அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


பன்னீர் தெளித்தாலும். . .
2

"என்ன விலை, ரொட்டி,''

"பத்துப் பணம்.''

"பத்துப் பணமா? விலை அதிகம். எட்டுப் பணத்துக்கு வேறு இடத்தில் கிடைக்கிறதே!''

திரும்பிப் பார்க்கிறான், குரலொ- கேட்டு. அதே பெண்; சட்டை தைத்துக்கொண்டிருந்தாளே, விலை ஏற்றத்தால் நாசமாகிப் போனானே சிறு ரொட்டிக் கடைக்காரன் அவன் மகள்; உதவி செய்ய வந்த சீமான் மகனை வெறித்து விரட்டினாளே அதே பெண்!

"ஐயா! நலமாக இருக்கிறீர்களா?'' - அவள் கேட்கிறாள்.

"இருக்கிறேன். போய்னீ!'' என்கிறான் இலட்சிய மறிந்தவன்.

போய்னீ என்பது கன்னியின் பெயர்.

"நான் இப்போது திருமதி கின் சால்விங்! எனக்கும் கின்சால்விங்குக்கும் போன மாதம் திருமணமாகிவிட்டது.'' என்கிறாள் அவள்.

கின் சால்விங் என்பது யாருடைய பெயர் தெரியுமா தம்பி! சீமான் மகன் பெயர்!!

கதை அவ்வளவுடன் நின்றுவிடுகிறது! கருத்து என்னென்ன மலருகிறது எண்ணிப் பார், தம்பி!

ஓ. என்ரியின் விந்தைமிகு திறமையைக் கூறிடவே கதை முழுவதும் சொல்லி வைத்தேன் - நான் இதிலே உன்னை மீண்டும் மீண்டும் கருத்தில் கொள்ளும்படிக் கேட்டுக்கொள்வது,

விலை ஏற்றங்களில் உணவுப் பொருளின் விலை ஏற்றத்தைப் போன்ற கொடுமைமிக்கது வேறு எதுவும் இல்லை. விலை ஏற்றம் என்பது பெருத்த இலாபத்தை மிகக் குறைந்த நாட்களில் கொள்ளைபோலப் பெற வேண்டுமென்று திட்டமிட்டு, வாணிபத் துறையினர் செய்திடும் சதி.

உணவுப் பொருள் விலை ஏற்றத்தின் காரணமாக அவதிப்படும் ஏழைகளின் வாழ்வு நொந்துபோகும் கொடுமையை நீக்கிட, இன்மொழி, இதமளித்தல், பரிவு காட்டுதல் எனும் முறைகள் பயன்படாது.

விலைவாசி ஏற்றத்தினால் ஏற்படுவது, ஏழைக்குப் பொருள் நஷ்டம் மட்டுமல்ல, பல்வேறு விபரீத விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன.

இந்தக் கருத்துக்களை உணர்ந்திடச் செய்வதற்கே, இந்தக் கதையைக் கூறினேன்.

உணவுப் பொருள்களின் விலை ஏறிவிட்டது; ஏறிக் கொண்டே இருக்கிறது என்பதைக் காங்கிரஸ் அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது!

கைப்புண்ணுக்குக் கண்ணாடியா! என்று கேட்கத் தோன்றும் என்ன செய்வது, தம்பி! இந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் மனம், இப்போதுதானே வந்திருக்கிறது, காங்கிரஸ் அரசுக்கு.

ஆண்டு இரண்டாகிறது நமது கழகத்தவர், விலைவாசி ஏற்றக் கொடுமையைக் கண்டு குமுறி எழுந்து, முறையிட்டுப் பலன் காணாததால், கிளர்ச்சி நடத்தி, சர்க்காரின் கண்களைத் திறந்திட முயன்ற நிகழ்ச்சி. வேலூர் சிறையிலே நான் அடைபட்டுக் கிடந்தேன், உள்ளம் வெதும்பிய நிலையில்.

உணவுப் பொருளின் விலை விஷம்போல ஏறிவிட்டது, ஏழையின் வாழ்வில் இம்சை அதிகமாகிறது.

என்ற உண்மையை ஒப்புக்கொள்ளக்கூட இந்த ஆளவந்தார் களுக்கு மனம் இல்லையே! இது என்ன ஆட்சி!! என்று எண்ணி மெத்த வருத்தப்பட்டேன். நமது தோழர்கள் பல ஆயிரவர் சிறையிலே வாடிக் கிடந்தனர்; உள்ளே எத்துணையோ கொடுமைகள்; வெளியே எத்தனை எத்தனையோ ஏச்சுப் பேச்சுகள்; எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டோம். இரு தோழர்களையும் பறிகொடுத்தோம்; இதயத்திலே தழும்பு பெற்றோம்.

உணவு விலையா ஏறி இருக்கிறது?

ஏறினால் என்ன கேடு வந்துவிட்டது?

பணம்தான் புரளுகிறதே தாராளமாக; விலை ஏறினால் என்ன?

கூலிதான் கிடைக்கிறதே ஏராளமாக, விலை ஏறினால் என்ன கஷ்டம்?

அரிசி விலையைக் குறைக்க ஹரி ஹர பிரமாவினாலும் முடியாது.

விவசாயி தலையில் கை வைத்தால்தான் அரிசி விலையைக் குறைக்கலாம்.

வளருகிற பொருளாதாரத்தில் விலை ஏறத்தான் செய்யும்,

இவை ஆளவந்தார்கள் அன்று உதிர்த்த பொன்மொழிகளிலே சில!

ஒருவர் மிகத் துணிச்சலுடன் அடித்துப் பேசினார்,

விலை ஏறி இருப்பது நாட்டின் சுபீட்சத்தைக் காட்டுகிறது என்று.

ஒருவரும், விலைவாசி, விஷம்போல ஏறி இருப்பதை இறக்கத்தான் வேண்டும் என்று கூறவில்லை; விலைவாசி ஏறி இருப்பது இயற்கை, நியாயம், தவறு இல்லை, தீது அல்ல என்று வாதாடினார்கள், நினைவிலிருக்கிறதல்லவா, தம்பி!

அப்படியே விலை ஏறி இருந்தாலும், அதைக் குறைக்க, கிளர்ச்சியா வழி? என்று கேட்டவர்களும்,

அப்படியே கிளர்ச்சி செய்வதானாலும், கலெக்டர் அலுவலகத்தின் முன்பு நின்றுகொண்டு விலை குறைய வேண்டும் என்று கூச்சலிடுவதா பயனுள்ள கிளர்ச்சி என்று கேட்டவர்களும்,

அதுதான் கிளர்ச்சி என்று வைத்துக்கொண்டாலும், அதனை ஒழுங்கான முறையில், பலாத்காரமின்றிச் செய்திடும் திறமை இருக்கிறதா என்று கடாவினோரும்,

கிளர்ச்சி ஆபாசமாகப் போய்விட்டதற்குக் காரணம் நான் கூறுகிறேன், கேண்மின்! தலைமை, அவ்வளவு மோசமானது!! திறமையற்றது!! என்று குரலெழுப்பினோரும்,

சட்டசபையில் பேசிடாமல் சந்து முனை சென்று கத்துவதா? இதுவா கிளர்ச்சி? என்று அரசியல் பாடம் போதிக்க முன்வந்தவர்களும், ஏ! அப்பா! எத்தனை எத்தனை பேர்!!

இவர்களை ஜாமீன் கேஸ் போட்டு, உள்ளே தள்ளி வைக்க வேண்டும் என்று முழக்கமெழுப்பினோரும்,

இவர்கள் சிறுபிள்ளைத்தனமாக ஒரு கிளர்ச்சி நடத்திக் கிளர்ச்சிக்கு இருந்து வந்த மதிப்பையே பாழாக்கிவிட்டார்களே! இனி எந்தக் கிளர்ச்சியும் செய்யவே முடியாத நிலையாகி விட்டதே! என் செய்வது! என்று சோக கீதம் பாடிக் காட்டியவர்களும்,

வீணான கிளர்ச்சி செய்தார்கள்; அதை அடக்கப் பணம் செலவாயிற்று; அந்தப் பணம் இருந்தால் பத்துப் பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம் என்று பொருளாதாரப் பேரறிவைப் பொழிந்தவர்களும்,

உற்பத்தி பெருகுவது ஒன்றுதான் விலைகளைக் குறைத்திடச் செய்யும் ஒரே வழி, நல் வழி, எம் வழி! என்று அகில உலக அறிவைத் தம்மிடம் ஏகபோகமாக வைத்துக்கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டு எக்காளமிட்டவர்களும், இருக்கிறார்கள், தம்பி! இங்கேயேதான் இருக்கிறார்கள் - இளித்தவாயர்களாகிவிட்டோம் என்று ஒப்புக்கொள்ள மனமின்றி, அன்று என்னென்ன பேசினார்களோ அவ்வளவையும் விழுங்கிவிட்டு இன்று,

விலைவாசி ஏறிவிட்டது, ஒப்புக்கொள்கிறோம்.
விலைவாசி கட்டுப்படுத்தப்பட வேண்டும், ஒப்புக் கொள்கிறோம்

என்று விநயமாகப் பேசி வருகிறார்கள். நமது கிளர்ச்சியை மதிக்க மறுத்தார்கள்; இன்று அவர்களின் முன்னாள் முடுக்கு மாய்ந்தது; உண்மையை ஒப்புக்கொண்டு தீரவேண்டிய நிலை பிறந்தது.

இதற்காக ஒரு கிளர்ச்சியா? என்று கேட்டபடி இடி முழக்கங்கள், இன்று கிளர்ச்சி நடத்த முனைந்துவிட்டோம் என்று முழக்குகின்றனர்,

கலெக்டர் அலுவலகத்தின் முன்பா, கிளர்ச்சி! சேச்சே! விலை குறைக்க அவருக்கு என்ன அதிகாரம்? என்று விவரம் பேசிய வித்தகர்கள் இன்று கலெக்டர் அலுவலகங்களின் முன்புதான் நிற்கப்போகிறார்கள் - முழக்கம் எழுப்பிட!

சேர்ந்து கிளர்ச்சி நடாத்துவோம், வாரீர்! என்று ஒரு சாரார் அழைக்கக்கூடச் செய்கிறார்கள். நம்மைத்தான் தம்பி! நம்மைத்தான்!

காலங்கடந்தாகிலும் இந்தக் கருத்து எழுந்ததுபற்றி எண்ணிடும்போது, சிறையிலே அன்றுபட்ட அல்லல்பற்றிய நினைப்பு மறந்தே போகிறது, விதைத்தது வீண் போகவில்லை என்ற மகிழ்ச்சி பெறுகிறோம்.

கிளர்ச்சி நடத்தத் தெரியாத "தலைவர்கள்' கொண்டதாமே, தி. மு. க. . . . !

இன்னும், மற்றவர்கள் கிளர்ச்சி துவக்கவில்லை, திட்டமிட்டபடி!

இதற்குள், கடைகள் சூறையாடப்பட்டன, கருப்புக்கொடி ஆர்பாட்டம் நடைபெற்றது. கல்வீச்சும் பதிலுக்குத் துப்பாக்கி வேட்டும் நடைபெற்றுவிட்டன. கிளர்ச்சிக்காரர்களிலும் சிலர் மாண்டனர்; போலீசிலும் சேதம்!!

கிளர்ச்சியின் இலக்கணம் பற்றியும், தலைவர்களின் தன்மை பற்றியும், பெருங்குரல் கொடுத்த பெம்மான்கள் அது கண்டு ஒரு வார்த்தை? கிடையாதே! இதோபதேசம்? இல்லை! அறிவுரை? வக்கு இல்லை! வாயடைத்துக் கிடக்கிறார்கள்.

ஒவ்வொருவருடைய வாயும், நம்மைப்பற்றிப் பேசும் போதுதான், வல்லமை பெறுகிறது; மற்ற நேரத்தில்? என்ன இனிப்புப் பண்டத்தைக் கொள்கின்றனரோ புரியவில்லை; கப்சிப்!

போகட்டும், நம்மைப் பொல்லாங்கு சொன்னதால் நமக்கொன்றும் கஷ்டமும் இல்லை, நஷ்டமும் இல்லை. இன்று கதையில் வரும் சீமான் மகன்போல, இளகிய மனமும், இரக்கப் பேச்சும் காட்டுகிறார்களே, அது ஒருவித மகிழ்ச்சியைத் தரத்தான் செய்கிறது.

உணவுப் பண்டங்களின் விலை ஏறிவிட்டிருப்பதற்குக் காரணம், உற்பத்திக் குறைவு அல்ல; உற்பத்தியான பொருளைச் சீராக விநியோகிக்கும் முறை இல்லாததே என்று நாம் முன்பு சொன்னோம், நையாண்டி செய்தனர் நாட்டின் நாயகர்கள். இன்று, அதையே, ஒரு கண்டுபிடிப்புபோல எடுத்துக் கூறுகிறார்கள்; பொதுமக்கள் நினைவாற்றலற்றவர்கள் என்ற எண்ணத்தில். பொதுமக்கள் ஆளவந்தார்களைத் திருப்பிக் கேட்க முடியாதவர்கள்; ஒப்புக்கொள்வோம். ஆனால், தமக்குள் பேசிக் கொள்ளாமலா இருக்கிறார்கள்; நேற்றுவரை இந்த நேர்மையாளர்கள், விலை ஏற்றத்துக்குக் காரணம் உற்பத்தி போதாது என்றார்கள்; இன்று உற்பத்தியில் குறைவில்லை, விநியோகத்தில் கோளாறு என்கிறார்களே; இவர்களுக்கென்ன, நாளைக்கு ஒரு நாக்கா? வேளைக்கு ஒரு பேச்சா என்று.

விலைவாசி ஏறவில்லை; ஏற்றிவிட்டிருக்கிறார்கள் என்றோம்.

புவிமெச்சும் பொருளாதாரப் போதகாசிரியர் எனத் தம்மைக் கருதிக்கொண்டு, வளரும் பொருளாதாரம் இது, பணப்பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது; அந்நிலையில் விலைவாசி ஏறுவது தவிர்க்க முடியாதது என்று பேசினர்.

இன்று? நந்தா பேசுகிறார்,

"திட்டமிட்ட அபிவிருத்தித் துறையில் விலைவாசிகள் ஏற்றம் தவிர்க்க முடியாதது என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது.''

என்பதாக. ஆமாம் என்று ஆளவந்தார்கள் அனைவருமே சொல்கிறார்கள்.

கள்ள மார்க்கெட் -
கொள்ளை இலாபம் -
கறுப்புப் பணம்

என்று முன்பு நாம் சொன்னபோது,

அபாண்டம்
வீண் புரளி
பழிச்சொல்

என்று பேசினர், நமது வாய் அடக்க. இன்று?

கள்ளப் பணம் எவ்வளவு நடமாடுகிறது எனத் திட்டவட்டமான மதிப்பீடு ஏதும் என்னிடம் இல்லை. ஆனால், பல நூறு கோடி ரூபாய்கள் இருக்கும் என்பது நிச்சயம். சமீபத்தில் விலைவாசிகள் விஷம்போல விறுவிறுவென்று ஏறியதற்கு இந்தத் திருட்டுப் பணம்தான் மூல காரணம்.

குல்ஜாரிலால் நந்தா கூறுவது! குறை கூறும் குப்பன் பேச்சல்ல!! இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாம் கூறினபோது, குமட்டல் எடுத்தது காங்கிரசாருக்கு; இப்போது நந்தா பேசுகிறார், முன்பு நாராசமாகப்பட்டது இன்று நற்பாசுரமாகத் தோன்றுகிறது!!

இப்போதேனும் ஆளவந்தார்கள், பிடிவாதப் போக்கை விட்டுவிட்டு, பிரச்சினையைக் கவனிக்க முன் வந்தது கண்டு மகிழ்கிறேன். தம்பி! விலைவாசி குறைய, துரைத்தனம் மேற்கொள்ளும் தகுதியான எல்லா திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கும் என்ற கருத்தினை நண்பர் மனோகரன், டில்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சியின் குழுக் கூட்டத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறார். நாம் இப்போது கவனிக்க வேண்டியது, காங்கிரஸ் கட்சியினரின் முன்னாள் நினைப்புகள், பேச்சுகளை அல்ல; மக்களின் அல்லலை மேலும் வளர விடாதபடி தடுத்திட விலைவாசியைக் குறைத்திட வழி கண்டாக வேண்டும் என்பதிலேதான் அக்கறை செலுத்தவேண்டும்.

அதற்காக, நெருக்கடி நேரத்தில் நாலுபேர் கூடிப் பேசி விடுவது போதாது என்பதையும், விலைவாசி பிரச்சினையைக் கவனிக்க ஒரு நிரந்தர அமைப்பு வேண்டும், அதிலே, எல்லாக் கட்சிகளும் இடம் பெறவேண்டும் என்பதனையும் நான் தெரிவித்தேன்; அரசினர் அந்தக் கருத்தினை ஏற்றுக்கொண்டது அறிந்து மகிழ்கிறேன் இதற்காக,

என்னென்ன முறைகளைத் துரைத்தனம் மேற்கொள்ளப் போகிறது என்பது விளக்கப்பட்டு, செயல்படுத்தப்படும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்புமிக்க ஒத்துழைப்பு அளிக்கும்.

ஆனால், பரிகாரம் எது என்றாலும், இதமளிக்கும் திட்டம் யாதாக இருப்பினும், விலைவாசி ஏற்றம் காரணமாக, ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் பட்ட அவதியின் காரணமாக, ஏற்பட்டு விட்ட விபரீத விளைவுகளை நீக்கிட இந்த ஆட்சியினரால் முடியாது. கதையில் வரும் சீமான் மகன்போல, இளகிய மனம் காட்டலாம், சிறு கடைக்காரன் பித்தனாகிச் செத்துப்போனான்? அவன் பிழைத்தா எழப்போகிறான்? ஆயிரமாயிரம் குடும்பங்கள், அல்லலைத் தொடர்ந்து அனுபவித்து, வளைந்த வாழ்வினராகிப் போயினர். இதற்குக் காரணமாக இருந்த போக்கும், அந்தப் போக்கினைக் கொண்டியங்கிய காங்கிரஸ் ஆட்சியையும், பொது மக்கள் மன்னிப்பார்கள் என்று நான் எண்ணவில்லை. உணவுத் துறையில் ஏற்பட்டுவிட்டுள்ள மோசமான நிலைமைக்கு, முழுப் பொறுப்பு ஏற்றாக வேண்டியவர்கள் காங்கிரசில் ஆள வந்தார்களே!! இன்று பரிகாரம் தேடித் தருகிறோம் என்று பேசிவிடுவது, "பழைய பாவத்தை'த் துடைத்துவிடாது! அது போக்க முடியாத கறை!

உங்கள் ஆட்சியில்தானே,

உணவு விலை விஷம்போல ஏறிற்று.
பண வீக்கத்தால் பல கேடுகள் விளைந்தன.
கள்ள மார்க்கெட் வளர்ந்தது.
கருப்புப் பணம் நெளிந்தது.
கொள்ளை இலாபம் குவிந்தது.
கெய்ரோன்கள் கொழுத்தனர்.

என்று பொதுமக்கள் கேட்டிடத் தவறமாட்டார்கள்! இத்தனை இன்னலை இழைத்துவிட்டு, "எம்மைவிடத் திறமையாக ஆளவும் ஆட்கள் உளரோ!' என்று வேறு பேசுவது கரும்புத் தோட்டம் எதற்கு? காஞ்சிரங்காயினும் இனிக்குமோ கரும்பு? என்று கேட்பது போன்றதாகும்.

அண்ணன்

16-8-1964