அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


அரசியல் விந்தைகள். . .
பண்டித நேரு காலமானார். . .

1

தம்பி!

கதையில் இதுபோல ஒருவருக்குப் பல ஓட்டுகள் - மொத்தத்தில் ஏழு - அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் இதிலே உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவிலே உள்ளதாகக் கற்பனையாகக் கூறப்படும் ஏழு ஓட்டு முறையில், ஒருவர் அந்த ஏழு ஓட்டுகளையும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலின்போது, உபயோகப்படுத்துகிறார் - இங்கு மூன்று ஓட்டுகளை வைத்திருப்பவர், மூன்று ஓட்டுகளையும், தனித்தனியாக, மூன்று கட்டங்களில் பயன்படுத்துகிறார்.

இங்கு மூன்று ஓட்டு உள்ளவர், மூன்று வெவ்வேறு தேர்தல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் உரிமையும் பெறுகிறார். கதையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு ஓட்டு முறையில், ஒரே தேர்தலில் ஏழு ஓட்டுகளை அவைகளைப் பெற்றிருப்பவர் உபயோகித்து, ஒரே ஓட்டுப் பெற்றுள்ள வாக்காளரைவிட, ஏழு மடங்கு வலிவுபெற்றவர் தான் என்பதை எடுத்துக் காட்டுகிறார்.

சொல்வதில்லையே தவிர, சொல்ல நினைத்தால், இங்கு ஒரு பட்டதாரி ஆசிரியர், சாதாரண வாக்காளரைப் பார்த்து, "உன்னைப்போல நான் என்று எண்ணிக்கொள்ளாதே; பொது உறுப்பினர் தேர்ந்தெடுக்க மட்டுமே உனக்கு ஓட்டு உண்டு; அந்த ஓட்டு எனக்கும் உண்டு; ஆனால் பட்டதாரிகள் தொகுதியிலேயும், ஆசிரியர்கள் தொகுதியிலேயும் உனக்கு ஓட்டு இல்லை; எனக்கு உண்டு; நான் உன்னைவிட மும்மடங்கு; தெரிந்துகொள் என்று சொல்லலாம் - வேடிக்கையாக. ஆஸ்திரேலியாவிலேயே ஒரே பொதுத் தேர்தலின்போது ஒருவர் மற்றொருவரை விட, இரு மடங்கிலிருந்து ஏழு மடங்குவரை வலிவு காட்டக் கூடியவராகிறார்.

தகுதிகள், தனித் திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகள் கொண்டவர்கள் மட்டுமேதான், ஆட்சி அமைப்புக் காரியத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறுவது, ஜனநாயகம் ஆகாது. ஆனால் ஜனநாயகம் என்பதற்காக தகுதிகள், திறமைகள், சிறப்பியல்புகள் ஆகியவைகளுக்குப் பொருளும் பயனும் இல்லாமலே போய்விட வேண்டும் என்று கூறுவதும் சரியாகாது. ஆகவேதான், ஜனநாயக அடிப்படையையும் அழிக்காமல், தனித்தன்மைகளுக்கும் வாய்ப்புத்தர, ஏழு ஓட்டு முறை ஏற்பட்டது என்று கதையில் விளக்கம் தரப்படுகிறது.

இதுபோன்ற முறை தேவையா அல்லவா என்பதற்காக அல்ல, ஜனநாயகத்தைச் செம்மைப்படுத்த வேண்டும் என்ற கருத்து இன்று பலரைப் பலவிதமான புது ஏற்பாடுகள்பற்றி எண்ணிப் பார்த்திட வைக்கிறது என்பதற்காக, இந்தக் கதையிலே காணப்படும் விந்தை முறைபற்றி குறிப்பிட்டுக் காட்டினேன். நெடுநேரம் அன்பழகனும் நானும், இது குறித்தும் இதன் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் பேசிக்கொண்டிருந்தோம். அவர் ஆசிரியர் தொகுதியில் வெற்றிபெற்றவரல்லவா?

22-5-1964

வெங்காவும் பொன்னுவேலுவும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் - பொழுது விடிந்ததும் விடுதலை. என் வலதுபக்கத்து அறையிலுள்ள பார்த்தசாரதிக்கும் இடப்பக்க அறையிலுள்ள சுந்தரத்திற்கும் கூடத்தான். இன்று இரவோடு, அந்த நால்வருடன் ஒன்றாகக் கழித்து வந்த சிறை வாழ்க்கை முடிவடைகிறது. அவர்கள் வெளியே செல்கிறார்கள். நான் இன்னும் ஓர் இருபத்தியொரு நாட்கள் இங்கு இருக்க வேண்டும். இன்றோரு 19 நாட்களாகியுள்ளன என்று பொன்னுவேல் கணக்குக் கொடுத்தார். இவர்களுடன் வெளியேயும் நெருங்கிப் பழகுபவன்தான் நான் என்றாலும், இந்த ஆறு திங்களாக இருபத்தி நாலு மணி நேரமும் ஒரே இடத்தில் இருந்து பழகி வந்ததை நினைக்கும்போது, இந்தப் பிரிவு மனதுக்குச் சங்கடமாகத்தான் இருக்கிறது. என்னிடம் அவர்கள் கொண்டுள்ள அன்பும், என் நலனைக் கருத்தில் கொண்டு, எனக்காகப் பல்வேறு உதவிகளை அவர்கள் செய்வதிலே வெளிப்பட்ட பாச உணர்ச்சியும் என் உள்ளத்தில் என்றும் நிலைத்திருக்கும்.

பார்த்தசாரதி தவிர மற்ற மூவரும் இளமைப் பருவத்தினர் - குடும்பம் மட்டுமே தரத்தக்க குதூகலத்தை இழந்தது மட்டும் அல்ல - இழந்து இங்கு ஆறு திங்களாக அல்லலை மேற் கொண்டனர். ஒரு தூய காரியத்துக்காகத் தொண்டாற்றுகிறோம் என்ற உணர்ச்சியும் எழுச்சியும் தவிர, இந்த நிலையை இலட்ச இலட்சமாகக் கொட்டிக் கொடுப்பதாகச் சொன்னாலும் ஏற்படுத்த முடியுமா? தூங்கட்டும், பாவம்! நாளைத்தினம் பெற்றோர் மகிழ, உற்றார் உசாவிட, நண்பர்கள் நலன் விசாரிக்க, இல்லத்தரசி இன்முகம் காட்ட, மகிழ்ச்சி அடையப்போகிறார்கள். அவர்களெல்லாம் அதுபோல இன்பமாக வாழ வேண்டும் என்பதுதான் என் எண்ணம். என்றாலும் கன்னல் தமிழ் மொழி காத்திடும் கடமை எழும்போது, எத்தகைய இன்ப நுகர்ச்சியையும் விட்டுக் கொடுத்துவிட்டு, வீறுகொண்டு எழ வேண்டும் என்பது என் முறையீடு. என் குரல் கேட்டு, மதிப்பளித்து, இன்ப நிலைமையை இழந்திடும் துணிவு கொண்டு, இங்கு வந்தவர்கள் இந்த நண்பர்கள். நாளையத் தினம், நாட்டினரைக் காணச் செல்கிறார்கள். நாளை மாலை, வெங்காவின் கிராமமான சீதாபுரத்தில், பாராட்டுக் கூட்டமாம். அறப்போரில் ஈடுபட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்; நாடு அவர்களைப் பாராட்டத்தான் செய்யும், சென்று வருவீர்! சிறையிலே மேலும் பலர் இன்னமும் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்ற செய்தியை மக்களிடம் எடுத்துக் கூறிவருவீர்! என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று காலை கருணாநிதி வந்திருந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளித்தது - பார்த்து இரண்டு மூன்று திங்களாகி விட்டன. கருணாநிதியுடன் கருணாநந்தமும் வந்திருந்தார். தோழர்களின் நலன் குறித்துக் கேட்டறிந்து மகிழ்ச்சி பெற்றேன். கருணாநிதியின் வழக்கு அடுத்த மாதம் மூன்றாவது வாரம் நடைபெறும் என்று அறிந்துகொண்டேன். கூட்ட நிகழ்ச்சிகள், உண்டி திரட்டியது ஆகியவைபற்றிக் கூறிடக் கேட்டு இன்புற்றேன். "அண்ணா, 13-ம் தேதி நிச்சயமாக விடுதலைதானே? காலையிலே எத்தனை மணிக்கு அனுப்பிவைப்பீர்கள்?'' என்று ஆவலுடன் கேட்ட கருணாநிதியின் கேள்விக்கு, அதிகாரி அழகான ஒரு புன்னகையைப் பதிலாகத் தந்தார்.

இன்று மாலை என்னைக் காண ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்ததாகவும், காலையிலேயே பார்க்கும் முறை தீர்ந்து விட்டதால் இன்று பார்ப்பதற்கு இல்லை என்று கூறித் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கேள்விப்பட்டேன்.

பார்த்தசாரதி, இத்தனை நாட்களாகப் பார்த்துவந்த சமையல் நிர்வாகத்தை எப்படிச் செம்மையாகச் செய்வது என்ற நுணுக்கங்களை, புதிய நிர்வாகி காஞ்சிபுரம் தோழர் சம்பந்தத்திடம் விளக்கிக்கொண்டிருந்தார். சம்பந்தத்துக்கு இது புதிதுமல்ல, பிரமாதமுமல்ல. இங்கு 16 பேர்தானே, செங்கற்பட்டுச் சிறையில் அவருடைய நிர்வாகத்தில் 55 பேர் இருந்துவந்தார்கள் என்று, காஞ்சிபுரம் தோழர்கள் பூரிப்புடனும் பெருமையுடனும் பேசினார்கள்.

23-5-1964

இன்று, பார்த்தசாரதி, சுந்தரம், பொன்னுவேல், வெங்கா ஆகிய நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்! காலை 5-30க்கே நான் எழுந்துவிட்டேன், நண்பர்களை வழி அனுப்பி வைக்க. நால்வரும், இங்குள்ள நண்பர்களிடம் விடை பெற்றுக்கொண்டு 6-30 சுமாருக்குச் சென்றனர். சிறை உடைகளைக் களைந்துவிட்டு, அவர்கள் தங்கள் சொந்த உடை அணிந்துகொண்டு, எங்களிடம் விடைபெற எதிரே நின்றபோது, ஒரு புதிய பொலிவு அவர்கள் முகத்திலே மலர்ந்தது. வெளியே செல்கிறோம், அறப்போரில் ஈடுபடச் சிறை சென்றவர்கள் இதோ விடுதலை பெற்று வந்திருக்கிறார்கள் என்று ஆயிரமாயிரம் தோழர்கள் சுட்டிக்காட்டி மகிழப் போகிறார்கள். அறப்போரின் அருமை பெருமையினை அறிந்தவர்கள் பெருமிதம் கொள்ளப் போகிறார்கள். பெற்றோரும் இல்லத்தின் மற்றவர்களும், சிறை சென்றுள்ளனரே நமது செல்வங்கள், எப்படி அவர்களைப் பிரிந்திருப்பது, உடல் நலம் கெடாமல் இருக்க வேண்டுமே, என்றெல்லாம் கொண்டிருந்த கவலை நீங்கப்பெற்று, வந்து விட்டனர் எமது செல்வங்கள், பொலிவளிக்கும் புன்னகை தவழும் முகத்துடன் வந்துவிட்டனர் என்று கூறி, மகிழ்ச்சி பெறப் போகிறார்கள் என்ற எண்ணம், விடுதலை பெற்ற நால்வருக்கும், புதிய தெம்பையும், நடையிலே ஒரு துடுக்கையும் தானாகக் கொண்டுவந்து சேர்த்துவிட்டது. அவர்களை அந்த நேரத்தில் காண்பவர்களின் கண்களில் இவர்கள் சற்று முன்புவரை கைதிகளாக இருந்தவர்கள் என்று எண்ணிடக்கூடத் தோன்றாது. அத்தகைய ஒரு புதுப் பொலிவு பெற்றனர். அவர்களை அனுப்பி வைத்துவிட்ட பிறகு, அன்று முழுவதும் எனக்கு, அடிக்கடி அவர்கள் பற்றிய நினைவாகவே இருந்தது. அதிலும், எதற்கெடுத்தாலும், வேடிக்கையாக, சுந்தரத்தைக் கூவிக் கூவி அழைப்பது இந்த ஆறு திங்களாக எனக்குப் பழக்கமாகி விட்டிருந்ததால், அந்த நினைவு மேலோங்கியபடி இருந்து வந்தது. சுந்தரம்! சுந்தரமூர்த்தி! சுந்தரமூர்த்தி நாயனார்! - என்று இப்படி மாறி மாறிக் கூப்பிட்டபடி இருப்பேன் - அவர்கள் வெளியே சென்றுவிட்ட பிறகு, அந்த அறைகள் வெறிச்சிட்டுப் போய்க் கிடந்தன.

வெளியே நல்ல கூட்டம் - வரவேற்பு என்று காவலாளிகள் பேசிக்கொண்டார்கள் - விவரங்கள் கூறுவாரில்லை. நாங்களாக, இப்படி இருந்திருக்கும், இன்னின்னார் வந்திருப்பார்கள், இப்படி இப்படிப் பேசி மகிழ்ந்திருப்பார்கள் என்று, இங்கு இருந்தபடி கற்பனை செய்துகொண்டிருந்தோம் - அதிலேயும் ஒரு சுவை கிடைக்கத்தான் செய்தது.

முன்பே செய்திருந்த ஏற்பாட்டின்படி, சமையல் நிர்வாகப் பொறுப்பை காஞ்சிபுரம் சம்பந்தம் மேற்கொண்டார். சுந்தரமூர்த்திநாயனார் வெளியே சென்றுவிட்டார், இனி சம்பந்தர் துணைதான் நமக்கு என்று வேடிக்கையாகக் கூறினேன். எந்தக் காரியத்தையும் பொறுப்பாகவும் அமைதியாகவும், தமது திறமை பற்றி எதுவும் பேசாமலும் பெருமை கூறிக்கொள்ளாமலும் செய்து முடிப்பவர், சம்பந்தம் - அடக்கமான இயல்பு.

இப்போ, எனக்கு வலப்புறமும் இடப்புறமும், பார்த்தசாரதி, சுந்தரம் இருந்த அறைகளில், சம்பந்தமும் மணியும் குடியேறி உள்ளனர். இரவு என் அறையில், மணியும் திருவேங்கிடமும்.

இன்றிரவு நீண்ட நேரம் செங்கற்பட்டு மாவட்ட கழக நிலைமைகள் குறித்து, மணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். என்னுடைய நலனைக் கவனித்துக்கொள்வதிலே மிகுந்த அக்கறை கொண்டுள்ள மணி, சம்பந்தம், திருவேங்கிடம் ஆகியோர், நான் விடுதலை பெற்ற பிறகும், இங்கே இருக்கவேண்டியவர்கள். சுந்தரம், பார்த்தசாரதி ஆகியோர் வெளியே சென்றுவிட்டதால் என் நலனைக் கவனித்துக்கொள்வதில் புதிய பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, அன்பழகன் மெத்த உதவிகள் செய்கிறார்.

இன்று மாலை, ராணி, பரிமளம், சரோஜா மூவரும் என்னைக் காண வந்திருக்கிறார்கள்; இன்று அனுமதிக்க முடியாது, திங்கட்கிழமை வரலாம் என்று அதிகாரிகள் கூறித் திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரியவந்தது. அன்பழகனைக் காணவந்த வெற்றிச் செல்வியையும் அதுபோலவே திருப்பி அனுப்பிவிட்டிருக்கிறார்கள்; அவர்கள் வீடு சென்று, சிறை மேலதிகாரியிடம் தொலைபேசி மூலம் கேட்டிருக்கிறார்கள், "இன்று எனக்கு என் கணவரைப் பார்க்கும் அனுமதி இருந்தும் திருப்பி அனுப்பிவிட்டார்களே, ஏன்?' என்று. அதற்குப் பிறகு, வெற்றிச்செல்விக்கு அனுமதி தரப்பட்டது. அவர்கள் அன்பழகனை வந்து பார்த்து, இந்தத் தகவலையும் ராணியைத் திருப்பி அனுப்பிவிட்டது பற்றியும் கூறி இருக்கிறார்கள். இன்று சர்க்கார் விடுமுறை நாளாம் - ஆகவே சீக்கிரமாகவே பூட்டிவிட வேண்டும் என்று கூறி, வெளியே மஞ்சள் வெயில் அடித்துக் கொண்டிருக்கும்போதே எங்களை அறைகளில் போட்டு விட்டார்கள். தூக்கம் வருகிறவரையில், ரμயர்வில் புரட்சி வெற்றிபெற்ற காலத்திற்கும் புதிய சமுதாய அமைப்பு பலமடையும் காலத்திற்கும் இடையே இருந்த நிலைமைகளை விளக்கும் பல சிறுகதைகள் - ரμய எழுத்தாளர்கள் தீட்டியவை - கொண்ட ஏடு படித்துக்கொண்டிருந்தேன். சிறை வாழ்க்கை பற்றிய ஒரு சிறுகதை, மனதை உருக்கும் விதமாக இருந்தது. அதைப்பற்றிச் சிந்தித்தபடியே கண் அயர்ந்தேன்.

24-5-1964

ஞாயிற்றுக்கிழமை - ஓய்வு நாள் - சிறையில் வறட்சி நிரம்பிய நாள். இந்த வறட்சியை நீக்கும் வகையில், இன்று காலை பத்து மணிக்கு மருத்துவமனை சென்றிருந்த மதியழகன் இங்கு வந்து சேர்ந்தார். கடந்த பதினைந்து நாட்களாக, மருத்துவ மனையில் இருந்துவிட்டு வருகிறார் - சிறையில் உள்ளவர்களுக்கு, இவ்விதம் வெளியில் இருந்து வருகிறவர்களைக் கண்டதும், ஒரு தனி மகிழ்ச்சி பிறப்பது இயல்பல்லவா - சேதிகள் கேட்டறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பதால். மருத்துவமனையில் தமக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைபற்றி விவரமாக மதி கூறினார். விடுதலையான வெங்கா, பொன்னுவேல், பார்த்தசாரதி ஆகியோர் நேற்று மருத்துவமனை வந்து தன்னைப் பார்த்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு, ராஜாராம் எம். பி., என். வி. நடராஜன் எம். எல். சி., அரங்கண்ணல் எம். எல். ஏ., குத்தூசி குருசாமி, மற்றும் பலர் வந்து நலன் கேட்டுச் சென்றதையும் கூறினார். சென்னைக் கடைவீதியொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கியவர்களை, மருத்துவமனையில் பார்த்ததை, மதி கூறிடக் கேட்கும்போது, மிகவும் வேதனையாக இருந்தது. பயங்கரமான விபத்து என்று தெரிகிறது. மிகப் பரிதாபகரமான சாவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தனை உயிர்களைக் காவுகொண்ட, அத்தகைய ஆபத்தான வெடிமருந்துகளை எத்தகைய இடத்தில், எவ்விதமான முறையில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டு திட்டம், முறைகளே இல்லையா? இவ்விதமான பயங்கரமான விபத்து ஏற்படக்கூடிய விதத்திலா நிலைமை இருந்திருக்க வேண்டும் என்பனபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். மதியழகன் நேரிலே அந்த விபத்திலே சிக்கிக்கொண்டவர்களைப் பார்த்து விட்டு வந்த விவரம், கூறக் கேட்டபோது மனம் மிகவும் வேதனைப்பட்டது.

25-5-1964

இன்று காலை பத்து மணிக்குமேல் மேயர் கிருஷ்ணமூர்த்தி துணை மேயர் கபாலமூர்த்தியுடன் என்னைக் காண வந்திருந்தார். முன்பு இரண்டொரு முறை முயற்சித்தும் மேயர் என்னைக் காண உரியநேரத்தில் அனுமதி கிடைக்கவில்லை. சில ஆண்டுகளாக என்னிடமும் கழகத் தோழர்களிடமும் நட்புகொண்டு பழகிவரும் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இனிய இயல்பு படைத்தவர். அவர் மேயராக வேண்டுமென்று கழகம் எடுத்துக்கொண்ட முதல் முயற்சி வெற்றி பெறாமல் போனபோது நான் சங்கடப்பட்டேன்; அப்போதுகூட அவர், வெற்றி கிட்டாததுபற்றிக் கவலை இல்லை, நீண்ட பல ஆண்டுகளாக நான் எந்தக் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து பணியாற்றி வந்திருக்கிறேனோ அந்தக் கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரசுடன் கூடிக்கொண்டு எனக்குத் துரோகம் செய்த அதே நேரத்தில், கழகத் தோழர்கள் கட்டுப்பாடாக இருந்து எனக்கு ஆதரவு அளித்த பெருமையும் மகிழ்ச்சியுமே எனக்குப் போதும் என்று கூறினவர்.

மேயர் பொறுப்பிலே ஈடுபட்டதிலே ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். துணை மேயருடன், அப்போதுகூட நகரில் பல பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு வருவதாகச் சொன்னார்.

எளிய வாழ்க்கையினரான அந்த நண்பருடைய தொண்டு, நகருக்குக் கிடைத்திருப்பது நல்லதோர் வாய்ப்பாகும். அவர் தொடர்பு கொண்டுள்ள கம்யூனிஸ்டு கட்சியின் இன்றைய பிரச்சினைபற்றிச் சில கூறி ஆரம்பித்தார்; அந்தப் பேச்சை மேற்கொண்டு விரிவாக்காதபடி நான் வேறு விஷயங்களைப் பேசலானேன்.

மாலையில் ராணி, பரிமளம், சரோஜா மூவரும் வந்திருந்தனர். மூவருக்குமேல் அனுமதி கிடையாது என்பதால், கௌதமன் வெளியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாகக் கூறினார்கள். அனைவருடைய நலன்பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

இன்று இரவு, காஞ்சிபுரம் அறப்போரில் ஈடுபட்ட கோவிந்தசாமி குழுவினர் வழக்கில், அளிக்கப்பட்ட தீர்ப்பு விவரம் படித்துக்கொண்டிருந்தேன்.

மாலை அணிவித்தார்கள். கொடிகளைக் கொடுத்தார்கள். சென்றுவருவீர்! வென்றுவருவீர்! என்று முழக்கமிட்டு உற்சாக மூட்டினார்கள். ஆகவே தோழர்கள் சி. வி. எம். அண்ணாமலை, மார்க், சபாபதி, நெலலிக்குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி காட்டுமன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், (இ. பி. கோ. 120) சதிக் குற்றம் செய்தவர்களாகிறார்கள் என்ற போலீஸ் தரப்பு வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை - அதற்கான விவரத்தைத் தமது தீர்ப்பிலே கூறியிருந்தார்.

இதேபோன்ற வழக்குத்தான் கருணாநிதி, நடராஜன் ஆகியோர்மீது மதுரையில் தொடரப்பட்டது. ஆனால் அங்கு அவர்களுக்கு நீதிமன்றம் ஆறு திங்கள் கடுங்காவல் தண்டனை என்று அளித்திருக்கிறது.

சி. வி. எம். அண்ணாமலையும் மற்றவர்களும், சட்ட விரோதமான செயலில் ஈடுபடக் கிளம்பிய கோவிந்தசாமி குழுவினருக்கு மாலை அணிவித்தனர். அந்தச் செயல் அவர்களைக் குற்றம் செய்யச் சதி செய்தவர்களாக்குகிறது என்ற போலீஸ் வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்து, ஆறாம் குற்றவாளி (அண்ணாமலை) தமது கட்சித் தோழர்களுக்கு மரியாதை தெரிவிக்க மாலை அணிவித்ததாகக் கூறியுள்ளார்; மாலை அணிவித்ததை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு, மாலை அணிவித்தவர்களும் சதியில் பங்கு கொண்டவர்களாகிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கில்லை. ஒன்றுகூடி, கூட்டமாக ஒரு குற்றம் செய்வது சதி என்றாகிறது. போலீஸ் தரப்பிலே தரப்பட்ட சான்று 17 எண் முதல் ஐந்து குற்றவாளிகள் மட்டுமே அரசியல் சட்டத்தைக் கொளுத்த வேண்டும் என்று தி. மு. க. தலைவர்கள் பணித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. அந்த ஐவரும், அதுபோல் செய்திட ஏற்கனவே முடிவெடுத்துள்ளனர் என்பதும் போலீஸ் தரப்பு தந்த சான்று மூலமே தெரிய வருகிறது. ஆகவே முதல் ஐந்து எதிரிகள் அரசியல் சட்டத்தைக் கொளுத்தும்படி, சதி செய்யவேண்டிய அவசியம் மற்ற எதிரிகளுக்கு இல்லை.

ஏழாவது குற்றவாளி (சபாபதி) கழகக் கொடிகளை முதல் ஐந்து எதிரிகளிடம் கொண்டுவந்து கொடுத்தார் என்று கூறப்பட்டது. கொடுத்ததாகவே வைத்துக்கொண்டாலும், அதனாலேயே ஏழாவது எதிரி சதி செய்தார், உடந்தையாக இருந்தார் என்று கூறிவிட முடியாது - என்று நீதிபதி தமது தீர்ப்பில் விளக்கம் அளித்திருக்கிறார். சட்டத்தை இன்ன இடத்தில், இன்னின்னார் கொளுத்தப்போகிறார்கள் என்று முன்னதாகவே சுவரொட்டிகள் மூலம் அறிவித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்புப்பற்றி மணியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.