“இராமயாணம், புண்யகதை என்பதற்காகப்
படிக்க வேண்டியதில்லை, அதிலே உள்ள கதை அழகு, காவியஇரசம்,
கலை அருமை ஆகியவற்றுக்காகப் படியுங்கள். இராமனைத் தெய்வமென்று
எண்ணிக்கொண்டு, பூஜைநூலாக இராமயாணத்தைக் கொள்ளவேண்டியதில்லை.
கலாபெட்டகமாகக் கொள்க!” என்று நம்நாட்டுக் கலாவாணர்கள்
கூறுகின்றனர் - வாதாடுகின்றனர் - பாடுபடுகின்றனர்.
“இராமாயணம்” நம்பமுடியாத கதை. அதிலே கதாபாத்திரங்களாகச்
சித்தரிக்கப்பட்ட வர்களின் குணங்கள், அர்த்தமற்றதாக உள்ளன.
ஆரிய தர்மத்தைப் பரப்பவந்த நூல் அது. ஆரிய ஆதிக்கம் ஒழிய
வேண்டுமானால், அந்த ஏடுகளைக் கண்டிக்கும் அறிகுறியாக,
அதனைத் தீயிலிடவேண்டும்” என்று நாம் கூறுகிறோம்.
“அட, பாவிகளே! இராமாயணம் புண்யகதை அல்லவா? அதனையா குறைகூறுவது!
இராமனுடைய திருக்கல்யாண குணங்களைக் காட்டும் அந்தக் கதையையா
குறைகூறுகிறாய்? மகாபாபம் சம்பவிக்குமே!” என்று வைதீக
அன்பர்கள் நம்மைக் கண்டிக்கின்றனர்.
காந்தியார், சென்னையில் “இராமாயணக் கதையைப் படித்தால்,
நமக்கு இராமனுயை செயலைப்பற்றிப் பல சந்தேகங்கள் உண்டாகும்.
ஊதாரணமாகச் சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பலாமா என்பன
போன்ற சந்தேகங்கள் வரும். ஆகையால், கதைகளை விட்டுவிட்டு,
இராமநாத்தை மட்டும் பூஜிக்க வேண்டும். “கதையை நீக்கிவிட்டு,
இராமனை மட்டும் எடுத்தக் கொள்ளவும்” என்று கூறினார்.
அதாவது, இராமயணக் கதையில் கருத்துக்கு ஒவ்வாத, பகுத்தறிவுக்குப்
பொருந்தாத பலவிஷயங்கள் உள்ளன. ஆகையால், அந்தக் கதையைக்
கவனிக்க வேண்யடிதில்லை, என்று காந்தியார் கருதுகிறார்.
நாம், அத்தகைய நூலைக் கண்டிக்கிறோம் என்பதன் அறிகுறியாக
அதனைத் தீயிலிடுக என்கிறோம். காந்தியார், அந்தக் காரியத்தையே
வேறு வகையில் செய்கிறார். நாம் அந்தக் கதையைக் கண்டிக்கிறோம்,
அவர் அந்தக் கதையைத் தள்ளிவிடச் சொல்கிறார்.
இதிலே இன்னொரு வேடிக்கை! கலாவாணர் சொல்கேட்டால், இராமாயணம்
வேண்டும், இராமனைத் தெய்வமெனக் கொள்ள வேண்டிய தில்லை.
காந்தியார் கூறுவது கேட்டால், இராமன் வேண்டும், இராமாயணம்
வேண்டியதில்லை. கலாவாணர் இராமனைக் கைவிடுகிறார்கள், காந்தியார்
இராமாயணத்தைக் கைவிடுகிறார்! நாமோ, இராமாயணமும் வேண்டாம்,
இராம நாம பாராயணமும் வேண்டாம் என்கிறோம்.
இராமாயணத்தை இங்ஙனம் அலட்சியப் படுத்தி, அந்தக் கதையைப்படிக்க
வேண்டியதில்லை, படித்தால் பலசந்தேகங்கள் பிறக்கும் என்று
காந்தியார் கூறுகிறார், பண்டிதரும், பாவாணரும் கலாரசிகரும்,
காவியப்பிரியவரும், காந்தியாரின் வார்த்தையை மறுக்கும்
துணிவு பெறாது உள்ளனர்.
இதுகண்டு, “வீரன்”, காந்தியாரின் கருத்து, கலாவாணர் நிலைமை,
திராவிடரின் தீர்ப்பு என்பனவற்றைச் செய்யுள் வடிவிலே தொகுத்தனுப்
பினான். செய்யுள், எந்த வகையிற் சேருமோ நாமறியோம். செய்யுள்
அமைப்பைச் செப்பனிடக் கூடியவர்கள் செய்து கொள்ளட்டும்,
நாம் கருத்து விளங்கட்டும் என்று கருதிக் கவிதையை வெளியிடுகிறோம்.
வேதமொழியினரின் பேதவழி அதனைத்
“தீதெனவே இயம்பும் தென்னவர்க்கு,
காதளவேயாகும் கருத்தென்னும் கொள்கையினால்
காந்தி, மகரிஷியாய்க் காணவே வந்துசேர்ந்து
கதைஃதினார் மன்றுள் கண்ட பாதிமதியனரைநம்பி
காடுபுகுவான் இராமன், கர்ப்பிணியைக் கைவிடுவான்!
நாடு பிடித்திடுவான் நம்பியை நமனாக்கி!
வெம்பிய கனியினையும் விருந்தென்றே விளம்பிடுவான்
அரும்புமே பலஐயம், ஆக்கதையில் சிக்கல்பல.
ஆகையால் வால்மீகி, அருளும் நூலதனைத்
தாவியே படித்து வோதீர் இராமனிடம்,
ஆவி ஆணையான் இராமன், அவன்கதையோ நாம் வேண்டோம்
கூவி அழைத்திடுவோம் குளிர்நாமம்!
இம்முறையில் இறங்கிடுவீர் இராமன் அருள் பெறுவீர்
இன்னுமுள தெய்வங்கள் எல்லாம் சரிசமமே
பொன்னுலகு புகுவதற்குப் போடுவீர் தாளமதை
கன்னல் மொழிக்கீதம் இதுகேட்டு.
காந்தியார் ஊரைசெய்த கவின்முறை இதுவாமே
காலமுழுதும் படித்துக் கலையின் இரசம்குடித்த
கவிவாணர்களே! கேண்மின்!
ஏரி என்றோம் ஏங்கிநின்றீர்
எரியிட்டார், கரியிட்டார், என்செய்தீரே!
கதைகூறக் கருத்தினிலே கறைஏறும்
கண்டறிந்த காந்தியார் கழறுவது ஆஅதன்றோ?
என்செய்வீர்? ஐந்தல் எதிர்மொழியும் கேட்பாரோ
என்னாகும் உம்கதைகள் இனியும்?
இராமாயண மதனைப் பாராயணமே செய்யும்
ஜோரான பண்டிதர்காள்! செய்யுட் புலிகாள்!
சித்திரமே வரையும் சீரளமைச் சிங்கங்காள்!
சேதுக்காள்! சிதம்பரங்காள்! சிந்துங்கால்
செந்நீர தாமோ உங்கள் கண்ணீர்!!
தொட்டாலும் துயர்நீக்கும்
மேல்பட்டாலும் பவம்போக்கும்
கொட்டாவி விட்டேனும் கூறும்கதை கேட்பின்
பட்டாபிராமன் பாலிப்பான் அருள்என்றீர்!
கட்டாவிடில் கடையை காந்திஊரை மறுப்பீர்
மட்டமானதோ உங்கள் மதியும்
இராமனே போதும்அவன் ஆயணமும் வேண்டாம்
ஐயமே பிறந்துநம்மை ஆலைக்கழிக்குமே அதனால்
செய்யவேண்டுவது ஜே! ஜே! என்றே கூவி
ஐயனை அழைத்திடலே அழகென்றார் அண்ணல்
பொய்யுமே யானதேஉம் போர்த்திறமும் ஆத்திரமும்
கையுமே போயினதே சிரமேல்!
தீயிடுதல் அன்றோ? ஆச்சொல் தித்திக்குதோ?
நன்றோ?
வாயிடு தனûயும் உண்டோ? வழிஉண்டோ? வகையும் உண்டோ?
காதிடுவதற் குதவாக் கதைஎன்றுமே யன்றோ
காந்தியார் கழறிநின்றார், காதுமே உண்டேகொண்டும்
கழலடி தொழுவோராகி விழலிடை நீருமானீர்
வியப்பிது அன்றோ! வேறும் உண்டோ?
இராமன் ஒருதேவனென்று ஏன்கொண்டு வாதிடுறீர்?
இரசித்திடு நல்கதைஎன்றே ஏற்றிடுவீர் நாட்டினரே!
பாட்டுமொழிச் சுவை அதிகம், பண்புமிகு
கலைஉயர்வு
நாற்றமுள நறும்பூங்கா, நண்ணுவீர் இனிதே என்றீர்!
பூங்காவில் பாம்புண்டு புகவேண்டமாம் இங்கதனுள்
பாங்காக அவன்நாமம் பூஜித்திடலே பண்பென்றார்
எங்காணும்! எவர் உறையின் வழிநிற்பீர்?
எவருரையில் இதம் காண்பர்?
எதுக்கோ இந்த ஏறுமாறும்!
தூங்காத தமிழர்சிலர் தூண்டியே விட்டதனால்
தொடர்ந்தே காணும், தூயபகுத் தறிவொளியும்
தூரமே தெரிந்துவிட, துதிபாடகரும்
தூவி யெதென்றார் பதரை ஒருவாவியும் இல்லா வயலில்!
சாவியே ஆகுமென்று, சாற்று!!
குறிப்பு :
நம்பியை நமனாக்கி = விபீஷணனை இராவணனுக்கு விரோதியாக்கி
வெம்பியகனி = அகலிகை
விருந்தாம் என்றார் = கௌதமர் (அகலிகையை) ஏற்றுக்கொள்ள
வேண்டுமென்று கூறினார்.
பாதிமதியினர் = அரைகுறை அறிவுள்ளவர்கள்.
(திராவிட நாடு - 17.2.46)