அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


புதிய படை புறப்படுகிறது!
1

நந்தாவின் சாதுக்கள் படை
நயனதாராவின் கேலியும் கிண்டலும்
சாது சன்னியாசிகள் பற்றிய மீராபென்னின் கருத்துக்கள்

தம்பி!

பகைவர்கள் படை எடுத்துப் புயலெனப் புகுந்திட முனையும்போது, நாட்டைக் காத்திடவும் பகையை முறியடித்திடவும் வகுக்கப்படும் போர் முறைகளில் வல்லவர்கள், எந்தப் படையை எந்த முறையில் எந்த நேரத்தில் எவ்விதமான போரிட எங்கு அனுப்பிவைப்பது என்பது குறித்து எடுத்திடும் முடிவினைப் பொருத்தே வெற்றியா தோல்வியா என்பது இருக்கிறது.

படைகள் போரிடத்தான் உள்ளன; எந்தப் படையிலும் பயிற்சி பெற்ற போர் வீரர்களே உள்ளனர்; அதிலே எவருக்கும் ஐயம் இல்லை. ஆனால் பெற்றிடும் பயிற்சியில், வகையும் தரமும் உண்டு. எந்தப் படையினரும் எதிர்த்துப் போரிடுவதிலே அஞ்சாது நின்றிடவும் ஆபத்தைத் துச்சமென்று எண்ணிடவும் இயல்பும் பயிற்சியும் பெற்றுள்ளனர். ஆனால், படையில் ஒவ்வோர் பிரிவினருக்கென்று ஒவ்வோர் விதமான பயிற்சி தரப்படுகிறது. ஒவ்வோர் விதமான போர் முறைக்கும் அதற்குத் தக்கதான பயிற்சி இருக்கிறது.

கோட்டை கொத்தளங்களைத் தாக்குவது, கோட்டை கொத்தளங்களைத் தாக்குதலிலிருந்து காத்திடுவது எனும் இருவேறு செயலிலும், தீரம் வீரம் நிரம்பத் தேவை; ஆனால், இருவேறு செயல்களிலே ஒவ்வொன்றுக்கென்று ஒவ்வோர் முறை உளது; அந்த முறையில் பயிற்சி பெற்றார்க்கே அந்தத் துறையும் பணியும் தந்திடுதல் வேண்டும், முழுப் பயன்பெற.

வாள்வீச்சிலும் பழக்கம் உண்டு எனினும், இவன் வேல் எறிவதிலே தன்னிகரற்றவன் எனின், அன்னானை அதற்கே அனுப்பி வைத்தால் வெற்றி ஈட்டிட வழி செய்ததாகும். வாட்போர் அறியானோ இவ்வீரன்! அறிந்துள்ளான்! எனவே, வாட்போர்ப் படையிலே சேர்ந்து போரிடட்டும் என்று கட்டளையிடலாம்; அவனும் வாளினைச் சுழற்றிப் போரிடலாம்; ஆனால், அவன் வேல் எறிவதனால் கிடைத்திடும் பலன் கிடைத்திடாது.

அன்பும் அறமும் நிலவிட வேண்டும், பண்பு மிகுந்திட வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவரே, வள்ளுவர். எனினும், அறம் அழிப்போரும் பண்பு கெட்டோரும், அமைதி குலைப்போரும், ஆகா வழி நடப்போரும் உள்ளனரே; அவர்களால் அமளி மூட்டப்பட்டுவிடுமானால், அறவுரை கூறிடல் பயனளிக்காதே; எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றன்றோ இன்னல் விளைவித்தவர்களை அடக்கிட இயலும் என்பதனை எண்ணிப் பார்த்திட மறுத்தாரில்லை; மாறாக, அது குறித்து எண்ணி எண்ணிப் பார்த்து ஏற்புடைய கருத்துக்கள் பலவற்றைக் கூறியுள்ளார். அந்தக் கருத்துக்களைக் காணும்போது, என்னே இந்த வள்ளுவர்? வாலறிவன் நற்றாள் தொழுவது பற்றித்தான் கூறினார், அதிலே வல்லவர் என்று எண்ணிக் கொண்டோம்; இதோ போர் முறை குறித்து இத்துணை நுண்ணறிவு கொண்டு வழிகாட்டுகின்றாரே, போர்க்களம் பல கண்டவரோ! என்று எண்ணிடுவோம், வியந்திடுவோம். அஃது அவருடைய தனிச் சிறப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு.

இன்னவன் இதனை முடித்திட வல்லவன் என்பதனைக் கண்டறிந்து, அதனை அவனிடம் விடல் - என்பதனை எல்லாத் துறைகளுக்கும் ஏற்றதெனக் கூறி வைத்தார்; அஃது போர்முனைத் துறைக்கும் பொருந்தும்; எனினும் போர்முறை குறித்தே ஆய்வுரை பல கூறியுள்ளார்.

இருக்கட்டும் அண்ணா! இப்போது எதற்காகப் போர்முறை பற்றிப் பேசுகிறாய் - நாம் நடாத்தி வருவதோ அறப்போர் - நம்மை எதிர்ப்போர் நடத்திடுவதோ அக்கப்போர் - நீ கூறிடத் தொடங்கியதோ களம் நின்று போரிடும் முறை பற்றி; எதற்காக? என்று கேட்கின்றாய்! கேட்பது மட்டுமா தம்பி! அண்ணன்தான் பயந்தவன் ஆயிற்றே. பாரேன் போர்முறை பற்றி இத்தனை பேசிடும் வேடிக்கையை என்றெண்ணி உள்ளூரச் சிரித்திடவும் செய்கின்றாய்! அறியேனா!!

தம்பீ! இன்று எனக்குப் போர் - போர் முறை - படை - படை வகை - பயிற்சி - பயிற்சிக்கேற்ற படைவகை - என்பன பற்றிய எண்ணம் பிறந்தது. மலாசியாவைத் தாக்கிடச் சுகர்ணோ முனைகிறார் என்றோர் பக்கம் செய்தி! வியட்நாமில் அமளி - குழப்பம் - என்றோர் செய்தி! அமெரிக்கக் குடியரசுத் தலைவராவதற்காகத் துடித்திடும் கோல்ட்வாட்டர் என்பவர், பொதுவுடைமை நாடுகளுடன் போரிட்டாக வேண்டும் என்று வெறிப் பேச்சுக் கிளப்பிடும் செய்தி! இப்படிப் பல பார்த்ததால் எனக்கும் போர் பற்றிய எண்ணம் பிறந்ததுபோலும் என்று எண்ணிக்கொண்டிருப்பாய். என் எண்ணம் இந்தச் செய்திகளைக் கண்டதனால் எழுந்ததுமல்ல. வேறென்ன என்கிறாயோ! புதியதோர் படை புறப்படுகிறது - வாளேந்திப் போரிட அல்ல - புனிதப் போர் புரிய! அதுபற்றிப் படித்தேன் - அருமையான ஓர் ஆய்வுரையும் இதுகுறித்து வெளிவந்திருந்தது. பார்த்தேன்; பார்த்திடவே, போர் பற்றிய பொதுவான எண்ணம் எழுந்தது.

தம்பி, பெருமழையால் ஏரி குளம் குட்டைகள் நிரம்பி எங்கும் சேறும் சகதியுமாகிவிட்டால், தவளைக் கூட்டத்துக்குக் கொண்டாட்டமல்லவா! கேட்போர் காதினைத் துளைத்திடத் தக்க கூச்சல் எழுப்பும், தூக்கத்தைக் கெடுக்கும்,

ஒரு குற்றமும் நாம் செய்தோமில்லை, இந்தத் தவளைகள் நமக்கு இத்தனை தொல்லை கொடுத்திடத் துணிந்தனவே? எத்தனை பெரிய சத்தம்! ஓயாத கூச்சல்! காதைத் துளைத்திடும் சத்தம்! என்ன எண்ணிக்கொண்டன இந்தத் தவளைகள்! கூச்சலிடுவதிலே நம்மை மிஞ்சுவார் எவரும் இல்லை என்று எண்ணிக்கொண்டு, மண்டைக்கனம் கொண்டுவிட்டனவோ! வலிய வம்புக்கு இழுக்கின்றனவே! விடக்கூடாது இந்தத் தவளைகளை!! என்று எண்ணி, ஒரு படை திரட்டிக்கொண்டு கிளம்பி, தவளைகள் கூச்சலிடும் குளம், குட்டை ஓரம் நின்று நாமும் கூச்சலிடுவோம், உரத்த குரலில் ஓயாமல்! நமது குரலொ- தமது குரலொ-யைவிடப் பயங்கரமான அளவு உளது என்பதனை, இந்தப் புத்திகெட்ட தவளைகள் உணரட்டும்; உணர்ந்து வெட்கத்தால் வாயடைத்துப் போகட்டும் என்று கூறிக் கொண்டு, அதனையே போர்முறையாக்கிக்கொண்டு, "கூவும்படை' யாகிக் கூச்சல் கிளப்பிடுவார் உண்டோ!! இல்லை! ஆளுக்கொரு கல்வீசித் தவளைகளைக் கொன்று போடுவோம் என்று கிளம்பிடுவார் உண்டோ! இல்லை என்பாய், பொதுவாக, அதுபோல் செய்திட ஒரு திட்டம் போட்டுக்கொள்வார் இல்லை. ஆனால், பிரான்சு நாட்டிலே இவ்விதமான வேலைத் திட்டம் இருந்தது, புரட்சிக்கு முன்பு. ஆமாம், தம்பி! வேடிக்கை அல்ல நான் கூறுவது; வரலாற்றிலிருந்து எடுத்தளிக்கும் துணுக்கு, சீமான்கள் கொட்டமடித்துக்கொண்டிருந்த நாட்கள்! சாவு வரவில்லையே! சர்வேசா! என்று ஏழைகள் அழுது கிடந்த காலம். தவளைகள் கூச்சல் கிளப்புவதால் சீமானின் தூக்கம் கெடுமல்லவா? சீமானின் தூக்கம் கெட்டால், உடம்பு என்னாவது! அவன் உடம்பு போனால் நாட்டின் உயிர் எப்படி இருக்கும்!! இவ்விதமான எண்ணம் அரசியல் கருத்தாக இருந்துவந்த காலமது. அப்போது இரவுக் காலங்களில், சீமான் பஞ்சணையில் படுத்திடுவான்; காடு கழனியாக்குபவர்கள், கல்லும் தடியும் கொண்டு தவளைகளைத் தாக்கியபடி இருப்பராம், இரவெல்லாம்; கூச்சலிடும் தவளைகளைக் கொல்வராம். இது, சீமானின் தூக்கத்துக்கான பாதுகாப்புப் படை! என்ன தருவார் சீமான்? என்றா கேட்கிறாய்! கொல்லாமல் விட்டுவைத்திருக்கிறாரே, போதாதா!!

செருக்குமிக்க சீமான்கள் காலத்துப் படைபோன்றதோர் படை இதுபோது எங்கேனும் அமைந்துளதோ, அதுபற்றியோ அண்ணா! நீ கூறுவது என்று கேட்கிறாய். இல்லை, தம்பி! இல்லை! நான் குறிப்பிடும் படை, சீமான் அமைத்தது அல்ல; சீமான்களுக்காகவும் அல்ல! ஏழைகளுக்கு இதம் செய்ய ஏழை பங்காளர் அமைத்த படை!! எது அது என்கிறாய். பொறு. கூறுகிறேன்; கூறுமுன் வேறோர் படை ஒன்று காட்டுகிறேன்.

தஞ்சைத் தரணி! அதனை வடபுலத்து முஸ்லீம் மன்னர் படை தாக்க வருகிறது; பாய்ந்து வருகிறது, பெரும்படை - போரிடுவதிலே ஆற்றல் மிகக் கொண்ட படை.

தஞ்சை மன்னன் கைகட்டி வாய்பொத்தி இருப்பானோ! நாடு காத்திடும் கடமை உணர்ச்சியற்றவனோ மன்னன்!!

கை ஒலி எழுப்பினான், எதிர்வந்து நின்றனர் ஏவலர். கட்டளையிட்டான். கடுகிச் சென்றனர் நிறைவேற்ற.

படையொன்று கிளம்பிற்று; பறித்திட, ஒடித்திட, குவித்திட, வீசிட, பரப்பிட!

எதிரிகளைக் கண்டதுண்டமாக்கி வீசிட, அவர்களின் படைக்கலன்களைப் பறித்திட, வாட்களை ஒடித்திட, தஞ்சை மன்னனின் கட்டளை பெற்ற படை முனைந்தது என்று எண்ணுகின்றாய்.

தம்பி! ஒடித்தனர் பறித்தனர், வீசினர்!! ஆனால், எதிரிப் படையினரை அல்ல - பகைவர்களை அல்ல. காடென வளர்ந்திருந்த துளசிச் செடிகளை!!

ஏன்? என்கிறாய். மறுகணம் எண்ணிக்கொள்கிறாய், எதிரி அறியாவண்ணம் பாய்ந்து சென்று தாக்கிடப் புது வழி அமைக்கின்றனர் போலும், அதற்கே காடழித்துப் பாதை போடுகின்றனர் என்றெண்ணிக் கொள்கின்றாய். அது அல்ல நடந்தது. துளசிச் செடிகளைப் பறித்தெடுத்துச் சென்று எதிரிப்படை நுழையும் பாதையிலே வீசிடுக! பரப்பிடுக! துளசியைக் காலால் மிதித்துக்கொண்டு வருவது "மகா பாபம்!' இதனை உணர்ந்து பகைப்படை வந்தவழியே திரும்பிப் போய்விடும்!! இது மன்னன் கட்டளை - போர் முறை.

இதனை நான் வரலாற்றுச் செய்தி என்று கொண்டிடவு மில்லை கூறிடவுமில்லை. அந்த நாள் நிலையினைக் காட்டிடக் கட்டிவிடப்பட்ட கதை என்றே கொள்கின்றேன்; ஆனால், கருத்தேயற்றது இது என்று தள்ளிடமாட்டேன் - ஏமாளி மன்னன் இதுபோல், பொருளற்ற போர் முறையை மேற்கொள்வான் என்ற கருத்தினைத் தருவது இந்தக் கதை.

துளசிச் செடி, இந்து மார்க்க வைதீகர்கட்கு, மகிமை வாய்ந்தது; புண்யம் பெற்றுத்தருவது. கண்களில் ஒத்திக் கொள்வதும், தலையில் சூடிக்கொள்வதும் நீருடன் கலந்து பயபக்தியுடன் உட்கொள்வதும், இந்து மார்க்கத்திற்கு ஏற்பட்டது. துளசி மாலையாமே மகாவிஷ்ணுவுக்கு!!

துளசியை மிதித்துவிட்டால் போதும், பாவம் ஏழெழு ஜென்மத்துக்கும் விடாது! சாஸ்திரத்தைக் கூறினேன், தம்பி! சாஸ்திரத்தை!!

இப்படி உள்ள ஒரு சாஸ்திரம் பொருள் உள்ளது, தேவைப் படுவது என்று வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் தம்பி! இந்து மார்க்கத்து வைதீகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த நம்பிக்கையை, முஸ்லீம் படை மதிக்குமா, ஏற்றுக்கொள்ளுமா என்று அந்த மன்னன் எண்ணிடவில்லை. வீசு துளசியை! விரண்டோடுவர் பகைவர்!! என்று கட்டளையிட்டார். பச்சைப் பசேலென ஏதோ தெரிவது கண்டு, பகைவர்களின் குதிரைப்படை மேலும் வேகமாகப் பாய்ந்ததாம், அந்த மன்னனின் ஆட்சி வீழ்ந்ததாம், சொல்கிறார்கள்.

எதிரிப் படையை விரட்ட வழியிலே துளசியை வீசினது போல, இப்போது நாட்டிலே தலைவிரித்தாடும் அக்கிரமத்தை ஒழிக்க, அநீதியைத் தொலைக்க, ஒரு புதுப்படை புறப்பட் டிருக்கிறது. எது அந்தப் படை? எவர் திரட்டியது? எங்கு உளது? என்று கேட்கிறாயோ, தம்பி! முதலில் எங்கு உளது? எது அந்தப் படை? என்பதற்குப் பதில் கூறிவிடுகிறேன். "காஞ்சி' இதழின் அட்டைப் படத்தை ஒரு முறை பார்! பார்த்தனையா? என்ன காண்கிறாய்? சாதுக்களை அல்லவா!! அந்தப் படைதான் தம்பி, புதிதாகக் கிளம்பியுள்ள படை! நந்தா திரட்டி அனுப்பியுள்ள படை!! ஊழல், ஒழுங்கீனம், இலஞ்சம், கொள்ளை இலாபம், கள்ளச்சந்தை, புரட்டு புனைசுருட்டு எனும் சமூகக் கொடுமைகளை எதிர்த்தொழித்திடுக என்று கட்டளையிட்டு. நந்தா இந்த சாதுக்கள் படையினைத் திரட்டி அனுப்பி வைக்கிறார்.

உள்துறை அமைச்சர் இந்த நந்தா நல்லெண்ணம் மிகக் கொண்டவர், நாணயமானவர் என்கிறார்கள். சமூகக் கேடுகளைக் களைந்தாக வேண்டும் என்ற உறுதி கொண்டவர்; சூள் உரைத்துச் சுறுசுறுப்பாகப் பணியாற்ற முனைந்திருக்கிறார். அதற்காக அவரை எவரும் பாராட்டுவர். நோக்கம் நேர்த்தியானது! ஆனால், முறை? துளசி அல்லவா கொட்டச் சொல்கிறார் பகைவர் நுழையும் பாதையில்! சட்டம், போலீஸ் ஆகியவைகளின் கண்களில் மண்ணைத் தூவிடும் கைதேர்ந்தவர்களைக் கண்டறிந்திட. காவி கட்டிய ஜெபமாலைகளை அல்லவா ஏவுகிறார். வேண்டும் வேண்டும் பெரும் பொருள் வேண்டும்! பிறர் பொருள் எனினும் பிழையிலை, வேண்டும்! உழைத்திடாமலே பொருள் குவித்திட உண்டு பல வழி, அனைத்தையும் அறிவோம்! என்று கூறிடும் கொடியவர்களை அடக்க. பணம் ஆட்கொல்லி! பாபச் சின்னம்! வாழ்வு மாயை! ஓர் வஞ்சக வலை! உலகு மாயை, அழியத் தக்கது, அழியாதது ஒன்று உண்டு, அது அங்கே! நிர்மலமான ஆகாயத்தை நோக்கு, நீசத்தனமிக்க உலகை நம்பாதே!! என்ற உபதேசம் பெற்றும் கொடுத்தும், கட்டற்று, கவலையற்று, காசு பணம் வேண்டும் என்ற அவசியமற்று, காலைக் கட்டிக்கொண்டு அழும் மனைவியும், காகூவெனக் கூவி அழும் குழந்தைகளும், கடன்பட்ட நெஞ்சமும் கொண்டிடாத காவிக் கோமான்கள்தானா கிடைத்தார்கள்! துளசி வீசுகிறாரே நந்தா, பகைவன் நுழையும் பாதையில்!!

சாதுக்களைக் கண்டதும் காலில் வீழ்ந்திட, கன்னத்தில் போட்டுக்கொள்ள, வரம் கேட்டிட, சமாராதனை நடத்திட, இன்றும் இங்கு நிரம்பப்பேர் உள்ளனர் - இல்லை என்று கூறிடவில்லை. அதிலும் வடக்கே உள்ள சாதுக்கள் ஒரு படை அளவு உள்ளனர் - படை வீரர் போன்ற கட்டுடலும் இருக்கிறது; பார்த்துமிருக்கிறேன்.

தம்பி! ஹரித்துவாரத்தில் பார்த்தேன், அழகிய கங்கைக்கரை ஓரம் முழுவதும், அரண்மனைகளோ என்று வியந்திடத்தக்கதான மடங்கள் - சாதுக்களுக்கு. எத்தனை சாதுக்கள் எத்தனை நாட்களுக்கு, என்னென்ன கேட்டாலும் தந்திட, வழிபட்டிட, அங்கு ஏற்பாடுகளைச் செய்துவைத்துள்ளனர் சீமான்கள், சிற்றரசர்கள், வணிகக் கோமான்கள், வாழ்வுக்கலை வல்லவர்கள்! மாலை வேளையில், இந்தச் சாதுக்கள், ஒரு கவலையுமற்று - (இந்த உலகம்பற்றிய கவலை) உலவுகிறார்கள். ஒரு சமயம் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கவலை மேலுலகம் பற்றியதாக இருக்கலாம் - மேலுலகில் இங்கு உள்ளதுபோன்ற ஏற்பாடுகள் உண்டோ இல்லையோ என்ற கவலை.

கோதுமையும், நெய்யும், சர்க்கரையும் பருப்பும், பாலும் பழமும் கிடைக்கிறது ஒவ்வொரு வேளையும். பரமனைப்பற்றிய தியானத்தில் ஈடுபடுகிறார்கள். ஏன் முடியாது!! பசிப்புலி அடக்கப் பட்டதும், புண்ணியம் பற்றிய நினைப்பு சுரக்கிறது. சாதுக்கள் போல "சம்சாரிகள்' இருக்க முடிகிறதா! பாலுக்குச் சர்க்கரை கூட அல்ல, கூழுக்கு உப்பு போதுமான அளவு இல்லையே என்ற கவலை குடையும்போது, சாதுவாக இருக்க முடிவதில்லை, சாமான்யர்களால் - கோபம் தாபம், குமுறல் கொதிப்பு, பகை பயம், அடிமைத்தனம் அக்கிரம நினைப்பு எல்லாம் குடிபுகுந்து விடுகின்றன - போக்கிரியாகிறான், திருடனாகிறான், வெறியனாகிறான், வெகுண்டெழுகிறான், சாதுவாக இருக்க முடிவதில்லை. சாதுவின் வாழ்க்கை நிம்மதியாக இருப்பதற்கான பொறுப்பை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வதால், சாது சாதுவாக இருந்திட முடிகிறது. வாழ்ந்திட வழி அமைத்துக் கொடுத்திட வேறு சிலர் பொறுப்பேற்றுக் கொள்வதனால், இவர்கள், வாழ்வு என்றால் என்ன? அது உண்மையா, மாயையா? இவ்வுலக வாழ்வு நித்தியமா அநித்யமா? என்பன பற்றிச் சிந்திக்கவும் - சிரவணம் செய்யவும் முடிகிறது.

இந்த நிலையிலேயும், சாதுக்கள் சாதுத்தன்மையை விட்டு வெகுதூரம் விலகி, காமக்குரோத மதமாச்சரியங்களால் ஆட்டுவிக்கப்படும் வெறித்தன்மை கொண்டுவிடுவது பற்றிய செய்திகளும் அடிக்கடி வெளிவருகின்றன.

பெரியசாமிக்கு விஷம் கொடுத்த சின்னசாமி, பீடத்தைப் பெயர்த்தெடுத்த சாமி, பெண்ணைக் கடத்திச் சென்ற சாமி, மண்ணில் பொன்னை மறைத்த சாமி, மரக்கறி உணவை மறுத்த சாமி, கரியைப் பொன்னாய் ஆக்கும் சாமி, காளியை ஏவல் கொள்ளும் சாமி, காட்டு மாளிகை கட்டிடும் சாமி, கன்னியர் கலங்கிட நடந்திடும் சாமி, கோர்ட்டு வாசலில் இருந்திடும் சாமி, கொடுத்ததை மறைத்திடும் குட்டிச் சாமி, கிருமிக்கூடாய் ஆகிடும் சாமி என்று எத்தனை எத்தனையோ வகையினர் உளர்.

வடக்கே நடைபெறும் கும்பமேளாக்களின்போது, தம்பி! இந்தச் சாதுக்கூட்டம் கோலாகலமாகப் பவனி வருவதுண்டு. பல்லக்கில் ஏறிடும் சாமி, குதிரை ஏறிடும் சாமி, யானைமீது அம்பாரி அமைத்து அதிலே பவனி வந்திடும் சாமி, உடலை மறைத்திட உடை தேடாது, உள்ளது காண்க என உலவிடும் சாமி, முகாம் அமைத்து முழங்கிடும் சாமி, யாகம் வளர்த்திடும் பெரிய சாமி இவ்விதம் பலர் அரசோச்சுகின்றனர், அந்தக் கும்பமேளாக்களில். உடை அணியா உருவங்களைத் தெரிசிக்க, விழுந்தடித்துக்கொண்டு செல்லும் இலட்சக்கணக்கான பக்தர்களில் சிலர், இடிபட்டு மிதிபட்டுச் செத்தனர் என்றும் செய்தி வந்திருக்கிறது.

உள்ளதில் கெட்டது எதுவோ அது மட்டுமே உன் கண்களில் படுகிறது; உண்மைச் சாதுக்களே இல்லையோ என்று என்னைக் கேட்பர், தம்பி! நான் சொல்லக்கூடியது இதுவே. உண்மைச் சாதுக்கள் மிக மிகக் குறைவு, உடையார் சாதுக்களாக உள்ளோரே மிக அதிகம்; உண்மைச் சாதுவைக் கண்டறிவதும் கடினம் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்ற கிழமைதான் பேசியிருக்கிறார் - திருத்தணியில் என்று நினைக்கிறேன்.

உண்மைச் சாதுவைக் கண்டுபிடிக்கிறோம் என்றே வைத்துக்கொள். அவர்கள், நந்தா கூறிடும் வேலைகளையா மிக முக்கியமானது எனக் கருதுவர். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பின் தன்மை, மகிமை ஆகியவற்றிலே மனத்தைச் செலுத்திக்கொண்டு இருக்கும் சாதுக்களிடம் நந்தா, நியாய விலைக்கும் அநியாய விலைக்கும் உள்ள தாரதம்மியத்தைப்பற்றியும், சந்தைக்கும் கள்ளச்சந்தைக்கும் உள்ள தொடர்பு பற்றியும் ஆராய்ந்தறிந்து நல்வழி காட்டுக! என்று கூறினால் என் சொல்வர்! "பாலகா! உலக மாயை எனும் இருளில் சிக்கிச் சீரழிகிறாய்! சந்தை என்கிறாய்! கள்ளச் சந்தை என்கிறாய்! பொருள் என்கிறாய்! விலை என்கிறாய்! இந்த உலகமே சந்தை! கள்ளச் சந்தை! மாயச்சந்தை! பரம்பொருளன்றி மற்றவை பொருளே அல்ல! இதனை அறிந்திட நீ தரவேண்டிய விலை நிராசை! போ! போக போகாதிகளில் ஈடுபடும் சுபாவத்தை மாற்று! இந்திரியச் சேட்டைகளை அடக்கு! இகத்தை மற! பரத்தைத் தேடு! ஓம் தத்சத்!' என்று கூறுவரேயன்றி, ஒயிலூர் கடைத் தெருவில் ஒன்பதாம் நம்பர் கடையில் அறுபது மூட்டை சீனியை ஒளித்துவைத்திருக்கிறான் கங்காதரன் என்ற தகவலைச் சேகரித்துக்கொண்டு வந்து தருவார்களா!

உண்மைச் சாது இந்த உலக விவகாரத்தில் தன்னைச் சிக்க வைத்துக்கொள்ளமாட்டார்.

சிக்கவைத்துக்கொண்டு சீர் செய்வேன் என்று செப்பிடும் சாது உண்மைச் சாதுவாக இருந்திட இயலாது.

என்றாலும், குல்ஜாரிலால் நந்தா மெத்த நம்புகிறார், சாதுக்கள் படை திரண்டால் சகல கேடுகளும் ஒழிந்திடும் என்று அவ்வளவு நம்பிக்கை துளசியின் மகிமையில்! வீசுகிறார் பகைவன் நுழைந்திடும் பாதையில்.

தம்பி! உங்கள் அண்ணாதுரைக்குச் சாது சன்னியாசிகள் என்றாலே பிடிக்காது, அதனால் இதுபோலக் கூறுகிறான் என்பர் சிலர்.

நான் கூறியிருப்பதைவிட வேகமாக, வெளிப்படையாக, சாதுக்களைப் படைதிரட்டும் ஏற்பாட்டினைக் கண்டித்துச் சிந்தனையைத் தூண்டிச் செம்மைப்படுத்தத் தக்க சீரிய முறையில் இந்தக் கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், நயனதாரா சாகால் என்பார் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

திருமதி விஜயலட்சுமி பண்டிட் திருமகளார் ஒருவருக்கு நயனதாரா என்று பெயர்; கட்டுரையாளர் அவர்கள்தான் என்று எண்ணுகிறேன்.

துணிவும் தெளிவும் துள்ளுகிறது நயனதாராவின் கட்டுரையில்! இடித்துரைக்க ஏளனத்தையே கருவியாக்கிக் கொண்டுள்ளார். இலட்சிய மணமும் கமழ்கிறது கட்டுரையில்; புத்துலகம் காணவேண்டும் என்ற துடிப்பு பளிச்சிடுகிறது.

எந்த நவயுக உலகில் ஓரிடம் பெற நாம் போராடிக்கொண்டு வந்தோமோ, அந்த உலகு வேகமாக, வண்ணம் மிகக்கொண்டதாக மாறிக்கொண்டிருக்கிறது - ஜெட்விமான வேகத்தில் செல்கிறது. வேறெந்தக் காலத்தைக் காட்டிலும் நன்மை மிக அதிகமாக அறைகூவி அழைத்திடும் இந்தக் காலத்தில், உலக கிருகத்தில், விஞ்ஞானம் புரட்சியை - ஏற்படுத்தியபடி இருக்கிறது; இந்தச் சூழ்நிலைக்கு ஏற்றபடி ஆகிக்கொண்டு வருகின்றனர், எங்கெங்கும் உள்ள மக்கள் - ஆனால், நாம் அல்ல! நாம் மீண்டும், பழைய கட்டைவண்டிக் காலம் போதுமென்ற நினைப்புக்கொண்டு, கர்நாடக யுகத்தை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கி விட்டோம் - பின்னோக்கி!! மூடு பனி விலகுகிறது தற்காலிகமாகத் தேசிய அரங்கிலே புதிய நட்சத்திரமாக, சாது வந்துள்ளார், காண்பீராக!!

துவக்கமே தம்பி! துணிவு துள்ளும்விதமாக அமைந்துவிடுகிறது.

கட்டைவண்டிக் காலம்
பின்னோக்கிப் பயணம்
கர்நாடக யுகம்

என்று இடித்துரைக்கிறார், நயனதாரா. கடுமையான கோடை வெப்பத்தைத் தணித்திடும் பூங்காற்றுப்போல, ஒதிய மரங்களுக்கு மத்தியில் ஓர் சந்தனத் தருபோல, ஓட்டை ஒடிசல்களுக்கு மத்தியில் கிடந்திடும் ஓர் நல்முத்துப்போல, பழமை, பண்டைப் பெருமை, பரதேசிகளின் பரிபாலனம் என்பனபற்றி எல்லாம் பெரிய இடத்துள்ளார் பேசிடும் இந்த நாட்களில், உலகம் விஞ்ஞானத்தின் உன்னதத் தன்மையினைத் துணைகொண்டு வேகமாக, முன்னேற்றப் பாதையிலே செல்கிறதே, உதவாக்கரைகளே பெற்றதையும் இழந்துவிடும் பேதைமைபோல, அடைந்துள்ள ஓரளவு முன்னேற்றத்தையும் இகழ்ந்துவிட்டுப் பின்னோக்கிச் செல்கிறீர்களே! கட்டை வண்டிக் காலத்தின்மீது மீண்டும் மோகமா? என்று கேட்கிறார். கோபம் பொத்துக்கொண்டுதான் வரும், பழமை விரும்பிகளுக்கு. அதிலும் இடித்துரைப்பது என்போன்றவன் எனில், எரிதழலாகுவர். ஆனால், கட்டுரை யாளரோ, நானல்ல.

பின்னோக்கி நடத்திடும் இந்தப் பயணத்தில் ஒரு கட்டம் சென்றிடுவோம் - நமது நிர்வாகத் துறைகளிலே சாதுக்கள் வேலைக்கு அமரும் கட்டம்!

நமது வெளிநாடுகள் குறித்த விவகாரத்துறையிலும்!! என்று கூறிக் கேலி செய்கிறார் நயனதாரா.

போகிற போக்கைப் பார்த்தால் இவ்விதந்தான் இருக்கிறது என்பதைச் சிலரேனும் உணர முடிகிறது. பற்றற்றவர்கள் சாதுக்கள், இவர்களைப் பரிபாலனத் துறையில் ஈடுபடுத்தினால், ஊழல், ஒழுங்கீனம், இலஞ்சம் போன்றவைகள் நெளியாது என்றும் எண்ணிடத் தோன்றும். ஊழலையும் ஒழுங்கீனத்தையும் இலஞ்சத்தையும் முறைகேட்டினையும் கண்டறிந்து ஒழித்திட வல்லவர்கள் சாதுக்களே என்ற எண்ணம், வளர வளர ஊழலைச் செய்திடுவோர் எவர்? சம்சாரிகள்! ஏன்? அவர்கள் ஆசைக்கு ஆட்பட்டவர்கள்! ஆசைக்கு ஆட்பட்டவர்கள் வேலைகளில் உள்ள மட்டும், ஊழல் இருக்கத்தான் செய்யும். எனவே, ஆசைகளைத் துறந்த சாதுக்களை, சர்க்கார் அதிகாரி களாக்கிடுவோம் - ஊழல் ஏற்பட வழியே எழாது என்ற எண்ணம் உருவாகிடத்தான் செய்யும். எங்கும் எவரும் இதுபோல எண்ணிடமாட்டார்கள் என்றுரைப்பர் தம்பி! இதுபோல எண்ணியது மட்டுமல்ல, இதற்கொப்பான ஒரு ஏற்பாட்டையே மேற்கொண்டார் இங்கிலாந்து நாட்டில் கிராம்வெல் எனும் பட்டமற்ற மன்னன் - பாதுகாவலன்.