மே.த. வைசிராய் வின்லிதோ பிரபுவுக்கு, இந்திய பூகோள
ஒற்றுமையிலே, அபார சிரத்தை உண்டாகி விட்டது; அமெரிக்கு
அக்பரிடம் அன்பு வந்தது போல! மே.த. வைசிராய் அவர்கள்,
தமது பரிவை அதிஷ்டம் போல் வழங்குவது அவருக்கான உரிமை!
காளை மாடுகளின் ரட்சகராகக் காட்சி தந்தார்; சரி, பிரபுவின்
பரிவு, காளைகளிடம் சென்றது போல, பாடுபடும் இனங்கள் மீதும்
பிறக்கக்கூடுமல்லவா, என்று மகிழ்ந்தோம். இன்றோ, பூகோள
ஒற்றுமை மீது பரிவு கொண்டவர், பல கோடி மக்களின் எதிர்கால
வாழ்வுக்குப் பயமூட்டும் திட்டத்தை வைத்துள்ள தோழர்களுக்குக்
குதூகலம் பிறக்குமாறு, இந்திய ஒற்றுமைக்குப் பங்கம் வரக்கூடாது
என்று பேசுகிறார். வைத்ய வரதர் சந்தனம் என்கிறார், சவர்க்கார்
சாமரம் வீசுகிறார்; சர். சி.பி. ராமசாமி ஐயர், சல்லடம்
போடுகிறார், இவைகட்கு ஆச்சாரியார் எதிர் அஸ்திரம் விடுகிறார்!
ஐயோ! பூகோளமே! நீயுமா, எதிரியாக வேண்டும்!
பூகோள அமைப்பை மட்டுமே கவனிப்பதானால், லின்லிதோ பிரபுவின்
ஜென்மபூமியினர், சிறு படகுகளில், கடலில் உலவி மீன் பிடிப்போராகவும்,
வண்ணமும் கரியும் பூசிய முகத்தினராகவும் இருந்திருக்க
வேண்டும்; பிரிட்டன் இயற்கை வளங்கள் அதிகமில்லாத, கடல்
நடுவிலே உள்ள ஓர் திட்டு! ஆனால் வாதத்தை கவனித்தால், சூரியன்
மறையாத சாம்ராச்யம், பிரிட்டனுக்கு இருப்பது தெரிகிறது!
பூகோள போதனை செய்யும் மே.த. வைசிராய், நூற்றுக்கணக்கான
சமஸ்தானங்கள் இந்திய பூமியிலே இங்குமங்கும் இருப்பது கண்டு,
என்ன செய்கிறார்?
சமஸ்தானாதிபதிகள், தோட்டக் கச்சேரி நடத்தி, பொன் மாலை
சூட்டி, மே.த. வைசிராயின் புன்முறுவல் காணத் தவங் கிடக்கும்
நேரங்களிலே லின்லிதோ பிரபு, இந்திய ஐக்யத்தைப் பற்றிப்
பேசி, இனி இத்தனை துண்டுகள் ஏன், ஒரே அரசியலா வோம், தனித்தனி
வாழ்வு வேண்டாம் என்று கூறினாரா, கூறுவாரா! மன்னர்பிரான்
சர்க்காருக்கும் சமஸ்தானங்கட்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கைகள்
பற்றியன்றோ அச்சமயங்களிலே பேசுகிறார். பூகோள போதனை,
பாகிஸ்தான், திராவிடநாடு கேட்பவர்கட்கு பிரத்தியேகமாக
ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அற உரை போலும்!
பிரபுவின் கவனத்திற்கு நாம் சிறிதளவு சரித்திரத்தைக் கொண்டுவர
அனுமதி கோருகிறோம். பிரிட்டிஷ் பிரபுக்கள் இந்திய உப
கண்டத்திலே ராஜப்பிரதிநிதிகளாக வராமலிருந்த காலம் ஒன்று
இருந்தது! ஏன்! பிரிட்டிஷ் பிரமுகர்கள் மொகல் தர்பாரிலே,
அனுமதி பெற்று பேட்டி கண்டு, சலாமிட்டுக் குனிந்து நின்று,
ஜாடை தெரிந்து சரக்கைக் காட்டி, வினயமாக வியாபாரம் செய்த
காலம் ஒன்று இருந்தது. பொன்னும் மணியும் கொழித்த காலம்!
வீரரும் தியாகியும் உலவிய நேரம்! வாழ்க்கை ஒரு விருந்தாக
இருந்த வேளை. அந்தக்காலத்திலே, திராவிடம் தனி! பாகிஸ்தான்
தனி! இந்து மன்னர்கள் தனித்தனி! அந்தக் காலத்திலே கட்டப்பட்ட
அழகிய தாஜ்மஹாலைத்தான், அகில உலகிலிருந்தும் வரும் யாத்ரீகர்கள்
இன்றும் கண்டு, போற்றுகின்றனர்.
“அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்து குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக்காடு மணக்கும் நாடு”
என்ற விதத்திலே இருந்தது திராவிட நாடு.
சரிதமும் பூகோளமும் சேர்த்து வைசிராய் பார்ப்பாரானால்,
இந்திய பூபாகத்திலே மூன்று தனி அரசுகள் அமைவதே முறை என்பதை
உணர்வார்.
பூகோளத்தையுங் கூட, போதனைக்காக மட்டுமன்றி, தெளிவுக்காகப்
படிக்கும் யாவரும், இந்த உபகண்டம், நிலப்பண்பு, சீதோஷ்ணப்
பண்பு ஆகியவைகளிலே, மூன்று தனித்தனி இடமாக இருத்தலைக்
காணலாம். மலையும் மணல் வெளியுங் கலந்த வடமேற்கு பாகம்,
இமாலய அடி வட்டாரம் என்னலாம், வளமும் வற்றா நதிகள் பாய்வதுமான
கங்கை நதிதீரம், தென்பீட பூமி, என்று மூவகை நாடுகள், உள்ளன.
இவை, லின்லிதோ பிரபுவின் மூதாதைகள், ரோமன், டேன், நார்மன்
எனும் பல்வேறு இனத்தவருக்குத் தம்நாடு வேட்டைக்காடாவதைக்
கண்டு கண் கசிந்து கிடந்த காலத்திலே, தேன் கசியும் கவி
இயற்றி, மணம் வீசும் வாழ்வுடன்,
“வானிடை மிதந்திடும் தென்றலிலே
மணிமாடங்கள் கூடங்கள் மீதினிலே
தேனிடை யூறிய செம்பவள
இதழ்சே யிழையாருடன் ஆடுவமே”
என்று பள்ளுபாடி வாழ்ந்த இடங்கள்!
பூகோள போதனை புரியும் “பூஜ்யர்கள்” ஸ்காண்டி நேவிய தீபகற்பமென்று
இயற்கையால் ஒரே வட்டாரமாக்கப்பட்டுள்ள இடம், ஏன், ஸ்வீடன்
என்றும், நார்வே என்றும் இரு அரசுகளாக, பன்னெடுங்காலமாக
உள்ளன என்பதற்கும், ஐபீரியன் தீபகற்பம், ஸ்பெயின் என்றும்
போர்ச்சுகல் என்றும் இரு பிரிவாக, இரு அரசாக ஏன் உள்ளதென்பதற்கும்,
இங்குள்ள பெரிய பண்ணை அளவுள்ளதான ஒரு லக்சம்பர்க் ஏன்
தனி அரசு, தனி வாழ்வு கோருகிறதென்பதையும், சிறு நாடுகளின்
சுதந்திரங்களைக் காப்பாற்றவே, பிரிட்டன் சீறிப் போரிடுகிறது
என்ற போர் நோக்க விளக்கத்தையும், மறந்துவிடத் துணிகிறார்களா
என்று கேட்கிறோம். ஒரு கோடி முஸ்லீம் ஒரே இடத்திலே வாழ்ந்து,
வேற்றானிடம் அடிமைப்பட்டு இருக்கின்றனரா? இல்லை! எங்கும்
தாருல் இஸ்லாம்! இங்கு மட்டுமே 10 கோடி முஸ்லிம்கள்,
அடிமை வாழ்வில் உள்ளனர். நாலு கோடி பேர், எங்காவது நயவஞ்சகரின்
நாட்டியப் பொம்மைகளாகி உள்ளனரா? இல்லை! திராவிடருக்கு
மட்டுமே அக்கதி! இரு இனமும் இக்கதி பெற்றதன் காரணம், பூகோளப்
பித்தலாட்டமன்றி வேறென்ன? பூகோளத்தை விஞ்ஞானமும், இன
எழுச்சியும் மாற்றி யிருப்பதை யார் மறுக்க முடியும்? பூகோளத்துடன்
விஞ்ஞானம் சேரவில்லை யானால், சூயஸ் கால்வாய் எது? சொகுசான
வியாபார வாழ்வு மேனாட்டாருக்கு எங்ஙனம் கிடைத்திருக்க
முடியும்.
ஐயர்லாந்திலே ஓர் அல்ஸ்டர் ஏற்படுவதற்குள்ள காரணங்களைவிட
ஆயிர மடங்கு அரிய பெரிய, சரித ஆதாரமுள்ள காரணங்கள், பாகிஸ்தான்,
திராவிடநாடு பிரிவினைக்கு உண்டு. மே.த. வைசிராய் பூகோள
போதனையை மறந்து சரிதத்தைச் சான்றுக் கழைக்க வேண்டும்.
காளைமாடுகளுக்குப் பண்ணை வேண்டுமென்பதை, பிரபு மறுக்க
மாட்டார். கஷ்டமனுபவிக்கும், 10 கோடி மக்களுக்குச் சுதந்திரமாக
வாழச் சொந்த அரசில் வாழ உரிமை உண்டு, நாலு கோடி “நாடாண்ட
இனம்” தன்னரசுபெற உரிமை உண்டு. உரிமப்போர், உபதேசத்தினால்,
மங்கிவிடாது.
27.12.1942