அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


வீரர் வேண்டும்

சுயமரியாதைக் கோட்பாடுகளை, ஜஸ்டிஸ் கட்சியிலே புகுத்திவிடுகிறார்களே! அரசியலிலே மதத்தைக் கலந்துவிடுகிறார்களே! அசியல் கட்சியிலே, பலமதத்தினர், பல ஜழதியினர், பல வைதிகர்கள், இருப்பார்கள், அனைவருக்கும் அரசியல் கட்சி பொதுவாக இருக்கவேண்டுமேயல்லமல், மதவிஷயத்திலே குறுக்கிட்டுப் பலரைக் கட்சியைவிட்டு விலகும்படி செய்யலாமா, கட்சி பலவீனமடைந்துவிடாதா? காரியம் கெட்டுவிடாதா, என்று சிலர் கசிந்துருகுகின்றனர். இந்தப் போக்கினிலே பலர், எதையோ எண்ணிக்கொண்டு வேறு எதையோ பேசுகிறார்கள்; பட்டம் பதவியை எண்ணிக்கொண்டு, அதனை வெளியே எடுத்துபபேசினால் வெட்கக்கேடாக இருக்குமே என்று அஞ்சி, கட்சியிலே தமக்கு இருக்கும் அளவிடமுடியாத அன்புப் பெருக்கினாலேயே அரசியலும் மதமும் வேறுவேறாக இருக்கவேண்டுமென்ற கூறுவதாகப் பேசுகின்றனர். இந்தப் போக்குக் கொண்டோரிலே, ஒருசிலர் உண்மையாகவே, அரசியல் கட்சியிலே மதப் பிரக்னையைக் கலக்கலாமா என்பதிலே சந்தேகமும் அதன் பயனாகச் சஞ்சலமும் கொண்டுள்ளனர். அந்ச் சிறுதொகையினரின் உணைமையான உள்ள கிளர்ச்சியை நாம் மதிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். அவர்களின் உள்ளன்பை நாம் சந்தேகிக்கவில்லை. ஆனால் அவர்கள், தம்மையும் அறியாமல் அரசியலை இலாபச் சூதாட்டமாகக் கொண்டுள்ளவர்களின் வஞ்சக வலையிலே, வீழ்ந்து விடுவதுகண்டு வருந்துகிறோம்.

நமது குறிக்கோள், சகலரும் சமுதாயத்திலே சம உரிமையோடு வாழ வேண்டும், பார்ப்பன ஆதிக்கம் தொலைய வேண்டும்; என்பதுதானே, இந்தப் பெருநோக்கம் ஈடேறப் பணிபுரிவோம், இந்தப் பிரச்சினையிலே வேறு பலவற்றைக் கொட்டிக் குழப்பவேண்டாம், என்று கூறுகின்றனர். கண்ணியர்கள் இதனைக் கூறும்போது, வீணாக அவர்கள் விசாரப்படுகிறார்களே என்று நாம் பச்சாதாபப்படுகிறோம். கயவர்கள் இதனைக் கூறும்போது என் சொல்வோம்! ஒழுக்கம், நாணயம், அன்பு, அறிவு, சமரசம் சற்குணம் முதலியவற்றைப்பற்றி ஒரு துளியும் கவலைப்படாமல் வாழ்க்கையிலே இன்பத்தை எப்படியேனும் பெற வேண்டும், எத்தனைபேர் பிணமானாலும் கவலை இல்லை, பணம் குவிந்தால் போதும், எவ்வளவு ஒழுக்கக் கேடுகள் கூத்தாடினாலும் அக்கரை இல்லை, ஒய்யாரமான வாழ்வு கிடைத்தால் போதும், என்று கருதி, அரசியலை வாழ்க்கைக்குச் சுவைதரும் விபசாரமாக்கும் போக்கினர், அரசியலிலே மதத்தைப் புகுத்திவிடுகின்றனரே என்று கூறி ஆயாசப்படுவதாக நடிப்பது நகைப்புக்கு இடமட்டுமல்ல, பொதுமக்களை எவ்வளவு சுலபமாக ஏய்த்துவிட முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள் என்பது விளங்கம் போது, இச்செயல், சீரியோருக்குச் சீற்றத்தை மூட்டாதிருக்கவும் முடியாது!

அரசியலைப் பற்றியும் அவர்கட்கு அக்கரை கிடையாது, மதத்தைப் பற்றியோ அவர்களுக்கு மாசும் தூசும் தவிர மற்றது தெரியாது. இரண்டிலும் அவர்கள் கொண்டிருப்பது, கூளத்தைப் பதரை, மணியையல்ல! உயரப் பறந்துகொண்டே கீழே கிடக்கும் பொருளைக் கண்டுபிடிக்கும் தொலைநோக்கித் திறமைமந்த கூரிய கண்படைத்த கருடனுக்குப் பார்வை படுவது, செத்த எலி, புழுத்த நண்டு, நெளியும் பழு இவற்றின் முதுதானே தவிர, மதுரமான கனி, சுவையான பண்டம், இவற்றின் மீதல்ல. அதுபோலவே, அறிவுத் திறனை அளவின்றிப் பெற்றுவிட்டதாகக் கருதிக்கொண்டுள்ள இவர்களின் பார்வை அரசியரிலே, எதன்மீது படுகிறது? அரியாசனத்தின் மீதா? ஆண்மையாளருக்கேற்ற அணிவகுப்பின் மீதா? இல்லையே! பயனற்ற, பரங்கியின் பக்கநின்று பராக்குக் கூறும் பதவிமீது. அவன் அகில உலகுக்கும் தனது விசுவாசமுள்ள அடிமை என்பதை உணர்த்துவிப்பதற்குத் தந்து வரும பட்டம், கமிட்டியிலே ஒரு இடம் ஆகிய இத்தகைய மிகமிகச் சில்லறைகள் மீதுதான் இவர்களுக்கு நோக்கம்!

இயல்புக்கு ஏற்ற எண்ணம்! பஞ்சத்தால் அடிபட்டுக் கிடந்தவனுக்குப் பழங்கஞ்சி கித்தாலும் அதுவே பாலும் தேனுமாக இருப்பது போலப் பதவிப்பசி பிடித்தலையும் சிலருக்கு, இந்தப் போலி மதிப்பு மட்டுமே உள்ள, சில்லறை அதிகாரங்கள் கிடைத்துவிட்டாலே போதும், சித்தம் குளிர்ந்து சில்லறை அதிகாரங்கள் கிடைத்துவிட்டாலே போதும், சித்தம் குளிர்ந்துவிடும், சத்தம் அடங்கிவிடும். பராரிக் கூட்டத்துக்குப் பட்டாடை ஏது? கந்தலே கிடைக்கும், அதிலே ஒரு கந்தல் அழகாக இருந்தால் ஆனந்தம் அதிகமாகும்! மாட்டுக் கழுத்திலே கட்டப்படும் மணி, அந்த மாட்டுக்கு அணியாகிவிடும்! அதுபோல மிகமிகச் சாமான்யமான சில்லறை அதிகாரங்களைப் பெறுவதும். சிரித்துப பேசக் கற்றுக்கொள்வதும. சீமான்களின் தோழமையைப் பெறுவதும், சிலாக்கியமானகாரியம். அதுவே அரசியல் மூலம் அடைய வேண்டிய பேறு என்று எண்றகின்றனர் சிலர், நர்க்குக் கிடைப்பது அரிமாவுக்குக் கிடைத்தால் அரிமா அகங்குளிருமா? அதுபோலத்தான், தன்னலத்துக்காக ஏதோ ஒரு தகரக்குவளை போன்ற அதிகாரம் கிடைத்தால் போதும் என்று திருப்தி அடையச் சிலர் தாயாரில் இருக்கலாம். தமிழன், தமிழ்ப் பண்பை இழவாதவன். வீரன், உண்மைத் தொண்டன், விடுதலை விரும்புவோன், இவைதமைத் துச்சமெனக் கூறிடுவான், தூதூ என்று ஏசிடுவான். அவன் விரும்பமாட்டன், காகிதப் பூஞ்சோலையை, கலர்க் கண்ணாடியாலான நகையைக், கனியாத பலாவை!

அரசியலின் மூலம், நாம் வேண்டுவது, சில்லறைப் பதவிகளை அல்ல, சிங்கார வாழ்வையல்ல, நமது இனத்தின் விடுதலையயை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணைகொள்கிறோம். அதன் பொருட்டே அரசியலிலே பணியாற்றுகிறோம். எந்தத் திராவிட இனம் இந்த மாநிலம் முழுதாண்டிருந்தார் இணையின்றி வாழ்ந்தார். தமிழ்நாட்டு வேந்தர், என்று நமது புரட்சிக்கவி பூரிப்போடு கூறினாரோ அந்த வேந்தர்கள் வீழ்ந்தபிறகு அரசு இழந்து ஆண்மை குறைந்து, அறிவு குழம்பிக் கிடக்கிறதோ அந்த இனத்தை முண்டும் அரியாசனத்திருத்தி, ஆண்மைக்கும் அறிவுக்கும் உரிய உயரிய இடமளித்து, தக்கதோர் நிலையை உண்டாக்க வேண்டும் என்பதே, அரசியலின் குறிக்கோளன்றி, அனந்தாச்சாரியாருக்குக் கிடைக்கக்கூடிய சட்டசபை ஸ்தானத்தை, அடி வயிறு புண்படத் தேர்தல் பிரசாரம் செய்து, அடி உதைபட்டு, அறிவீனர்களின் ஏசலையும் பெற்றுக்கொண்டு, ஒரு ஆறுமுகப்பிள்ளைக்குக் கிடைக்கும்படி செய்வது அல்ல! சேலம் இதனைத்தான் தெளிவாக்கி இருக்கிறது. இது தமிழகத்திலே தம்மையே தமிழரின் பணிக்காக அர்ப்பணம் செய்துவிட்ட அழைப்பு கிடைத்ததும் தாலமுத்துக்களாகத் தன்னலமற்ற தளராத பற்றுக் கொண்ட தமிழ் இளைஞர்களின் இருதயகீதம்!

அனந்தாச்சாரியாரும் இராமபக்தர் ஆறுமுகப்பிள்ளையும் அப்படித்தான் முனனவரும் வர்ணாஸ்ரமி, பின்னவரும் அவ்விதமே. ஆச்சாரியாரும் இருவருக்கும், இந்தச் சமுதாய அமைப்பிலே அவ்வளவு அச்சரை கிடையாது என்ற நிலை இருக்குமானால், அனந்தாச்சாரிக்குக் கிடைக்கும் இடம், ஆறுமுகம் பிள்ளைக்குக் கிடைக்கச் செய்வதால், யாதுபலன்? ஏன் அதற்காக ஒரு கூட்டம் வேதனை அனுபவித்துக்கொண்டு, வீணருடன் மோதிக்கொண்டு, விதியற்றவர் கதியற்றவர் என்று மதியற்றவரால் தூற்றப்பட்டு, உழைக்கவேண்டும் என்று கேட்கிறோம் எத்தனை ஆயிரம் வாலிபர்களின் உள்ளம் ஒடிந்திருக்கிறது. இந்த நிலைமையைக் கண்டு அவர்களை இந்த பித்தலாட்டப் பலிபீடத்திலே இன்னமும் எத்தனை காலத்துக்கு இருக்கவைக்கவேண்டும். விழலுக்கு நீர் இநைப்பானேன். விலா நோகுதே என்று விம்முவானேன்! அலி என்று தெரியாமல் அணைப்பானேன், ஐயோ சனியனே என்று ஆயாசப்படுவானேன்! கட்டையாலே கத்தியும் அட்டையாலே கேடயமும் செய்து பிடித்துக்கொண்டால், எதிர்க்குச் சிரிப்புவருமா, சிந்தனை குழம்புமா? ஆள்மாற்றமே அரசியல் காரியம் என்ற எண்ணுபவரைக் கேட்கிறோம். அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு இனத்தை மீட்கும் காரியத்துக்கு யார் தேவை? எந்த ஆரியத்தால் இனம் அடிமப் பட்டுக் கிடக்கிறதோ அந்த ஆரியத்தை அழித்தோழிக்கும் ஆண்மையாளரா. அன்ற அதே ஆரியத்துககு ஆலவட்டம் சுழற்றும் அடிமைகளா? பிரஞ்சு நாட்டிலே புரட்சியின்போது, ரஷிய நாட்டிலே புரட்சியின்போது, எது அரசியலாகக் கருதப்பட்டதோ, அத்தகைய நிலைமையிலே திராவிடம் இருக்கிறது. அரசியலிலும் மதமும் கலப்பதா என்பதல்ல கேள்வி, மதத்தால் நம்மை அரசியலிலே அடிமைப்படுததியிருககும் இழிநிலையைப் போக்கிக்கொள்ள ஆரியர் புகத்தியிருக்கும் மதத்தை ஒழித்தாக வேண்டாமா என்பதே கேள்வி விழி சரியாக இருந்தாலன்றோ வழி தெரிந்து நடக்க முடியும்? எதிரியின் வஞ்சக வலையாகிய ஆரிய மார்க்கத்தை அறவே நீக்கா முன்னம் நமக்கு அரசியல் வாழ்வு எங்ஙனம் சிறப்பாக இருக்க முடியும். எனவேதான் சேலத்தில், வீரர்கள் தேவை! காரியமாற்றும் தீரர்கள் தேவை! அஞ்சா நெஞ்சமும் ஆரியத்திடம் அடிமைப் படாத உரமும் கொண்ட உழைப்பாளிகள் தேவை! விடுதலைப் போருக்கு வீரர்கள் தேவை! பேரம் பேசும் கும்பல் வேண்டாம்! பேதைமையை அணிகலனாகக் கொண்ட கூட்டம் வேண்டாம்! பேதைமையை அணிகலனாகக் கொண்ட கூட்டம் வேண்டாம்! திராவிடர் தேவை! என்று தீர்மானித்துவிட்டனர். தீரர்களே! திரண்டு வாருங்கள்! மற்றவர் ஒதுங்கி நில்லுங்கள்!!

(திராவிடநாடு - 10.09.1944)