அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இதயத்தில் பூத்த மலர்
2

சட்டத்திற்கு உட்பட்ட ஒரு சமுதாயத்தில், ஒருவன், வேறு ஒருவனைக் கொடுமை செய்யும்போது, கொடுமைக்கு ஆளானவன் பக்கம் சமுதாயம் முழுவதும் துணை நிற்கிறது என்று பொருள்படும்.

கொடுமை செய்தவன், தனியாக்கப்பட்டுவிடுகிறான்!

கொடுமைக்கு ஆளானவன் சார்பாகச் சமுதாயம் எழுகிறது; சட்டம் முழக்கம் எழுப்புகிறது; அரசு துணை நிற்கிறது.

கொடுமை செய்தவன் வலிவுமிக்கவனாக இருக்கலாம்; கொடுமைக்கு ஆளானவன், வலிவற்றவனாக இருக்கலாம். அந்த இருவருக்குள் மூண்டுவிட்ட பகையில், சமுதாயம் சட்டத்தின் துணையுடன், தலையிடாதிருக்குமானால், வலிவற்றவனை வலிவுள்ளவன் வதைத்திடுவான், வலிவற்றவன் அழிக்கப்பட்டுப் போய்விடுவான். ஆனால் சட்டத்திற்குத் தன்னைத்தானே உட்படுத்திக்கொண்ட சமுதாய அமைப்புமுறை இருக்கிற காரணத்தால், அந்த வலிவற்றவனுக்குத் துணையாகச் சமுதாயமே நிற்கிறது; ஒருவன் எத்துணை வலிவுமிக்கவனாக இருப்பினும், அவனுடைய வலிவு, சமுதாயத்தின் கூட்டுவலிவின் முன்பு எம்மாத்திரம்? எனவே, அவன், தன் வலிவினைக் காட்டிட இயலாது! அவன் செய்த கொடுமைக்கேற்ற தண்டனை தரப் படுகிறது; கொடுமை செய்தவன், தன் சொந்த வலிவினைக் காட்டித் தப்பித்துக்கொள்ள முடியாது போகிறது.

எனவே, சட்டம், வலியோர் சிலர் எளியோர் தமை வதை புரியும் கொடுமையைத் தடுத்திடும் வலிவுமிக்க ஓர் ஏற்பாடாகி விளங்கி வருகிறது.

இவ்வளவும், இதற்கு மேலும் கூறலாம், சட்டத்தின் பொருள், பொறுப்பு, பொருத்தம் ஆகியவைபற்றி!

இவைகளை உள்ளடக்கித்தான், சட்டம் ஆள்கிறது என்று கூறுகிறார்கள். சட்டம், தனிப்பட்ட எவரையும்விட வலிவு மிக்கது, எவர் சார்பிலும் நின்றுவிடாமல், வலியோர் எளியோரை வதைக்காதபடி பார்த்துக்கொள்கிறது என்று கூறுகிறார்கள்

சட்டத்துக்கு அடங்கி நடப்பது - கேவலப்போக்கு என்றோ, கோழைத்தனம் என்றோ கூறுபவர் எவரும் இரார்; ஏனெனில், சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு. எனவே, அந்தச் சமுதாயத்திலே உள்ள ஒவ்வொரு தனி மனிதருக்கும் தன்னுடைய இசைவின் பேரில் அமைந்துள்ள ஏற்பாடே சட்டம் என்று கூறிக்கொள்ள, பெருமைப்பட, உரிமை இருக்கிறது சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்பது, தானும் சேர்ந்து சமைத்துக்கொண்டுள்ள ஒரு சமுதாய ஏற்பாட்டுக்கு, சமுதாய நலனைக் கருதி, உடன்பட்டு ஒழுகி வருவது என்ற பொருள் தருவதால், அது தவறு ஆகாது என்பது மட்டுமல்லாமல், அது தலையாய கடமை என்ற எண்ணம் எழுகிறது.

சட்டம் அவ்விதம்; நாம் என்ன செய்யலாம்?

சட்டத்திற்கு மாறாக நான் ஏதும் செய்வதற்கு இல்லை

என்று கூறிடுவோர், ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் அல்லது ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில், தமது விருப்பு வெறுப்பு எப்படி இருப்பினும், அந்த விருப்புவெறுப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டேனும், சமுதாய ஏற்பாட்டுக்கு ஒத்தபடிதான் நடந்துகொள்ள வேண்டும் என்பதைத்தான் தெரிவிக்கிறார்கள்.

* * *

நாம் என்ன செய்யலாம்? சட்டம் அப்படி!

இப்படியும் ஒரு சட்டமா?

இதற்கும் சட்டம் வந்துவிட்டது!

எடுத்ததற்கெல்லாம் சட்டமா?

சட்டம் என்றாலும் அதிலே பொருத்தம், பொருள் இருக்க வேண்டாமா?

ஆரஅமர யோசிச்சிச் சட்டம் போடணும்.

இவருடைய சட்டமப்பா இது!

எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று.

ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்?

சட்டம் போடுவதா பெரிய கஷ்டம்?

அவருக்கென்ன, நினைத்தா போடுவாரு ஒரு சட்டம்!

சட்டம் வருகிறதாம்பா! தெரிந்துகொள்!

சட்டம் போடப்போறாராமே பெரிய சட்ட நிபுணரு!

சட்டம் போட இவனுக்கு என்ன தகுதி இருக்குது?

புரிந்துகொண்டா போடறாங்க சட்டம்?

யாரைக்கேட்டுப் போட்டாங்க இந்தச் சட்டம்?

இவனோட சட்டத்தை எவன் மதித்து நடப்பான்?

இதுக்கும் பேரு சட்டந்தானாம்!

இந்தச் சட்டம் நிலைக்குமா?

இவனோடு தீர்ந்தது இந்தச் சட்டம்!

சட்டம் போட்டுவிட்டா பிரச்சினை தீர்ந்துபோச்சா?

எத்தனையோ சட்டத்தைப் பார்த்தாச்சி; விட்டுத் தள்ளு!

இந்தச் சட்டம் தொலையணும்; நாடு உருப்பட வேணும்!

இங்கேதான்யா இப்படிப்பட்ட சட்டமெல்லாம்!

இப்படிப்பட்ட சட்டம் போட்டவனெல்லாம் என்ன ஆனான்னு தெரியாதா?

நியாயந்தானாய்யா இந்தச் சட்டம்?

கொஞ்சமாவது ஈவு இரக்கமிருந்தா, இப்படி ஒரு சட்டம் போடுவானா?

யார் என்ன செய்ய முடியும் என்கிற ஆணவத்திலே போடற சட்டம்!

சட்டம் போட்டுவிட்டா எல்லோரும் பெட்டிப் பாம்பாகி விடுவாங்கன்னு நினைப்பு!

கண்ணுமண்ணு தெரியாம கொண்டாடினோம்; போடறான் சட்டம்!

சட்டத்தைத்தானே காட்டுகிறே! காட்டு!

சட்டப்படிதானே நடக்குது சகலமும், தெரியுமே!

ஆட்டுக்குப் போடுது சட்டம் ஓநாய்க் கூட்டம்!

வலுத்தவன்கிட்டப் போகுதா இந்தச் சட்டம்?

ஏழை வாழவா இருக்குது இந்தச் சட்டம்?

இல்லாதவனை மிரட்டத்தான்யா சட்டம்!

நல்லதுக்குப் போடமாட்டாங்க ஒரு சட்டம்!

சட்டம் ஒழுங்காகத்தான் இருக்குது! இருந்து?

சட்டம் இருக்குதா? ஆமாம் ஏட்டிலேதானே!!

ஏன்யா, சட்டம் சட்டம்னு பேசி வயிற்றெரிச்சலைக் கிளப்பறே!

போய்யா, நீயும் உன்னோட சட்டமும்.

என்னய்யா செய்துவிடும் உன்னோட சட்டம்?

ஆமாம்! மீறப்போறேன் உன் சட்டத்தை! செய்ய முடிந்ததைச் செய்துகொள்ளு, போ!

சட்டம் சட்டம்னு பயந்து சாகச் சொல்றயா?

உயிரைத்தானேய்யா பறிச்சிக்கும் உன் சட்டம்? செய்யட்டும்!!

கிளம்புங்க, நமக்காகச் சட்டமா? சட்டத்துக்காக நாமா? என்பதை ஒருகை பார்த்தேவிடுவோம்!

* * *

தம்பி! முற்பகுதியில், சட்டத்தின் மேம்பாடுபற்றிக் கூறியிருப்பதற்கும், பிற்பகுதியில், சட்டத்தைத் துச்சமென்று கருதும் மனப்போக்கு எழத்தக்கவிதமாக எழுதியிருப்பதற்கும் பொருத்தம் காணோமே - சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு என்பதற்கான அழுத்தமான காரணங்களைக் காட்டிவிட்டு, சட்டத்தைக் கேலி செய்தும் கேவலப்படுத்தியும், மீறத்தக்கது ஒழித்திடவேண்டியது என்ற முறையிலும் எழுதியிருப்பது முறையாகத் தெரியவில்லையே என்று எவருக்கும் கேட்கத் தோன்றும்.

பொருத்தமற்றதை, முறையற்றதை எழுதும் பழக்கம் எனக்கும் இல்லை என்பதை நீ நன்கு அறிந்திருக்கிறாய் - எனவே, ஏன் நான் இவ்விதம் எழுதினேன் என்று எண்ணிப் பார்த்தால் உண்மை விளங்கும்.

சட்டம், சமுதாய ஏற்பாடாக, கட்டுக்கோப்பு, கண்ணியம், ஒழுங்கு, நீதி, நியாயம், நேர்மை ஆகியவற்றினைப் பாதுகாத்திடத் தக்கதாக அறநெறி மேற்கொள்வதாக அமைந்திருக்குமானால், அப்படிப்பட்ட சட்டத்தை அனைவரும் வரவேற்றுப் போற்றி அதன் கட்டுக்கு அடங்கிச் சமூக மேம்பாடு எழில்பெற ஒழுக வேண்டும் - ஒழுகி வருகின்றனர் மிகமிகப் பெரும்பாலோர். ஆனால் சட்டம், தான்தோன்றித்தனமாக, ஆணவப் போக்குடன், ஆய்ந்து பார்க்காமல், ஆதிக்க வெறிகொண்டு, அக்கிரமத்துக்குத் துணையாக, அநீதியைக் கொலுவேற்ற இயற்றப்படுமானால், சட்டம் மதிப்பற்றுப்போகும், துச்சமென்று எண்ணுவர், எதிர்த்திட முனைவர் - எதிர்த்துள்ளனர் - எதிர்த்து நிற்பர்.

சட்டம் நோய் தீர்க்கும் மருந்து என்று கொள்வோமானால், அம்மருந்து முறைப்படி செய்யப்பட்டதாக, அத்துறை வல்லுநரின் ஒப்பம் பெற்றதாக, நோய்தீர்க்க வல்லதாக அமைந்திருக்க வேண்டும். அங்ஙனம் தயாரிக்கப்பட்டதாக இருப்பின் கசப்பு, குமட்டல், எரிச்சல் ஏற்படினும் சகித்துக்கொண்டு, நோய்போக அம்மருந்து உட்கொள்வர். பொருள்வகை, செய்முறை அறியாது, கண்மூடித்தனமாக, விளக்கமற்ற நிலையில் விரைவு அதிகம் காட்டி, தயாரித்த மருந்து எனின் அதனை உட்கொள்ளார் - உட்கொள்பவர்க்கு நோயினும் கேடான நிலையே ஏற்பட்டுவிடும்.

சட்டத்தை மீறலாம் என்ற நினைப்பும், மீறவேண்டும் என்ற துடிப்பும், மீறத்தக்க துணிவும் மக்கள் - அல்லது குறிப்பிடத்தக்க பகுதியினர் கொள்ளத்தக்கவிதமான கோணற் சட்டத்தை இயற்றிவிட்டு, சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு, அதனை மீறலாகாது என்று பேசிப் பயன் இல்லை.

அவ்விதம் செய்யப்பட்ட சட்டங்கள் நிலைத்திருப்பது மில்லை.

எனவேதான், சமூகத்தில், விவரம் அறியாமல், விளக்கம் பெறாமல், ஆர அமர யோசியாமல், தீது பயக்கத்தக்க, தன்மானம் அழிக்கத்தக்க, உரிமையை உருக்குலையச் செய்யத்தக்க, வலியோர்க்குத் துணை நிற்கத்தக்க விதமான சட்டங்களை எதிர்த்து நிற்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன - நடைபெற்றுக்கொண்டு வருகின்றன; நடைபெற்றுத்தீரும்.

சட்டம் இயற்றுவது என்பது எத்தனை பொறுப்பான காரியம் என்பதை உணர்ந்து, தூய நோக்கத்துடன் இயற்றிட வேண்டும்.

சட்டம் இயற்றும் அதிகாரம் எம்மிடம் சிக்கிவிட்டது, இனி எமது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்றுவோம் என்ற போக்கு அறவே கூடாது. அதனைச் சமூகம் தாங்கிக்கொள்ளாது.

தேவை அறிந்து, சூழ்நிலை தெரிந்து, அனுபவ அறிவையும் அறிவாளர் கருத்தையும் பெற்று, மக்களுக்குப் பெரும்பாதகம் விளைவிக்காத விதமான முறை கண்டறிந்து, சட்டங்கள் இயற்றப்படவேண்டும்; அத்தகைய சட்டங்களை மதித்து நடப்பர் - நடந்து கொள்கின்றனர்.

கனிதரும் மரமாகத்தக்க செடி, தோட்டத்தில் பயிரிடு பவர்களே, அந்தச் செடி, வீட்டுச் சுவரின் இடுக்கிலே தன்னாலே முளைத்துவிட்டால், கல்லி எடுக்கிறார்கள்.

வேரினைக் கருக்கிடவும் செய்கிறார்கள். மக்களின் நல்வாழ்வுக்காக இந்தச் சட்டம் பிறந்திருக்கிறது என்ற நம்பிக்கை எழத்தக்க முறையில் சட்டம் இயற்ற வேண்டும் - மீறினால் என்ன ஆகுமோ என்ற கிலி மக்கள் மனத்திலே எழும். ஆகவே, அவர்கள் தண்டனைக்குப் பயந்து அடங்கிக்கிடப்பர் என்று மட்டும் எண்ணிக்கொண்டு, சட்டத்தை இயற்றிவிடுவது, முழு அளவு பலனை நிச்சயம் தாராது. இதை விளக்கிடும் நிகழ்ச்சிகள் வரலாற்று ஏடுகளிலே நிரம்ப இருக்கின்றன.

சட்டத்தை மீறலாமா என்று கேட்கிறார்களே சிலர், அவர்களுக்குக் கூறிடத் தயங்காதே, தம்பி! தேவையான, நியாயமான சட்டங்களை நாங்கள் மதிக்கிறோம். சட்டத்தின் கட்டுக்கு அடங்கி நடந்துகொள்கிறோம். ஆனால், எம்மை இழி மக்களாக்கிவிடத்தக்க கேடு விளைவிக்கும் சட்டம் இயற்றப் பட்டால், அதனை மதித்திட முடியாது, மீறித்தான் நடப்போம், அதற்காக அளிக்கப்படும் தண்டனையை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்வோம் என்பதனை - தெளிவாக - திட்டவட்டமாக என்று.

எல்லாச் சட்டத்திலும் மேலானது, உயிரானது, புனிதமானது, அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறார்கள்.

அதனைவிட மேலானது, புனிதமானது, நல்வாழ்வுக்கான மக்களின் அடிப்படை உரிமை.

அந்த உரிமையைப் பறித்திடும் சூதுமதியுடன், சூழ்ச்சித் திறத்துடன், ஒரு ஏற்பாடு செய்துகொண்டு, அதற்குச் சட்டத்தைக் கருவியாக்கிக்கொண்டால், அந்தச் சட்டத்தை எப்படி மதித்திட முடியும், எவர் மதிப்பர், ஏன் மதித்திட வேண்டும்.

இந்த எண்ணத்துடனேயே, இந்த எண்ணம் தரும் தெளிவையும் துணிவையும் துணைகொண்டே, இந்தி எதிர்ப்பு அறப்போர் நடாத்தப்பட்டு வருகிறது. இது சட்டத்தை மீறுவதாகும் என்கிறார்கள் துரைத்தனத்தில் இடம்பிடித்துக் கொண்டவர்கள்; அல்ல! அல்ல! எத்தகைய தீதான, தேவையற்ற, சட்டத்தை இந்தத் துரைத்தனம் எம்மைச் சுமக்கச் சொல்கிறது பாருங்கள் என்று உலகோர்க்கு உணர்த்த நடத்தப்படும் அறப்போர் இது என்கிறோம் நாம்.

தம்பி! சட்டம் பொருத்தம் பொருளற்றதாகவும், உரிமைக்குக் கேடு விளைவிப்பதாகவும் இருந்திடும்போது, மக்கள் சட்டம்பற்றி என்னென்ன பேசிக்கொள்வார்கள் என்பது குறித்து நான் குறிப்பிட்டுள்ள பகுதியை மறுபடியும் ஒரு முறை படித்துப் பார். ஒவ்வொரு பேச்சும் ஒரு மன நிலையைக் காட்டிடும்.

நாம் என்ன செய்யலாம், சட்டம் அப்படி! - என்ற பேச்சிலே, ஒரு ஏக்கம் தொனிக்கிறதல்லவா? இந்த ஏற்பாடு கெடுதல் மூட்டுகிறது, தெரிகிறது; ஆனாலும் சட்டம் இதுபோலச் செய்துவிட்டார்களே, என்ன செய்வது என்ற ஏக்கம்

இப்படியும் ஒரு சட்டமா? கோபமும் வெறுப்பும் கலந்திருக்கிறது, இந்தக் கேள்வியில்.

இதற்கும் சட்டம் வந்துவிட்டதா? என்று கேட்கும் போதும், எடுத்ததற்கெல்லாம் சட்டமா? என்று வினவிடும் போதும், ஒரு துரைத்தனம் கண்டதற்கெல்லாம் சட்டம் போட்டு, மக்களை அதிக அளவுக்குக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது, அந்தத் துரைத்தனத்துக்கு "அமுல்' செய்வதிலேயே அளவற்ற சுவை இருக்கிறது என்ற கருத்து கலந்து வெளிவருகிறது.

பொருளும் பொருத்தமுமற்ற முறையிலே சட்டம் இயற்றும்போது, மக்கள் வெறுப்படைந்து பேசுகிறார்கள், சட்டம் என்றால் அதிலே பொருத்தம் பொருள் இருக்கவேண்டாமா என்று.

ஆர அமர யோசித்துச் சட்டம் போட வேண்டும் என்ற பேச்சு எப்போது எழுகிறது! ஒரு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து எடுத்துரைத்துச் சட்டம் இயற்ற, நேர்மாறானது விளைவது காணும்போது இப்பேச்சு எழுகிறது.

இவருடைய சட்டமப்பா இது? - என்று கூறும்போது, சட்டம் இயற்றுபவர்கள்மீது தமக்குள்ள அலட்சியத்தை வெளியிடுகிறார்கள். ஆணவக்காரன் அல்லது அசடன் - இவன் சட்டம் இதுபோலத்தான் இருக்கும் என்ற பொருள்பட.

எத்தனையோ சட்டத்திலே இது ஒன்று. அடுக்கடுக்காகச் சட்டங்களைக் குவித்துவைத்திருக்கிறார்கள் தேவையற்று என்பதைக் குறிக்க இதுபோலக் கூறுகிறார்கள்.

ஏன், போட்டுவிடேன் சட்டம் இதற்கும்? - என்று கேட்பவர், அதிகாரத்திலிருப்பவர், எந்த நியாயம் கேட்டாலும் உரிமை கேட்டாலும் அதை அடக்கிட சட்டத்தைக் கருவியாக்கிக் கொள்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அத்துடன், அதிகாரத்திலிருப்பவரிடம் மதிப்பு மங்கி வருகிறது என்பதையும் காட்டுகிறார்.

தம்பி, இப்படியே விளக்கம்பெற, ஒவ்வொரு பேச்சையும் படித்துப் படித்துக் கருத்தினை ஆராய்ந்தால், திகைப்பு, வியப்பு, ஏக்கம், வெறுப்பு, அலட்சியம், கோபம், எதிர்ப்பு, துணிவு எனும் ஒவ்வோர் வகையான உணர்ச்சியும் இந்தப் பேச்சுக்களிலே உள்ளடங்கி இருப்பதை அறிந்துகொள்ளலாம்.

பொறுத்துப் பார்த்துப் பார்த்து, முறையிட்டால் மாற்றப்படும் என்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து, எரிச்சல் மூட்டப்பட்டு இறுதியில் என்ன நடந்தாலும் நடக்கட்டும் எதிர்த்தே தீருவது என்ற துணிவு பிறந்து, அந்தக் கட்டத்தின் போதுதான்.

தலையா போகும்? மீறத்தான் போகிறேன், மீறுவோம் கிளம்புங்கள்!

என்பனபோன்ற பேச்சுக்கள் எழுகின்றன; செயலும் நிகழ்கிறது.

இந்த நிலைக்கு மக்களைத் துரத்தக்கூடியதாக, சட்டம் இயற்றக்கூடாது.

இந்த நெறியை ஆட்சியினர் மறந்து, கண்மூடித்தனமாகச் சட்டம் இயற்றினால், அந்தச் சட்டம் ஏட்டில் இருக்கும், நாட்டிலுள்ள நல்லோர் துணிந்து அதனை மதிக்க மறுப்பர்.

நாம் நடத்திவரும் இந்தி எதிர்ப்பு அறப்போர் இந்த நிலையையே எடுத்துக் காட்டுகிறது; எனவே சட்டம் ஒரு சமுதாய ஏற்பாடு என்ற மேலான கோட்பாட்டை மதித்து ஒழுகும் நமது கழகத்தவர், ஆகாத, தீதான, தேவையற்ற, பொருளற்ற, வேண்டுமென்றே பூட்டப்படுகிற, உரிமை பறிக்கிற சட்டத்தை எதிர்த்து சிறை செல்வதை, ஒரு தீமையை எதிர்த்து நிற்கும் அறம் என்று உளமார நம்பி நடந்துகொள்கிறார்கள். அந்தச் சீரிய செயல், சட்டம் இயற்றுபவர்கள் எத்தகைய நெறி நிற்க வேண்டும் என்பதனை அவர்களே, மெல்ல மெல்ல ஆனால், நிச்சயமாக உணர்ந்திட வழி ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன்.

இத்தகைய நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் அறப்போரில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதிலே நான் பெருமைப்படுகிறேன்; அந்தப் பெருமிதத்தில், எனக்கு! எனக்கு! என்று கேட்டுத் தம்பிகள் பங்கு பெற்றுக்கொள்வது எனக்குப் பெருமகிழ்ச்சி தருகிறது. அந்தப் பெருமையில் தமக்குரிய "பங்கினை'ப் பெற முனைந்து, நாவலர் நெடுஞ்செழியன் சிறை சென்றிருக்கிறார். என் வாழ்த்துக்களை அவருக்கும், கோவை மாவட்டச் செயலாளர் உடுமலை நாராயணன் மற்றும் பல நண்பர்கட்கும் வழங்கி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் மட்டுந்தானா அண்ணா! என்று கேட்டிடமாட்டாய் என்று எண்ணுகிறேன், தம்பி! ஏனெனில் நீ அறிவாய், அன்பு ததும் ஒரு தூய இதயத்திலிருந்து நான் கொய்து அளிப்பது அந்த வாழ்த்து! அந்த மலரின் மணமும் மாண்பும் நீ அறிந்திருக்கிறாய்!!

அண்ணன்

2-8-1964