சுந்தரியும், திருமணம்,
திருமணம் என்று வாதாடினாள். அவளுக்கு என்ன தெரியும், சாஸ்திர
சம்பிரதாய மகிமையும் மேன்மையும்? வேதிய குலம் முழுவதும்
என்னை வெறுக்கும், கண்டிக்கும், சபிக்கும். இதை எண்ணித்
தானே திருமணம் கூடாது என்றேன். ஒரு வேளை, சுந்தரியைத்
திருமணம் செய்து கொண்டு சுகமான வாழ்வளித்து இருக்கக்
கூடும் மன்னன்! தங்கப்
பல்லக்கிலே செல்லும் அந்தஸ்து கிடைத்திருக்கும் மகளுக்கு,
ஆனால் நான்? சண்டாளன் என்றல்லவா தள்ளப்பட்டிருப்பேன்.
கேவலமாகத்தானே கதிருயிருப்பர்! இதற்காகத்தான், மன்னனை
சாதாசர்வகாலம் வீட்டிற்கு வரவழைத்தபடி இருந்தான் போலும்
என்று இழிமொழி பேசுவர். ஏற்கெனவே ஏதோ ஓர்விதமான வதந்தி
பரவித்தான், வம்பளந்தார்கள் விஷமக்காரர்கள். அன்று கைலாசநாத
பட்டரும், கனகசபேசபட்டரும் பேசியது ஒரு தினுசாக இருந்தது.
ஏன் அவ்விதம் பேசினார்கள் என்பது பிறகல்லவா புரிந்தது.
பித்துக்குளிகள் ஏதோ பிதற்றுகிறார்கள் என்று, நானோ ஏமாளி,
எண்ணிக் கொண்டிருந்தேன். அப்போ.
“சௌக்கியந்தானே, ஸ்வாமிகளே!”
“இருக்கேன்... ஏன்...”
“கேட்டேன் ஸ்வாமி! லோகாசார முறைப்படி...”
“சந்தோஷம்... வரட்டுமோ”
“ஆஹா! நான் தடை செய்ததை க்ஷமிக்கணும் - ராஜா இந்நேரம்
தங்க தரிசனத்துக்காகத் தவித்துக் கொண்டிருப்பார் - போய்
வாரும்...”
“ஒய்! நீர் பேசுகிறதைக் கவனிச்சா, ஏதோ என்னைக் கேலி செய்கிற
மாதிரியாகத் தோன்றதே, என்ன விஷயம்...”
“உம்!”
“ஓய்! ஏன் பெருமூச்சு விட்றேள்...”
“பட்டாச்சாரியாருக்கு என்னங்காணும் குறை! ராஜன் அவர் வீட்டு
வாசல்லே, காத்திண்டிருக்கான், சதாகாலமும்.”
“வேத வேதாந்தத்தின் இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்ற
நோக்கம்.”
“ஆமாம் - தேவரும் மூவரும் கூடத்தானே அந்த இரகசியத்துக்காக...”
“படாதபாடு பட்டிருந்தாளேன்னோ...”
“அட, ஏன் ஒய்! சும்மா, சுத்தி வளைச்சி பேசிண்டிருக்கேள்
- வேதமாம் - வேதாந்தமாம் - இரகசியமாம்.”
“ஓய்! நீர் ஏன் இவ்வளவு கோபிக்கிறீர்?”
“ஒண்ணுமில்லே, ஸ்வாமிகளே! புறப்படும், புறப்படும்... ராஜா,
கோபிக்கப் போறார்...”
“கோபிக்கமாட்டார் ஒய்! பட்டாச்சாரியார், ஆத்துக்குப்
போகிறபோது, வழியிலே பேசிண்டிருந்தாலே, தாமதமாச்சின்னு
தெரிஞ்சா உமக்கு, ராஜா சன்மானம் செய்வார் ஒய்! பிரதி தினமும்,
இந்தக் கைங்கரியத்தைச் செய்திண்டிருக்கணும்னுகூடச் சொல்வார்...”
“ஒய்! என்ன இது - குறும்பு - போக்கிரித்தனம் - என்ன பேசறேள்?
ஏதோ பூடகமா இருக்கு.”
“ஒண்ணுமில்லை ஸ்வாமி! இவன் ஒரு வயத்தெரிச்சல் பிடித்த
ஆசாமியோன்னோ? உமக்கு ‘ராஜக்ருபை’ கிடைத்திருப் பதாலே
பொறாமை கொண்டு பேசறான்.”
“ராஜக்ருபை, பட்டாச்சாரி ஸ்வாமிகளோட ஜாதகப் பலன் அல்ல.
குமாரி சுந்தரியின் ஜாதகப்பலன் தந்ததாக்கும் இந்தக் க்ருபை.”
இப்படி எல்லாம் பேசினாளே பட்டர் கூட்டம்; அதை எல்லாம்
எண்ணிக் கொண்டா, என் மனம் படுகிறபாடு, அடா அடா! சர்வேஸ்ரா!
மகளை இழந்தேன் - செல்வத்தை இழந்தேன். மானம் போகாதிருப்பதற்குக்
காரணம், விஷயத்தை வெளியே பேசாமல், ‘நம்மவா’ இருப்பதாலேதான்
- அவள் மாண்டு போனதும் ஒருவிதத்திலே நல்லதுதான்... இருந்தால்
என் நிலை என்ன ஆகும்? மீனாட்சிகோயில் பட்டருக்கு, மகள்
மாரடைப்பால் இறந்து விட்டதாலே மனக்கவலை என்று பலரும் பேசுகிறார்கள்.
அவனோ! நடந்தது நடந்துவிட்டது! நாடாள்ப வனல்லவா... தைரியமாக...
அலட்சியமாக... ஆணவகமாகக் கூறுகிறான்... “நடந்தது நடந்துவிட்டது”
என்று. இனி நடக்க வேண்டியது ஒன்றுமே இல்லை என்பது அவன்
நினைப்பு... யார் என்ன செய்ய முடியும் என்ற அகம்பாவம்...
ஆமாம்... நம்மால் என்ன செய்ய முடிந்தது... இதுவரையில்...
அவனைக் காணும் போதும் கடுங்கோபம் பிறக்கிறது... பிறந்தது?
பழி பாவத்துக்கு அஞ்சாத பாவி, கெம்பீரமாக உலவுகிறான் ஊரிலே,
கோலகலமாகக்கொலு நடத்துகிறான்... அந்தப்புரத்திலே, மாதர்களின்
கூட்டம் இருப்பதுகேட்டு மக்கள் ஒருவிதமாகப் பேசுகிறார்கள்,
என்று சொன்னால் அவன் வாய்க்கொழுப்பு ‘ஏன் பட்டரே மக்களுக்கு
ராமாயணம் தெரியாதோ!அவருடைய அந்தஸ்துக்கு அவர் அறுபதினாயிரம்
கொண்டார் - ஏதோ சக்தியானு சாரம் நமக்கு, என்று கூறக்
கூடாதோ?’ என்று கேலி பேசுகிறான் - கெடுமதியாளன்.
சுந்தரி, ஒரு ராஜகுமாரியா, அவள் சார்பாக ரதகஜதுரக பதாதிகள்
கிளம்ப அல்லது நான் படிக்கும் புண்யகதைகளிலே கூறப்படுவது
போல, சபிக்கக் கூடிய காலமா இது கல்லாய்ப் போக - புல்லாய்ப்
போக, - புழுவாய்ப்போக என்று சாபம் கொடுக்க... என்ன
செய்வது... எரியும் கொப்பரை போலுள்ள என் மனதுக்கு, எப்போதுதான்
சாந்தி கிடைக்கும்... மன்னனை மாபாவி என்று கூற மனம் துடிக்கிறது.
உண்மையைக் கூறவோ முடியவில்லை மானம் தடுக்கிறது பழி வாங்கியாக
வேண்டும் ஆனால், எப்படி! எப்படி! ஆமாம். லிங்கண்ணாவைத்தான்
கருவியாக்க வேண்டும்.
“லிங்கண்ணா! என் மகள், மாரடைப்பால் சாகவில்லை; மாபாவிசெய்த
அக்ரமத்தால் இறந்தாள் என்று சொன்னால் செச்சே! சொல்லக்கூடாது
கேவலமாகக் கருதுவான். லிங்கண்ணாவுக்கு மன்னன் மீது கோபம்
இருக்கிறது, நிரம்ப. அவனை ஏவி விட்டால், மன்னனை ஒழிக்கலாம்.
மன்னனை ஒழிக்கா முன்பு என் மனமோ சாந்தி அடையாது. கோயில்
பட்டாச்சாரிக்கு மன்னன் மீது கோபம் பிறக்கக் காரணம் என்ன
என்று யோசிப் பானோ இந்த லிங்கண்ணா? யோசிக்க விடக் கூடாது.
என்ன செய்யலாம்? எதையாவது செய்தாக வேண்டும்! பாம்பாகி
அவனைப் பிடுங்கிட வேண்டும், எப்படி? திருமலையைத் தீர்த்துக்
கட்டியாக வேண்டும், காரணம் வெளியே தெரியக் கூடாது. லிங்கண்ணாவும்
அறிந்து கொள்ளக் கூடாது. லிங்கண்ணாவின் மனத்தை அறிந்து,
தூபமிட வேண்டும். மன்னன், மதியிலி! என் மகளின் மரணத்துக்குப்
பிறகு நான் பழைய சம்பவத்தை மறந்தே போனேன் என்று எண்ணி
விட்டான். என் மனத்திலே மூண்ட தீ, அணையக் கூடியதா! நானோ
பக்குவமாகத்தான் நடந்து கொள்கிறேன். அவனை நேரிடையாக எதிர்த்து
ஒழிக்க முடியாது; மாமரத்தின் பின்புறமிருந்து தான் இந்த
வாலியைக் கொன்றாக வேண்டும் சமயம் வாய்க்க வேண்டும். ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு யோசனை உதயமாகிறது. ஆனால் மறுநாள், அத
பைத்தியக்கார யோசனை என்று புரிகிறது தெளிவு பிறக்கவில்லை.
சுந்தரியின் உருவம், நித்த நித்தம் என்முன் தெரிகிறது!
அப்பா! ஆகமம் சாஸ்திரம் என்றீர். இல்லையானால் நான் அந்தப்புரம்
சென்று சுகப்பட்டு இருக்கக் கூடும் என்று அழுகுரலில் கூறுகிறது
அந்த உருவம். எப்படிச் சம்மதிக்க முடியும், அவள் சொன்ன
நீச ஏற்பாட்டுக்கு? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பட்டாச்சாரியே
வர்ணாஸ்வரம விதியை, சனாதன தர்மத்தை, சாஸ்திர சம்பிரதாயத்தை
மீறி நடந்தால், பிறகு, நமது குலப்பெருமை, மதமகிமை நிர்மூலமாகிப்
போகுமே! ஏற்கெனவே கிருஸ்தவப் பாதிரிகள், மக்கள் மனத்தை
மயக்க வருகிறார்கள்! என் மகளை நான் ‘ஜாதிகெட’ விட்டிருந்தால்,
போதுமே! மதமே மாண்டு போகும்! தேவி கோவிலிலிருந்து நான்
துரத்தப்பட்டுமிருப்பேன். ஆமாம் அவள் செத்தாள் - வேறு
வழி கிடையாது ஆனால் இவன் - இவனைத் தொலைத்தாக வேண்டுமே!
எப்படி? அதுதானே இன்னம் புரியவில்øல். மன்னன் நாஸ்திகனாகி
வருகிறான்; தேவியை மறந்துவிட்டான்; புராதன மார்க்கத்தைப்
பழிக்கிறான் என்பதை மெள்ள மெள்ளப் பலரிடம் கூறிவருகிறேன்.
பரவுகிறது இந்தச் சேதி. மக்கள் மனம் பதறுகிறது. இது நல்ல,
சுபசகுனம்! ஏன்! அந்தப்புர மாதர்கள்கூட, என் தூபத்தால்
மன்னனுக்கு விரோதமாகக் கிளம்பத் தயாராகிவிட்டனர். அதனால்தானே,
அந்தப்புரத்திலேயே அரசனைக் குத்திக் கொல்ல ஏற்பாடு செய்தேன்
- அரசனின் அபிமான ஸ்திரிகளும் சம்மதித்தனர் - அந்த மடையர்களால்
முடியவில்லை, மன்னனைக் கொல்ல, வேறு ஏற்பாடு செய்தாக வேண்டும்
- அதுவும் லிங்கண்ணா மூலமாகத் தான்! பார்ப்போம், பழி
வாங்காது விடக்கூடாது - முடியாது போனால் முப்புரியா இது?...
எப்புரியிலும் நம்மவர் போட்ட திட்டம் தோற்றது கிடையாது.
மதுரை மண்டலத்திலே மட்டும், நமது முறை தோற்றா போகும்.
இல்லை, இல்லை, வெற்றிகிட்டும்! லிங்கண்ணா வெறி கொண்ட
வனாகவே காணப்படுகிறான். ஒரு நல்ல திட்டம் தயாரித்துக்
கொண்டு, அவன் உதவியைத் தேடினால் வெற்றிதான். திட்டம்
வேண்டும் - திட்டம் வேண்டும்.
லிங்கண்ணா
மோசமாகிவிட்டது, மன்னன் போக்கு. இந்தக் கிருஸ்தவப் பாதிரிகளுக்கு
இப்படியா இடம் தருவது! மதுரை கொந்தளிக் கிறது; மன்னன்
ஏதும் நேரிடாது என்று இருக்கிறான், மமதையுடன். என்னிடம்
துளியாவது மதிப்பு இருக்கிறதா! என்ன செய்துவிட முடியும்
என்ற தைரியம்.
ராஜ சபையிலேயே நம்மையெல்லாம் அலட்சியப் படுத்துகிறான்.
எவ்வளவு தைரியமாக மத விஷயத்தைக் கண்டிக்கிறான்! இந்த மண்டலத்திலும்,
வேறு மண்டலங்களிலும், மறையவர்களிடம் மன்னர்கள் பயபக்தி
விசுவாசத்துடன் நடந்து கொள்கிறார்கள். திருமலை மட்டும்
தானே தர்க்கிக்கிறான். தர்க்கிப்பது மட்டுமா-அன்று ஒருநாள்,
சந்திரசேகர பட்டரிடம் சில புதிய கேள்விகள். பாதிரி தயாரித்தார்
- படிக்கிறேன், கேளுங்கள் - பட்டரே! பதில் கூறிட முடியுமானால்
நல்லது. கவனமாகக் கேட்க வேண்டும் என்று கூறி என் எதிரிலேயே
அந்தப் பிராமணனை எவ்வளவு கேவலப்படுத்தி விட்டான் - மதத்தையும்
பழித்தான்.
“ஓய்! பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தவர் கடவுள் தானே!”
“ஆமாம் - சந்தேகமென்ன - வேதப் பிராமணாதிகள் அதைத்தான்
வலியுறுத்துகின்றன - உபநிஷத்தும்...”
“போதுமய்ய... நான்தான் ஒப்புக் கொள்கிறேனே. ஒப்புக்
கொள்ளும் விஷயத்துக்கு ஓராயிரம் ஆதாரம் ஏன்?”
“பிரபஞ்சத்தைச் சிருஷ்டித்தான் கடவுள் - உம்மையும் என்னையும்
- ஊராள்வோனையும் உழவனையும் - ஈ எறும்பு முதலாய எண்பத்தி
நான்கு கோடி ஜீவராசிகளையும் சிருஷ்டித்தான்...”
“சிருஷ்டித்தானல்லவா? இதிலே மக்கள், ஆண்டவனின் குழந்தைகள்தானே...”
“ஆமாம்”
“அப்படி இருக்க, இதிலே, உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி என்று
பேதம் ஏன்?”
“அது சாஸ்திரம்”
“சாஸ்திரம்! சர்வேஸ்வரனுடைய வேலையைக் கெடுப்பதா சாஸ்திரத்தின்
இலட்சணம்?”
“இல்லை.”
“என்ன, இல்லை... இல்லை. நாலு ஜாதிக்கு, என்ன காரணம் கூறுகிறார்கள்...?”
“பிரம்மனின் முகத்தில்...”
“முகத்திலே, தோளிலே, துடையிலே, பாதத்திலே, இப்படிக் கூறுகிறார்களே,
அது, இந்த நாட்டுக்கு மட்டும் இருக்கிறதே தவிர, உலகிலே
மற்ற நாடுகளிலே இல்லையே, ஏன்?”
“தெரியவில்லை...”
“விசாரிக்கப்படாதோ...”
“யாரை...”
“விஷயம் தெரிந்தவர்களை...” என்று பேசிவிட்டு ஒரு பேய்ச்
சிரிப்பு சிரித்தபோது, எனக்கு வந்த கோபம், கட்டாரி மீதே
கை சென்றது. ஊர் மக்கள், இவனை ஒழித்துக் கட்டுபவர்களை
வாழ்த்துவார்கள். அவ்வளவு வெறுப்பு வேந்தனிடம். யாரும்
தன்னை ஏதும் செய்ய முடியாது என்ற அகம்பாவம். யாரும் ஒன்றும்
செய்ய முடியாதா? நான் என்ன, மரமா! வாள் ஏந்தி அறியாதவனா!
இந்த மண்டலத்தையே ஆளும் வல்லமை உண்டு! எனக்கு! ஆள நினைத்தால்தான்
என்ன தவறு! அன்னியருக்கு இடமளிக்கும் இந்த மன்னனை ஒழித்துவிட்டு,
நானே மன்னனானால், ஒரு தவறும் இல்லை, பதவி ஆசை என்பார்கள்
- ராஜத் துரோகம் என்று சிலர் தூற்றுவார்கள். ஆனால், மக்களுடைய
மனம், எனக்குத் தெரியும் நன்றாக, மாபாவியை ஒழித்தேன் என்று
கூடத் தைரியமாகக் கூறிவிடலாம். ஆனால் அவ்வளவு வெளிப்படையாகச்
செய்வது, ஒரு வேளை ஆபத்திலே கொண்டு போய்ச் சேர்க்கக்
கூடும். வேறுவிதமாகத்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். நல்ல
வேளையாக, இந்த பட்டர் கிடைத்திருக்கிறார். பாவம், வெளியே
சொல்ல முடியாத வேதனை அந்த ஆசாமிக்கு. இந்த நிலையில் உள்ளவரைத்
தான் தக்க கருவியாக்க வேண்டும். அவருக்கு உள்ள வேதனையின்
காரணத்தை அறிந்ததாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. அன்று,
மெள்ள ‘ஒத்திகை’ பார்த்தேன் நேர்த்தியாகவே இருந்தது; பட்டரின்
ஒத்தாசை நிச்சயம் கிடைக்கும் என்பதிலே சந்தேகமில்லை; மக்கள்
ஏதாகிலும் சந்தேகப் பட்டாலும், பட்டர் அவர்களைச் சரிப்படுத்திவிடுவார்!
அவர் என்ன சாமான்யமானவரா? தேவி சன்னதியில் பட்டாச்சாரியார்
அவர் வாக்கு சத்தியவாக்கு என்றுதான் யாரும் எண்ணுவார்கள்.
“மன்னனுக்கு மதி கூறுவதைவிட, மணலைக் கயிறாகத் திரித்து
விடலாம் போலிருக்கிறது; மறையவரே! விதண்டாவதம், பேசுவதெல்லாம்;
செய்வது, மகா மோசமான, மட்டரமான காரியம்...”
“மன்னன்! - ராஜா -!”
“மரப் பொம்மைகளா மக்கள்?”
“மன்னன் என்றால், எதுவும் செய்யலாம் என்றா எண்ணுவார்கள்?
அந்தக் காலம் மலையேறிவிட்டது.”
“மதுரையிலா?”
“ஏன்? இங்கு மாவீரர் இல்லை என்று எண்ணுகிறீரா?”
“லிங்கண்ணா! வீரருக்கு இங்கு என்ன முறை? உமது வீரதீரப்
பராக்கிரமத்தை நான் அறியமாட்டேனா?”
“ஆனால்...”
“ஆனால் என்று இழுக்கக் காரணம் அந்தணரே! என்ன கூறும்? ராஜ
விஸ்வாசம் பலமான பாசமல்லவா?”
“ஆமாம் - ஆனால் ராஜபதவி மிகவும் பொறுப்பானது அல்லவது?”
“ஆமாம் - தடை என்ன? - தர்மசாஸ்திரம் தவறாமல் நடப்பதுதான்
ராஜ தர்மம்...”
“தவறினால்...”
“ஆண்டவன் தண்டிப்பார்... ஆண்டவன் அதற்காகத் தான் மக்களுக்கு
அறிவையும் ஆற்றலையும் தந்திருக்கிறார். கடிக்க வரும் பாம்பை
எல்லாம் ஆண்டவன் துரத்திக் கொண்டு வந்து அடிக்க - வேண்டுமா
நாம் என்ன மண்ணாங்கட்டிகளா?”
“ஏது லிங்கண்ணா! புரட்சிப் பொறி வீசுகிறது. உன் பேச்சில்.”
“பட்டரே! மன்னரிடம் கூறிவிடும் - லிங்கண்ணா உமது நடத்தையைப்
பலமாகக் கண்டிக்கிறான் - மக்கள் ஆத்திரம் கொண்டுள்ளனர்
- அக்கிரமத்தைச் சகிக்க மாட்டார்கள் என்று கூறிவிடும்.”
“ஏன்? வேறு யார் கூறுவது? உமக்குத் தெரியவில்லையா? மன்னன்
நமது புராதன மார்க்கத்தையே நாசமாக்கத் துணிகிறான், பரங்கிகளின்
பேச்சைக் கேட்டுக் கொண்டு என்பது...”
“தெரிகிறது - மனம் வேகிறது அந்த மாபாவி செய்யும் காரியத்தை
நினைத்தால்” என்றல்லவா அன்று பேசினார். பட்டாச்சாரிக்கு
மனம் எரிமலையாகிக் கிடக்கிறது. அந்த நெருப்புக் குழம்பிலே
தள்ளிப் பொசுக்கிவிடலாம் மன்னனை. சரியான சமயம் வாய்க்க
வேண்டும். திட்டம் தீட்டியபடிதான் இருப்பார் பட்டாசாரி!
பழி வாங்கித் தீர வேண்டும் என்ற எண்ணம் அணையாத தீயாக இருக்கிறது
அவர் மனத்தில்.
திருமலை
பணம் இல்லாமல், எவ்வளவு திட்டங்கள் பாழாகிவிடுகின்றன.
நானும் கொஞ்சம் வீண் செலவு செய்துவிட்டிருக்கிறேன். அந்தப்புரத்தில்
மட்டும், தேவிமார் முன்னூறு - பரிவாரம் பல நூறு - பொன்
பாழாகிறது. இவ்வளவு அழகிகளும், என் சுந்தரவல்லியின் கால்
தூசுக்கு இணையாக மாட்டார்கள்! அந்தப் பொற்கொடியைப் பெற
அரும்பாடுபட்டேன் - பெற்றேன் - ஆனால் நிரந்தர விருந்தாகவில்லை.
பழைய போதை இந்தப் பட்டாச்சாரிக்கு. பாதிரிமார்கள்தான்
பட்டவர்த்தனமாகக் கூறினார்களே, ‘வைதீக வெறி, லேசில் போகாது’
என்று, எவ்வளவு வாதாடினேன், சுந்தரியைத் திருமணம் செய்துகொள்ள
வேண்டுமென்று. பிரளயம் வந்துவிடும் என்று பீதி கொண்டாள்,
அவள் அழுதபோதெல்லாம், அஞ்சிய போதெல்லாம், தைரியம் சொன்னேன்,
உன்னை என் தேவியாக்கிக் கொள்கிறேன் என்று. சில நாட்களில்
இந்தப் பட்டாச்சாரியின் பித்தம் தெளிந்து விடும். திரு
மணத்துக்குச் சம்மத்திப்பான் என்று எண்ணினேன். அதற்காகவே,
பழைய சாஸ்திர சம்பிரதாயங்களிலே உள்ள அர்த்தமற்ற, பொருத்தமற்ற
விஷயங்களை எல்லாம், பட்டாச்சாரியிடமே கூறினேன் - வேடிக்கையாகப்
பேசுவது போல. எதற்கும் அசையவில்லை. பாபம்! சுந்தரி திடீரென்று
மாண்டுபோனாள். மாரடைப்பு என்று புளுகினான். இருக்காது.
தற்கொலையாகத்தான் இருக்க வேண்டும். பேதைப் பெண் பீதி
கொண்டுவிட்டாள். பட்டாச்சாரி, அவள் செத்ததோடு சம்பவத்தையே
மறந்துவிட்டான். மகள் செத்தது கூட அவனுக்கு வருத்தமளிக்க
வில்லை; ஜாதி கெடவில்லை என்று மகிழ்கிறான். ‘எல்லாம் விதி’
என்ற ஆறுதல்! என்மீது கோபம்கூட இல்லை. மகாராஜவைக் கருவியாக்கி
பிரமன் தன் வேலையை முடித்துக் கொண்டான் என்று கூறி மனச்சாந்தி
தேடிக் கொண்டான் மடையன். ஆனால் ‘ராஜபக்தி’ அபாரம் அவனுக்கு.
இல்லாமலா, நான் பணமின்றி திண்டாடுவது தெரிந்து தேவி சன்னிதியில்
உள்ள இரகசியச் சுரங்கத்திலே பெரும் பொற்குவியல் பேழைகளில்
உள்ள இரகசியத்தைக் கூறினான்! பரம்பரை பரம்பரையாகச் சேர்க்கப்
பட்ட பொன்! நல்ல சமயத்திலே உதவுகிறது. இன்றிரவு நடுநிசிப்
பூஜையின்போது சென்று, எடுத்துவர வேண்டும். பட்டாச்சாரி
நமக்காகக் காத்துக் கொண்டிருப்பான். எத்தனை பேழைகளோ!
எவ்வளவு பொற்குவியலோ!
சந்திரசேகரப்பட்டர்
நடுநிசி! பக்தகோடிகளெல்லாம் போய்விட்டார்கள். பேராசைக்காரன்,
காமாந்தகாரன், என் மகளைக் கெடுத்துச் சாகடித்த காதகன்
வரப்போகிறான். பேழைகள் எத்தனை! பொற்குவியல் எந்த அளவு
இருக்கும் என்றல்லவா கேட்டான். வா, வா! சந்திரசேகரன் கட்டிய
சமாதி தயாராக இருக்கிறது. இதோ லிங்கண்ணாவும், வீரர்களும்,
எனக்குத் துணையாக வந்துள்ளனர். புல்லேந்தும் கரம்தான்.
ஆனால் இன்று உன் உயிரைப் போக்கும் வலிமை இதற்கு!! வேதனை
கோபம் வெட்கம், எது கிளம்பினால் தான் என்ன? மணியடிக்கும்
இவன், நம்மை என்ன செய்ய முடியும் என்று இறுமாந்து கிடந்தான்!
இதோ சவக்குழி தேவி கோயில் பட்டாச்சாரி வெட்டியிருக்கும்
சவக்குழி! உள்ளே சென்று, பேழைகளைப் பார்த்து, வாய் பிளந்து
நிற்கும்போது, இந்த விளக்குகள் அணைக்கப்படும்! இருள்
சூழ்ந்து கொள்ளும், பிறகு, இந்தப் பெரும்பாறை - லிங்கண்ணா
பலசாலி - இருவரும் சேர்ந்து சுரங்க வழியை இதனால் அடைத்து
விட வேண்டும் உயிரோடு சமாதி - காற்று கிடையாது. பாறைக்
கதவு தட்டிப் பயனில்லை, - உயிர் ஊசலாடும் - சித்திரவதை
- அணு அணுவாக உயிர் கத்தறிக்கப் படும். பிணமாவான் பேயன்!
லிங்கண்ணா, இதைத் தர்ம கைங்கரியம் என்றே எண்ணுகிறான்.
மதத்தைக் காப்பாற்ற மன்னனானாலும், அருமை மைந்தனானாலும்,
தாய் தகப்பனானாலும், சாஸ்திரம் அறிந்தவனாயிற்றே! நான்
எதற்காகப் பழிதீர்த்துக் கொள்கிறேன் என்பது, நல்லவேளை,
லிங்கண்ணாவுக்குத் தெரியாது. என் திட்டத்தை மெச்சினான்.
ஆமாம், அதோ மன்னன் - தேவி! உனக்குப் பலி! நரபலி! நரபலி!
சுந்தரி, உன் தந்தை சாமான்யனல்ல - இதோ பார், வருகிறான்,
சாக...!
மதுரை பக்தர்கள்காலம் கலியானாலென்ன, அற்புதம் நடவாமலா
போகும். நேற்று நடுஜாமப் பூஜையின்போது, நமது மன்னன்
திருமலை, தேவியோடு ஐக்கியமாகிவிட்டாராம். தேவியின் மகிமையே
மகிமை! திருமலைக்குக் கிடைத்த முக்தியே முக்தி. தேவியைத்
தரிசித்தபடி நின்றாரம் மன்னர் நெடுநேரம். பட்டாச்சாரியார்கூட
ஆச்சரியப்பட்டாராம். பாதிரிகளின் சகவாசத்தால், மன்னனுக்கு
மத நம்பிக்கைக் குறைந்துவிட்டதாக எண்ணிக் கொண்டோமே,
இவர் பக்திப் பரவசராகியல்லவா நிற்கிறார் என்று எண்ணி,
இப்படிப் பட்ட ‘பக்திமானை’ பழித்தோமே என்று வருந்தினாராம்.
மன்னன் கண்மூடி கரம் கூப்பி, மனனம் செய்தவண்ணம் இருக்கும்போது
பட்டாச்சாரியின் கண்களைப் பறித்துவிடும் படியான ஓர் ஜோதி
தோன்றிற்றாம், அம்பாளிடமிருந்து, முகத்திலிருந்தா, காலிலிருந்தா
என்று மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லையாம். ஜோதி தோன்றியதும்
‘பக்தா’ என்று தேவியின் குரல் கேட்டதாம்.‘வந்தேன்’ என்றாராம்
திருமலை; அவ்வளவுதான்! மன்னன் ஜோதியில் கலந்து விட்டாராம்!
என்னே, தேவியின் திருவருள்! என்னே, பக்தியின் பெருமை!
திருமலை நாமம் வாழ்க! திவ்ய ஜோதி வாழ்க! தேவியின் நாமம்
வாழ்க! திவ்ய ஜோதியில் கலந்த திருமலையான் திருநாமம் என்றென்றும்
வாழ்க!
(திராவிட
நாடு - 1952)