புத்தகசாலை குமாஸ்தாவாகா
வாழ்க்கையை ஆரம்பித்துப் புகழ்பெற்ற உன்னதப் பதவியை அடைந்துள்ள
ஸீனர் டி. காஸ்பேரி இத்தாலியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களின்
விளைவாக, வாரம் ஒன்பது பவுன் சம்பளம் பெறும் பிரதம மந்திரியாக
நியமிக்கப்பட்டார்.
ஸீனர் டி. காஸ்பேரி பிரம்மாண்டமான வாடிகன் புத்தகசாலையில்
புத்தகவிபர ஜாபிதா தயாரிப்பு வேலையைச் செய்து தமது ஜீவனத்தை
நடத்திவந்தார். அந்த வேலை முடிந்தபிறகும் இவர் பரம ஏழையாகவே
இருந்தார். 1944இல் இத்தாலி சரணடைந்த பிறகு அமைக்கப்பட்ட
போனோமி மந்திரி சபையில் வெளிநாட்டு மந்திரியாக நியமிக்கப்பட்ட
போது, நீலநிற உடுப்பு ஒன்று வாங்கிக் கொள்வதற்குத் தமக்குக்
கொஞ்சம் முன் பணம் வேண்டுமென்று கேட்டதுதான் இவரது முதல்
வேண்டுகோளாயிருந்தது. கண்ணியமாக அணிந்துகொள்ளக்கூடிய
உடுப்பு ஒன்றுகூட ஆவரிடம் அப்பொழுது இல்லை.
இத்தாலிய அரசியல் சர்வாதிகாரியாய் இருந்து வந்த முன்ஸோலினி
1926இல் இவரைக் கைது செய்தார். அதன் விளைவாக இரண்டு வருஷ
சிறைத் தண்டனையை இவர் அனுபவிக்க நேர்ந்தது. விடுதலையானதும்
இவர் வாடிகனுக்குப் போய்ச் சேர்ந்தார்.
மலைமீது ஏறுவதும், இலத்தின் காவியங்களிலிருந்து ஏதாவது
மேற்கோள்கள் சொல்லிப் பத்திரிகைகாரர்களைத் திணர அடிப்பதுமே
இவருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்குகள்.
(திராவிட நாடு 23.6.46)
குற்றவாளி - கூண்டில் இல்லை!
பொன்மலையில் இரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதாக
உள்ளனர்.
பல நகரசபைகளிலே, தோட்டி வேலை செய்பவர்கள் வேலைநிறுத்தம்
செய்கின்றனர்.
“சர்க்கார் சிப்பந்திகள்” வேலை நிறுத்தம் செய்யக் கிளம்புகின்றனர்.
அல்லலைக் தாங்க மாட்டாமல், பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலை
நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
பல ஆலைகளிலே இதே நிலை.
போக்குவரத்து ஸ்தாபனங்களிலே இதே நிலை.
கிராôதிகாரிகளின் குறைகளும் அவர்களை அதே நிலைக்குக் கொண்டுவந்து
விடுகிறது. வயலிலே பாடுபடும் உழவனும், கலப்பை மீது கண்ணீர்
சிந்திச் சிந்திப் பார்த்துவிட்டு, இதே நிலைக்கு வருகிறான்.
இத்தனை வேலை நிறுத்தங்களும் விளையாட்டுக்கும் பொழுது
போக்குமா நடத்தப் படுகின்றன!
“பசியுடன் பாடுபடும் தபால்காரன்” என்று பாட்ஜ் அணிந்து
கொண்டு தபால்காரர் சென்றனர்.
“குறைந்த சம்பளம் பெற்றுக் குமுறும் சர்க்கார் குமஸ்தாக்கள்”
என்று சர்க்கார் சிப்பந்தி பாட்ஜ் அணிகிறார். இவை, விளையாட்டா?
ஐழ்மையை மறைத்துக் காட்டவும் பசித்தாலும் எப்படி அதனை
இலஜ்ஜையின்றி வெளியே எடுத்துச் செல்வது என்று எண்ணி மறைத்தும்
தமது வறுமையைக் கூறி, ஏன் மற்றவர்களுக்குச் சங்கடத்தை
ஏற்படுத்தவேண்டும் என்ற பெருந்தன்மையுடனும் நடந்து வந்தவர்கள்
இன்று.
எங்கள் வாழ்வு குறை உடையது
போதுமான வருமானம் இல்லை.
பசியார உணவுக்கு வழி இல்லை
வறுமையால் வாடுகிறோம்.
என்று பகிரங்கமாகக் கூறுகிறார்கள். அவர்கள் எவ்வளவு குமுறிக்
குமுறியிருந்து விட்டுக் கூறத் தொடங்கினர் என்பதை எண்ணிப்
பார்க்கும் எவரும், அவர்களால்பால் பரிவு காட்டாமலிருக்க
முடியாது.
குறை கூறிக்கொண்டே இருந்தவர்கள், புதிதாக ஒருகுறை கூறினர்,
என்பது அல்ல இப்போது உள்ள நிலைமை.
எவ்வளவு குறைகளையும் தாங்கும் சக்தி பெற்றிருந்தவர்கள்,
அந்தத் தாங்கும் சக்தி போய்விட்டதால், வெட்கத்தை விட்டு
வெளியே சொல்லியாவது, நமது குறைகளைத் தீர்த்துக் கொள்ளலாம்
என்றல்லவா, முன்வந்துள்ளனர். இவர்கள் மீதா சீறிவிழுவது?
இவர்களின் நிலைமையை அறிந்து, பரிவு காட்டுபவர்களை எல்லாம்,
காங்கிரசின் எதிரிகள் என்று ஒரே, வாய்வீச்சினால் சாய்த்துவிடுவதா!
காங்கிரசின் எதிரியார்? படுகிற பாட்டுக்கு ஏற்ற அளவு பணம்
கேட்கிறர்வர்களை, சக்திக்கு ஏற்ற அளவு.
வேலைசெய்கிறோம் (சக்திக்கு மீறிய அளவுகூட) தேவைக்கு ற்ற
அளவு வசதிகள் தரவேண்டும் என்று கேட்கிறவர்களை ஆதரிப்பவர்கள்
அத்தனை பேரும், காங்கிரசின் எதிரிகள் என்றால், நாளாவட்டத்தில்,
மந்திரி சபை தவிர (பார்லிமெண்டரி காரியதரிசிகளைக் கூடச்
சேர்த்துச் சொல்ல முடியாது) மற்றவர்கள் அத்தனை பேரும்,
காங்கிரஸ் எதிரிகள் பட்டிக்குத்தான், போய்ச் சேரவேண்டி
நேரிடும், இது நியாயமுமல்ல, நல்லதுமல்ல!
இந்த மாகாணத்தில் 1,20,000 ஆசிரியர் உள்ளனர். இவர்களின்
60,000 ஆசிரியர்களுக்கு மேலாகவே, மாதம் 30 ரூபாய் சம்பளம்
பெறுகிறார்கள். 40,000 ஆசிரியர்கள் 31 ரூபாயிலிருந்து
50 ரூபா வரை சம்பளமாகவும் 2000 ஆசிரியர்கள் 100 ரூபாயும்
அதற்கு மேற்பட்ட தொகையும் பெறுகிறார்கள்.
இந்த நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு “நீங்கள் புனிதமான
தொழிலிலே உடுபட்டவர்கள், கேவலம் பணம் உங்கள் குறியாக
இருக்கக் கூடாது. புண்ணிய காரியம், பிள்ளைகளுக்குக் கண்திறப்பது.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும் என்று புகழ்மாலை சூட்டிவிடுகிறோம்.
புண்ணியகாரியத்திலே உடுபட்டுள்ள போதிலும் இவர்களுக்கும்
பசி தாகம் ஏற்படுகிறது! குடும்பப் பொறுப்பு இருக்கிறது!
ஆசிரியர்களிடம் தரப்படும் ரூபாய்க்கு ஆணா பதினாறுதான்
கிடைக்கும். இந்நிலையில் 30 ரூபாய் சம்பளம் பெற்றுக்கொண்டு,
எப்படி, 60,000 ஆசிரியர்கள் வாழ்வை நடத்த முடியும்? லோகல்
போர்டு பள்ளிக்கூட ஆசிரியர்களின் சம்பள விகிதம் 1934-இம்
வருஷம் ஏற்பட்டது. அதாவது ஆளவரிசி வரும் என்று மக்கள்
கனவுகூடக் கண்டிருக்கமுடியாத நாளில், கள்ளமார்க்கெட்,
கொள்ளை இலாபம், வங்கப் பஞ்சம், கோதுமைச் சத்தும் ஆவுன்சு
உணவும், என்ற சொற்கேளே நடமாடாத நாள்களிலே, போர்வாடைக்கு
முன்பு ஏற்பட்ட சம்பள முறை.
1934-1946! எவ்வளவு மாறுதல்! எத்தணைப் புதுப்பிரச்சினைகள்!
எவ்வளவு நெருக்கடிகள் வாழ்க்கைச் செலவு. இந்த 12 வருஷ
காலத்திலே எவ்வளவு உயர்ந்துவிட்டது. 1934ல் சம்பள விகிதம்
நிர்ணயித்தபோதே, “இது மிகக் குறைவு” என்றனர். 12 - ஆண்டுகளாக
இதே சம்பளம். விலைவாசிகள் விஷம்போல் ஏறின! சம்பளம், “கல்லுப்
பிள்ளையாராகவே” இருந்தது - இருக்கிறது. என்ன செய்வார்கள்
ஆசிரியர்கள்? இவர்களைக் கிளர்ச்சி செய்யும்படி யார் தூண்ட
வேண்டும்?
இங்கே மட்டுந்தானா ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்காகப் போரிடுகின்றனர்.
சென்னையை முந்திக் கொண்டது ஒக்கிய மாகாணம். அங்கு 40,000
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பத்துப் பதினைந்து நாள்கள்
வேலைநிறுத்தம் செய்து, பிறகு, குறைந்தது 25 ரூபாயாவது
சம்பளம் தரப்படும் என்ற வரம்பெற்றனர் காங்கிரஸ் மந்திரியிடம்.
இங்கே பிரதம மந்திரி பிரகாசம், ஊர்வலமாகச் சென்று தமக்கு
உற்ற குறையைக் கூறிய ஆசிரியர்களை, மனம் புண்படும்படிப்
பேசினார் என்று பத்திரிகைகளிலே பார்த்தோம், ஒக்கிய மாகாணக்
கல்வி மந்திரியும் ஆசிரியர்கள் மீது சீறித்தான் விழுந்தாராம்!
செகண்டரிகிரேட் ஆசிரியருக்கு, சர்க்கார் பள்ளிக்கூடமாக
இருந்தால் மாதம் 30 ரூபாய், போர்டு பள்ளிக்கூடமானால்
24, சரக்கார் உதவிபெற்று நடத்தப்படும் பள்ளிக்கூடமானால்
18.
ஹையர்கிரேட் ஆசிரியருக்கு சர்க்கார் பள்ளியில் 23, போர்டு
பள்ளியில் 20 சரக்கார் உதவிதரும் பள்ளிக்கூடம் 14 - ரூபாய்
தருகிறது! (இதிலே 100க்கு 15 ரூபாய் மானேஜ்மெண்ட் செலவுக்குப்
போய்விடும்)
இந்த நிலையிலே உள்ள ஆசிரியர்கள், ஊர் உலகம் அறியாதர்களல்லர்!
இவர்களû யார் கிளப்பிவிட வேண்டும்? அதிகவேலை, போதுமான
போஷாப்பு இல்லை! என்ன விளைவும் இதனால்? உடலைத் தேய்த்து
உயிரைத் தேயவைக்கும் இருமல்! ஓட்டிய உடல்! குழிவிழுந்த
கன்னம்! ஒளி இழந்த கண்கள்! கிழிந்த கோட்! வீட்டில் வேதனை!
வெளியே நடமாடும்போது வெட்கம்! வகுப்பில் உட்காரும்போது
அலுப்பு! அலுப்பினால் ஆத்திரம்! ஆத்திரத்தை ஓரளவுக்குக்
குறைத்துக்கொள்ள, கொஞ்சம் பிரம்பு வீச்சு! - இதுதான்
ஆசிரியர் நிலை - அறிவளிக்கும் பேருபகாரிய்ன பிழைப்பின்
இலட்சணம். கூனிக் குமுறிக்கொண்டு தள்ளாடி நடந்து பள்ளிக்குச்
செல்லும்போது, ஆசிரியர் பார்க்கிறார். போதையை மிரட்டும்
பூஜாரி தன்னைவிட நன்றாக வாழ்வதை! திதி நடத்தும் வாத்தியார்
திவ்யமாக வாழ்வதை இவரை, யார் கிளப்பிவிடவேண்டும்! ஒவ்வொர்
இருமலும் அவரைக் கிளப்பிவிடுகிறது - காங்கிரசின் எதிரிகளா
தூண்டவேண்டும்! இப்போது, ஆசிரியர்கள், இதழ்களில் பார்ப்பார்கள்.
சென்னை நகரத்தோட்டிகள், தினம் 2 ரூபாய் கூலிகேட்டு வேலை
நிறுத்தம் செய்கிற செய்தியை யார் தூண்டிவிட வேண்டும்!
1934க்கும் 1946க்கும் இடையே, வாழ்க்கைச் செலவு பலப்பல
மடங்கு அதிகரித்துவிட்டது என்று பொருளாதார நிபுணர்கள்
கூறுகிறார்கள். ஆசிரியர்களின் சம்பளமோ 1934ல் இருந்த
நிலைமையிலேதான்! இது நியாயமா? முறையா? கல்வியை வளர்க்கும்
வழியா? அறிவுக்கு அரணா?
1934ல் சர்க்கார் மக்களிடமிருந்து பெற்ற பணம் வரியாக,
14 கோடி. 1946ல் 48 கோடி ரூபாய் சர்க்காருக்கு மக்கள்
தருகின்றனர். ஆனால் ஆசிரியர்களுக்குச் சர்க்கார், அந்த
1934ல் போட்ட சம்பளமேதான் தருகிறார்கள். என்றால், ஆசிரியர்களைக்
கிளர்ச்சி செய்யும்படித் தூண்ட ஆள் வேறு வேண்டுமா என்று
கேட்கிறோம்.
யார், கிளர்ச்சி செய்தாலும், வேறு யாரோ தூண்டிவிடுகிறார்கள்
என்று சமாதானம் கூறுவது, நல்லதுமல்ல, நியாயமுமாகாது.
ஆலைத் தோழனா? இரயில்வே தொழிலாளியா? தபால் தோழரா? கிராமாதிகாரியா?
ஆசிரியரா? தோட்டிமார்களா? யாராக இருந்தாலும் சரி, இவர்களெல்லாம்.
யாராலோ கிளப்பி விடப்படுகிறார்கள். யாரோ தூண்டிவிடுகிறார்கள்.
என்று கூறுவது பொறுத்தமற்ற சொத்தை வாதம், மட்டுமல்ல,
முதலமைச்சர் (தம்மையும் அறியாமல்) நாடு பூராவிலும் பாட்டாளி
உலகெங்கும், காங்கிரஸ் எதிரிகள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்
என்று, கூறுவதாக முடியும்! பாட்டாளி உலகு, காங்கிரசல்லாதாரிடம்
இருக்குமானால் - பிரகாசம் மந்திரிசபையிலே இருள் நிச்சயம்
ஏற்படும்! தூண்டி விடுகிறார்கள். வேண்டுமென்றே கிளப்பி
விடுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம் வாதத்துக்காக
என்ன செய்ய வேண்டும் மந்திரியார்? தூற்றியவர்களைத் தூற்றிவிட்டால்
போதுமா? தூக்கிலிட்டு விட்டால் தொல்லை போய்விடுமா?
நாட்டு மக்களிடையே குமுறல் இருக்குமட்டும் வேலை நிறுத்தம்
நடந்தபடிதான் இருக்கும். பிரகாசம்காரு, தூண்டி விடுபவர்கள்
வெட்கத்தால் தலையைத் தொங்க விட்டுக் கொள்ளும்படி, தொழிலாளர்களின்
குறைகளைத் தீர்த்துவிட்டு, “யாராக இருந்தாலும் சரி, உங்கள்
சாமர்த்தியத்தை எல்லாம் காட்டுங்கள். எங்கே ஒரு தொழிலாளர்
தகறாரையாவது காட்டுங்கள் பார்க்கலாம்? உண்டாக்குங்கள்
பார்க்கலாம்! முடியாது! நீங்கள் தலைகீழாக நின்றாலும் அது
நடவாது. ஏன் ஆட்சியிலே பாட்டாளி உலகு பரிபூரணத் திருப்தியுடன்
வாழ்கிறது” என்று கூறுவதுதானே.
“சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டச் சர்க்கார் சகல
சக்தியையும் உபயோகிக்கும்” என்கிறார் முதலமைச்சார். பூ!
இதென்ன பிரதாபம்! சக்திகள் இருக்கும் இடத்திலே, யாரை உட்காரவைத்தாலும்
சொல்லலாம் அதுபோல செய்யவும் முயலலாம்! இதைச் சொல்ல,
செய்ய, போக்துரை போதுமே, காங்கிரஸ் மந்திரிசபை வேண்டாமே!
உண்மையிலேயே, தூண்டிவிட்டவர்கள், கிளப்பிவிட்டவர்கள் யார்
என்று அறிய முதலமைச்சர் ஆவாக்கொண்டால், நாம், அந்தக்
குற்றவாளிகளைக் காட்டத் தயாராக இருக்கிறோம். அவர்கள்
நெடுந்தூரத்திலும் இல்லை!
“இப்போதுள்ள காலமாறுதலின் பயனாக, விலைவாசிகள் ஏறிவிட்டன.
வாழ்க்கைச் செலவு அதிகமாகிவிட்டது. போருக்கு முன்பு 500
ரூபாய் சம்பாதித்துக் குடும்பம் நடத்தியவரால், அவர் தேசபக்தராக
தேசியவீரராக, இருந்தாலும் இப்போது குறைந்தது 3 மடங்கு
அதிகமாகப் பெற்றுதான், வாழ்க்கையை நடத்த முடியும்” என்று
காங்கிரஸ் தலைவர்கள், சட்டசபையிலே தெளிவாகக் கூறிவிட்டனர்.
மந்திரிமார்கள், காரியதரிசிகள் மெம்பர்கள் ஆகியோர் இந்த
“வாதத்தின்” துணைக்கொண்டு தத்தமது சம்பளத்தை அதிகப்படுத்திக்
கொண்டனர்.
சொல், செயல், இரண்டின் மூலமாகவும், “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்”
“தன்னலம் மறுத்தோர்” இந்த நாள்களிலே சம்பளம் உயர்த்தினால்
ஒழிய வாழ முடியாது என்பதை நாட்டுக்கு எடுத்துக் காட்டிவிட்டனர்.
“தூண்டுதல்” இதனைவிட வேறு வேண்டுமா? “உச்சி மீது வானிடந்து
வீழுகின்ற போதிலும்” அச்சமில்லாத அரும்பெரும் தலைவர்களே,
அரிசி ரூபாய்க்கு இரண்டுபடி தானே ஐயா! எப்படி, இந்தநாளில்
நாங்கள் வாழமுடியும், ஆகவே சம்பளத்தை உயர்த்திக் கொள்கிறோம்
என்று கூறிவிட்டனர். இவர்களே குற்றவாளிகள்! இதிலே நானுமல்லவா
இருக்கிறேன் என்று பிரகாசம்காரு கேட்பார். “ஆஹா! பந்தலுகாருவும்
இரக்கத்தான் செய்கிறார்!”
தாமாக முன்வந்து செய்திருக்க வேண்டியதைத் தொழிலாளர்,
தீயின் மத்தியில் நின்று கேட்டும் செய்ய மறுத்துப் பாட்டாளி
உலகின் நிலையைக் குலைக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறோம்.
தொல்லை பொறுக்க மாட்டாமல், பொமக்கள் சர்க்காரின் செவியில்
ஏழையின் அழுகுரல் விழும் என்ற நம்பிக்கையுடன் பாட்டாளிகள்
கிளர்ச்சி செய்வதை, யாரோ தூண்டிவிடுகிறார்கள், அவர்கள்
காங்கிரஸ் விரோதிகள் என்று கூறி, மக்களின் கருத்தைத்
தவறான பாதையிலேயே திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்
சாட்டுகிறோம்.
ஏழைகள் தலையில் 3512 இலட்ச ரூபாய் வரியாகவும், பணக்காரர்
மீது 548 இலட்சம் வரியும் ஏற்றும்படியான “பூர்ஷ÷வ” (முதலாளித்வ)
பட்ஜட் தயாரித்தனர் என்று குற்றம் சாட்டுகிறோம்.
எனவே கொந்தளிப்பும் குமுறலும், கிளர்ச்சியும் வேலை நிறுத்தமும்
அதன் விளைவுகளான வேதனைகளும், யாரோ கிளப்பிவிட்டதல்ல தூண்டிவிட்டதல்ல!
கிளப்பிவிடுவது, தூண்டிவிடுவது, என்ற வார்த்தைகளைத் தாராளமாகப்
பலர் உபதேசித்து விடுகின்றனர். குற்றச்சாட்டிலே ஒன்றாகக்
கருதவும்படுகிறது. தூண்டிவிடும் செயல்.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருப்பதால் ஏற்படும் கேடுகளையும்
அவமானத்தையும் அறிந்துகொள்ளாமல் இந்திய உபகண்டத்து மக்கள்
உணர்வற்றுக் கிடந்தபோது காங்கிரசானது, மக்களிடம் அன்னிய
ஆட்சியின் கேடுகள், அடிமைத் தனத்தால் வரும் இழிவுகள் ஆகியவற்றை
எடுத்துக்கூறி உணர்வு பிறக்கச்செய்து, அன்னிய ஆட்சியை
எதிர்க்கும் துணிவு உண்டாகச் செய்தது. அதற்காக அவர்களுக்கு
மக்கள் சிலைகள் அமைத்தனர். கவிகள் சிந்துபாடினர், கன்னியர்
இரத்தி எடுத்துனர். எழுத்தாளர் புகழோவியம் தீட்டினர்.
ஆனால் இந்தக் காரியமாற்றியவர்களைப் பிரிட்டிஷார் என்ன
கூறினார்?
தூண்டிவிடுகிறார்கள்! கிளப்பி விடுகிறார்கள்!! என்றுதான்.
ஐனோ, தங்கள் திருவாயிலிருந்தும் அதே சொற்கள் கிளம்பிவிட்டன
என்று முதலமைச்சரைக் கேட்க விரும்புகிறோம்.
தூண்டிவிடுகிறார்கள்!
கிளப்பிவிடுகிறார்கள்!
ஆம்! இவை, பழைய சொற்கள்! மிகமிகப் பழைய வார்ததைக்ள, மாளிகையிலே
இருந்துவந்த மமதை நிறைந்த மன்னன் மனோகரியின் இதழிலே மதுகண்ட
சீமான், உலகிலே ஏமாந்தவர்கள் எங்கெங்கு உண்டு என்று புள்ளி
விவரக் கணக்கெடுத்துச் சளைக்காமல் சுரண்டும் ஏகாதி பத்தியக்
காவலர். இவ்வளவு பேர்வழிகளும் இந்த இரண்டே சொற்களை உபயோகித்தனர்.
தூண்டிவிடுகின்றனர்! கிளப்பிவிடுகிறார்கள்! என்றே அவர்களும்
கூறினர். தாங்களும் கூறினீர்! ஐனோ?
வேலை நிறுத்தத்தைக் கிளப்பி விடுபவர்களைக் காங்கிரசின்
எதிரிகள் என்கிறார் பிரகாசம். யார், கிளப்பி விடுகிறார்கள்?
தொழிலாளி வீட்டிலே உள்ள
உடைந்த பாண்டம்
அவன் குடி இருக்கும்
ஓட்டைக் கூறையுள்ள குடில்
அவன் உடலை மூடிக்கிடக்கும்
கந்தல் சட்டை
அவனுடைய
நோயாளி மனைவி
அவனுடைய
தேய்ந்துபோகும் குழந்தைகள்
தொழிலாளர்கள், குறைந்த சம்பளம் பெறும் அதிகாரிகள் ஆகியோருக்கு
வேலைநிறுத்தம் விளையாட்டுமல்ல, வீம்புமல்ல. வேதனை தாங்கமுடியாத
வேதனை. அவர்களை இந்நிலையில் இருக்கச்செய்து விட்டுப் பொதுமக்கள்
சர்க்கார் என்ற புகழுரையையும் ஓட்டவைத்துக் கொண்டு, கிளர்ச்சி
செய்தால் ஒடுக்கிவிடுவோம் என்று கூறுவது குடியரசுக் கோட்பாட்டையே
உதறித் தள்ளும் குற்றமாகும்! ஆனால் அந்தக் குற்றவாளிகள்
- கூண்டில் இல்லை. பவனி வருகிறார்கள், மற்றவர்களைத் தூற்ற!
(திராவிடநாடு - 18.8.46)