ஒரு அதிகாரி சொன்னார், "பத்திரிகைகளில் எதையாவது போட்டுவிடுகிறார்கள்
- இன்னின்னார் வந்தார்கள், அண்ணாதுரையிடம் யோசனை கேட்டார்கள்
என்றெல்லாம். அது, பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது; எங்களுக்குச்
சங்கடமாக இருக்கிறது'' என்று.
சிறையில் இம் முறை உள்ள
நிலைமைக்குக் காரணம் ஏதேனும் கூறவேண்டும்போல, அதிகாரிகளுக்கே
தோன்றுகிறது போலும்!
நான் சொன்னேன், "பத்திரிகைகளில்
வருவதுபற்றிக் கவலைப்படுவதானால், இங்கு எங்களைக் காணவருகிறவர்கள்
மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் கொடுமை, எங்களுக்கு எந்தவிதமான
பொருளும் தருவித்துக்கொள்வதிலே இருக்கும் தடை, இவைபற்றி
எங்கள் பத்திரிகைகளில் வெளியிட முடியுமே - அது விரும்பத்தக்கதா?''
என்று கேட்டேன். அதிகாரி அதற்கு ஏதும் பதில் சொல்லவில்லை
- "நாங்கள் சர்க்காருடைய உத்தரவின்படி நடந்துகொள்ளவேண்டியவர்கள்''
என்றார். நான், "நீங்கள் எவ்வளவு உண்மையாக நடந்துகொண்டாலும்,
எங்களிடம் எவ்வளவு கண்டிப்பாக நடந்துகொண்டாலும், அதனாலேயே
உங்களுக்கு நல்ல பெயர் வந்துவிடும், சர்க்கார் அதற்காகவே
உங்களைப் பாராட்டிவிடும் என்று நம்பி விடாதீர்கள்'' என்று
சொன்னேன். பொதுவாகப் பார்க்க வருபவர்கள் மனம் சங்கடம்
அடையும்படியான சூழ்நிலை இங்கு ஏற்படுத்தப்படுகிறது. நண்பர்கள்
நிலையை அறிந்து கொண்டு, விடைபெற்றுக்கொண்டு சென்றனர்.
அதிகாரிகள் முகம் மலர்ந்தது. நண்பர்கள் பார்த்தசாரதி,
வெங்கா, பொன்னுவேல் ஆகியோரையும், நான் தங்கி இருக்கும்
பகுதிக்கே அனுப்பிவிடலாமே என்றேன் - சரி என்று அதிகாரி
ஒப்புக்கொண்டு "நீங்கள் காலையில் 7-30 லிருந்து மாலை 4
மணி வரையில் சிறை உடுப்பில்தான் இருக்க வேண்டும்' என்றார்.
"சரி' என்றேன். நான் சிறை உடுப்பில் இருப்பதை அவர் பார்க்கவில்லைபோல்
தெரிகிறது. நூல் நூற்க வேண்டும் என்றார். எனக்குக் கை
வலி அடியோடு போகவில்லை, இந்த நிலையில் நூற்பது இயலாது
என்றேன். அதிகாரிகளின் இதயம் எவ்வளவு இளகியது என்பதைக்
காண ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. கைவலி காரணமாக நூற்க இயலாது
என்று நான் சொன்னவுடன், அதிகாரிகளில் ஒருவர், "தேகப் பயிற்சி
செய்யச் சொன்னாரே டாக்டர்'' என்று கருணை பொழிந்தார். "ஐயா!
டாக்டர் செய்யச் சொன்ன தேகப் பயிற்சி வேறு, நூல் நூற்பது
வேறு' என்று நான் கூறிவிட்டு வந்தேன்.
27-2-1964
பார்த்தசாரதி, வெங்கா, பொன்னுவேல்
மூவரும் இங்கு வந்து குடியேறினார்கள் - ஐவர் அணி, மீண்டும்
ஒன்று கூடிற்று என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். பொன்னேரியில்
சுந்தரமும், காஞ்சிபுரத்தில் பார்த்தசாரதியும், பூவிருந்தவல்லியில்
பொன்னுவேலும், செங்கற்பட்டில் வெங்காவும் சிறை வைக்கப்பட்டிருந்த
சம்பவம் முதற்கொண்டு, தொடர்ந்து நடைபெற்ற பல சம்பவங்களைச்
சொல்லச் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தேன்.
இன்று மாலை, காஞ்சிபுரம்
மறியலில் ஈடுபட்டு சிறை தண்டனை ஏற்றிருக்கும் கேசவன் குழுவினர்,
சிறை உடையில், உட்புறம் அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டேன்.
அடையாளம் தெரியவில்லை. சிறை உடை அத்துணை அலங்கோலத்தைக்
கொடுத்துவிட்டது, நேற்று, சின்னசாமி குழுவினரும், பிறகு
சட்டமன்ற உறுப்பினர் ராமசாமியும் சிறை கொண்டுவரப்பட்டனர்.
ராமசாமியை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் வேறு பகுதியில்
வைக்கப்பட்டுள்ளனர். சிறை வார்டர்கள் மூலமாக அவர்களைப்பற்றிய
செய்தி அறியலாமா என்றால், ஒருவரும் பேசுவதில்லை - அவ்வளவு
அச்சம் ஊட்டப்பட்டிருக்கிறது! இன்று மாலை, எங்கள் பகுதியின்
நுழைவு வாயிலருகே, தரையில் பாய் போட்டு, உட்கார்ந்துகொண்டு,
தேய்ந்துபோன நிலையில் உள்ள கைதிகளை, வார்டர்கள் உட்புறம்
அழைத்துக்கொண்டு போவதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இவர்கள்
பல்வேறு குற்றங்கள் செய்ததற்காக இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள்.
தொகுதி ஐந்து 221 இங்கு இவர்கள் இருக்கும் நிலையைப் பார்க்கும்போது,
விடுதலை பெற்று வெளியே செல்லும்போது சமூகத்திலே இடம்பெற்று,
செய்யும் தொழில் கிடைக்கப்பெற்று, புதுவாழ்வு பெறப் போகிறார்களா
என்பதை எண்ணிக்கொண்டேன். வெளியில் இருந்தபோது, நாணயமான
தொழில் நடத்திப் பிழைக்க முடியாமல், குற்றம் இழைத்தார்கள்;
உள்ளே வந்ததன் காரணமாக, எந்தத் தொழிலுக்குமே இலாயக்கற்ற
"உருவங்கள்' ஆகிவிடுகிறார்களே, இவர்கள் இனி வெளியே போய்
என்ன பலன் காணப்போகிறார்கள் என்பதை எண்ணியபோது, மிகுந்த
கவலையாகிவிட்டது. இந்தக் கவலையுடனேயே இன்றிரவு படுக்கச்
செல்ல வேண்டும் போலிருக்கிறது.
28-2-1964
சிறை, எதனாலே கொடுமையானதாகிறது
என்பதுபற்றி யோசித்துப் பார்த்தேன்; அறையில் போட்டு அடைத்துப்
பூட்டி வைக்கிறார்கள் என்பதால் மட்டும் அல்ல, அதிகாரிகளின்
அக்கறையற்ற போக்கு மனதுக்குச் சங்கடம் தருகிறது என்பதால்
மட்டுமல்ல, கொடுமைக்கு மிக முக்கியமான காரணம், ஒரு நாள்
போலவே மற்ற எல்லா நாட்களும் உள்ளன! ஒவ்வொரு நாளும், வேக
வேகமான நினைப்புகளில் நடவடிக்கைகளில், தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளவர்கள்,
எல்லா நாட்களும் ஒரே விதமாகவே தோற்றமளிக்கும்படியான நிலை,
சிறையில் இருப்பதைத்தான் தாங்கிக்கொள்ள முடியாத கொடுமை
என்று உணருவார்கள். ஒரு நாள் நடவடிக்கையை, விவரித்தால்,
அது மற்ற எல்லா நாட்களுக்கும் பொருந்துவதாக அமைந்துவிடும்.
இன்று என்ன நிகழ்ச்சிகள் என்று கணக்கிட்டுக் காட்டுகிறேன்
- காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்துக்கொண்டு,
சிறை உடை அணிந்துகொண்டேன். மெத்த அன்புடன், முகமலர்ச்சியுடன்
தோழர் பார்த்தசாரதி "தோசை' கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்
- அவருடைய முகம் எவ்வளவு மலர்ந்திருந்ததோ அந்த அளவுக்கு
"தோசை' என்ற பெயர் படைத்த அந்தப் பண்டம், கறுத்து, வறண்டுபோய்
இருந்தது. கோதுமை மாவினாலே செய்யப்பட்ட மெல்லிய அடை! பிறகு
காபி; நிறத்தாலே அந்தப் பெயர் பெறுகிறது. மணத்தாலும் சுவையாலும்
அல்ல. பிறகு நூற்பு வேலை - இழையின் நீளம் எவ்வளவு என்பதைவிட
எத்தனை முறை அறுந்தது என்பதுதான் என் நினைவிற்கு வருகிறது.
பிற்பகல் 1 மணிக்குச் சாப்பாடு. காலையில் ஒன்பது அல்லது
பத்து மணிக்கெல்லாம் செய்யப்பட்டு நன்றாக சில்லிட்டுப்போன
நிலையில், எங்களுக்காக உட்புறமிருந்து கொடுத்தனுப்பப்படும்
சோறு, பருப்பு கலந்த குழம்பு - கலந்த என்று உபசாரத்துக்காகச்
சொல்கிறேன் - துறவிகள் உலகிலே வாழ்ந்தாலும் பற்றற்று இருப்பார்கள்
என்கிறார்களே அதுபோல பருப்பும் குழம்பும் ஒரே குவளையில்
உள்ளன - ஒன்றுக்கொன்று பாசமற்று! எனவே சுவை இருப்பதில்லை.
கரு நிறமுள்ள ரசம்! பிறகு, எங்களுக்கு அளிக்கப்படும் (காபிக்காக)
பாலிலிருந்து நாங்களே தயாரித்துக் கொள்ளும் தயிர்; பொரியல்
ஒன்று உண்டு - ஒவ்வொரு நாளும். ஆனால் அதனை நான் குறிப்பிடாததற்குக்
காரணம் நான் அதனைப் பயன்படுத்தாததுதான், பயன்படுத்தியவர்கள்
படும் கஷ்டத்தை மட்டும் பார்க்கிறேன். ஒரு விவாதமே நடத்துகிறார்கள்,
பொரியலில் போட்டிருப்பது என்ன பண்டம் - என்ன கறி - என்பது
குறித்து.
சாப்பாட்டுக்குப் பிறகு
ஒரு மணி நேரம் ஓய்வு.
பிறகு, மறுபடியும் நூற்பது
- நூற்பு முயற்சி.
ஆறு மணிக்கு, அறையில் போட்டு
அடைத்துவிடு கிறார்கள் - தனித்தனி அறையில்.
அந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொரு
நாளும்.
பொது வாழ்க்கைத் துறையில்
ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் பல பிரச்சினைகளை, பல
கோணங்களிலிருந்து பல நண்பர்களுடன் பேசி, சுவையும் பயனும்
பெறுபவர்கள். தோழமையினால் பெறப்படும் இனிமையை பெரிதும்
விரும்பி வரவேற்பவர்கள், கழக அமைப்புபற்றி கழகத் தோழர்களின்
எண்ணங்களைப் பற்றி அறிவதிலும் உரையாடி அகமகிழ்வதிலும்,
ஈடுபட்டவண்ணம் இருக்கும் என்னையும், என்போன்ற மற்றவர்களையும்
செயலற்றவர்களாக இருக்கும் நிலையை மேற்கொள்ள வைக்கிறார்களே
சிறையில்! இதனைவிடக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?
அதிலும் நகராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்ற பரபரப்பான
சூழ்நிலை வெளியே இருந்தபோது, உள்ளே அடைபட்டுக்கிடந்தது,
உள்ளபடி மெத்த வருத்தமாக இருந்தது. ஆனால், குடும்பம்,
அது தரும் குளிர்ச்சி, தோழமை, அது தரும் இனிமை; தொண்டு,
அது அளிக்கும் பெருமித உணர்ச்சி இவைகளை இழந்து சிறையில்
கிடந்தபோதிலும், சிறைக் கதவுகளையும் கோட்டை மதில்போன்ற
சுவர்களையும் தாண்டிக்கொண்டு, எங்கள் எண்ணம் சிட்டுபோலச்
சிறகடித்துக்கொண்டு பறந்து, கழக நிகழ்ச்சிகள் நடைபெறும்
இடமெங்கணும் வட்டமிட்டபடிதான் இருக்கிறது. கண்ணுக்குப்
புலனாகாமல் இருக்கும் நிலை; கருத்துக்கு எல்லாம் தெளிவாகப்
புலனாகிறது. தூயதோர் நோக்கத்துக்காக, இந்தக் கொடுமையை
நாமே மனமுவந்து ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமும்,
நம்மிடம் பற்றும் பாசமும் கொண்ட இலட்சக்கணக்கானவர்கள்
வெளியே நம்முடைய நோக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்
என்பதை உணருவதால் ஏற்படும் எக்களிப்பும், சிறை தரும் சங்கடமான
சூழ்நிலையை மறந்திருக்கச் செய்துவிடுகிறது என்பதிலே ஐயமில்லை.
எனக்கு உள்ளதுபோன்ற இதே உணர்ச்சிதான், இங்கு மரம் அறுக்கும்
வேலையிலும், மாவு அரைக்கும் வேலையிலும், நூற்கும் வேலையிலும்,
ஈடுபட்டு உழலும், நமது கழகத் தோழர்கள் அனைவருக்கும் இருக்கிறது.
அவர்களைப் பார்க்க, பேச, எனக்கு வாய்ப்பு இல்லை. அவர்கள்,
நண்பர்களையோ, உறவினர்களையோ காண்பதற்காக அழைத்து வரப்படுகிறபோது,
நான் இருக்கும் பக்கமாகத்தான் செல்ல வேண்டும். அந்த நேரத்தில்
பார்க்க, புன்னகை காட்ட, வணக்கம் கூறிக்கொள்ள முடிகிறது;
அருகில் வர, சிறைக்காவலர்கள் அனுமதிப்பதில்லை.
சிறையில் உள்ள தோழர்களில்,
இருவர் மோகனசுந்தரம், லோகநாதன், மாநகராட்சி மன்றத் தேர்தலில்
ஈடுபட்டார்கள் - இதிலே லோகநாதன் வெற்றி பெற்றார் - மற்றவர்,
நாவலர் நடையிலே சொல்லுவதானால், வெற்றிக்கான வாய்ப்பை இழந்துவிட்டார்.
பொதுவாக, மாநகராட்சி மன்றத்
தேர்தலில் நமது கழகம் பெற்ற வெற்றி, சிறையில் உள்ள நமது
கழகத் தோழர்களுக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
மோகனசுந்தரம் வெற்றிபெற
முடியாமற்போய்விட்டதற்கான காரணம்பற்றி, இன்று மதியழகன்
விவரமாகச் சொன்னார் - அந்த வட்டத்தின் அமைப்பு - வாக்காளர்களின்
வகை - இவைபற்றி, நல்ல தெளிவான மதிப்பீடு போட முடிந்திருக்கிறது
மதியழகனால். தேர்தல் களத்திற்குத் தேவையான முறைகளையும்,
தகவல்களையும் நமது கழகத் தோழர்கள், கூடுமான வரையில் பாராட்டத்தக்க
அளவு பெற்றுவருகின்றனர் - தேர்தல் வெற்றிக்கு அது மிக
முக்கியமான காரணம். தேர்தலில் கிடைத்த வாக்குகளை, பல முறை,
ஆராய்ந்து பார்த்திட்டதில், பல இடங்களில் நாம் பெறவேண்டிய
வெற்றி, நமது கரத்திலிருந்து நழுவிவிட்டிருப்பது தெரிகிறது.
கழகம் அடியோடு தோற்றுவிடும் என்று எழுதிய இதழ்கள், கழக
வெற்றிக்குப் பிறகு, என்ன எழுதியுள்ளன என்பதனைப் படித்து,
அதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். பல இதழ்கள், காங்கிரஸ்
ஆட்சியில் உள்ள கேடுபாடுகளைக் கண்டிக்கின்றன என்றாலும்,
கழகத்தை வெளிப்படையாக ஆதரித்து, காங்கிரசின் கோபத்துக்கு
ஆளாகிவிடக்கூடாது என்ற அச்சம் கொண்ட நிலையில் உள்ளது பற்றி
நண்பர்கள் எடுத்துக் கூறினார்கள். இது இயல்புதான் ஏனெனில்,
நமது கழகம் "பிரமுகர்கள்' கொண்டது அல்ல; ஆகவே, இந்தக்
கழக வளர்ச்சி, இதழ்களுக்குக்கூட எரிச்சலை மூட்டுகிறது;
ஆனால் ஒன்று. மக்கள் இதழ்களின் இருட்டடிப்பு, இட்டுக்கட்டும்
முறை இவைகளை இப்போது பொருட் படுத்துவதில்லை. எழுதப்பட்டவைகளை
அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. எடை போட்டுப் பார்க்கிறார்கள்
என்பதுபற்றி நான் விளக்கிக் காட்டினேன். பாராளுமன்றத்
துறையில் படிப்படியாக முன்னேறிக்கொண்டு வரும் இந்தக் கட்டத்தில்,
ஒரு ஆங்கில இதழ், குறைந்த அளவு வார இதழாவது கழகத்துக்கு
அவசரமாகத் தேவை என்பதுபற்றி, மதியழகன் வலியுறுத்திச் சொன்னார்.
நான் நடத்திக்கொண்டு வந்த ஆங்கில வார இதழ் நிறுத்தப்படவேண்டி
ஏற்பட்ட நிலைமைகளை எடுத்துக் கூறினேன். எத்தனை சங்கடம்
இருந்தாலும், வெளியே வந்ததும், மறுபடியும் ஆங்கில வாரப்
பத்திரிகையைத் தொடங்கியாக வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டிருக்கிறது.
இந்த இன்ப நினைப்பை அணைத்தபடி இன்று துயிலச் செல்கிறேன்.
29-2-1964
"எவனொருவன் இந்திரியங்கள்
எனும் துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளமிட்டு அடக்கி,
நன்னெறி எனும் பாதையிலே செலுத்துகிறானோ, அவனே அரனடி எனும்
திருத்தலத்தை அடைவான். இடையே இச்சை எனும் நச்சுக்கொடி
கிடக்கும். பச்சென்று இருக்கிறதே என்று பார்த்தாலோ சிக்கினோரைச்
சீரழிக்கும். அதற்கு நிராசை எனும் சாட்டை கொண்டு குதிரையைத்
தட்ட வேண்டும்.''
மட அதிபரின் பேச்சல்லவா?
இதை ஏன், சிறையில் உள்ள நான் எடுத்துக் கூறுகிறேன் என்று
எண்ணுகிறீர்கள்.
நான் அல்ல; நண்பர் மதியழகன்
இன்று, மடாதிபதி போலவே, எங்கள் அறையில் உள்ள "சிமெண்ட்'
திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, இதுபோலப் பேசினார். பேச்சு
அல்ல; இது பாடம். "சந்திரோதயம்' என்ற நாடகத்தில் அவர்
அழகூர் மடாதிபதியாக வேடம் தாங்கிப் பேசுவது. அதனை இன்று
நினைவுபடுத்திக்கொண்டார். ஏன் என்கிறீர்களா? நமது கழகப்
பிரசாரத்துக்காக, முன்பு நாடகங்கள் நடத்துவோமே - அது நின்று
போய்விட்டது நல்லதல்ல, மறுபடியும் நாடகங்கள் போட வேண்டும்
என்ற யோசனைபற்றிய பேச்சு எழவே, மதி, இந்த மடாதிபதி உரையை
எடுத்துக்கூறி, சட்டசபையில் மடாலயங்கள்பற்றிய விவாதத்தின்போது,
இந்த வாசகங்களை, தான் கூறியதாகச் சொன்னார். அமைச்சர்கள்கூட
மகிழ்ச்சி அடைந்தார்களாம். நாடகங்கள் நடத்துவதுபற்றிய
பேச்சு வளர்ந்து, பொதுவாக, கழகப் பிரசார முறைகள், அளவு,
இவைபற்றிய விவாதமாக மலர்ந்தது. இம் முறை மாநகராட்சி மன்றத்
தேர்தலில், நமது கழக ஆதரவுக்காக மறைந்த நகைச்சுவை அரசர்
என். எஸ். கிருஷ்ணனின் மகன் கோலப்பா வில்லுப்பாட்டும்,
சேதுராசன் பல குரல் நிகழ்ச்சியும், நல்ல முறையில் நடத்தி
இருக்கிறார்கள் என்பதை இதழ்களில் கண்டோம். அதுபற்றி நான்
மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். நாடகங்கள் தேவைதான் - ஆனால்,
நான் இனி நடிப்பது இயலாது - நீங்களெல்லாம் நடிக்கலாமே
என்று அன்பழகன் ஆகியோரிடம் கூறினேன். அவர்களுக்கு விருப்பம்
எழுந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன். நாடகம் எழுதிக் கொடுங்கள்
என்று கேட்டார்கள். "ஆகட்டும், பார்க்கலாம்'' என்று காமராஜர்போலச்
சொன்னேன்.
இன்று, தோழர்கள் மதியழகன்,
அன்பழகன், சுந்தரம் ஆகியோரைக் காண, அவர்கள் வீட்டிலிருந்து
வந்திருந்தார்கள். பரிமளம் வரக்கூடும் என்று சிறை மேலதிகாரி
கூறியதாகக் கேள்விப்பட்டேன், வரவில்லை. ஒரு சமயம் காஞ்சிபுரம்
போயிருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.
1-3-1964
மார்ச்சு மாதம் துவங்கிவிட்டது
- துவக்க நாள் ஞாயிற்றுக் கிழமை - ஞாயிற்றுக்கிழமை, சிறையிலே
சந்தடியற்ற நாள்.
பகலெல்லாம், நிரம்பப் பேசிக்கொண்டிருந்தோம்
கோவையாக ஒரே விஷயத்தை அல்ல, பல விஷயங்களைப்பற்றி.
வெங்கா, திறமையாக நூற்பு
வேலை செய்கிறார்; எனவே, அவரிடம் பயிற்சி பெற முனைந்தேன்.
இன்று பிற்பகல், விலைவாசிக்
குறைப்புப் போராட்டத்தின் போது வேலூர் சிறையில் இருந்ததுபற்றிய
விவரங்களை, நானும் பொன்னுவேலுவும், மற்றவர்களிடம் "கதை
கதை'யாகச் சொன்னோம். அவர்களிடம் அதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கும்
போதே, இரவெல்லாம் பேசித் தொல்லை கொடுப்பதால் முகத்தைச்
சுளித்துக்கொள்ளும் என் அருமை நண்பர் ராஜகோபால் என் மனக்கண்முன்
வந்து நின்றார். தேர்தலில் தோற்றுவிட்டதால், மெத்தவும்
திகைத்துப்போயிருப்பார் - என்னை வந்து பார்த்துவிட்டுச்
சென்றிருந்தாலாவது சிறிது ஆறுதலாக இருந்திருக்கும் - வரக்
காணோம். வேலூர் சிறை நிகழ்ச்சிபற்றிய பேச்சு நடைபெற்றதும்
சாரதியின் உரத்த குரல், சண்முகத்தின் வெடிச் சிரிப்பு,
வடிவேலுவின் உருக்கமான பாட்டு, தருமலிங்கத்தின் பாகவதர்
பாடல், எல்லாம் நினைவிற்கு வந்தன. அந்தச் சிறையில் கழகத்
தோழர்கள் பலநூறு பேர், ஒரே பகுதியில், காவலில் வைக்கப்பட்டிருந்ததால்,
ஒருவருடன் ஒருவர் பழக வாய்ப்பு இருந்தது.
தோழர் சுந்தரம் எனக்குப்
பல ஆண்டுகளாக நண்பர்; அன்பழகனுக்கு நெருக்கமான நண்பர்;
ஆனால் சிறைபுகக் கூடியவர் என்று நான் எண்ணினதில்லை. என்னிடம்
அவர் அறப்போரில் ஈடுபடப்போவதாக, மற்றவர்கள் சொன்னபோது,
நான் முதலில் நம்பவில்லை. பிறகு, தடுத்தும் பார்த்தேன்.
இன்று, அவரிடம், சிறை செல்லும் துணிவும் விருப்பமும் எப்படிப்
பெற முடிந்தது என்பதுபற்றிக் கேட்டேன். என் பங்கை நான்
செலுத்த வேண்டும் என்ற உணர்வு கொண்டுதான் நான் ஈடுபட்டேன்
என்று அவர் கூறினார். சிறையில், சங்கடமும், சலிப்பும்,
பயமும் ஏற்படவில்லையா என்று கேட்டேன். முதலில், என்னைத்
தனியாக, பொன்னேரியில் கொண்டுபோய் அடைத்தார்களே, அப்போது
சங்கடமாகவும், பயமாகவும் இருந்தது. நல்ல மழை. நான் இருந்த
அறையிலே விளக்கும் இல்லை. பாம்பேகூட நுழைந்துவிட்டது.
அப்போதுதான் பயப்பட்டேன். இங்கு வந்த பிறகு, சங்கடமாகத்
தோன்றவில்லை என்று கூறினார்.
இன்று மாலை, கடற்கரையில்
பாராட்டுக் கூட்டம்! அதிலே கூடிடும் பெருந்திரளைக் காண்கிறேன்!
மகிழ்ச்சி ஒகா திலே விழுகிறது! புன்னகை தவழும் முகங்களைக்
காண்கிறேன்! எல்லாம் இங்கு இருந்தபடி. என் வாழ்த்துக்களை
வழங்கி மகிழ்கிறேன்.
நாளை இதழ்களில், செய்தி
பார்த்து, மகிழ வேண்டும்.
இன்றிரவு, அந்தக் கூட்டத்திலே,
"அறிமுகம்' செய்யப்பட்டு பாராட்டுப் பெறும், மாநகராட்சி
மன்ற உறுப்பினர்களை எண்ணி மகிழ்ந்தபடி உறங்கச் செல்கிறேன்.
அண்ணன்
20-9-1964