். மந்திரம், யாகம் என்பவைகள், பார்ப்பனப் புரட்டு என்று தன்னுணர்வு இயக்கத்தார் கூறினால் கோபங்கொள்ளும் “தாசர்கள்” இந்த ஆராய்ச்சிக்காரரின் உரை கேட்ட பிறகு, தமது கருத்தை மாற்றிக்கொள்ளக் கூடாதா! ஆரிய ஆட்சி ஒரு புரட்டர் கூட்டம், வெள்ளை மனத்தினரை வாட்டி வதைத்த வரலாறேயாகும். இல்லை என்பதற்கு, எங்கிருந்தாவது ஆதாரம் தேடிக்காட்ட, எவர்களாவது முன்வருவார்களா என்று கேட்கிறேன். அங்குமிங்கும் அலைந்து, உன் மனதிலே அலைமோதிடச் செய்யும். அழகுடன் விளங்கும் கூந்தல், உண்மையிலே, நரைத்தது, மினுக்குத் தைலமும் கத்தரிக்கோலும், அவளுடைய கைத்திறனும், உன் காமக்கிறுக்கும் கலந்து, உனக்கு மயக்கமூட்டுகிறது!

வதனமே சந்திரபிம்பமோ, மலர்ந்த சரோஜமோ என்று நீ சிந்து பாடுகிறாயே, சற்று, சபலத்தை ஒதுக்கிவிட்டு அந்த முகத்தை உற்றுநோக்கு, நல்ல இரத்தமில்லாததால் வெளுத்து, காலத்தின் கீறல்கள் நிறைந்து, காமுகரின் கரத்தினால் கசங்கிக்கிடக்கும் மோசமும், அதை மாற்ற அவள் அணிந்துள்ள பூச்சு வேஷமும் புலனாகும்!

அந்தச் சிரிப்பிலே நீ சொக்குகிறாய், அது சிலந்தியின் மொழி! வலை வீசும் சாகசம்! அதைக்கண்டு நீ ஏமாறுகிறாய். உன் வாழ்வை வளைத்து விட்ட அவளுக்கு நீ அடிவருடுகிறாய், உன் அறிவை அழிக்கும் அணைப்பிலே நீ ஆனந்தம் காண்கிறாய், உன் பண்பினைப் பாழாக்கிய பார்வையை நீ பாகு என்று பகருகிறாய். அந்த மேனியின் பளபளப்பு வெறும் மேல் பூச்சு, அந்தப் புன்னகை முகத்தாளின் மனம் ஓர் எரிமலை, அவள் ஒரு நடமாடும் நாசம், உனக்கு வேண்டாமப்பா, அவளிடம் பாசம், உன்னைக் கெடுத்திடுமே அந்தக்காசம்;” - என்று, வெளி வேஷத்தால் வயோதிகத்தை மறைத்துக்கொண்டு, வாஞ்சனையுடன் பேசும் வித்தையால் தனது வஞ்சகத்தை வெளிக்குத் தெரிய வொட்டாமல் செய்து, நகை முகங்காட்டி நாசத்தை ஊட்டிடும் நாரியிடம் நேசங்கொண்டு, விவேகமிழந்து, காமப்பரவசனாகியுள்ள தன் தோழனுக்குக் கருத்து கெடாதவன், கனிவுடன், புத்தி கூறுகிறான்! அனங்கன் அம்பாலே அடிபட்டேன்! அவளிடமே சென்று, அதற்கு மருந்து கண்டேன்!! என்று கூறி, காமுகனாகி விட்டவனோ, “போடா, உலகமறியாத உன்மத்தா! நீ, என்னடா கண்டாய், அந்த எழிலுடையாளின் இன்சொலின் சுவையையும், மதுரகீதத்தின் மாண்பையும், மஞ்சமேவி கொஞ்சிடும், பஞ்சபாண வித்தைத்திறத்
தையும்! அனுபவமில்லாத அபாக்கியசாலி, நீ! நான் பெறும் இன்பத்தை, துன்பமென்று கூறுகிறாய் நிலவை நெருப்பென நவில்கிறாய், தென்றலைத் தேள்கடி என்று கூறுகிறாய், கனியைக் கைப்பு என்றுரைக்கிறாய், காதலைக் கானல் என்று சொல்கிறாய், உல்லாசத்தை உற்பாதமென்று உரைக்கிறாய், முல்லையை முள்ளென மொழிகிறாய், மூடனே! போ! போ!! நான் பெற்ற இன்பம் நீ பெறு முன்னம், நான் கொண்ட அறிவு உனக்கெப்படிப் பிறக்கும்!” என்று கேலி பேசிவிட்டு, அந்திப்போது சந்திப்புக்குச் சென்று, கரையும் காகத்தைக் கடிந்துரைத்து விட்டு, காலை மலர்ந்ததே என் களிப்பும் உலர்ந்ததே, என்று கவலைப்படுகிறான். அவனுடைய வெறி அப்படி இருக்கிறது! குடி கெடுப்பவளை அவன் கொடி இடையாள் என்று நம்புகிறான், அவனைத்தடுக்க முயலும் நண்பனை நையாண்டி செய்கிறான்.

ஆனால், சித்த வைத்தியர் செந்தூரம் கொடுத்து அலுத்து, பஸ்பத்தைக் கொடுத்துப்பயந்து, கஷாயம் காய்ச்சிக்கொடுத்தும் பயனில்லாதது கண்டு கவலைகொண்டு, கடுகு துவரையாகி, துவரை அவரையாகி, அவரை சுரை போலாகி விட்டதே, ஐயோ! நான் என்ன செய்வேன், கட்டு மாத்திரையால் முடியாது, கத்தியே இனித் துணை, என்று கூறும்போது தான், காமுகன் கலங்கி, நடுங்கி, கைகூப்பிக் கேட்டு “கனிவுடன் அன்று நீ சொன்னாயே நண்பா! கசடன் நான், கேட்டேனில்லையே! கண்டவர் ஏசும் நிலை பெற்றேனே, கள்ளியின் கூட்டுறவால் கெட்டேனே,” என்று, (புத்தி கூறிய) நண்பனைக்கட்டித் தழுவி அழுதுகொண்டே கூறுவான்.

அதுபோலத்தான், ஆரியம், தனது சூதான சொரூபத்தை மறைக்கச் சாஸ்திரப்போர்வை தரித்துக் கொண்டு, வஞ்சகத்தை வேஷத்தால் வெளிக்குத்தெரிய வொட்டாது தடுத்து, நாசத்தை, நமது இனத்துக்கு நகை முகத்துடன் ஊட்டுகிறது. அந்த நஞ்சினை உண்ணாதீர், என்று கூறும், சுயமரியாதைக்காரர்களை, ஆரிய மாயையிலே சொக்கி அறிவிழந்து கிடக்கும் அன்பர்கள், ஏசுகின்றனர், ஏளனம் பேசுகின்றனர். ஆரியத்தால் அழிவு உண்டாகும் அந்தச் சமயத்திலே, சு.ம.க்காரன் சொன்னது சரியாகத்தானே போச்சு! அன்று அவனை நையாண்டி செய்தோம், இதோ இன்று ஆரியத்தின் காரியத்தைக் கண்டோமே” என்று ஓர் நாள் கூறித்தான் தீரவேண்டும்.

17.10.1943