அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

விழிப்புற்ற பாட்டாளி!

"ஆணவக் கோட்டை
அமைத்திடுவோரே!
அடிமைகள் கண்டினி
நடுங்கிடுவீரே!

உலகிடை எழுந்திடும்
போர்கள் எதிலும்
இருப்பவர் யாமே
மறுப்பவருளரோ!

மன்னர் பெற்றிடும்
வலிவனைத்தும்
அளிப்பவர் யாங்கள்
அறிந்திடுவோமே.

ஞானிகளும் மோனிகளும்
முன்பு காட்டிய வழிகண்டு
காலகாலமாயுள கடுந்தளைகளை
உடைத்தெறிந்துமே

உலக இதயமதை
எம் முரசாகக்கொண்டு
இருளது விட்டு
வந்துளோம் வெளியே

அய்யோபாவம்! எனுமொழி
கேளோம்
ஐயமளித்திடும் கரமது
வேண்டோம்

பேரூர் சமைத்தவர்க்கேன்
பிச்சைதானும்!
என்றுதான் புரியுமோ
உமக்கிப் பேருண்மை.

குலப்பெருமை குடிப்பெருமை
விட்டொழிப்பீர்
வார்ப்படப் பொற்கடவுள்
வாணிபமும் விடுவீர்!

அவரவர் பெறும் தகுதி
ஆக்குந்திறன் வழியதாகும்.
உழைப்போர் நாங்கள்
உற்பத்தியாளர்
ஊமைகளாயிரோம்
இனியுந்தானே!

சுரண்டிடுவோரே!
சோம்பிக் கிடந்திடுவோரே!
பரவிப் பாய்ந்து வந்துளோம்
பாரினில்
பொழுது புலர்ந்தது
புவியெங்குமே, காண்!

இருளும் ஒழிந்தது
வாள் வெளிவந்தது.
உறையையும் வீசி
எறிந்தோம் கீழே!

(காஞ்சி - 06.06.1965)


(1881 - ஜான் நைஹார்ட் கவிதை மொழிபெயர்ப்பு)