அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அறப்போர் நினைவுகள்
1

தம்பி!

கடவுளை மனிதன்தான் படைத்தான் என்பது சாணக்கியன் வாதம். மனிதனைக் கடவுள் படைத்தார் என்பது குமாரகிரியின் வாதம். கடவுள் யார்? எப்படி இருப்பார்? காட்ட முடியுமா? என்பது சாணக்கியன் கேள்வி. காட்டுகிறேன் காணீர் என்று சூள் உரைத்துவிட்டு, குமாரகிரி, "இதோ! ஜோதிமயமான ஆண்டவன்' என்று, அரச அவையின் மையத்தைக் காட்டுகிறார் - அங்கு அடிநுனி காண முடியாத விதமான ஜோதி. அரசன் உட்பட, அவையினர் அனைவரும் வியப்பிலாழ்கின்றனர். "சாணக்கிய வாதம் தோற்றுவிட்டது, சர்வேஸ்வரனைக் காட்டி விட்டார் குமாரகிரி' என்கின்றனர். சாணக்கியன் மட்டும், "ஜோதியா? இங்கா? கண்டீர்களா? எல்லோருமா? நான் காணவில்லையே!' என்று கூறுகிறான். அவையினர் சாணக்கியன் போக்கை வெறுக்கின்றனர். நாங்கள் அத்தனை பேரும் கண்டது பொய்த்தோற்றமோ என்று கேட்டுக் கோபிக்கின்றனர். தோல்வியால் தலை கவிழ்ந்துகொள்கிறான் சாணக்கியன். அனைவரும் திகைத்துக் கிடக்கும்போது, ஆடலழகி எழுந்திருக்கிறாள், குமாரகிரியிடம் வாதிட "கடவுள் என்பதாக ஒரு ஜோதியைக் காட்டினீர். அது உண்மைத் தோற்றமல்ல. உமது மன வலிமை காரணமாக, இங்குள்ள மற்றவர்களின் மனதை உமக்குக் கட்டுப்பட்டதாக்கிக்கொண்டு, ஜோதி தெரிவதாக நம்பும்படி செய்தீர். சாணக்கியரின் மனதை உமது மன வலிமை ஏதும் செய்ய இயலவில்லை. அதனால் அவர் கண்ணில் எந்த ஜோதியும் தென்படவில்லை; எனக்குந்தான். உண்மைதானே நான் சொல்வது?' என்று கேட்டாள். திடுக்கிட்டுப்போன குமாரகிரி, ஆம் என்று ஒப்புக்கொண்டான். "வெற்றி சித்ராவுக்கே' என்று அவையினர் ஆர்ப்பரித்தனர். வெற்றிச் சின்னம் சூட்டினர் சித்ராவுக்கு. அந்த ஆடலழகியோ அந்த வெற்றிச் சின்னத்தை யோகி குமாரகிரிக்குச் சூட்டுகிறாள். சீடன் சிவன், "காமக் களியாட்டக்காரி என்கிறார்கள், இவளோ கற்றோர் வியக்கும் தத்துவ வாதம் புரிகிறாள்' என்றெண்ணி வியப்படைகிறான்.

இந்த வெற்றியால் சித்ராவுக்கு மகிழ்ச்சி ஏற்படவில்லை; புதிய கவலை பிறந்துவிட்டது என்கிறான் பீஜகுப்தா. அவன் கண்டறிந்த கருத்திற்கேற்பவே, யோகி குமாரகிரியிடம், சித்ராவின் மனம் இலயித்துவிடுகிறது. அறிவாற்றல் மிக்கவன், அழகன், அவனே எனக்கு ஏற்றவன் என்று கருதுகிறாள் சித்ரா. துணிந்து ஆசிரமம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.

நீ போக போக்கியத்தில் புரள்பவள், உனக்கு இங்கு இடமில்லை என்று விரட்டுகிறார் யோகி. தங்களுக்குப் பணிவிடை செய்வதிலே இன்பம் காண்பேன், வேறு ஏதும் வேண்டேன், போக போக்கியங்களைத் துறக்கிறேன், பற்று அற்றவளாகிறேன் என்று கெஞ்சுகிறாள் சித்ரா. நீயா! பற்று அற்ற நிலை பெறப்போகிறாயா? போ! போ! உன்னால் முடியாது! என்று மேலும் விரட்டுகிறார் யோகி. உங்களுக்கு அச்சம்; நான் இங்கு இருந்தால், தவம் கலைந்துவிடும் என்ற பயம்; அதனால்தான் என்னை விரட்டுகிறீர். முற்றுந் துறந்தவரான உமக்கு ஏற்படலாமா அந்த அச்சம் என்று பேசி, மடக்குகிறாள் சித்ரா. சம்மதமளிக்கிறார் யோகி; சித்ரா ஆஸ்ரமத்தில் தங்குகிறாள்.

இது தெரிந்த பீஜகுப்தா மனம் உடைந்த நிலை அடைகிறான். சீடன் திகைக்கிறான்.

பாடலிபுத்ரச் சீமான் ஒருவர் தமது மகளை பீஜகுப்தாவுக்கு மணம் செய்விக்க விரும்புகிறார். அந்தப் பெண் பெயர் யசோதரா. அவளையோ சீடன் சிவன் காதலிக்கிறான். இந்தச் சிக்கல் இங்கு வளருகிறது.

ஆஸ்ரமத்திலேயோ முற்றுந் துறந்தவரின் நிலை குலைகிறது; காமவிகாரம் மேலிடுகிறது, போகபோக்கியத்தில் புரண்டு கிடந்தவளோ, துறவு நிலையே மேற்கொள்கிறாள் - யோகியோ, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, அவளை அண்டவே ஆரம்பிக்கிறார். ஆடலழகியோ தன்னைத் தீண்ட இடம் தரவில்லை. யோகியாருக்கு ஆசைகளை அடக்கவேண்டிய அவசியம் பற்றிப் போதனை செய்கிறாள்!

ஒரு நாள், பீஜகுப்தா யசோதராவை மணம்புரிந்து கொண்டதாக, யோகி கூறி, இனி அவனைப்பற்றிய நினைவை விட்டொழி, என்னை ஏற்றுக்கொள், நான் வெறும் மாயையில் மூழ்கிக் கிடந்தேன், இனி உன்னுடன் வாழ்ந்துதான் மெய்ப் பொருளை உணர முடியும், வா! என்று அழைக்கிறார். யோகியை நாடிவந்தபோதிலும் சித்ராவின் உண்மைக் காதல் குப்தனிடம். எனவே, குப்தன் யசோதராவைத் திருமணம் செய்துகொண்டதாக யோகி கூறினதும் திடுக்கிட்டாள்; அந்த அதிர்ச்சி அவனை நிலைகுலையச் செய்தது; அந்தச் சந்தர்ப்பத்தை யோகி விருந்தாக்கிக்கொண்டார். யோகம் கலைந்தது; போக வாழ்க்கையைத் துவக்கினார் குமாரகிரி.

இங்கே, யசோதரை - சிவன் காதல் விஷயம் பீஜகுப்தனுக்குத் தெரிகிறது. சித்ராவை இழந்துவிட்டோம், இனி யசோதராவைத் திருமணம் செய்துகொண்டு புது வாழ்வு தொடங்கலாம் என்று பீஜகுப்தன் தீர்மானிக்கும்போது, சிவன் காதல் தெரியவருகிறது. மனம் குழம்புகிறது. விரைவில் தெளிவு பெற்று, தன் சொத்து முழுவதையும் சிவனுக்கு எழுதிவைத்து, யசோதராவையும் திருமணம் செய்துவைக்கிறான். இதைக் கேட்டறிந்த சித்ரா, சீறுகிறாள் யோகியிடம் - கேவலம் சிற்றின்பத்துக்காகப் பொய் பேசி என்னை ஏய்த்தீர். பற்று அற்றவரோ நீர்! யோகியோ? என்று ஏசிவிட்டு, எத்தனை இன்பத்திலே மூழ்கிக்கிடந்தாலும், அத்தனையையும் ஒரு நண்பனுடைய நல்வாழ்வுக்காகத் துறந்துவிட ஒப்பி முடிவெடுத்த குப்தனே உண்மையான யோகி; அவனிடம் பணிவிடை செய்வதே எனக்கு இனித் தவம் என்று கூறிப் பாடலிபுரம் செல்கிறாள் - விவரம் விளக்கம் பேசிக் கொள்கிறார்கள். சித்ராவும், குப்தனைப்போலவே செல்வம் சுகம் யாவற்றையும் துறந்துவிட்டு குப்தனுடன் கிளம்புகிறாள், ஏழையாக.

ஓராண்டுக்குப் பிறகு இரு சீடர்களும் குருவிடம் சென்று தாம் கண்டவைகளைக் கூறுகின்றனர். காமக் களியாட்டத்தில் உழன்றபோதிலும், நினைத்தபோது எதையும் துறந்துவிடத் துணிவுபெற்ற பீஜகுப்தனே, முற்றுந்துறந்தவராக இருப்பினும் பேரழகியைக் கண்டபோது நிலைகுலைந்து காமச்சேட்டையில் ஈடுபட்ட குமாரகிரியைவிட, மேலோன் என்று முடிவு செய்கிறார்கள்.

ஆகவே சீடர்களே! அவரவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப நிகழ்ச்சிகள் அமையும்; அதனை ஆராய்ந்து பார்த்த பிறகே எது பாபம் என்பதுபற்றி முடிவுகட்ட முடியும் என்று குரு கூறிச் சீடர்களை அனுப்பிவைக்கிறார்.

இத்தனை பேர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையிலேயே, இதுதான் பாபம் என்று உறுதியாகக் கூறமுடியவில்லை என்கிறபோது, காக்கையால் கொத்தப்பட்டுச் சாக இருந்த குருவியை நான் எடுத்து கூண்டிலிட்டு வளர்ப்பது பாபம் ஆகாது என்ற நினைப்புடன்தான், குருவியை வைத்துக் கொண்டு விளையாடிக்கொண்டிருக்கிறேன்.

9-5-1964

நீண்ட பல நாட்களாக நடைபெற்றுக்கொண்டு வந்த மதுரை வழக்கு முடிவுபற்றி இன்று பத்திரிகையில் பார்த்துப் பதறிப்போனோம். ஏற்கனவே கிட்டத்தட்ட ஆறு திங்கள் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த முத்துவுக்கும் அவரது குழுவினருக்கும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும், குற்றம் செய்ய உடந்தையாக இருந்தார்கள், தூண்டிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட கருணாநிதி, நடராஜன் உள்ளிட்ட குழுவினருக்கு ஆறு திங்கள் கடுங்காவல் தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் மதுரை முத்துவுக்கும் அவர் குழுவினருக்கும் ஒன்றரை ஆண்டு சிறை என்று ஆகிறது. மதுரை முத்து இது குறித்து மனக்கலக்கம் அடையமாட்டார் என்றாலும், அவருடைய குடும்பத்தினர் நிச்சயமாகக் கலங்கித் தான் போயிருப்பார்கள். பல திங்களாகவே முத்து, அறப்போர் பற்றியும், தண்டனை கடுமையாக இருக்கும் என்பதுபற்றியும் இல்லத்தாரிடம் சொல்லிவைத்திருப்பார் என்றாலும், அரசியல் சட்டம் கொளுத்தியதற்காக வேறு இடங்களில், மாதக்கணக்கிலே தண்டனை தரப்பட்டிருக்க முத்துவுக்கும் அவர் குழுவினருக்கும் ஓராண்டு தண்டனை தரப்பட்டிருப்பது வேதனையைத்தான் கிளறிவிட்டிருக்கும். நாங்கள், முத்து காவலில் இருந்துவரும் நாட்கள் அதிகப்பட அதிகப்பட, கவலைப்பட்டபடி இருந்தோம். ஆறு திங்கள் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருப்பதால், தண்டனை அதிக காலத்துக்குத் தரமாட்டார்கள், சில மாதங்களே இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்த நானும், அதிர்ச்சி அடைந்தேன்.

தென்பாண்டி மண்டலத்தில், முத்துவின் பிரசாரப் பணி ஓராண்டுக்கு நடைபெற இயலாமற்போவது இயக்கத்துக்கு ஒரு நட்டம்தான் என்றாலும், அவர் சிறையில் இருப்பதை எண்ணி எண்ணிப் பல்லாயிரக் கணக்கினர் மனம் வேதனைப்படுவர் என்பதும், அந்த வேதனையே இயக்கத்தை வளர்த்திடத்தக்க எழுச்சியாக மாறும் என்பதையும் எண்ணிப் பார்க்கும்போது, முத்து நீண்டகாலத் தண்டனை பெற்றிருப்பது இயக்கத்துக்கு மிகுதியான பயனையே இறுதியில் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எண்ணி, என் மனதுக்கு ஆறுதல் தேடிக் கொண்டேன். முத்து, இதுபோல நீண்டகாலத் தண்டனைதான் தனக்குத் தரப்படும் என்று முன்பே எதிர்பார்க்கும் தோரணையில் அறப்போருக்கு முன்பு மதுரை சென்றிருந்த என்னிடம் பேசிக் கொண்டிருந்த நினைவும், குடும்பத்தாருடன் என்னை வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சியின் நினைவும் என் நெஞ்சினில் தவழ்ந்தது. அறப்போரில் ஈடுபட்டவர்களிலேயே அதிககாலச் சிறைத்தண்டனை பெறும் வாய்ப்பை, முத்து பெற்றுவிட்டார் என்பது, அவரைப் பிரிந்திருக்கும்பொழுது வேதனையாகத் தென்பட்டாலும், பிறகு நமக்கெல்லாம் பெருமிதம் தரும் என்பதில் ஐயமில்லை.

கருணாநிதியும் நடராஜனும், அறப்போரில் ஈடுபடுவதற்கான நாளை அவர்களே தேர்ந்தெடுத்து அறிவித்துமிருக்கிறார்கள். இடையிலே அவர்கள் ஆற்றவேண்டிய பணி நிரம்ப. எனவே, அவர்கள் தம்மீது தொடரப்படும் வழக்குபற்றி உயர்நீதி மன்றம் வரை சென்று நீதி பெற முயற்சிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தண்டனை பெற்ற அனைவரும் திருச்சி சிறையில், இன்றிரவு இருக்கிறார்கள். நானும் நண்பர்களும் சென்னைச் சிறையில். இடையிலே இருநூறு கல் தொலைவு என்றாலும் காடு மலை கடந்து நெடுவழி தாண்டி, என் எண்ணம், திருச்சிச் சிறையிலே உள்ள அறப்போர் வீரர்களிடம் செல்கிறது. இன்றிரவு அவர்கள் நினைவுடனேயே இருப்பதால் தூக்கமும் எளிதாக வராது என்று எண்ணிக்கொண்டேன்; ஆனால் ஓரிரு மணி நேரத்துக்குப் பிறகு, தமிழ் காத்திடும் வீரர்கள் எங்கெங்கு உள்ளனர், எத்துணை ஆர்வத்துடன் பணிபுரிகின்றனர், எவ்வளவு கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை எண்ணியபோது, ஒரு புதுவித மகிழ்ச்சியே பிறந்தது; அந்த களிப்புணர்ச்சியைத் துணை கொண்டு கண்ணயரச் செல்கிறேன்.

11-5-1964

நேற்று, ஞாயிற்றுக்கிழமை - உப்புச் சப்பற்ற விடுமுறை நாள். படிப்பதும் பேசிக் கொண்டிருப்பதுமாகப் பொழுதை ஓட்டினோம்.

இன்று காலை பிறந்ததும், நாங்கள் நூற்பதற்காக ஒப்படைத்திருந்த ராட்டைகளையும், தக்ளியையும், அந்தத் துறையினர் எடுத்துக்கொண்டு போய்விட்டனர். கணக்கெடுக் கிறோம் என்று காரணம் கூறினார்கள். நமது தோழர்களோ இதிலே ஒரு இரகசியம் இருக்கிறது; நாளை மறுநாள் விடுதலை செய்யப்போகிறார்கள்; ஆகவேதான் இன்று இவைகளை எடுத்துக்கொண்டு போகிறார்கள் என்ற பேச்சைத் துவக்கி விட்டார்கள். அவரவர்களுக்கு உள்ள வாதத் திறமையைக் காட்டினர். ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர்களுக்கே தெரியும் சலுகைகாட்டி விடுதலை செய்யப்போவதில்லை என்பது. என்றாலும் சிறையிலே எழும் பேச்சுகளில் இது மிகச் சுவைதரும் வகையானது என்பதால் பேசுகிறார்கள்.

இன்று உள்ளபடி மகிழ்ச்சி தரும் செய்தியை "முரசொலி' தந்திருந்தது. நமது கழகத்தவர்மீது தொடரப்படும் பல்வேறு வழக்குகளை நாம் சந்தித்தாகவேண்டி நேரிட்டுவிட்டது; இதற்காகும் செலவுக்கான பணம் பொது மக்களின் ஆதரவினால் கிடைக்க வேண்டும். இந்த நல்ல நோக்கத்துடன் சென்னை நகரில் ஒவ்வொரு வட்டத்திலும் தோழர்கள் "உண்டி' வசூல் செய்து கிட்டத்தட்ட ஆறு ஆயிரம் ரூபாய் திரட்டிய செய்தி பார்த்து மகிழ்ந்தோம். பொது மக்களின் பேராதரவு கழகத்துக்கு வளருகிறது என்பதை எவரும் அறிந்துகொள்ள இது தேவைப்படுகிறது. கழகத் தோழர்கள் பொதுமக்களுடன் தோழமைத் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவும் இது நல்ல வாய்ப்பாகிறது. இந்த நல்ல பணியில் ஈடுபட்டு, பொருளும் புகழும் ஈட்டிய தோழர்களுக்கெல்லாம் நன்றி கூறிக்கொண்டேன், இங்கிருந்தபடி. நான் வெளியே இருந்திருந்து இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருந்தால் இத்தகைய வசூலின்போது ஐம்பது ரூபாய்க்குக் குறையாமல் ஒவ்வொரு வட்டமும் வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பேன். சில வட்டங்கள் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாகத் திரட்டி உள்ளது தெரிகிறது. வெளியே சென்றதும், அந்த வட்டங்களிடம் மிகுதித் தொகையைக் கேட்டுப் பெறப்போகிறேன் என்று இங்கு நண்பர்களிடம் கூறினேன்.

இரண்டு நாட்களாக மனித குலத்தின் வளர்ச்சிபற்றி ஆராய்ச்சி ஏடு ஒன்று படித்துக்கொண்டிருந்தேன். புல்லாகிப் பூண்டாகி என்று இங்கு தேனொழுகப் பாடிட நம்மிடம் கவிதை இருக்கிறது, இல்லை என்று கூறவில்லை. ஆனால், இந்தத் துறையிலே, ஆண்டு பல உழைத்து, நுண்ணறிவினர், ஆராய்ச்சி நடத்தி அரிய உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள் - மேனாட்டில். அவர்கள் அங்கு எடுத்துக்கொண்ட அரும் முயற்சிகளை வியந்து பாராட்டிப் போற்றவேண்டியது முறையாயிருக்க, இங்கு நம்மிலே சிலர், இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஆராய்ச்சி உண்மைகள் அவ்வளவும், அதற்கு மேலும்கூட, நம் நாட்டிலே வெகு பழங்காலத்திலேயே கண்டு பிடிக்கப்பட்டன என்று பேசிக்கொள்வதிலே பெருமை இருப்பதாகக் கருதுகிறார்கள். புல்லாகிப் பூண்டாகி என்ற கவிதைகூட, உயிர்களின் தோற்றம், வளர்ச்சி எனும் அறிவுபெற அல்ல. பாவபுண்யங்களுக்கு ஏற்றபடி பிறவிகள் எடுக்கப் படுகின்றன என்ற வைதீகக் கருத்தை விளக்க எழுந்ததேயாகும். பழம் பாடல்களை, இன்றைய ஆராய்ச்சி உண்மைகளை அன்றே தெரிவித்திட ஆக்கப்பட்ட அறிவுப் பாக்களாகும் என்று வாதிடுவது சுவை அளிக்கலாம்; பயன் இல்லை. அந்தப் பாடல்கள் அந்நாட்களில் "அருளாளர்'களின் கருத்தோவியங்கள். கண்டு பிடிப்புகளுக்கான வழிகளைக் கூறம் பாடங்கள் அல்ல. சொல்லிக் கொள்ளலாம், சுவைக்காக. "சந்திர மண்டலம் போகலாம் என்பதுபற்றி இன்று ஏதோ பெரிய ஆராய்ச்சி செய்கிறார்களாம். இதனை மிகப்பெரிய விந்தை என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் வள்ளலார், "நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே அங்கு நானும் வரவேண்டுகிறேன் வெண்ணிலாவே'என்பதாக, அன்றே பாடினார் - உங்களுடைய அவ்வளவு ஆராய்ச்சியையும் ஒரே அடியிலே அடக்கிக் காட்டிவிட்டார்,'' என்று பேசிக் கொள்ளலாம். பயன் என்ன? அவருடைய அந்த அடியை வைத்துக்கொண்டு, தைப்பூசத்துக்குப் பயன்படுத்தினோமேயன்றி, வெண்ணிலா இருக்கும் இடம் செல்ல வழி என்ன என்று ஆராய்ச்சி நடத்த அல்ல. இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் தமிழகத்தில் பழங்காலத்திலே அறிந்திருந்தனர் என்று விளக்க, இதுபோன்ற சில பல கவிதைகளைப் பின்னி எழுதப்பட்ட ஒரு தமிழ் ஏடு பார்த்துவிட்டு, அன்பழகன் அதில் உள்ளவைகளைப் படித்துக்காட்டி இதுபோல் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். தமிழ்ப் பேராசிரியராகப் பச்சையப்பன் கல்லூரியில் அவர் பணியாற்றிய நாட்களில், அவருடைய வகுப்பறை எவ்வளவு பயனளித்திருக்கும் என்று அன்று ஓரளவு உணர முடிந்தது.

நான் படித்துக்கொண்டிருந்த மனிதகுல ஆராய்ச்சி பற்றிய ஏடு, பாசுரங்கள், அருளாளர் வாக்குகள் ஆகியவைகளிலே இருந்து அடிகளைப் பெயர்த்தெடுத்துப் பிழிந்து, இதோ ஆராய்ச்சியாளரின் கண்டுபிடிப்புகளின் கருப்பொருள் என்று கூறிடும் முறையிலே எழுதப்பட்டதல்ல. கற்காலத்துக்கு முன்பு இருந்த நிலையிலிருந்து, கற்காலம் நாடோடிகளாக வாழ்க்கை நடத்திய காலம், பயிரிட்டுப் பிழைத்த காலம் என்று மனிதகுலம் படிப்படியாகப் பெற்ற வளர்ச்சியின் தன்மைகளை, புதை குழிகளில் கிடைத்த எலும்புக் கூடுகள், அந்த எலும்புகளிலே காணப்பட்ட வெட்டுக்காயக் கோடுகள், சாம்பற் குவியல், குகைகளிலே காணப்பட்ட கற்கருவிகள், அந்தக் குகைகளின் சுவர்களிலே தீட்டப்பட்டிருந்த ஓவியங்கள் என்பன போன்றவைகளை, அடர்ந்த காடுகள் சூழ்ந்துள்ள இடங்களில், மனித நடமாட்டமற்ற இடங்களிலே கல்லி எடுத்து, அவைகளின் தன்மைகளிலிருந்து காலத்தைக் கணக்கெடுத்து, அன்று இருந்தவர்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டறிந்து கூறப்பட்டுள்ள ஏடு. பொழுதுபோக்காக ஒரு முறை படித்துவிட்டு புரிந்துவிட்டது என்று சொல்லிவிடத்தக்க ஏடு அல்ல. பல முறை படித்திடவும், சிந்தித்துப் பொருள் பெறவும் வேண்டும். இன்று பெரும்பகுதி அந்த நூலைப் படிப்பதிலேயே செலவிட்டு மகிழ்ச்சி பெற்றேன்.

12-5-1964

இப்போது, குருவிகள் நான்கு உள்ளன - ஆமாம், காக்கைகளிடமிருந்து தப்பி எங்களிடம் கிடைத்தவையும், நண்பர் ஏகாம்பரம் கூடையைக் கண்ணியாக வைத்துப் பிடித்த குருவியும். பகலில் அறைக்கு வெளியே கூண்டு வைக்கப்படுகிறது; அருகில் நான் அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ, குருவிகளின் நடமாட்டத்தின் வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விநாடியும் குருவிகள் எப்படிக் கூண்டைவிட்டு வெளியே செல்வது என்ற முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளன; இடையிடையே தீனி பொறுக்குகின்றன; இந்தக் குருவிகளிலே ஒன்றினுடைய தாய்க்குருவி மட்டும் கூண்டுக்கு வெளியே வட்டமிடுவதும், குஞ்சுக்கு வெளியே இருந்தபடியே தீனி கொடுப்பதுமாக இருக்கிறது. மற்றக் குருவிகள் தாமாகத் தின்றிடும் பக்குவம் அறிந்துகொண்டுவிட்டன. இது ஒன்று மட்டும், தாயின் உதவியைப் பெறவேண்டிய பருவத்திலிருக்கிறது. அந்தத் தாய்க் குருவியும், மிகுந்த பாசத்துடன், குஞ்சுக்குத் தீனி கொடுக்க, அடிக்கடி கூண்டு இருக்குமிடம் வருகிறது. இரவு, கூண்டு என் அறையில். என்னோடு பொன்னுவேலுவும் வெங்காவும் இருப்பதால் காவலாளிகள் கணக்கெடுக்க வரும்போது, "மூன்று' என்று வழக்கமாகக் கணக்குக் கொடுப்பதுண்டு; இப்போது ஏழு என்று வேடிக்கையாகக் கணக்குக் கொடுக்கிறோம்.

16-5-1964

இரண்டு மூன்று நாட்கள் குறிப்பு எழுதவில்லை. நிகழ்ச்சிகளில் புதுமையும் இல்லை; குறிப்பிடத்தக்கவையாகவும் இல்லை. சிந்தனையில் தோன்றியவைகளை எப்படி இங்கு வடித்துக்காட்ட முடியும்? பகலில், அரசியல் பிரச்சினைகள் பல பற்றி நண்பர்களுடன் பேசுவது, இரவு அறையில் அமர்ந்து வரைவது, எழுதுவது, படிப்பது இப்படி. ஷேக் அப்துல்லாவின் முயற்சிகளைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அப்துல்லாவிடம் நட்புறவு காட்டி ஆச்சாரியார், ஜெயப்பிரகாசர், விநோபா ஆகிய மூவரும் பிரச்சினை தீர வழிகளைக் கூறி இருப்பதாகச் செய்தி வந்திருப்பதுபற்றி நண்பர்கள் விளக்கம் கேட்டார்கள். ஆராயத் தக்க விதமான வடிவத்தில் இன்னும் எந்த வழியும் எடுத்துக் காட்டப்படவில்லை. எனவே இப்போது இந்தப் பிரச்சினையில் அவசரமோ, பரபரப்போ காட்டவேண்டிய அவசியம் எழவில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. பாகிஸ்தானும், ஒப்புக் கொள்ளத்தக்க ஒரு சமரசத் திட்டம் கிடைக்க முடியுமா என்பதிலேயே எனக்கு ஐயப்பாடு எழுகிறது. ஜனநாயக முறையைக் குலைத்துவிட்ட ஒரு அதிபரின் கீழ் பாகிஸ்தான் இருக்கும்போது, அங்கிருந்து நட்புறவு, சமரசம், தோழமை என்பவை கிடைக்க முடியுமென்றும் எனக்குத் தோன்றவில்லை என்று நான் கூறினேன். பண்டித நேருவிடம் கொண்டுள்ள பயபக்தி விசுவாசம் காரணமாகவே, காங்கிரசில் உள்ள மற்றத் தலைவர்கள் அப்துல்லாவை எதிர்க்காமலிருக்கிறார்கள் என்பதும் நன்றாகத் தெரிகிறது என்பதுபற்றியும், பேசிக்கொண்டிருந்தேன்.

காஞ்சிபுரத்தில், அரசியல் சட்ட மொழிப்பிரிவைக் கொளுத்துவதன் மூலம் தமிழகத்திலுள்ள இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை எடுத்துக்காட்டிய அறப்போர் வீரர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, கம்பராசபுரம் இராசகோபால், காஞ்சிபுரம் துரை அச்சக உரிமையாளர் சம்பந்தம், சீதாபுரம் ராமதாசு, மாதவரம் வேதாசலம் ஆகிய ஐவருக்கும் ஆறுமாதக் கடுங்காவல் தண்டனையும், அந்த நிகழ்ச்சியின்போது தொடர்பு வைத்துக்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மாவட்டச் செயலாளர் சி. வி. எம். அண்ணாலை, நகர செயலாளர் மார்க், பொதுக்குழு உறுப்பினர் சபாபதி ஆகிய மூவருக்கும் ஆறு வாரக் கடுங்காவல் தண்டனையும், செங்கற்பட்டு வழக்கு மன்றத்திலே விதிக்கப்பட்டு, நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த நெல்லிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி பி. ஏ., பி. எல். லும், காட்டுமன்னார்குடி தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தியும், குற்றம் மெய்ப்பிக்கப்படவில்லை என்பதனால், விடுதலை செய்யப் பட்டார்கள் என்றும் இதழ்கள் மூலம் செய்தி கிடைத்தது.