அந்தச் சமயத்தில்தான் அமைச்சர் ராமய்யா அவர்கள் அங்கு
வந்தார் - பார்த்து ரொம்ப நாளாயிற்று - உடம்பு சரி இல்லை
என்றார்கள் - பார்க்க வந்தேன் என்று சொன்னார். அவர் பார்த்தாகவேண்டிய
"நோயாளி' எவரேனும் மருத்துவமனையில் இருந்திருக்கக்கூடும்
- அவரைப் பார்க்க வந்தவர், நானும் மருத்துவமனையில் இருப்பதால்
என்னையும் பார்க்க வந்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டேன்
- ஒரு அமைச்சர் வந்து பார்த்து விசாரிக்கவேண்டிய நிலையில்
உள்ள "பிரமுகர்' அல்லவே நான். எப்படியோ ஒன்று, வந்ததற்கு
நன்றி கூறத்தான் வேண்டும். மிக்க அன்புடன் பேசினார் -
என் கரத்தில் உள்ள வலியின் தன்மைபற்றி விசாரித்தறிந்தார்
- கொஞ்சமும் தூக்க முடியாதிருந்த நிலையிலிருந்து ஓரளவு
தூக்கக்கூடிய நிலைக்கு, என் இடது கரம் வந்திருப்பதைச்
சொன்னேன் - இந்த அளவுக்குக் குணம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சியே
என்று என் திருப்தியைத் தெரிவித்தேன் - அவரோ, அதெல்லாம்
இல்லை - முழுக் குணம் ஏற்பட வேண்டும் - அவசரம் வேண்டாம்
- இருந்து குணப்படுத்திக்கொண்டு போங்கள் என்று கனிவுடன்
பேசினார் - என் உடன் பிறந்தவர்போல பேசுகிறாரே என்று நான்
பெருமிதம் கொண்டேன்; தொத்தா விஷயம் சொல்லி, பரோலில் செல்ல
எற்பாடு செய்ய, என் மகன் சென்றிருக்கிறான் என்றேன்; "இதிலே
என்ன சங்கடம் இருக்கிறது, கட்டாயம் பரோலில் விடுவார்கள்;
இப்படிப்பட்ட ஆபத்து என்றால் விடாமலா இருப்பார்கள்; நானும்
முதலமைச்சரைக் கண்டால் சொல்லுகிறேன்' என்று கூறினார்.
நான் சட்டசபையில் இருந்த
காலத்தில்கூட அமைச்சர் ராமையாவிடம் எனக்கு ஒரு தனியான
நேசப்பான்மை உண்டு - அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக
இருக்கும் போதே, நான் அவரை அறிந்தவன். அன்று அவர் என்னிடம்
காட்டிய அன்பு, உள்ளபடி என் மனதுக்குப் பூங்காற்றுப் போலிருந்தது.
ஏன் அதுபற்றி இவ்வளவு எழுதுகிறேன் என்றால் இவ்வளவு கனிவு
காட்டிப் பேசிய அதே அமைச்சர் ராமைய்யா அவர்கள், என் நோய்ப்பற்றியும்
நான் மருத்துவமனை சேர்ந்தது பற்றியும் கேவலமாகவும் கேலியாகவும்
பொதுக்கூட்டத்திலே பேசியதாகச் சில தினங்களுக்குப் பிறகு
இதழ்களில் வெளிவந்திருக்கக் கண்டேன் - திகைப்படைந்தேன்
- இல்லை! இல்லை! மனிதர்களுக்கு எத்தகைய இயல்புகளெல்லாம்
ஏற்படுகின்றன என்று எண்ணித் திடுக்கிட்டுப்போனேன். பத்திரிகையில்
அந்தச் செய்தியைப் பார்க்கும்போது, என் கண்களையே என்னால்
நம்ப முடியவில்லை, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுபோன்ற
தீய குணங்களைச் சுட்டெரிக்கத்தக்க உயர்குணத் தலைவர் காந்தியாரின்
கட்சியில், இப்படிப்பட்டவரும் இருக்க இடம் இருக்கிறதே
என்று எண்ணி வருத்தப்பட்டேன். எவ்வளவு கனிவான பேச்சு என்னிடம்.
எத்துணை தேவையற்ற, பயனற்ற, பொருளற்ற கேலிப்பேச்சு, மேடையில்!
அரசியல் இந்த அளவுக்குத் தரங்கெட்ட துறையாகிவிடக்கூடாது.
மணி நாலு - நான் விநாடிக்கு விநாடி வேதனை வளர்ந்துகொண்டிருக்கும்
நிலையில், தவித்துக் கிடக்கிறேன் மருத்துவமனையில் - பரிமளம்
வந்து சேரவில்லை, பதறிப் போனேன். ஐந்து மணி சுமாருக்கு
வந்தான். அன்று சர்க்கார் அலுவலகங்களுக்கு விடுமுறை, ஆகவே
அமைச்சர் அளித்த "வரம்' பழமாகவில்லை - எந்த அலுவலகமும்
பணியாற்றவில்லை. இது தெரிந்து இளைஞனாக இருப்பினும், பரிமளம்,
என்றுமில்லாத அறிவுத்திறனும் ஆற்றலும் கொண்டு நேராக அமைச்சர்
பக்தவத்சலம் அவர்களின் இல்லத்தின் எதிரிலேயே சென்று நின்றுகொண்டானாம்.
எங்கோ சென்றுவிட்டு, அவர் வீடு திரும்பி இருக்கிறார்,
இவன் எதிரே சென்று நின்று, இன்னும் பரோல் கிடைக்கவில்லை
என்று தெரிவித்திருக்கிறான். உடனே அவர், அவனை உள்ளே அழைத்துச்
சென்று, அவன் எதிரிலேயே, தொலைபேசி மூலம் பெரிய அதிகாரியிடம்
தொடர்புகொண்டு, உடனே பரோலுக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும்
என்பதைக் கூறி, இனி கிடைத்து விடும், நீ சென்று உத்தரவைப்
பெற்றுக்கொள் என்று பரிமளத்திடம் கூறி அனுப்பினார். அதன்படி
உத்திரவு பெற்றுக்கொண்டு, பரிமளம் வந்து சேர்ந்தான். அ.
பொ. அரசு மெத்தத் துணைபுரிந்திருக்கிறார். மிக்க பச்சாதாப
உணர்ச்சியுடன் அமைச்சர் பக்தவத்சலம் நடந்துகொண்டதை நான்
என்றும் மறக்க முடியாது. அவர் அமைச்சர் ராமைய்யாபோல கனிவாக
என்னிடம் பேசியதில்லை; பரிமளம், என் மகன் என்பதும் அவருக்குத்
தெரியாது.
வழக்கறிஞர் நாராயணசாமியை
உடனழைத்துக்கொண்டு, பரிமளமும் நானும் இரவு எட்டு மணிக்குக்
காஞ்சிபுரம் சென்றோம் - அன்றிலிருந்து ஆறு நாள் வரையில்,
என் சிற்றன்னை இறுதிப்பயணதில் சென்றவண்ணம் இருப்பதைக்
கண்டு கண்டு குமுறியபடி இருந்தேன் - இறுதியும் நடைபெற்றுவிட்டது.
நாவலரும், நடராஜனும், கருணாநிதியும், சத்தியவாணியும்,
அலமேலு அப்பாதுரையும், பிறரும், நமது கழகத் தோழர்கள் அனைவரும்,
என் உடனிருந்து ஆறுதல் கூறினர். எம். ஜி. இராமச்சந்திரன்,
கே. ஆர் இராமசாமி, எஸ். எஸ். இராஜேந்திரன், சிவாஜி கணேசன்,
டி. வி. நாராயணசாமி ஆகியோர் வந்திருந்தனர் - இருபத்தியொரு
நாட்கள், நான் காஞ்சிபுரத்தில் தங்கினேன் - என் வாழ்க்கையில்,
அதற்கு முன்பு நான் கண்டறியாத ஓர் வேதனையால் தாக்கப்பட்ட
நிலையில் மனிதத் தன்மையை இழந்துவிடாத எவரும், இந்த என்
நிலை கண்டிரங்குவர் - ஆனால் அரசியல் எதிர்ப்புணர்ச்சி
காரணமாகச் சிலர் - தமது நிலைமையைக்கூட மறந்து - நான் பரோலில்
வந்ததைக் கேலி செய்து பேசியதையும் பத்திரிகையிலே கண்டேன்.
அரசியல்துறை இத்தகைய காட்டு உணர்ச்சிகளையா தூண்டிவிட வேண்டும்.
அரசியல் பகையுணர்ச்சியைக் காட்டிக்கொள்ள, பண்பிழந்து,
மனிதத் தன்மை இழந்தா பேச முற்பட வேண்டும்! என்னையோ, என்
கழகத்தையோ, கண்டிக்க வேறு வழியே இல்லையா - முறையே கிடையாதா!
சிற்றன்னையை இழந்து நான் தவித்துக் கிடக்கும்போது, குடும்பத்தாருடன்
இருந்து துக்கத்தைப் பங்கிட்டுக் கொள்ள, பரோலில் சென்றது
நியாயத்திற்கு அப்பாற்பட்டதா! பெரும் காங்கிரஸ் தலைவர்கள்
பரோலில் சென்றது இல்லையா? பல் வலிக்காக பரோலில் சென்றவர்கள்
எனக்குத் தெரியும்; பண்பிழந்து பேசின சிலருக்குத் தெரியாதிருக்கலாம்.
அரசியல் துறையில் இத்தகைய அநாகரீகம் புகக்கூடாது என்பதற்காகவே
இதுபற்றி எழுதுகிறேன். இருபத்தியொரு நாட்கள் பரோல் என்றால்,
என் தண்டனைக் காலத்தில் இருபத்தியொரு நாட்கள் குறைந்துவிடும்
என்று பொருள் அல்ல. - அந்த இருபத்தியொரு நாட்கள், நான்
சிறையில் இருந்துவிட்டு வரவேண்டும். இனாம் பெறவில்லை;
இருபத்தியொரு நாட்களைக் கடனாகப் பெற்றேன்; திருப்பித்
தந்தாக வேண்டும். எத்தனை இழிமொழி, கேலி மொழி இதற்கு! இதைக்
காரணம் காட்டியா தேர்தலில் வெற்றிபெற வழி தேடுவது. அவ்வளவு
வக்கற்றுப்போன நிலை வந்துவிட்டதா! அவ்வளவு வறண்டுபோய்விட்டதா,
நெஞ்சத்தின் ஈரம், தொகுதி ஐந்து 207 நேர்மை; பண்பு! எண்ண
எண்ணத் திகைப்பாக இருக்கிறது. கள்ளநோட்டு வழக்கிலே சிறை
புகுந்தவர்கள், இரண்டு மாதங்கள் "பரோல்' பெறுகிறார்கள்,
குடும்ப, வியாபார விவகாரத்தைக் கவனிக்க - இந்த அரசில்.
என் சிற்றன்னையின் மறைவுக்காக - நான் "பரோல்' பெற்றதைக்
கண்டிக்க, கேலி பேச, ஆட்சிப் பொறுப்பிலே உள்ளவர்களுக்கு,
மனம் வருகிறது. அத்தகைய பேச்சை, அரசியல் பேச்சு என்றும்
அவர்கள் கருதுகிறார்கள். எவ்வளவு தரம் கெட்ட நிலைக்கு
வந்துவிட்டது அரசியல்!! அரசியலா! அல்ல! அல்ல! அதிலே இலாபம்
காணும் போக்கினர், அவ்வளவு தரம் கெட்ட நிலைக்கு வந்துவிட்டனர்.
மருத்துவமனைக்கு நான் சென்றதுகூட,
மாலை நேரப் பேச்சுக்கு, அந்த மகானுபாவர்களுக்குப் பயன்பட்டுவிட்டது.
என் இடத் தோளில் ஏற்பட்ட
வலி, இன்னும் அடியோடு போய்விடவில்லை - எளிதாகவும் போய்விடாது
என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். வலக் கரத்தைத் தூக்கும்
அளவுக்கு இடக் கரம் தூக்க வராது; ஒரு விதமான பிடிப்பு
ஏற்பட்டு விட்டிருக்கிறது - ஆர்தர்டிஸ் என்று பெயர் கூறுகிறார்கள்.
இடத்தோளில் எலும்புக்கும் சதைக்கும் இடையில் உள்ள மெல்லிய
பாகம் தடித்துப் போய்விடுவதால், கை தூக்குவதிலே இடையூறு
ஏற்பட்டுவிடுகிறது. ஏன் தடித்துப்போகிறது? மருத்துவ நூலில்,
விளக்கம் இல்லை. வயதானால் தடித்துப் போகலாம் - குளிர்
காற்றின் வேகம் தாக்கித் தடித்துப் போகலாம் - இவைகளெல்லாம்,
காரணங்களாகக் காட்டப்படுகின்றன - இதுதான் காரணம் என்று
அறுதியிட்டு உறுதியாகக் கூறுவதற்கில்லை. அதைப்போலவே இதனைப்
போக்க, திட்டவட்டமான முறையும், உடனடியான பலன் தரத்தக்க
மருந்தும் இல்லை. இது அடியோடு நீங்க, மாதக் கணக்கில் ஆகலாம்
- வருடக் கணக்கில் ஆகலாம் - இதற்குச் செய்யக் கூடியதெல்லாம்,
பிடிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மின்சாரத்தின் மூலம், "ஒத்தடம்'
கொடுப்பது; விடாமல் தேகப் பயிற்சி செய்வது; வலி தெரியாதிருக்க
மாத்திரைகள் சாப்பிடுவது, இவைகளே. இப்போதும், எனக்கு அந்த
வலியும் இருக்கிறது; தூக்கும் நிலையில் பிடிப்பு இப்போதும்
இருக்கிறது. வலி மிக அதிகமாக இருந்ததுடன், வலக் கரத்துக்கும்
வலி படை எடுத்த நிலைபற்றி, குறிப்பிட்டேன் அல்லவா; அது
கண்டுதான் நான் அச்சம் கொண்டேன். பொதுவாக இடப் பக்கம்
தோளோ, கரமோ, வஎடுக்கிற து என்றால், இருதய சம்பந்தமானதாக
இருக்கக்கூடும்; அப்படியா அல்லது வேறுவிதமா என்பதைக் கண்டறியும்
சாதனம், சிறை மருத்துவமனையில் இல்லை. அதனாலேயே நான் சர்க்கார்
மருத்துவமனைக்குச் செல்ல விரும்பினேன். மருத்துவமனைக்குச்
சென்றுவிட்டால், சிறையில் இருப்பது போன்ற கட்டுக்காவல்
இருக்காது, சிட்டுப்போலச் சிறகடித்துப் பறக்கலாம் என்பதால்
அல்ல. சிறையில் இரவு மட்டும்தான், தனி அறை; மருத்துவமனையில்
24 மணி நேரமும், தனி அறை - போலீஸ் காவல். ஒருவரிடமும்
பேச அனுமதி கிடையாது. பார்க்க வருபவர்கள், மாலை 5 மணியிலிருந்து
6 மணிக்குள், சர்க்கார் மருத்துவமனை பெரிய அதிகாரியின்
அனுமதி பெற்று வந்து போகலாம். எப்போதும் எட்டு, ஆறு, நாலு
என்ற அளவில் போலீஸ்காரர் அறைக்கு எதிரே காவல். நான் இருந்த
பகுதியில் பணியாற்றும் மருத்துவர் தவிர, அதே மருத்துவமனையில்
வேறு பகுதியில் பணியாற்றும் மருத்துவர் வந்தால்கூட, போலீசார்
விடுவதில்லை. அவ்வளவு கண்டிப்பு, அத்துணை கண்காணிப்பு!
இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தேன் - நான். ஏதோ
மருத்துவமனையில், விழாக்கோலத்தில் விருந்து சாப்பிட்டுக்
கொண்டு இருப்பதுபோல எண்ணிக்கொண்டு, பேசிவந்தனர், கழகத்துக்கு
மாசு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, எவ்வளவு மட்டமான
முறையும், நேர்மையற்ற போக்கையும் மேற்கொள்வதிலே வல்லவர்கள்.
எனக்கு ஏற்பட்ட வலியின்
தன்மையைக் கண்டறியச் சிறையிலுள்ளவர்கள் துளியும் முயற்சி
எடுக்காததைக் கூறினேன், நாவலரிடம். அவர் சர்க்கார் பெரிய
அதிகாரியிடம் பேசி இருக்கிறார்; அந்த அதிகாரி சர்க்கார்
மருத்துவமனைத் தலைமை மருத்துவர் திரு. இரத்திரனவேலு சுப்ரமணியம்
அவர்களை, சிறைக்குச் சென்று என்னைப் பார்த்துவரச் சொல்லி
இருக்கிறார். மருத்துவர் என்னை வந்து பார்த்துவிட்டு,
மருத்துவமனையில் வைத்துத்தான் வலியின் தன்மையைக் கண்டறிய
வேண்டும் என்று கூறிடவே, நான் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன்.
டாக்டர் இரத்தினவேலு சுப்பிரமணியம், டாக்டர் நடராசன்,
டாக்டர் சத்தியநாராயணா ஆகிய மூவரும், என் வலி எதனால் என்பதைக்
கண்டறிய பல்வேறு பரிசோதனைச் செய்தனர். இதயத் துடிப்புகளைப்
படமாக்கும் மின்சாரக் கருவிகொண்டு பார்த்ததில் இருதய சம்பந்தமான
கோளாறு எதுவும் இல்லை என்பதைக் கண்டறிந்து கூறினர். பிறகு
பல், வாய், காது இவைகளில் ஏதேனும் கிருமிகள் உள்ளனவா என்று
ஆராய்ந்தனர். எனக்குள்ள வலி, பெரி-ஆர்திடிஸ் - என்பதாகும்
என்று முடிவாயிற்று. மின்சார ஒத்தடமும் முறையான தேகப்
பயிற்சியும் அளிக்கப்பட்டன. டாக்டர் நடராசன், எலும்பு
சம்பந்தமான கோளாறுகளைச் சரிப்படுத்தும் நிபுணர். நமது
எம். ஜி. இராமச்சந்திரனுக்கு, கால் எலும்பு முறிந்திருந்தபோது
மிகத் திறமையாகக் கவனித்து, எந்தவிதமான ஊனமும் ஏற்படாமல்,
எம். ஜி. இராமச்சந்திரனை எழுந்து நடமாட வைத்தவர் இந்த
டாக்டர் நடராசன் அவர்களே. இளம்பிள்ளை வாதத்தால் வதைபடும்
குழந்தைகளுக்கான சிகிச்சை முறையை, நேர்த்தியாக அமைத்து,
மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறார். இந்தத் துறையில்,
மற்ற எந்த மருத்துவமனையையும் விட, சிறப்பானதாக, இங்கு
அமைய வேண்டும் என்பதிலே, டாக்டர் நடராசன் மிகுந்த அக்கறை
கொண்டுள்ளார். என் வபோக்க அவர் துவக்கிய மின்சார சிகிச்சை
முடிவடைய ஒரு வாரம் இருக்கும்போது, அவர் அறுவைத் துறை
நிபுணர்களின் மகாநாட்டிலே கலந்து கொள்வதற்காக, கல்கத்தா
புறப்பட்டார். மறுநாளே நான், காஞ்சிபுரம் செல்லவேண்டி
ஏற்பட்டுவிட்டது.
டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம்
மருத்துவர்களுக்கு ஒரு முன் மாதிரியாக இருப்பவர் - ஆழ்ந்த
அறிவுத் தெளிவும், மிக அமைதியான இயல்பும், நோயாளிகளிடம்
கனிவு காட்டும் இவருடைய பார்வையும் பேச்சுமே, மருந்தாகிவிடும்.
எப்போதும் ஓர் புன்னகை தவழும் நிலையில் இருப்பவர்; மிகுந்த
நகைச்சுவையுடன் பேசுபவர். என்னுடைய உடற்கூறு அவருக்குக்
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே நன்கு தெரியும். சில
திங்களுக்கு ஒரு முறை அவரிடம் சென்று, என் உடல் நிலைபற்றிக்
கூறி, மருந்து பெறுவது வாடிக்கை - பத்து ஆண்டுகளாகவே;
அவருடைய தனியான கவனிப்பு எனக்குக் கிடைத்தது கண்டு நான்
பெரு மகிழ்ச்சி அடைந்தேன். எனக்கு வந்துற்ற, பெரி-ஆர்தடிஸ்சின்
இயல்புபற்றி அவர் கூறிய பிறகு, எனக்கு வலி கண்டவுடன் ஏற்பட்ட
குழப்பமும் அச்சமும் வெகுவாகக் குறைந்துவிட்டது.
தொடர்ந்து ஒரு பத்து நாள்
அங்கு நான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இடையில் என்னைத்
தாக்கிய வேதனை, இருபத்தியொரு நாட்கள், மருத்துவமனையில்
நான் இருப்பதற்கு முடியாத நிலையை உண்டாக்கிவிட்டது. காஞ்சிபுரத்தில்,
என் சிற்றன்னைக்கு ஏற்பட்ட நோய் தீர வழி இல்லை என்றபோதிலும்,
என் மனதுக்கு ஆறுதல் தர, உடனிருந்து, பல்வேறு சிகிச்சை
முறைகளைக் கையாண்டு பார்த்து, கடைசி விநாடி வரை, இருந்து
வந்த டாக்டர் ராமமூர்த்தி என்பவர், நான் காஞ்சிபுரத்தில்
தங்கி இருந்த நாட்களில், என்னையும் கவனித்துக் கொண்டார்.
இதயத்தில் பலமான அடி விழுந்துவிட்ட நேரம். எனவே, என் கை
வலி எனக்கு அப்போது நினைவிலே நிற்கக்கூட இல்லை. சில நாட்கள்
ஆயுர்வேத முறைப்படி, மருத்துவர் தங்கப்பன் என்பவர், என்
வலி போக்க முயன்றார். போதுமான காலம் கிடைக்கவில்லை. என்
சிற்றன்னை தழலில் கிடத்தப்பட்டு, சாம்பலாயினார்கள் - நான்
செயலற்ற நிலையில் உழன்று கிடந்தேன். "பரோல்' முடிந்தது.
பரிமளத்துடன் சென்னைக்கு வந்து, வழக்கறிஞர் நாராயணசாமி
இல்லத்தில் உணவருந்திவிட்டு, நாவலர், நடராஜன், கருணாநிதி
ஆகியோரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, 15ஆம் தேதி மாலை,
மீண்டும் சென்னை மத்திய சிறைக்கோட்டம் நுழைந்தேன்.
இம்முறையேனும், என்னை நண்பர்கள்
உள்ள பகுதிக்கு அழைத்துச் செல்வார்கள் என்று எண்ணிக்கொண்டே,
உள்ளே நுழைந்தேன் - சிறை அதிகாரிகள் என்னை, பழைய இடத்துக்கே
அழைத்துச் சென்றனர். பழைய இடம், புதிய நிலையிலும் இருந்திடக்
கண்டேன் - என்னோடு தேவகோட்டையாரும் இஸ்லாமியப் பெரியவரும்
இருந்தனர் அல்லவா - அவர்களும் அங்கு இல்லை; நான் உள்ளே
நுழைகிறேன். தேவகோட்டையார் வெளியே போகிறார்! இஸ்லாமிய
நண்பர், மருத்துவமனை சென்றுவிட்டதாக அறிந்தேன். ஆக அன்று
இரவு எட்டு அறைகள் கொண்ட அந்த விடுதியில் நான் மட்டுமே
- பணியாற்ற அமர்த்தப்பட்ட கன்னியப்பன் என்ற ஒருவர், என்
வேண்டுகோளின்பேரில், பக்கத்து அறையில் இருக்க அனுமதிக்கப்
பட்டது. வெறிச்சோடிய மனம்! வெறிச்சோடிய இடம்! அன்று இரவு
தங்கி இருந்தேன் - மருத்துவர் முன்பே தெரிவித்திருந்ததற்
கிணங்க, சிறை அதிகாரி, காலையில், என்னை அழைத்துக் கொண்டுபோய்,
மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தார் - வழக்கமான போலீஸ்
காவல் - பகல் இரவு எந்த நேரமும் அறைக்குள்ளே இருந்து தீரவேண்டிய
நிலை - மாலையில் மருத்துவமனை பெரிய அதிகாரியின் அனுமதி
பெற்று, என் துணைவியும், மகனும் வந்து பார்ப்பது என்ற
பழைய ஏற்பாடு - வெளிக்குச் செல்ல, குளிக்கச் செல்ல என்றால்கூட
பலத்த போலீஸ் காவல் - மிகப்பெரிய சமூகக்கேடான குற்றம்
புரிந்து, வாய்ப்புக்கிடைத்தால் ஓடிவிடக்கூடிய கெடுமதி
கொண்ட குற்றவாளிகளுக்கென அமைந்திருந்த அமுல், முறை யாவும்,
மொழி காத்திடும் தூய நோக்குடன் அறப்போரில் ஈடுபட்டு, சிறைபுகுந்த
எனக்கும்! ஏனோ இந்தப் பொருளற்ற போக்கு! சிறைக் கொடுமைகளைத்
தாமே கண்டவர்கள், காங்கிரசார் - அவர்கள் நடத்தும் ஆட்சியில்,
சிறைக் கொடுமை நீக்கப்பட வில்லை - சிறை நிலைமையை மருத்துவமனையிலும்
புகுத்தி இருந்தார்கள். சிறையிலாவது பகலெல்லாம் சிறிதளவு
நடமாடலாம், சிலருடன் உரையாடலாம் - மருத்துவமனையில், பகலிலும்
சரி இரவிலும் சரி, ஒரு அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும்
நிலை. சேலம் மாவட்டம் வேலூர் தோழர் சிவப்பிரகாசம் எனக்கு
நீண்ட பல ஆண்டுகளாக நண்பர் - அவர் அறுவை சிகிச்சை பெற்றுக்கொண்டு,
நான் இருந்த இடத்தில் வேறோர் அறையில் படுத்திருந்தார்.
அவரைச் சென்று பார்க்கக்கூட, அனுமதி இல்லை. அவர் இங்கு
வந்து பார்க்கவும் அனுமதி இல்லை. அவர், மருத்துவமனையிலிருந்து
உடல்நலம் பெற்று வீடு ஏகும்நாள், என் அறைக்குள் வந்து,
இரண்டொரு நிமிடங்கள் பேசிவிட்டு, போலீசார் மேற்கொண்டு
கெடுபிடி செய்வதற்கு முன்பு சென்றுவிட்டார். அவ்வளவு கண்டிப்பான
முறையிலே, காவல் இருந்து வந்தது. இதனை அறியாமலோ, அறிந்தும்
வேண்டுமென்றோ, அரசியல் மாச்சரியம் காரணமாகச் சிலர், மருத்துவமனையில்
நான் தங்கி இருந்ததை, ஏதோ மணவிழா மன்றலில் தங்கி இருந்ததுபோல
எண்ணிக்கொண்டு, ஏசிப் பேசினர். சிலருக்கு உள்ளம் அப்படி
இருக்கிறது!! மாலை வேளைகளில் ராணியும் பரிமளமும், என்
பெரிய மருமகப் பெண்ணும் வருவார்கள் - அவர்களுக்கு என்னைக்
காண்பதால் ஒருவிதமான மன நிம்மதி - எனக்கும் அவ்விதமே.
ஆனால் "தொத்தா' பற்றிய நினைவு வந்துவிடும் - வேதனை மீண்டும்
தேளாகக் கொட்டும். இந்நிலையில் இருந்துகொண்டு மீண்டும்
மின்சார சிகிச்சை பெற்றுக்கொண்டு வந்தேன்.
அண்ணன்
18-10-1964