அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அரசியல் - மற்றும் பல சிந்தனைகள்
2

கே. பி. சுந்தரம் கண் வலிக்கு மருத்துவம் பெற எழும்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். காலை 9-மணிக்குச் சென்றவர் 11-மணிக்குள் திரும்பச் சிறைக்குக் கொண்டு வரப்பட்டார்.

இந்த இரண்டு நாட்களாக, மதுரைப் பள்ளிக்கூடம் இடிந்ததால் ஏற்பட்ட பயங்கரமான விபத்துபற்றிய செய்தி, எங்களைத் திகைப்பிலும், துயரத்திலும் ஆழ்த்திற்று. இதுபோன்றதோர் கோரமான நிகழ்ச்சி, நாம் இதுவரை கேள்விப் படாதது என்பதால், எங்கள் மனம் மெத்த வேதனைப்பட்டது. தமது செல்வங்களைப் பறிகொடுத்துவிட்டுக் கதறிடும் குடும்பங்களுக்கு, யார்தான் ஆறுதல் கூறமுடியும் - என்னவென்றுதான் ஆறுதல் கூறுவது! நினைத்தாலே நெஞ்சு பகீர் என்றாகிவிடுகிறது. அன்பழகன் சொன்னார், "சென்னையிலும், அண்ணா! பல பள்ளிக்கூடக் கட்டடங்கள் கலனாகிக் கிடக்கின்றன. அவைகளை உடனடியாகக் கவனித்து தக்க முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்'' என்று. ஆமாம்! கட்டடங்களைப் பரிசீலித்து, முறைகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்க வேண்டும் என்று நான் கூறினேன்.

இன்றைய பத்திரிகையில், நமது தோழர் வி. முனுசாமி, இவ்விதமான ஒரு குழுவை அமைத்திருக்கும் செய்தி பார்த்தோம் - மகிழ்ச்சிகொண்டேன்.

இங்கே நாங்கள் தங்கியுள்ள சிறைப்பகுதி, புதிதுதான் என்றாலும், வெடிப்புகளும், கீறல்களும், பல இடங்களில் உள்ளன. வெகு சமீபத்திலேயே இரயிலின் ஓட்டம். இலேசான அதிர்ச்சிகூட இருப்பதை உணர முடிகிறது. இதைப்பற்றிய எண்ணமும் பேச்சும் இன்று எங்களிடையில் எழுந்தது. பிற்பகல்லி, கட்டடத்துறை அதிகாரிகளை அழைத்துக்கொண்டு, சிறை மேலதிகாரி இங்குவந்து, வெடிப்புகளையும், கீறல்களையும் காட்டினார். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள்.

மீண்டும், கே. டி. எஸ். மணியிடம் காஞ்சிபுரத்து கழக நிலை, அரசியல் நிலைபற்றிய விவரங்களைக் கேட்டறிந்துகொண்டேன்.

கே. டி. எஸ். மணிக்குக் காஞ்சிபுரத்தில் உள்ள, கம்யூனிஸ்டுகளிடம் நட்பு உண்டு எனவே, காஞ்சிபுரம் கம்யூனிஸ்டுகளின் நிலை, இப்போது என்ன? அவர்கள் எந்தப் பக்கம்? மணலி கட்சியா? ராமமூர்த்தி கட்சியா? என்று கேட்டேன். அனைவரும் ராமமூர்த்தி கட்சிதான் என்று கூறினார்.

ராமமூர்த்தி கட்சி என்பது காங்கிரசை எதிர்க்கும் அணியாக இருப்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அந்த அணி, சீனாக் கட்சி என்று கூறப்படுகிறதே, அது கண்டிக்கத்தக்கதாயிற்றே. இந்தப் பிரச்சினையில் காஞ்சிபுரத்துக் கம்யூனிஸ்டுகளின் நிலைமை என்ன என்று கேட்டேன். அதுபற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றார்.

தனிக் கட்சியே துவக்கிவிடத் திட்டமிடுகிறார்கள் ராமமூர்த்தி அணியினர் என்று சொன்னார். பத்திரிகையிலும் அப்படித்தான் செய்தி வருகிறது டில்லியில் ஏ. கே. கோபாலன் போன்றாரும் இதுபோலத்தான் என்னிடம் கூறினார்கள். ஆனால் தனிக்கட்சி துவக்கி என்ன பலன்? அதிகமான பலன் இருக்குமென்று எனக்குத் தோன்றவில்லை என்று கூறினேன். பொதுவாக கம்யூனிஸ்டுகள், தங்களுடைய வளர்ச்சியைவிட கழகத்தை அழிப்பதையே முக்கிய குறிக்கோளாக உடனடித் திட்டமாகக் கொண்டுவிட்டிருக் கிறார்கள் என்று மணி கூறினார்.

அவர்கள் நினைப்பதுபோலவே ஆகிவிடுகிறது என்றே வைத்துக்கொள்வோம், அதனால் யாருக்கு ஆதாயம்? காங்கிரசுக்குத்தானே! கழகத்தை ஒழிக்க காங்கிரசுடன் குலவுவது, கம்யூனிஸ்டு கட்சிக்கு என்ன பலன் கொடுக்கும் என்று நான் கேட்டேன். அந்தக் கேள்வி எழும்போது கம்யூனிஸ்டுகள் அதிர்ச்சி அடைகிறார்கள் - பதில் கூறுவதில்லை என்றார் மணி.

காமராஜரும், பத்திரிகைகளும் ஏன் இப்போது கம்யூனிஸ்டு களைத் தட்டிக் கொடுக்கிறார்கள் என்று நண்பர்கள் கேட்டனர்.

இது அவருடைய பழைய வித்தைதானே! நப்பாசை என்று சொல்லலாம். பெரியார் தி. மு. கழகத்தைத் தாக்கியபோது, காமராஜர் தூபமிட்டார். இப்போது அதுபோல வேறு சிலருக்கும் ஆதரவு தருகிறார். கண்டபடி ஏசுகிறார்கள். இதனால் கழகத்திடம் பொதுமக்கள் அருவருப்பு அடைவார்கள் என்பது அவருடைய எண்ணம். இது தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடக்கிறது - இதிலே ஒவ்வொரு பருவத்துக்கு ஒவ்வொரு அணி கிடைக்கிறது. முதல்லி "திராவிட எதிர்ப்பு அணி' வேலை செய்தது - பிறகு பெரியாரின் பெரும் படை வேலை செய்தது - இப்போது கம்யூனிஸ்டு கூட்டணி வேலை செய்கிறது. இதிலே உற்சவ மூர்த்திகள் மாறி மாறி வருகிறார்களே தவிர மூலவர் ஒருவர்தான் - ஏமாற்றமும் எரிச்சலும் அடைந்துள்ள காமராஜர்தான். இதுவரையில் எப்படி, இழிமொழிகளையும், காதில் போட்டுக்கொள்ளாமல், நம்முடைய கடமையைக் கண்ணியமாகச் செய்துகொண்டு வந்தோமோ, அதுபோல், இப்போதும் நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் கூறினேன்.

கழகத்தின் கட்டுக்கோப்பு பற்றிய பேச்சு கிளம்பிற்று. கழகத்திலே சிலர், இன்னமும் குறைகாணும் போக்கினராக இருப்பதுபற்றிக் கூறினார்கள். நான் சொன்னேன், கழகம் மேலும் வலுவு பெறவேண்டும், முறைகள் மேலும் நேர்த்தியாக வேண்டும் என்ற ஆவல் எழுவதும், அதற்காக ஆர்வத்துடன் முறைகள்பற்றிப் பேசுவதும் நல்லதுதான். ஆனால், பேச்சோடு நின்றுவிடாமல், கழக வளர்ச்சிக்கு உருப்படியாக அவர்கள் தக்கதைச் செய்தபடி இருக்க வேண்டும்; வெறும் அதிருப்திகளை வெளியிடுபவர்களாக, யோசனைகளை அருளுபவர்களாக இருந்தால் பயன் இல்லை என்று கூறிவிட்டு, மேலும் சொன்னேன்; ஓய்வு ஒழிச்சல்லிலாமல், தமது சக்திக்கேற்ப, கழகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், அந்தப் பணியினாலேயே களைத்துப்போய்விடுகிறார்கள். சிலரோ தங்கள் சக்திக்கும் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புக்கும் ஏற்ற அளவில் பணிபுரியாது இருக்கிறார்கள்; அவர்களிடம் தேக்கி வைக்கப்பட்டு, செலவிடப்படாமல் இருக்கும் அறிவாற்றல், வெளியே வரவேண்டி இருக்கிறது; அந்த ஆற்றல், குறை காண்பது, முறை கூறுவது என்றவிதமாக வெளிவருகிறது. அவர்களும், தங்கள் ஆற்றலுக்கு ஏற்ற அளவு தங்களைக் கழகப் பணியில் ஈடுபடுத்திக்கொள்வார்களானால், குற்றம் காண நேரமும் இருக்காது நினைப்பும் எழாது என்று சொன்னேன். ஒரு எடுத்துக்காட்டையும் குறிப்பிட்டேன் - மோட்டாரில் ஆவி தங்கு தடையின்றி வெளியே வந்துவிட்டால், சத்தம் இருப்பதில்லை - ஆவி வெளிவராமல் தடைப்படும்போதுதான், வெடிச் சத்தம் கிளம்புகிறது. அதுபோலத்தான் இது என்று கூறினேன்.

கழகப் பணிகள் இன்னின்னவற்றை இத்தனை செம்மையாகச் செய்திருக்கிறேன் என்று மெய்ப்பித்துவிட்டு, கழகத்தில், இன்னின்ன முறைகளை இப்படி இப்படித் திருத்தி அமைக்கலாம் என்று கூறும் கழகத் தோழர்களை, நான் எப்போதும் பாராட்டி வரவேற்பேன்; கழகத்திலே ஓடியாடி வேலை செய்யும் சிலருடைய முறைகளிலே குறை காண்பது மட்டுமே வேலையாகக் கொண்டிருப்பவர்களை, எப்படிப் பாராட்ட முடியும் என்றும் கேட்டேன். நண்பர்கள் நான் கூறியதை உணர்ந்துகொண்டார்கள் என்றே நம்புகிறேன்.

வால்கா முதல் கங்கை வரை - சிந்து முதல் கங்கை வரை - என்ற இரு புத்தகங்களையும் இங்கு நான் வெங்காவிட மிருந்துதான் பெற்றுப் படித்தேன். இவை, கம்யூனிஸ்டு இயக்கத் தொடர்புள்ள வெளியீடுகள். இவைகளில், ஆரிய முறைகளை, பிராமண ஆதிக்கத்தை, வர்ணாஸ்ரமத்தை ஆசிரியர் ராகுல் மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ஆனால், தமிழகத்துக் கம்யூனிஸ்டுகளின் பேச்சிலோ எழுத்திலோ, இந்தக் கருத்துக்களின் சாயல்கூட வெளிப்படுவதில்லை. எனவே வெங்காவைக் கேட்டேன், இந்தப் புத்தகங்களைக் கம்யூனிஸ்டுகள் நிரம்பப் பேர் படிக்கிறார்களா என்று. ஆம் என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மதத் துறைபற்றி பச்சை பச்சையாக, ராகுல் எழுதியிருக்கிறார் - அந்த ஏடுகளைச் சொந்தம் கொண்டாடும் கம்யூனிஸ்டுகள், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பேசும் நம்மை நாஸ்திகர்கள் என்று மக்களிடம் "கோள்' மூட்டு கிறார்களே, இது என்ன விந்தை! என்று எண்ணிக்கொண்டேன்.

"இரண்டு ஏடுகளிலும் என்ன கூறப்பட்டிருக்கிறது' என்று பொன்னுவேல் கேட்டார். கி. மு. 6000 ஆண்டிலிருந்து கி. பி. 1942 வரை, பல கட்டங்களாகப் பிரித்து, கதை வடிவில், மக்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து காட்டுகிறார் ஆசிரியர். ஆனால், ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்துக்கு, மக்களின் வாழ்க்கை முறை ஏன் மாறிற்று, எப்படி மாறிற்று என்பதற்கான விளக்கம் போதுமானதாக இல்லை. உதாரணமாக, ஒருபுறம் பருத்திக் கொட்டை, அதற்குப் பக்கத்தில் பஞ்சுத் திரி, அதற்குப் பிறகு நூல், அதற்குப் பிறகு துணி, வைத்து ஆடை வரலாறு என்று கூறுவதுபோல் இருக்கிறது. நூற்பு எப்படித் துவங்கிற்று, நெய்வது எப்படி ஆரம்பமாயிற்று என்று காட்டப்படாதது மாதிரி, ஏடு இருக்கிறது. ஆனால், மொத்தத்தில் உனக்கு அந்த ஏடுகள் மெத்தவும் பிடிக்கும் என்று பொன்னுவேலிடம் சொன்னேன். "அது என்ன அண்ணா?' என்று கேட்டார். இரண்டு புத்தகங்களிலும், பத்துப் பக்கங்களுக்கு ஒரு தடவையாவது "விதவிதமான மாமிச விருந்து உண்டதுபற்றி கூறப்பட்டிருக்கிறது' என்றேன்.

"என்னென்ன மாமிசங்கள்?' என்று விவரம் கேட்கலானார், காண்டாமிருகத்தின் கல்லீரல் (பச்சையாக) முதற்கொண்டு, பசுங்கன்றின் தொடைக்கறி வரையில் கூறப்பட்டிருக்கிறது. முதல் கட்டத்தில் (கி. மு. 6000) ஓநாய்கள் மனிதர்களைக் கடித்து இரத்தத்தைக் குடிப்பதும் எழுதப்பட்டிருக்கிறது என்றேன். பொன்னுவேல், அது கேட்டு அருவருப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. அந்தக் கல்லீரல் எத்தனை சுவையாக இருக்குமோ என்ற ஏக்கமே கொண்டுவிட்டார் என்று எண்ணுகிறேன். "சிந்து முதல் கங்கை வரை' என்ற ஏடு, சிம்ம சேனாதிபதி பற்றியது. இந்தச் சிம்மன், வைசாலிக் குடியரசுச் சேனாபதியாகி, மகத மன்னன் பிம்பிசாரனை எதிர்க்கிறான் - பயங்கரமான போர் நடக்கிறது - பல்லாயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவிக்கிறான் - ஆனால், இதிலே ஒரு அதிசயம் - அவன் போரில் ஈடுபடுகிற நேரத்தில், ஜைனப் பெரியார் ஒருவரிடம் பாடம் கேட்டு, "அகிம்சை'யை ஏற்றுக்கொண்டு மாமிச உணவை நீக்கிவிடுகிறான்.

உணவிலே, "அகிம்சை' - போரிலேயோ, பிணமலை; இரத்த வெள்ளம். இது முரண்பாடு அல்ல என்றும் வாதிடுகிறான்.

இதைவிடப் பெரிய அதிசயம் - அதிர்ச்சி தரத்தக்க அதிசயம் - ஜைனப் பெரியாரிடம் பாடம் கேட்டு, மாமிச உணவை நீக்கிவிட்ட சிம்மன், சிலநாள் கழித்து புத்தரைக் காண்கிறான் - அவருடைய புது நெறியை மேற்கொண்டு ஜைனத்தை விட்டு விடுகிறான் - அதிர்ச்சி தரும் அதிசயம் இதிலே இல்லை - பௌத்தன் ஆனபிறகு, பழையபடி மாமிச உணவு கொள்கிறான் என்கிறார் ராகுல்! அதிர்ச்சி அதற்கு மேலும் இருக்கிறது; புத்தருக்கும் சீடர்களுக்கும், மாமிச உணவு அளித்து உபசரிக்கிறான் என்றும் எழுதியிருக்கிறார்.

"மறுநாள் கசாப்புக் கடையிலிருந்து பசு மாமிசத்தையும் பன்றி மாமிசத்தையும் வரவழைத்தேன் உணவு தயாரானதும் நான் புத்த பகவானை அழைத்து வந்தேன். அவர் பிட்சுக்களோடு வந்து உணவருந்திக் கொண்டிருந்தார்.''

என்று சிம்மன் கூறுவதாக அந்த ஏட்டில் காணப்படுகிறது.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. எந்த ஜீவனுக்கும் இம்சை செய்தலாகாது என்ற புதுநெறி பரப்பிய புத்தருக்கா, இந்த விருந்து நடந்ததாகச் சொல்வது! எப்படிப் பொருந்தும்! ஆனால், ராகுல் தமது இந்த ஏட்டை ஒரு ஆராய்ச்சி நூல் என்று தெரிவிக்கிறார்.

8-4-1964

காருகுறிச்சி நாதசுர வித்தகர் அருணாசலம் அவர்களின் திடீர் மறைவுபற்றிய செய்தி பார்த்துத் திடுக்கிட்டுப்போனேன். மிக இளம் வயதிலேயே, மிகப் பெரிய புகழ் ஈட்டிய இந்த இசைவாணனின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் காலஞ்சென்ற ராஜரத்தினத்தின் நாத இன்பத்தை வழுவாமல், தமிழகத்துக்குத் தந்துவந்த அரும்புலவர், கேட்போரின் நெஞ்சு திடுக்கிடும் வண்ணம் மறைந்ததுபற்றி இங்கு நண்பர்கள் எல்லோரும் வேதனைப்பட்டனர். நாற்பத்து மூன்று வயது; இதற்குள், என்ன புலமை! எத்துணை இனிமை! எவ்வளவு நேர்த்தியான கற்பனைத் திறமையைக் காட்டிவிட்டார் காருகுறிச்சி! அறுபது ஆண்டுகள் வாழ்ந்து அளிக்கவேண்டிய நாத இன்பத்தை நாற்பதாம் ஆண்டுக்குள்ளாகவே வழங்கினார். தமிழகத்துக்கு நேரிட்டுவிட்ட இந்தப் பெரிய இழப்பை எண்ணி எண்ணிக் குமுறிக்கொண்டிருந்தோம். காருகுறிச்சி அருணாசலம் அவர்கள் எனக்குக் கிடைத்த ஒரு நேர்த்தியான நண்பர். களங்கமற்ற முகம் - கனிவான பார்வை - பரிவு ததும்பும் பேச்சு. என் மகன்களின் திருமணத்திற்கு வந்திருந்து, நாத இசை விருந்து அளித்து, பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்ததை எண்ணிக்கொண்டேன். அவர், காஞ்சிபுரம் வந்து போகும் செலவுத் தொகைகூடத் தரவில்லை. எவ்வளவு பரிவுடன் வந்து, இசை விருந்தளித்தார்! அதனை எல்லாம் எண்ணி எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். இன்று படிப்பதிலேகூட நாட்டம் செல்லவில்லை. மீண்டும் மீண்டும் நண்பர்களுடன், மறைந்தவரின் மாண்புகள் பற்றியே பேசிக்கொண்டிருந்தேன். நாதஸ்வரம், தமிழகத்தின் தனிப் பெரும் செல்வம். இந்தியாவின் இதர பகுதிகளிலே இந்தச் செல்வம் இல்லை. இதிலே நேர்த்தியான தேர்ச்சி பெற ஓயாத உழைப்புத் தேவை. காருகுறிச்சி, தமது ஆவியையே சிறிது சிறிதாகக் கரைத்து நாதமாக்கித் தந்து வந்தார் என்றே கூறவேண்டும். புலமை வளரவளர, அவருடைய அடக்கமும் பரிவு காட்டும் உணர்ச்சியும் வளர்ந்து வந்தது. இப்படிப்பட்ட வித்தகரைத் தமிழர்கள் இழந்தது பெரியதோர் இழப்பு; கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர், திருவாவடுதுறை ராஜரத்தினம், - எனும் கலைச் செல்வர்களை இழந்தது போதாது என்று இப்போது காருகுறிச்சியையும் தமிழகம் இழந்து தத்தளிக்கிறது. தமிழகத்துக்குத்தான் எத்தனை எத்தனை இழப்புகள் - தொடர்ந்து - அடுக்கடுக்காக - என்பதுபற்றியெல்லாம் எண்ணி எண்ணி ஏக்கமுற்றுக் கிடந்தோம்.

9-4-1964

இன்று பிற்பகல், காஞ்சிபுரம் மறியல்லி கலந்துகொண்டு இங்கு சிறைப்பட்டிருக்கும் மதுராந்தகம் தோழர் என்னைக் காண வந்திருந்தார். இளைஞர் கிராமத்திலுள்ளவர். சில விநாடிகள் ஏதுமே பேசாமல் என் எதிரே நின்றுகொண்டிருந்தார் - ஆனால் கண்களில் நீர் துளிர்த்தபடி இருக்கக் கண்டேன். "என்ன தம்பி?' என்று கேட்டேன் - அண்ணா! என்னுடைய இரண்டு குழந்தைகள் இறந்துவிட்டனவாம் - என்று கூறினார் - திகைத்துப் போய்விட்டேன் - ஒரு குழந்தைக்கு மூன்று வயதாம் - மற்றொன்று கைக்குழந்தையாம். தமிழகம் இந்தி மொழி ஆதிக்கத்தால் தாழ்நிலை அடையக்கூடாது என்பதற்காக அறப்போரில் ஈடுபட்டு இந்த இளைஞர் இங்கே சிறைப்பட்டுக் கிடக்கிறார் - அவர் பெற்றெடுத்த செல்வங்கள் இறந்துவிட்ட செய்தியைப் பெறுகிறார். என்னென்பது இந்த வேதனையை? என்ன ஆறுதல் கூறுவது? அந்த இளைஞனின் மனம் என்னென்ன எண்ணுகிறதோ! குழந்தைகளை இழந்த அந்தத் தாயின் மனம் என்ன பாடுபடுகிறதோ? இங்கே தமிழ் காத்திடத் தவமிருக்கிறான் வீரன். அவன் பெற்றெடுத்த முத்துக்கள் பறிக்கப்பட்டுப் போய்விட்டன. எத்தனை இன்னல்களைத் தாங்கிக்கொள்கிறார்கள், தமிழ் காத்திடும் வீரர்கள். தமிழகம், இதனை உணருகிறதா? காணோமே! எனினும் கடமையைச் செய்தாக வேண்டும், எத்தனை கஷ்ட நஷ்டம் ஏற்படினும் கலங்கலாகாது என்ற உள்ள உரத்துடன் இந்த இளைஞர் போன்றார், அறப்போரில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தியாகம் வீண்போகும் என்று நான் நினைக்கவில்லை. பகட்டான விளம்பரம் கிடைத்திருக்கலாம். பாராட்டும் பண்புகூட மிகக் குறைவாகவே எழலாம், அமைச்சர்கள் அலட்சியப் பேச்சுகூடப் பேசிவிடலாம். அற்பர்கள் எள்ளி நகையாடலாம். ஆனால், இந்த இளைஞர் போன்றாரின் தியாகம் தமிழக வரலாற்றிலே தனி இடம் பெறப்போவது உறுதி. என்னாலான மட்டும் அந்த இளைஞனுக்கு ஆறுதல் கூறி அனுப்பினேன். அந்த இளைஞனுக்கு வந்துற்ற இழப்பை எண்ணி நண்பர்களெல்லாரும் வேதனைப் பட்டனர்.

10-4-1964

இரவு மணி ஒன்று அடித்துவிட்டது. இனித்தான் தூங்கச் செல்ல வேண்டும், குறிப்பை எழுதிவிட்டு; இதுவரை, மிக உருக்கமான ஒரு வரலாற்று நிகழ்ச்சியை - நாடக வடிவில் எழுதப்பட்டது - படித்துக்கொண்டிருந்தேன்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நாம் நடத்தும் அறப்போர் காரணமாக, நமது தோழர்களுக்கு ஏற்பட்டுவிட்ட இழப்புகள் இன்னல்கள் ஆகியவை மனதை மருட்டுவதாக இருப்பதுபற்றிக் குறிப்பிட்டேன். இன்றிரவு நான் படித்த அந்த வரலாற்று நிகழ்ச்சி, நம்மைத் தாக்கியுள்ள இழப்புகளையும் இன்னல்களையும் ஒரு பொருட்டாகக்கூட எண்ணக்கூடாது என்ற எண்ணத்தைத் தந்தது.

"கருணை காட்டுவதற்கு இல்லை. உன் கணவன் தூக்கிலிடப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. உடலை உன்னிடம் தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.''

இவ்விதமான தந்தி கிடைக்கிறது, கவர்னரிடமிருந்து, ஒரு மூதாட்டிக்கு! மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டுப் போயினர். கணவன் தூக்குத் தண்டனை பெறுகிறான்; மற்றோர் மகன் ராணுவப் போலீசால் வேட்டையாடப்பட்டு வருகிறான். மகளுடைய காதலன் உடல் முழுதும் குண்டுகளால் துளைக்கப் பட்டு இறந்துபோனான். மருமகள் குழந்தை பெற்றெடுத் திருக்கிறாள்; விதவை ஆக்கப்பட்டுவிட்டிருக்கிறாள்.

இது அந்த வரலாற்று நிகழ்ச்சியின் இறுதிக் கட்டம் - புகழ்மிக்க தூக்குமரம் என்பது தலைப்பு - அமெரிக்க நாட்டு நிகழ்ச்சி.

நீக்ரோக்களை அடிமைகளாகக் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த நாட்களில், ஏசுவிடம் விசுவாசமும் நாட்டுப்பற்றும் கொண்ட ப்ரவுன் எனும் பெரியவர் - நாலு பிள்ளைகள் இரண்டு பெண்களுக்குத் தகப்பன் - தப்பி ஓடி வரும் நீக்ரோக்களைக் காப்பாற்றி, இரகசியமாக அவர்களை கனடா நாட்டுக்கு அனுப்பி வைக்கும் தொண்டு செய்து வருகிறார். குடும்பம் முழு ஒத்துழைப்புத் தருகிறது. இதனால், நீக்ரோக்களை அடிமை களாக்கிக்கொண்டு கொக்கரிக்கும் தென்பகுதி, ப்ரவுன்மீது வஞ்சம் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறது.

பிரச்சினை, மனிதத்தன்மைக்கு மாறானது, கடவுள் நெறிக்கு முரணானது என்ற அழுத்தமான நம்பிக்கை அந்தப் பெரியவருக்கு. எப்படியும் அடிமைத்தனத்தை ஒழித்தாக வேண்டும் என்று துடிக்கிறார். அந்தத் தூய தொண்டிலே தன்னையே வதைத்துக் கொள்ளவும் தயாராகிறார்.

22-பேர்களைக் கொண்ட ஒரு படை அமைக்கிறார் - அதிலே மூவர் அவர் பிள்ளைகள் - ஒருவன் மகளுக்கு மணாளனாக விரும்பும் இளைஞன்.

இந்தப் படை, வர்ஜீனியா மாநிலத்திலுள்ள, பாசறையைக் கைப்பற்றி ஆயுதங்களை எடுத்து, அடிமைகளிடம் கொடுத்து, புரட்சி மூட்டுவது, அடிமைகளுக்கு விடுதலை கிடைக்கும் வரையில் அந்தப் புரட்சி நடத்துவது என்பது திட்டம். திட்டம் என்று கூறுவதற்குத் துளியும் பொருத்தமற்ற ஒரு ஏற்பாடு - ஒரு எழுச்சி - ஒரு துடிப்பு - தற்கொலை முயற்சி என்றே கூறலாம். இந்த முயற்சி முறியடிக்கப்பட்டாலும் நட்டமில்லை. ஏனெனில் அமெரிக்காவும் உலகும் துடித்தெழுந்து பிரச்சினையைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கும். அந்தச் சிந்தனையிலிருந்து ஒரு எழுச்சி பிறக்கும். விடுதலைக்கு வழி கிடைக்கும் என்கிறார் ப்ரவுன். பாசறையைத் தாக்குகிறார்கள் - படைகள் சூழ்ந்துகொள்கின்றன - பலர் கொல்லப்படுகிறார்கள். ப்ரவுன் தூக்குத் தண்டனை பெறுகிறார். இது வரலாற்று நிகழ்ச்சி - அடிமை விடுதலைக்கான சட்டத்தை ஆபிரகாம் லிங்கன் பிறப்பிப்பதற்கு முன்பு நடைபெற்றது - 1859ல்.

அண்ணன்

20-12-1964