வேட்டையாடிக் களைத்து வீடு திரும்பும் மன்னன் ஒருவன்,
ஏதோ சத்தம் கேட்டுப்பக்கத்திலிருந்த மந்திரியைப் பார்த்துப்
பேசுகிறான்.
மந்திரி! என்ன சத்தம் அது?
மன்னவா! இந்த நிர்மானுஷ்யமான காட்டிலே, மிருகங்களின் கூச்சலன்றி
வேறென்ன இருக்கும்.
யூகம் வேண்டாம், உற்றுக்கேள். அதோ, ஆஹோ! பக்தர்கள்,
சிவனடியார்கள், அரகரா, அரகரா, என்று பூஜிக்கிறார்களே,
உன், செவியிலே அது கேட்கவில்லையா?
ஓடாதீர் அரசே! சிவனடியார்கள் இங்கு ஏன் வரப் போகிறார்கள்.
மன்னன், ஒரு குளத்தங்கரையை அடைந்து, சாஷ்டாங்கமாக விழுந்து
வணங்குகிறார். மந்திரி, ஆச்சரியத்துடன், அரசனின் செயலைப்
பார்க்கிறார். குளத்திலே ஏராளமான தவளைகள் கத்திக் கொண்டிருக்கின்றன.
(நீர் வழியுங் கண்களுடன் மன்னன் மந்திரியை நோக்கி,) “மந்திரி!
கேட்டாயா கீதத்தை! சிவ சிவா, சிவசிவா என்று இந்தப் பக்தர்கள்
பாடுவதைக் கேள் - என்று கூறிட, மந்திரி, “அரசே, கரகரவென்று
தவளைகள் கத்துகின்றனவே, அந்தச்சத்தம் தங்கள் செவியிலே
சிவ சிவ என்று கேட்கிறது போலும் என்று கூறுகிறார். அரசரோ,
இரு கை கூப்பித் தொழுதவண்ணம், சிவ நாமத்தை உச்சரிக்கும்
இச்சீலர்களை இதுவரை கவனியாதிருந்தது மகா பாவம். மந்திரி!
பொன்கொண்டு வந்து இக்குளத்திலே கொட்டு, சிவனடியார்கள்
எடுத்துக்கொள்ளட்டும். நீரிலே உள்ளனரே, பக்தர்கள்; குளிர்
தாக்குமே! பட்டுப் பீதாம்பரங்களைக் கொண்டு வந்து வீசு,
சிவனடியார்கள் அணியட்டும் என்று உத்தரவிட, மந்திரி, ஐயோ!
குளத்திலே வரட்டுக் கூச்சலிடும் தவளைகளை, மன்னன் இப்படித்
தவறாகக் கருதினானே. இவன் செவி இருந்தவாறென்னே! இவன் மதிசூன்யமாயிற்றே”
என்று எண்ணி ஏங்குகிறான். மன்னனோ, அந்தக் காட்டுக் குளத்திலே
கத்திடும் தவளைகளின் சத்தத்தைச் சிவ பஜனைச் சத்தமென்றே
எண்ணுகிறான் - அவன் செவியிற் சுவை கண்ட சீலன்!! என்று
போற்றும் திருக்கூட்டம் ஒன்று இன்றுமிருக் கிறது. அர்த்தமற்ற
சத்தம், அக்கூட்டத்துக்கு ஆனந்தமூட்டும். தவளை கத்தியது
சிவ நாமமாக ஓர் மன்னனின் செவிக்குச் சுவை தந்ததாமே, அது
போல, எவ்வளவு ஆபாசமான கதையாக இருப்பினும், அறிவுக்குப்
பொருந்தாத விஷயமாக இருப்பினும் சீர் கண்டு சொக்கி, அணிகண்டு
அகமகிழ்ந்து, உவமை கண்டு உளம் பூரித்து, என்ன சுவை! எவ்வளவு
இனிமை! என்று கூறிக் கூத்தாடுவர். அம்மட்டோ! அவர் கேட்டு
மகிழ்வது போலப் பிறரும் கேட்டு மகிழவில்லையே என்றும்
சோகிப்பர். சோதிப்பதுடன் நிற்பரோ! இல்லை! இரு கை தூக்கி,
இமயவனைத் தொழுது “செவியிற் சுவையுணரா மாக்களைப் பொசுக்குமே
என்று வேண்டுவர். என் செய்வது? யாராருக்கு எவ்வெக்கருத்து
இனிக்கிறதோ அவர்களுக்கு, அக்கருத்தினுக்கேற்ற ஒலி இனிமை
பயக்கும். மற்றவருக்கோ அது தலைவலியாகத்தானே இருக்கும்.
மன்னன் “பிறைசூடியிடம்” பித்தம் கொண்டவன், ஆகவே அவனுக்குக்
காட்டிலே தவளைகள் கத்திய சத்தம் செவிக்குச் சுவை ஊட்டிற்று.
ஆனால் அவன் செயல் தகையால் மதி மங்கிய மன்னன் செயலால்,
என்ன பலன் உண்டாக முடியும்! சிவனிடம் பக்தி பூண்டு, சிவனடியாரிடம்
அன்பு கொண்டவனாக இருப்பது, தவளையின் குரலைச் சிவநாமா
பஜனை என்று எண்ணுமாறு செய்ததென்றால், அதனைப் பித்தம் -
போதை - மனமயக்கம், அறிவுச் சூறை என்று கூறுதல் தவறா?
செவிச்சுவை இல்லாத மாக்கள்மீது செந்தமிழ்ப் புலவர் சீறுகின்றனராம்,
கத்துவது தவளை என்று கண்டு கூறிய மந்திரி மீது மன்னன்
வெகுண்டதுபோல.
தஞ்சைக் கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலே சின்னாட்களுக்கு
முன்னர் விரிவுரையாளர் சிலர் கூடினராம், ஏடு பற்றிப் பேசினராம்,
பழம்பாடலில் உள்ள சுவையினை எடுத்தோதினராம், பின்னர் பரிதாபங்கலந்த
குரலுடன் கூறினராம், ‘பண்டை நூற்களிலுள்ள சுவையினை உணராச்
செவி படைத்த மாக்கள் சிலர், கம்ப இராமாயணத்தையும், பெரிய
புராணத்தையும் தீயிலிட எண்ணு கின்றனரே” என்று. மலர்ந்தது
இது! ஆனால் மனதிலே அம்மொழியழகினர் மகேஸ்வரனைத் துதித்திருக்கக்கூடும்,
செவியிற் சுவையுணராமாக்களைச் சுட்டெறியும் என்று. கைலைக்கு
அவர்கள் குரல் எட்டிற்றோ இல்லையோ நானறியேன். எட்டினாலும்,
அவர் குரல் கேட்டு விஷயமுணரும் நிலையிலே சிவனார் இருக்கிறாரோ
இல்லையோ, தெரியாது. நந்தி மிருதங்கம் கொட்ட, நாரதர்
தம்பூரு மீட்ட பார்வதி பாட, அவர் ஆனந்தத் தாண்டவமாடிக்
கொண் டிருந்தால் இந்த அருந்தமிழ் பயின்ற புலவரின் புலம்பல்,
செவி புகுவதற்கு முடியாதல்லவா! நர்த்தனவேளையாக இராமல்,
நாயகி யுடன் லீலை புரியும் நேரமாக இருந்தாலும், புலவரின்
பொன்மொழி அவர் செவி புகாது, அதிலும் அவர் ஆயிரம் (தேவ)
ஆண்டு அன்ன ஆகாரமின்றி பார்வதியுடன் கலவிச்சுகத்திலே ஈடுபட்ட
பக்காப் பேர்வழி! (ஈரோட்டுப் பாவிகள் கருட்டிய புனைச்
சுருட்டல்ல இக்கதை. புராணப் புலவர்களின் ஆபரணம்.)
கைலைவிஷயங் கிடக்கட்டும், கரந்தைப்புலவர்கள், செவியிற்
சுவையுணராமாக்கள் என்று செந்தமிழ் நயத்துடன், நொந்த உள்ளத்திலிருந்து
எடுத்துவீசிய இச்சொல்லம்பு, சுயமரியாதைக்காரர் மீது ஏவப்பட்டது
என்பதை நான் சொல்லவேண்டுமா! அவர்கள் தானே ஆரிய ஏடுகளைத்
தீயிலிட வேண்டுமென்று கூறுகின்றனர். அவர்களுக்கு, மேற்படி
நூற்களிலுமுள்ள சுவையை உணர முடியவில்லை. அவர்கள் மக்களல்ல,
மாக்கள் - என்பது அத்தக்கோரின் தீர்ப்பு. நமது மறுப்பு
அவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும், என்ன செய்வது,
இப்படியும் சில பிறப்பு! என்று ஒருவரையொருவர் எண்ணிக்கொள்வதோடு,
ஒருவரப்பு இருக்கட்டும் என்பது என் விருப்பு. பிறகு அவர்களின்
அறிவின் விரிப்பு விடும் இடமெங்கும் அவர்கள் உலவட்டும்,
நான் தடுக்க முடியாது.
சுவையுணரா மாக்களாகிய சுயமரியாதை கேட்பது, இதுதான், “ஐயன்மீர்!
சுவை சுவை, என்ற சுருதி பாடுகிறீரே சொற்சுவையா, பொருட்சுவையா
நீவிர் குறிப்பது எதனை கவிதையழகையா? கருத்தழகையா, அணியழகையா,
ஆண்டவனைப் பற்றி ஏடுகளிலே காணப்படும் கொள்கையழகையா? எதனைச்
சுவை என்று கூறி, இதனை இம்மாக்கள் உணர வில்லையே என்று
மாரடித்துக் கொள்கிறீர்.
கெஞ்சுகின்றேன் அஞ்சுகமே
பஞ்சபாணம் மிஞ்சுவதால்
தஞ்சமென வந்தேன்
பஞ்சணையில் கொஞ்சிடவே
வஞ்சியே வந்திடுவாய்
என்று அவர் பாடினார், நான் அதிலே இலயித்துப்போனேன். அவர்
தொட்டார், நான் துவண்டேன், அவர் இழுத்தார் நான் சுருண்டேன்,
என்று காமச்சேட்டையாடிய ஒருவனுடைய, கவிச்சுவையால் தன்
கற்பை இழந்ததாகக் கூறினால், அந்த மங்கை நல்லாளின் தமிழ்ப்பற்றை
என்னென்பது! செவிச்சுவைச் செல்வி வாழ்க!” என்று போற்றுவீரா!
செவிச்சுவைபற்றிக் கவலையற்று “ஏடா, மூடா! ஏதேதோ உளறுகிறாய்
போடா” என்று காமக் கூத்தனைக் கடிந்துரைத்து ஒருவள் துரத்தினால்,
சீச்சீ! செவிச்சுவையுணரா மாக்கள் கூட்டத்தினளாகவன்றோ
அவள் இருக்கிறாள்” என்று ஏசுவீரோ, கூறீர். அறிவை ஆரியத்துக்கு
இறையாக்கும் காரியத்துக்குப் பயன்படும் கவி, காவியம்,
கலை, சுவையுடைத்து என்று எமது செவியும் சிந்தனையும் ஏற்க
மறுக்கிறது. விவேகமெனும் மாதை வேதியக் கூட்டத்துக்கு விபசாரக்
கருவியாக்கிடும் வெண்பா, எமது செவிக்கு வேம்பாகத்தான்
இருக்கிறது. பார்ப்பனியத்தின் பாதந்தாங்கிகளாகப் பலரையுஞ்
செய்விக்கும் பதிகம், எமது செவிக்கு நாராசமாகத்தான் இருக்கிறது,
புலவரீர்! உமக்கு அவை சுவைதரலாம்; ஆனால் அவற்றிலே சுவை
காணா நாங்கள் மாக்களல்ல!
நர்த்தனமாடும் நாகத்தை நளின மாது என்று எண்ணி அருகே சென்றால்,
என்ன நேரிடும்? அதுபோலவே ஆரிய நச்சரவு கவிதை ரூபத்திலே
ஆடுகிறது, அந்த நச்சரவின் விஷப் பல் தீண்டியதால், உமக்கு
கண் மங்காவிட்டாலும் கருத்து மங்கிவிட்டதால், நாங்கள்,
மாக்களாகத் தென்படுகிறோம் போலும். புலியின் தோல் ஆசனத்துக்கு
உதவும், அதற்காக புலியை வீட்டிலே வளர்த்து, பூசை நேரத்திலே
அதன்மீது சவாரி செய்து கொண்டு சர்வேஸ்வரனைத் தியானம்
செய்ய யாரும் இசைய மாட்டார்கள். இசைந்தால், அவர்கள் இறைவனுடன்
உடனே இரண்டறக் கலப்பர்! அதுபோல், ஆரியமத போதனைக்காகப்
புனையப்பட்ட ஏடுகளிலுள்ள, கவிதை அழகு, தமிழ் வளர்ச்சிக்கு,
இலக்கியச் சுவை ஆக்கத்துக்குப் பயன்படும். அதற்காக, அந்த
ஏடுகளைப் போற்றிக் கண்களில் ஒத்திக்கொண்டு களிப்பது
தோல்வேண்டிப் புலி வளர்ப்போன் கதைபோல் முடியும்! புலியைக்
கொன்று தோலை ஆசனமாக்குவது போல, சுயமரியாதைக்காரர்களாகிய
நாங்கள், ஆரிய ஏடுகளைக் கொளுத்துவதன் மூலம், அதிலே புதைந்துள்ள
மூடக்கருத்துகளைக் க¬விடுமாறு வலியுறுத்துகிறோம். எமது
செயலின் விளைவாக, அந்த ஆரிய நச்சுக் கொள்கை அழிந்தொழிந்திடின்,
புலி செத்தபின் தோலை உபயோகிப்பது போல, நீங்கள் ஆரியம்
அழிக்கப்பட்ட பிறகு, ஏடுகளின் இலக்கண இலக்கிய எழிலை எடுத்துத்
தழுவிக் கொண்டு பூரித்து வாழுங்கள்; தடுப்பார் இல்லை
இதைக்கூறும் நாங்கள் மாக்களா என்ன துணிவய்யா, உங்கட்கு?
எங்களிடம் அகராதி கிடையாதென்று எண்ணியா, எம்மை மாக்களென்று
கூறுகிறீர்? நால்வரின் பாடல்கள் நர்த்தனமாட வேண்டிய நாவினருக்கே
கோபம், மாக்கள் என்ற கடுமொழியைத் தந்தது என்றால், நாங்கள்
எமது நாவுக்கு அன்பு காரணமாக போட்டு வைத்துள்ள தடையுத்தரவை
ரத்து செய்து விட்டால், நிச்சயமாகக் கூறுகிறேன், செவிச்சுவையுணரும்
செம்மல்களே! நீவிர் தேள்கொட்டிய மந்திரியாவீர். ஆனால்,
இந்த ‘மாக்கள்’ இன்னமும், உம்மைத் தோழராகவே கருதுவதால்,
சுடுசொல்லுரைக்கவில்லை. செய்யாதிருப்பது, முடியாததால்
அன்று; மனம் இல்லாததால்.
சுவை, சுவை என்று பேசுகிறார்கள் புலவர்கள்! கம்ப இரசம்
எவ்வளவு இனிமை தெரியுமா என்று கூறுகிறார்கள். வர்ணனைகள்
எவ்வளவு நேர்த்தி தெரியுமா என்று வாதாடுகிறார்கள். சரி!
ஒரு உயர்தரமான கவியிலே, இருக்கவேண்டியது, வெறும் காமச்சுவை
தானா, என்று கேட்கிறேன். கம்பன் கவிதைகளிலே, வரும் வர்ணனைகளை
விட, காமச்சரக்கு வேறு எங்காவது கிடைக்குமா! கம்பன், கதாபாத்திரங்களை
வர்ணித்திருப்பது, தங்கபஸ்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்
தடிதாங்கியின் படுக்கையறை அலங்காரத்துக்கு உபயோகமாகும்
பாரிஸ் நிர்வாண போட்டோவுடன் போட்டியிடுவதாக இருப்பதைப்
புலவர்கள் மறுக்க முடியுமா? ஒரு “தேவகதை” - “நீதிநெறி”
- பாடப்போந்த கம்பர், கதைப்பாத்திரங்களை வர்ணிக்கையில்,
அளவுக்கு மீறியது, இடக்கரடக்கல் எனும் நியதியை மறந்ததுமான,
காமச்சுவை மிகுந்த வார்த்தைகளை உபயோகிப்பது, அழகா? அதைப்
படிக்கும் உள்ளம் பாழகாதா? அவை “பக்தி”யை ஊட்டமுடியுமா,
அல்லது இச்சையை மூட்டுமா? என்பதை நடுநிலை நின்று கூறுமாறு
வேண்டுகிறோம். சீதை இலட்சுமியின் அவதாரமாம், சரி, அந்த
அம்மையை வர்ணிக்கையில், அருளொழுகும் கண்கள், அபயஸ்தம்,
பொன் உருக்குமேனி, பூங்கொடிச் சாயல், அன்ன நடை, கன்னல்
மொழி என்று வர்ணிக்கட்டும்; கலசக் கொங்கை முதல் அல்குலழகு
வரையிலுமா, அங்கம் அங்கமாக, கவியின் ஆசைதீர வர்ணிக்க வேண்டும்.
“வணக்கத்துக்குரிய மாதாவை” இப்படிச் சித்தரிப்பதுதான்,
செந்தமிழ் கற்றதனாலாய பயனா? இதைத்தானா, நமது புலவர்கள்
சுவை, சுவை, என்று கூறிக் கண்ணீர் சொட்டுகின்றனர். சோகமான
சம்பவத்தைப்பற்றி எழுதும்போதுங் கூட, மாதர் என்ற உடனே,
கம்பரின் கவிதை எவ்வளவு விறு விறுப்புடன், வேலை செய்கிறது
பாருங்கள்! துரொளபதி வஸ்திரா மரணந்தான்! இல்லையேல் கம்பருக்குத்
திருப்தி பிறப்பதே யில்லை. சர்வாங்க இலட்சண வர்ணனையிலே,
கம்பர் சளைக்கவேயில்லை. அந்தச் சுவை சுயமரியாதைக்காரருக்குக்
கவித்திறமை என்றும் தோன்றவில்லை, கடவுட் கொள்கையையும்.
இலட்சணமாகவும் அது இல்லை. மற்ற மதக்காரர்கள் ஆண்டவனுக்கு
உருவம் அமைத்து, குடும்பம் ஏற்படுத்தி வைத்து கும்பிடவில்லை
ஆண்டவனை உருவமாக்கிய சில மதத்தினரும் தமது கிரந்தங்களிலே
கம்பன்போல தமது ஆண்டவன், ஆண்டவனின் மனைவி, ஆகியோரை நிர்வாண
கோலமாக்கிக் காட்டும் வர்ணனைகளைத் தீட்டினதில்லை. காமச்
சேட்டைக்குரிய கருத்துகளைப் புகுத்தினாரில்லை, கடவுட்
கதையிலே மட்டுமன்று, உயர்தரமான இலக்கியத்திலே உத்தம புருஷர்கள்
மாது சிரோமணிகள் என்று கவிகள் தீட்டிடும் கதாபத்திரங்களைக்
கம்பன்போல நிர்வாணமாக்கிய கவி கிடையாது. உயர்தரமான ஆங்கில
இலக்கியத்திலே, ரெயினால்ட்ஸ் நாவல்களில் காணப்படும் காமச்சுவை
குழைந்து கிடக்கும் வர்ணனைகள் கிடையாது; ரெயினால்ட்ஸ்,
இலக்கியப் பட்டியிலே இடம் பெறவில்லை. சங்க நூற்களிலும்,
கம்பனின் காமரசத்துக்கு இணையான ரசத்தைக் காண முடியாது,
ஆனால், இங்குள்ள புலவர்கள். சங்க நூற்களை இழப்பினும் சகிப்போம்;
கம்பனை இழக்கமாட்டோம் என்று கூறுகின்றனர். தமிழகத்தின்
தாழ்ச்சிக்கு அதுவோர் எடுத்துக்காட்டு என்பேன்.
கொலம்பஸ், அமெரிக்காவைக் கண்டுபிடித்தான், வாஸ்கோடகாமா,
இந்தியாவைக் கண்டுபிடித்தான், கெலீலியோ பூதத்துவத்தை
விளக்கினான், டார்வின் மனித உற்பத்தி விளக்கங் கண்டுபிடித்தான்.
நியூடன் காந்த சக்தியையும், அதன் விளைவுகளையுங் கண்டறிந்தான்.
நீராவியந்திரம், தந்தி, டெலிபோன், கம்பியில்லாத் தந்தி,
நிழற்படம், பேசும் படம், வான ஊர்தி, வானொலி, கப்பல்,
கடலுள் செல்லும் கப்பல், காற்றில் மிதக்குங் கூடு என்று
எத்தனையோ அதியற்புதப் பொருள்களையும் கருத்துகளையுங்
கண்டு பிடித்த செய்திகளைக் கேட்டுச் செவிச்சுவையுணரும்
மக்கள், இந்தப் புண்ணிய பூமியிலன்று, வெளிநாடுகளிலே உள்ளனர்.
இங்கோ! கடலைத்தாண்டிய அனுமன் கதை, மூலிகைதேட நேரமின்றி
மலையையே பெயர்த்தெடுத்து வந்த மாருதி புராணம், எதிரியைக்
கொன்று, அவன் மார்பைத் தடவிப் பார்த்துவிட்டு, ஏழு கடல்களிலும்
ஸ்நானம் செய்து பிறகு அம்புறாத் தூணியிலே வந்து புகுந்து
கொள்ளும் பாணம், அலைகடலில் ஆலிலைமேல் அரிபள்ளி கொண்டிருக்கும்
கதை, ஆயிரந்தலை கொண்ட ஆதிசேஷன் அண்டச்சராசரங்களையும்
தாங்கும் கதை, முக்கண்ணன், ஆறுதலையோன், நாலுமுகத்தோன்,
நந்தி முகத்தோன், நாவிலே உறைபவள், நாட்டிய மாடுபவள்,
மார்பிலே மங்கை கொண்டோன், மதகரி வருவோன், என்ற இன்னோரன்ன
பிறகடவுட் கொள்கைகளும், ஆசிரமங்களிலே நடைபெற்ற விபசாரங்கள்,
அவற்றை வெளிப்படுத்திக் கலகமூட்டும் நாரதத் திருவிளையாடல்,
அதற்கு விமோசனம், அந்த நேரத்திலே அசரீரி, என்ற கதைகளும்,
கேட்டுக் கேட்டுச் சுவை உணரும் மக்கள் உள்ளனர். அவர்களின்
தீர்ப்புத்தான், பொய்யும் புனைசுருட்டும் போகப்புழுவும்
பார்ப்பனிய நச்சரவும் நெளியும் புராண இதிகாசங்களை நம்ப
மறுத்து, நெருப்பிலிடுக என்று கூறும் நம் தோழர்களை, செவிச்சுவை
உணராமாக்கள்” என்று கூறுவது. இது பகுத்தறிவு மன்றத்திலே
இடம் பெறக்கூடிய தீர்ப்பா என்று கேட்கிறேன். கெடுமதி புகட்டும்
ஏடுகளிலே சுவை காணும் நெடுஞ்செவியராக இருக்க நாங்கள் மறுக்கிறோம்.
எமது செவியிலே, ஆரியத்தால் தாக்குண்டு தவிக்கும் தமிழரின்
அழுகுரல் வைதிகத்தால் வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்ட தமிழரின்
வேதனைக்குரல், பரம்பரைத் தொழிலாளராக இருந்து பாடுபடும்
தமிழ் இனத்தின் பரிதாபக்குரல் கேட்கிறது! அது எமக்குச்
சுவையை ஊட்டவில்லை. எமது உள்ளம்பற்றி எரிகிறது. எமது கண்களிலே
தீப்பொறி கிளம்புகிறது. அந்தப் பொறி, நிச்சயமாக ஆரிய
ஆபாச ஏடுகளை எரித்தொழிக்கும்! விலகி நில்லுங்கள்! தூரச்
செல்லுங்கள்! தீ பரவுகிறது என்று எச்சரிக்கிறேன்! செவிச்சுவை
உணரச் சுவடி புரட்டும் அன்பர்கள், இந்த எச்சரிக்கைக் குரலைச்
செவி மடுக்கா திருப்பின், விளையக்கூடிய விபரீதத்துக்கு
நான் ஜவாப்தாரியன்று!
9.5.1943