ரிச்சர்டும் ஜெரூசல ஊர்வலமும் -
ஐம்பதின்மர் சட்டமன்ற நுழைவு -
இந்தித் திணிப்பு.
தம்பி!
எதிர்ப்புக்கண்டு அஞ்சவில்லை,
ஏளனம் கேட்டு எரிச்சல் கொள்ளவில்லை, ஆபத்துக்களைத் துரும்பென
மதித்தோம். உயிரைத் துச்சமென்று கருதினோம். வெட்டுப்பட்டோம்.
குத்துப் பட்டோம். குருதி கொட்டினோம். உறுப்புக்கள்
இழந்தோம். உடனிருந்தோர் கொல்லப்பட்டது கண்டோம். இரத்தச்
சேற்றினில் புரண்டோம். பிணத்தின்மீது உருண்டோம். சிறகடித்து
வரும் பெரும் பறவைகள், பிணமாகிக் கீழே வீழ்ந்து பட்ட நமது
தோழர்களின் உடலைக் கொத்திடக் கண்டோம். கண்ணீர் கொப்புளித்தது.
சொல்லொணாத கஷ்டங்களைக் கண்டோம். மனம் உடைய இடந்தரவில்லை.
போரிட்டோம், போரிட்டோம், புனிதப் போரில் நமக்கே இறுதி
வெற்றி என்ற நம்பிக்கையுடன் போரிட்டோம், பலன் இல்லை
என்று ஒரு சமயம் தோன்றும். பயம் மற்றோர் சமயம் நெஞ்சைத்
துளைக்கும், பெருமூச்செறிவோம், எனினும் முன்வைத்த காலை
பின்வைக்க மாட்டோம் என்று சூளுரைத்துப் போர் புரிந்தோம்.
பொழுது புலர்ந்தது, பட்டபாடு வீண்போகவில்லை, எடுத்த
காரியம் முடித்தோம் என்ற எண்ணம் வெற்றிக் களிப்பூட்டுகிறது.
எந்த நோக்கத்துக்காகப் புனிதப்போர் நடாத்தினோமோ, மாடு
மனை மறந்து, மக்கள் சுற்றம் துறந்து, வாழ்க்கை இன்பம்
இழந்து, கட்டாந்தரையையும், காடுமேடுகளையும் இருப்பிடமாகக்
கொண்டு போரில் ஈடுபட்டு நின்றோமோ, அந்த நோக்கம் ஈடேறுகிறது,
புனிதத் திருநகர் செல்கிறோம், உத்தமர் திருவடி பட்டதால்
உயர்வுபெற்ற திருநகர் செல்கிறோம். அருளாளர் மலரடி பட்டதால்
மகிமைபெற்ற மாநகர் செல்கிறோம், இம்மைக்கும் மறுமைக்கும்
எவ்வழி நல்வழி காட்டிடுமோ அவ்வழி கண்டுரைத்தவர் கோயிலூர்
செல்கிறோம், எந்த நகர்பற்றி எண்ணி எண்ணி ஏங்கிக் கிடந்தோமோ,
அந்தப் புனிதபுரி செல்கிறோம். எமது புனிதபுரி எமக்கே
சொந்தம், எமக்கு அது இறைவன் இல்லம், கருணைக் கோட்டம்,
இறவாப் புகழ்பெறு கோயில். ஆங்கு நாங்கள் செல்வது எமது
உரிமை. அந்த உரிமையினை எவர் தடுத்திடினும், மடிய நேரிடினும்
சரியே, உரிமைப்பெறப் போரிடுவோம், உரிமையை இழந்தார்கள்
உதவாக்கரைகள் என்று உலகம் இகழத்தக்க இழிநிலையுடன் உழன்றிடமாட்டோம்.
கழுகு எமது உடலைக் கொத்தட்டும், கவலையில்லை; "புனிதபுரி
எமது' எனும் முழக்கமிட்டபடியே வெட்டுண்டு வீழ்வோம் என்றெல்லாம்
சூளுரைத்து, எந்த நோக்கத்துக்காகச் சமர் நடாத்தினோமோ,
அந்த நோக்கம் ஈடேறுகிறது. புனிதபுரி சென்றிடும் உரிமை
நம்முடையதாகிறது. இதோ புனிதபுரி செல்கிறோம்! - என்று
எண்ணியபடி அந்த அணிவகுப்பு, பெருமிதத்துடன், களிநடமிடுவதுபோல்
ஜெருசலம் எனும் புனிதபுரிக்குள் செல்கிறது.
நுழைவு வாயிலுக்கு வெளியே
நிற்கிறான், உரிமை பெற்றோம் என்ற "எக்களிப்புடனும், புனிதபுரியைக்
காணச் செல்கிறோம்' என்ற பெருமைமிகு உணர்ச்சியுடனும் உள்ளே
நுழையும் அணிவகுப்பினைக் கண்டபடி, கண்ணீர் துளிர்க்கும்
நிலையுடன், இஃதன்றோ வெற்றி, இவரன்றோ வீரர், இது வன்றோ
புனிதப்போர் என்றெல்லாம் எண்ணியபடி, விம்மிடும் நெஞ்சுடன்
நிற்கிறான், அணிவகுப்பை நடத்திச்சென்றவன்.
அணிவகுப்பு புனிதபுரிக்குள்
நுழைகிறது.
அணிவகுப்பினை நடத்திவந்தோன்
அதனைக்கண்டு அகமிக மகிழ்கிறான்.
புனிதப்போரிலே வெற்றிக்
கட்டம் - உரிமை தரப்படுகிறது, கடும் போரிட்டு உரிமையினைப்பெற
வீரர் குழாம், புனித நகருக்குள் செல்கிறது; காண்கிறான்
காணவேண்டுமென்று நெடுங்காலம் எண்ணிய காட்சியை; வெற்றி
வீரர்கள் செல்கிறார்கள் வீரநடையுடன், புனிதபுரிக்குள்
என்பதை எண்ணுகிறான்; உடல் புல்லரிக்கிறது; களத்திலே ஏற்பட்ட
கஷ்டமத்தனையும் பழத்தை மூடிக்கொண்டிருக்கும் தோல் என்று
எண்ணிடத் தோன்றுகிறது; உலகு அறியட்டும், உறுதியுடன் உரிமைப்போர்
நடாத்துபவர் வெற்றிபெற்றே தீருவார்கள் என்ற உண்மையை என்று
மெள்ளக் கூறிக்கொள்கிறான்; அணிவகுப்பு புனிதபுரிக்குள்
செல்கிறது, அதனைக்கண்டு களிப்புடன் நுழைவு வாயிலில் அணிவகுப்பினை
நடத்திவந்தவன் நிற்கிறான் - ஆனால் அவன் உள்ளே செல்லவில்லை!!
புனிதபுரியாம் ஜெருசலம்
நகருக்குள், அணிவகுத்து செல்லலாம் - அந்த உரிமை அவர்கட்கு
உண்டு - என்று மாற்றார் கூறினர் - ஆனால் ஒரே ஒரு நிபந்தனை,
அணிவகுப்புத்தான் செல்லலாம், அதனை நடத்திச் செல்பவன்,
ஜெருசலம் நகருக்குள் செல்லக்கூடாது - என்று கூறிவிட்டனர்.
எனவே, அணிவகுப்பு புனிதபுரிக்கு
உள்ளே சென்றது; அதனை நடத்திச்சென்ற ரிச்சர்டு, ஜெருசலம்
நகர நுழை வாயிலில் நின்றுகொண்டிருந்தான்.
புனிதப்போர், ஜெருசலம்
நகருக்காக, பல ஆண்டுகள் நடைபெற்றது. இஸ்லாமியருக்கும்
கிருஸ்தவர்களுக்கும் நடைபெற்ற அந்தப் போருக்கு, வேறு
பல காரணங்களும் இடையிடையே வந்து இணைந்துகொண்டன; பல வீரக்காதை
களைத் தன்னகத்தேகொண்டதாக அந்தப் புனிதப்போர் வடிவெடுத்தது.
அரசுகள் பல இதிலே ஈடுபட்டன. அழிவுபற்றிய கவலையின்றி அஞ்சா
நெஞ்சினர் அணி அணியாக, அலை அலையாகக் கிளம்பினர்; உலகமே
கிடுகிடுக்கத்தக்க பயங்கரச் சண்டைகள் நடைபெற்றன; முடிகள்
உருண்டன, நகர்கள் நாசமாயின, பிணமலை எங்கெங்கும்; அப்படிப்பட்டதோர்
புனிதப்போரில், இஸ்லாமியர்களைத் தலைமை வகித்து நடத்திச்சென்ற
இணையில்லா வீரனாகச் சாலடீன் எனும் மாமன்னன் விளங்கினான்;
கிருஸ்தவர் தரப்பில் கிளர்ந்தெழுந்து வீரப் போரிட்ட மாபெருந்
தலைவன் என உலகு புகழ் நிலைபெற்றான் இங்கிலாந்து நாடு ஆண்ட,
ரிச்சர்டு என்பான்! அரிமா நெஞ்சு அவனுக்கு என்று சிறப்புப்
பெயரிட்டு அழைத்திடத்தக்க முறையில் ஆற்றல் மிக்கோனாக
விளங்கினான் ரிச்சர்டு.
புனிதப்போரிலே ஒரு கட்டம்தான்,
ஜெருசலம் நகருக்குள் கிருஸ்தவர்கள் செல்லலாம் என்று சாலடீன்
அனுமதி அளித்து, போர் நிறுத்த ஏற்பாட்டுக்கு இசைவு அளித்தது.
அந்தப் போர் நிறுத்தக்
கட்டத்தின்போதுதான், உரிமை கிடைத்தது என்ற உவகையுடன்,
புனிதபுரிக்கு உள்ளே, கிருஸ்தவர் களின் அணிவகுப்பு பெருமிதத்துடன்
நுழைந்தது.
ஆனால், அந்த அணிவகுப்பை
நடத்திச்சென்ற ரிச்சர்டு, ஜெருசலம் நகருக்குள் செல்லவில்லை.
போர் நிறுத்த ஏற்பாட்டுக்கும்,
ஜெருசலம் நகருக்குள் கிருஸ்தவர்களின் அணிவகுப்பு நுழைவதற்கும்
இசைவு அளித்த சாலடீன் ஒரு நிபந்தனை விதித்திருந்தான் -
அந்த நிபந்தனைதான், அணிவகுப்பு மட்டும்தான் ஜெருசலம் நகருக்குள்
நுழையலாமே தவிர, அதனை நடத்திவந்த ரிச்சர்டு, புனிதபுரிக்குள்ளே
நுழையக் கூடாது என்பதாகும்.
எனவேதான், அணிவகுப்பு ஜெருசலம்
நகருக்குள்ளே நுழைந்தது; நகர நுழைவு வாயிலுக்கு வெளியே
நின்று கொண்டிருந்தான், ரிச்சர்டு!
உள்ளே நுழைந்தவர்களுக்கு,
நுழைவு வாயிலில் ரிச்சர்டு நிறுத்தப்பட்டுவிட்டானே என்ற
கவலைதான்; வெளியே நிறுத்தப்பட்டுவிட்டவனுக்கோ, புனிதபுரிக்கு
உள்ளே நுழையும் உரிமை அணிவகுப்புக்கு கிடைத்துவிட்டது
என்ற களிப்பு.
தம்பி! தோற்றுக் கிடக்கும்
நேரத்திலேதான் இவனைத் தாக்கி மகிழ்ச்சி பெற்றுக்கொள்ளவேண்டும்
என்ற சிறுமதி படைத்தவர்கள், இதனைக்கூடத் திரித்துக்கூறி,
"பார்! பார்! இவன் தன்னை ரிச்சர்டு எனும் மாவீரனுக்கு
இணையாக்கிக் கொள்கிறான்!!' என்று பேசக்கூடும்.
என்னை ரிச்சர்டு நிலைக்கு
நான் உயர்த்திக்கொள்ள இதனை எழுதவில்லை; இதனைப் படித்துவிட்டு,
மாற்றார்களும் தங்களை சாலடீனுடன் ஒப்பிட்டுக்கொண்டுவிட
வேண்டாம்.
அணிவகுப்பு உள்ளே நுழையும்
உரிமைபெற்ற நேரத்தில், அதனை நடத்திச்சென்றவன் மட்டும்,
உள்ளே நுழையக்கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டால்,
அந்த நிகழ்ச்சி எத்தகைய உள்ள நெகிழ்ச்சியைத் தருமோ, அப்படிப்பட்ட
உள்ள நெகிழ்ச்சி, நம்மில் ஐம்பதின்மர் சட்டமன்றம் சென்று
அமர்ந்திடும் வேளையில், என்போன்றோர் உடன் செல்ல முடியாமல்,
வெளியே நிறுத்திவிடப்பட்டிருப்பதால் ஏற்பட்டிருக்கிறது
என்பதை எடுத்துக்காட்ட மட்டுமே, இதனை எழுதினேன்.
உள்ளத்துக்கு நெகிழ்ச்சியை
மட்டுமல்ல, புதியதோர் உறுதியையும் தரத்தக்க, இத்தகைய
நிகழ்ச்சிகளை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதனைக்
கூறவும், இதனை இங்குக் குறிப்பிடுகிறேன்.
இதோ நாம் நுழைகிறோம் புனிதபுரிக்குள்!
ஆனால் நம்முடன் வந்திருக்கவேண்டியவர்களில் பலர் வரவில்லையே
என்ற ஏக்கம், செயலற்ற நிலைக்கு அல்ல, செயலை விறுவிறுப்பு
மிக்கது ஆக்கிக்கொள்ளப் பயன்படவேண்டும்.
அவர்களும் வந்திருந்தால்.
. . அவர்களும் உடன் இருந்தால் . . . என்ற எண்ணம் எழாமலிருக்காது;
நமக்குள் உள்ள குடும்பப் பாசம் அத்தகையது; நமது பொலிவுக்கும்
வலிவுக்கும் அஃதே அடிப்படை; எனினும் அந்த எண்ணம், "நாம்
மட்டும் வந்து என்ன பலன்?' என்ற முறையில் வடிவெடுக்க இடம்
தரக்கூடாது. நாம் வந்திருக்கிறோம், அவர்கள் வரவில்லை;
அவர்களும் வந்திருந் தால் எத்தகைய முறையிலே பணி செம்மையாக
இருந் திருக்குமோ, என்ற கவலை எவருக்கும் எழாதபடியான தரத்திலும்,
அளவிலும், நம்முடைய பணி அமையவேண்டும் என்ற உறுதியுடன்,
ஒவ்வொருவரும் தத்தமது ஆற்றல் அவ்வளவையும் பயன்படுத்திக்
கூட்டுச்சக்தியாக்கிப் பணியினைச் சிறப்புடையதாக்கவேண்டும்.
நடத்திச்செல்பவனை இழந்தும்
ஒரு அணிவகுப்பு பணிபுரிய இயலும் - தமக்குள்ளாகவே நடத்திச்செல்பவரைப்
பெறமுடியும்!
ஆனால், அணிவகுப்பு இன்றி,
நடத்திச்செல்பவன் மட்டும் தட்டுத் தடுமாறி உள்ளே நுழைகிறான்
என்று வைத்துக்கொள் தம்பி! எப்படி இருக்கும் அந்தக் காட்சி?
கண்றாவியாக இருக்கும்!!
நடத்திச்செல்பவனை இழந்த
அணிவகுப்பைக் காண்போர், ஆச்சரியப்படுவர்!
அணிவகுப்பினை இழந்த நடத்திச்செல்பவனைக்
காண்போர், கேலி செய்வர்!!
நடத்திச்செல்பவனற்று ஒரு
அணிவகுப்பு இருந்துவிடாது நடத்திச்செல்பவர் ஒருவரைக் கண்டுபிடித்துவிடும்.
அணிவகுப்பினை இழந்த தலைவன்,
மாயமந்திர வேலைகளால் உடனே மற்றோர் அணிவகுப்பை உண்டாக்கிக்
கொள்ளமுடியாது.
எனவேதான், தம்பி! அணிவகுப்பு
அடையும் வெற்றிதான் மிக முக்கியமே தவிர, நடத்திச் செல்பவன்
ஈட்டிடும் வெற்றி அவ்வளவு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது
அல்ல; கோபுரம்தான் முக்கியம், கலசம் அல்ல! கலசமும் இருந்திருந்தால்
அழகாகத்தான் இருக்கும்; ஆனால் கோபுரமின்றிக் கலசம் இருந்தால்
கேலிக்கூத்தாக அல்லவா இருக்கும். அதுபோலத் தான், என்
போலச் சிலர்' உள்ளே வரமுடியாமற்போனது?
இதனை நான், வெறும் மன ஆறுதல்
அளிக்கக் கூறுகிறேன் என்று எண்ணிக்கொள்ளாதே. தம்பி! இதற்கு
ஊடே இருக்கும் தத்துவத்தை, விளக்கமாக்குவதற்காகவே கூறுகிறேன்.
காங்கிரசுக் கட்சியினர்
கோபுரத்தைத் தகர்க்கத் திட்ட மிட்டனர்; தம்மிடம் கிடைத்த
அழிவுக் கணைகளை ஏவினர்; அவர்கள் கண்ட பலன், கலசம் பிய்த்தெளியப்பட்டதுதான்;
கோபுரம் அல்ல!
ஐம்பது கழகத் தோழர்கள்
சட்டமன்றத்தில்! அணிவகுப்பு உள்ளே நுழைந்துவிட்டது! வெளியே
நிறுத்தி வைக்கப்பட்டு விட்ட என்போன்றார்களைக் காணும்போது,
மாற்றார்களுக்கு ஒரு கணம் சிரிப்புப் பொங்குவது இயற்கை;
பல இலட்சம் செலவிட்டு அவர்கள் இந்தப் பலனைக்கூடவா சுவைக்கக்
கூடாது! - ஆனால் மறுகணமோ, ஐம்பதுபேர்! ஐம்பதுபேர்! நாலில்
ஒரு பகுதி!! என்ற எண்ணம் கொட்டுகிறது; துடியாய்த் துடிக்கிறார்கள்.
இந்த ஐம்பதின்மருடன் பாராளுமன்றத்துக்கு
எழுவரையும் சேர்த்து வெற்றிபெறச் செய்த நமது கழகத் தோழர்கள்,
ஆதரவாளர்கள், ஜனநாயகம் புதுப் பொருள் பெற்றாகவேண்டும்
என்பதற்காக நமக்குத் துணை நின்றவர்கள் ஆகிய அனை வருக்கும்
நன்றி கூறிக்கொள்கிறேன்.
வெற்றி ஈட்டித்தர இயலாதுபோயினும்,
மற்ற இடங் களிலும் வெற்றி பெற்றாகவேண்டும் என்பதற்காக
அரும்பாடு பட்டனர் நமது தோழர்கள், அவர்களுக்கும் என்
நன்றி.
சொல்லப்போனால், வெற்றிபெற்றிருக்கிற
இடத்திலே பணியாற்றிய நமது கழகத்தோழர்களும், ஆதரவாளர்களும்,
நண்பர்களும், வெற்றிக் களிப்புப்பெற்று, பட்ட கஷ்டம் அத்தனையும்
பறந்துபோன நிலையில், ஏறு நடைபோட்டு எக்களிப்புடன் இருக்க
முடிகிறது. - அரைத் தெடுத்த சந்தனத்தை மார்பில் அணிந்துகொண்டதுபோன்ற
மகிழ்ச்சி இருக்கும்போது, அரைத்தபோது தோன்றிய வலி மறந்தேபோய்விடுகிறது
அல்லவா! அதுபோல!! கொஞ்சுகிறாள் பார். கொலுப்பொம்மை
யைப்போலக் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டு! இன்று.
அன்று? அடேயப்பா? என்ன அலறல்! எவ்வளவு அழுகை! வேண்டாமே!
வேண்டவே வேண்டாமே! குழந்தையே வேண்டாமே!! என்றெல்லாம் கூச்சலிட்டாள்!
இன்று ராஜாவாம் ரோஜாவாம்! கொஞ்சுகிறாள் குழந்தையிடம்!
- என்று பொக்கைவாய் மூதாட்டி கேலிபேசுவது உண்டல்லவா,
குலக்கொடியைப் பெற்றெடுத்த கோமளத்தைப் பார்த்து. அதுபோல,
வெற்றிபெற்ற இடத்திலே, மனதுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, மாற்றார்களைப்
பார்க்கிறபோது ஏற்படும் பெருமித உணர்ச்சி போதும், எத்துணை
கஷ்டநஷ்டத்தையும் ஈடு செய்துவிடும். எனவே, வெற்றிபெற்ற
இடங்களில் பணியாற்றினவர் களுக்குக்கூட அதிகமாகப் பாராட்டும்,
நன்றியறிதலும் கூறத் தேவையில்லை.
பாடுபட்டும் பலன் காணாததால்
மனம் உடைந்து, மாற்றார் முன் எப்படி நடப்பது என்று வேதனையுடன்
இருக்கிறார்களே. தோற்றுப்போன இடங்களிலே பணியாற்றிய வர்கள்
- அவர்களுக்குத்தான் ஆறுதல் கலந்த நன்றியறிதலை அதிகமான
அளவு கூறவேண்டும். அவர்கள் பணியாற்றியபோது என்னென்ன இன்ப
நினைவுகள் அவர்கள் மனதிலே அலை மோதினவோ! எத்தனை இரவுகள்
இன்பக் காட்சிகளைக் கனவாகக் கண்டனரோ! எத்தனை எத்தனை பேர்களிடம்
வெற்றி நிச்சயம்! வெற்றி உறுதி!! என்றெல்லாம் பேசிப்பேசி
மகிழ்ந்தனரோ! - பரிதாபம் - அத்துணையும் மண்ணாகி, அவர்கள்
மனம் எரிமலையாகி, கண்கள், குளமாகி, பேச்சு பெருமூச்சாகி,
நடை தளர்ந்து உள்ளனர்; கதிர்விடும் அளவு வளர்ந்த பயிர்
திடீரென காய்ந்துபோகக் கண்ட உழவன் மனம் என்ன பாடுபடுமோ?
அதுபோல இருக்கும் அவர்கள் மனம். அவர்களுக்குத்தான் தம்பி!
நாம் அனைவரும் அதிகமான அளவிலே ஆறுதலும் நன்றியறிதலும்
அளிக்க வேண்டும். வெற்றி கிடைத்திருந்தால் வேதனை தானாகப்
போய்விட்டிருக்கும். இவர்களுக்கோ, பாடுபட்ட அலுப்புடன்
பலன் காணா வேதனையும் சேர்ந்து வாட்டுகிறது; வதைபடுகிறார்கள்.
வெற்றி கிடைத்த இடத்திலுள்ளவர்கள்,
வேலையில் மும்முரமாக ஈடுபட்டபோது, குடும்பத்திலே, குதூகலமாகப்
பேசி மகிழ்வதை இழந்தனர். என்றாலும், இப்போது, பேசிப்
பேசி மகிழலாம். கணக்குப் போட்டுக் காட்டிக் காட்டிக்
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் தொகுதி நான்கு 313 களிப்படையலாம்;
என் பேச்சு எப்படி என்று கூறி எக்களிப்புக் கொள்ளலாம்;
எனக்கு அப்போதே தெரியும் என்று ஆரூடம் அறிந்தவர்போலப்
பேசிச் சிரிக்கலாம்!! ஆனால் தோற்றுப்போன இடத்தில் பணியாற்றியவர்களின்
நிலை? வேலை செய்தபோதும் வேதனை, இப்போது அதனைவிட அதிக
வேதனை! முன்பு வேலை மிகுதியால் வேளா வேளைக்குச் சரியாகச்
சாப்பிடுவதில்லை, தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை, நிம்மதி
இல்லை; இப்போது, வேலை பலன் தராததாலே ஏற்பட்ட வேதனையால்,
பசியில்லை, தூக்கமில்லை, மன நிம்மதி இல்லை, எவரிடமும்
உரையாட விருப்பம் எழவில்லை; காரணமின்றிக் கோபம் வருகிறது;
கண்டவர்மீது சந்தேகம் கிளம்புகிறது. எதிலும் ஓர் அருவருப்பு
ஏற்படுகிறது; தன்னம்பிக்கைகூடக் குறைகிறது.
பாடு பலவும் பட்டுவிட்டு,
இந்த நிலையையும் தாங்கிக் கொள்வது என்றால், உள்ளபடி கடினமல்லவா?
எனவே, அவர்களே, நமது ஆறுதலையும் நன்றியறிதலையும் பெறும்
முதல் உரிமை, முழு உரிமை பெற்றவர்கள்.
வேலை முறையிலே தவறுகள்
இருக்கலாம், போட்ட கணக்குகள் பொய்த்துப் போயிருக்கலாம்,
நம்பினவர்கள் மோசம் செய்திருக்கலாம், நயவஞ்சகம் இதுவென
அறிந்துகொள்ளும் திறமை குறைவாக இருந்திருக்கலாம் - ஆனால்
பணியாற்றிய வர்கள் எடுத்துக்கொண்ட முயற்சி, பட்ட கஷ்டம்,
கொண்ட ஆசை, ஏற்படுத்திக்கொண்ட நம்பிக்கை இவைகளை எவர்
மறக்க முடியும். எப்படிக் குறைத்து மதிப்பிட முடியும்!
எத்துணையோ தொல்லைகளைத்
தாங்கிக்கொண்டனர்.
வசதிக் குறைவுகளுக்கு இடையே
உழன்றனர்.
பகை கக்கினர் பலர்; பொருட்படுத்தவில்லை.
பொய் வழக்குகள் தொடுத்தனர்;
பொல்லாங்கு மூட்டினர்; காலிகளை ஏவிவிட்டனர்; கத்தி காட்டி
மிரட்டினர்; வழிமடக்கி அடித்தனர்; வேலையைப் பறித்தனர்;
வீட்டில் கலகம் மூட்டினர்; அம்மம்மா! ஒன்றல்ல இரண்டல்ல,
அவர்களைக் கொட்டிய கொடுமைகள், அத்தனையையும் தாங்கிக்கொண்டு,
ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு, அனைவரிடமும் பணிவாக நடந்து,
பணி யாற்றினர் - கழகம் வெற்றிபெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்
துக்காக, எந்தப் பழியையும் இழியையும் தாங்கிக் கொள்ளத்தான்
வேண்டும் என்ற உறுதியுடன், தியாக உணர்வுடன்.
அதிலும், தம்பி! காஞ்சீபுரம்
தொகுதியிலே, வேளைக்கு ஒரு சேதி வெடித்துவரும்; அந்த ஊர்
தலைவர் அவர்களை வண்டியிலே ஏற்றிவிட்டாராம்! இந்த ஊர் மணியக்காரரை
இரவு 12 மணிக்கு இலுப்பைத் தோப்பிலே சந்தித்து 200 ரூபாய்
கொடுத்துவிட்டார்களாம்! இவருக்கு அவர் கடன் கொடுத்திருக்
கிறாராம், ஆகவே, அங்கு கட்டுப்பட்டுப் போய்விட்டாராம்!
- என்றெல்லாம் திகில் தரும் செய்திகள் வரும். கேட்ட எவருக்கும்
"கை ஓடாது கால் ஓடாது'. மனம் பதை பதைக்கும்; கிளம்பிய
சேதிகள் உண்மைதான் என்பதைக் காட்டும் குறிகள் தெரியும்!
என் செய்வர், நமக்காகப் பணியாற்றுவோர்! முதலில் தங்களைத்
திகிலிலிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டும், பிறகு பணி!
தொடர்ந்து! சோர்வை மறைத்துக்கொண்டு!!
"தானிய வியாபாரிகளெல்லாம்,
கிளம்பிவிட்டார்கள் கிராமம் கிராமமாக!'' - என்பார் ஒருவர்.
"தானிய வியாபாரிகள் கிளம்பினால்
என்ன?'' என்று கேட்பார் இன்னொருவர்.
ஒவ்வொரு கிராமத்திலும்
அவர்களுக்குக் கொடுக்கல் வாங்கல் தொடர்பு இருக்கிறதே.
அவர்கள் பேச்சுக்குப் பலர் கட்டுப்படுவார்களே! - என்று
விளக்கம் அளிப்பார், இன்னொருவர்.
எனக்கு இதெல்லாம் தோன்றாது.
நாம் என்ன கெடுதல் செய்தோம் இவர்களுக்கு? மனதாலும் கெடுதலை
எண்ணிய தில்லையே. ஏன் இவர்கள் நம்மை எதிர்த்து வேலை செய்கிறார்கள்!
நாம் ஏதாவது இவர்கள் மனம் புண்படும்படி, வெறுப்புக்கொள்ளும்படி
நடந்துகொண்டோமா? கிடையாதே! அப்படியிருக்கும்போது, நம்மிடம்
இவர்கள் பகை காட்டு வானேன்? புரியவில்லையே! என்று எண்ணிப்
பெருமூச் செறிவேன். தானிய வியாபாரிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு
நாள் ஒவ்வொரு வகையான வியாபாரிகளைப்பற்றி, இப்படிச் செய்தி
வரும். காரணம் எனக்கு இன்னமும் புரியவில்லை.எதற்காக,
இவர்கள் என்மீது இவ்விதமாகப் பகை காட்டினார்கள் என்பதற்கு,
என்னை வீழ்த்தி, அவர்கள் அடையப்போகும் பலன்தான் என்ன
என்றும் எனக்குப் புரியவில்லை.
தம்பி! கிரேக்க நாட்டிலே
ஒரு "முறை' இருந்தது - "முறை' என்றுகூட அதைக் கூறுவதற்கில்லை,
- ஒரு "நடவடிக்கை' என்று மட்டுமே கூறலாம். ஆங்கிலத்திலே,
அதனை Ostracism - ஆஸ்ட்ரசிசம் என்பார்கள்.