அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


மனிதனும் மிருகமும்
1

மக்களுக்கும் மாக்களுக்கும் உள்ள வேறுபாடுகள்
இராகுல சங்கீத்ராயனின் படப்பிடிப்பு
விஞ்ஞான விற்பன்னர்களின் கருத்துரைகள்
வெள்ளைப்பாண்டி கவிதையால் எழுந்த எண்ணங்கள்

தம்பி!

அடவியிலே அலைந்துகொண்டும், குகைகளிலே பதுங்கிக் கொண்டும், கல்லையும் கட்டையையும் கருவிகளாகக் கொண்டு மிருகங்களுடன் போரிட்டுக்கொண்டும் காயோ, கனியோ, கிழங்கோ, மிருகத்தின் இறைச்சியோ, பசித் தீயைப் போக்கிக் கொள்ள எதனையோ உண்டு, கதிரவன் கக்கிடும் வெப்பத்தாலும், கடுங்குளிராலும், பெருமழையாலும், பேய்க் காற்றாலும், நில நடுக்கத்தாலும், காட்டுத் தீயினாலும் அலைக்கழிக்கப்பட்டு, கொல்வது கொல்லப்படுவது, துரத்துவது, துரத்தப்படுவது என்ற நிலையில், இருந்துவந்த மனிதகுலம் இன்று விண்ணகத்து விந்தைகளைக் கண்டறிந்திட, முனைந்திடும் காலகட்டம் வந்து சேர்ந்திருக்கிறது. எத்தனை நெடிய பயணம்! எத்தனை ஆபத்துக் களையும் அழிவுகளையும் எதிர்த்து நடாத்தப்பட்ட பயணம்! எங்கு இருந்தான்! எங்குச் செல்கிறான்!! எவ்விதம் இருந்து வந்தான், எவ்விதமான மாறுதலைப் பெற்றுக்கொண்டிருக்கிறான்! குகைகளில், மொழி அறியாது, தாய்க்கும் தாரத்துக்கும், உடன் பிறந்தாளுக்கும் உள்ளத்தை வென்றாளுக்கும் வித்தியாசம் தெரியாது, மிருக இச்சையை எப்படியோ தீர்த்துக் கொண்டு, உறுமிக் கிடந்தவன், இன்று சமூகக் கட்டுக்கோப்பும் சட்ட திட்டங்களும் பெற்று, இந்த அவனியைத் தனது விருப்பத்தின்படி உருமாறச் செய்ததுடன் நில்லாது, மேலே மேலே செல்கிறான்; சென்றபடி இருக்கிறான்; வேக வேகமாக; விதவிதமான முறைகளைத் துணைகொண்டு; ஒளி ஒலி இவற்றின் வேகத்துடன் போட்டியிட்டபடி!! பெற்ற வெற்றிகள் பெற வேண்டிய வெற்றிகளைத்தான் நினைவுக்குக் கொண்டு வருகின்றன! சென்ற இடம், இனியும் செல்லவேண்டிய இடத்துக்கு தூண்டுதலைத் தருகிறது! பயணம் முடிவு பெறவில்லை! பயணத்தின் முடிவு தெரியவுமில்லை! எங்கே செல்கிறான்? அறிந்திட நேரமில்லை; நினைப்பும் எழவில்லை! பயணம் செய்திடவே காலமெல்லாம் செலவாகிறது! எங்கே செல்கிறான்? காற்று எங்கே செல்கிறது? ஒலியும் ஒளியும் எங்கே செல்கின்றன? விடை உண்டா இவ்வினாக்களுக்கு? உண்டு எனில், அஃதே, மனிதகுலம் மேற்கொண்டுள்ள பயணத்தின் பொருளையும் அறிந்திடத் துணை செய்யும். செல்லும் இடமும், செல்வதன் நோக்கமும் அறிந்த பிறகு பயணத்தைத் தொடரலாம் என்று மனிதன் ஓய்வு எடுத்துக்கொள்ளவில்லை. சென்று கொண்டே இருக்கிறான்! புதிது புதிதாகப் பலவற்றினைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டு, சென்ற வண்ணம் இருக்கிறான். எதனாலோ ஈர்க்கப்பட்ட நிலையில், சென்றபடி இருக்கிறான். சந்திரமண்டலத்துடன் அந்தப் பயணம் நின்றுவிடப்போவதில்லை! செவ்வாய் மண்டலம் அழைக்கிறது!! காணவேண்டிய மண்டலங்கள், இன்னும் எத்தனை எத்தனையோ உள்ளன! எல்லாம் புரிந்துவிட்டது, எல்லாம் கிடைத்துவிட்டது, இனிப் பயணம் தேவையில்லை என்று கூறிடும் கட்டம் இல்லவே இல்லை! சென்றுகொண்டே இருப்பது மனிதகுலத்தின், பொழுது போக்குமல்ல, தொழிலும் அல்ல; இயல்பு! இயங்கும் நிலை உள்ள மட்டும் இந்த இயல்பு இருந்தே தீரும், சுற்றிடும் பம்பரம் கண்டு வியந்திடும் குழவிபோல, பறந்திடும் விமானம் கண்டு மகிழ்ந்திடும் இளைஞன் போல, இன்று மனிதகுலப் பயணத்திற்கான வழி வகைகளைக் கண்டறிந்து, ஒரு விந்தையிலிருந்து மற்றோர் விந்தைக்கு அழைப்பு விடுத்திடும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு களையும் செயல்முறைகளையும் கண்டு, நாம் பெருவியப்படைகிறோம்.

உண்டு, உறங்கி, உறவாடி, இனம் பெருக்கி, மாண்டு மடிந்து போவது மனித குலத்தின் செயலின் அடிப்படை. கிடைத்ததை உண்டு, அலுப்பினால் வீழ்ந்து உறங்கி, வலிவு காட்டி உறவாடி இனம் பெருக்கி, அழிவு தன்னை நோக்கி வரும்போது எதிர்த்துப் பார்த்து, இயலாதபோது மாண்டுபோவது, மனிதகுலத்தின் பாலபருவ நிலையாக இருந்தது. இந்த நிலையிலிருந்து, தேவைப்படுவதை உண்பது, உண்பனவற்றை உண்டாக்கிக் கொள்வது வேலை செய்வதால் அலுப்படைவது, அதனால் இழந்துவிட்ட வலிவினைத் திரும்பப்பெற உறங்குவது, உடல் உணர்ச்சிக்காக மட்டுமின்றி உள்ளத்தில் எழுந்திடும் பற்று பாசம் காதல் எனும் உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தி உறவு முறையினை வகுத்துக்கொண்டு அதன்படி ஒழுகுவது, சாவு வந்திடும் என்று தோன்றிடும்போது, தடுப்பு முறைகள் தேடுவது, இறுதியில் மடிந்துபோவது எனும் கட்டம் வருவதற்குள் மனிதன் பலப்பல நூறாயிரம் ஆண்டுகளைக் கழித்துவிட்டான்; ஆண்டுகள் என்ற காலக் கணக்குக்கூடத் தெரியாத நிலையிலேயே, எத்தனை எத்தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளைக் கழித்து விட்டான். மனிதன், உருப்பெற்று உலவத் தொடங்கி ஐந்து இலட்சம் ஆண்டுகளாகின்றன என்று விஞ்ஞான விற்பன்னர்கள் கூறுகின்றனர். மிருக நிலையிலேயே, மனிதன் நீண்ட நெடுங் காலத்தைக் கழித்துவிட்டிருக்கிறான். எனினும், துவக்க முதலே, மனிதன் சில தனித்தன்மைகளையும் தனிச் சிறப்பினையும் பெற்றிருந்ததால், மிருக நிலையினை மாற்றிக்கொள்ளும் முயற்சியிலே ஈடுபட்டு, மெள்ள மெள்ள வெற்றி கண்டான். மிருகங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ற இயல்பைப் பெறுகின்றன; அந்த இயல்பு, மாற்ற முடியாததாகிவிடுகிறது. உறுமிக் கொண்டிருந்த புலியும், சீறிக்கொண்டிருந்த பாம்பும், கொத்திக் கொண்டிருந்த வல்லூறும் இன்றும் அதே இயல்புடனேயே இருந்திடக் காண்கிறோம். மனிதனைவிட மிருகங்கள், எத்தனையோ காலத்துக்கு முன்பிருந்தே உள்ளன; எனினும், இயல்பு மாறவில்லை; மாற்றிக்கொள்ளும் திறமை மிருகங்களுக்கு அமையவில்லை.

இயல்பு, சுற்றுச் சார்பினாலே உருப்பெறுகிறது, வளருகிறது; எனவே, இயல்பு மாறவேண்டுமெனில் சுற்றுச்சார்பு மாற வேண்டும்; மாற்றி அமைக்கப்பட வேண்டும்; அதற்கான தனித் திறமை மிருகங்களிடம் இல்லை; எனவேதான் இயல்பு, அன்று இருந்தது போன்றே இன்றும் - மிகப் பெரும் அளவுக்கு - இருந்திடக் காண்கிறோம்.

மிருகங்களின் உருவ அமைப்பு, நடமாட்ட முறை இவற்றிலே ஏற்பட்டுவிட்ட மாற்றங்கள்கூட, தாமாக விரும்பி, முயன்று ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் அல்ல. இருந்துவந்த சுற்றுச்சார்பு தானாக மாற்றமாகி, அதன் காரணமாக, மிருகங்களின் நிலையிலேயும் சில மாற்றங்கள் ஏற்பட்டன. ஏற்படுத்திக் கொள்ளவில்லை!! இதிலேதான், மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் அடங்கி இருக்கிறது.

யானை முதல் பூனை வரை, பாம்பு பறவை பூச்சி புழு என்பவைகள் ஈறாக, வடிவமாற்றம் நிரம்ப ஏற்பட்டுள்ளன என்பதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறுகின்றனர்.

இன்று காணப்படும் யானைக்கும், பண்டு இருந்து வந்ததற்கும், உள்ள வித்தியாசத்தைக் காணும்போது, திடுக்கிட்டுப் போய்விடுவோம். நீர் வாழ்வன, நிலம் வாழ்வன, ஊர்வன, பறப்பன எனும் எவற்றிலும், பெரிய மாறுதல் வடிவத்திலே ஏற்பட்டுவிட்டன. குதிரை காட்டுக் குதிரையாக இருந்த காலத்திலிருந்து வெகுவாக முன்னேறி, இன்றைய நிலையினைப் பெற்றது. நகரக்கூட முடியாதபடியான மாமிச மலையாக இருந்துவந்த பல மிருகங்கள் அழிந்தே போய்விட்டன. இன்று உள்ள மிருகங்கள் நமது முன்னோர்கள் எவ்விதம் இருந்தனர் என்று கண்டறியுமானால், வெட்கித் தலைகுனியும். மிருகங்களைச் சொல்கிறோமே! நமது இலட்சணம் மட்டும் என்ன! நமது மூல மூதாதை குரங்கு!! பெருமைப்படத்தக்கது என்றா கூற மனம் வரும்.

சுற்றுச் சார்பினை மாற்றி அமைத்து இயல்பையும் வடிவினையும் அதற்கு ஏற்ப, மிருகங்கள் பெற்றிடவில்லை; மனிதன் மட்டுமே, சுற்றுச் சார்பினைத் தனக்கு ஏற்றதாக, வசதி அளிப்பதாக அமைத்துக்கொண்டான்.

மிருகங்கள் போலவே, புதர்களில் பதுங்கிக் கிடந்தவன். குகைகளைக் கண்டான்; அதிலே இருந்துவந்த மிருகங்களை விரட்டிவிட்டோ கொன்றுவிட்டோ, குகைகளைத் தனதாக்கிக் கொண்டான். குகைகளைக் கண்டறிந்தது மட்டுமல்ல, சில காலத்துக்குப் பிறகு, மலைகளைக் குடைந்து குகைகளை உண்டாக்கிக் கொண்டான். சுற்றுச் சார்பினை மாற்றி அமைத்திட அமைத்திட, அதற்கு ஏற்றவிதமாக இயல்பு மாறிக்கொண்டு வரலாயிற்று.

சுற்றுச் சார்பினைத் தனக்குச் சாதகமான முறையில் மாற்றி அமைத்துக்கொள்ளும் திறமை பெற்றிருக்கும் காரணத்தினாலேயே, மனிதன் எந்த இடத்திலும் இருந்திடும் வகை கண்டறிந்து வாழ்ந்திட முடிகிறது.

வெப்பம் தீயெனத் தாக்கும் சகாரா பாலைவனத்திலும் மனிதன் இருக்கிறான், பனி மலை மிகுந்த அயிஸ்லாந்திலும் இருக்கிறான்; கடலோரமும் அவனைக் காணலாம், மலை முகட்டிலும் அவன் இருக்கிறான்; ஆற்றோரமும் இருக்கிறான்; அடவியிலும் இருக்கிறான்; பெருமழை பொழிந்தபடி உள்ள இடத்திலும் இருக்கிறான்; வறட்சி மிகுந்த இடத்திலும் இருக்கிறான்

. மிருகங்களின் நிலை அவ்விதமில்லை. பனிப் பிரதேசத்து மிருகங்களை பாலைவனத்தில் கொண்டு சேர்த்தால் செத்துப் போகின்றன; நீர்வாழ்வனவற்றை நிலத்தில் கிடத்தினால் உயிர் போய்விடுகிறது. சில சுற்றுச் சார்பிலே வாழ்ந்திடும் வகையினுள்ளவைகள், மாறான சுற்றுச் சார்பிலே கொண்டு சேர்க்கப்பட்டாலோ, தாமாகச் செல்ல நேரிட்டாலோ மடிந்து விடுகின்றன.

மிருகக் காட்சிச் சாலைகளில் இதனை உணர்ந்தே, எந்தெந்த மிருகத்துக்கு என்னென்ன விதமான சுற்றுச் சார்பு தேவையோ அதனை அமைத்துத் தருகிறார்கள்.

மனிதன், எவ்விதமான சுற்றுச் சார்புள்ள இடத்திலும் இருக்கிறான்; காரணம், அதனைத் தனக்கு ஏற்றதாக்கிக் கொள்ளும் முறைகளைக் கண்டறிந்துகொள்ள முடிவதால்.

கடுங்குளிர் மிக்க இடமானால் கம்பளிச் சட்டை அணிந்து கொள்வதன் மூலம், கொடுமை நேரிட்டு விடாதபடி தடுத்துக் கொள்கிறானல்லவா! மானோ மாடோ கடுங்குளிரிடத்தில் கொண்டு செல்லப்பட்டால் என்ன செய்திட முடியும்! விறைத்து இறந்துவிடுகின்றன.

மிருகங்கள், தமக்கென்று அமைந்துவிட்ட உடலமைப்பு, இயல்பு இவற்றினை மட்டுமே கொண்டு செயல்பட வேண்டி யிருக்கிறது; வேறு துணை - வேறு கருவி - வேறு முறை - பெற்றிடவும் பயன்படுத்திக்கொள்ளவும் முடிவதில்லை. நகர்ந்து செல்லும் உடலமைப்பும் இயல்பும் பெற்ற ஆமை, வேகமாகப் பாய்ந்தோடும் குதிரையின் துணைபெற்று, விரைந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் சென்றிட முடியுமா! ஆமை, அந்த நாளிலிருந்து நகர்ந்துகொண்டுதான் இருந்திடுகிறது - வேகம் பெற முடியவில்லை! குதிரை எப்போதும் வேகமான ஓட்டத்தைப் பெற்றிருந்திருக்கிறது.

மனிதன், தனக்கு உள்ள உடலமைப்பு, இயல்பு, என்பவைகளினால் மட்டும் கிடைத்திடும் நடவடிக்கைகளோடு நின்றுவிடவில்லை; வேறு துணை பெறுகிறான்; வேறு கருவிகளைத் தேடுகிறான்.

பறந்திடும் உடலமைப்பு மனிதனுக்கு இல்லை! ஆனால், பறந்து செல்கிறான், பறவைகள் வியந்திடத் தக்க விதத்தில்.

நீருக்கடியிலே இருந்திடத் தக்கதான உடலமைப்பு மனிதனுக்கு இல்லை; ஆனால், நீர்மூழ்கிக் கப்பல் அமைத்து, அதன் துணைகொண்டு, நீருக்கடியில் இருந்திடும் வழி பெற்று விட்டான்.

கிடைத்ததைக் கிடைத்தபடியே தின்றிடும் மிருக முறையிலிருந்து வந்தான் மனிதன்; இன்று கிடைப்பதை அல்ல, உற்பத்தி செய்வதை; அதே முறையிலே அல்ல, தன் சுவைக்கு ஏற்பப் பக்குவப்படுத்தியும், மற்றப் பொருளுடன் கலந்தும் உண்ணத் தலைப்பட்டுவிட்டான்.

மிருகங்கள் நடமாடுகின்றன, மனிதன் வாழுகின்றான் என்று கூறிடுவதற்கான காரணத்திலே இது முக்கியமானது; மனிதன் தனக்கான வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறான்; மிருகங்களுக்கு அமைந்துவிடுகிறது.

மக்களுக்கும் மாக்களுக்கும் இயல்பிலேயும் நடவடிக்கை களிலேயும் வேறுபாடு காணமுடியாதிருந்த காலத்தை இன்று ஆராய்ச்சியாளர்கள், எடுத்துக் காட்டுகிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் மாக்களை வேட்டையாடுவதும், மாக்கள் மக்களைப் பிய்த்துத் தின்பதும் மாறி மாறி நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளாக இருந்திருக்கின்றன.

இராகுல சங்கீத்ராயன் எனும் ஆராய்ச்சியாளர், கி. மு. 6000லில், இருந்த நிலைமை பற்றி எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, எந்தவிதமான வாழ்க்கை முறையிலிருந்து மனித குலம் இன்றைய புதுமை வாழ்க்கை முறைக்கு வந்திருக்கிறது என்பது புரிகிறது; புரியும்போது வியப்பு, திகைப்பூட்டும் அளவுக்கு ஏற்படுகிறது.

பனிப்படலம் மிகுந்த வால்கா நதிப் பிரதேசத்தைக் காட்டுகிறார் ஆராய்ச்சியாளர். நீலநிற வானம் மேலே! கீழே பனி கப்பிக்கொண்டுள்ள நிலப்பரப்பு. பெரிய பெரிய மரங்கள் - கிளைகளிலே பனிக் கட்டிகள். மிருகங்களின் உறுமல், பட்சிகளின்கலகல ஒலி, வண்டுகளின் ரீங்காரம் எதுவும் இல்லை. திகைப்பூட்டும் அமைதி.

மலைகளிலே இயற்கையாக அமைந்துள்ள குகைகளே வீடுகள்!

ஒரு கிழவி - ஆடை இல்லை - கற்றை கற்றையாக ரோமம் அடர்ந்திருக்கும் நிலையில் - கண்களில் ஒளி இல்லை - ஒரு வெறிச்சிட்ட பார்வை.

எலும்பைச் சுவைத்தபடி சில பெண்கள்.

அதிலே ஒரு துண்டு வீசப்படுகிறது அழுகுரலெழுப்பும் குழந்தையிடம்.

குகையிலே பதுங்கிக் கிடக்கும் மனித மிருகங்கள்!

நெருப்பு மூட்டிட விறகு தேடி, கட்டுகளாக்கித் தூக்கிக் கொண்டு வருகிறார்கள் இளம் பெண்கள்.

ரோமம் நீக்கப்படாத தோலால் ஆடை, அவர்களுக்கு. நீண்ட கூர்மையுள்ள கம்பு, நன்றாகத் தீட்டிக் கூர்மை யாக்கப்பட்ட கல் அம்பு!

குடும்பத் தலைவி முன்னே செல்ல, மற்றவர்கள் பின்னால் செல்கிறார்கள்.

ஆழ்ந்த தூக்கத்தில் உள்ள கரடிகளைத் தாக்கிக் கொல்கிறார்கள் - உணவுக்காக.

குகைக்கு வருகிறார்கள் - வழியிலே ஓநாய்கள் சூழ்ந்து கொள்கின்றன. போர்!

ஓநாய் கொல்லப்படுகிறது, அதன் பச்சை இரத்தத்தை இவர்கள் குடிக்கிறார்கள் - சதையைப் பிய்த்துத் தின்கிறார்கள்.

இவர்களிலே சிலரை ஓநாய்கள் கொன்று, சதையைப் பிய்த்துத் தின்கின்றன.

இது ஒவ்வொரு நாளும் - கொல்வது கொல்லப்படுவது - குருதி கொட்டுவது - குருதி குடிப்பது - நாலு கால் மிருகங்களுக்கும் இரண்டு கால் மிருகங்களுக்கும் ஓயாத போர்! இது வாழ்க்கை முறையாக இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறார் ஆராய்ச்சியாளர்.

இவ்விதமான முறையிலா மனிதகுலம் இருந்து வந்தது என்று எண்ணும்போதும், இவ்விதமாக இருந்து வந்த மனித குலத்தில், வழிவழி வந்தவர்களே நாம் என்பதை எண்ணும் போதும், எல்லா வகையாலும் மனிதன் உயர்ந்தவன், சிறந்தவன் என்ற எண்ணமே ஒருவிதமான கேலிக்கூத்தாகத் தென்படும்.

மாக்களுக்கும் நமக்கும் மாறுபாடு தெரிய முடியாத நிலையிலே இருந்து, வெகுதூரம் முன்னேறிவிட்டோம் என்ற எண்ணம் ஒருவிதமான மன நிம்மதியைக்கூடத் தரும் என்பதில் ஐயமில்லை.

கூர்ந்து பார்த்தால், முறையிலே வியக்கத்தக்க மாறுதல் ஏற்பட்டிருக்கிறது என்றாலும், அடிப்படை அலுவல்கள், இயல்புகள், உணர்வுகள், வெகுவாக மாறிவிடவில்லை என்பது புலனாகும்; புலனாகும்போது, மாக்களைவிட நாம் மிக அதிகமாக முன்னேறிவிட்டோம் என்று கூறிக்கொள்வதற்கில்லையே என்ற எண்ணம் நம்மைப் பிடித்து வாட்டி வதைத்திடும்.

கல்லைத் தீட்டிக் கருவியாக்கி, காட்டுமிருகங்களை வேட்டையாடிக் கொன்றுதின்று உடற்பசியைப் போக்கிக் கொள்வதிலே வரம்புவகை, முறைநெறி என்பவைகளைக் பார்க்காமல் நடந்துகொண்டு வந்த நாட்களிலே, உண்பது உறங்குவது, உறவாடுவது, போராடுவது, பெறுவது, தருவது என்பவைகளுக்கு அடிப்படையாக அமைந்திருந்த அதே உணர்வுகள், இன்றும் அதே விதத்திலே கிளம்பி, மனிதக் குலத்தை ஆட்டிப் படைத்துக்கொண்டிருப்பதை அறிகிறோம்; அறியும் போது, முன்னேறிவிட்டோம் என்று கூறிக்கொள்ளும் முழு உரிமையை மனிதகுலம் பெறவில்லை என்பது தெளிவாகிறது.

இன்றும், எனக்கு, உனக்கு என்பதற்காகவும், என்னுடையது உன்னுடையது என்பதற்காகவும் அன்றுபோலவே அமளி நடந்தபடி இருக்கிறது! கருவிகள் மாறிவிட்டன, கருத்து மாறிவிட வில்லை, போர் முறைகள் மாறிவிட்டன, போர் உணர்வு மாறவில்லை.

கோபம் கொந்தளிப்பு, தாக்குதல் தப்பித்தல், பாய்வது பதுங்குவது - எல்லாம் அன்று போலவே இருந்திடக் காண்கிறோம்.

மலைமுகடுகளில், அடவிகளில், அருவிக்கரைகளில் அமளிகள் நடைபெற்றன முன்பு; இப்போது நவநாகரிகநகர்களில், மின்னிடும் மாளிகைகளில், அமளி! முன்பு கல்லாலான கருவிகள்! இன்று அணு ஆயுதம்!

அழிக்கும் உணர்வும், அழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் உணர்வும், அந்த உணர்வுகளின் அடிப்படையில் அமைந்துள்ள போராட்டமும், அன்றுபோலவே இன்று இருந்திடக் காண்கிறோம்.

முன்பு, வாழ்நாளில் மிகப் பெரும்பகுதி, போராட்டமாகவே இருந்து வந்தது என்று கூறலாம்; இன்று வாழ்நாளில் ஒரு போராட்டத்துக்கும் மற்றொரு போராட்டத்துக்கும் இடையிலே, "அமைதி நாட்கள்' இருக்கின்றன. இந்த அளவுதான் மனிதகுலம் முன்னேற்றம் காணமுடிந்திருக்கிறது.

அரசு இல்லை ஆகவே அமைதி இல்லை! மார்க்கம் இல்லை ஆகவே ஒழுக்கம் இல்லை! சட்டம் இல்லை ஆகவே சாந்தி இல்லை! அறநூல் இல்லை ஆகவே அறம் இல்லை! அறிவாளர் இல்லை ஆகவே அறிவுத் தெளிவு இல்லை! - அன்று, மாக்களுக்கும் மக்களுக்கும் அதிக அளவு மாறுபாடு இல்லாத காலத்தில்.

இன்றோ! அரசு இருந்தும் அமைதி இல்லை; மார்க்கம் இருந்தும் ஒழுக்கம் இல்லை; அறநெறி காட்டப்படும் அறம் நிலைத்து நிற்கவில்லை; அறிவாளர் முயன்றும் அறிவுத் தெளிவு ஏற்படவில்லை!

ஆனால், எழிலூர்கள் பலப்பல, தொழிலின் ஏற்றம் மிகப்பல! மாடமாளிகை, கண்ணைப் பறிக்கத்தக்க விதமாக! கலை கவர்ச்சி தருவதாக! இவைகளுக்குக் குறைவு இல்லை.

இவைகளைக் காட்டிலும் மிக முக்கியமானது என்று கூறத்தக்கதான விஞ்ஞான அறிவுப்பெருக்கத்துக்கோ ஒரு அளவு இல்லை! மேலே மேலே செல்கிறது மனிதகுலம், விண்ணிலே உள்ள கிரகங்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ்க்கொண்டுவர.

புறத்தோற்றத்தைக் காணும்போது, மனிதகுலம் வெகுதூரம், வேகவேகமாக முன்னேறி, உன்னதமான கட்டத்தில் வந்திருப்பது தெரிகிறது.

அகத்தில் நெளியும் உணர்வுகளையும், அந்த உணர்வுகள் ஆட்டிப் படைத்திடுவதற்கேற்ற வண்ணம் மனிதகுலம் ஆடித் தொலைப்பதையும் பார்க்கும்போது முன்னேற்றம் அடைந்து விட்டோமா என்பதிலேயே பலமானதோர் சந்தேகம் ஏற்படத்தான் செய்யும்.

வாழப் போரிட்டுத் தீரவேண்டியுள்ள நிலையும், வலிவைக் காட்டிப் பகையைத் தீர்த்துக்கட்டும் முறையும், காடு மிகுதியாக இருந்த நாட்களில் இருந்துவந்ததுபோலவே காடு குறைந்து நாடு எழில்பெற்ற நாட்களிலேயும் இருக்கிறது; இதைப் பார்க்கும் போது, மனிதகுலம் பெற்றுவிட்ட முன்னேற்றம், அடிப்படையை மாற்றுவதாக இல்லை என்பது புரிகிறது; கவலை மிகுந்திடுகிறது.

காட்டுக் குணத்தைப் போக்கிக்கொள்வதிலே பெருமைப் படத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்படாத நிலையில், மனித குலத்திடம் விஞ்ஞானம் புதிய புதிய மிகுதியும் வலிவுள்ள கருவிகளை, முறைகளைக் கொடுத்துவிட்டிருக்கிறதே என்பதனை எண்ணி இன்று பெருத்த கவலைக்குள்ளாகிவிட்டுள்ளனர் பேரறிவாளர் பலர். உணர்வுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதிலே மனிதகுலம் வெற்றி பெறாத நிலையில், உணர்வுகளின் அடிப்படையிலே அமைந்துவிடும் நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டுவிடும் விதமாக, இன்றைய விஞ்ஞான அறிவு பல புதிய கண்டுபிடிப்புகளைக் கொடுத்துவிட்டிருப்பது, குருடன் கையில் சிக்கிவிட்ட தீப்பந்தம் போன்ற நிலையை உண்டாக்கி விட்டிருக்கிறது.

இதனை எண்ணும்போதுதான் இன்றைய நிலையில் ஒரு பெரும்போர் மூண்டுவிடுமானால், உலகமே அழிந்துபடும் என்ற அச்சம் எழுகிறது. மனிதகுலம் அழிந்துபடாமல் காப்பாற்றப் படவும், உலகம் மீண்டும் காடாகிடாமல் தடுத்திடவும் வேண்டும் என்ற தூய்மை மிக்க பொறுப்புமிக்க கருத்தினைக் கொண்டவர்கள், உலகப் பெரும்போர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை உருக்கத்துடன் எடுத்துரைத்து வருகின்றனர்.

அநேகமாக எல்லா நாட்டுத் தலைவர்களும் உலகப் பெரும்போர் மூண்டுவிடக்கூடாது என்பதிலே மிகுந்த அக்கறை காட்டிப் பேசி வருகின்றனர்.

ஒரே ஒரு நாட்டின் தலைவர் மட்டுமே, பெரும்போர் மூளட்டுமே! உலகிலே அழிவு நடமிடட்டுமே! அழிந்தது போக, மிகுந்திருப்பதிலிருந்து மீண்டும் ஒரு புதிய வளர்ச்சி துளிர்க்கும் என்று பேசுகிறார். கூசாது இத்தகைய கொடிய கருத்தினைக் கூறிவருவது மக்கள் கொல்லப்பட்டு மலைமலையாகக் குவிக்கப் பட்டாலும் என்ன என்ற விதமான இரக்கமற்ற இயல்பு கொண்டுள்ள சீனத்துத் தலைவன் மாலிசேலிதுங் எனும் வெறியன் மட்டுமே.

மனிதகுலம் மெத்தப் பாடுபட்டு, பலப்பல ஆயிரம் ஆண்டுகளாக நடத்திய பயணத்தின் பலன் அனைத்தையும் ஒரு நொடியில் பாழாக்கி, மறுபடியும் கற்காலத்துக்குச் சென்றிடும் நிலை பிறந்திடும், ஒரு பெரும்போர் மூண்டிடின் என்ற அச்சமும் பொறுப்புணர்ச்சியும், ஓரளவுக்கு, இன்று அரசோச்சுகிறது. இந்த நல்லியல்பையும் நாசமாக்கிடும் விதத்தில், சீனத்துப் போர் வெறியர்களும் அவர்களின் உறவிலே உவகை கொள்ளும் பாகிஸ்தான் தலைவர்களும், நடந்துகொண்டு வருவது, மனித குலத்துக்கே இழைக்கப்படும் மாபெருந் துரோகமாகும்.

இருப்பது போதாது மேலும் வேண்டும் என்ற நினைப்பும், நமக்கு மட்டுமே இருக்க வேண்டும், அதனைப் பெற எம்முறையையும் மேற்கொள்ளலாம் என்ற துணிவும், காட்டிலும் சரி நாட்டிலும் சரி, கொடிய செயல்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது.