அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


நிலவு, கழக வெற்றி, சிறைச்சாலை நிலைமைகள்
1

தம்பி!

வகுப்புக் கலவரம், உ. பிரதேச சட்ட மன்றத்துக்கும் நீதி மன்றத்துக்கும் இடையே கிளம்பியுள்ள "உரிமை' மோதுதல் போன்ற செய்திகள், உள்ளபடி கவலை தருவனவாக உள்ளன. வடக்கே வகுப்பு மாச்சாரிய உணர்ச்சி மங்கவில்லை. எப்போதும் நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. இந்த நிலை இப்போதைக்கு மட்டுமல்ல, களையப்படும் வரையில், ஆபத்தைக் கக்கியபடியே இருக்கும் என்று தோன்றுகிறது. வகுப்பு மாச்சரிய உணர்ச்சி வடக்கே எந்த அளவிலே இருக்கிறது என்பதுபற்றி நண்பர்களிடம் எடுத்துக் கூறிக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இயல்பாகவே அமைந்துள்ள "சமரச' நோக்கம், உண்மையிலேயே பாராட்டிப் போற்றத்தக்கது என்று பேசிக்கொண்டோம்.

சிறையைப் பார்வையிடுவதற்காக மேயர் வரப்போகிறார் என்ற பேச்சு இங்கு இரண்டு நாட்களாக இருந்தது - பேச்சாகவே போய்விட்டது - வரக்காணோம். மேயர், கழக ஆதரவு பெற்றவர் என்று தெரிந்துகொண்ட "கைதிகள்', மேயர் வரப்போகிறார் என்று அறிந்ததும், எங்களிடம், புதிய தனி மரியாதை காட்டினார்கள்.

சட்ட மன்றத்தில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள், திருவள்ளுவர் திரு உருவப் படத்தைத் திறந்துவைத்த செய்தியும், அந்த நிகழ்ச்சிப் பற்றிய படங்களும் இதழ்களில் வெளிவந்திருக்கக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். இத்தனை காலத்துக்குப் பிறகாகிலும், வள்ளுவருக்கு ஆட்சி மன்றத்திலே "இடம்' தந்து பெருமை தேடிக்கொள்ள முடிந்ததே என்பதிலே மகிழ்ச்சி. வெளியில் இருந்திருந்தால் இந்த நாளை ஒரு திருநாளாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருப்பேன். அப்படி ஒரு எண்ணம் இருந்தது. சிறைக்கு உள்ளே இருந்துதான், அந்தச் சிறப்பான நிகழ்ச்சிபற்றி மகிழ முடிந்தது. வள்ளுவரின் திரு உருவப்படம், இந்த ஆட்சி மன்றத்தில் மட்டுமல்ல, உலக நாடுகளின் பெருமன்றத்திலேயே இடம் பெறத்தக்கது.

தென்னக வரலாற்றிலே ஒரு கட்டம் பற்றி, சோவியத் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய நூல் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன்.

இன்று "நூற்பு வேலை' செய்யவில்லை - கதர் திட்டத்தின் பயனற்ற தன்மைபற்றி, மாறன் முரசொலியில் தலையங்கம் எழுதியிருப்பதைப் படித்தோம் - ஆனால் அதனால் அல்ல "நூற்பு வேலை' நடைபெறாதிருந்தது. பஞ்சு தரப்படவில்லை.

அறப்போரில் ஈடுபட்டு இங்கு உள்ள தோழர்களில் இருவருக்கு உடல் நலமில்லை - சிறையில் உள்ள மருத்துவ மனையில் உள்ளனர். அவர்களைப் பொன்னுவேல் பார்த்து வரும் வாய்ப்பு கிடைத்ததால், செய்தி அறிந்துகொள்ள முடிந்தது.

26-3-1964

இன்று எனக்கு டாக்டர் ஊசி போட்டார். மதியழகனுக்கு இலேசாக ஜுரம்; அவருக்கும் ஊசிப் போடப்பட்டது.

காலையிலிருந்து இங்கு ஒரே பரபரப்பு; ஒவ்வொரு பகுதியிலும் கூட்டுவதும் மெழுகுவதும், சாமான்களை ஒழுங்கு படுத்துவதுமாக இருந்தனர். காரணம், சிறை மாநில மேலதிகாரி பார்வையிட வருகிறார் என்ற செய்தி. அது செய்தி அளவோடு தான் முடிந்தது. என்றாலும், ஒரு சில மணி நேரத்தில், சிறையே புதுக்கோலம் கொண்டுவிட்டது.

சிறைத்துறை குறித்து, சட்டமன்றத்தில் நம்முடைய தோழர்கள் பேசியது முரசொலியில் விரிவாக வெளிவந்திருந்தது. குறிப்பாகக் கருணாநிதியின் பேச்சு மிகத் தரமாக இருந்தது, அரக்கோணம் ராமசாமிக்கு அளவில்லா மகிழ்ச்சி.

எம். ஜி. ராமச்சந்திரன் கழகப் பொதுக்கூட்டத்தில் பேசியது "நம் நாடு' இதழில் வெளிவந்திருந்தது. உருக்கமான பேச்சு. கழகத்திடம் அவர் கொண்டுள்ள உள்ளன்பு தெள்ளெனத் தெரிகிறது. சில நாட்களாக நான் அடைந்திருந்த மனச்சங்கடம், அவர் கழகக் கூட்டத்தில் பேசினார் என்ற நிகழ்ச்சிபற்றி அறிந்ததால் நீங்கிற்று.

குழந்தைகளுக்கான விளையாட்டு "ரயில்வே' அமைக்க, மாநகராட்சியில் ஏற்பாடு செய்யப்போவதாக முனுசாமி பேசியது பார்த்தேன். பரோடாவில், மிகப் பெரிய பூங்காவில் நான் அதுபோன்ற ஒரு அமைப்பைப் பார்த்திருக்கிறேன். முனுசாமியிடம் அப்போதே அது குறித்துச் சொல்லியும் வைத்தேன். இங்கும் அதுபோலவே அமைக்கத் திட்டமிடுவது மிகவும் வரவேற்கத்தக்கது. மாநகராட்சி மன்றத்தினர் குழு ஒன்று "பரோடா' சென்று முழு விவரம் தெரிந்துகொண்டு வருவது மெத்தவும் பயனளிக்கும்.

மகிழ்ச்சியுடன் பெருமையும் பெறத்தக்க முறையில், மற்றோர் திட்டமும் மேற்கொள்ள மாநகராட்சி மன்றம் முனைவதுபற்றியும் அறிகிறேன். மயிலையில், திருவள்ளுவரின் சிலையினை அமைக்க ஏற்பாடு செய்யப்போவதாக முனுசாமி தெரிவித்திருக்கிறார். மிக நேர்த்தியான யோசனை.

ஔவையார் சிலை ஒன்றினை, டில்லியில் உள்ள ஒரு அமைப்பில் - அது அமெரிக்க அரசுக்குத் தொடர்புள்ள அமைப்பு என்று அறிகிறேன் - அமைத்திருப்பதாகச் செய்தி பார்த்தேன். மாநகராட்சி, ஔவையாரின் சிலையையும், அமைத்திட முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்ற பிறகு இதுபற்றி நண்பர்களுடன் கலந்து பேச விரும்புகிறேன்.

இன்று "பஞ்சு' கொடுத்துவிட்டார்கள் - நூற்பு வேலையும் நடைபெற்றது.

கிருத்துவ மார்க்கம் நிலைபெற்ற பிறகு, அறிவுத் துறையினருக்கும் மார்க்கத் துறையினருக்கும் இடையே மூண்டுவிட்ட மோதல்பற்றிய பின்னணி கொண்ட "ஏடு' முன்பு படித்து, பகுதியில் நிறுத்தி வைத்திருந்தேன் - இன்று தூக்கம் வருகிற வரையில் அந்த புத்தகத்தைத்தான் படிக்க இருக்கிறேன். மார்க்கத்திலே புகுந்துவிட்ட மாசுகளைப் போக்கவேண்டும், தூய்மைப்படுத்த வேண்டும் என்று துவக்கப்பட்ட ஒரு இயக்கத்தையே, கெடுமதியாளர் கூட்டம், கடவுள் மறுப்புக் கும்பல் என்றெல்லாம் தூற்றிக் கொடுமைப்படுத்தும் சம்பவங்கள் இந்த ஏட்டிலே விளக்கப்பட்டுள்ளன.

27-3-1964

இன்று கிருத்தவ மார்க்கத்தாருக்குத் திருநாள் - சிறையில் விடுமுறை நாள். ஞாயிற்றுக்கிழமைபோலவே இன்று கைதிகளுக்கு "வேலை' கிடையாது! நாங்கள் கைதி உடை அணியத் தேவையில்லை. விடுமுறை நாள் என்பதால், இன்று மாலை 5 மணிக்கெல்லாம், எங்களை அறையிலே தள்ளிப் பூட்டி விட்டார்கள். வார்டர்களில் சிலர், கண்டிப்புக் குரலால் காரியம் சாதிப்பவர்கள், சிலர் கனிவு காட்டியே காரியம் சாதிப்பவர்கள். "இன்று விடுமுறை நாள். சற்று முன்னதாக "லாக்-அப்' வேலை முடிந்துவிட்டால், வீட்டுக்குப்போகச் சவுகரியமாக இருக்கும். . .'' என்று கனிவாகப் பேசும்போது, நாங்களே வேலைகளைச் சீக்கிரமாக முடித்துக்கொண்டு அறைகளிலே சென்று அமர்ந்து விடுவதுதானே முறை? அந்த முறையில் மாலை ஐந்துக்கே உள்ளே சென்றுவிட்டோம் - பூட்டிவிட்டு, அதை இழுத்துப் பார்த்து விட்டு, வார்டர்கள் சென்றுவிட்டார்கள். மற்றப் பகுதிகளில் இரவில், மணிக்கு ஒரு முறை வார்டர்கள் வருவார்கள் இங்கு அநேகமாக இரவுக் காலத்தில் வார்டர்கள் வருவதில்லை. அதனால் அடைபட்டுக்கிடக்கும் எங்களுக்கு ஏதேனும் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டால், எந்தவிதமும் உதவியும் கிடைப்பதற்கு வழி இல்லை. இது கவலை தரத்தக்க நிலை.

இன்று காலை, மதியழகன் சொன்னார். இரவெல்லாம் காய்ச்சல் - விடியும்போதுதான் வியர்வை கண்டது என்று. சோர்வு அதிகம் தெரிகிறது. இந்த நிலையிலும் வார்டர்கள் வருவதில்லை என்றால், என்ன சொல்லுவது!

எனக்கு இடக் கரத்திலே உள்ள வலி சற்று வளர்வதுபோல் தோன்றுகிறது. வலிபோக்க, தரப்பட்டுள்ள தைலத்தைக் காலையிலே தடவிக்கொண்டு பார்த்தேன் - மாலையில் தண்ணீர் கொதிக்கவைத்து வலியுள்ள இடத்திலே ஊற்றிக் கொண்டு பார்த்தேன் - அந்த நேரத்துக்கு "இதம்' தெரிகிறது, அவ்வளவே.

இங்கே இப்பொழுதே, வார்டர்களும் வேலை செய்வோரும், எங்கள் "விடுதலை'பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். குறைந்தது ஒரு மாத காலமாவது, தண்டனைக் காலத்திலே "கழிவு' ஆகிவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள். இதுபற்றிய பேச்சுத்தான், இங்கு பொழுதுபோக்காகி இருக்கிறது.

தொகுதி ஐந்து 295 "சட்டமே செல்லாது என்று உயர்நீதிமன்றம் அறிவித்து விடப்போகிறது, நீங்களெல்லாம் விடுதலை ஆகப்போகிறீர்கள்' என்றும் சிலர் சொல்லுகிறார்கள்.

பொதுவாக அனைவருக்கும், குறிப்பாகப் பொது வாழ்வுத் துறையினருக்கும், அன்றாடம் பத்திரிகைகள் பார்த்து உலக நிலை, நாட்டு நிலை, கட்சி நிலை ஆகியவற்றினைத் தெரிந்து கொள்வதிலே ஆர்வம், துடிப்புணர்வு இருப்பது இயற்கை. ஆனால், இந்தத் துடிப்பினுடைய முழு வேகத்தை உணர வேண்டும் என்றால், சிறையிலேதான் உணர முடியும். எத்தனை ஆவல், ஆர்வம், துடிப்பு! பத்திரிகைகள் கைக்குக் கிடைத்த உடன், பல நாள் பசித்துக்கிடந்தவன், விருந்து கிடைக்கப்பெற்றால் எத்துணை பதைப்பு ஏற்படுமோ, அப்படிப்பட்ட ஒரு பதைப்பு. ஒரு எழுத்துவிடாமல் படித்துப் படித்துச் சுவைக்க முடிகிறது. பத்திரிகைச் செய்திகளைப்பற்றி ஒருவருக்கொருவர் உரையாடல், கருத்துரைகள் வழங்கிக்கொள்வது, இப்படி.

எழுதிய எழுத்து உலருவதற்கு முன்பு, நான் சொன்ன ஒரு விஷயம் பொய்த்துவிட்டது. இப்போது ஒரு வார்டர் இங்கு வந்திருந்தார் - இன்னும் தூக்கம் வரவில்லையா என்று கேட்டுவிட்டுச் சென்றார். ஒரு சமயம் வார்டர்களே வருவதில்லை என்று நண்பர்கள் குறைபட்டுக்கொண்டது, எட்டவேண்டிய இடத்துக்கு எட்டி, வார்டர் வந்திருக்கிறாரோ, என்னவோ!

படித்து முடித்துவிட்ட "வால்காவிலிருந்து கங்கை வரை' என்ற புத்தகத்திலிருந்து சில குறிப்புகள் எடுத்தேன்.

சிறையில் கைதிகளுக்கு உணவளிக்க எவ்வளவு செலவிடப் படுகிறது என்பதுபற்றிச் சட்டசபையில் அமைச்சர் கணக்களித்திருந்தாரே அதுபற்றி இன்று பிற்பகல் இங்கே நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். செலவு மிகக் குறைவு என்றும் கூறிவிட முடியாது; பண்டங்கள் தரப்படுவதே இல்லை என்றும் சொல்வதற்கு இல்லை; ஆனால், பண்டங்கள் பாழாகும் விதமான சமைக்கும் முறைதான் இங்கு சங்கடத்துக்குக் காரணம். கைதிகளே சமைக்கிறார்கள் - சமையல் முறை தெரியாதவர்கள். அதனால் பண்டங்கள் பாழாக்கப்பட்டு, கைதிகள் சுவையையோ, வலிவையோ பெற முடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது.

முற்காலத்திலே இருந்ததைவிடச் சிறை எவ்வளவோ மேல் இப்போது என்று அமைச்சர்கள் பேசியிருக்கிறார்கள் - அதுபற்றி இங்கு நண்பர்கள் விவாதித்தனர். விளக்கொளி, உடை, அலுமினியப் பாத்திரம், காற்றோட்டத்துக்கான வழி, இவைகளெல்லாம் இப்போது உள்ளன; முன்பு இருட்டு, மண்பாண்டம், அழுக்குடை, குகைபோன்ற அமைப்பு இவை இருந்தன; இது முன்னேற்றமல்லவா என்று அமைச்சர்கள் கேட்கிறார்கள்.

அவர்கள் குறிப்பிடும் நிலைமை சிறையிலே இருந்த நாட்களில், வெளியிலேயே இருட்டும் இடர்ப்பாடும் மிகுந்திருந்தன; அதனுடைய மறு பதிப்பாகச் சிறை இருந்தது. இப்போது, வெளியே அமைந்துள்ள வாழ்க்கை முறையில் ஒளியும் காற்றும், தூய்மையும் துப்புரவும் புகுத்தப்பட்டுவிட்டிருக்கிறது; ஆகவே அதனுடைய சாயல், சிறையிலும் இருக்க வேண்டும் - இதனை அமைச்சர்கள் மறந்துவிடுகிறார்கள். முன் பீப்பாயில் போட்டு உருட்டுவது, சுண்ணாம்புக்காள்வாயில் போட்டு வேக வைப்பது, கழுமரத்தில் ஏற்றுவது, மாறுகால், மாறுகை வாங்கி விடுவது, யானை காலில் இடர வைப்பது, இப்படிக் கொடுமைப் படுத்தும் முறைகள் நிரம்ப இருந்தன! அந்தக் காலத்தைத்தான் காட்டுமிராண்டிகள் காலம் என்கிறோம். அவைகளைக் கவனப்படுத்தி, அவைகளைவிட, கசையடி பரவாயில்லை அல்லவா, கை காலுக்கு விலங்கிடுதல் பரவாயில்லை அல்லவா என்று கேட்பது, வாதமுமாகாது; மனிதத்தன்மையின் மேம்பாட்டை வளர்க்கும் வழியுமாகாது. சிறை கொடுமைப்படுத்த உள்ள இடம் என்ற கொள்கை, காட்டுமிராண்டித்தனத்தின் ஒரு கூறு. திருந்துவதற்கான இடம் சிறை என்பதுதான் நாகரிக நாட்டினர் ஒப்புக்கொண்டுள்ள கருத்து. இந்தக் கருத்தை, இங்குள்ள அரசு ஒப்புக்கொள்கிறதா மறுக்கிறதா என்பதுதான் பிரச்சினை. நமது கழகத் தோழர்கள் சட்டமன்றத்தில் இதனை எழுப்பினார்கள் - அமைச்சர் அவையினர் பொருத்தமான பதிலோ, விளக்கமோ தரவில்லை. பல்வேறு குற்றங்களை இழைத்துவிட்டு வந்தவர்கள், இதே காங்கிரஸ்காரர்கள் ஜெயிலில் இருந்தபோது, என்னென்ன ஆர்ப்பாட்டம் செய்தார்கள்? சிறையை அப்படித் திருத்தப் போகிறோம், இப்படி மாற்றப் போகிறோம் என்றெல்லாம் பேசினார்கள், பதவியில் உட்கார்ந்ததும் அதை எல்லாம் காற்றிலே பறக்க விட்டு விட்டார்களே என்று கேலி பேசுகிறார்கள்.

டில்லி மேலவைத் தேர்தலில், நண்பர்கள் சமதும் மாரி சாமியும் வெற்றி பெற்றது பத்திரிகைகளில் வெளி வந்திருந்தது. இங்கு நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்.

28-3-1964

இன்று அறையினுள் அடைக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நின்றபடி, எதிர்ப்புறம் எழிலோடு விளங்கிக் கொண்டிருந்த நிலவைப் பார்த்தபடி இருந்தேன். அழகிய நிலவு. முழு நிலவுக்கே மறுதினம்! கிளம்பும்போது பொன்னிறம்! மேலே செல்லச்செல்ல உருக்கி வார்த்த வெள்ளி நிறம்! எனக்கு எப்போதுமே நிலவைக் காண்பதிலே பெருமகிழ்ச்சி. கம்பிகளுக்குப் பின்னால் நின்றபடி பார்க்கும்போதும், பெருமகிழ்ச்சியே! சிறைப்படாத நிலவு, அழகினைச் சிந்திக் கொண்டிருக்கிறது - சிறைப்பட்டிருக்கும் எனக்குக் களிப்பை அள்ளிப் பருகிக்கொள் என்று நிலவு கூறுவதுபோலத் தோன்றிற்று. இங்கு வந்த இத்தனை நாட்களில் இத்துணை அழகு ததும்பும் நிலவை நான் கண்டதில்லை. கடலோரத்தில, வெண் மணலின் மீதமர்ந்து கண்டு இன்பம் கொண்டிட வேண்டும் அண்ணா! சிறைக்குள் இருந்தா!! என்று கேட்டுக் கேலி பேசுவர் என்பதால், அதிகம் இதுபற்றி எழுதாதிருக்கிறேன். இன்று உள்ள வானம் நிலவு அளிக்கும் ஒளியினால் புதுப்பொலிவு பெற்று விளங்குவதுபோலவே என் மனமும் எனக்குக் கிடைத்த செய்தி காரணமாக மகிழ்ச்சியால் துள்ளியபடி இருக்கிறது. நண்பர்கள் நடராஜனும், சி. பி. சிற்றரசும் மேலவைக்கான தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டனர் என்ற செய்தி கிடைத்தது. இன்று மாலை - நறுமணம் வீசும் சந்தனத்தை வேலைப்பாடு மிக்க வெள்ளிக் கிண்ணத்தில் ஊற்றித் தருவதுபோல, இந்த மகிழ்ச்சியான வெற்றிச் செய்தியை எனக்குத் தந்தவர், டில்லி மேலவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நண்பர் மாரிசாமி.

முதலமைச்சருடைய தனி அனுமதி பெற்று, நண்பர் மாரிசாமி, ஆம்பூர் நகராட்சி மன்றத் தலைவராகியுள்ள சம்பங்கி, திருப்பத்தூர் நகராட்சி மன்றத் தலைவராகியுள்ள சின்னராஜு, வாணியம்பாடித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வடிவேலு ஆகியோருடன் இன்று மாலை என்னைக் காண வந்திருந்தார். சிறை மேலதிகாரிகள் தமது திறமைமிக்க கண்காணிப்பை நடத்த அங்கு அருகிலே அமர்ந்திருந்தனர். நண்பர் மாரிசாமிக்கு என் பாராட்டுதலைத் தெரிவித்தேன். அவர் தம்முடைய நன்றியைக் கூறினார்.