அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயத்தில் பூத்த மலர்
1

சட்ட மேம்பாடு பற்றிய சில பொதுக் கருத்துக்கள்
சட்டத்தைத் துச்சமென எண்ணுபவர்களின் கூற்றுகளும் அவற்றின் விளக்கங்களும்
இந்தி எதிர்ப்பு அறப்போரும் சிறைச் செலவும்

தம்பி!

ஒரு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு - அதற்கான பேச்சு எழுந்து வளர்ந்துகொண்டு வருகிறபோது - எவ்வளவு வேண்டுமானாலும் அந்தச் சட்டம் வேண்டாம் - கூடாது - தீது என்று வாதாடலாம், மறுத்துரைக்கலாம், எதிர்ப்புச் செய்யலாம். ஆனால் இவைகளை மீறி ஒரு சட்டம் இயற்றப்பட்டுவிட்டால், பிறகுகூட அதை எதிர்த்துப் பேசிக் கருத்து வேற்றுமையைக் கூறலாம். ஆனால், மீறுவது மட்டும் கூடாது. மீறுவது சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் பாங்கினைச் சமுதாயம் கொண்டு ஒழுகவேண்டும் என்று உள்ள நிலையைக் கெடுத்து விடும். அது கெட்டுப் போய்விட்டால் பிறகு சமூகக் கட்டுக் கோப்பைச் சிதையாதபடி பாதுகாத்து வரும் சக்தி பாழ்பட்டு விடும். அந்தச் சக்தி பாழ்பட்டுவிட்டால் பிறகு நாட்டிலே காட்டுமுறை ஏற்பட்டுவிடும் என்று வாதாடுபவர்கள் இருக்கிறார்கள்.

அதிகாரம் ஊட்டிவிடும் ஆணவத்தின் காரணமாக, பலர் குளறிக்கொட்டியிருப்பதனை மிக மிக நாகரிக நடையுள்ளதாக்கி, அவர்களின் தூற்றலையும் ஒரு தத்துவ விளக்கம் போன்றதாக்கி நான் தந்திருக்கிறேன் - மேலே.

படு! படு! சட்டத்தை மீறினால் சும்மா விடுவார்களா!

எதிர்த்தால் பிடித்திழுத்துக் கொண்டுபோய் கொட்டடியில் தள்ளுகிறார்கள்.

பேச்சு என்ன இதுகளிடம்! கூப்பிடு போலீசை! கொண்டுபோகச் சொல்லு சிறைக்கூடம்.

நாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளாமல், எமக்கு உள்ள அதிகாரம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளாமல் எங்களையா எதிர்க்கிறாய்? என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொள்!

இவ்விதமாகப் பேசுபவர்கள், சட்டத்தை மீறினால் சங்கடப் படவேண்டி நேரிடும் என்பதை எடுத்துக் காட்டுகிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். சட்டத்தை மீறும்போது, சட்டத்தின் பாதுகாவலரின் பிடியில் சிக்குவோம் என்பதும், கொட்டப் படுவோம் என்பதும் எவருக்கும் தெரியும். எனவே அதனை நினைவுபடுத்துவதாகக் கூறிக்கொண்டு நிந்தித்துக்கிடப்போர் தமது நீண்ட நாவினுக்கு அதிக வேலை கொடுத்து அலுத்துப் போகத் தேவையில்லை.

சட்டம் சமுதாயக் கட்டுக்கோப்புக்கு இன்றியமையாதது என்ற அரிச்சுவடி போதிக்கத் தேவையில்லை, அதுபற்றிய பொது அறிவு சமூகத்தில் பரவலாக ஏற்பட்டுவிட்டிருக்கும் இந்த நாட்களில்.

சட்டத்தைக் குறித்த தன்மைகளை எந்த அளவுக்கு அறிந்திருக்கிறேன் என்பதை எடுத்துக்காட்ட அல்ல, என்னை நிந்திக்கும்போதுகூட, பொதுத் தத்துவ விளக்கத்தை உள்ளடக்கிப் பேசட்டும் என்பதற்காகவும், அவர்கள் எத்தனை இழிமொழி பேசித் தமது இயல்பினையும், தம்மிடம் உள்ள சரக்கின் தன்மையினையும் எடுத்துக் காட்டியபடி இருந்தாலும், சேற்றுக் குட்டையிலிருந்தும் சில கெண்டைகளைத் தேடிப் பெறுவது போல, அவர்களின் ஆபாசப் பேச்சிலிருந்தும், கிளறி எடுக்கத் தக்கவைகளை நான் பெற முயற்சித்திருக்கிறேன் என்பதைக் காட்டிடவும், சட்டம் பற்றிய சில பொதுக் கருத்துக்களைத் தெரிவிக்கிறேன்.

* * *

சட்டம், ஆட்சி செய்கிறது சட்டம்!

சட்டம் எல்லோருக்கும் பொதுவானது!

சட்டம், எவரையும் கட்டுப்படுத்தக்கூடியது!

சட்டம், வளையாது, நெளியாது; வல்லவனைக் கண்டு ஒளிந்துகொள்ளாது; இளைத்தவன்மீது காரணமற்றுப் பாயாது. சட்டத்தின் கண்முன்பு அனைவரும் ஒன்றுதான்!

சட்டம், சமுதாய ஒழுங்கைக் காத்து வருகிறது.

சட்டம், சமுதாயம் சின்னாபின்னமாகாதபடி பார்த்துக் கொள்கிறது.

சட்டம், நாட்டிலே காட்டுமுறை புகாதபடி தடுத்து நிறுத்துகிறது.

சட்டம் மக்கள் ஒருவருக்கொருவர் கூடி வாழ்வதிலேதான் பெருமையும் சுவையும் பயனும் பண்பும் இருக்கிறது என்ற பேருண்மையை நிலைநாட்டத் துணை புரிகிறது,

சட்டம், உயிர் உடைமை, உரிமை, அமைதி ஆகியவை களுக்கு ஊறு நேரிடாதபடி பார்த்துக்கொள்ள விழிப்புடன் இருக்கிறது.

சட்டம், கோபதாபம், விருப்பு வெறுப்பு, வெறி போன்ற உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, தகாத செயலில் ஈடுபட்டு, சமூகத்துக்கு எவரும் ஊனம் விளைவித்துவிடாதபடி தடுத்துக் கொண்டிருக்கிறது.

சட்டம், மக்களுக்குள்ளாக ஏற்படக்கூடிய தொடர்பையும், மக்களுக்கும் அரசுக்கும் ஏற்படும் தொடர்பையும், மாண்புடைய தாக இருக்கச் செய்யும் பெரு முயற்சியில் ஈடுபடுகிறது. சட்டத்தின் கண்கள் கூர்மையானவை! சட்டத்திற்கு நெடிய கரங்கள்!

சட்டம், கண்ணீர் கண்டு கடமையை மறந்துவிடாது; மயக்குமொழி கேட்டு, வழிதவறிச் செல்லாது.

சட்டம், தன்முன் நிற்பது யார்? நண்பனா? பகைவனா? உற்றார் உறவினனா? உதவி செய்தவனா? ஊரிலே பெரிய புள்ளியா? ஊறு விளைவிக்கக்கூடியவனா? என்ற இவைபற்றி எண்ணித் தடுமாற்றம் கொள்ளாது. செய்தது என்ன? எப்படிச் செய்தான்? யார் சான்று? எத்தகைய குற்றம்? குற்றமற்றவனாக இருக்கக்கூடும் என்று ஐயப்பாடு எழவாகிலும் இடம் இருக்கிறதா? எனும் இவைபற்றித்தான் எண்ணிப் பார்த்து முடிவு செய்யும்.

கலம் நேர்வழி செல்ல உதவும் கருவிபோல, சமுதாயம் ஒழுங்காக இருந்துவரத் துணையாக நிற்பது சட்டம்.

சட்டத்தை மதிக்காமல் சமுதாயத்தில் இடம் பெற்று இருந்திட இயலாது; அனுமதி கிடையாது.

சட்டம், அவரவருடைய விருப்பத்திற்கேற்ற வடிவம் கொள்ளாது - வடிவம், இவ்விதம் இருக்க வேண்டும் என்று உரியவர்கள் கூடி முடிவு செய்தான பிறகு மீண்டும் உரியவர்களே கூடி மாற்றினாலொழிய அமைந்துவிட்ட வடிவம், அனைவரும் ஏற்றுக்கொண்டாக வேண்டியதாகிவிடும்.

தத்தமக்கு விருப்பமான முறையில், வாழ்க்கை நடத்தவும், அத்தகைய வாழ்க்கை நடத்துவதற்குத் தேவைப்படுபவைகளைத் தத்தமது இயல்புக்குத் தக்க முறையிலே தேடிப் பெறவும் அவ்விதம் தேடிப் பெற்றவைகளை வேறு எவரும் பறித்துக் கொள்ளாது பார்த்துக்கொள்ளவும், தடுத்திடவும் தேவைப்படும் பாதுகாப்புப் பெற்று, வாழ்ந்துவர ஏற்பட்ட அமைப்பே, சமுதாயம் என்றாகிறது.

தனித்தனி விருப்புக்கு ஏற்றபடி அமையும் வாழ்க்கையும், அந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப்படும் முறையும், மற்ற எவருடைய வாழ்க்கைக்கோ, வாழ்க்கை அமைவதற்காக அவர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சிக்கோ, கேடு மூட்டாததாக அமைந்தாக வேண்டும். அப்போது தான், சமுதாயம் சாயாமல், சரிந்துபோகாமல் இருக்க முடியும்.

ஆகவே, பொதுவாக அனைவரும் வாழ வேண்டும், அதற்குக் குந்தகம் ஏற்படாத முறையில், நாம் ஒவ்வொருவரும் நமது வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு ஒழுக வேண்டும் என்பதே சமுதாய நெறி - அறவழியாகிறது. அதனைக் கட்டிக் காத்து வருவதே, சட்டம். எனவே சட்டம், அறவழியை அழியாது பாதுகாத்துத் தருகிறது. ஆகவே, அறம் நிலைக்க, சட்டம் அச்சாணியாகிறது. அந்த அச்சாணியின் ஒழுங்குக்கும் நேர்த்திக்கும், வலிவுக்கும் ஏற்பத்தான் சமுதாயத்தின் தரம் அமையும். சமுதாயத்தின் தரம் உயர உயர அங்குக் காணப்படும் சட்டத்தின் நேர்த்தியும் மேன்மைமிக்கதாகும். சட்டத்தின்படி ஒழுகி வருவதன் மூலம் ஏற்படும் வலிவும் பொலிவும், சமுதாயத்தின் தரத்தை உயர்த்துகிறது; ஆகவே சட்டம், சமுதாயத்தை உருவாக்கி, பாதுகாத்து, வளரச்செய்து, அதனுடைய தரத்தையும் உயர்த்துகிறது.

எந்த அளவுக்கு, ஒரு சமுதாயத்தின் தரம் உயர முடியும் என்று எண்ணிப்பார்த்த பேரறிவாளர்கள் கூறியிருப்பது, மேலெழுந்தவாரியாகக் கவனிப்பவர்களுக்கு விந்தையாகக்கூடத் தோன்றும். சட்டங்களே தேவை இல்லாத அளவுக்குச் சமுதாயத்தின் தரம் உயர்ந்துவிட்டது என்ற நிலை பிறந்திட வேண்டும் என்கிறார்கள் அந்தப் பேரறிவாளர்கள்.

தரம் உயர்ந்துவிட்ட சமுதாயத்துக்குச் சட்டங்கள் தேவையில்லை!

தரம் கெட்டுவிட்ட சமுதாய நிலையிலும் சட்டங்கள் தேவை இல்லை! ஏனெனில், தரம் கெட்டுவிட்ட சமுதாயத்தில், சட்டங்கள் சரிந்துபோய்விடும்!

இது வியப்புக்குரிய செய்தி என்று மட்டும் கருதுவது போதாது; மிக உயர்ந்த நிலையிலும் சட்டம் தேவைப்படாது, மிகக் கேவலமாகிவிட்ட நிலையில் சட்டம் தேவை இல்லை என்பது நகைச்சுவைப் பேச்சும் அல்ல.

இனி மருந்து எதற்கு? என்று நோய் முற்றிப்போய் ஆள் தேறமாட்டான் என்று தெரிந்துவிட்டபோதும் கூறுகிறார்கள்; நோய் நீங்கிப்போய், ஆள் நல்ல உடற்கட்டுடன் விளங்கும் போதும் கூறுகிறார்கள்.

இரண்டும் ஒன்று என்றா பொருள்? இல்லை!

அஃதே போலத்தான், சட்டங்களின் அருமை பெருமையை உணர்ந்து, பயனை அறிந்து அதன்படி ஒழுக வேண்டும் என்ற நினைப்போ நிலையோ அற்ற மக்கள் கூட்டத்துக்குச் சட்டத் தொகுப்பு தேவையில்லை; அதுபோன்றே அழுக்காறு, அவா, வெகுளி எனும் கேடுகள் அறவே நீக்கப்பட்டு, அறநெறியினைத் தமது இயல்பாக்கிக்கொண்டுவிட்ட மக்களுக்கும் சட்டம் தேவை இல்லை.

ஆனால், இன்றைய உலகு, இந்த இரு நிலைகளைக் கொண்டதாக அமைந்து இல்லை.

சட்டத்தின் பிடியில் தங்களை ஒப்படைக்க மறுக்கும் காட்டுப் போக்கினரும் அதிகம் இல்லை, அறநெறியினைத் தமது இயல்பாக்கிக்கொண்ட முழு மனிதர்கள் கொண்டதாகவும் சமுதாயம் இல்லை. நிதான புத்தியுடன் இருக்கும்போது எவை எவைகளைத் தகாதன, தீதானவை, கேவலமானவை, கேடு பயப்பவை என்று உணருகிறார்களோ, அதே செயல்களை, அழுக்காறு, அவா, வெகுளி எனும் உணர்ச்சிகளின் பிடியிலே சிக்கி விடும்போது செய்திடும் போக்கினர் நிரம்ப உள்ள நிலையிலேயே சமுதாயம் இருக்கிறது.

 

ஆமாம், செய்தேன்!
செய்தேன், அதனால் என்ன?
செய்தேன்! நீ யார் கேட்க?
செய்தேன்! என்ன செய்துவிடுவாய்!
செய்தேன்! செய்வேன்!

இவ்விதம் ஆர்ப்பரித்திடும் நிலையினின்றும் மெள்ள மெள்ள விடுபட்டு, தீய செயல்களைச் செய்துவிட்ட பிறகு, தவறு என உணர்ந்து, வருத்தப்படுவது, பயப்படுவது, வெட்கப்படுவது, மறைக்கப் பார்ப்பது, மறுத்துப் பார்ப்பது, மறக்கப் பார்ப்பது என்ற நிலைக்கு, மனிதர்கள் செல்வதற்கே பலப்பல நூறு நூற்றாண்டுகளாயின!!

கொன்று குவித்தேன்!
வெட்டி வீழ்த்தினேன்!
துண்டு துண்டாக்கினேன்!

என்று பகைவர்களை எதிர்த்திடும் போர்ச் சூழ்நிலையில், பேச்சு எழுகிறது; கேட்போர், பதறுவதில்லை, மாறாக பாராட்டுகிறார்கள்.

கொளுத்திவிட்டேன்!
கொள்ளை அடித்தேன்!
மானபங்கப்படுத்தினேன்!

என்று கூறுவதைவிட, போர்க்காலத்தில், கூச்சமின்றிக் கேட்டுக் கொள்ளும் மனநிலை ஏற்படுகிறது,

ஆனால், இந்த மனநிலை, உள்ளத்திலே மூண்டுவிடும் வெப்பம் குறையக் குறைய மாறத் தொடங்கி, பகை மடிந்த பிறகு, மடிந்துபோகிறது.

புதிய கருத்துகள், புதிய முறைகள், புதிய ஏற்பாடுகள் மிகுதியாக உள்ள இந்நாட்களிலேயும், ஒவ்வொரு பெரும் போருக்குப் பிறகும், கொடுமைகளையும் அழிவுச் செயலையும் வெறுத்தும் கண்டித்தும், மனிதத்தன்மையின் மேம்பாட்டினை வலியுறுத்தியும், பல ஏடுகள் வெளியிடப்படுகின்றன; போர் இனிக் கூடாது, போரற்ற உலகு காண வேண்டும், போர் எழாத சூழ்நிலை அமைக்க வேண்டும், அழிவுக் கருவிகளை அழித்திட வேண்டும், கலந்து பேசிக் கேடு களைய வேண்டும், கூடி வாழ்ந்திட முறை காண வேண்டும் என்ற பேருண்மைகள் வலியுறுத்தப் படுகின்றன.

அவ்விதமான பேருண்மைகளை வலியுறுத்துவோர்களைப் பேரறிவாளர் என்று போற்றிடச் சமுதாயம் முன்வருகிறது.

பெரும் போரில் ஈடுபட்டுப் பகைவர்களை அழித்திடப் பல்வேறு கொடுமைகளையும் கூசாது செய்தவர்களேகூட, போர் முடிந்த பிறகு, போர் கொடுமையானது, போர் கூடாது, அழிவு தடுக்கப்படத்தான் வேண்டும், அமைதியான உலகே ஆனந்த உலகு என்று உணர்ந்து பேசுகின்றனர்.

போரில் ஈடுபட்டவர்களுக்கே போர் கூடாது என்பதிலே உண்மையான எண்ணம் ஏற்படும் என்று அறிவாளர் கூறியிருப்பது, இந்தப் போக்கை அறிந்ததால்தான்.

போர் முடிந்த பிறகு மன மாறுதல் ஏற்படுவது போலவே, தனிப்பட்ட முறையிலே எழும் பகை காரணமாக ஒருவன், தீயசெயலைச் செய்துவிட்ட பிறகு, அவன் உள்ளத்திலே பகை உணர்ச்சி மடியத் தொடங்கும்போது, அவனுக்கே, தன்னுடைய செயலைக் குறித்து, ஒரு அருவருப்பும் அச்சமும் எழுகிறது.

பொதுவாகப் பார்க்கும்போது, கொடுமை செய்வதில், இயற்கையான களிப்பும், பெருமிதமும் கொண்டிடும் காட்டுக் குணம், இன்று பெருமளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கிறது என்று கூறலாம். காட்டுக்குணம் என்று கூறும்போது, அதிலேயும் இருவகை இருப்பதை உணரலாம்; ஒன்று, பாய்ந்து தாக்கும் கொடுமை; மற்றது, பதுங்கி மாய்க்கும் கயமை!

இன்று, இரண்டாவது வகைக் காட்டுக் குணமே, அதிகமாகக் காணப்படுகிறது. காரணம், தாக்கும் வலிவு குறைந்திருக்கிறது என்பதுடன், தாக்குதலை வெறுப்பார்கள், எதிர்ப்பார்கள், தடுப்பார்கள் என்ற அச்சம் மேலிட்டு விட்டிருக்கிறது; எனவேதான், பதுங்கிடவும், தாக்கிய பிறகு ஒளிந்திடவும், கேட்கும்போது மறுத்திடவும், பிடிபடும்போது தப்பித்துக்கொள்ளவும் கொடுமை செய்தவன், இந்நாட்களில் முயலுகிறான்.

இந்தப் போக்கு ஏற்படச் சமுதாய அமைப்பும், அதன் விளைவாக ஏற்பட்ட சட்டமும், அந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திடும் திறத்துடன் ஒரு அரசும் காரணமாயின.

எனவே, சட்டம், மனிதனுடைய மனத்திலேயும் போக்கிலேயும், குறிப்பிடத்தக்க ஒரு மாறுதலை ஏற்படுத்தத் துணைபுரிந்திருக்கிறது; கொல்லும் புலிக்குக் கூண்டாக இருப்பது மட்டுமன்றி, புலியின் இரத்த வெறிப் போக்கை ஓரளவு மாற்றியும் இருக்கிறது என்று கூறலாம்.

தனிப்பட்டவர்களுக்குள் ஏற்பட்டுவிடும் பகையானாலும், இரு நாடுகளுக்குள் மூண்டுவிடும் பகையானாலும், பகைகொண்ட அந்த இரு தரப்பினரின் வலிவுக்கு ஏற்றபடி, வெற்றி தோல்வி அமைகிறது.