அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


கங்கா தீர்த்தம் - 2
1

எல்லாம் எல்லாருக்கும் என்பதே சோஷியலிசம்
மாங்காய் மாலை போன்றது காங்கிரஸ் பேசும் சோஷியலிசம்
அமெரிக்க முதலாளிகளை மேத்தா அழைக்கிறார்
காங்கிரஸ் சோஷியலிசம் முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது
ஜான் நைஹார்ட்டின் எழுச்சிக் கவிதை

தம்பி!

ஏழைக்கு இதம் செய்திடவே செல்வவானிடம் பணம் ஆண்டவனால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. செல்வவான்கள் "தர்மகர்த்தாக்கள்'. அவர்களிடம் சேர்ந்திடும் செல்வம் அவர்களுடைய சுகபோகத்துக்காக அல்ல என்ற கருத்தை, மெத்தக் கனிவுடன், கேட்போர் உள்ளம் உருகும் விதத்தில் எடுத்துரைத்தவர்களில் காந்தியாருக்கு நிகர் எவரும் இல்லை என்றே கூறலாம்.

பண்புகள் குறித்து எடுத்துரைத்த மேலோர் அனைவருமே இத்தகு கருத்தினை வலியுறுத்தி வந்தனர். இதனை மறுத்தவர் எவரும் இல்லை; அதுபோன்றே இதனை முழுக்க முழுக்க ஏற்றுக்கொண்டு அந்த நெறி நின்றவர்களும் இல்லை.

ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைந்தாலும் நுழைய லாம், செல்வவான்கள் மோட்ச சாம்ராஜ்யத்தில் நுழைய முடியாது

என்ற அருள்மொழியை அறிந்து, ஒப்புக்கொண்டு, உள்ளம் உருக அதுபற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மேனாட்டினர்; அதன் காரணமாக அவர்கள் உடைமைகளைத் தேடிப்பெறுவது, உல்லாச வாழ்க்கையில் ஈடுபடுவது என்பவைகளை விட்டொழித்தனரா? இல்லை! உபதேசம் கேட்பது ஞாயிற்றுக்கிழமைகளில், உடைமைகளைப் பெற அலைவது மற்ற நாட்களில் என்று முறை வகுத்துக்கொண்டனர்!!

முற்றுந் துறத்தல், தன்னலம் மறுத்தல், பிறர் நலம் பேணுதல், ஊருக்குழைத்தல், ஈதலில் இன்பம் கண்டிடல், கூடி வாழ்தல் - இவைகளைப் போற்றிட எவரும் தவறியதுமில்லை; இவைகளின்படி ஒவ்வொருவரும் வாழ்ந்து சமூகத்தின் தன்மையை மாற்றி அமைப்பதிலே முழு வெற்றி கண்டவர்களும் இல்லை. சிலர் அந்த முயற்சிகளை மேற்கொண்டனர்; ஆனால், துவக்க காலத் தூய்மை, நாளாகவாகத் தேய்ந்து தேய்ந்து மாய்ந்தே போய்விட்டது; அருளகமாகத் துவக்கப்பட்ட வைகள் பிறகு ஆதிக்க பீடங்களாக, மடாலயங்களாக மாற்றப்பட்டுவிட்டன.

இந்நிலை மேனாட்டில் மட்டுமா கீழ்நாடுகளிலுமா என்ற கேள்விக்கே இடமில்லை, எங்கும் இந்நிலை; அளவில், வேகத்தில், தரங்கள் இருக்கலாம், போக்கிலே ஒரேவிதமாகத்தான் இருந்தது.

ஏன் உபதேசங்களைப்பற்றி இப்போது கூறுகிறேன் என்று கேட்பாய் தம்பி! காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம், உபதேச பாணியில் இருக்கிறதல்லவா, அந்த உபதேசம் பலன் தராது. ஏனெனில், இன்றையக் காங்கிரஸ்காரர்களைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு அதிகமான தூய்மையாளர்கள், இன்று இவர்கள் செய்வதைவிட மெத்த உருக்கத்துடன் செய்த உபதேசங்கள் யாவும், பூஜாமாடத்துக்கு உரிய ஏடுகளாய், பாடல்களுக்கான கருப்பொருளாய்ப் போய்விட்டன - ஏழை - பணக்காரன் எனும் பொல்லாங்கு மூட்டிவிடும் பேதத்தைப் போக்கவில்லை; போக்கிட முடியவில்லை.

அருளாளர் என்று விருது பெற்றோரின் உபதேசம் மூலம், ஏழையின் இன்னலைத் துடைத்திட முயன்று பார்த்து அது தக்க பலன் தராது போனது கண்ட பிறகே, மேனாட்டு அறிவாளர்கள் சிந்தித்துச் சிந்தித்து, சோஷியலிசம் எனும் சமதர்ம முறையைக் கண்டறிந்து கூறினர்.

நல்ல இதயம், உயர்ந்த பண்பு இவைகளிலிருந்து எழுந்ததுதான் சோஷியலிச முறை என்றாலும் இதயம் நல்லதாக்கப்பட வேண்டும் என்ற நல்லுரையே, சோஷியலிசம் காணும் வழி என்று சோஷியலிசக் கருத்தளித்த வித்தகர்கள் கூறிடவில்லை.

அய்யோ பாவம்!
அவனும் மனிதன்!
ஏதோ செய்வோம்!
போகிற கதிக்கு நல்லது!
கொண்டு செல்லவா முடியும்!
கொடுத்தால் குறையாது!
ஒன்றுக்கு ஒன்பது கிடைக்கும்!

என்பன போன்ற பேச்சுகளும், அவைகளுக்கான மனப் போக்கும் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல, நெடுங்காலமாக இருந்து வருபவை.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆகும் என்ற கருத்தை வலியுறுத்தி எழுதப்பட்ட கதைகளும், புனையப்பட்ட புராணங்களும் கொஞ்சமா!

தம்பி! ஊருக்கு ஒரு உபகாரமும் செய்தறியாதவனாம் ஒருவன். அவன் இறந்து மேலுலகம் சென்றான் - படித்த கதையைச் சொல்லுகிறேன்; பார்த்ததை அல்ல - அவன் இறந்தபோது, ஒருவருக்கு ஒரு உதவியும் செய்யாத இவன் நரகம்தான் செல்வான் என்று ஊரார் பேசிக்கொண்டனர் - ஆனால், அவனைத் தேவ தூதர்கள் பொன்னுலகம் கொண்டு சென்றனராம் - கணக்குப் பார்க்கப்பட்டது - "இவனுடைய ஆள்காட்டி விரலுக்கு மாலை மரியாதைகள் நடத்தி இவனைச் சிறிது காலம் பொன்னுலகில் இருந்திடச் செய்திடுக! அனைவரும் இவனுடைய ஆள்காட்டி விரலைக் காணட்டும்; மகிழட்டும்; போற்றிப் புகழட்டும்'' என்று தேவதேவன் கட்டளையிட்டானாம்.

காரணம் என்ன தெரியுமா, தம்பி! ஆசாமி ஒருவருக்கும் ஒருவிதமான உதவியும் செய்யாதவன் என்றபோதிலும், ஒரு நாள் உச்சிப்போதில், கடுமையான பசியுடன் வந்த ஒருவன், இவனிடம் எந்த உதவியும் பெற முடியாமற்போகவே, இங்கே தர்மசத்திரம் எங்கே இருக்கிறது? அதையாவது காட்டுமே ஐயா! என்று கேட்டிட ஆள்காட்டி விரலை நீட்டி, சத்திரம் இருக்கும் பக்கத்தைக் காட்டினானாம். அந்தப் புண்ணிய காரியத்துக்காக, அவனுடைய ஆள்காட்டி விரலுக்கு அத்தனை மரியாதை!!

இவ்விதமான கதைகளைக் கூறியாகிலும் மற்றவர்களுக்கு உதவி செய்திட வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்ட வேண்டும் என்று பலர் வெகுபாடுபட்டிருக்கிறார்கள்.

ஆனால், அத்தகைய உதவிகள், தான தருமங்கள், பாலைவனத்திலே தெளித்த பன்னீர்த் துளிகளாகிப் போயினவேயன்றி, பாலைவனத்து வெப்பத்தைப் போக்கிடவில்லை!

இதனைக் கண்ட பிறகுதான் பேரறிவாளர்,

மனிதன் வாழப் பிறந்தவன்,
எல்லாம், எல்லோருக்கும்
என்றே உளது.

என்ற அடிப்படையை எடுத்துக் காட்டி சோஷியலிசத்தை உருவாக்கினர்.

சோஷியலிசமே போதுமான பலனைத் தரவில்லை, தத்தித் தத்தி நடக்கிறது, தடுமாறிக் கீழே விழுகிறது என்று கூறி, அடித்து நொறுக்கிப் பிறகு புது வார்ப்படம் காண்பதுபோல, புரட்சி நடாத்திப் புதுமுறை காண வேண்டும் என்று கூறுகின்றனர் பொது உடைமைவாதிகள். ஆனால், இன்றைய காங்கிரசோ, ஏழைக்கு ஏதேனும் உதவி செய்திடுக! என்ற பழைய பேச்சைப் புது முறுக்குடன் மேடைகளிலே பேசுகின்றனர்; அதனைச் சோஷியலிசத் திட்டம் என்று வேறு நம்பச் சொல்கின்றனர்.

வேலிகள் ஆயிரம் பட்டக்காரருக்கு, வாண்டையாருக்கு, மூப்பனாருக்கு, இராமநாதபுரத்தாருக்கு, நெடும்பலத்தாருக்கு, அவர் போன்றாருக்கு; அவர்களெல்லாம் நடத்திச் செல்லும் காங்கிரசிலே சோஷியலிசம் வேறு எப்படி இருக்க முடியும்?

மறைந்த மாமேதை நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் நடித்துக் காட்டிய ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது - அதன் தொடர்பான கதை நினைவிலே இல்லை.

ஒரு இடத்தில், மாங்காய் மாலை கொடுக்கவேண்டி வருகிறது; மாங்காய் மாலை என்பது, பொன்னால் செய்யப்பட்ட மாங்காய் உருவ பில்லைகளில் கல்லிழைத்து, சரமாக்கி மாலையாகப் போட்டுக்கொள்ளும் விலை அதிகமுள்ள ஆபரணம்! இதைக் கொடுக்கவேண்டி வருகிறது; கொடுக்க வசதி இல்லை; அவ்வளவுக்குப் பணம் இல்லை!! எனவே ஒரு தந்திரம் புரிகிறார், நகைச்சுவையுடன்.

ஒரு ரோஜா மாலை, ஒரு மாங்காய் எடுத்துக்கொண்டு போய், இதோ மாங்காய், இதோ மாலை, மாங்காய் மாலை; வந்து கேட்டால் சொல்லிவிடுங்கள். மாங்காய் மாலை கொடுத்தாகி விட்டது என்று என்பதாகக் கூறிவிடுகிறார்.

அந்த "மாங்காய் மாலை' போன்றது தம்பி! காங்கிரசார் இன்று பேசும் சோஷியலிசம்!! புரிகிறதா என்று கோபம் கொள்ளாத காங்கிரஸ்காரர்களைக் கேட்டுப் பார்.

இதனைக் கூறுவதால், உதவி செய்வது, தான தருமம் செய்வது கூடவே கூடாது என்று நான் சொல்லுவதாக எண்ணிக் கொண்டுவிடக்கூடாது. சிலர் இருக்கிறார்கள். இந்த வாதத்தையே தமக்குச் சாதகமாக்கிக்கொண்டு, இந்தவிதமான உதவிகளைச் செய்வதாலே எந்தவிதமான உருப்படியான பலனும் ஏற்பட்டு விடப்போவதில்லை, ஆகவே, ஒருவருக்கும் ஒருவிதமான உதவியும் செய்யத் தேவையில்லை என்ற போக்கை மேற்கொள்பவர்கள்.

நான் சொல்ல வந்தது அத்தகைய எண்ணத்தை ஏற்படுத்த அல்ல. உதவி செய்வது சோஷியலிசமாகாது, சோஷியலிசம் என்பது, புதிய சமூக அமைப்பு முறை, புதிய அரசியல் அமைப்பு முறை, புதிய பொருளாதார அமைப்பு முறை என்பதையும், அதனை நோக்கமாகக் கொண்டது அல்ல, காங்கிரஸ் கட்சி பேசிவரும் சோஷியலிசம் என்பதையும் கூறுகிறேன்.

மண் குதிரை மீதேறிக்கொண்டு ஆற்றில் இறங்குவது என்பார்களே அது போன்றது காங்கிரஸ் பேசி வரும் சோஷியலிசம்.

காங்கிரஸ் பேசிவரும் சோஷியலிசம் தமது உடைமைகளை, ஆதாயம் தேடித் தரும் அமைப்புகளை, அதனால் கிடைத்திடும் ஆதிக்கத்தை எந்தவிதத்திலும் கெடுத்துவிடாது என்று நன்றாகத் தெரிந்திருப்பதாலேயே, இன்று எல்லாப் பெரிய புள்ளிகளும் காங்கிரசிலே இருக்கின்றனர். அவர்கள் என்ன ஏமாளிகளா! ஜாண் பணத்துக்கு முழம் புத்தி என்று கிராமத்திலே பேசிக் கொள்வார்கள்!!

உள்நாட்டு முதலாளிகள் மட்டுமல்ல, காங்கிரஸ் பேசி வரும் சோஷியலிசம் தங்கள் உடைமைகளையும் பணம் தேடும் உரிமையையும் ஒரு துளியும் பாதிக்காது என்ற அழுத்தமான நம்பிக்கை வெளிநாட்டு முதலாளிகளுக்கும், நிரம்ப ஏற்பட் டிருக்கிறது; கோடி கோடியாக, முதல் போடுகிறார்கள், புதிய புதிய தொழில்களிலே!

ஏழை எக்கேடோ கெடட்டும் என்ற போக்கில், வெள்ளைக்காரன் முதலாளித்தனத்தை வளர்த்து வந்தான் என்று கூறினோம். வெள்ளைக்கார ஆட்சி போன பிறகு, அவன் காலத்திலே ஏற்பட்டிருந்த முதலாளி ஆதிக்கம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? கேட்டுப் பார், உண்மையை ஒளிக்காமல் பேசும் இயல்புள்ள காங்கிரஸ்காரர் எவரையாவது பார்த்து; எந்த அளவுக்கு வெள்ளைக்காரன் காலத்திலே அமைக்கப்பட்ட முதலாளித்தனம் ஒடுக்கப்பட்டிருக்கிறது என்று. தலையைக் கவிழ்ந்து கொள்வார்! ஏன்? ஒடுக்காதது மட்டுமல்ல, வெள்ளைக்காரன் காலத்திலே இருந்ததைவிட மூன்று மடங்கு அளவு வளர்ந்துவிட்டிருக்கிறது முதலாளித்தனம் - காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் - சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்.

வெள்ளையராட்சி விலகும்போது 1947லில், இங்கு முதலாளிகள், தொழில்களில் போட்டிருந்த மூலதனம் 700 கோடி ரூபாய் என்று கணக்கெடுத்தனர்.

சுயராஜ்யம் அமைந்து சோஷியலிசம் மலர்ந்திருப்ப தாகக் கூறுகிறார்களே, அதன் காரணமாக, முதலாளி தொழிலில் போட்ட பணம் குறைந்ததா? இல்லை. நாலு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கின்படி இந்தத் தொகை 1900 கோடி ரூபாயாக வளர்ந்துவிட்டிருக்கிறது.

இதுபோல, முதலாளிகளின் முகாம்களை வளர வைத்துக்கொண்டே, சோஷியலிசமும் பேச முடிகிறது காங்கிரஸ் கட்சியினால்! அந்த அளவுக்கு மக்களின் மதி மங்கிக் கிடக்கிறது என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது.

வெள்ளையராட்சியின்போது கிடைத்ததைவிட அதிக வருவாய் இப்போது முதலாளிகளுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுத்திட முடியாது.

நான் குறிப்பிட்டேனே நாலு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கு - அதன்படி, தொழில் அதிபர்களுக்கு மத்திய சர்க்கார் வழங்கியுள்ள மானியம், சலுகை, கடன் ஆகிய வகையில் 590 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது.

சோஷியலிசம் பேசும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி, முதலாளிகளை ஊட்டி வளர்க்கிறது; கொழுக்க வைக்கிறது. அதனாலே காங்கிரசுக் கட்சிக்கு என்ன இலாபம் என்று கேட்கமாட்டாய் - உனக்குத்தான் தெரியுமே தம்பி; போன பொதுத் தேர்தலின்போது முதலாளிமார்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்த நன்கொடை, 98 இலட்ச ரூபாய் என்பது!

முதலாளித்துவ முறையைக் கட்டிக் காத்துக்கொண்டும் கொழுக்க வைத்துக்கொண்டும் இருக்கும் காங்கிரஸ் கட்சி எப்படி சோஷியலிசத்தின் உண்மைக் கணக்குப்படி நடந்துகொள்ள முடியும்? முடியாது!

காங்கிரசுக் கட்சியிலேயே சிலர் இப்போது, சோஷியலிசம் வளரத்தக்க விதத்தில் காங்கிரசாட்சி நடந்துகொள்ளவில்லை என்று பேசத் தலைப்பட்டுள்ளனர்.

அமைச்சராவதற்கு முன்புவரை, இந்திரா காந்தி இந்தக் கருத்தை வலியுறுத்தி வந்தார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை.

இரு திங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூடி ஒரு காங்கிரஸ் சோஷியலிச மாநாடு நடத்தி, சோஷியலிசத் திட்டத்தை அக்கறையுடனும், தீவிரமாகவும் நிறைவேற்றும்படி காங்கிரஸ் ஆட்சியை வற்புறுத்திப் பேசினர்.

காங்கிரஸ் கட்சி, உள்ளபடி சோஷியலிசத்தின் வழி நடப்ப தானால், சிலர் கூடி, ஏன் வற்புறுத்த வேண்டும்! காங்கிரசுக் கட்சியிலேயே, சோஷியலிச வழி நடப்பதாகக் கூறும் ஒரு பிரிவும், சோஷியலிச வழி நடக்கவில்லை என்று குறைகாணும் ஒரு பிரிவும் இருக்கிறது; காமராஜர் இந்த இரண்டு பிரிவிலும் இருக்கிறார்!

தம்பி! சோஷியலிசத் தத்துவத்தின் அடிப்படை, தொழில்கள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும், அந்த உற்பத்தி மக்களின் வசதிகளை அதிகப்படுத்தப் பயன்படவேண்டுமேயன்றி, முதலாளிகளின் இலாபத்தைப் பெருக்கிடப் பயன்படக்கூடாது என்பதாகும்.

அதன்படி நடந்திருக்கிறதா என்பதைக் கண்டிட, ஒரு கணக்கினை ஆராய்வோமே!

இந்துஸ்தான் மோட்டார் கம்பெனி தெரியுமல்லவா - காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு 20 இலட்ச ரூபாய் நன்கொடை கொடுத்த அமைப்பு - அதனுடைய மூலதனம் 7 கோடியே 79 - இலட்சமாம்.

அந்தக் கம்பெனிக்கு ஒரே வருடத்தில் - 1960லில் கிடைத்த இலாபம் 2,85,71,127 ரூபாய் என்று கணக்குத் தந்திருக்கிறார்கள். பார்த்தனையா, காங்கிரசின் சோஷியலிசம் கொண்டுள்ள கோலத்தை!!

டாட்டா கம்பெனிக்குக் கிடைத்த இலாபம் 5 கோடியே 77 இலட்சமாம்!

ஒரிசா மாநிலத்தில் இருக்கிறதே - இப்போது அதன் பெயர் "பாரதம்' முழுவதும் அடிபடுகிறதே கலிங்கா கம்பெனி, அதற்கு ஒரே வருஷத்தில் கிடைத்த இலாபம் 26 இலட்சம்! இப்படி இலாபம் திரட்டிக்கொள்ள இடமளித்துவிட்டு, சோஷியலிசம் பேசுகிறது காங்கிரஸ் கட்சி!

துரைத்தனமே அமைத்த ஒரு குழு, மக்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

ஒரு நாளைக்கெல்லாம் ஒரு மணி நேரத்துக்கு மட்டுமே வேலை கிடைக்கிறதாம் - மற்ற நேரத்தில் வேலை தேடி அலைகிறார்கள் - கிடைக்காமல் திண்டாடுகிறார்களாம் 270 இலட்சம் மக்கள்! இந்த ஒரு மணி நேர வேலையில் கிடைக்கும் கூலியைக் கொண்டு எப்படி வாழ முடியும்? வதைபடுகிறார்கள், அரைப் பட்டினியாக.

ஒரு நாளைக்கெல்லாம் இரண்டு மணி நேரத்துக்கு மட்டுமே செய்வதற்கு வேலை கிடைக்கிறது 200 இலட்சம் மக்களுக்கு;

ஒரு நாளைக்கு ஐந்தணா மட்டுமே கூலியாகப் பெற்று வாழவேண்டிய பரிதாபம் 600 இலட்சம் மக்களுக்கு; நாலணா பெறுபவர்கள் 400 இலட்சம்; இவை சர்க்கார் நியமித்த அமைப்பு கொடுத்துள்ள கணக்கு, நான் இட்டுக்கட்டியது அல்ல.

டாட்டா, பிர்லா கோடி கோடியாகக் குவித்துக் கொண்டிருப்பதும், குப்பனும் சுப்பனும் கூலி போதாமல் குமுறிக் கொண்டிருப்பதும், சோஷியலிசம் அல்ல!!

இத்தகைய பயங்கரமான பேதத்தைப் போக்குவதுதான் சோஷியலிசம்.