பாஞ்சாலத்தில், இராஜஸ்தானத்தில், கேரளாவில், பீகாரில்,
மைசூரில் - எங்கும் ஊழல் மயம்
கடுங்கோபம் காமராஜருக்கு வருவதற்குக் காரணம், களத்தில்
நிற்பவர் நாம் என்பதே
நந்தாவின் கைவிளக்கு சதாசர் சமிதி சந்தானம்
கமிட்டியின் கருத்துக்கள்
பிரதம நீதிபதி மகாஜன் காங்கிரஸ் கட்சிக்குக் கூறியுள்ள
புத்திமதிகள்
தம்பி!
காணீர் கண்குளிர காந்திமகான் சீடர் இவர்!
தியாகத் தீயினிலே குளித்தெழுந்து வந்திட்டார்!
தொண்டு செய்வதன்றிக் கொண்டவிரதம் வேறில்லை
பண்டிருந்த பாரதத்தைக் கண்டிடவே உழைக்கின்றார்!
காட்சிக்கு எளியரிவர் கடுஞ்சொல்தனை அறியார்!
ஏழை எளியோர்க்கு ஏற்றமது அளித்திடுவார்!
உழைப்பதற்கே உருவெடுத்தார் ஊதியம் பெறுதற்கல்ல!
தொடமாட்டார் பொன்பொருளைக் கொளமாட்டார் மனமாசு!
பாடுபடும் ஏழைதுயர் பார்த்துப் பதறுகிறார்!
மாடுமனை மக்கள் பெற்று மகிழவழி கண்டிடுவார்!
பாலையெலாம் சோலையாகிப் பைங்கிளிகள் பாடிடவே
செந்நெல் மணிக்குவியல் சேர்த்திடுவார் நாட்டினுக்கு!
உழைப்பை உறிஞ்சிவரும் உலுத்தரை ஒழித்திடுவார்!
மாளிகையின் சீற்றம்கண்டு மன்னர் அஞ்சிடமாட்டார்!
எப்பாடுபட்டேனும் இங்கு இல்லாமை போக்கிடுவேன்!
இதற்கன்றோ இன்னல்பல ஏற்றோம் பல ஆண்டு!
நாட்டினை வாழவைக்க நல் உறுதி கொண்டுவிட்டோம்!
வீட்டை மறந்துவிட்டோம்; பாட்டை வகுத்துவிட்டோம்!
நாட்டினுக்கு நற்செய்தி நவின்றதுடன் நில்லாமல்
நாளும் உழைக்கின்றார் நாம்வாழ, ஆளவந்தார்!
பாசுரம் இதுபோலப் பலப்பல
பாடி, பல்லாண்டு கூறி, வரவேற்றனர் மக்கள் காங்கிரஸ் அமைச்சர்களை,
விடுதலை விழா முடித்து அவர்கள் நாடாளத் தொடங்கியதும் தன்னலம்
இந்தத் தியாகிகட்கு இருக்க முடியாது; மகாத்மாவின் ஒளியிலே
இருந்து இருந்து இவர்கள், எவர்க்கும் எழக்கூடிய சுயநலத்தைச்
சுட்டெரித்துவிட்டார்கள்; பரங்கி மூட்டிய அடக்குமுறைத்
தீயிலே வீழ்ந்து வீழ்ந்து இவர்கள் புடம்போட்ட தங்கமாகி
விட்டனர்; இவர்கள் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து கோலாகல
வாழ்கை நடாத்தி வந்த குட்டிக் கோமான்களின் வழிவழி வந்தவரல்ல;
குண்டுக்கும் தடியடிக்கும், சிறைக்கும் கொடுமைக்கும் தம்மைத்தாமே
ப-யிட்டுக்கொள்ளத் துணிந்த தூயவர்கள்; ஏழையுடன் ஏழையாய்
இருந்து வந்தவர்கள்; ஏரடிக்கும் சிறுகோ-ன் மதிப்பை அறிந்தவர்கள்;
பசியும் பட்டினியும் கண்டவர்கள்; கோடி கோடியாகக் கொட்டிக்
காட்டினாலும் நேர் வழியினின்றும் இம்மியும் வழுவமாட்டார்கள்;
இவர்களின் கரத்திலே ஆட்சிப்பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருக்கிறது.
எனவே, ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே!! என்று கொண்டாடினார்கள்.
மாளிகைகளிலே மந்தகாச வாழ்வு
நடாத்திக்கொண்டு, மக்களின் குரலுக்குச் செவிகொடுக்காமல்
மதோன்மத்தர்களாக இருந்துகொண்டு, தன் செல்வத்தைப் பெருக்கிக்கொள்ளவே
அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அண்ணன் தம்பிகளும்,
மாமன், மைத்துனரும், அடிவருடி நிற்போரும் ஆனந்த வாழ்வு
பெற வழி அமைத்துக் கொடுத்துவிட்டு, இலஞ்ச இலாவணத்தில்
புரண்டுகொண்டு, ஊழலாட்சி நடாத்திக் கொண்டு வந்தனரே, உலுத்தர்கள்,
அவர்கள் அல்ல இப்போது ஊராள வந்திருப்பவர்கள்; இவர்கள்
உத்தமர்கள், சத்திய சந்தர்கள் ஊர்வாழத் தாம் உழைக்கும்
உயர்ந்தோர் என்றெல்லாம் பேசினர்; போற்றினர்; அஞ்சலி செய்து
அகமிக மகிழ்ந்தனர்.
காங்கிரஸ் அமைச்சர்கள் தவறு
செய்யக்கூடியவர்களாக இருக்க முடியும் என்று எண்ணுவதே இழுக்கு;
பாபம்; தேசபக்தியின் தூய்மையை உணர்ந்திட முடியாத உன்மத்தர்களின்
போக்கு என்றெல்லாம் இடித்துரைத்தனர், ஆழ்ந்த நம்பிக்கையின்
காரணமாக! ஆளவந்தார்களும், அடக்க ஒடுக்கம் காட்டினர், அன்பு
சொட்டப் பேசினர், மக்களுடன் பழகினர், அவர் மனக் குறையாதென
உசாவினர், தன்னலமற்ற தொண்டாற்ற முனைந்தனர், தழைத்திடும்
அறம் இனி, செழித்திடும் மக்கள் வாழ்வு, கொழித்திடும் செல்வம்
எங்கும் என்று பலரும் கருதினர்; அந்தி வானத்தின் செந்நிறம்
சொக்க வைத்திடுவது போன்றதோர் நிலை இருந்தது; பிறகோ? இருள்!
காரிருள்! இருளைத் துணைக்கொண்டவர் செய்திடும் செயல் பலப்
பல!!
தெரியும்! தெரியும் தேச
பக்தன் வேடமிட்டு நீர் நடாத்தும் தில்லு முல்லுகள்!!
தன்னலமற்ற தியாகியோ! யாரறியார்
நீவிர் அடித்த கொள்ளையை!
குவித்த பணத்தின் அளவை!!
ஊழல்! இலஞ்சம்! ஓரவஞ்சனை! பழிவாங்குதல்!
இவை உமது முறை!
கள்ளமார்க்கெட் நடத்துவோர்
உமக்கு நண்பர்கள்!
வீடு கட்டிக்கொண்டீர் மாளிகைபோல!
விலைக்கு எடுத்துக்கொண்டீர்
சர்க்கார் உடைமையை மலிவாக!
உற்றார் உறவினருக்கு வழிகாட்டிவிட்டீர்,
கொள்ளை அடிக்க.
தெரியும்! தெரியும்! உம்
தில்லுமுல்லுகள்!
இவ்விதம், கொதித்தெழுந்து
பேசுகிறார்கள் இன்று காங்கிரஸ் அமைச்சர்களைப்பற்றி, பல்வேறு
இடங்களில், பலப்பலர். வெட்டவெளிக் கூட்டங்களில் மட்டும்
அல்ல; சட்டமன்றங்களில்!!
காங்கிரஸ் அமைச்சர்களையா
இப்படி ஏசுகிறீர்கள்? என்று கேட்பவர்களுக்கு, இடித்துரைப்பார்
பதிலளிக்கிறார்கள்; காங்கிரசால் அமைச்சரானவர்களைக் கண்டிக்கிறோம்,
நாட்டு மக்கள் சார்பில்; நல்லாட்சி வேண்டும் என்பதற்காக;
வீட்டு நெருப்பு என்பதற்காக அதில் வீழ்ந்து புரண்டிடுவார்
உண்டோ? என்று கேட்கின்றனர்.
ஆதாரமற்ற புகார்கள். அரசியல்
எதிரிகளின் அங்கலாய்ப்பு
விஷமிகள் கட்டிவிடும்
வீண் புரளி
வேற்று நாட்டானிடம்
நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகிகளின் தூற்றல் பேச்சு.
இவ்விதமாக, பெருந்தலைவர்கள்,
கண்டனத்திற்கு இலக்கான காங்கிரஸ் அமைச்சர்கள் சார்பிலே
வாதாடினர்; திரையிட்டுப் பார்த்தனர்; பூசிமெழுகிப் பார்த்தனர்;
பலன் இல்லை; கண்டனக் கணைகள் சரமாரியாகக் கிளம்பின, துளைத்தன;
புனுகுபூசினர் புண்ணின் நாற்றம் போகவில்லை; புரையோடிப்போன
பிறகு, கெய்ரான் இருப்பதை ஒப்புக் கொள்கிறார்கள்; எங்கோ
ஓரிடத்தில் எம்மையும் அறியாமல், முளைத்துவிட்டிருந்த களை
இது; கழனி முழுதும் அதுவே என்று எண்ணாதீர்கள், மற்ற இடங்களிலே
உள்ளவை, கரும்பு, செந்நெல், கனிவகை, மணி என்று பேசி, ஆத்திரமே-ட்டு
எழும் மக்களைச் சமாதானப் படுத்திட முயலுகின்றனர்.
இன்னமும், கெய்ரான் காங்கிரஸ்காரரே!
இதனை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை;
இப்படிப்பட்டவர் இவர் என்று உயர்நீதி மன்றத்து முதல்வரொருவர்
அறுதியிட்டுக் கூறியான பிறகும்,
கெய்ரான் காங்கிரஸ் கட்சியில்தான்
இருக்கிறார்.
கெய்ரான் திரட்டிய பெருநிதி
அவரிடமேதான் இருக்கிறது.
கெய்ரானின் ஆதரவாளர் காங்கிரசில்தான்
உள்ளனர்.
கெய்ரானின் ஆதரவாளர் சட்டமன்றத்திலும்
உள்ளனர்.
என்னென்ன காரணம் காட்டினாலும்,
எத்தனை சமாதானம் சொன்னாலும், எவரெவரைச் சான்றளிக்க வைத்தாலும்,
குற்றம் குற்றமே என்று தாஸ் அவர்கள் துணிந்து, நேர்மையுடன்
தீர்ப்பளித்துவிட்டார்கள்.
இதற்குப் பிறகு, கெய்ரான்
முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறினாரே தவிர, காங்கிரசை
விட்டு அல்ல, பொது வாழ்க்கையை விட்டும் அல்ல. அவர் இப்போதும்
பாஞ்சாலத்துக் காங்கிரசில், குறிப்பிடத்தக்க பெரிய புள்ளி!
அவர் மட்டும் அல்ல, அவர்
எந்தத் தவறும் செய்தவரல்ல, அவர்மீது கூறப்படுவன யாவும்
வீணான பழி, அரசியல் பகைவர்களின் கோள் என்றெல்லாம் தாஸ்
அவர்களிடம் சாட்சி சொன்னவர்களிலே பலர் சட்டமன்ற உறுப்பினர்கள்;
அவர்கள் காங்கிரசிலேதான் உள்ளனர்; உயர்தர அதிகாரிகள் பலர்;
அவர்கள் இப்போதும் அதிகாரிகளாகத்தான் இருக்கின்றனர், கெய்ரான்
ஒருவர்தான் விலகினார்; அவருடைய "தர்பாருக்கு'த் துணைநின்றவர்கள்,
ஆட்சியில் பங்குதாரர்கள், பரிந்து பேசியோர், நீதிபதி நேர்மையானது
என்று ஏற்றுக்கொள்ள இயலாத பொய்க் காரணம் பல காட்டி அவரைக்
காப்பாற்றிட முனைந்தோர் அனைவரும், காங்கிரசிலும் இருக்கிறார்கள்,
சர்க்காரிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஊழலும் இலஞ்ச
இலாவணமும் ஒழிக்கப்பட்டு விடுவதற்கான முழு நடவடிக்கையைக்
காங்கிரஸ் அமைப்பு எடுத்துக்கொண்டாகி விட்டது என்றா பொருள்?
நேர்மை உள்ளம் கொண்டவர்கள் எண்ணிப் பார்த்திட வேண்டும்.
தம்பி! கெய்ரான் விஷயமாக
தாஸ் கமிஷன் அறிக்கை வெறிவந்ததே, இது முதலாவது என்றும்
எண்ணிவிடாதே. இதற்கு முன்பு வேறோர் காங்கிரஸ் தலைவரின்
பேரில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணைக் குழு அமைக்கப்பட்டது;
அறிக்கை கொடுத்தார் விவியன் போஸ்; அந்தக் காங்கிரஸ் தலைவர்
பேரில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமுள்ளவை என்பதாக.
என்ன நடந்தது? அந்தக் காங்கிரஸ் தலைவர் அவர் வகித்திருந்த
பதவியினின்றும் விலகிக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்பட்டார்!
ஆனால், காங்கிரசில் இருக்கிறார்; நீக்கப்படவில்லை!
அதற்கும் முன்னால் அடிபட்ட
முந்திரா விவகாரத்தை மறந்துவிட்டிருக்கமாட்டாய். அந்த
ஊழல் குறித்து விசாரணை நடத்தி, அந்த நிகழ்ச்சியிலே டி.
டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு இருந்த தொடர்பு குறித்துக்
கருத்து தெரிவிக்கையில், டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின்
வாதம், பேச்சு, ஒப்புக்கொள்ளத் தக்கதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
என்ன நடந்தது அதன் விளைவாக? டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்,
தாமாகப் பதவி துறந்தார்.
இன்று டி. டி. கிருஷ்ணமாச்சாரியார்
இந்தியாவின் நிதி மந்திரியாகக் கொலுவீற்றிருக்கிறார்.
முந்திரா விவகாரம் பற்றி
விசாரணை நடத்திய சக்ளா இந்தியாவின் கல்வி மந்திரியாக வீற்றிருக்கிறார்.
சக்ளாவை விடப் பெரிய அந்தஸ்து,
அமைச்சர் அவையில் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாருக்கு! என்ன
பாடம் இதிலிருந்து தெரிகிறது என்று நேர்மை பட்டுப்போகாத
பழைய காங்கிரஸ் காரரைப் பார்த்துக் கேள், தம்பி! பெருமூச்சுதான்
பதிலாகக் கிடைக்கும். எம்முடைய ஆட்சியிலாவது ஊழல் நடப்பதாவது!
என்று எக்காளமிட்டு வந்தார்கள். ஒவ்வொன்றாக வெடித்துக்கொண்டு
வெளியே வருகிறது. இதனைக் கண்டுபிடிக்க ஒரு குழுவே அமைக்கப்படவேண்டி
நேரிட்டுவிட்டது.
பாஞ்சாலத்தோடு நின்றுவிடவில்லை,
"பாரத புத்திரர்' என்ற பட்டயம் பெற்றுக்கொண்டு பகற்கொள்ளை
அடிப்பவர்களின் கதை; படலம் படலமாக வெளிவந்தபடி இருக்கிறது!
ஜெய்பூரில், ராஜஸ்தானத்து
முதலமைச்சர் மாகன்லால் சுகாடியா என்பவர்மீது பாய்ந்து,
தனக்கும் தன் உறவினர்களுக்கும்
இலாபம் தேடிக் கொள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தினார் என்று
பலர் பேசியுள்ளனர்.
தாஸ் கமிஷன்போல ஒன்று அமைத்து,
முதலமைச்சர்மீது குறிப்பிடும் குற்றச்சாட்டுகள் பற்றி
விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். சோஷியலிஸ்டு
கட்சியினர் உம்ராவ் சிங் என்பவர்,
உதயபூரில் தவறான முறையில்
முதலமைச்சர் நிலத்தைப் பெற்று, அதில் இரண்டு இலட்ச ரூபாய்க்கு
மேல் பெறுமானமுள்ள வீடு கட்டிக்கொண்டார்,
பாங்கியில், பல இலட்சம்
ரூபாய் சேர்த்து வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டிப்
பேசியிருக்கிறார்.
தவறு! தவறு! இரண்டு இலட்ச
ரூபாய் பெறுமானம் உள்ளது அல்ல. என் வீடு. ஒரு இலட்சம்கூடப்
பொறாது. யாரேனும் ஒரு இலட்ச ரூபாய் கொடுப்பதாக இருந்தால்,
வீட்டையும் நிலத்தையும் தந்துவிட நான் தயார்!
என்று முதலமைச்சர் சுகாடியா
முழக்கமிடுகிறார். அதைக் கேட்டு மற்றவர்கள் வாயடைத்துப்
போய்விடவில்லை.
"சம்மதம்! எல்லா எதிர்க்கட்சியினரின்
சார்பிலும் நான் முதலமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்.
நாங்கள் ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டாகிலும் கடன் வாங்கியாவது,
சுகாடியா கேட்ட ஒரு இலட்சத்துக்குமேல் ஒரு ஆயிரம் ரூபாய்
சேர்த்துத் தருகிறோம். வீட்டை விற்கத் தயாரா?'' என்று
ஒரு உறுப்பினர் கேட்கிறார். சுகாடியா பதில் ஏதும் சொன்னதாகத்
தெரியவில்லை.
இந்த ஆண்டு இத்தனை இலட்சம்
ஏக்கர் தரிசு நிலங்களை விளைநிலமாக்கினோம்,
இந்த ஆண்டு இத்தனை விதமாக
புதிய தொழிற்சாலை களைத் துவக்கி இத்தனை இலட்சம் பேருக்கு
வேலை கொடுத்தோம்,
இந்த ஆண்டு கள்ளமார்க்கெட்
செய்பவர்களைக் கண்டுபிடித்து, அடக்கி, விலைகளை இந்த அளவுக்குக்
குறைந்திடச் செய்திருக்கிறோம்,
இந்த ஆண்டு இத்தனை மருத்துவ
மனைகள் அமைத்து, இன்னின்ன வியாதிகளினால் ஏற்படும் கேடுகளைக்
குறைத்திட முயன்றிருக்கிறோம் என்றெல்லாம் பேசவேண்டிய இடத்திலே,
தம்பி! என்ன பேச்சு நடைபெற்றிருக்கிறது, பார்த்தனையா!!
முதலமைச்சர் அக்கிரம வழியிலே
பணம் திரட்டினார், அரண்மனைபோன்ற வீடு கட்டினார் - என்பது
பேச்சு!! இவர்கள், காங்கிரஸ் அமைச்சர்கள்! இந்த இலட்சணமான
ஆட்சியைக் கண்டு, மார்தட்டிக்கொள்ளவும், மற்ற எந்தக் கட்சியும்
ஆட்சி செய்திடும் ஆற்றல் பெற்றது அல்ல என்று மமதை பேசவும்,
நாக்கு நீளுகிறது பெருந் தலைவர்களுக்கு, மக்களுக்கு எதுவுமே
புரியாது என்று அவர்கள் ஒரு தப்புக்கணக்குப் போடும் காரணத்தால்.
தம்பி! வீடு கட்டிய விந்தையுடன்
முடிந்துவிடவில்லை, ராஜஸ்தானத்து ரசாபாசம்.
கம்யூனிஸ்டு கட்சியினரான
இரண்டு உறுப்பினர்கள்,
பதுக்கல்காரர்கள், திருட்டுச்
சரக்கு விற்பவர்கள், கள்ள மார்க்கட் நடத்துபவர்கள், கொள்ளை
இலாபம் அடிப்பவர்கள். . . இவர்களுக்கு முதலமைச்சர் சுகாடியா,
தாமே முன்னின்று பாதுகாப்பு அளித்து வருகிறார்.
என்று குற்றம் சாட்டினார்கள்.
குல்ஜாரிலால் நந்தா, சாதுக்களைப்
படை திரட்டி, சென்று சேகரிப்பீர் செய்திகளை! என்று அனுப்புகிறாராம்!
ஏன்? இதோ சட்டமன்றத்தில், இரு உறுப்பினர்கள், வெளிப்படையாக,
விளைவுபற்றி அஞ்சாது, வீரத்துடன் பேசியிருக்கிறார்களே,
அவர்களை அழைத்து முழுத் தகவல் தரச் சொல்வதுதானே! அதன்பேரில்
விசாரணை தொடங்குவதுதானே! செயல்பட முனைவதுதானே! செய்தாரா?
செய்வாரா? செய்யமாட்டார்! நந்தா செய்யக்கூடியதெல்லாம்,
அந்த இரண்டு கம்யூனிஸ்டு உறுப்பினர்களை, இவர்கள் பாதுகாப்புக்கு
ஆபத்தை மூட்டுகிறார்கள் என்று கூறி, சிறையில் போட்டடைப்பதுதான்.
சுகாடியா சிரித்தபடி, நம் சுகானுபவத்தைக் கெடுத்திடத்
துணிந்தவர்கள் தொலைவார்கள் என்றெண்ணி உதயபுரி மாளிகையில்
உல்லாசமாக இருந்திடுவார்.
தம்பி! கெய்ரான், சுகாடியா
போன்ற, குற்றச்சாட்டுக்கு இலக்காகி உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள்
ஆள முற்பட்டபோது, அவர்களை வாழ்த்தவில்லையா, வரவேற்கவில்லையா,
அவர்கள் நாட்டுப்பற்று, தன்னல மறுப்பு, அறிவாற்றல், பண்பு
ஆகியவை பற்றிப் பல படப் பேசவில்லையா, காங்கிரசை நடத்திடும்
கர்த்தாக்கள். நிரம்பப் பேசினார்கள்! இன்று! சட்டசபையில்
சரமாரியாகக் கிடைக்கிறது சவுக்கடி!!
ஒரு துளி ஐயப்பாடு கிளம்பினாலும்,
விழித்தெழுந்து, விசாரணை நடத்தி, தவறு இருந்தால் கண்டறிந்து,
கேடு களைந்து, கேட்டினுக்குக் காரணமாக இருந்தவர்களைப்
பதவியில் இருந்து மட்டுமல்லாமல், கட்சியிலிருந்தே நீக்கிவிடவேண்டியது
முறையாக இருக்க, மூலைக்கு மூலை பேசப்பட்டு, நாறி, அழுகி,
தானாக நாற்றமடிக்கிற வரையில், குற்றத்தைக் கண்டுபிடிக்கும்
வேலை, களை எடுக்கும் வேலை நடைபெறுகிறதா! கிடையாது!! மாறாக,
"கபர்தார்' குற்றம் கூறாதே! உன் குலையை அறுத்தெடுத்து
மாலையாக்கிக்கொள்வேன் என்று கூரைமீதேறிக் கூவுகின்றனர்.
இந்த மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல்,
துணிந்து நின்று, குற்றம் குற்றமே என்று கூறத்தக்கவர்கள்
எத்தனை பேர் கிடைக்க முடியும்? மிகச் சொற்பம்.
கேரளத்து முதலமைச்சர் சங்கர்மீது
குற்றச்சாட்டுகளைத் தொகுத்தெடுத்துக்கொண்டு, காங்கிரஸ்
தலைவர்கள் டில்லிக்குச் சென்றனர் என்றோர் செய்தி சென்ற
கிழமை வெளிவந்தது.
கேரளத்துக்கு எத்தனை முறை
எத்தனை பெரிய பெரிய காங்கிரஸ் தலைவர்கள் சென்று வந்தனர்
- சேதி அறிய - பிளவு போக்க - அமைதி காக்க - ஒன்றுபடுத்த
- ஒழுங்குபடுத்த!! தொட்டால் பட்டமரம் துளிர்க்குமாமே அந்தக்
காமராஜரும் போய்வந்தார்; இன்றைய "பாரதப் பிரதமர்' லால்பகதூர்
சென்று வந்தார், கண்டு வந்தார், நிலைமை சரியாகிவிடும்
என்று செப்பிவிட்டு வந்தார்; மொரார்ஜி தேசாய் போய்வந்தார்;
காங்கிரசின் ஒரு செயலாளர் சாதிக் அ- என்பார் போய்விட்டு
வந்து, "வெளியே சொன்னால் வெட்கக்கேடு; அப்படி இருக்கிறது
கேரளத்தில் காங்கிரஸ் நிலைமை'' என்று தெரிவித்தார். இப்போது
பட்டியலே தயாரித்துக்கொண்டு, டில்லிப் பட்டணமே சென்று,
முதலமைச்சர் சங்கர்மீது இன்னின்ன குற்றச்சாட்டுகள் உள்ளன
என்று கூறுகிறார்கள். மாலை வேளையில் மேடை ஏறியதும் எத்தனை
பெரிய முழக்கம், இந்த நாட்டை ஆள நாங்களன்றி வேறு யார்?
எவருக்கு உளது அந்த யோக்கியதை? என்று!! நாறுகிறது, நாட்டிலே
பல பகுதிகளில்; நாக்கு மட்டும் நீளுகிறது, நம்மைவிட்டால்
வேறு நாதி இல்லை இந்த மக்களுக்கு என்ற போக்கில்.
ஒன்றன்பின் ஒன்றாக இத்தனை
ஊழல்கள் வெளி வருகின்றன என்பதைக் காட்ட மட்டும் அல்ல,
தம்பி! மக்களிடம் எவர் எவர்களைப் பற்றி இந்திரன் என்றும்,
சந்திரன் என்றும், காங்கிரஸ் தலைவர்களால் புகழ்பாடி வைக்கப்படுகிறதோ,
அவர்களெல்லாம். என்ன கதியாகிறார்கள், அவர்களைப்பற்றிய
முழு உண்மை ஆராய்ந்து அறியப்படும்போது என்னென்ன விஷயங்கள்
வெட்ட வெளிச்சமாகின்றன, அவைகள் எத்துணை மோசமானவைகளாக இருக்கின்றன
என்பதையும் விளக்கிடத் தான் கூறுகிறேன். மாசிலாமணிகள்
நாங்கள் என்று மார்தட்டிப் பேசுகிறார்களே, காங்கிரஸ் ஆட்சியாளர்கள்பற்றி.
இந்த மணிகள் எத்தனை மோசம் என்பது விளக்கப்பட்டுக்கொண்டு
வருகிறது.