அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


இராஜ்ய சபையில். . .(2)
2

இப்படி எண்ணுவர். அடித்துப் பேச முற்படும்போது, அளவு பொருத்தம் பார்த்துப் பேசும்படி சட்ட மந்திரியை வேண்டிக் கொள்கிறேன். அது நிற்க, இந்திய பாதுகாப்புச் சட்டம், ஒரு நாட்டு மக்களுடைய இதயங்களுக்குப் பாதுகாவலனாக இருக்க முடியாது. ஒரு நாட்டு மக்களுக்குச் சிறைக்காவலனாக மட்டுமே இருக்க முடியும் எனவே, போர் ஆதரவு முயற்சிக்கு, தங்கு தடையற்ற உதவி தர தி. மு. க. முன்வந்தது என்றால், நான் அதற்காகச் சர்க்காரிடமிருந்து நன்னடத்தைச் சீட்டுப் பெற எதிர்பார்க்கவில்லை. பதிலுக்கு நல்லெண்ணம் அளிக்கப்பட வேண்டும் என்றுகூட விரும்பவில்லை. ஆனால், எதற்காக இதை எடுத்துக் கூறுகிறேன் என்றால், இதிலிருந்து ஒரு இயற்கையான எண்ணம், தானாக எழுந்துள்ள ஒரு உள் உணர்ச்சி, உங்களுக்குப் புலப்படவில்லையா? அந்த உணர்ச்சி காலத்தால் இயற்கையாக வளரச்செய்திட வேண்டாமா? இந்த மசோதா? அதற்கான உரமா? இது அந்த உணர்ச்சியை அழிக்கக்கூடியது, எரிச்ச லூட்டுவது. ஏன் இந்த உள் உணர்ச்சி, இயற்கையான முழு வளர்ச்சி பெற்று, பூத்திடச் செய்யக்கூடாது? இந்த மசோதாவுக்கு என்ன அவசரம் வந்தது? ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள்? அதுதான் நான் குறிப்பாகக் கேட்பது. இதை உங்களுக்கு உணர்த்துவதற்காகத்தான், போர் ஆதரவு முயற்சிக்கு நாங்கள் ஆதரவு அளித்ததைக் குறிப்பிட்டேன். நான் முன்பு சொன்னபடி, நாங்கள் சாமான்யர்கள், ஆனால், 34 இலட்சம் வாக்காளர்களின் பிரதிநிதிகள்! எந்த 50 இலட்சம் வாக்காளர்கள் எங்கள் இராஜ்யத்தில் காங்கிரசை ஆளும் கட்சி ஆக்கியிருக்கிறார் களோ, அங்கு, ஐம்பது இலட்சத்துக்கும் முப்பது இலட்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறித்து நான் அதிகம் வாதாடத் தேவையில்லை என்று நம்புகிறேன். இந்த மன்றத்தின் முன் உறுதி கூறுகிறேன் - எங்கள் முன்னேற்றத்துக்கு அழிவு தேடாதிருந் தால், சட்டத் துணையுடன் அடக்கி அழிக்கும் முறைகளைக் கொண்டுவராதிருந்தால், நாங்கள்தான் சென்னையில், அடுத்து வரப்போகும் ஆளுங்கட்சி - உறுதி அளிக்கிறேன். மத்திய அமைச்சரவையினராம், கனம் சி. சுப்பிரமணியம், தமது கோவைப் பேச்சிலே, அன்பழைப்பை விடுத்திருக்கிறார் - "பிரிவினையை விட்டுவிடுங்கள்; நீங்கள் மந்திரிசபை அமைப்பதை நான் வரவேற்கிறேன்'' என்று. அப்படிப்பட்ட ஒரு கட்சிக்குத் தான், நீங்கள் சாதாரண மரியாதை உணர்ச்சி காட்ட ஜனநாயக நாகரிக உணர்ச்சிகாட்ட மறுத்திருக்கிறீர்கள் - தேசிய ஒருமைப் பாட்டுக் கமிட்டி முன்பு எங்கள் நோக்கத்தை எடுத்துரைக்கும் வாய்ப்பு அளிக்கவுமில்லை, எங்களை உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக்கிக்கொள்ளவுமில்லை.

கம்யூனிஸ்டு கட்சித் தலைவர், என் மதிப்புமிக்க நண்பர், புபேஷ் குப்தா ஒரு யோசனை கூறினார் - அவர்களை (தி. மு. க. வை) எதிர்த்துப் பிரசாரம் செய்ய ஏன், எல்லா ஜனநாயக சக்திகளும், தேசிய சக்திகளும் ஒன்றுபடக்கூடாது என்று கேட்டார். நான் அதை வரவேற்கிறேன். மக்கள் என் கருத்தை ஏற்றுக்கொள்கிறார்களா, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதைக் கண்டறிய விரும்புகிறேன். ஏன் அப்படிப்பட்ட தீரமிக்க போட்டியிலிருந்து ஓடிவிடுகிறீர்கள்? புபேஷ் குப்தாவை, இதையும் கவனிக்கும்படி கேட்டுக் கொள்வேன், எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்கு முன்பு, எங்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்த முயற்சி எடுத்துக்கொள்வது நல்ல அரசியல் முறை அல்லவா?

புபேஷ் குப்தா: அதுதான் நான் சொன்னது. நான் முயல்கிறேன்.

சி. என். ஏ. : புபேஷ் குப்தாவுக்கு என் நன்றி ஆனால், எங்கள் மனத்தை மாற்ற அவர் மேற்கொண்டுள்ள முறை பலனளிக்கவில்லையோ, அல்லது அவர் விரும்புகிற அளவு, அது செய்யப்படவில்லையோ, என்னவோ தெரியவில்லை - பலன் காணோம். ஆனால், இந்த மன்றத்தைக் கேட்டுக்கொள்வேன் - எல்லாக் கட்சி உறுப்பினர் களையும்கொண்ட கலந்தாலோசிக்கும் கமிட்டி அமைத்து எம்முடன் விவாதிக்கவேண்டும் என்று சர்க்காருக்கு யோசனை கூறுங்கள். தவறு எம்மிடம் என்றால் திருத்துங்கள். உங்களிடம் தக்க காரணம் காட்ட இருந்தால் எங்கள் மனத்தை மாற்றுங்கள். அதை விட்டுவிட்டு, எங்களை வற்புறுத்துகிறீர்கள்! சட்ட விற்பன்னர்கள் நிரம்பியுள்ள இந்த மன்றத்தில் நான் விளக்கத் தேவையில்லை, சட்டத்தைக்கொண்டு வற்புறுத்துவது, கடை கெட்ட வாதிடும் முறையாகும்! பொதுமக்களின் கருத்து எனும் சந்தையில், இரண்டு கருத்துகள் போட்டியிடுகின்றன என்றால், அதிலே ஒரு கருத்துக்குத் தடை போடுகிறீர்கள் என்றால், ஒரு கருத்துக்குப் பின்பலமாக சட்டத்தை நிறுத்துகிறீர்கள் என்றால் கருத்துப்போர் நடத்துவதிலிருந்து நழுவி விடுகிறீர்கள் என்றுதான் பொருள்படும். திருச்செங்கோடு இடைத்தேர்தல் காலம் வரையில், எங்கள் இராஜ்ய காங்கிரசார், வெளியிட்டுக் கொண்டிருந்த கருத்து என்ன? அவர்கள் சொன்னார்கள் - இந்த மன்றத்தில்கூட அது திரும்பவும் கூறப்பட்டது - என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார் - நான் தன்னந்தனியன், ஒரே ஒருவன் என்றார்! பசி நிறைந்த பார்வை, எனக்கு என்றார்! என் பசி போக்கும் உணவு அளிக்கவில்லை, இவர்கள்!! நான் தனியன் என்று அவர் சொன்னார். மற்றொரு உறுப்பினர், எங்களுக்கு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவைகளில் பிடிப்பு இல்லை என்று பேசினார். அந்த உடன் பிறப்பாளர் இராஜ்யங்களி லுள்ளவர்களின் மனத்தை மாற்றிவிட்டதாகவோ, மகிழ்ச்சி தரத்தக்க அளவுள்ள ஆதரவைப் பெற்றுவிட்டதாகவோ, நான் எப்போதும் பாத்யதை கொண்டாடியது இல்லை. நான் குறிப்பிடுவது, நான் இந்த விஷயத்தைக் குறிப்பிடும்போது, அந்த மொழிவாரி இராஜ்யங்களிலும், அதே உணர்ச்சி ஏற்படும் என்பதுதான். நான் என்ன எண்ணுகிறேனோ அதனை அப்படியே, வால்டேரில், ஹைதராபாத்தில், மைசூரில் அல்லது திருவனந்தபுரத்தில் எண்ணுகிறார்கள் என்று நான் உரிமை கொண்டாடியதில்லை. நான் இந்த இடங்களுக்கெல்லாம் செல்லவுமில்லை. ஹைதராபாத்தில் நான் ஒரு கூட்டத்திலும் பேசியதுமில்லை. பேச, மைசூருக்கு நான் சென்றதில்லை. அங்கெல்லாம் என்னைப் போக ஏன் அனுமதிக்கக்கூடாது - என்னோடு நீங்களும் ஏன் வரக்கூடாது. நான், போட்டிப் பந்தய உணர்ச்சியுடன் ஒரு யோசனைகூடக் கூறுகிறேன். எல்லாக் கட்சியினரும்கொண்ட, கலந்தாலோசிக்கும் கமிட்டி அமைப் போம் - எல்லோருமாக நாடு சுற்றி வருவோம் - நாட்டுக்கு என்ன தேவை என்பதைக் கண்டறிவோமாக! மனம் மாறும்படி செய்யுங்கள். பிறகு, நான் கேட்பது, நினைத்துக்கூடப் பார்க்கத் தகாதது என்று சொல்லுங்கள். ஆனால், இந்த மசோதாவைக் கொண்டுவராதீர்கள் - கொண்டுவந்து வைத்துக்கொண்டு, இந்த மசோதாபற்றி என்ன செய்யப்போகிறாய் என்று கேட்காதீர்கள். என் நண்பர் புபேஷ் குப்தா சொன்னார், நாங்கள் தலைமறைவாகி விடுவோம் என்று. நாங்கள் எப்போதும், வெளியில் உலவு பவர்கள்! தலைமறைவாகிவிட உபதேசம் இல்லை. ஆனால், மனம் வெதும்பிய அதிருப்தி மறைவிடம் செல்லும்.

புபேஷ் குப்தா : அதுதான் நான் சொன்னது.

சி. என். ஏ. : மனம் வெதும்பிய அதிருப்தி நிலை, மறைவிடம் செல்லும்; அதனை எந்தச் சட்ட முயற்சியும் ஒன்றும் செய்துவிட முடியாது. பல இலட்சக்கணக்கான மக்களின் மனத்திலே கிடக்கும் அதிருப்தியைத் தாக்கி ஒழிக்கும் முறையை, அரசியல் தத்துவ முறை இன்னும் கண்டுபிடித்ததில்லை. எனவே, இந்தச் சட்ட முயற்சியினால், உண்மையான, மனம் வெதும்பும், அதிருப்தியை நீங்கள் மறைவிடத்துக்குத் துரத்துகிறீர்கள்.

நான் குறிப்பிட விரும்பும் மற்றோர் விஷயம் இருக்கிறது. எங்கள் கோரிக்கை, வல்லமையுடைமைக்கு, அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கிறது என்று எதனால் கருதுகிறீர்கள்? எப்படி? இதற்குப் பதில் அளிக்குமுன்பு அரசுரிமை என்றால் என்ன என்பதுபற்றி நாம் தெளிவுகொள்ளவேண்டும். அரசுரிமை என்று கூறுகிறோமே, என்ன எண்ணிக்கொண்டு அதுபோலக் கூறுகிறோம்? அரசியல் சட்டத்தின் பாயிரத்தில் சொல்லப்பட் டிருக்கிறது, அரசியல் அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று. சட்டபடி உள்ள வல்லமையுடைமை அல்லது அரசுரிமை கூட்டாட்சியின் மத்திய அமைப்பிலும், கூட்டாட்சியில் அமையும் இராஜ்ய அரசு அமைப்பிலும், பிரித்துத் தரப்பட்டிருக் கிறது. ஏன், எங்கள் திட்டத்தை, அரசுரிமைபெற்ற இராஜ்ய அமைப்புகள், மேலும் பலன் தரத்தக்க அரசுரிமை பெறுவதற் கான முயற்சி என்று நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது! அந்த முறையிலே கருதினால் என்ன! திராவிடஸ்தான் கேட்ட உடனே அரசுரிமையின் வேர் வெட்டப்படுகிறது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அரசுரிமை முழுவதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலே மட்டும் இல்லையே. கூட்டாட்சி முறையல்லவா கொண்டிருக்கிறோம். பல அரசியல் தத்துவவாதிகள் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்தியா மிகப்பெரிய அளவுள்ளது; சொல்லப் போனால், அதனை ஒரு துணைக்கண்டம் என்றே வர்ணித்திருக் கிறார்கள்; பல்வேறு விதமான மனப்பான்மைகள், பல்வேறான பாரம்பரிய உணர்ச்சிகள் - வரலாறு வெவ்வேறு வகையினதாக- இருப்பதனால்தான் இங்கு இருப்புக்கூடுபோன்ற ஓரரசு முறை இருக்க முடியாது என்பதால், அரசியல் சட்ட திட்டம் வகுத்தவர்கள் ஓரரசு முறை அமைக்காமல், கூட்டாட்சி முறை அமைத்தனர். எனக்குள்ள குறை என்னவென்றால் - அதற்கு ஆதரவாக, பிரஜா சோμயலிஸ்டு உறுப்பினர் குருபாத சுவாமியும் மற்றவர்களும் கூறியுள்ளனர் - இந்தப் பதின்மூன்று ஆண்டுகளாகக் கூட்டாட்சி முறையை நடத்திவந்தவிதம், இராஜ்யங்களின் மனம் முறியும்படியாக அமைந்துவிட்டது என்பதாகும் அவர்கள் உணருகிறார்கள் - அவர்கள் என் பக்கம் துணை நிற்காமல் இருக்கலாம் - வேக வேகமாக இராஜ்யங்கள் மானியம்பெறுகிற மன்றங்களாக ஆகிக்கொண்டு வருகின்றன என்று உணருகிறார்கள். தாம், பின்னணிக்குத் தள்ளப்பட்டுப் போனதாக அவர்களுக்கு ஒரு உணர்வு இருக்கிறது; எனவே, அதிகாரம் அதிகம் பெறவேண்டும் என்ற எண்ணம் இயல்பாக எழுகிறது. இத்துடன், பிரதேச வளர்ச்சியிலே வேற்றுமையும் இணைகிறது; மொழிப் பிரச்சினைபற்றிய சிக்கலும் சேருகிறது; அந்நிலையில், என்போன்றவர்களுக்கு, ஏமாற்றம் ஏற்படுவதும், பிரிவினைபற்றி எண்ணுவதும், இயற்கைக்கு மாறானதென்று கருதுகிறீர்களா? எங்களைச் சந்திக்க, பாதி வழி வாருங்கள், வந்து சொல்லுங்கள், இதுவரையில்தான் செல்லலாம், இதற்குமேல் போகக்கூடாது என்று கூறுங்கள். ஆனால், பாதி வழி வந்து எம்மிடம் அதுபோலக் கூறும்போது, எங்களால் அல்ல, இராஜ்யங்களுக்குக் குந்தகம் விளையும்படியான முறையில், அரசியல் சட்டதிட்டத்தை நடத்திச்சென்றதால் உண்டாகி விட்டிருக்கிற, சிக்கல்களுக்குத் தகுந்த சமாதானம் சொல்ல வேண்டும். நிலக்கரிச் சுரங்க சம்பந்தமாக, மேற்குவங்காள சர்க்காரும் மத்திய சர்க்காரும், சுப்ரீம் கோர்ட்டுக்குப் போக வேண்டி ஏற்படவில்லையா? சட்ட மந்திரி, மேற்கு வங்காளத்தி லிருந்து வந்திருக்கிறார். வங்காளிகள் முழுத் திருப்தி அடைந் துள்ளனரா? அவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்ற முறையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்குக் கட்டுப்பட்டு இருப்பார்கள். என் நண்பர் புபேஷ் குப்தா, கம்யூனிஸ்டு கொள்கை யினராக இல்லாதிருந்திருப்பின், மேற்கு வங்க உரிமைக்காக வாதாடுவதில் முதல்வராக இருந்திருப்பார். வங்காளிகளிடம் உள்ள தேசிய உணர்ச்சிக்கு நான் தலை வணங்குகிறேன்.

புபேஷ் குப்தா: இங்கு நான் உரிமைக்காகப் போராடினேன். டாக்டர் பி. சி. ராய் அவர்கள் அதை அறிந்திருக்கிறார்.

சி. என். ஏ. : ஆனால், போரிலே தோல்லி ஏற்பட்டுவிட்டது. வருந்து கிறேன். நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இராஜ்யங்கள் மேலும்மேலும் மனம் உடைந்த நிலைக்குச் செல்கின்றன; அரசியல் சட்டதிட்டத்தைத் திரும்ப ஆராய வேண்டும், அரசியல் சட்டதிட்டம்பற்றிய புதிய மதிப்பீடு பெறவேண்டும் என்று மத்திய சர்க்கார் நினைக்கவேண்டும் என்ற கோரிக்கையை (இராஜ்யங்கள்) வலியுறுத்துகின்றன. இதிலே, என் கருத்துக்கு நினைத்தபொழுது மந்திரிசபையிலிருந்து வெளியேறவும், மீண்டும் நுழையவும் சக்திபெற்ற ஒரு பிரமுகரின் ஆதரவு இருக்கிறது - பொருளாதார - பாதுகாப்புத்துறை இணைப்பு மந்திரி, கனம் டி. டி. கிருஷ்ணமாச்சாரியாரைக் குறிப்பிடுகிறேன். மறைந்த பெரியவர், பெரோஸ்காந்தியின் பெயரால் புதுடில்லியில் அமைந்துள்ள ஒரு மன்றத்தில், 1962, செப்டம்பர் 8-ல் பேசும்போது, அவர், பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் சட்டதிட்டத்தைப்பற்றிப் பரிசீலனை நடத்த வேண்டும் என்ற விதியைப் புகுத்தத் தவறிவிட்டது குறித்துப் பேசினார் - அரசியல் சட்டதிட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என்ற முறையில். அதுமட்டுமல்ல, இதற்காகப் பொதுமக்களின் கருத்துத் திரண்டெழவேண்டும் என்றும் குறிப்பிட்டார். பொது மக்களின் கருத்துகளைப் பாதுகாப்பவர்களில் ஒருவன் என்று என்னைக் கருதி என்னோடு வாருங்கள், இராஜ்யங்களின் மனப் பான்மை என்ன என்பதைக் கண்டறியலாம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினருக்கும், தொல்லையை வருவிக்க நான் விரும்பவில்லை, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் சொல்லுகிறேன், சென்னையில் ஆளுங்கட்சியில் உள்ளவர் களிலே பலர், இந்தியா ஒன்று, பிரிக்கப்பட முடியாதது என்று ஆணையிட்டுச் சொல்லக்கூடும், இந்தியாவின் அரசுரிமைமீதும் பிரதேச ஒற்றுமையின்மீதும் ஆணையிடக்கூடும். ஆனால், அவர்களின் ஏற்பாடுகளில் ஒன்று உதாசீனப்படுத்தப்பட்டால், அவர்கள் குறிப்பிடும் திட்டங்களிலே ஏதாவதொன்று எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் அவர்களுக்குத் தேவையான தொகை அவர்களுக்கென ஒதுக்கப்படவில்லை என்றால், அப்போதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றிய நினைவு பெறுகிறார்கள்! இதனால்தான் அண்ணாதுரை பிரிவினை கேட்கிறான் - என்கிறார்கள். சேலத்துக்கு எஃகு ஆலை இல்லை என்று மறுத்துவிடுங்கள்; அங்கு நான் கிளம்புகிறேன்! தூத்துக்குடி அபிவிருத்தி கிடையாது என்று மறுத்துப்பாருங்கள்; தி. மு. க. அங்கு தோன்றுகிறது! எனவே, கூட்டாட்சி முறையை ஓரரசு முறையாக்கும் முயற்சிக்குக் கிளம்பியுள்ள எதிர்ப்பின் ஈட்டிமுனை, தி. மு. க. என்று கொள்ளவேண்டும். பாராளு மன்றத்தின் பெரியவர்கள் நீங்கள்! ஏன் இந்தப் பிரச்சினையைக் காட்டுக்கு அழைத்துச் செல்கிறீர்கள்? அரசியல் அரங்கிலே மேலான இடத்துக்கு, பிரச்சினையை உயர்த்துங்கள்; கூட்டாட்சியை உண்மையான கூட்டாட்சி ஆக்குங்கள்.

சில உறுப்பினர்கள் திரும்பி என்னைக் கேட்பார்கள், ஆனால், நீ, பிரிவினைபற்றி அல்லவா பேசிவருகிறாய் என்று நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது அது என்றார் புபேஷ் குப்தா. மற்றவர்கள் அறிந்திராவிட்டாலுங்கூட சோவியத் அரசியல் சட்டதிட்டம் புபேஷ் குப்தாவுக்குத் தெரிந்திருக்கவேண்டும். பிரிந்துபோகும் உரிமையை அது அளிக்கிறது; ஆனால், அதனால் அரசுரிமைக்கு ஆபத்து வந்துவிட்டது என்று குய்யோ முறையோ என்று கூச்சலிட்டுக்கொண்டில்லை. புபேஷ் குப்தா, சோவியத் யூனியனிலிருந்து கெட்டவைகளைத்தான் கொள்கிறார் போலும், நல்லவைகள் அல்ல. பிரிவினை கேட்டதுமே அரசுரிமைக்கு ஆபத்து வரும் என்பது இல்லை என்று அவருக்கு நான் கூற விரும்புகிறேன்.

அது மட்டும் அல்ல. எங்கள் பிரிவினைப் பிரசாரம், அரசுரிமைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று வைத்துக் கொண்டே பார்த்தால், சர்க்காரை நடத்திச் செல்லும் ஒரு ஜனநாயகக் கட்சி என்ன செய்ய முயலவேண்டும்? அது மக்களிடம் சென்றிருக்கவேண்டாமா? அரசுரிமை மக்களிடம் இருக்கிறது என்று கூறவில்லையா? மக்கள்தான் அரசியல் சட்ட திட்டத்தை ஏற்படுத்தினார்கள். அரசியல் உரிமைகளின் பிறப்பிட மான, மக்களிடம்தான், நீங்கள் சென்று முறையிடவேண்டும். நான் நம்பிக்கையுடன் மக்களை அணுகிச் செல்கிறேன். பொது மக்களுக்கு விஷய விளக்கம் அளித்து என்னை எதிர்த்துப் பிரசாரம் செய்யும் திறமை, ஆற்றல் எமக்கு உண்டு என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அவர்களின் சர்க்காருக்குக் கூறக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் உரிமையை ஏன் விட்டுக்கொடுத்து விடுகிறீர்கள்? ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்ற முறையிலும், பொதுத்தொண்டாற்றும் பொறுப்புமிக்கவர் என்று முறையிலும், நீங்கள் சர்க்காருக்கு "எங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையிலே, குறுக்கே நிற்கவேண்டாம். அண்ணாதுரை பிரிவினைக்கான பிரசாரம் நடத்துகிறான் என்றால், அதன் ஆபத்தான தன்மையை நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம். நாங்கள் மக்களைச் சந்தித்து, அந்தப் பிரசாரத்தின் விஷம் நிறைந்த தன்மையை, மக்கள் உணரும்படி செய்வோம்'' என்று யோசனை கூறவேண்டும். ஜனநாயகவாதி என்ற முறையில் சாமான்யர்களுக்கு ஓரளவு மதிப்பளிக்கவேண்டும் என்று இந்த மன்ற உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன். சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்பப் படித்தவனாக இல்லா திருக்கலாம் - சிறப்பாகச் சட்ட அறிவு பெறாதவனாக இருக்கலாம் - ஆனால், வளமான பொது அறிவு பெற்றிருக் கிறான், வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது என்ற வித்தியாசம் கண்டறிய அவனுக்குத் தெரியும். நீங்கள் இந்த மசோதாவைக் கொண்டுவருகிறீர்கள் என்றால், நாட்டு மக்கள் அவ்வளவு பேர்களுடைய பொது அறிவுத் திறனிலும் நம்பிக்கை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள் என்று ஆகும்! பிரச்சினையை ஏன் பொதுமக்களுக்கு விட்டுவிடக்கூடாது? நானும் விரல்விட்டு எண்ணக்கூடிய என் கட்சியினர் சிலரும் சேர்ந்துகொண்டு பொதுமக்களை ஏய்த்துவிட முடியும், தவறான வழியில் அழைத்துச் செல்ல முடியும் என்று கருதாதீர்கள். சட்ட மந்திரி, மற்றோர் மன்றத்தில், பள்ளிச் சிறார்களை மட்டும் மகிழ வைக்கும் ஒரு காரணம் காட்டினார். . . .

கனம். ராமி ரெட்டி: தவறான முறை செல்லும் தத்துவ வாதம்.

சி. என். ஏ. : என்னுடையதா?

கனம். ராமி ரெட்டி: உம்முடைய தத்துவ வாதம் தவறான வழி அழைத்துச் செல்லக் கூடியது. . .

கனம். அக்பர் அலிகான்: இந்தியாவின் வரலாற்றில் வகுப்புவாத உணர்ச்சிகள் எந்த முறையிலே வேலை செய்தன, வகுப்புவாத உணர்ச்சியாலும் வகுப்புவாதத்தின் பேரால் வெளியிடப்பட்ட முறையீடுகளாலும் மக்கள் எப்படி வசப்படுத்தப்பட்டு இழுத்துச் செல்லப் பட்டார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும் என்று நான் அண்ணாதுரையைக் கேட்டுக்கொள்கிறேன்.

கனம். சந்தோஷ்குமார் பாசு: இந்த விஷயத்தை நேர்த்தியான முறையிலே எடுத்துப் பேசிக்கொண்டு வருகிற அண்ணாதுரையை நான் மற்றும் ஓர் கேள்வி கேட்க விரும்புகிறேன். மத்திய சர்க்காருக்கு அளவு கடந்த அதிகாரம் இருக்கிறது, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்ற கூச்சல் கிளம்பிய பிறகுதான், பாகிஸ்தானுக் கான கூச்சல் கிளப்பப்பட்டது என்பது உண்மையல்லவா?

சி. என். ஏ. : துணைத்தலைவர் அவர்களே! நான் சொல்லவேண்டி யவைகளை விளக்கியான பிறகு, தாங்கள் அருள் கூர்ந்து, எனக்கு மேலும் பேசச் சிறிது நேரம் தந்தால் இதற்கு பதில் அளிக்க முயல்கிறேன்.

துணைத்தலைவர்: இன்னும் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாம்.

சி. என். ஏ. : அரசுரிமை மக்களிடம் இருக்கிற வரையில், எந்தப் பிரச்சினைக்கும் தீர்ப்பளிக்கவேண்டிய தகுதிமிக்க அதிகாரம் படைத்தவர்கள் மக்களாகத்தான் இருக்கவேண்டும் என்பது பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் எடுத்துச் சொல்லிக் கொண்டு வந்தபடி, கூட்டாட்சி அமைப்பு முறை ஒரு குறிப்பிட்ட அளவு கெடுக்கப்பட்டுப்போயிருக்கிற காரணத்தினால், ஓரரசு முறைக்குச் சென்றுகொண்டிருப்பதனால், பிரிவினைக்கான கோரிக்கையை, மற்ற இராஜ்ஜியங்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியுடன் சேர்த்துப் பார்த்துக் கவனிக்கவேண்டும் என்று கூறுகிறேன். எங்கள் பிரசாரம் ஆபத்தானது என்று வைத்துக் கொண்டு பார்ப்பதானாலும்கூட, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எங்களை எதிர்ப்பிரசாரத்தால் சமாளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தேன். அவர்கள் இந்தத் தமது உரிமை விட்டுக்கொடுப்பதாக இருந்தாலும், இந்த உரிமை யையும் சர்க்காருக்கு, நிர்வாகத் துறையினருக்கு விட்டுவிடுவதாக இருந்தாலும், எங்களை எதிர்த்துப் பிரசாரம் செய்து சமாளிக்க, அடிப்படை உரிமைகளைக் குறைக்கவேண்டியது அவசியந்தானா என்பதுபற்றி யோசித்துப் பார்க்கும்படி, இந்த மன்றத்து உறுப்பினர்களை வேண்டிக் கேட்டுக்கொள்வேன். இந்த மன்றம் அதுபற்றி யோசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். அடிப்படை உரிமைகள் கட்டுக்கடங்கக்கூடாதவை அல்ல என்பதை நான் தெரிந்திருக்கிறேன், நன்றாக அறிந்திருக்கிறேன் - கட்டு திட்டங்கள் உள்ளன. . . . . .

கனம். அக்பல் அலிகான்: மிக உண்மை.