அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


தேன்சுரக்கப் பேசி..!

எதிரியின் குதிரைப்படை கிளப்பிய தூசி, கோட்டையின் சுவரில் படியத் தொடங்கிற்று. கோட்டைக்குள்ளே இருந்த மன்னன், “கூப்பிடு மந்திரியை” என்று கூவினான். “மகராஜ்! மந்திரி, மகள் வீட்டுக்குப் போய்விட்டார்” என்றான் சேவகன். “சேனாதிபதி எங்கே?” என்று சீற்றத்துடன் கேட்டான் மன்னன். “மாமி வீட்டுக்குப் போயிருக்கிறார், மனைவி மக்களுடன்” என்று பயத்தோடு கூறினான் சேவகன். “துரோகிகளே! என் உடை வாளெங்கே! அதையேனும் கொடு இப்படி” என்று கர்ச்சித்தான் அரசன்.

“அரசே! துருப்பிடித்துப் போயிருந்தால், சாணைபிடிக்க அனுப்பினார் அரசியார்” என்று மெல்லிய குரலிற் கூறினான் சேவகன்.

“நீயாவது வா. இருவரும் போவோம் படைகளுடன்” என்று கூறிக்கொண்டே அரசன் எழுந்தான். “வரவிருப்பந்தான் வேந்தே! ஆனால் வயிற்று வலி பொறுக்கமுடியவில்லை. வைத்தியரிடம் போய் மருந்து சாப்பிட்டுவிட்டு, வந்துவிடுகிறேன் விநாடியில்” என்றான் சேவகன். தலைமீது கைவைத்தான் மன்னன்!

இதுகதை! எங்கே நடந்தது என்கிறீர்களா? எல்லாக் கதைகளும் நடந்ததுபோல், இதுவும் ஒரே ஒரு ஊரில் ஒரு இராசா இருந்தானாம், அவன் நாட்டின்மீது பக்கத்து ஊர் இராசா படை எடுத்தானாம் - என்ற கதைதான். கதை சொன்னது பொழுது போக்குக்காகவல்ல. கருத்து வேறே! கேளுங்கள் தோழர்களே, இந்த இராசாவின் கதை இருக்கும் விதத்தை ஏறக்குறைய ஒத்திருப்பதுபோல், சென்னையிலே சம்பவம் நடந்திருக்கிறது. அதைப்படித்ததும், இந்தக்கதை நினைவிற்கு வந்தது, உங்களிடம் சொன்னேன்.

சென்னை வட்டாரத்தில், யுத்த ஆதரவுப் பிரசாரத்துக்குக் கமிட்டிகள் உண்டு, தலைவர்கள் உண்டு, காரியதரிசிகள் உண்டு. பிரசாரம் செய்து, பீதியைத் தடுக்க, மக்களுக்கு உண்மை விளங்கச் செய்ய, மக்களை வீரர்களாக்க, படை பலத்தை எடுத்துக்கூறி பயங்கொள்ளித்தனத்தைப் போக்க, சென்னை மாகாண யுத்தப் பிரசாரக்கமிட்டி ஒன்றுண்டு. ஆனால்...! அதுதான் வேடிக்கை! எங்கே, அந்தப் பிரசாரக்,,,,,,,,,,,,,, நிர்வாகிகள் என்று, கதையிலே கூறப்பட்ட...................போல், யாரேனும் கேட்டால், இராசாவுக்குக் ....... கிடைத்த பதில்தான் கிடைத்து விடும்.

சென்னை மாகாண யுத்த ஆதரவுப் பிரசார சப் கமிட்டி எங்கே? சென்னையில் இல்லை! மதனப்பள்ளிக்கு மாற்றப்பட்டு விட்டது!! அந்தக் கமிட்டியின் தலைவர் எங்கே? தஞ்சாவூர் போய்விட்டார்! மேற்படி சப் கமிட்டியின் காரியதரிசி எங்கே? சேலம் சென்றுவிட்டார்.

சண்டைசெய்து, இரத்தம் சிந்தி, எதிரியின் படை எண்ணற்ற அளவுள்ளதாக இருக்கக்கண்டு, பின்வாங்கிய பிரிட்டிஷ் படைகளைக்கண்டு கேலிசெய்த “பெருங்குணவான்கள்,” குண்டுவிழாத சென்னையிலே, யுத்தப் பிரசார வீரர்கள், ஆளுக்கொரு மூலையாக, அவிழ்த்துவிட்ட அசுவங்கள் மிரண்டோடுவதுபோல், ஓடிவிட்டதைக்கேட்டு, என்ன சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன். இந்தத்தோழர்கள், ஆபத்தை வரவேற்க வேண்டும், குண்டுகளைச் செண்டுகளாகக் கொள்ளவேண்டும், என்று நான் கூறவில்லை. உயிர் விலை மதிக்க முடியாததுதான்! அதிலும் உல்லாசவாசிகளுக்கு, உயிர் வெல்லம்! எனவே அந்தத்தோழர்கள், வெளியூர் சென்று விட்டதற்காக அவர்கள் மீது வெகுண்டு வெடுக்கென்று கடிக்கவேண்டுமென்று நான் யாரையும் ஏவவில்லை. போகிற புண்ணியாத்துமாக்கள், சென்னையிலேயே தங்கியிருக்கும் வேறு சிலரிடம் மேற்படி “வேலைகளை,” “கடமை களை” ஒப்புவித்துவிட்டுப் போகக்கூடாதா? கிலி வேண்டாம்! பீதி அடையாதீர்! எதிரியைக்கண்டு மிரளவேண்டாம்! கோழைத்தனம் கூடாது! என்று பேசிவந்தவர்கள், பேசவேண்டியவர்கள், தங்கள் செயலால் செய்யும் பிரசாரம் எவ்வளவு மோசமாகிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா? எண்ணிப்பார்த்து, “எம்மால் முடியாது இந்த வேலை, இதோ ராசிநாமா” என்று கூறிவிட்டு, கண்ணியமாக, “கடவுள் புண்ணியத்தால், தலைதப்பிற்று” என்று கந்த கோட்டத்தானையோ, காமாட்சியையோ கும்பிட்டுவிட்டு, வெளியே போயிருக்கக் கூடாதா, என்றுதான் கேட்கிறேன். தோழர்களே! இத்தகையவர்கள் துரைமார் சர்க்காரிலே எப்படியோ இடம் பெற்றுவிடுகிறார்களே அதுதானே ஆச்சரியமாக இருக்கிறது. கடலிலே செல்ல கப்பல் இருக்கிறது, அதற்குக் குடைபிடிக்க விமானமில்லை, விமான மிருக்கிறது. ஆனால் விண்ணின் நிலை சரியாக இல்லை, காலநிலை சரியாக இருக்கிறது. ஆனால், கருத்து தெளிவாகவில்லை, என்று இராணுவத் துறையிலே ஏதேதோ கூறக் கேள்விப் படுகிறோமே, அதைவிட கேலிக்கூத்தாக வன்றோ, இந்த பிரசாரக் கமிட்டி பிடித்தது ஓட்டம் என்ற செய்தி இருக்கிறது.

யார்போனாலென்ன! எவர் ஓடினாலென்ன? மாஜி முதலமைச்சர், மாம்பலமாவீரர் இராசகோபாலாச்சாரியார் இருக்கிறார், என்ற மனஆறுதல் உண்டாயிற்று எனக்கு. பத்திரிகையிலே படித்தேன், சென்னை மேயர் நிறுவிய பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டத்தில் அவர் பேசினார் என்று இருந்தது. மகிழ்ச்சியோடு படிக்கலானேன். ஆச்சாரியார் அஞ்சா நெஞ்சர்தான்! என்று பூரித்தேன். சென்னைப்பாதுகாப்புக்காக அவர், கச்சையை வரிந்து கட்டுவார், தோள் தட்டுவார், துரைமார்கள் கண்டும் வெட்கும்படி, வேதியகுலத்து வேவலாக வெளிவருவார், என்று மனதிலே எண்ணங்கள் எழும்பின. இந்தி எதிர்ப்புக்காலத்திலே இலட்சக் கணக்கான தமிழர்களின் எதிர்ப்பு, ஆயிரக்கணக்கான பொதுக்கூட்ட பாணங்கள், நூற்றுக்கணக்கான மாநாட்டு வாள் வீச்சுகள், கண்ணையும் கருத்தையும் தாக்கிய கருப்புக் கொடிகள், ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் அழுத கண்ணீரெனும் கூர்வாள், தாலமுத்து நடராசனின் பிணங்கள், அவை கொளுத்திய போது கிளம்பிய சுடுநாற்றம், தாலமுத்துவின் மனைவி அறுத்தெறிந்த தாலி, ஆகிய எதர்க்கும் அஞ்சாது, விந்தியத்துக்கு மேலிருந்து குலுக்கி நடந்துவந்த இந்தி மங்கையைக்குலவி வாழ்ந்த நெஞ்சுறுதி, இந்த நெருக்கடியான நேரத்தில் நின்று உதவும் என்றுநான் எண்ணினேன். எனவே படித்தேன். படித்துமுடிந்ததும், என்னென்பேன் தோழர்களே, எனக்குமற்றோர் கதை வந்தது நினைவுக்கு.

மனைவிமீது மகா கோபங்கொண்ட ஒரு கணவன், வாய் வலிக்கத் திட்டிவிட்டு, வாருகோல் எடுத்து வாங்குவோம், அவள் முதுகில்என்று துடித்து, வாருகோல் தேடுகையில், வந்ததாம் ஒரு பாம்பு! குய்யோ முறையோவெனக் கூவினாள் மனைவி. குதித்தான் கணவன். “அடிமுட்டாளே! கூச்சலை இங்கே போடுகிறாயே தெருவுக்குப்போய் கூச்சலிட்டு யாராவது ஆடவர் போனால் அவசரமாக அழைத்துவா”, என்றானாம் கணவன்! அதுபோல், ஆச்சாரியார், ஜப்பானியராவது இங்கு வருவதாவது? வந்தால்தான் என்ன? அவர்கள் என்ன செய்துவிடமுடியும்? செய்யத் துணிந்தால்தான் என்ன நாம் வீரர்களல்லவா? நாம் திரண்டெழுந்து தடுப்போம், நொறுக்குவோம் அவர்களை” என்று வீர முழக்கம் செய்தார் மேயர் முன்னிலையில். ஒல்லியான இந்த உருவம், பந்திக்கு ஓடிடவும், படைகண்டால் பதுங்கிடவும் பஞ்சாங்கம் ஓதிடவுமே பயின்ற இனத்தவர், இவ்வளவு வீரமாகப் பேசக்கேட்டு, மேயரும், கமிட்டி அங்கத்தினர்களும், ஆச்சரியப்பட்டே இருந்திருப்பார்கள். என்னை அந்தப்பத்து வரிகள் தூக்கிவாரிப் போட்டன. ஆனால்......! அதுதானய்யா வேடிக்கை, கேளுங்கள், “கட்சிக் கட்டுதிட்டங்களின் காரணமாக நான் சென்னை நகர பாதுகாப்புப் பணியில் பங்கு கொள்ளமுடியாது. காங்கிரசல்லாத மற்றவர்களே! நீங்களேனும் சென்னை நகரைப் பாதுகாக்க முனையுங்கள்” என்று முடித்தார் முப்புரி நூலணிந்த முதியோர்! எப்படி அவர் வீரம்! பாம்புகண்ட கணவன், பார்த்துப் பிடித்துவா ஆண்பிள்ளையை என்று மனைவியைக் கட்டளை யிட்டானே அதற்கு, ஆச்சாரியாரின் “வீரம்” கொஞ்சமாவது குறைந் திருக்கிறதா கூறுங்கள். போரிட, நகரைப் பாதுகாக்க, ஆச்சாரியாருக்கு முடியவில்லை! காரணம், கட்சிக்கட்டுப்பாடாம்! அந்தக் கதையில்வரும் கணவன் கூடத்தான் கூறுவான், “பாம்பை அடிக்க எனக்கென்ன பயமா? இன்று அமாவாசை புண்ணியகாலம், பாம்பைக்கொன்றால், ஆதிசேஷனின் சாபம் பிறக்குமென்று அஞ்சினேன். சாபத்துக்கு அஞ்சினேனே யொழியே சர்ப்பத்துக்கு அஞ்சவில்லை. சாதாரண நாட்களில், சர்ப்பம் எனக்கொரு சருகு!” என்று கூறுவான் வாயாவலிக்கும்? கேட்டால் காதுதான் வலிக்குமா? இப்படி இருக்கிறது ஆச்சாரியாரின் அசகாய சூரத்தனம். கண்ணன் அவருக்குக் காட்டியவழி இதுதான் போலும், வேவல்களே! மாக் ஆர்தர்களே! ஆக்கின் லெக்குகளே! சியாங்கேஷேக்குகளே, ஸ்டாலின்களே, சற்றே விலகி நில்லுங்கள், வழிவிடுங்கள், எங்கள் “ராஜாஜி” வருகிறார், என்று காங்கிரஸ் தோழர்கள், கூறி வாழ்த்த இதுதான் சரியான தருணம். “இவ்வளவு வீரதீரவிற்பன்ன வேதியர் இங்கிருக்க, வேவல் இங்கு ஏன்” என்று வேலூர் வேட்டும், விருதைச் சிறுத்தையும், கோவைக் குதர்க்கமும், பேட்டை முதலியாரும், குமாரமங்கலப்பிரபுவும், கூறி, கொடிதாங்கி, கும்மிகொட்ட இதுதான் தக்க சமயம். இச்சமயம் தவறினால் மறுசமயம் வாய்ப்பதரிது! எடுங்கள் ஆரத்தி! விடுங்கள் வாணங்களை! வாத்தியங்கள் ஒலிக்கட்டும்! வந்தார் வீரர்!!

ஆச்சாரியார், அன்று சொன்னதுபோலத்தான் அவரின் மூதாதையர், நமது மூதாதையரிடம் முன்னாளில் கூறினர். இந்நாள் இவரது இயல்பு எதுவோ, எண்ணம் எதுவோ, அதுதான் அவரது மூதாதையர் பன்னெடுங்காலமாகக் கொண்டிருந்தது.

“காட்டிலே மிருகங்கள் தொல்லை! யாகத்தை அழிக்க இராட்சதர்கள் ரகளை! அந்த அரசன் ஆணவமாக எனக்குப் பிச்சையிட மறுத்தான், என்று இருடிகள், முனிகள், தபோதனர்கள், மன்னர்களிடம்கூறி மாநிதி, படை முதலியன பெற்றனர் என்று புராணங்கள் படிக்கிறோமே, அவைகளில் புதைந்து கிடக்கும் பாடம் இதுதான். சண்டைக்குத் தமிழர், இரத்தஞ் சிந்தத் தமிழர், போரிட்டுமாளத் தமிழர் பொன்தர புத்திரரை இரணகளத்தில் பலியிடத் தமிழர், உழைக்க உருக்குலைய தமிழர், ஊர்காக்க, படை நடத்த பகைவரை அடக்கத் தமிழர், வேதமோத தீமூட்டி திருமந்திரம் கூற, விருந்துண்டு வியர்வையைத் தடுக்கச் சந்தனம் பூசிக்கொள்ள, பூரிதட்சணைபெற, ஆரியர், பார்ப்பனர்! இது அன்று ஆரியர் வகுத்தனர். இன்று ஆச்சாரியார் மேயர் கமிட்டியிலும், அதே முறையில் தான் திட்டம் தீட்டினார். சிறுத்தையின் புள்ளி, செந்நாயின்வெறி, குரங்கின் குறும்பு, பூனையின் துடுக்குக்குணம், போகாது என்பார்கள்! ஆரியர்களின் குணாதிசயமும் அதுபோன்றதே. 1942ல் சென்னை இரிப்பன் மண்டபத்தில், மேயர் முன்னிலையில், ஆச்சாரியார், வீரமுழக்கம் செய்துவிட்டு, எதிரியைத் தடுக்க இனி நீங்கள் முனையுங்கள், எதற்கும் அஞ்சாதீர், எனக்கோ கட்சிக் கட்டுப்பாடு குறுக்கிடுகிறது என்று எங்கனமுரைத்தாரோ, அதுபோல், அந்நாளில் அரசசபைகளில் ஆரியர்கள் தமிழ் மன்னர்களிடம் பேசினர், மண்ணில் நமது இனத்தவர் இரத்தத்தைச் சொரிந்தனர், நெருப்பில் ஆரியர்நெய்யைச் சொரிந்தனர், நமது மன்னர்கள் மாய்ந்தனர், ஆரியர்கள் வாழ்ந்தனர்!

நான் கேட்கிறேன், வீரம்பேசும் ஆச்சாரியார், நகரைப் பாதுகாக்க, மற்றவர்களைத் தட்டிவிடுகிறாரே தான்மட்டும் ஏன் தலைமறைகிறார்! கட்சிக் கட்டுப்பாடு என்ற சாக்குக்கூறி யாரை ஏய்க்க எண்ணுகிறார்? எதிரியை விரட்ட வேண்டியதைக் கடமையென ஆச்சாரியார் உண்மையில் கருதினால், குறுக்கே நிற்கும் கட்சிக்கட்டுப்பாட்டைக் குப்புறக்கவிழ்க்க மாட்டாரா, நாட்டுக்கு ஆபத்து, நாம் அஞ்சாது எதிரியை அடக்க வேண்டும் என்று ஆச்சாரியார் கூறுகிறாரே, அதைச் செய்ய ஒட்டாது கட்சிக்கட்டுப்பாடு தடுக்கிறது என்று கூறுகிறாரே, அதன் பொருள் என்ன? அவரது கட்சி, நாட்டைக்காப்பாற்ற ஒட்டாது தடுக்கும் துரோகச் சபை என்றுதானே அவர் பேச்சிலிருந்தே வெளிப்படுகிறது. அத்தகைய துரோக சபையிலே பந்தமும் பாசமும் இவர் கொண்டிருக்கிறாரே, இவரும் துரோகிகள் கூட்டத்தில் ஒருவர் என்று தானே பொருள்படுகிறது என்று கேட்கிறேன். அவரது அன்றைய பேச்சு, ஒன்று கோழைத்தனத்தை மறைக்க கட்சியின் பேரில் குறைகூறியதாக இருக்கவேண்டும் அல்லது தனது கட்சியின் தொழில் துரோகம் செய்வது என்பதைத் தம்மையும் மறந்து கூறியதாக இருக்கவேண்டும். முன்னையதானால், அவர் முகமூடி போட்டுக்கொள்ள வேண்டும், பின்னையதானால், அவர் சிறைப்பட்டிருக்கவேண்டும். நான் கேட்கிறேன் ஆச்சாரியாரை, நாட்டுப்பாதுகாப்பு பெரிதா? கட்சிக் கட்டுப்பாடு பெரிதா? எதை நீர் மேலென மதிக்கிறீர்? நாட்டைக் காக்கவேண்டுவதே மேல், என்று நாடிமுறுக்கிழந்த நடுக்கியுங் கூறுவான், நீரும் அக் கருத்தே கொண்டவரென்றால், நீர் இருக்கும் காங்கிரஸ் கட்சியை உதறித் தள்ளிவிட்டு, ஊரைக்காக்க வீறுகொண்டெழ வேண்டாமா? நாட்டைக் காப்பாற்ற வேண்டுவதே முறை என்று கூறி, கட்சியைத் திருத்த முற்படுவது மேல்! அது முடியாவிட்டால், துரோகச் சபையிலே நான் இனி இரேன் என்றுகூறி, நாட்டுப் பாதுகாப்புக்காக ஆவனசெய்யல், இரண்டாந்தரமான நற்குணம். மூன்றாந்தரமானதல்ல, முழுமோசமானது, உமது இன்றைய போக்கு.

பள்ளம் என்று தெரிந்தும், விழச்செய்பவன் பித்தன்! நண்பன் என்று தெரிந்தும் ஏமாற்றுபவன் நயவஞ்சகன்! போதை என்று தெரிந்தும் பருகுபவன் குடியன்! நிரபராதி என்று தெரிந்தும், அடித்துத்துன்புறுத்துபவன் போக்கிரி! பிறன்மனைவி என்று தெரிந்தும் கூடுபவன் காமுகன்! நாட்டுக்கு ஆபத்து வருவதைத் தெரிந்து கொள்ளாதவன் ஏமாளி! அந்த நேரத்தில் நமக்குப் பயமில்லை என்று நர்த்தனஞ் செய்பவன் கோமாளி! விஷமப் பேச்சைப் பரப்புபவன் எதிரியின் உளவாளி! எல்லாம் தெரியும், எதிர்க்கத்தான் வேண்டும், எதிரியை அடக்க நீங்கள் முன்வாருங்கள், பயப்படாதீர்கள், என்றெல்லாங் கூறிவிட்டு, நான்மட்டும் வருவதற்கில்லை, காங்கிரஸ்காரர்கள் இதைச்செய்வதற்கில்லை, காங்கிரசல்லாத தோழர்களே! நீங்கள் இதைத் தயவுசெய்து செய்யுங்கள் என்று கூறும் ஆச்சாரியாருக்கு, நான் தரவேண்டிய அடைமொழி என்ன என்று உங்களைக் கேட்கிறேன். தோழர்களே! என்னென்று அழைப்பது அவரை!!

கள்ளப்புருடனிடம் மனைவி சரசமாடுவது எனக்குத் தெரியும். அவனையும் அவளையும், அடித்து வீழ்த்தத்தான் வேண்டும். அவளை விலக்கியாவது விடத்தான் வேண்டும். ஆனால் அவள் போய்விட்டால், எனக்கு உண்டியும் போய்விடும், ஒரோர்சமயம் கிடைக்கும் உல்லாசமும் போய்விடும், அதைப்பற்றித்தான் யோசிக்கிறேன், என்று எந்தக் கணவனாவது கூறுவானா!

நாட்டுத்துரைத்தனத்தார்போட்டுவைத்த அமைப்பும், நாடாண்ட கட்சியும், நாடாள நாக்கில் நீர்ஊற நிற்கும் கட்சியுமான காங்கிரசின் போக்கும் இருக்கும் விதங்கள் இவைகள், “காணக்கண் காட்சியே! கந்தன் காவடி மாட்சியே!! என்று ஏதாவதொரு பாட்டுப் பாட வேண்டியதுதான் போலும்! இத்தகைய இயல்பு படைத்தவர்களிடந்தான் சர். கிரிப்ஸ் நாட்டை ஒப்படைக்க மறுத்தார்! தவறா அது? இத்தகையவர்கள்தான் இங்கு முதல்சாதி! யோக்கியமா அது? இத்தகையவர்கள் இங்கு, மற்ற மக்களை மடக்கி வைத்திருக்கிறார்கள் என்ற இரகசியத்தைத் தெரிந்துதான் ஜப்பான் துணிவாக இங்குபாய்கிறது. நான்தான் கேட்கிறேன் கூறுங்கள் பார்ப்போம், இந்த நாடு ஆண்டுதோறும் எவ்வளவு பாரம் பாரமாகக் கற்பூரம் வாங்குகிறது என்பது ஜப்பானுக்குத் தெரியாதா! இவ்வளவு கற்பூரம் வாங்கும் நாட்டிலே, காசும் கருத்தும் காலமும் எவ்வளவு விண்மீன் வலைக்குப் பயனாகிறது என்பதை ஜப்பானியன் தெரிந்து கொண்டிருக்கமாட்டானா? டார்ப்பிடோவுக்கும் சப் மெரைனுக்கும், விமானத்துக்கும் கப்பலுக்கும் மற்ற நாடுகள் பணத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்க, இங்கு கற்பூரத்துக்கு மட்டும் இவ்வளவு காசு செலவிடுபவர்கள், எவ்வளவு முரட்டுப் பிடிவாதமுள்ள குருட்டுக் கொள்கையில் சிக்கிக் கொண்டனர் என்பதுபற்றி ஜப்பானியன் எண்ணியிருக்க மாட்டானா? இவ்வளவு “மிருகப் பிராயத்தை” மக்களுக்குப் புகுத்திய ஓர் கூட்டம் இருக்கும் என்பதும், அந்தக்கூட்டம், மக்களைச் சிந்தனையில் சிதைந்தவர்களாய், செல்லரித்த முறைகளில் உழல்பவர்களாய், அடிமைகளாய், அஞ்சி அஞ்சிச் சாகும் அபலைகளாய், ஆக்கி வைத்திருக்கும் என்பதை அறியாமலிருந்திருப்பார்களா? அது தெரிந்துதான், ஜப்பானியர் துணிந்து பாய்கின்றனர்! அந்த வேளையில்தான் இங்கு நீளப்பேச்சும் கோணற் திட்டமும், சூன்ய ஞானமும், சூட்சித்திறனும், தாண்டவமாடுகின்றன.

சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே, நோகாமல் முத்தங்கள் நூறுகொடுப்பேன் என்றுரைத்த வஞ்சியிடம், கொஞ்சியகுப்பன் உலகக் காட்சிகளை உணர்த்திவிட்டு இந்நாட்டைப்பற்றி வெளிநாட்டார் விளம்புவது என்னவென்பதைக் கூறிடுங் காலையில்

“கட்டிச் சழகத்தின் கண்ணவித்துத் தாழண்ணக்
கொட்டி அளக்கும் குருக்கள் கணக்கற்றார்
தேன்சுரக்கப்பேசி இந்துதேசத்தைத் தின்னுதற்கு
வான்சுரரை விட்டுவந்த பூசுரரும் வாழ்கின்றார்
இந்த உளைச்சேற்றை, ஏறாத ஆழத்தை
எந்தவிதம் நீங்கி நமை எதிர்ப்பார்?”

என்று கூறினான், என்று தீட்டுகிறார் தீந்தமிழில் கவி பாரதிதாசன்.

அந்தக் குருக்கள் கூட்டத்தின் கருதந்த கருந்தனந்தான், காதும் கண்ணும் பழுதானது மட்டுமின்றி, கருத்தும் பழுதானதோ என்று நானும் நீங்களும் எண்ண வேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கும், சொல்லையும் செயலையும் காட்டிவரும் ஆச்சாரியார்!

26.4.1942