நாகர்கோவில் தோழர் கன்னையாவின்,
மரண தண்டனை, மலேய சுல்தானால் ரத்துசெய்யப்பட்ட செய்தி
அறிந்த மகிழ்கிறோம். தோட்டத் தொழிலாளியாக மலேயக் காடுகளில்
துயரமனுபவிக்கும் அவரைப் பயங்கராவதியெனப் பட்டம் சூட்டி,
மலேய சர்க்கார் கைது செய்ததையும், பிறகு தூக்கு தண்டனை
தரப்பட்டதையும், இக்கொடுமையை எதிர்த்து இங்குள்ள முற்போக்கு
சக்திகள் கண்டனக் குரல் எழுப்பியதையும் நாடு அறியும்.
இவருடைய மரணதண்டனை ரத்து செய்யப்படவேண்டுமென நமது மாநில
மாநாட்டிலும் தீர்மான மூலம் கோரினோம். நமது ஆசை நிறைவேறியதற்காக
மகிழும் இந்த நேரத்தில், மலேய சர்க்காரின் மற்றொரு போக்கைக்
காண வருந்துகிறோம். தூக்குத் தண்டனையிலிருந்து தோழரை,
ஐந்து வருட சிறைவாசத்துக்கு அனுப்பியுள்ளனர் – விடுதலை
செய்யவில்லை. இந்த அடக்குமுறையை எதிர்த்து, கன்னையாவுக்குப்
பூரண விடுதலை வாங்கித் தருவதற்கான முயற்சிகளை இந்திய சர்க்கார்
மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
திராவிட
நாடு – 2-3-52