சிற்சில நாடுகளிலே மட்டுமே,
ஒரு நாட்டுக்கு ஒரு மொழி என்ற நிலை இருக்கிறது; சிக்கல்
இல்லை.
பற்பல நாடுகளில், பல மொழியினர்
கொண்டதாகவே சமூகம் அமைந்திருக்கிறது. ஆனால், வேறு வேறு
மொழி பேசிடுவோராக இருப்பினும், அந்த நாட்டிலே, இரத்தமும்
வியர்வையும் கொட்டி வளப்படுத்தியவர்கள், வாழ வைத்தவர்கள்
அந்த மக்கள்; அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள "பற்று'
ஒருபோதும் குன்றாது, குறையாது, "மாத்துக்' குறைவானதுமாகாது.
ஒரு மத ஆதிக்கம், ஒரு மொழி
ஆதிக்கம், ஒரு இன ஆதிக்கம் புகுத்த வேண்டும் என்ற கெடுமதி
கொண்டவர்கள், தங்கள் திட்டத்துக்கு ஆதரவாக, ஒரு மதம்,
ஒரு மொழி, என்பதனை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களை, எதிர்த்து
நிற்பவர்களை இவர்கள் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்று கூறிப்
பழி சுமத்தி ஒழித்துக்கட்ட எண்ணிடுவர்; வெற்றி கிட்டாது
எனினும் முயற்சியிலே முனைந்து நிற்பர்.
எந்த ஒரு "பற்று'ம் மக்களைக்
கொடுமைக்கு ஆளாக்கிடப் பயன்படுத்தப்படுமானால், அந்தப்
பற்றுக்கு இயற்கையாக உள்ள தூய்மை கெட்டொழிந்து போகும்.
"பற்று' பாதுகாப்புக்கு,
வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட வேண்டுமேயன்றி, பிற "பற்று'க்களை
அழித்திடப் பயன்படுத்தப் படக்கூடாது, அதுபோலப் பயன்படுத்தியவர்கள்
அழிந்தொழிந்து போயினர்.
நாட்டுப்பற்று எனும் தூய்மைமிக்க
உணர்ச்சி இட்லரால் எவ்விதமான நாச வேலைக்குப் பயன்படுத்தப்
பட்டது என்பதனையும், அதன் காரணமாக, உலகுக்கு வந்துற்ற
கேட்டினையும், அந்தக் கேட்டினை மூட்டிவிட்ட இட்லர் என்ன
கதியானான் என்பதனையும் நமது வாழ்நாளிலேயே கண்டு விட்டோமே!
கேடு செய்திட, கொடுமை செய்திட,
ஒரு பற்று பயன் படுத்தப் படுமானால் அந்தப் "பற்று' தூய்மை
இழந்து, வலிவிழந்து, உயிரிழந்து போய்விடும். இதனை விளக்கிடும்
சான்றுகள் வரலாற்றிலேயே நிரம்ப உள்ளன.
"பற்றுக் கொண்டிருப்பவர்களால்
வரக் கூடியதைக் காட்டிலும், அந்தப் "பற்று'ப் பற்றித்
தூண்டிவிடும் கெடுமதி யாளர்களால் வந்திடும் கேடே அதிகம்,
நாட்டுப்பற்றுக் கொண்டவர்கள், மற்ற எல்லாவற்றிலும் ஒன்றுபட்ட
கருத்தினராகவே இருந்திடுவர் என்று எண்ணுவதும், இருந்திட
வேண்டும் என்று கூறுவதும் தவறு.
மதம், மொழி, இனம் என்பன
போன்ற அடிப்படைகளிலே மட்டும் அல்ல, மிகச் சாதாரணமான வேறு
எத்தனையோ விஷயங்களில், வெவ்வேறு விதமான உணர்ச்சிகள் -
பற்று - இருக்கலாம்; இருந்திடக் காண்கிறோம். உணவு, உடை,
கல்வி முறை, தொழில் நிலை, கலை உணர்வு, செல்வநிலை - எத்தனையோ
இவை போல ஒரே நாட்டினரிடையே வெவ்வெறு விதமான உணர்ச்சியினை
- "பற்றை' ஊட்டிட.
குற்றவாளிக் கூண்டில் நிற்பவனும்,
நீதிபதியும் ஒரே மதம்! அதனால்? இருவரும் ஒரே மொழி பேசுவோர்!
அதனால்? இருவரும், ஒரே நாட்டினர்! அதனால்!
நீதி அதற்கு ஏற்றபடி நெளியுமா?
இல்லை, நிமிர்ந்து நின்றிடும்.
ஆனால், வேண்டுமென்றே சிலரும்,
விவரமறியாது சிலரும், தமக்குச் சாதகமாக இந்தப் "பற்று'களைச்
சுட்டிக்காட்டிப் பயன்பெறப் பார்ப்பர், விழிப்பாக இருந்திடல்
வேண்டும்.
"அட! நம்ம ஊர்க்காரர்!''
என்று கூறுவதால் அவன் சொன்ன விலையை அப்படியே கொடுத்து
விடுகிறோமா? பளிச்சென்று அந்த உணர்ச்சியை நமக்குச் சாதகமாக்கிக்
கொள்ள எண்ணி, "அட! நம்ம ஊர்க்காரராக இருந்துமா இந்த அநியாய
விலை சொல்லுகிறாய்'' என்று கேட்கிறோம்.
ஒருவரை ஒருவர் வீழ்த்த,
தாழ்த்த, ஏய்த்திட, "பற்று' பற்றிப் பேசித் தூண்டிவிடுவது,
தந்திரமுறைகளிலே ஒன்று; வெள்ளை உள்ளத்தினர் ஏமாந்து போய்விடுவர்.
ஒரே நாட்டுக்காரர் - நாட்டுப்பற்று
உள்ளவர் என்பதாலே, அந்த நாட்டுக்காரர்களிலே ஒரு சாரார்,
கள்ள வாணிபம் செய்தால் பொறுத்துக் கொள்ள முடிகிறதா! "நாட்டைக்
கெடுத்திடும் இவன் போன்றாரை விட்டு வைக்கக் கூடாது, எத்தனை
அக்கிரமம் செய்கிறான்! இத்தனைக்கும் அவன் அன்னியன் அல்ல!
நம்மவன்!! நம்ம நாட்டுக்காரன்!'' என்று கூறுகிறோம் கொதிப்புடன்.
நம்ம நாட்டுக்காரன்தான்
களவாடுபவன் ஒவ்வொருவனும். அவன் களவாடும் பொருளும் வேற்று
நாட்டுக்குப் போய் விடவில்லை, நம் நாட்டிலேயேதான் இருக்கிறது.
அப்படி யானால் பரவாயில்லை என்ற நிம்மதியா பெறுகிறோம்!
தம்பி! எதற்குக் கூறுகிறேன்
தெரிகிறதா, நாட்டுப்பற்று எனும் உணர்ச்சி நாட்டவரை ஆட்கொண்டிருக்கிறது
என்ற காரணத்தால், அந்த உணர்ச்சியைத் தட்டிவிட்டு, கொடுமை
செய்திட, ஏய்த்திட, அடிமைப்படுத்திடப் பலர் முனைந்திடக்
கூடும். விழிப்பாக இருந்திட வேண்டும்; "பற்று' என்பது
எத்தகையது, என்ன பயன் தருவது என்பதனைத் தெளிவாகத் தெரிந்து
கொள்ள வேண்டும்.
நாட்டுப்பற்று அல்லது வேறு
ஏதேனும் ஓர் பற்று நமக்கு இருப்பது என்பது ஒன்று. வேறொருவர்
அந்தப் பற்று நமக்கு இருப்பதனைக் கண்டறிந்து நமது மனத்திலே
வெறி அல்லது வெறுப்பு மூட்டிவிட்டுத் தவறான வழியில் அழைத்துச்
செல்வது என்பது முற்றிலும் வேறானது.
நாட்டுப்பற்று அல்லது வேறு
எந்தப் பற்றுக் காரணமாக நாம் எவ்விதமான செயலில் ஈடுபடுவது,
போக்கினை மேற்கொள்வது என்பதுபற்றி நாம் நமது அறிவுத் தெளிவினைக்
கொண்டு கண்டறிந்து முடிவெடுக்க வேண்டுமேயன்றி, பிறருடைய
கருவியாகி விடக்கூடாது.
மற்றொன்றையும் மறந்து விடக்கூடாது;
மற்ற எந்த வகையான பற்றுடன் நாம் வாழ்ந்திட வேண்டுமென்றாலும்,
நாம் இருந்திட ஒரு நாடு, அந்த நாட்டுக்கு ஒரு நிலையான
வாழ்வு, அடிமைப்படுத்தப்படாத நிலை இருந்தாக வேண்டும்.
ஒரு நாட்டுக் குடிமகனாக இருந்து கொண்டுதான், மொழிப்பற்று,
மதப்பற்று போன்ற எந்தப் பற்றினையும் நாம் பெற்றுப் போற்றி
வாழ்ந்து வரமுடியும்; நாடோடி நிலையோ, அல்லது வலுத்தவனுடைய
தாக்குதலுக்கு அடிபணிந்திடும் போக்கோ இருந்திடுமானால்,
வேறு எந்தப் "பற்றும்' கொண்டிட வழியே கிடைக்காது. சுவர்
இருந்தாலன்றோ சித்திரம்!!
ஆகவேதான், மற்றப் பல்வேறு
பற்றுகளையும்விட நாட்டுப்பற்று முக்கியமானதாகிறது.
அதனால்தான், நாட்டுக்கே
பகைவர்களால் ஆபத்து என்ற நிலை பிறந்திடும்போது மற்ற எந்த
"பற்று'க் காரணமாகவும், நாட்டு மக்கள் பிளவுபட்டு, பேதப்பட்டு
நின்றிடுவது கூடாது; அது எந்தப் பற்றுக்கும் நாம் உரியவர்களல்ல
என்ற நிலையை மூட்டிவிடும்.
நாட்டின் நிலை பகைவர்களால்
கெடுக்கப்பட முடியாத வலிவுடன் இருந்திடச் செய்வதும், அந்த
வலிவினை அழித்திடப் பகைவர் வந்திடின், அவர்களை முறியடிப்பதுமான
நோக்கமொன்றே நமது நோக்கம் என்று பணியாற்றுவதும் தேவை.
இந்தக் காரணத்தால்தான்,
நாட்டுக்கு ஆபத்து என்ற நிலை மூண்டிடும்போது, நாட்டுப்
பற்று உணர்ச்சிக்கே முதலிடமும் முழு இடமும் தருகிறார்கள்;
மற்றப் பல "பற்று'கள் பற்றிய பேச்சு, விவாதம், சச்சரவு
ஒதுக்கி வைக்கப்படுகிறது.
இசையிலே நாட்டம் இருக்கலாம்
ஒருவருக்கு, அதனால் பகைவனின் குழலோசையில் மயங்கி, அவன்
நமது நாட்டினைத் தாக்கிடும்போது, இராகம், தாளம் பற்றிய
நினைப்பிலா மூழ்கி இருப்பது! அறிவுள்ளோர் அதனைச் செய்யார்.
நாட்டுக்குப் பேராபத்து
வந்திடும்போது, முரசுதான் இசை!
இத்தகைய ஏற்றம் நாட்டுப்பற்று
எனும் உணர்ச்சிக்கு உண்டு, எவரும் ஒப்புக் கொள்வர்; என்றாலும்
வேறு எந்த விதமான "பற்றும்' மக்கள் கொண்டிடவே மாட்டார்கள்,
கொண்டிடக் கூடாது என்பதல்ல பொருள். "பற்று' பலவற்றிலே
இருக்கலாம்; ஒரே நாட்டவருக்குள்ளேயே ஒவ்வொருவருக்கு ஒவ்வோர்
விதமான "பற்று' இருக்கலாம்; அதன் காரணமாக அவர்களுக்குள்
வேறுபாடுகள் இருக்கலாம், விவாதம் நடத்தலாம். ஆனால், பகைவர்
பாய்ந்திடும்போது மற்ற எத்தனையோ துறைகளில் மாறுபாடான கருத்துக்
கொண்டவர்களும், வெவ்வேறு பற்றுக் கொண்டவர்களும், நாம்
அனைவரும் ஒரே நாட்டினர்! நாட்டுப்பற்று என்பதில் நாம்
அனைவரும் ஒன்று! எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு நின்று
பகைவர்களை வீழ்த்திட வேண்டும் என்று உறுதி பெறுவர்.
இதனை விளக்கிடும் நிகழ்ச்சிகள்
பலப்பல உள, வரலாற்று ஏடுகளில்; நாமே இன்று இந்த நிலை நமது
நாட்டிலே மலர்ந்திடக் கண்டிருக்கிறோம்.
இனி மற்றோர் விதத்திலும்
மற்றப் பற்றுக்களைக் காட்டிலும் நாட்டுப்பற்று ஆழமானது,
அழுத்தமானது, விரிந்து பரந்து நிற்பது என்பதனை உணரலாம்.
மதம், இனம், மொழி என்பனவற்றிலே
உள்ள "பற்று' பற்றிப் பார்த்திடும்போது, ஒரு நாட்டு மக்களில்
ஒவ்வொரு பிரிவினர் ஒவ்வோர் மதத்தில், இனத்தில், மொழியில்
"பற்று'க் கொண்டவர்களாக இருப்பர். நாட்டு மக்கள் முழுவதும்
ஒரே விதமான பற்றுக் கொண்டவர்களாக இருந்திடார். ஆனால்,
நாட்டுப்பற்று எனும் உணர்ச்சியோ, அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும்
இருப்பது.
ஒரு கோடி பேர் கொண்ட நாட்டு
மக்களை இன அடிப்படையில் பிரித்துக் கணக்குப் பார்க்கும்போது,
15 இலட்சம் மக்கள் இன்ன இனம், 25 இலட்சம் மக்கள் இன்னோர்
இனம், 20 இலட்சம் மக்கள் வேறோர் இனம் என்று இருக்கக் கூடும்.
மொழியிலும் அதுபோல, மதத்திலும் அப்படியே, பிரிவுகள் இருக்கும்.
ஆனால், அந்த நாட்டு மக்கள்
என்ற நிலையில் கணக்கெடுக்கும்போது ஒரு கோடி!
கத்தோலிக்கர், பிராடெஸ்டெண்டு,
பௌத்தர், முஸ்லீம், இந்து என்று மதத்தின் அடிப்படையில்
பிரித்துக் கணக்குப் பார்க்கும்போது, ஒரு நாட்டு மக்கள்
அவ்வளவு பேரும் ஒரே பட்டியலில் இருப்பதற்கில்லை.
நாட்டு மக்களே! வாரீர்!
என்ற அழைப்பு கிடைத்திடும் போது அந்த நாட்டு மக்கள் தொகை
அவ்வளவும் திரள்கிறது. கத்தோ-க்கர்களே! வருக! பௌத்தர்களே
வருக! என்று அழைத்திடும்போது, அந்த நாட்டு மக்கள் அவ்வளவு
பேர்களும் அல்ல, அவர்களிலே ஒரு பிரிவினர் மட்டுமே வர முடியும்!
மக்கள், பல்வேறு பிரிவினர்களாக
இருந்து வருகின்றனர். ஆனால், இந்தப் பிரிவுகளில், மிகப்
பெரிய அளவுள்ள மக்களை ஒரே முகாமில் கொண்டு வந்து நிறுத்துவது,
நம் நாடு எனும் உணர்ச்சிதான். நாட்டின் பாதுகாப்பு, வளர்ச்சி
எனும் பணியாற்றிடும்போது, மற்ற எந்தத் தனித்தனி உணர்ச்சிகளையும்
விட, நாட்டுப் பற்று எனும் உணர்ச்சியே மேலோங்கி நிற்கும்;
நிற்கிறது.
உலகிலே பல நாடுகள்! பல
நாடுகளின் பிரதிநிதிகள் கொண்ட ஓர் மன்றத்துக்கு, ஒவ்வொரு
நாடும் குடிமகனா என்பதுதான் இலக்கணமாகக் கொள்ளப்படுகிறது.
மொழி, இனம், மதம், வேறுவிதமான பற்று, இது அல்ல.
ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு
இந்தியாவின் உறுப்பினராகச் சென்றவர். சக்ளா! அவர் பாகிஸ்தானின்
அடாத செயலைக் கண்டித்துப் பேசினார்; "இந்தியர்' என்ற முறையில்;
அவருடைய நியாயவாதத்தை முரட்டுத்தனத்தால் முறியடிக்கத்
துடித்தார், பாகிஸ்தான் உறுப்பினர் புட்டோ!
புட்டோவும் சக்ளாவும் இஸ்லாமியர்!
மார்க்கத்தால் ஒன்றுபட்டவர்கள்.
உலகிலே ஏதேனும் ஓரிடத்தில்,
இஸ்லாமிய மாநாடு நடைபெற்றாலோ மார்க்க மாநாடு நடைபெற்றாலோ
புட்டோவும் சக்ளாவும் இஸ்லாமியத்தின் பிரதிநிதிகள் என்ற
உரிமையுடன் கலந்து கொள்ள முடியும். ஆனால், நாடு என்ற பெயரில்
கூடும் போது, சக்ளா இந்தியாவுக்காக, புட்டோ பாகிஸ்தானுக்காக
என்பதுதான் நடைபெறும்; நடைபெற்றது; அதுதான் நியாயம்; நாட்டுப்
பற்றுக்கு அதுதான் சிறப்புமிக்க சான்று.
மக்களை நிறம் கருதிப் பிரித்திடின்,
கருப்பு, சிகப்பு, வெள்ளை, மாநிறம் என்று பிரித்திடின்,
ஒவ்வொரு வண்ணத் துக்கு ஒவ்வொரு நாட்டினர் என்று இருந்திடாது;
கருப்பு வண்ணமுடையார் எந்த நாட்டிலே இருப்பவராயினும் முகாமாவார்!
அதுபோன்றே ஒவ்வோர் வண்ணத்தினரும்,
படித்தவர் - படிக்காதவர்
செல்வர் - ஏழை
எனும் முறைப்படி மக்களைப்
பிரித்திடின் பல்வேறு நாடுகளிலுள்ள செல்வர்கள், அமெரிக்க
ராக்பெல்லரும் இந்தியாவின் டாட்டாவும், ஒரே முகாமிலும்
அமெரிக்க சுரங்கத் தொழிலாளியும் கோலார் தங்கவயல் தொழிலாளியும்
ஒரு முகாமிலும் சேர்ந்திட வேண்டிவரும்.
அந்த விதமாகப் பிரித்துப்
பார்ப்பது, மக்களின் பொருளா தார நிலையை அடிப்படையாகக்
கொண்டு; நாட்டு அடிப்படையில் அல்ல.
வைத்தியர் வரதப்பிள்ளை,
மருத்துவ மாநாட்டுக்குச் செல்கிறார்! மாநாட்டுத் தலைவர்
மகமத் மூசா! வரவேற்புத் தலைவர் பிரணதார்த்தி ஐயர்! செயலாளர்
செபாஸ்டியன்! என்று இருந்திடக் காண்கிறார். மதத்தின் அடிப்படையில்
ஒன்று சேர முடியாத மூசாவும் பிரணதார்த்தியும், செபாஸ்டியனும்
அவர்களுக்கு மருத்துவத் துறையிலே உள்ள "பற்று'க் காரணமாக
ஒன்றாகக் கூடுகிறார்கள் - மருத்துவத் துறையினரான நாம்!
என்று பேசுகின்றனர்! நமது பிரச்சினைகள் என்று கூறுகின்றனர்.
தம்பி! அதே மருத்துவ மாநாட்டில்,
சித்த வைத்தியர் சிதம்பரமும் இருப்பார், யூனானி வைத்தியர்
யூசுப் இருப்பார்; ஆயுர்வேத வைத்திர் ஆராவமுதும் இருப்பார்;
மேனாட்டு முறை பயின்ற சர்ஜன் செபாஸ்டியனும் இருப்பார்.
பொதுவாக மருத்துவ மாநாடு என்று இருப்பதால், மருத்துவத்தில்
உள்ள வெவ்வேறு முறையினரும், அந்த வேறுபாட்டினைக் கவனிக்
காமல், மருத்துவத் துறையில் உள்ள "பற்று'க் காரணமாக ஒன்று
கூடுகிறார்கள். மறந்துவிட்டேனே, லேடி டாக்டர் லலித குமாரியும்
அந்த மாநாட்டில் இருப்பார்.
அடுத்து ஓர் இடத்தில் சித்த
வைத்தியர்கள் மாநாடு என்றோ, யூனானி வைத்தியர் மாநாடு என்றோ,
ஆயுர்வேத வைத்தியர் மாநாடு என்றோ, அலோபதி வைத்தியர் மாநாடு
என்றோ கூட்டினால், பொதுவாக மருத்துவ மாநாடு என்று கூட்டப்பட்டதிலே
கலந்து கொண்டவர்கள் அனைவரும் இருந்திடுவார்களா! முடியாது!
நமது யூனானி முறை கைகண்டது
என்றோ
சித்த வைத்தியமே சிலாக்கியமானது என்றோ
ரிஷிகளும் தபோதனர்களும்
அருளிய முறை ஆயுர்வேதம் என்றோ இப்படி எந்தெந்தத் தலைப்பிலே
மாநாடு கூட்டப் படுகிறதோ, அந்தத் தலைப்பிற்குச் சொந்தம்
கொள்பவர்களின் பாணியில் பேச்சு அமையும்.
இசையைத்தான் எடுத்துக்
கொள்ளேன், இனிமை பொது, எந்தவிதமான இசைக்கும்; இசை என்றாலே
கேட்பவர்களை இசைய வைப்பது என்பதுதானே!
பொது இசை மாநாடு கூடினால்,
அமெரிக்க ஜாஸ் வாத்தியக்காரரும், தமிழக நாதஸ்வர வித்துவானும்
அலகாபாத் ஷெனாய் வித்துவானும், கல்கத்தா டோலக் வாத்தியக்காரரும்
கூடிப் பேசிடலாம்.
கீழ்நாட்டு இசை என்று மாநாட்டை
மாற்றிவிட்டால்? மேனாட்டு மெருகின் போன்ற மேதைகூட இயலாது.
மேனாட்டு இசை மாநாடு என்றால்?
தேன்தமிழ் இசைத்திடும் தேசிகருக்கு இடம் கிடைக்காது.
தம்பி! "பற்று'களின் வகையை
அதிகமாகப் பிரிக்கப் பிரிக்க, பற்றுக் கொண்டோரின் தொகை
குறைந்து போய் விடும்.
அதனை விளக்கத்தான் இத்தனை
மாநாடுகளுக்கு அழைத்துச் சென்றேன்.
புதுமை எழுத்தாளர் மாநாடு
புரட்சி எழுத்தாளர் மாநாடு
தேசிய எழுத்தாளர் மாநாடு
பகுத்தறிவு எழுத்தாளர் மாநாடு
என்று பல உண்டல்லவா? இவைகளிலே
கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள், எந்த நாடு, எந்த மொழியினர்
என்பதல்ல தகுதி - புதுமை - புரட்சி - தேசியம் - பகுத்தறிவு
- எனும் "பாணி'தான் முக்கியம்.
இந்த மாநாடுகளின் பெயருடன்
"தமிழ்' என்ற சொல்லை இணைத்துவிடு - ஆந்திரத்தின் தேசிய
எழுத்தாளரோ, கேரளத்தின் புரட்சி எழுத்தாளரோ, அந்த மாநாட்டில்
கலந்து கொள்ள முடியாது. நடையின் தன்மையைக் குறிப்பிடாமல்,
தமிழ் எழுத்தாளர் மாநாடு
என்று கூட்டினால் வரக் கூடிய
எழுத்தாளர்களின் எண்ணிக் கையைவிடக் குறைவாகத்தான், தமிழ்ப்
புரட்சி எழுத்தாளர், தமிழ்ப்புதுமை எழுத்தாளர் என்று தனித்தனியாக
அமைக்கப் படும் மாநாட்டிலே எழுத்தாளர் கலந்து கொள்வர்.
எழுத்தாளர் மாநாடு என்று
பொதுவாக மாநாடு கூட்டினால் நாடு, மொழி, பாணி எனும் எந்தப்
பாகுபாடுமின்றி, எழுத்தாளர் அனைவரும் கூடிடுவர். விரிவாக
இருக்கும்.
துறைகளைப் பிரிக்கப் பிரிக்க,
ஒரே துறையிலே நுணுக்கமான பிரிவுகளை வகுக்க வகுக்க, அப்படிப்பட்ட
பிரிவுகளின் அடிப்படையில் கூடக் கூட, கூடுவோரின் எண்ணிக்கை
குறைந்து கொண்டே போகும்.
தம்பி! இதே எழுத்தாளர்
மாநாட்டை மற்றோர் விதத்திலேயும் கூட்டிப் பார்க்கலாம்;
கற்பனையாகத்தானே! ஆகவே காசு செலவா? வந்துபார்!
நான் தந்த முந்தைய தலைப்புகளில்
எதையாவது ஒன்றை எடுத்துக்கொள் - புதுமை எழுத்தாளர் என்று
எடுத்துக் கொள்ளேன் - இந்த மாநாட்டை.
புதுமை எழுத்தாள இளைஞர்
மாநாடு என்று மாற்றிவிடு.
புதுமை எழுத்தாளர் மாநாட்டுக்கு
வருகிறவர்களின் தொகையைவிடக் குறைவானவர்களே கூடுவர்.
வேறோர் மாநாடு கூட்டிப்
பார்ப்போமா! இதோ, தம்பி! இந்த மாநாடு எப்படி இருக்கும்
பார்த்துச் சொல்லு.
புதுமை எழுத்தாள தொண்டை
மண்டலத் துளுவ வேளாள இளைஞர் மாநாடு!
எப்படித் தம்பி, மாநாட்டின்
பெயர்!! ஆனால், எத்தனை பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாய்!!
எனக்கு எழுத்தாளரிடம் "பற்று'
என்று கூறிக் கொள்வதற்கும், நான் பற்றுக் காட்டுவதானால்,
அவர்
எழுத்தாளராகவும் இருக்க
வேண்டும்,
புதுமை எழுத்தாளராகவும் இருக்க வேண்டும்.
இளைஞராகவும் இருக்க வேண்டும்,
தொண்டை மண்டலத் துளுவ வேளாளராகவும் இருக்க வேண்டும்.
என்றால், அந்தப் "பற்று'
விரிவானதாகவா அமையும்! மிகக் குறுகிப் போகும்; விரைவிலே
கருகிப் போகும்!
ஆகவேதான், தம்பி! "பற்று'
கூடுமானவரையில் குறுகிய நோக்கம் கொண்டதாக, குறிப்பிட்ட
அளவுள்ள சிறு தொகையினருக்கு மட்டுமே சம்பந்தப்பட்டதாக
இருத்தல் கூடாது.
"பற்று' நேர்த்தியானதாகவும்,
பயன்தரத் தக்கதாகவும் இருந்திட வேண்டுமானால், சமூகத்தில்
மிகப்பெரிய எண்ணிக்கையினர், இந்தப் "பற்று' எமக்கும் தேவை
என்று கூறத் தக்கனவற்றின் மீது இருந்திட வேண்டும். எண்ணிக்கை
பெருகிட வேண்டும் என்பதல்ல என் நோக்கம் - மிகப் பலருக்கும்
தேவைப்படு வனவற்றின் மீது "பற்று' இருந்தால்தான், அந்த
மிகப் பலரின் துணை கிடைத்து அந்தப் "பற்று' வளர்ந்து,
தரம் உயர்ந்து, பலன் மிகுதியாகிடும்.
"பற்று' என்பதிலே இத்தனை
சிக்கல் இருக்கிறதா என்றெண்ணிச் சலித்துக் கொள்ளாதே, தம்பி!
"பற்று' வேண்டும். நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் ஏதாவது
ஒன்றின் மீது "பற்று' ஏற்பட்டே தீரும். ஏற்பட்டுவிடும்
"பற்று' எல்லாம் பயனளித்திடும் என்று எண்ணிவிடாமல், அந்தப்
"பற்று' எத்தன்மையது, என்ன பலனைத் தரவல்லது, எத்துணை மக்களை
உள்ளடக்கியது, அந்தப் "பற்று' வேறு ஏதேனும் பற்றினைக்
கெடுத்திடக்கூடியதா என்பன பற்றி எண்ணிப் பார்த்திட வேண்டும்
என்பதற்கே இவ்வளவும் கூறினேன்.
எதிலும் "பற்று'க் கொள்ளக்கூடாது,
அது நம்மைப் பிணைத்துவிடும், இன்னலுக்கு ஆளாக்கிவிடும்
என்று கூறுவார் உளர்; அறிவேன்.
ஏன்! இந்த உலகத்தின் மீது,
வாழ்வின் மீதே "பற்று' வைக்காதே!! என்று உபதேசம் புரிவோர்கள்
இருப்பதனையும் அறிந்திருக்கிறேன்.
வாழ்க்கை ஓர் நீர்க்குமிழி
- பற்று வைக்காதே.
பெண்டு பிள்ளை பெருஞ்சிறை
- பற்று வைக்காதே.
என்றெல்லாம் கூறுவர்; கூறியுள்ளனர்.
காதொடிந்த ஊசியும் வாராதுகாண் கடை வழிக்கே என்று பட்டினத்தடிகள்
சொன்னதை எனக்குச் சொன்னவர்களே, அவர் தமது தாயாருக்கான
கடைசிக் கடனைச் செய்திட வந்தார் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
தாமரை இலைத் தண்ணீர்போலப்
பட்டும் படாததாக, ஒட்டியும் ஒட்டாததாக இருந்திடச் சொல்பவர்களும்,
பக்குவம் ஏற்பட ஏற்பட, எப்படி விளாங்கனி முற்றிட முற்றிட
ஓட்டுக்கும் பழத்துக்கும் உள்ள "பற்று' அற்று விடுகிறதோ
அது போலிருந்திட வேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு.
கேட்டிருக்கிறேன். அவர்கள் அது போலெல்லாம் கூறியதற்குக்
காரணம், "பற்று'க் கொண்டதன் காரணமாக அலைகிறார்களே, கெடுகிறார்களே,
கெடுக்கிறார்களே என்ற கவலை.
"பற்று' தனது சுகத்துக்காக,
நலனுக்காக, ஆதிக்கத்துக்காக ஏற்பட்டுவிடுமானால், அல்லல்,
தொல்லை; உண்மை.
பிறரைக் கெடுத்தாகிலும்
தான் பெற வேண்டியதைப் பெற்றாக வேண்டும் என்ற கெடுமதி பிறந்திடும்,
சமூகம் பாழ்படும்.
நான் குறிப்பிடும் "பற்று'
அந்த விதத்தது அல்ல.
ஒரு கொள்கையில், ஒரு ஏற்பாட்டில்,
ஒரு அமைப்பில் "பற்று'க் கொள்ளுதல்.
அந்தப் "பற்று'தான் வாழ,
தன்னலம் வளர அல்ல; சமூகம் வாழ, மக்கள் நலன் பெருகிட.
இதற்கான "பற்று' நிரம்பத்
தேவை.
அந்தப் பற்றும் நம்மை ஆட்டிப்படைப்பதாக
ஆகிவிடக் கூடாது; கண்மூடித்தனமான பற்று ஆகவும் இருந்திடக்
கூடாது, தெளிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்; அந்தப் பற்று
நமக்குப் புது விழிப்பு, எழுச்சி, ஆற்றல் தருவதாக அமைந்திருக்க
வேண்டும். நமக்கு உள்ள அந்தப் பற்று சமூகத்தை உயர்த்துவதற்கான
ஆற்றலையும் வாய்ப்பையும் நமக்கு அளிப்பதாக இருந்திட வேண்டும்.
தம்பி! எங்கெங்கோ சுற்றி வளைத்துக் கொண்டு போவானேன்? உனக்கு
நமது கழகத்திடம் பற்று இருக்கிற தல்லவா, அது என்ன உன்
நலன் பெருக்கிக் கொள்ளவா! நாடு வாழ! அத்தகைய பற்று மற்றவர்க்கும்
ஏற்படத்தான் பணியாற்றி வருகிறாய்; பற்று பரவிக் கொண்டு
வருகிறது; பயன் கிடைத்திடும் என்ற நம்பிக்கை பிறந்திடுகிறது;
கிடைத்திடும் பயன் உனக்கும் எனக்குமா! நாட்டு மக்களுக்கு!!
அண்ணன்,
10-10-65