அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அரசியல் விந்தைகள். . .
பண்டித நேரு காலமானார். . .

2

26-5-1964

இன்று மதியழகன் விடுதலை. அவர் உள்ளிட்ட பதினைந்து தோழர்கள் - மூன்று அணியினர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். விடியற் காலை ஐந்தரை மணிக்கே, அறையைத் திறந்துவிட்டார்கள். எங்கள் அறைகளைத் திறக்கவில்லை. விடுதலை பெற்று வெளியே செல்லும் மதியிடம் அளவளாவக் கூட இயலாதுபோலிருக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். அரை மணி நேரத்திற்குப் பிறகு, எங்கள் அறைகளையும் திறந்தார்கள் - அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு மதி புறப்பட்டார்; மற்றத் தோழர்களை எந்தப்பக்கமாக அழைத்துக்கொண்டு சென்றார்களோ தெரியவில்லை; நான் அவர்களைக் காண இயலவில்லை. நாங்கள் உள்ள பகுதியிலிருந்து, வெளிப் பக்கத்தைக் கூர்ந்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். எதிர்ப்புற நெடுஞ்சாலையில் செல்லும் மோட்டார்கள், சிறை அருகே வந்ததும், நகர்ந்து செல்லக் கண்டு தோழர்கள் கூட்டமாக வந்திருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டோம். சில கொடிகள் அசைவதுகூடத் தெரிந்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு, வாழ்த்தொலியும் முரசொலியும் கேட்டது. மதியையும் மற்ற தோழர்களையும் வரவேற்க, கழகத் தோழர்கள் மெத்த ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியுற்றோம்.

இன்று வழக்கமான பார்வையிடல் - மதி இல்லை.

நண்பர் ஏ. கோவிந்தசாமிக்கு, இரண்டு நாட்கள் பரோலில் செல்லும் அனுமதி கிடைத்தது - காலை பத்து மணிக்கு மேல் அவர் சென்றார் - கடலூரில் தமது உடன் பிறந்த அம்மையாருக்கான இறுதிச் சடங்கிலே கலந்துகொண்டு, மீண்டும் 28-ம் தேதி இங்கு வருகிறார். அவரை வழி அனுப்பி வைத்தோம்.

இரண்டு நாட்களாக பத்திரிகைகள் எதுவும் எமக்குத் தரப்படவில்லை, பத்திரிகைகள் தரப்படுவதிலே அடிக்கடி முறைக் குறைவுகள் ஏற்பட்டு வருவதுண்டு என்றாலும், ஒரே அடியாகப் பத்திரிகைகள் தரப்படாதது இந்தத் தடவைதான். பல முறை கேட்டனுப்பிய பிறகு, பிற்பகல் மூன்று மணிக்கு இரண்டு நாட்களுக்கான பத்திரிகைகளையும் மொத்தமாக அதிகாரி கொடுத்தனுப்பினார். நாலைந்து குழந்தைகள் உள்ள வீட்டிலே, பெற்றோர் தின்பண்டம் கொண்டுவந்ததும், அந்தக் குழந்தைகள் ஆவலுடன் ஓடோடிச் சென்று மொய்த்துக்கொள்வதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா! பத்திரிகை கிடைத்ததும், நாங்கள் எல்லோருமே தின்பண்டம் கண்டதும் மொய்த்துக்கொள்ளும் குழந்தைகளாகி விடுகிறோம்.

ஷேக் அப்துல்லாவின் பாகிஸ்தான் பயணம் பற்றிய செய்தி விரிவாகி வெளியிடப்பட்டிருந்தது.

எந்தப் பாகிஸ்தான், காஷ்மீர்மீது பாய்ந்து, பகுதியைத் தன் பிடியில் சிக்கச் செய்துவிட்டதோ, அந்த பாகிஸ்தானில், ஷேக் அப்துல்லாவுக்கு மகத்தான வரவேற்பு.

எந்தப் பாகிஸ்தானுடைய தாக்குதலைச் சமாளிப்பதற்காக இந்திய துருப்புகளின் துணையைத் தேடிப் பெற்றாரோ, அந்த அப்துல்லாவுக்கு, தாக்குதல் நடத்திய பாகிஸ்தானில் வரவேற்பு.

எந்த அப்துல்லா, பாகிஸ்தானுடன் கூடி காஷ்மீர் அரசைக் கவிழ்க்கச் சதி செய்தார் என்று குற்றம் சாட்டி 11 ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்ததோ, அதே இந்திய துரைத்தனம், அதே ஷேக் அப்துல்லாவை, அதே பாகிஸ்தானுக்கு, "சென்று வருக! செம்மையான சமரசம் மலர வழி கண்டு கூறுக!' என்று கூறி அனுப்பி வைத்திருக்கிறது.

எத்தனை எத்தனை விந்தை நிகழ்ச்சிகள் - என்னென்ன விதமான திடீர் திருப்பங்கள் அரசியலில் என்பதுபற்றி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

27-5-1964

இன்று பிற்பகல் 3 மணிக்குத் திடுக்கிடத்தக்க செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். இங்கு உள்ள கொடிமரத்தில் கொடி திடீரென பாதிக் கம்பத்துக்கு இறக்கப்பட்டது; விவரம் புரியாமல் கலக்கமடைந்தபடி, காவலாளிகளைக் கேட்டதற்கு, "நேரு காலமாகிவிட்டாராம்' என்று கூறினர். - நெஞ்சிலே சம்மட்டி அடி வீழ்ந்ததுபோலாகிவிட்டது. நம்ப முடியவில்லை; நினைக்கவே நடுக்கமெடுத்தது; காலை இதழிலேதான், நேரு டேராடன்னிலிருந்து உற்சாகத்துடன் டிலலி திரும்பினார்; விரைவில், அயூப்கானைச் சந்திப்பார் என்று மகிழ்ச்சி தரும் செய்திகளைப் பார்த்தோம்; பிற்பகல் 3 மணிக்கு, அவருடைய மறைவுபற்றிக் கேள்விப்பட்டால், எப்படி மனம் நிலைகொள்ளும்? சரியாக விசாரியுங்கள் - அதிகாரியையே கேளுங்கள் என்று கூவினேன். அரக்கோணம் ராமசாமி சிறை அதிகாரியைக் கண்டு கேட்டுவிட்டுத் திரும்பினார்; அவருடைய நடையிலே காணப்பட்ட தளர்ச்சியும் முகத்திலே கப்பிக்கொண்டிருந்த துக்கத்தையும் கண்டேன் - நடைபெறக் கூடாதது நடந்துவிட்டது - துளியும் எதிர்பாராதது ஏற்பட்டுவிட்டது என்று உணர்ந்தேன் - சில நிமிடங்கள் கல்லாய்ச் சமைந்துபோனேன். எல்லோருமே கண்கலங்கிப் போயினர். நேரு போய்விட்டாரா - ஒளி அணைந்து விட்டதா - உலகமே அதிர்ச்சி அடையத்தக்க இழப்பு ஏற்பட்டு விட்டதா - அய்யய்யோ! - எப்படி இதனை நாடு தாங்கிக் கொள்ளப்போகிறது - என்றெல்லாம் எண்ணி வேதனைப் பட்டேன். பண்டித நேரு, ஒரு சகாப்தத்தை நடத்தி வைத்தவர் - வெறும் அரசியல் கட்சித் தலைவராக மட்டும் இருந்து வந்தவர் அல்ல. உலகத் தலைவர்களிடையே அவருக்கு இருந்து வந்த நட்பும் தொடர்பும், இங்கு மட்டுமல்ல, உலகிலேயே ஒரு போரற்ற பூசலற்ற காலத்தை உருவாக்கும் நிலைமையை மலரச் செய்தது. காங்கிரஸ் கட்சியிடமும் ஆட்சி முறையிடமும் கசப்பும், கொதிப்பான கோபமும் கொண்டபோதெல்லாம்கூட, பண்டித நேருவுடைய சிறப்பு இயல்புகள், அறிவாற்றல், தனித்தகுதி, பண்பு ஆகியவைகளை நான் மறந்ததுமில்லை, நமது கூட்டங்களிலே எடுத்துச் சொல்லத் தவறியதுமில்லை. அவர் சிறந்த ஜனநாயக வாதி என்பதை உள்ளூர உணர்ந்து, உவகையுடன் கழகத் தோழர்களுக்குக் கூறி வந்திருக்கிறேன். இந்தித் திணிப்பு விஷயத்தில்கூட, தென்னக மக்களின் எதிர்ப்புக் குரலுக்கு மதிப்பளிக்கத் தவறாதவர் நேரு பண்டிதர். நமது இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியின் மூலம் 1965லில், இந்தி பற்றிய புதிய கட்டம் பிறந்திடும்போது, நேருவுடைய மனதிலே, ஒரு நல்ல மன மாற்றத்தை ஏற்படுத்தி வைக்கலாம் என்று நம்பிக்கை கொண்டேன்; அதனையும் கழகக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறேன். அவரிடம் பேசி அறியாதவன் நான். நான் ராஜ்ய சபையில் பேசியதையும் அவர் இருந்து கேட்க வில்லை. ஆனால் நான் பேசியான மறுநாள், பண்டித நேரு பேசுகையில், இரண்டு மூன்று முறை என் பேச்சைக் குறிப்பிட்டுக் காட்டி, சிலவற்றை ஒப்புக்கொள்வதாகக் கூறிப் பேசினார். அந்தப் பேச்சின்போது, அவருடைய பார்வை என்மீது பல முறை வீழ்ந்தது - அந்தக் காட்சி இப்போதும் தெரிவதுபோலிருக்கிறது.

பாராளுமன்றத்திலே, நான் பார்த்திருக்கிறேன் - வியப்படைந்திருக்கிறேன் - காங்கிரஸ் ஆட்சியாளர் அதனைக் கண்டும் பாடம் பெறவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறேன் - நேருவின் பேச்சிலே குறிக்கிட்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோபதாபத்துடன், எரிச்சல் ஏளனத்துடன், காரசாரத்துடன் பலர் பேசுவார்கள் - துளியும் பதறாமல், ஒரு ஐம்பது ஆண்டுக்கால வரலாற்றை உருவாக்கிய அந்தப் பெருந்தலைவர், ஜனநாயகத்திலே இது தவிர்க்க முடியாதது என்று மட்டுமல்ல, இது தேவைப் படுவது, வரவேற்கப்படவேண்டியது என்ற பண்புணர்ச்சியுடன் பதில் அளிப்பார் - அத்தகைய ஒரு ஜனநாயகச் சீமான் மறைந்து விட்டார்.

விவரம் தெரியவில்லை. ஏன் எப்போது, எங்கே, காலமானார் என்ற தகவல் ஏதும் தெரியவில்லை. வேதனை அதிகமாக வளர்ந்தது.

என்னைக் காண கருணாநிதி வந்திருப்பதாக அழைத்தார்கள் - நடந்து சென்றபோது, எங்கோ காற்றின்மீது நடப்பதுபோல ஒரு உணர்வு. கருணாநிதியும் அரங்கண்ணலும் வந்திருந்தார்கள். சர்க்காரிடம் தனி அனுமதி பெற்று, வேதனை தோய்ந்த என் முகத்தைக் கண்டார்கள் - அவர்களின் கண்கள் கசிவதை நான் பார்த்தேன். விவரம் கேட்டேன் - தெரிவித்தார்கள். அனுதாபச் செய்தி வேண்டும் என்றார்கள் - எழுதும் நிலை இல்லை - மனக் குமுறல் எண்ண ஓட்டத்தையே ஒடித்து விட்டிருந்தது. மனதிலே கொந்தளித்துக்கொண்டிருந்த எண்ணக் குவியலில், இரண்டொன்றை எழுத்தாக்கிக் கொடுத்தேன். இது, ஒரு கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு அல்ல - நாட்டுக்கு - ஆகவே, நாட்டவருடன் கழகத்தவர் இந்தத் துக்கத்தில் பங்கேற்றுக் கொள்ள வேண்டும் - கூட்டங்கள், ஊர்வலங்கள் வேண்டாம் என்று கூறி அனுப்பினேன்.

நண்பர்களுடன், நேரு மறைவுபற்றித்தான் பேசிப் பேசி, ஆறுதலைத் தேடிக்கொள்ள முயன்று வருகிறேன்.

28-5-1964

வேதனை நிரம்பிய நிலை நீடித்தபடி இருக்கிறது. வேறு எந்த விஷயத்திலும் மனம் செல்லவில்லை.

பரோல் முடிந்து சிறை திரும்பிய நண்பர் கோவிந்தசாமி, ஊரே துக்கத்தின் பிடியிலே சிக்கிக் கிடப்பதுபற்றி விவரம் கூறினார். எல்லாக் கட்சிகளையும் கொண்ட மவுன ஊர்வலம் நடப்பதாகத் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு - டில்லி நகர் நோக்கி என் எண்ணம் சென்றது. எத்தகைய புகழ்மிக்க ஒரு வரலாறு, தீயிலிடப்படுகிறது! எத்தகைய பொன்னுடலுக்கு எரியூட்டு கிறார்கள்! என்பதை எண்ணி விம்மிக் கிடந்தேன்.

30-5-1964

இன்று அரக்கோணம் தோழர் ராமசாமி எம். எல். ஏ. விடுதலையானார். விடியற்காலை ஐந்து மணிக்கே அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். மற்ற எவருடைய அறையையும் திறக்கவில்லை. ஆகவே, அவர் விடுதலையாகி வெளியே செல்லும்போது நண்பர்கள் அவருடன் அளவளாவி விடை தந்தனுப்பும் வாய்ப்பும் பெறவில்லை. நான் தூங்கிக் கொண்டிருந்தேன். எழுப்ப முயற்சித்து, பிறகு வேண்டாமென்று விட்டுவிட்டார்களாம்; காரணம் எனக்கு நேற்று இரவெல்லாம் அடிவயிற்றிலும் இடுப்பிலும் வலி கண்டு மெத்தத் தொல்லைப் பட்டேன்; மூன்று மணி சுமாருக்குத்தான் தூக்கம் பிடித்தது; ஆகவே என்னை எழுப்பலாகாது என்று இருந்துவிட்டனர். நான் எழுந்த பிறகு இதைக் கூறினார்கள். வருத்தப்பட்டேன். நண்பர் ராமசாமியிடம் நேற்று மாலை நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தேன். மிகவும் அமைதியான வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ராமசாமி அறப்போரில் ஈடுபட்டுச் சிறை புகுவார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்களேகூட எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அவர் சிறை புகுந்தது அரக்கோணம் வட்டாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். தக்கோலம் எனும் கிராமத்தில், மதிப்புள்ள ஒரு பெரிய விவசாயக் குடும்பத் தலைவர் ராமசாமி. கழகத்துக்குக் கிராமத்தில் இத்தகையவர்கள் நிரம்பக் கிடைக்க வேண்டும்; கிராமத்திலே குறிப்பிடத்தக்க நிலை பெற்றவர்கள் இதுபோல, பொது வாழ்வுத் துறையில் ஈடுபடுவதும், கொள்கைக்காகக் கஷ்ட நஷ்டம் ஏற்பதும், அவர்கள் ஈடுபட்டுள்ள இயக்கத்துக்கு மட்டுமல்ல, மக்களாட்சி முறைக்கே வலிவும் பொலிவும் ஏற்படுத்தும் என்பதிலே ஐயமில்லை. அரசியல் என்பதே, பளபளப்பான பட்டணக் கரைகளில் உள்ள பணக்காரர் படித்தவர்கள் ஆகியோருக்கென்றே அமைந்துள்ள துறை என்ற எண்ணம் மாறி, கிராமத்தில் குறிப்பிடத்தக்க நிலையிலுள்ளவர்கள் ஈடுபட்டு, செம்மைப்படுத்தி, நாட்டுக்கு நல்லாட்சி ஏற்படுத்த முனைய வேண்டிய துறை அரசியல் என்ற எண்ணம் வலுப்பெற வேண்டும்.

திகைப்பு, உள்ளக் குமுறல், அதிர்ச்சி ஆகியவை காரணமாக, இரண்டு நாட்களாக எனக்கு உடல் நலிவு ஏற்பட்டுவிட்டது. குனிய நிமிர முடியாதபடி இடுப்பிலே வலி; தைலம் தடவியும் சுடுநீர் ஒத்தடம் கொடுத்தும் என் நலிவைப் போக்க, மணி - மிக்க அன்புடன் முயன்று வந்தார். அன்பழகன் இத்தகைய நலிவுகள் போக, மருத்துவ முறைகள் பல அறிந்திருக்கிறார். அவரும் எனக்கு உதவியாக இருக்கிறார்.

நேரு மறைவு, நாட்டிலே எப்படி ஒரு இருளையும் வெறிச்சிட்டுப்போன நிலைமையும் உண்டாக்கிவிட்டதோ அதுபோன்று என் மனதிலேயும் ஒரு வெறிச்சிட்ட நிலையை உண்டாக்கிவிட்டது. வழக்கமாக எழும் அரசியல் பேச்சுகள் இல்லை; படிப்பதற்கும் மனம் இடம் தரவில்லை.

நேருவின் இறுதிபற்றி உலகப் பெருந்தலைவர்கள் அனுப்பிய இரங்கற் செய்திகளையும், டிலலியில் அவர் உடலுக்கு எரியூட்டியதுபற்றிய செய்திகளையும் பத்திரிகைகளில் படிக்கப் படிக்க, வேதனையும் உருக்கமும் வளர்ந்துகொண்டு இருந்தது.

இந்த முறை, நான் சிறை புகுந்தது முதல், என் மனதுக்கு அதிர்ச்சியும் வேதனையும் மூட்டிவிடத்தக்க இழப்புகள் பல நேரிட்டுவிட்டதை எண்ணிக்கொண்டேன். விரைவாக மன வேதனையை நீக்கிக்கொள்ளக்கூடிய இயல்பும் எனக்குக் கிடையாது. சிறையிலே எனக்கு அமைந்துள்ள வாழ்க்கை முறையால் எனக்குத் தொல்லை அதிகம் இல்லை. என் தேவைகள் மிகவும் குறைவானவை. ஆகவே சிறையில் இது கிடைக்கவில்லை, அது கிடைக்கவில்லை என்ற சங்கடமே எழுவதில்லை. ஆனால், உள்ளத்து நெகிழ்ச்சி மிக அதிகமாகிக்கொண்டே வருகிறது. துக்கமோ, திகைப்போ, உருக்கமோ, அதிர்ச்சியோ இதுபோன்ற எந்தவித உணர்ச்சி எழுந்தாலும், அதன் அளவும் மிகுதியாகி விடுகிறது, மிக அதிக நேரமும் அந்த உணர்ச்சியின் பிடியில் சிக்கிக்கொள்ளவேண்டி நேரிட்டுவிடுகிறது.

இந்த நிலை காரணமாக, வழக்கமாகப் படிப்பதிலே தடங்கல் ஏற்பட்டுவிடுகிறது. நேரு மறைவு காரணமாகப் பல்வேறு பிரச்சினைகள் எவ்வெவ்விதமாக வடிவம் கொள்ளும் என்பது பற்றி நண்பர்கள் கேட்கிறார்கள்; விரிவான விளக்கமான பதில் கூற இயலவில்லை; கோடிட்டுக் காட்ட மட்டுமே முடிகிறது.

25-5-1964 தொடர்ச்சி.

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்றுப் புதுமுறை அமைந்தபோது, அந்தப் புதுமுறையின் முழுப்பொறுப்புகளை உணர்ந்து, தமது வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக்கொள்ளும் நிலை சமூகத்திலே ஏற்பட்டுவிடவில்லை - ஏழை எளியோர்க்கு இதம் செய்யும் ஒரு அரசு, பணக்கார ஆதிக்கத்தை அழித்த ஒரு அரசு அமைந்திருக்கிறது என்பதிலே ஒரு மகிழ்ச்சியும் எழுச்சியும் பிறந்தது என்றபோதிலும், பொது உடைமைத் தத்துவம் பற்றிய தெளிவும், அந்தத் தத்துவத்தைச் செயல்படுத்தப் பொது உடைமை அரசு மேற்கொள்ளும் திட்டங்கள்பற்றிய தெளிவும், மக்களில் பெரும்பாலோருக்கு - கம்யூனிஸ்டு கட்சியினர் தவிர - ஏற்பட வில்லை. அந்தச் சூழ்நிலையைக் காட்டும் சிறுகதைகளின் தொகுப்பு நூல் படித்து வந்ததில், இரண்டு கதைகள் எனக்கு மிகவும் உருக்கம் நிரம்பியதாகத் தென்பட்டது; ஒன்று ஒரு கிழவியின் கதை; மற்றொன்று ஒரு கைதியின் கதை.

ஒரு கிழவி - வாழ்க்கைச் சுமையைத் தாங்கித் தாங்கி வளைந்துபோன உடல், நைந்துபோன உள்ளம். அவள் தனி, ஒருவரும் உடன் இல்லை. ஏதோ செய்கிறாள். கிடைத்ததை உண்கிறாள்; நடப்பனவற்றைக் காண்கிறாள். ஏதோ நடைபெறுகிறது என்று இருந்து விடுகிறாள். கீழே, விழுவதற்கு முன்பு வரை, மரத்திலே ஒட்டிக்கொண்டு, ஆனால் உடன் உள்ள மற்ற இலைகளினின்றும் முற்றிலும் மாறுபட்ட நிலையில், சருகு இல்லையா - அதுபோல, அந்த மூதாட்டி, அவளுக்கு ஒரே ஒரு கவலை - அவளுடைய வீடு - சொந்தக் குடில் - கலனாகிக் கிடந்தது; எந்த நேரத்தில் இடிந்து விழுந்துவிடுமோ என்ற கவலை, அச்சம் மூதாட்டிக்கு. அவளைவிட அந்தக் குடில் நலிவுற்றுக் கிடந்தது. தான் கண்ணை மூடுவதற்கு முன்பு வீடு, மண்மேடாகி விடக்கூடாது என்பதுதான் அந்தக் கிழவியின் கவலை. ஆண்டவனையும் அடியார்களையும் அவள் இது குறித்துத்தான் வேண்டிக்கொள்வாள். பொது உடைமை அரசு மக்களின் கஷ்டத்தை மகேசனோ அருளாளர்களோ போக்க மாட்டார்கள் என்ற சித்தாந்தம் கொண்டது. மகேசனைக் காட்டி, மதியிலிகளைச் செல்வர்கள் மயக்கி மிரட்டி, சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பது, அந்த அரசு அமைத்த கம்யூனிஸ்டு கட்சியின் சித்தாந்தம்.

மூதாட்டிக்கு இதுபற்றி ஏதும் தெரியாது. தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் எழவில்லை. எப்போதும்போல அவளுடைய வாழ்க்கை நகர்ந்துகொண்டிருந்தது. பழைய கொடுங்கோலாட்சி வீழ்ந்துவிட்டது, புதிய ஆட்சி எழுந்து விட்டிருக்கிறது என்பதுபற்றி அவள் காதில் விழுந்தது. கருத்து அது குறித்துச் செல்லவில்லை. அவளுக்கு இருந்த கவலை யெல்லாம், தன் வீடு இடிந்துவிடக்கூடாது தன் உயிர் உள்ளவரை - அது கொஞ்சக் காலம்தானே - என்பதுதான்.

வீட்டிலுள்ள பூஜா மாடத்தில், ஏசு, கன்னிமேரி, அடியார்கள் படங்கள் இருந்தன; நாள்தோறும் வேளை தவறாமல், "பிரார்த்தனை' செய்து வந்தாள், "பரம பிதாவே! அன்னை மேரியே! அருளாளர்களே! என் வீடு இடிந்து விழுந்து விடாதபடி பாதுகாத்துக் கொடுங்கள். நான் இருக்கப்போவது சில நாட்கள். இதற்குள் வீடு விழுந்துவிட்டால், பழுதுபார்க்கப் பணத்துக்கு எங்கே போவேன். வீடு மண்மேடாகிவிட்டால், தங்க இடமுமின்றித் தத்தளிப்பேன். எனக்குத் துணை எவரும் இல்லை. தேவனே! என் வீடு விழாமலிருப்பது உன் அருளால்தான்; உன்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, உழன்று வருகிறேன். அருள் புரிவாய், ஆண்டவனே!'' என்றெல்லாம் வேண்டிக்கொண்டாள். இவ்விதமான ஏழையின் புலம்பல், பரமண்டலத்திலே புகாது. சீமான் கொட்டும் காணிக்கைப் பொருளின் சத்தம் மட்டுமே தேவன் செவியில் கேட்கும்; ஏனெனில் தேவன் செவி என்று பாமரர் நம்புகிறார்களே தவிர, உண்மையில் கேட்கும் செவி இருப்பது பூஜாரிக்குத்தான், கடவுளின் பெயர் கூறிக் கொழுத்துக் கிடக்கும் தரகனுக்குத்தான் என்று புது அரசு அமைத்த கட்சியினர் பேசினர்; பேசி வருகின்றனர். கிழவிக்குத் தெரியாது; தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பும் எழவில்லை. தலைமுறை தலைமுறையாக நடந்துவரும் தொழுகையிலேதான் அவளுக்கு நம்பிக்கை. நம்பிக்கைக்குரிய வேறு ஒன்று இருக்க முடியும் என்றுகூட அந்த மூதாட்டி எண்ணிப் பார்த்ததில்லை.

ஒரு இரவு - மழை - கிழவிக்குக் கிலி - வீடு இடிந்து விடுமோ என்று - மழையைத் தாங்கும் வலிவுள்ளதா அந்த வீடு - படுகிழமாயிற்றே! தேவனையும் அடியார்களையும் வேண்டிக் கொண்டபடி இருந்தாள்; யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது; பதறினாள். தள்ளாடிக்கொண்டே சென்று கதவைத் திறந்தாள்; ஒரு வாலிபன் உள்ளே நுழைந்தான்; குளிர் நடுக்கத்துடன்.

பரிவுடன் அவனுக்கு ரொட்டி கொடுத்தாள் கிழவி. வீட்டுக்குள்ளே வந்ததால், அவனுக்கு நடுக்கம் குறைந்தது. கிழவிக்கு நன்றி கூறினான்.

பூஜாமாடம் தெரிந்தது. வாலிபன் முகத்திலே ஒரு ஏளனப் புன்னகை பிறந்தது. அந்தப் புன்னகையின் பொருளை உணரத்தக்க முறையில் அவனைக் கூர்ந்து பார்க்கக் கிழவியால் இயலவில்லை; கண்கள் ஒளியை இழந்துவிட்டிருந்தன, பெரும் பகுதி.

"இவைகளெல்லாம் என்ன?'' - அவன் கேட்கிறான்.

"தேவன் திருஉருவம் - பக்கத்தில் அடியார்கள் - அவர்கள் பெயர்களெல்லாம் எனக்கு முறையாகத் தெரியாது - அடியார்கள் என்று மட்டுமே தெரியும் - இவர்கள் அருளாளர்கள் என்பதை அவர்கள் முகத்தின் பொலிவே காட்டுகிறது'' - கிழவி கூறுகிறாள். வாலிபன் சிரித்தான், சத்தமிட்டு. "இவர்கள் உனக்கு என்ன தருகிறார்கள்? - இவர்களை நீ வணங்கிப் பெறுவது என்ன?'' அவன் கேட்கிறான்.

கிழவிக்கு நடுக்கம். இப்படி ஒரு கேள்வி கேட்கிறானே என்று.

"அப்பா! நானோ கிழவி! என் வீடு இது. பார் எவ்வளவு கலனாகிக்கிடக்கிறது; இது இடிந்துவிழாமல் பாதுகாத்தருள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செலுத்துகிறேன்' என்றாள்.

"பிரார்த்தனைகள் - ஜெபதபங்கள் - காணிக்கைகள் சடங்குகள் - இவைகளால் பிரச்சினைகள் தீராது. கிழவி! மக்களின் பிரச்சினைகளை மகேசன் தீர்க்கமாட்டார். மக்களேதான் தமது உழைப்பால் தீர்த்துக்கொள்ள வேண்டும். பூஜையாம், அருளாம்! வெறும் மனப்பிராந்தி'' என்று பேசலானான் வாலிபன்.

மழை நின்றது. அவன் வெளியே சென்றான். அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதிலே புகவுமில்லை. ஏற்கனவே அவள் மனதில் இருந்துவந்த நம்பிக்கையும் அவளைவிட்டு வெளியேறவில்லை. எப்போதும்போல, "ஏசுவே! மேரியே! அடியார்களே!'' என்று தொழுகை நடத்தியபடி இருந்து வந்தாள் மூதாட்டி.

ஒரு நாள் பாதிரியார் வந்தார் - பூஜை நடத்திக்கொடுக்க; கிழவி பயபக்தியுடன் தொழுகை நடத்தினாள். காணிக்கை கேட்டார்; பணம் வைத்திருந்தாள். தேடித் தேடிப் பார்க்கிறாள் - சிக்கவில்லை; எங்கு வைத்தோம் என்ற நினைவு வரவில்லை; கிழவிதானே!

"நீ தேடிக்கொண்டே பொழுதை ஓட்டுவாய், நான் காத்துக் கொண்டே கிடப்பதா! எனக்கென்ன வேறு வேலைகளே இல்லையா. இன்னும் பல இடங்கள் போக வேண்டும் பூஜை நடத்தி வைக்க. எனக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள் பலர் - அவர்களின் சாபத்தைப் பெறுவாய் - எடு எடு - பணம் இல்லாவிட்டால், பத்துக் கோழி முட்டைகளாவது கொடு'' என்று பக்திப் பிரபாவத்தின் பாதுகாவலன் கேட்கிறான். கிழவி முட்டைகளைத் தருகிறாள், பாதிரியார் பெற்றுக்கொண்டு போகிறார்.

அண்ணன்

28-2-1965