எதிர்க்கட்சிகளே வேண்டாம் என்று பேசுகிறாரே காமராஜர்,
சிலரை அழைத்துக்கொண்டும், சிலரை இழுத்துக் கொண்டும், சிலரை
ஒழித்துவிடத் திட்டமிட்டுக்கொண்டும் வருகிறாரே, காரணம்
புரிகிறதா?
எதிர்க்கட்சிகள் மும்முரமாகப்
பணியாற்றி வந்தால் காங்கிரசிலுள்ள கெய்ரான்கள், சுகாடியாக்கள்,
சங்கர்கள் ஆகியோர் பற்றி எவரேனும் எப்போதேனும் ஏதேனும்
விஷயத்தை அம்பலப்படுத்திவிடுவார்கள்; பொதுமக்கள் ஆத்திரம்
கொள்வார்கள்; பொதுத்தேர்தலில் விரட்டி அடிப்பார்கள் என்ற
கிலி!
தம்பி! பீகாரில் இதுபோலவே
புகார்! மைசூரில், நிஜலிங்கப்பாமீது குற்றச்சாட்டு. இந்த
நிலையில் காங்கிரசாட்சி இருக்கும்போது, கண்டபடி பேசிக்கொண்டிருப்பதும்,
எதிர்க் கட்சிகளைக் கேவலமாக ஏசுவதும், சரியா, முறையா?
என்பதை நடுநிலையாளர் எண்ணிப் பார்த்திட வேண்டும். பொதுமக்களிடம்
இத்தனைப் பெரிய அளவிலும், இவ்வளவு நெருக்கமான முறையிலும்
திராவிட முன்னேற்றக் கழகம் நேசத் தொடர்பு வைத்துக்கொண்டிருப்பதன்
காரணமாக, இங்கு ஆளவந்தார்கள் வெகு விழிப்புடன் இருக்கவேண்டி
வருகிறது. துளி சந்தேகம் எழுந்தாலும், விடமாட்டார்கள்
கழகத்தார்! ஒரு நடவடிக்கையி லேனும் அழுக்குத் தெரியுமானால்
அம்பலப்படுத்திவிடுவார்கள்! மிக விழிப்பாக இருக்க வேண்டும்;
அப்பழுக்கற்ற முறையில் நடந்தாக வேண்டும்; இல்லையென்றால்
துளைத்தெடுத்து விடுவார்கள் என்ற அச்ச உணர்ச்சி, இங்குள்ள
காங்கிரஸ் ஆளவந்தார்களுக்கு நிரம்ப இருக்கிறது. இதனை நான்
கூறுவதற்குக் காரணம் நமக்கு நாமே பெருமிதம் காட்டிக் கொள்ள
வேண்டும் என்பதற்காக அல்ல, ஜனநாயகத்தில், ஒரு ஆட்சி நேர்மையாக
இருக்கவேண்டுமானால், ஆட்சியில் உள்ளவர்கள், நாம் எதைச்
செய்தால் எதிர்க்கட்சியினர் எந்த விதமாக நம்மை எதிர்த்துத்
தொலைத்துவிட முனைவார்களோ என்ற அச்சம் கொண்ட நிலையில் இருந்தாக
வேண்டும். அந்த நிலையற்றுப் போகுமானால் பிறகு ஆளவந்தார்கள்
சொல்வ தெல்லாம் சட்டம்தான், காட்டுவதெல்லாம் வழிதான்!
மாற, மீற மக்கள் முயன்றாலும் முடியாது எனவே தம்பி! ஜனநாயகம்
வெற்றிபெற, விழிப்புடனும் விறுவிறுப்புடனும் பணியாற்றத்தக்க
அளவும் ஆற்றலும், நிலையும் பெற்ற ஒரு எதிர்க்கட்சி இருந்தாக
வேண்டும். அந்த நிலை, திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றிருக்கிறது.
ஓங்கி வளர்ந்ததெல்லாம் ஒடிந்து வீழ்ந்து விட்டன; ஓங்காரக்
கூச்சலிட்டதுகள், ஒய்யாரக் கொண்டைக்குப் பூவுமுண்டு, ஒயிலாளின்
காலுக்குத் தண்டை உண்டு என்று பாடிக்கொண்டு பாங்கி வேலை
பார்க்கச் சென்றுவிட்டன, களத்தில் நிற்பவர் நாம் . . .
கடுங்கோபம் காமராஜருக்கு வருவதற்குக் காரணம் அதுவே.
பெரிய இடத்திலே மட்டுமன்றி,
எல்லா மட்டங்களிலும் இலஞ்ச இலாவணம் - ஊழல் - நெளிகிறது
என்ற பேச்சு எழுந்த போது கோபம் கொப்பளித்தது காங்கிரசின்
கர்த்தாக்களுக்கு, மறுத்தனர், மிரட்டினர், மழுப்பினர்,
இறுதியாக ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுத்தாலொழிய, பொதுமக்கள்
மனத்திலே மூண்டுவிட்டுள்ள அருவருப்பை நீக்க முடியாது என்ற
முடிவுக்கு வந்தனர். இந்தச் சமயத்தில், வேறோர் காலமாக
இருப்பின் முனிபுங்கவர் ஆகியிருப்பார் என்று பலர் கருதத்தக்க
முறையிலே பேசியும் உபதேசம் செய்துகொண்டும் உள்ள உள்துறை
அமைச்சர் நந்தா புறப்பட்டார். இந்தியா முழுவதும் உள்ள
போலீஸ் படை அவருடய கட்டளைக்குக் காத்துக் கிடக்கிறது.
பரவலாக நாடெங்கும் அமைந்துள்ள காங்கிரஸ் கமிட்டிகள் உள்ளன.
ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருக்கிறார், கட்சிகள் வேண்டாம்
கிராம அரசுகள் போதும் என்று கூறிக்கொண்டு; அவருடைய ஆதரவாளர்கள்
அணியும் ஒன்று இருக்கிறது வினோபா இருக்கிறார், அவருடைய
சர்வோதய இயக்கம் இருக்கிறது. இத்தனை அமைப்புகளும் நந்தாவுக்குப்
போதுமானதாக, ஆற்றல் கொண்டவையாகத் தோன்றவில்லை; என்ன காரணத்தினாலோ
இந்த அமைப்புக்கள், இலஞ்ச ஒழிப்பு வேலையைச் செய்திட முடியும்
என்ற நம்பிக்கை அவருக்கு ஏற்படவில்லை. அத்தகைய நம்பிக்கையே
இல்லாமல் அவர் எதற்காகப் போலீஸ் படையை நடாத்திச் செல்லும்
பொறுப்பில் இருக்கிறார் என்பதும் புரியவில்லை. ஒளிமிகு
மின்சார விளக்கு கைவசம் இருக்க, அதைக் கொண்டு செல்லாமல்
மின்மினி களைப் பிடித்துக் கரத்தில் வைத்துக்கொண்டு அவை
விட்டு விட்டுச் சிந்தும் ஒளியின் துணைகொண்டு இருட்டறையில்
கருப்புப் பணத்தைத் தேடுகிறார் - கனம். நந்தா!!
இதற்காக அவர் சாதுக்களைக்
கூட்டிவைத்துப் பேசினார்.
சதாசர் சமிதி என்றோர் அமைப்பை
நிறுவி, குற்றம் குறைகூற விரும்புவோர், வருக! என்று அழைத்தார்.
இரண்டே ஆண்டுகளில் இலஞ்சப்
பேயை விரட்டுவேன், இல்லையேல் நான் பதவியை விட்டு விலகிப்போவேன்
என்று நந்தா சபதம் எடுத்துக்கொண்டார். ஆகவே, இரண்டு ஆண்டு
களுக்குள் இலஞ்சத்தை ஒழித்ததாகக் காட்டியாக வேண்டும்.
ஒரு புதிய அமைப்பு மூலம் இந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினால்,
அந்த அமைப்பும் அவருடைய ஆதீனத்துக்குக் கட்டுப்பட்டதாக
இருந்தால், இரண்டாம் ஆண்டு முடிகிற நேரமாகப் பார்த்து,
இலஞ்சம் வெகுவாகக் குறைந்துவிட்டது,
கொடுப் பவர்களுக்கும் குலைநடுக்கம் கண்டுவிட்டது; வாங்குபவர்
களுக்கும் கிலி பிடித்துவிட்டது.
எடுத்த சபதத்தை நந்தா நிறைவேற்றி
விட்டார்! இலஞ்சப் பேய் ஒழிந்துவிட்டது
என்பதாக நாட்டுக்கு அறிவித்துவிட
வழி இருக்கிறது. இதற்காகவே நந்தா திட்டமிட்டு இவ்விதம்
செய்தார் என்று நான் கூறவில்லை. இவ்விதம் எண்ண இடமளிக்கிறது
அவருடைய வேலை முறை என்று கூறுகிறேன்.
வங்கக் காங்கிரஸ் தலைவர்
அட்டுல்யாகோஷுக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை.
வேறு பல காங்கிரஸ்காரர்களுக்கும்
இது பிடிக்கவில்லை.
வெளிப்படையாகவே இவர்கள்
பேசினர்; வெகுண் டெழுந்தார் நந்தா; சமிதியைக் குறைகூறுகிறவர்களைக்
கண்டிக்கலானார். வங்கத் தலைவர் வாளாயிருக்கவில்லை; காங்கிரஸ்
செயற்குழுக் கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்க வேண்டுமென்று
கேட்கிறார். நந்தா கூறுகிறார், நானாக இந்தச் சமிதியை ஆரம்பிக்கவில்லை,
காங்கிரஸ் தலைவர் காமராஜரின் சம்மதம் பெற்றுத்தான் ஆரம்பித்தேன்
என்று.
காமராஜரோ, சமிதிபற்றி எதுவுமே
பேசத் தேவை இல்லை செயற்குழுவில் என்று கூறிவிட்டார்.
சதாசர் சமிதி அல்லது குழு
இலஞ்சப் பிரச்சினையை, மிக எளிதாக, மிக விரைவாக, கடினமான
எந்த முறைகளுமின்றியே தீர்த்துவிட முடியும் என்று நம்பிடும்
பரிதாபத்தை "இந்து' பத்திரிகை எடுத்துக்காட்டியிருக்கிறது.
நாற்பத்து ஐந்தே நாட்களில்
"சதாசர்' தன்னிடம் கொடுக்கப் பட்ட புகார்களைத் தொகுத்து,
தரம் பிரித்து, பரிசீ-த்து, முடிவுகள் எடுத்து கருத்தையும்
கூறிவிட்டது! அந்தக் கருத்து என்னவென்றால், புகார்களின்
எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது; புகார்களில் பெரும்பாலானவை
ஆதாரமற்றவை என்பதாகும். இதன்படி பார்த்தால், இலஞ்சம் தாண்டவ
மாடுவதாகச் சொல்வது தவறு என்று ஏற்படும்.
"இந்து' இதழ் இந்த முறையையும்
விரும்பவில்லை. இந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளவில்லை. பொருத்தமான
காரணங்களையும் "இந்து' காட்டியிருக்கிறது.
சர்க்காரால் அமைக்கப்பட்ட
சந்தானம் கமிட்டி, முறைப்படி, ஆராய்ந்து பார்த்து, நிர்வாகத்
துறையில் மேல் மட்டத்திலிருந்து அடி மட்டங்கள் வரையில்
இலஞ்ச ஊழல் இருக்கிறது என்று
கூறி இருக்கிறது.
மத்திய சர்க்கார் அமைத்த
தனிப் போலீஸ் பிரிவு 1963-ம் ஆண்டு 4,857 புகார்களைப்
பெற்றுப் பரிசீ-க்கவேண்டி வந்தது. 1957லில் 2,733 புகார்கள்!
1963லில் 4,857 என்று வளர்ந்து காட்டுகிறது.
புகார்களில் அற்பமானவை,
ஆதாரமற்றவை என்று தள்ளிவிடத் தக்கவைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
இந்தக் காரணங்களைக் காட்டி
"இந்து' நந்தாவின் கைவிளக்கு பயனில்லை என்பதை விளக்குகிறது.
எத்தனை சமாதானம் கூறினாலும்,
காங்கிரஸ் ஆட்சியில் ஊழலும் இலஞ்சமும் வளர்ந்துவிட்டிருக்கிறது
என்பதை மறைக்க முடியாது - மறுக்க முடியாது - பெரியவர்கள்
மழுப்பிக் கொண்டிருக்கலாம்.
நிர்வாகத்திலே நெளியும்
ஊழலும் இலஞ்சமும் இந்த விதம் இருக்கிறது - கருப்பஞ்சாறு
பருகாதே போதை ஏறும், நிலை தடுமாறும் என்று "காச்சினது'
குடித்துவிட்டுப் பேசுவது என்பார்களே அதுபோல, இத்தனை ஊழலை
வைத்துக் கொண்டே பெரிய தலைவர்கள் பேசுகிறார்கள், நாட்டை
ஆளும் யோக்யதை எமக்கன்றி வேறு எவருக்கும் இல்லை என்று.
.இலஞ்ச ஊழலை ஒழிக்கவேண்டுமல்லவா?
துணிந்து நான் கூறுவதைச்
செய்வீர்களா?
முதலில், காங்கிரசின் மேல்
மட்டத்தைத் துப்புரவாக்குங்கள். முடியுமா? துணிந்து செய்வீர்களா?
நன்கொடை, இனாம் என்ற எந்தப்
பெயராலும் தொழிலதிபர்கள், வணிகர்கள், முதலாளிகள், தொழிற்சாலை
நடத்துபவர், சர்க்கரை வியாபாரிகள், டாட்டாக்கள், பிர்லாக்கள்,
சிங்கேனியாக்கள் போன்றாரிடம் தேர்தல் நிதி வசூ-க்க மாட்டோம்
என்று ஆளுங்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட வேண்டும்.
இப்படிப்பட்டவர்களிடம் இருந்து
வாங்கப்படும் பணம் பிரம்மாண்டமான அளவுள்ளது.
இந்தப் பணம் அமைச்சர்களையும்
காங்கிரஸ் அரசியல்வாதிகளையும் "ஒμ' படுத்தவும், வியாபார
சம்பந்தமாக எந்தவிதக் குறுக்கீடுகள் செய்யாமல் இருப்பதற்காகவும்
தரப்படுகிறது.
இந்தப் பணம், தாங்களே மனமுவந்து,
தர்ம நியாயத்துக்காகவோ, தேச பக்தி காரணமாகவோ தரப்படுகிறது
என்று ஒருவரும் நம்புவதில்லை. இந்தப் பணம் ஒருவிதமான இலஞ்சம்தான்.
பர்மிட், லைசென்சு, கோட்டா
பெறுவதற்காகத் தரப்படுகிறது.
ஆளுங்கட்சி துணிந்து தன்மீது
உள்ள இந்தக் கறையைத் துடைத்துக்கொள்ளட்டும். பிறகு நாட்டிலே
ஒரு பரிசுத்தம் ஏற்படும்.
நன்கொடை திரட்டுவதை நிறுத்துவதோடு,
காங்கிரஸ் தலைவர்களுக்கு, ஆயிரக்கணக்கில், இலட்சக் கணக்கான
ரூபாய் நோட்டுகளை மாலையாகக் கட்டிப் போடுகிறார்களே, அதை
நிறுத்திவிட வேண்டும்.
இப்படி "நோட்டு மாலை' போடுபவர்கள்,
பஸ் முதலாளிகள் அல்லது மற்ற முதலாளிகள். எதற்காகப் போடுகிறார்கள்?
இந்தப் பொதுஜனத் தலைவர்களிடம் கொண்ட அன்பினால் அல்ல! ஏற்கெனவே
பெற்ற சலுகைக்காக அல்லது இனிச் சலுகை பெறவேண்டும் என்பதற்காகப்
போடுகிறார்கள்.
க்ஷேமநல சர்க்காரில், மந்திரிகளிடம்,
சலுகைகள் காட்டுவதற்கான அதிகாரம் மிகப் பெரிய அளவில் இருக்கிறது.
இலஞ்ச ஊழலுக்கு ஆணிவேர் இதிலே தான் இருக்கிறது.
வணிகர்களுக்கு, தொழிலதிபர்களுக்கு,
ஏற்றுமதியாளர் இறக்குமதியாளர்களுக்குத் தேவைப்படும் லைசென்சு,
பெர்மிட், கோட்டா ஆகியவைகள் வழங்கும் அதிகாரத்தை மந்திரிகளிடமிருந்து
எடுத்துவிட வேண்டும்! அந்த அதிகாரத்தை அரசியல் கட்சிகளைச்
சேராத, சுயேச்சையாக உள்ளவர்கள், தொழில் நிபுணர்கள் ஆகியோர்
கொண்ட ஒரு குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அத்தகைய
குழுவில் எந்த மந்திரியும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
அமைச்சர்களும் அதிகாரிகளும்,
இலஞ்ச ஊழலில் ஈடுபட்டிருப்பவர்கள், சமூக விரோதிகளாகிய
கெட்ட பெயரெடுத்தவர்களுடன் குலவக்கூடாது; அவர்கள் நடத்தும்
விருந்துகளில் கலந்துகொள்ளக்கூடாது.
காண்ட்ராக்டர்கள், பெரிய
வியாபாரிகள், பெரும் பணம் படைத்தவர்கள், பெரிய மோட்டார்கள்
உடையவர்கள் இவர்கள் நடத்தும் பான விருந்து விழாக்கள்,
விருந்துகள் ஆகியவற்றில் கலந்துகொள்ளாமல் தம்மைத் தாமே
தடுத்துக்கொள்வது கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால், அப்படிப்பட்டவர்கள்
ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் பகிஷ்கரிப்பது
சமூகத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி வைக்கும்.
சர்க்கார் மாளிகை விழாக்களில்
இப்போது நடப்பதுபோல கண்டவர்களை அழைக்கக்கூடாது; இப்படிப்பட்டவர்களை
அத்தகைய விழாக்களுக்கு அழைக்கக்கூடாது.
என்ன அண்ணா இது! ஒரே அடியாகக்
காங்கிரஸ் மந்திரிகளை, எந்த அதிகாரம் அவர்களுக்கு ஜொலிப்பையும்
- மிதமிஞ்சிய மதிப்பையும் தருகிறதோ அதை விட்டுவிடச் சொல்லுகிறாயே!
எந்த முதலாளிகளின் நன்கொடை கொண்டு தேர்தலில் வெற்றி பெறுகிறார்களோ
அந்தப் பணத்துக்கும் உலை வைக்கிறாயே! இது நடக்கக்கூடிய
காரியமா? உன் பேச்சைக் கேட்பார்களா? என்றுதானே தம்பி!
கேட்கிறாய்? தம்பி! அவ்வளவு பெரியவர்கள் இப்படி இப்படி
நடந்தாக வேண்டும் என்று என்னால் சொல்ல முடியுமா! ஏழை சொல்
அம்பலம் ஏறுமா!! எனக்கும் புரிகிறது உனக்கும் தெரிகிறது,
காங்கிரஸ் அரசியல் - தேர்தல் காரியம் - எப்படி நடத்தப்பட்டு
வருகிறது என்று. ஆனால், முதலாளிகளிடம் பணம் வாங்காதே!
பெர்மிட் கோட்டா லைசென்சு வழங்கும் அதிகாரத்தை விட்டுவிடு!
என்று சொன்னால், கேட்பார்களா!! நான் அல்ல தம்பி! இத்தகைய
யோசனைகளைத் துணிந்து கூறியது. இந்தியாவின் பிரதம நீதிபதியாக
இருந்தவர், மேகர்சந்த் மகாஜன் என்பவர் கூறியுள்ளது அது.
நேர்மை உணர்ச்சியுடன் அஞ்சாமையும் இணைந்திருப்பவர்கள்
மட்டுமே, ஆளவந்தார்கள் புருவத்தை நெரித்து, முணுமுணுத்து,
பழிவாங்கத் திட்டமிடக்கூடும் என்று தெரிந்திருந்தும்,
உண்மையை உரைத்திடுவோம். ஊராள்வோர் கோபித்தால் கோபித்துக்கொண்டு
போகட்டும், ஊரார் நிலைமையை உணர்ந்தால் போதும் என்ற எண்ணம்
கொண்டவர்கள் மட்டுமே இதுபோலப் பேசமுடியும் இலஞ்ச ஊழலுக்கு
மூலகாரணமே உங்களிடம் இருக்கிறது. உங்களுக்கும் முதலாளிக்கும்
உள்ள கொடுக்கல் - வாங்கலே, எல்லாவித ஊழலையும் உற்பத்தி
செய்கிறது.
இவ்விதம் துணிந்து, உண்மையைச்
சொன்னவர், மகாஜன்.
நம் அனைவருக்கும் தெரிந்ததைத்தான்
அவர் சொல்லி யிருக்கிறார்; ஆனால், நாம் சொல்லும்போது கட்சிமாச்சரியத்தால்
பேசுகிறோம் என்று பொதுமக்கள் எண்ணிக் கொள்ளக்கூடும்; அல்லது
பொதுமக்களிடம் ஆளவந்தார்கள் அதுபோலச் சொல்லிவிடக்கூடும்.
மகாஜன் ஒரு கட்சிக்காரர்
அல்ல, அரசியல்வாதி அல்ல; காங்கிரஸ் அமைச்சர்கள்பற்றிக்
கண்டித்துப் பேசி, அதன் மூலம் "பெயர்' பெற்று, ஓட்டுவேட்டை
ஆட நினைக்கிறவர் அல்ல. நாடு சீர்ப்பட, நிர்வாகம் தூய்மைப்பட,
என்ன செய்தாக வேண்டும் என்பதுபற்றி ஆர அமர எண்ணிப்பார்த்து,
விருப்பு வெறுப்பு அற்ற நிலையில் இருந்து பிரச்சினையை
அலசிப்பார்த்து, இதனைக் கூறுகிறார். பொறுப்புமிக்க இடத்தில்
இருந்தவர், பொச்சரிப்புக்கொண்ட பதவி தேடி அல்ல.
ஒரு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளிடமிருந்து
"இடித்துரை' கேட்பது சகஜம்; ஆனால், பிரதம நீதிபதி எனும்
மிக உன்னதமான நிலையில் இருந்தவர் - மனம் நொந்து - ஆளுங்கட்சிக்கு
துணிந்து புத்திமதி கூறுவது என்றால், உள்ளபடி அது வியந்து
கவனிக்கத் தக்கதாகும்.
எல்லை கடந்துவிட்டது, இனி
நமக்கென்ன என்று நம் போன்றவர்கள் இருந்துவிடக்கூடாது,
மக்களுக்கு உண்மை நிலைமையை உணர்த்தியாக வேண்டும் என்ற
அக்கறையுடன் அவர் ஆளுங்கட்சியை இத்தனை பச்சையாகக் கண்டித்துள்ளார்.
டாட்டாக்கள், பிர்லாக்கள்,
சிங்கேனியாக்கள் போன்றாரிடம் பணம் பெறுவது ஒருவிதத்தில்
இலஞ்சமே! என்று கூறியிருக்கிறார்.
எதிர்க்கட்சிகள், காங்கிரசுக்கும்
முதலாளிகளுக்கும் உள்ள "பந்த பாசத்தை' எடுத்துக்காட்டிடும்போது,
கவனிக்க மறுத்திடும் போக்கினர்கூட, எந்தவிதமான அரசியல்,
கட்சி நோக்குமற்ற முன்னாள் பிரதம நீதிபதி, நொந்த மனத்துடன்,
துணிந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் போக்கை அம்பலப்படுத்தி,
அந்தப் போக்கைப் போக்கிக்கொள்ளாமல், சமிதி வைத்து இலஞ்சப்
பேயை ஒழிப்பேன் என்று நந்தா கூறுவது வெறும் கேலிக் கூத்தாகிப்
போகும் என்று கூறியுள்ளதை அலட்சியப் படுத்த மாட்டார்கள்
என்று எண்ணுகிறேன். தம்பி! அவர் எடுத்துரைத்தவைகளைப் பொதுமக்கள்
அறியும்படிச் செய்திட வேண்டிய பொறுப்பு உன்னுடையது. உன்னால்
முடியும்.
தேர்தலில் வெற்றிபெறப் பெரும்
பணத்தை முதலாளி களிடம் பெற்றுக்கொண்டால், பணம் கொடுத்த
முதலாளிகள், ஒன்றுக்குப் பத்தாக, கொள்ளை இலாபமடித்திடாமல்
வேறு என்ன செய்வார்கள்! கொள்ளை இலாபம் பெற, குறுக்குவழி
சென்றாகவேண்டி வருகிறது. குறுக்குவழி செல்லும்போது, சட்டம்
குறுக்கிட்டாலும், அதிகாரிகள் தடுத்திட்டாலும், காங்கிரஸ்
அமைச்சர்களின் நண்பர்கள் என்ற "கவசம்' இவர்களுக்கு எந்தவிதமான
தொல்லையும் ஆபத்தும் வரவிடாமல் பாதுகாப்பு அளிக்கிறது.
இலஞ்சமும் ஊழலும் வளராமலிருக்க முடியுமா?
பிரதம நீதிபதியாக இருந்தவரே
காங்கிரஸ் ஆட்சியினரின் குட்டுகளை இவ்வளவு வெட்ட வெளிச்சமாக்குகிறார்.
ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ முடுக்குடன் பேசுகிறார்கள்,
எம்மைக் குறைகூற என்ன இருக்கிறது? எவருக்கு இருக்கிறது
அந்தத் தகுதி என்று. தகுதிமிக்கவரும், வேதனை தாளாமல்,
மனத்திலுள்ளதைக் கொட்டிவிட்டார். இனியேனும் காங்கிரஸ்
தலைவர்கள், சிறிதளவு அடக்க உணர்ச்சி காட்டுவார்களா?
இவர் ஒரு சமயம் காங்கிரசுக்குப்
பகைவரோ, பிடிக்காதோ காங்கிரஸ் தலைவர்களை என்று எவரும்
எண்ணத் தேவை யில்லை. தம்பி! அவருடைய கட்டுரையில் துவக்கத்திலேயே,
நேரு பண்டிதரையும் இன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜரையும்
பாராட்டியிருக்கிறார்.
ஆகவே, அவருடைய பலத்த கண்டனத்துக்குக்
காரணம், வெறுப்பு அல்ல, பொச்சரிப்பு அல்ல, கட்சி மாச்சரியம்
அல்ல, பதவி பிடிக்கும் நோக்கம் அல்ல, உள்ளத்தில் தோன்றியதை
அச்சம் தயை தாட்சணியமின்றிக் கூறியிருக்கிறார்.
என்னென்ன இன்னலை ஏற்றுக்கொள்கிறார்கள்
இந்தத் தூயவர்கள் என்று நாட்டின் நல்லவர்கள், காங்சிரசாரைப்
பாராட்டிய காலத்தோடு,
என்னென்ன ஊழல் இவர்கள் ஆட்சியில்,
பதவி பெற என்னென்ன தந்திரம் செய்கிறார்கள், எவரெவரிடமிருந்து
எத்தனை எத்தனை பணம் பெறுகிறார்கள், பெற்ற பணத்துக்காக
என்னென்ன சலுகைகளைக் காட்டுகிறார்கள் முதலாளிகளுக்கு,
சலுகைகளைப் பெற்றுக்கொண்டு அந்த முதலாளிகள் என்னென்ன விதமான
முந்திரா வேலைகளைச் செய்கிறார்கள், ஊழலை வளரச் செய்துவிட்டு,
சொந்த நலனைப் பெருக்கிக் கொண்டு சொகுசாக வாழ்கிறார்களே,
இந்தக் காங்கிரஸ்காரர்கள் என்று பரவலாக எங்கும் பேசப்படும்
இந்தக் காலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சே! நாக்கைப்
பிடுங்கிக் கொள்ளலாமா என்று தோன்றும் நல்ல காங்கிரஸ்காரர்
அனைவருக்கும். ஆனால், தம்பி! அவர்கள், நாட்டுக்கு உண்மையை
எடுத்துச் சொல்லும் நம்முடைய நாவினை அல்லவா வெட்டிவிடத்
திட்டமிடுகிறார்கள்.
எனக்கு ஒரு மகிழ்ச்சி தம்பி!
காங்கிரசார் கையாளும் கேடான முறைகளை, அரசியல்வாதிகள் கண்டிப்பதுடன்
முடிந்துவிடவில்லை, அரசியலுக்கு அப்பாற்பட்ட அறிவாளரும்
கண்டிக்க முன்வந்துவிட்டார்கள்; அவர்கள் பேச்சு, மக்களிடையே
தெளிவை நிச்சயம் உண்டாக்கும்.
நாம் இதுகாறும் கூறிக்கொண்டு
வந்தவைகளை, நாட்டிலே மிகத் தூய்மையான துறையில் மிகப்பெரிய
நிலையிலே இருந்து வந்தவரும் கூறுகிறார், நம்மைவிடத் திட்டவட்டமாக
என்பதைக் காணும்போது, நாம் நடாத்தி வரும் பணி நியாயமானது,
தேவையானது, தூய்மையானது என்பதிலே மேலும் நம்பிக்கை வளரத்தான்
செய்கிறது. எனவே நமது பணி தொடர்ந்து நடைபெற ஆர்வம் அதிகமாகிறது.
காந்திமகான் சீடர் இவர்
கனதனவான்களுடன் கூடி, நாடு ஆளும் ஆசையினால் நச்சரவை வளர்க்கின்றார்,
அரவு அது தீண்டுவதால் துடிக்கின்றார் ஏழையரும், துயர்
துடைத்துத் தூய்மை காணத் தொடர்ந்து நடத்திடுவோம் நமது
பணி.
என்று கூறிடத் தோன்றுகிறது.
உனக்கு என்ன தோன்றுகிறது, தம்பி!
அண்ணன்
23-8-1964