பற்று வெறி ஆகிவிடக் கூடாது
நாட்டுக்குப்
பூபாகம் உண்டு; மதத்துக்குப் பூபாகம் இல்லை!
மதச் சார்பற்ற நாடுகளும் மதச் சார்புள்ள நாடுகளும்
பற்றே பற்றை அழித்திடப் பயன்படுத்துதல் கூடாது
பற்றுகளின் வகை பெருகப் பெருகப் பற்றாளரின் தொகை குறையும்!
தான் வாழ, சமூகம் வாழப் பற்றுக் கொள்க!
தம்பி,
நாட்டுப்பற்று, தத்தமது
நாட்டினை வளமானதாக்கிட, உரிமையுடன் திகழ்ந்திடத் தேவைப்படும்
அறிவாற்றலையும், வழிமுறைகளையும் பெற்றிடப் பயன்படுத்தப்படுகிற
வரையில் தூய்மை நிரம்பியதாக இருக்கிறது. ஆனால், எவரும்
மறுக்கொணாததும், எவருக்கும் இயல்பாக எழுவதுமான "நாட்டுப்பற்று'
உணர்ச்சியினைத் தூண்டிவிட்டு, "வலிவு' திரட்டி, வேற்று
நாட்டினைத் தாக்கிடப் பயன்படுத்தினாலோ, நாட்டுக் குள்ளாகவே
கொடுங்கோலாட்சியைப் புகுத்தினாலோ, நாட்டுப்பற்று எனும்
உணர்ச்சி நாசகாரியத்துக்கு, அறமழித்திடும் செயலுக்குப்
பயன்படுத்தப்படுகிறது என்று பொருள், கண்டிக்கத்தக்கதாக,
வெறுக்க தக்கதாகி விடுகிறது, இந்தப் போக்கு.
நாட்டுப்பற்று மிக்கவர்களாக
ரோம் நாட்டவர் எழுச்சியுடன் இருந்தனர். அதன் பயனாகக் கிடைத்த
வீரத்தைப் பயன்படுத்தி ரோம் நாட்டு அதிபர்கள் வேறு பல
நாடுகளைத் தாக்கி அடிமைப்படுத்தி, சுரண்டி, தமது ரோம்
நாட்டிலே வெற்றி வளைவுகளையும், வீரக்கோட்டங்களையும், மணி
மாடங்களையும் அமைத்து, எழில் மிகுந்திடச் செய்தனர்.
ரோம் நாட்டவர் காட்டிய நாட்டுப்பற்று,
பிற நாடுகளிலே இருந்துவந்த நாட்டுப்பற்றினை அழித்திடவே
பயன்படுத்தப் பட்டது. அந்தக் கட்டம் பிறந்திடும்போதுதான்
நாட்டுப்பற்று எனும் தூய்மையான உணர்ச்சி, தவறான வழியிலே
பயன் படுத்தப்படுகிறது என்று பொருள்படுகிறது. இந்தப் போக்கினைப்
பேரறிவாளர் கண்டித்தனர்; ஆனால், அவர்களை அடக்கிட இதே நாட்டுப்பற்று
உணர்ச்சியைத்தான் ஆதிக்க வெறியர்கள் பயன்படுத்தினர்!
நமது நாட்டிடம் நமக்குப்
பற்று இருப்பதுபோலத்தானே மற்ற நாட்டவர்க்கு அவரவர் நாட்டின்மீது
பற்று இருக்கும், நம்முடைய நாட்டுப்பற்றுக் காரணமாக நாம்
எப்படி நம்முடைய நாடு அடிமைப்படக் கூடாது என்று எண்ணுகிறோமோ,
அதுபோலத்தானே ஒவ்வொரு நாடும் அதனதன் நிலைகெடச் சம்மதிக்காது
என்றெல்லாம் நாடு பல பிடித்திடும் போக்கினரான அதிபர்கள்
எண்ணிடவேயில்லை.
போர் பல மூண்டதன் காரணம்,
நாட்டுப்பற்று எனும் உணர்ச்சியை ஆதிக்க வெறியர்கள் தவறான
முறையிலே பயன்படுத்தியதுதான்.
நாட்டுப்பற்று காரணமாக,
தமது நாட்டினைச் செல்வம் கொழித்திடும் திருநாடு ஆக்கவேண்டும்
என்று எண்ணியவர்கள், அந்த நாட்டு மக்களுடைய நல்லாத ரவைப்
பெறுகிறார்கள் எளிதாகவும், முழு அளவிலும்.
ஆனால், நாட்டினைச் செம்மைப்படுத்த,
அங்குக் கிடைக்கும் இயற்கை வளத்தை, உழைப்பின் நேர்த்தியால்,
தொழில் திறமையால் பன்மடங்கு அதிகமாக்கிடும் முறையைப் பின்பற்றாமல்,
பிறநாடுகளைத் தாக்கிக் கொள்ளையடித்துப் பொருளைத் தமது
நாட்டிலே கொண்டு வந்து குவிப்பதும், பிற நாட்டவர்களைத்
தோற்கடித்து அடிமைகளாக்கிக் கொள்வதுமான கொடுமையில் ஈடுபட்டனர்,
ஆதிக்க வெறி கொண்ட அதிபர்கள்.
பிற நாடுகளிலே காணப்பட்ட
பளிங்கு மண்டபங்களை இடித்து நொறுக்கி, அந்தப் பளிங்குக்
கற்களைக் கொண்டு வந்து தமது நாட்டிலே மாளிகைகள் அமைத்தனர்!
காணீர் எமது நாட்டின் எழிலை என்று.
பிற நாடுகளிலே மக்கள் அலறித்
துடித்திடவும், ஓலமிடவும் செய்துவிட்டு, கொள்ளைப் பொருளைக்
கொண்டு தனது நாட்டிலே கோலாகல வாழ்வு அமைத்து, இசை விருந்து
அளித்தனர்.
பிற நாடுகளைச் சுடுகாடுகளாக்கி
விட்டுத் தமது நாட்டினைத் திருநாடு ஆக்கி மகிழ்ந்தனர்.
இதனால் ஏற்பட்ட அழிவினைக்
கண்ட பிறகே, நாட்டுப் பற்று மட்டுமே மேலானது என்று எண்ணிட
வேண்டாம்.
உலக முழுவதும் வாழ்ந்திட
வேண்டும்.
மனித குலம் தழைத்திட வேண்டும்.
என்ற புது உணர்ச்சியினை
ஊட்டிடத் தலைப்பட்டார்கள்.
ஆனால், இந்த உணர்ச்சி காரணமாக,
நாட்டு எல்லைக் கோடுகள் கலைக்கப்பட்டு, ஒரு நாட்டுக்கு
ஒரு அரசு என்றிருக்கும் முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு நாட்டுக்கு
ஒவ்வோர் விதமான கொடி, பண் என்று உள்ள முறை கைவிடப்பட்டு,
உலகம் ஒரே அரசின் கீழ், ஒரே கொடியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதா
என்றால், இல்லை.
உலக நாடுகள் பலவும் உலகிலே
நாட்டுக்கு நாடு மோதுதல் ஏற்படாது தடுத்திடும் நோக்குடன்
அமைத்துள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மணிமாடத்திலே இன்று
117 நாட்டுக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன, மன்றத்
தலைவராக இத்தாலி நாட்டவர், பான்பானி என்பார் தேர்ந்தெடுக்கப்பட்டார்
என்று அறிவிக்கப்பட்டவுடன், இத்தாலியர்கள் ஓர் பெருமிதம்
கொண்டிடத்தான் செய்கின்றனர்.
உலக நாடுகள் மன்ற அமைப்போ,
சர்வதேச ஒருமைப்பாட்டு உணர்ச்சியோ, நாட்டுப் "பற்று' எனும்
உணர்ச்சியினைத் தேவையற்றது ஆக்கி விடவில்லை.
"பற்று' வெறியாகி விடாமல்
பார்த்துக் கொண்டால் போதும், அதுவே மாபெரும் வெற்றி என்று
கொள்ளலாம் என்று கூறத்தக்க நிலை மட்டுமே மலர்ந்திருக்கிறது.
"நாட்டுப்பற்று'க் கொண்டோர்,
தமது நாட்டின் ஏற்றம், எழில், பலரும் கண்டு வியந்து பாராட்டிடத்தக்கதாகிட
வேண்டும் என்ற தூய எண்ணத்துடன், அறிவாற்றலைப் பயன்படுத்திப்
பணியாற்றிடும்போது, அந்த நாட்டுக்கு மட்டுமல்ல, அந்த நாடு
மூலம் உலகுக்கு நலன் பல கிடைக்கிறது.
இந்தப் புது முறையைக் கண்டுபிடித்த
நாடு எனது நாடு என்று பெருமிதத்துடன் கூறிக்கொண்ட போதிலும்,
கண்டு பிடிப்பினால் ஏற்படும் நலன், அந்த நாட்டுக்கு மட்டுமல்ல,
உலக நாடுகள் பலவற்றினுக்கும் கிடைத்திடுகிறது; உலகு செழிக்கிறது.
எனது நாட்டுத் தத்துவம்,
மொழி, இலக்கியம், கலை, தொழில் நுட்பம் என்று கூறிப் பெருமைப்படுவது
முதல் கட்டம்; ஆனால், அது படிப்படியாக வளர்ந்து உலகிலே
பல்வேறு நாட்டவரால் பாராட்டப்படும் கட்டம் பிறந்திடக்
காண்கிறோம்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே
தந்து வான் புகழ் கொண்ட தமிழ் நாடு - என்றன்றோ பாரதியார்
கூறினார்.
உலகினையும் மறந்தாரில்லை!
தமிழ்நாட்டையும் மறந்தாரில்லை!!
"நாட்டுப்பற்று' இன்று ஒவ்வொரு
நாட்டு மக்களுக்கும் கிட்டத் தட்ட "இயல்பு' ஆகிவிட்டது.
வளமும் எழிலும், வரலாற்றுச் சிறப்பும் இருந்தால் மட்டுமே,
"பற்று' அந்த நாட்டினிடம் ஏற்படும் என்பது அல்ல நிலை.
பாலைவனம் மிகுந்ததெனினும்,
பனிக்காடு நிறைந்த தெனினும், பசி போக்கிடும் வளம் அற்றதெனினும்,
எந்தன் நாடு இது! இதிலே பிறந்தேன், வாழ்கிறேன், மடிந்துபட
இருக்கிறேன். இந்த என் நாடு எனக்குப் பொன்னாடு, ஏனெனில்,
இது என் தாய்நாடு என்று கூறிடுவர் எவரும்.
வளமும் வல்லமையும், எழிலும்
ஏற்றமும் எந்த நாட்டில் உளதோ அதனை எனது நாடு என்று கொள்வேன்
என்று கூறிடுவார் எவரும் இல்லை. வளம் தேடியோ, வாழ்வின்பம்
தேடியோ, வேறோர் நாட்டிலே சென்று இறுதி வரையில் இருப்போரும்கூட,
இடமளித்த நாட்டினை, எழில்மிக்க நாடு, ஏற்றம் மிக்க நாடு
என்று பாராட்டுவரேயன்றி, எனது நாடு! தாய் நாடு! என்று
பற்றுடன் கூறார்; இயற்கையான எண்ணம் இதற்கு இடம் கொடுப்பதில்லை.
இருந்திடத்தக்கதென்று ஒரு
நாட்டைச் சென்றடைந் தவர்கள், அந்த நாட்டு நடை உடையினை,
மொழி நயத்தினைப் பாராட்டி மேற்கொண்டிடக் கூடும்; ஆயினும்,
இது என் தாய்நாடு என்று கூறிடுவதில்லை.
தமக்கு மகிழ்வுமிக்க வாழ்வளித்த
நாட்டினையும், தமது தாய்நாடு என்று கொள்ளாதது மட்டுமல்ல,
அங்குக் காணப்படும் எழிலும் ஏற்றமும், வளமும் வல்லமையும்
தன் தாய்நாட்டிலே இல்லையே என்ற ஏக்கம் கொள்வர்; எப்படியேனும்
இந்த நாடு பெற்றுள்ள சிறப்பினை என் தாயகம் பெற வேண்டும்
என்ற ஆர்வம் கொள்ளுவர்; தாயகம் சீர்பெற முயல்வர். இத்தனைச்
சிறப்புள்ள இந்த நாட்டையே இனி நான் என் தாயகமாகக் கொள்வேன்
என்று கூறிடுவதில்லை.
மடி நிறையப் பால் ததும்பிடும்
நிலையிலுள்ள பசுவே என் தாய் என்று கன்று கூடக் கருதுவதில்லையே
- கிடைக்கிறதோ இல்லையோ, நாவுலருகிறது என்றாலும் தாய்ப்பசுவிடமல்லவா
துள்ளி விளையாடுகிறது!
தாயகத்திடம் "பற்று' மிகக்
கொண்டவர்கள், ஏதாவதோர் செய-ன் மூலம், இந்தத் தரணி புகழ்ந்திடும்
நிலையினைத் தாயகம் பெற்றிட வேண்டும், அந்த நோக்கத்துடன்
நாம் நமது அறிவாற்றலைப் பயன்படுத்துதல் வேண்டும் என்று
முனைந்திடுவர்.
குறுக்கு வழி தேடிடும்
இயல்பினர், பிறநாடுகளைத் தாக்கித் தாழ்த்திப் பொருள்திரட்டி,
தன் தாயகத்தின் நிலையினை ஒளியுள்ளதாக்கிட முயல்வர்.
எதற்காகவும் பாடுபடும் இயல்பு
அற்றோர், உள்ளது போதும் என்றெண்ணி உறங்கிடச் செய்வர்;
நமக்குள்ள தாயகம் இந்நிலையிலுளது, நாம் என்ன செய்வது என்று
இருந்துவிடுவர்,
இதுபோல உள்ள பல்வேறு நினைப்பினரும்
நிலையினரும், தத்தமது தாயகத்திடம் "பற்று' அற்றவர்களாகிவிடுவதில்லை.
புகழ்பாட மறப்பதில்லை.
நாட்டுப்பற்றுக் காரணமாக
எழுதப்பட்டுள்ள ஏடுகளைப் பார்க்கும்போது, தாய்நாட்டுச்
சிறப்பினை விளக்கிடுவது மட்டுமல்ல, பிற நாடுகளைத் தாழ்த்திடும்
மனப்போக்கும் மிகுதியாக எழுதப்பட்டிருப்பதனைக் காணலாம்.
தமது நாடு தவிர மற்ற நாடுகளை,
மிலேச்சர்கள் நாடு என்றும், இருண்ட கண்டம் என்றும், அநாகரிக
நாடு என்றும் எழுதிடுவதனை முறை எனக் கூடக் கொண்டிருந்தனர்,
வரலாற்று ஏடு தீட்டிடும் திறன் படைத்தோர் கூட.
டாக்டர் ஜான்சன் என்பார்
ஆங்கில நாட்டவர், அறிவு மிக்கவர்! அவர் அகராதி தயாரித்தபோது
அதிலே "ஓட்' எனும் தானியத்தைப் பற்றிப் பொருள் தரும்போது
தமது நாட்டுப் பற்றினை மட்டுமல்ல, பிற நாட்டினைத் தாழ்த்திடும்
போக்கினையும் வெளிப்படுத்திக் கொண்டார்.
ஓட் - ஒருவகைத் தானியம்;
இது இங்கிலாந்து நாட்டில் குதிரைகளுக்குத் தீனி; ஸ்காத்லாந்து
நாட்டு மக்களுக்கு இது உணவு.
என்று பொருள் தந்திருந்தார்
ஜான்சன். சங்கீதமா அது!' காது குடைகிறது என்றும், உணவா
அது, குமட்டல் எடுக்கிறது என்றும், நடனமா அது, பேயாட்டமாக
இருக்கிறது என்றும், பேச்சா அது, கூச்சலாக இருக்கிறது
என்றும், மற்ற நாடு குறித்துக் கூறுவர்; வீண் வம்பு செய்திடுவோர்
அல்ல, விவரம் தெரிந்தவர்கள் கூட!
கையாலே தொட்டுப் சாப்பிடுகிறார்கள்!!
என்று மேனாட்டினர், நமது சாப்பிடும் முறை பற்றிக் குறிப்பிடுகிறார்கள்
அல்லவா?
அதிலே கேலி மட்டுமல்ல.
பச்சாதாபம் கூடக் கலந்திருக்கிறது தமது நாட்டிலுள்ள உணவு
உட்கொள்வதற்கான பழக்கந்தான் சிறந்தது, மேலானது, நாகரிக
மக்களுக்கு உரியது, எவரும் பின்பற்ற வேண்டிய விதத்தது
என்ற அழுத்தமான நம்பிக்கை அவர்களை அவ்விதம் பேசச் சொல்கிறது.
ஆணும் பெண்ணும் கட்டிப்
பிடித்துக் கொண்டு நடனமாடுகிறார்கள்; கண்றாவி! சகிக்கவில்லை!!
என்று, மேனாட்டு நடனம் குறித்து நாம் பேசும்போது, என்ன
எண்ணிக் கொள்கிறோம்; அதுபோலத்தான் அவர்கள் நம்முடைய முறைபற்றி
எண்ணுகிறார்கள்.
சர்வதேச உணர்ச்சி, நாட்டுப்பற்று
என்பதைத் தேவையற்றது ஆக்கிவிடத்தக்க வல்லமை பெற்றிடவில்லை
என்றாலும், ஒரு நாட்டவர் மற்ற நாட்டவரின் பழக்க வழக்கங்களைக்
கேலி செய்து, கண்டித்து, கேவலப்படுத்தும் போக்கை வெகுவாகக்
கட்டுப்படுத்திவிட்டிருக்கிறது.
இப்போது நம்முடைய விருந்தினராக
வருகிற மேனாட்டர், கையால் எடுத்துச் சாப்பிடுவதும் நாம்
கரண்டி கொண்டு சாப்பிடுவதுமான நிலை!
நாட்டுப்பற்று கேவலப்படுத்தப்பட்டால்,
கேலி செய்யப்பட்டால், சீற்றம் பீறிட்டுக் கொண்டு கிளம்பும்.
மனத்திலே வேதனைப் புயல் வீசும், பகை மூளும் என்பதனை உணர்ந்து
கொண்டுள் ளனர். இது நாட்டுப்பற்று இன்றும் எத்தனை அழுத்தமான
இடம்பெற்றிருக்கிறது என்பதனை நன்றாக விளக்குகிறது.
"நாட்டுப்பற்று'க் கொள்வதிலே
கெடுதல் ஏதுமில்லை; அந்தப் பற்று; தக்கவிதமாகப் பக்குவப்படுத்தப்பட்டால்,
நற்பலனே கிடைத்திடுகிறது.
வருகிற தொல்லையெல்லாம்,
அவரவர் தத்தமது நாட்டிடம் "பற்று' கொண்டிருப்பதிலே ஏற்படுவதில்லை,
ஒரு நாட்டுப் பற்றுக்கும் மற்றோர் நாட்டுப்பற்றுக்கும்
போட்டி - பகை - ஏற்படும்போதும், நாட்டுப் பற்றுக்கும்,
மற்ற வகையினதான இனப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று போன்றவைகளுக்கும்
மோதுதல் ஏற்படும்போதுதான், தொல்லை மட்டுமல்ல, ஆபத்தே மூண்டுவிடுகிறது.
இந்த நாட்டு மகன்தானே நீ?
ஆமய்யா! ஆம்! இந்த நாட்டவனே!
பிறந்த நாட்டை இகழ்பவன் பேயன்? ஒப்புக் கொள்கிறாய்!
ஆம்! பிறந்த பொன் நாட்டை எவனே இகழ்வான்?
இந்த நாடு ஏற்றம் பெறவேண்டும்.
ஆம்! ஏற்றம் பெறத்தான் வேண்டும்.
அதற்காகப் பாடுபடத் தயார்தானே?
நிச்சயமாகத் தயார்!
எந்த இன்னலையும் ஏற்றுக் கொள்ளத் தயார்?
என்ன இன்னலையும் பொருட்படுத்த மாட்டேன்.
நாடு வாழ்ந்திட, எதனையும் இழந்திடச் சம்மதம். உயிரையும்!
இதிலென்ன ஐயப்பாடு! உயிரையும் தரச் சம்மதிக்கிறேன்.
உயிரையும்! நிச்சயமாகத்தானே! அப்படியானால். . .
என்ன செய்திட வேண்டும் செப்பிடு!
இந்த நாடு ஏற்றம் பெற,
வாழ்ந்திட, நாட்டு மக்கள் சிலர், இது என் மதம் என்றும்,
சிலர் அது என் மதம் என்றும் கூறும் மடமை தொலைய வேண்டும்.
ஒரே மதமாக வேண்டும்! நாட்டுக்கு ஒரு பொது மதம்! தனித்தனியாக
உள்ள பல்வேறு மதங்கள் உள்ளனவே, அது கூடாது. ஒரு நாடு -
ஒரு கொடி! இல்லையா! அதுபோல ஒரு நாடு - அதற்கு ஒரு மதம்!
இந்த இலட்சியத்துடன், நீ உன் மதம் என்று எதையோ கூறிக்
கொள்கிறாயே, அந்த மதத்தை விட்டுவிட வேண்டும்; நாட்டுக்கு
என நல்லோர் பார்த்து எந்த மதத்தைத் தேர்ந்தெடுக்கிறார்களோ,
அதனை உன் மதமாகக் கொண்டிட வேண்டும்; நாடு வாழ்ந்திட, ஏற்றம்
பெற! என்ன சொல்லுகிறாய்?
தம்பி! எத்தனை பெரிய சிக்கல்
புரிகிறதா! நாட்டுப்பற்று - மதப்பற்று - இருவேறு "பற்று'
- இவை இரண்டிலே, ஒன்றின் ஆணைக்கு ஏற்ப மற்றொன்று அடங்கி
நின்றிட வேண்டும் - இப்படி ஒரு சிக்கல் எழுந்திடின், என்ன
ஆகும்! நினைப்பதற்கே நடுக்கமெடுக்கிறதல்லவா?
ஒரு நாட்டிலுள்ளோர் அனைவரும்
ஒரே மதத்தினராக இருந்தாக வேண்டும்; அப்போதுதான் "நாட்டுப்பற்று'
ஏற்படும் என்று கூறுவதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
ஒரு நாட்டுக்குள்ளாகவே பல
மதங்கள் உள்ளன; ஒரே மதம் பல நாடுகளிலே உள்ளது!
ஒரு நாட்டுக்கு ஒரு மதம்
என்பது, நாட்டுக்கான இலக்கணங்களிலே ஒன்று அல்ல.
நாடு - ஒரு எல்லைக்கோட்டுக்குள்
நெடுங்காலமாக அமைந்துள்ள ஒரு பூபாகம்; நீண்ட நெடுங்காலமாக
அங்கு வாழ்ந்து வரும் மக்கள், அந்தப் பூபாகத்தில், தலைமுறை
தலைமுறையாகப் பாடுபட்டுப் பாடுபட்டு வளம் ஊட்டி வந்திருக்கிறார்கள்,
எழில் கூட்டி இருந்திருக்கிறார்கள் அந்தப் பூபாகத்தையோ,
அதிலுள்ள பொருள்களையோ, வேறொரு பூபாகத்தவர் தாக்கிட, கெடுத்திட,
பறித்திட முயன்றபோது கடும் போரிட்டுத் தடுத்திருக்கிறார்கள்.
விரட்டி அடித்திருக்கிறார்கள். அந்தப் பூபாகத்துத் தட்ப
வெப்ப நிலைமைக்கேற்ற வாழ்க்கை முறை அமையப்பெற்று, அதன்
காரணமாகச் சில பல தனி இயல்புகள், திறமைகள் பெற்றிருக்கிறார்கள்,
உழைப்பின் காரணமாக. உறைவிடமாக்கிக் கொண்டதன் காரணமாகவும்,
பாதுகாத்திட்ட காரணத்தாலும், அந்த நாடு அவர்களுக்குச்
சொந்தமாகிறது; அதனிடம் ஓர் பந்தம் உண்டாகிவிடுகிறது; அந்த
மக்களின் வாழ்வு அந்த நாட்டு இயல்போடு பின்னிப் பிணைந்துவிடுகிறது;
அதனால் ஒரு பற்று.
இந்தப் "பற்று' கெடும்விதமாக
வேறு ஏதேனும் உணர்ச்சி - அல்லது பற்று - அவர்களுக்கு எழுந்திடுமானால்,
அத்தகைய உணர்ச்சியை - பற்றினை - விட்டாக வேண்டும். நாட்டுப்பற்று
நாசமாகாதிருக்குமானால், ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்,
நெடுங்காலமாக, கூட்டாக வாழ்ந்து வரும் பூபாகம், நாடு என்பது
போல, மதம் என்பதற்கு, ஒரு பூபாகம் கிடையாது; இன்ன எல்லையிலிருந்து
இன்ன எல்லைவரை உள்ள இடம், இன்ன மதம் இருந்திடும் இடம்
என்றோர் விதி இல்லை.
ஒரே நாட்டுக்குள் பல மதம்,
பல நாட்டுக்குள் ஒரு மதம் என்ற நிலை இருக்கும்போது, மதத்தையும்
நாட்டையும் பிணைத்துப் பேசுவது பேதைமை - பிணைத்துப் பேசி
நாட்டுப் பற்றுக்காக உன் மதப் பற்றினை நீக்கிக்கொள் என்று
கட்டளையிடுவது கொடுமை; அத்தகைய கட்டளையிட்ட எந்த அரசும்
நிலைத்து நின்றதில்லை. மதம், மனத்திலே இடம்பெறும், ஓர்
தூய்மை - நாட்டு எல்லைக்குக் கட்டுப்பட்டுக் குறுகுவதுமல்ல,
பெருகுவதுமல்ல. மதம் பரவிட வேண்டும் என்பதற்காகவும், பல
நாடுகளிலே நாம் நம்பிடும் மதம், அரச மதம் ஆகிட வேண்டும்
என்பதற்காகவும் நடத்தப்பட்ட புனிதப் போர்களே, இரத்தம்
பெருகிட வழி செய்ததேயன்றி, மதத்துக்கும் நாட்டுக்கும்
பிணைப்பு ஏற்படுத்த முடியவில்லை. எனவே நாட்டுப்பற்றுக்காக
மதப்பற்று நீக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்பவர், நாட்டுப்பற்று
மதப்பற்று எனும் இரு உணர்ச்சிகளின் தன்மையையுமே அறியாதவர்கள்.
அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதும் எதிர்த்து நிற்பதும்
நாட்டுப் பற்றுக்கு ஊறு செய்வதாகாது; கொடுங்கோலை எதிர்த்திடும்
கடமையாகிவிடும்.
பிறர் கட்டளையிடுவது கொடுமை,
அதுபோன்றே தனி மனிதர்களுக்கே, தமக்குள்ளாகவே, நாட்டுப்பற்று
முக்கியமா, மதப்பற்று முக்கியமா, என்பது போன்ற குழப்பம்
ஏற்படுவது அறியாமை அல்லது அகந்தையின் விளைவு.
கிருத்தவமார்க்கம் பரவியபோது,
அரசின் ஆணையை ஏற்பதா, அருளாளர் ஆணையின்படி நடப்பதா என்ற
சிக்கல் எழத்தான் செய்தது. ரோம் சாம்ராஜ்யாதிபதி கிருத்தவ
மதத்தையே தடுத்திடலானான். அரச ஆணையைக் குலைத்து, நாட்டுப்பற்றை
நாசமாக்கி, மக்களைக் கெடுத்திடுவது அம்மதம்! - என்று முழக்கமெழுப்பினான்.
நமது மதத்தை மதிக்க மறுத்து,
அழித்திடத் துடித்திடும் இந்த அரசுக்கு நாம் அடங்கிக்
கிடப்பதா, வரி செலுத்துவதா என்று கிருத்தவ மார்க்கத்தினரில்
சிலர் கொதித்தெழுந்து கேட்ட போது ஏசு,
அரசனுக்கு அளிக்க வேண்டியதை
அரசனுக்கு அளித்திடுக!
ஆண்டவனுக்குத் தரவேண்டியதை
ஆண்டவனுக்குச் செலுத்திடுக!
என்று கூறினார். கிருத்தவ
மதத்தை அழித்திடத் துடித்த அரசு என்ற போதிலும், அந்த அரசின்
கீழ் உள்ள குடிமக்கள் என்ற முறையில், வரி கட்டத்தான் வேண்டுமென்றார்,
நமது மதத்திற்கென ஏன் ஒரு "ராஜ்யம்' அமைத்திடக் கூடாது
என்று கேட்டவர்களுக்கு ஏசு,
என் ராஜ்யம் இந்த லோகத்தில்
இல்லை என்று கூறினார்.
மதம், மனிதனுடைய மனத்தை
ஆட்சி செய்வது - ஒரு மண்டலத்தை அல்ல.
எந்த மண்டலத்திலே உள்ளவரெனினும்,
அவர்கள் தமது மனத்தில் எந்த மதத்திற்கு இடமளிக்கின்றனரோ,
அந்த மதத்தினராகின்றனர்.
நாட்டு எல்லை, மத உணர்ச்சிக்குத்
தடுப்புச் சுவர் எழுப்புவதில்லை. எனவே நாட்டுப்பற்றா,
மதப்பற்றா, எது தேவை என்ற கேள்வியே கோணல். அதற்கான ஆணை
பிறப்பித்தல் கொடுமை.
இன்று பல மதங்கள் இடம்
பெற்றுள்ள நாடுகளிலும், பொதுவாக அறிவுத் தெளிவுள்ள நாடுகளிலும்,
மதத்திற்கும் அரசுக்கும் தொடர்பு ஏற்படுத்தாமல், அரசு,
மதச்சார்பற்றதாக அமைக்கப்படுகிறது. இந்தியா அதுபோல, ஆனால்,
பாகிஸ்தான், மதத்தைப் பிணைத்துள்ள அரசு - இஸ்லாமியக் குடியரசு
என்றே முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாட்டிலே, மிகப் பெரும்பாலான
மக்கள் ஒரு மதத்தையும் குறைந்த எண்ணிக்கையுள்ளோர் வேறோர்
மதத்தையும் கொண்டிருக்கலாம்; ஆனால், நாட்டுப்பற்று என்பதில்
மதவேறுபாடு குறுக்கிட்டுக் குலைப்பதில்லை, மத வேறுபாடு
இருப்பதைக் காட்டி நாட்டுப்பற்று இன்னாருக்கு இருக்க முடியாது
என்று வாதாடுவதுமில்லை.
ஒரு நாட்டுக்குள், பல மதத்தினர்
இருப்பினும் அனைவருக்கும் அந்த நாட்டிடம் பற்று இருந்திடும்;
அதிலே ஐயப்பாடு கொள்வது தவறு என்பது போலவே, ஒரே மதம் பல
நாடுகளிலே இருப்பதாலே அந்த நாடுகள் யாவும், நேச நாடுகளாக
வாழ்ந்து வரும் என்றும் சொல்வதற்கில்லை. வரலாற்று நிகழ்ச்சிகள்
பல உள.
இப்போது மலேஷியாவை அழித்தொழித்தாக
வேண்டும் என்று உருட்டி மிரட்டிக் கொண்டுள்ள இந்தோனேஷியா,
இஸ்லாம் மதத்தினர் நிரம்பிய நாடு, மலேஷியா போலவே. ஒரு
இஸ்லாமிய நாடு மற்றோர் இஸ்லாமிய நாட்டை அழித்திடத் துடிக்கிறது.
மதம், அந்த இரண்டு நாடுகளுக்குள் நேசத் தொடர்பை ஏற்படுத்த
வில்லை; பகை கக்கப்படுகிறது. பகை மூண்டிருப்பதற்குக் காரணம்
வேறு.
அதுபோலவே, வட வியட்நாம்
தென் வியட்நாம் இரு பகுதிகளும் புத்தமதத்தார் பெருமளவு
உள்ள இடங்கள்; ஒன்றோடொன்று மோதிக் கொள்கின்றன. காரணம்
வேறு. "நாட்டுப்பற்று' அந்த நாட்டிலே உள்ள அனைவரும் ஒரே
மதத்தினராக இருந்தால் மட்டுமே ஏற்படும் என்பது மடமை.
அதுபோலவே, மதப்பற்று காரணமாக,
தனது நாட்டிடம் பற்றுக் கொள்ளாது, அதே மதத்தைக் கொண்டுள்ள
வேறு நாட்டுக்குத் துணை நிற்பதும் மடமை, ஆனால், மிகப்
பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய கெடுமதி பிறப்பதில்லை.
ஒரு நாட்டிடம், அங்குப்
பிறந்த காரணத்தால் அங்கு முன்னோர்கள் வாழ்ந்திருந்த காரணத்தால்
ஏற்பட்டுவிடும் தொடர்பு, அங்கு உழைத்துப் பயன்பெற்று வாழ்ந்து
வருவதனால் பலப்பட்டுப் பலப்பட்டு, "பற்று' ஆகிறது. இந்தப்
பற்று வேறு எந்தப் பற்றுக் காரணமாகவும் கெடுவதில்லை, வழி
மாறுவதில்லை.
நாட்டுப்பற்று ஏற்பட வேண்டுமானால்
நாட்டிலுள்ளோர் அனைவரும் ஒரே மதத்தினர் ஆதல் வேண்டும்
என்பது எத்துணை கொடுமை நிரம்பியதோ அதுபோன்றதேதான், நாட்டுப்பற்று
ஏற்பட, அல்லது கெடாதிருக்க, நாட்டினி லுள்ளோர் அனைவரும்
ஒரே மொழியினராக இருந்திட வேண்டும். ஒரே மொழியின் ஆட்சியை
ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது.