அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


தியாக வரலாறுகள்
1

சிறை மேலதிகாரியைக் காணச் சென்றதில் ஒரு திடுக்கிடத் தக்க தகவல் தெரியவந்தது. தொத்தா மறைவு குறித்து அனுதாபம் தெரிவிக்கும் முறையில் இங்குள்ள நமது கழகத் தோழர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். சிறை மேலதிகாரிகள் மிகக் கோபம் கொண்டுவிட்டனர். "ஐயா! உங்கள் பேரில் கோபித்துக் கொண்டோ, சிறை நிருவாகத்தின்மீது அதிருப்திகொண்டோ நாங்கள் உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது எங்கள் குடும்பத்திலே நேரிட்டுவிட்டதுபோன்ற ஒரு இழப்புக்காக வருத்தம் கொண்டு நடத்தப்படும் ஒரு மரியாதைச் சடங்கு' என்றெல்லாம் தோழர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர். அதுபோல எழுதிக்கொடுக்கச் சொல்லியும் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். என்றாலும், உண்ணாவிரதம் இருந்தது குற்றம்! தண்டிக்கத் தக்கது என்று கூறி, இரண்டு வாரங்கள் யாரும் வந்து பார்க்க அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டதுடன், கழிவு நாட்களில் நாலு நாட்களைக் குறைத்துவிட்டனர்.

இந்தத் தகவலைக் கேட்டுக்கொண்டு வந்தனர் மேலதிகாரியிடமிருந்து. பட்டதும் படாததுமாக, மேலதிகாரி, மே முதல் வாரத்தில் உங்களில் சிலரை அனுப்பிவிடுகிறேன் என்று கூறியிருக்கிறார். எத்தனை நாட்கள் "கழிவு' தரப்படும். எந்தத் தேதியில் விடுதலை என்பதை மூடு மந்திரமாகவே வைத்துக் கொண்டிருப்பதில் இவர்களுக்குப் பிரமாதமான விருப்பம் இருப்பது தெரிகிறது. கழிவு நாட்கள் தருவதிலேயும் நாம் அறிந்துகொள்ளத்தக்க திட்டவட்டமான ஒரு முறை கையாளப் படுவதாகவும் தெரியவில்லை. இந்த முறையை இங்குள்ள கைதிகள் "மார்க்கு' என்று சொல்லுகிறார்கள் - இதிலே பலரகம் இருக்கிறதாம். பேசிக்கொள்கிறார்கள். ராணி மார்க்கு என்கிறார்கள்; வேலை மார்க்கு என்கிறார்கள்; துரைதரும் மார்க்கு என்கிறார்கள். எல்லாம் "கைதி' பாஷை. துரை என்றால் சிறை மேலதிகாரி.

கைதிகள் இங்கு நடந்துகொள்ளும் முறையின்படி, சுறுசுறுப்பு, அடக்க ஒடுக்கம் ஆகிய முறையின்படி, வெளியே வேலைகளிலே ஈடுபடும்போது நடந்துகொள்வார்களோ என்பது சந்தேகந்தான்.

தெரியாமல் வந்துவிட்டேன் - விரோதி சிக்கவைத்து விட்டான் - விதிவசம் என்று கைதிகள் உருக்கமாகப் பேசுகிறார்கள். ஆனால் சிலர் திரும்பத் திரும்ப சிறை வந்தபடி இருக்கிறார்கள். இங்கு எங்கள் பகுதியில் வேலை செய்யும் கைதிகளை மேற்பார்வை பார்க்க ஒரு கைதி - மேஸ்திரி என்ற பெயருடன் விடுதலை ஆகிப் பத்து நாட்கள்கூட ஆகவில்லை. இன்று மீண்டும் சிறைக்கு வந்து சேர்ந்துவிட்டதாக நண்பர்கள் கூறுகிறார்கள். விடுதலைக்கு முன்பு "இனி ஜென்ம ஜென்மத்துக்கும் இங்கு வரமாட்டேன்; பட்டது போதும்; புத்தி வந்துவிட்டது' என்றெல்லாம் சொன்ன ஆசாமி எண்ணி பத்து நாளாவதற்குள், மறுபடியும் "உள்ளே' வந்தாகிவிட்டது.

இங்கே, "சிறையில்' இப்படி வந்துபோகிறவர்களை, விக்கிரமாதித்தன் பரம்பரை என்றும், ஆயுள் தண்டனைக் கைதிகளை இராமன் பரம்பரை என்றும், வேடிக்கையாகப் பேசிக் கொள்கிறார்கள் - விக்கிரமாதித்தன் நடாறுமாதம் காடாறுமாதம் அல்லவா! இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அல்லவா!!

17-4-1964

இன்று, இளங்கோவனுடன் கௌதமனும், கே. ஆர். இராமசாமியும் என்னைக் காணவந்திருந்தனர். என்னைச் சிறையில் கௌதமன் வந்து பார்ப்பது, இதுதான் முதல் முறை. பரீட்சை எப்படி எழுதினாய் என்று கேட்டேன்; நன்றாகவே எழுதி இருப்பதாகச் சொன்னான். பரிமளம் மாயவரம் சென்றிருப்பதாகவும், அடுத்த வாரம் வரக்கூடும் என்றும் இளங்கோவன் கூறினான். இராமசாமி, சோர்வாகக் காணப் பட்டார். சட்டசபை படிப்பகத்திலிருந்து சில புத்தகங்களைப் பெற்றுக்கொண்டு வந்து கொடுக்கும்படி, இராமசாமியிடம் கூறி அனுப்பினேன்.

இன்று தையற்கலை ஆசிரியர் கே. பி. சுந்தரமும், தமிழ்ப் பேராசிரியர் அன்பழகனும், சிலப்பதிகார காலத்தில், தையற்கலை இருந்திருக்கிறதா என்பதுபற்றி, சுவையுடன் பேசலாயினர். துன்னகாரர் என்றிருப்பது தையற் கலைஞர்களைக் குறிப்பது தாகும் என்று அன்பழகன் விளக்கினார். இன்று உள்ளதுபோன்ற, வெட்டு முறைகளும், விதவிதமான "பாணிகளும்' அப்போது இருந்ததாக ஆதாரம் இல்லை என்பது சுந்தரத்தின் வாதம். நான் பொதுவாக ஒன்று கூறினேன் - "மேனாடுகளில், அவ்வப்போது இருந்த நிலைமைகள், பழக்க வழக்கங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை முறையாகத் தொகுத்து எழுதும் பழக்கம் உண்டு. அதனால், மிகப் பழங்காலத்துத் தகவல்களைக்கூடத் தெரிந்துகொள்ள வழி கிடைக்கிறது. நம்மிடம் அந்தப் பழக்கம் வெகு காலமாக இல்லை, அதனால் எத்தனையோ தகவல்கள் மறைந்துபோய்விட்டன' என்று குறிப்பிட்டேன்.

ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்புகள் பற்றிப் பேச்சு வந்தது. புதுவை ஆனந்தரங்கம் பிள்ளையின் குறிப்பு, இங்கே சிறைப் படிப்பகத்திலே இருந்தது; மும்முனைப் போராட்டத்தின் போது சிறையில் நாவலர் அந்தப் புத்தகத்தைப் படித்து, மன்றத்தில் சில கட்டுரைகள்கூட எழுதினார் என்பதை நான் கூறினேன்.

20-4-1964

இரண்டு நாட்கள் குறிப்பு எழுதத்தக்க நிகழ்ச்சிகள் இல்லை; வழக்கமான, சுவையற்ற அன்றாட நடவடிக்கைகள், பேச்சும், சோர்வுடன். காரணம், அருப்புக்கோட்டை; இங்கு நான் துவக்க முதலே ஐயப்பட்டுக்கொண்டிருந்தேன். முடிவும் அதுபோலவே ஆகிவிட்டது. தேவருடைய மறைவுக்குப் பிறகு, அந்தப் பகுதியைக் காங்கிரசுக்கு ஆக்கிக்கொள்ள வேண்டுமென்ற காங்கிரஸ் திட்டம் பலனளித்துவிட்டது. என்றாலும், பத்திரிகைச் செய்தியைக் கூர்ந்து பார்த்தால், சாத்தூர், சிவகாசி தொகுதிகளை முதுகுளத்தூர், அருப்புக்கோட்டை தொகுதிகளுடன் இணைக்காமலிருந்தால் நிலைமை வேறுவிதமாகி இருக்கும் என்பது புரியும். நண்பர்கள், இதுபோல, மனதுக்கு ஒருவிதமான திருப்தி வருவித்துக் கொண்டார்கள். என்னைப் பொறுத்தவரையில், இதுபோலத் திருப்தியை வருவித்துக்கொள்வதிலே பலன் இல்லை, நியாயமுமாகாது என்று தோன்றுகிறது. பல இடங்களில், காங்கிரஸ் தனது பிடியை இழந்துவிடாதிருக்க, பலமானதோர் முயற்சியிலே ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி சில இடங்களில் வெற்றியைக் கொடுக்கிறது. எனவே, காங்கிரசின் ஆதிக்கத்தை அகற்றும் முயற்சி தீவிரமாக்கப்பட வேண்டும் என்ற பாடத்தைத் தான் அருப்புக்கோட்டைத் தோல்வி மூலம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன்.

படித்து, குறிப்பெடுக்கத்தக்க புத்தகங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் பொழுதுபோக்குக்கான கதைப் புத்தகங்கள்தான் தரப்பட்டன. அவைகளையும் படித்து முடித்தேன் - சிறையிலே படிக்காவிட்டால் வேறு எங்குதான் அவைகளைப் படிக்க முடியும்! இதிலேயும் ஒரு பலன் இருக்கத்தான் செய்கிறது. அமெரிக்க நாட்டு மக்கள், எத்தகைய மனப்போக்கில் விருப்பம் காட்டுகிறார்கள் என்பதை, இந்தக் கதைகள் காட்டுகின்றன. காட்டுமிராண்டிகளிடம் இருந்த நாட்டை, நாகரிகப்படுத்தும் புனிதப் பணி புரிந்தனர் அமெரிக்கர்கள் என்று இன்றுள்ள அமெரிக்க இளைஞர்கள் எண்ணிப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடனேயே, பெரும்பாலான கதைகள் புனையப்பட்டுள்ளன.

பண வருவாய் அதிகமாகி உள்ள அமெரிக்காவில் காமக் களியாட்டங்கள் மிகுந்துவிட்டிருக்கிறது என்பதையும், சில ஏடுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனால் அத்தகைய வாழ்க்கை தவறானது என்று இந்த ஏடுகள் கண்டிக்கவில்லை; உள்ளதை அப்படியே படம் பிடித்துக்காட்டுகின்றன. வேகமும் தாகமும் மிகுந்த வாழ்க்கை.

21-4-1964

அருப்புக்கோட்டை பற்றிய ஆய்வுரையே பெரும்பகுதி இன்றும், வழக்கமாகக் காங்கிரசை ஆதரிக்கும் சில ஏடுகள்கூட, இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி ஜாதி வெறியை ஊட்டி வெற்றிபெற்றதைக் கண்டித்து எழுதி உள்ளன. இதைப் படித்துவிட்டு, நண்பர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்; பாராட்டக் கூடச் செய்தார்கள். "என்ன பிரயோஜனம்? தேர்தல் பிரசாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, காங்கிரஸ் ஜாதிவெறியைக் கிளப்புவதைக் கண்டித்து, இந்த ஏடுகள் எழுதி இருந்தால் மக்களில் சிலராயினும், காங்கிரசின் போக்கை வெறுத்து. எதிர்த்து ஓட்டளித்திருப்பார்கள். அப்போது வாய்மூடிக் கிடந்துவிட்டு, காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு, அதன் போக்கைக் கண்டித்து என்ன பலன்?' என்று நான் கேட்டேன். உண்மைதான், இந்தப் பத்திரிகைகள், காங்கிரசின் போக்குக்கு உடந்தையா கத்தான் இருந்துவிட்டன என்று நண்பர்கள் பேசிக்கொண்டனர்.

சுந்தரம், ஓவியம் வரைவதற்கான வண்ணங்களைக் கேட்டதற்குத் தரமுடியாது என்று கூறிவிட்ட சிறை அதிகாரிகள், என்ன காரணத்தாலோ, தங்கள் மனதை மாற்றிக்கொண்டு, வண்ணங்களைக் கொடுத்துள்ளனர். இப்போது, ஓவியங்கள் தீட்டுவதில் நானும் முனைந்துவிட்டேன். ஒரு ராணுவத் தலைவன், மலைப்பகுதி எனும் இரண்டு ஓவியங்கள் தயாரித்திருக்கிறேன். ராணுவத் தலைவனுடைய தொப்பி சரியாக இல்லையே என்றார்கள் நண்பர்கள். "அதெப்படி சரியாக இருக்க முடியும்; இவன் தோற்றுப்போன ராணுவத் தலைவன்; சரண் அடைவதற்காகச் செல்லும் வேளை; எந்தத் தொப்பி கிடைத்ததோ அதை எடுத்துப் போட்டுக்கொண்டு போகிறான்'' என்று காரணம் கூறினேன்! ஐயோ பாவம்! என்று அனுதாபம் தெரிவித்தார்கள்; ராணுவத் தலைவனுக்கா, ஓவியம் போடத் தெரியாத எனக்கா என்று நான் கேட்கவில்லை. கேட்பானேன்!

22-4-1964

இன்று என்னைத் திடுக்கிடச் செய்த செய்தி தாங்கி இதழ்கள் வந்தன! நமது நெஞ்சத்தில் நீங்காத இடம் பெற்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மறைந்தார் என்ற செய்தி. எல்லோருக்கும் தாங்கொணாத வருத்தம். அதிர்ச்சி தரத்தக்க இழப்புகள் பலவற்றை இந்த முறை சிறை வாசத்தின்போது நான் காணவேண்டி நேரிட்டுவிட்டதை எண்ணி மிகவும் வேதனைப் பட்டேன். தமிழகத்தில் தனிப் புகழுடன் விளங்கிய அந்தப் பாவேந்தனுடைய பார்வையே ஒரு கவிதை! பேச்சே காவியம்! அவருடன் உரையாடினாலே போதும், தமிழின் மாண்பினை உணரலாம். அவருடைய மறைவு, தமிழகத்துக்கு ஈடு செய்யவே முடியாத பெரும் இழப்பு.

இந்த வேதனையுடன் நாங்கள் இருந்ததால் நாற்பதாவது வட்டத்தில் நமது கழகத் தோழர் வெற்றிபெற்ற செய்தி மாலையில் அறிந்தபோது, சுவை எழவில்லை. பாரதிதாசனுடைய கவிதைகளைப் பற்றி எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தோம். நாங்கள் இருக்கும் பகுதியில், ஒரு அறையில் யாரோ ஒரு நண்பர் முன்பு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார் புரட்சிக் கவிஞரின் கவிதையினை.

"மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை - எமை
மாட்ட நினைக்கும் சிறைச்சாலை.''

நாற்பதாவது வட்டத் தேர்தலின்போது கலாம் விளைவித்தாக, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் துளசிங்கம், கிருஷ்ணன் உள்ளிட்ட 15 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டு, இன்று மாலை இங்கு அழைத்து வரைப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் உள்ள பகுதிக்குப் பக்கத்தில் உள்ளனர். பார்க்கத்தான் முடிந்தது! பேச முடியவில்லை.

23-4-1964

ஓவியம் வரைவதிலே ஒரு தனி மகிழ்ச்சி பிறக்கத்தான் செய்கிறது. நான் வரைந்த "தோற்றுப்போன இராணுவத் தலைவன்' படத்தை அன்பழகன் பார்த்துவிட்டு, "நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள் - இதை எழுதியது ஏழு வயதுச் சிறுவன் என்று கீழே குறிப்பெழுதினால்'' என்று நகைச்சுவை ததும்பக் கூறினார். ஆனால் இன்று அன்பழகனே ஓவியம் வரையத் தொடங்கி விட்டார். திருக்குறள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் அல்லவா! அதனால் அவர் தீட்டத் தொடங்கிய முதல் ஓவியமும், திருவள்ளுவரேதான். ஆக இப்போது மூவர், ஓவியம் தீட்டும் பொழுதுபோக்கில் ஈடுபட்டிருக்கிறோம் - நான், சுந்தரம், அன்பழகன்.

மற்றோர் மலைக்காட்சி வரைந்தேன். . . இது முன்பு வரைந்ததைவிட "தரமாக' இருப்பதாக நண்பர்கள் கூறுகிறார்கள். கூறுகிறார்கள் என்றுதான் கூறமுடிகிறது. . . கருதுகிறார்களா என்று அறிந்து கொள்ள முடியவில்லை. ஓவியம் வரைவதிலே ஓரளவு பயிற்சி இருந்தால், இங்கு திறமையை நேர்த்தியாக்கிக் கொள்ளலாம். எனக்கோ, மாணவப் பருவத்திலேயே ஓவியம் வரையத் திறமை ஏற்பட்டதில்லை. இத்தனைக்கும் என் மாமா, நான் படித்த பச்சையப்பன் பள்ளியில் ஓவிய ஆசிரியர்! ஆனால் திறமை இருக்கிறதோ இல்லையோ, நாமாக ஒரு ஓவியம் வரைந்து அதற்கு வண்ணமிட்டு பார்க்கும்போது களிப்பு எழத்தான் செய்கிறது.

இன்று, யூதர்களின் வரலாறுபற்றிய ஒரு ஆங்கில ஏடு படிக்கத் துவங்கினேன், யூதர்கள் கொடியவர்கள், கல் மனம் படைத்தவர்கள், கடன்பட்டவர்களைக் கசக்கிப் பிழிபவர்கள் என்பதை விளக்கும் ஏடுகளே நிரம்ப உள்ளன. இந்த ஏடு அந்த வகையைச் சேர்ந்ததல்ல. யூதர்கள் கொடுமைகளை, இழிவுகளை, இன்னலை ஏற்றுக்கொண்டவர்கள், மதமாச்சரியம் காரணமாக பல நாடுகளில், கிருத்தவ அரசு யூதர்களை விரட்டியும், வாட்டியும் வந்தன. அவ்வளவையும் யூதர்கள் தாங்கிக்கொண்டு தங்கள் மார்க்கக் கோட்பாட்டை விடாப்பிடியாகக் காத்து வந்தனர் என்ற கருத்தை விளக்கும் ஏடு இது. யூதர்களின் மார்க்கத் தலைவன் என்று ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டால், அவர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான கொடுமைக்கு ஆளாகவேண்டி வந்துவிடும். சில கிருஸ்தவ நாட்டு அரசுகளில் ஒரு விபரீதமான திருநாள் இருந்து வந்ததாக, இந்த ஏட்டிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. ஆண்டுக்கொரு நாள், கிருத்தவ அதிபர்கள், தமது நாட்டிலே உள்ள யூதர்களை, சந்தைச் சதுக்கத்தில் நிறுத்தி வைத்து கன்னத்தில் அறைவார்களாம்! இதைக் கண்டு, மக்கள் கைகொட்டி சிரிப்பார்களாம். சில காலத்திற்குப் பிறகு, ஒரு அதிபன், ஒரு குறிப்பிட்ட தொகை காணிக்கை செலுத்தி விட்டால், அப்படிச் செலுத்தும் யூதர்களை, கன்னத்தில் அறைவதுபோல, சற்றுத் தொலைவில் நின்றபடி - ஐந்தடி தொலைவில் - அறைவதுபோல, குறிகாட்டி விட்டுவிடுவது என்ற புதிய ஏற்பாட்டைப் புகுத்தினானாம்.

"ஏசுவைக் காட்டிக் கொடுத்தவர்கள், அவரைத் தேவகுமாரன் என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள்' என்பதனால், யூதர்கள், கேவலமானவர்களாகக் கிருத்தவ மக்களால் கருதப்பட்டு வருவது நெடுங்காலத்து வழக்கம். இதுபற்றி அன்பழகனோடு பேசிக்கொண்டிருந்தேன். யூதர்களை இழிவாக நடத்திவரும் போக்கை இனியும் மேற்கொள்ளத் தேவையில்லை என்று போப்பாண்டவர் இரண்டாண்டுகளுக்கு முன்பு அறிவுரை வெளியிட்டதுபற்றிக் குறிப்பிட்டேன்.

யூதர்களை நாடற்றவர்களாக, பல நாடுகளிலே தஞ்சம் புகுந்து வாழவேண்டியவர்களாக, பலப்பல நூற்றாண்டுகளாக வேதனைக்கு ஆளாகி இருந்த நிலையை மாற்றி, இப்போது, இஸ்ரேல் எனும் நாட்டைத் தமது தாயகமாக்கிக்கொண்டு, அதனைப் பொன்னகமாக மாற்றி அமைத்துக்கொண்டு வருகின்றனர். இதனை அரபுக்கள், குறிப்பாக எகிப்துத் தலைவர் நாசர், "புதிய ஆபத்து' என்றும், மேற்கத்திய வல்லரசுகளின் சதித் திட்டமென்றும் கூறி, தொடர்ந்து, எதிர்ப்புக் காட்டி வருகிறார்.

இஸ்ரேல் நாட்டுத் தூதர், தமது நாட்டு விடுதலை விழாவுக்காக, டில்லி, அசோகா ஓட்டலில் ஒரு தனி விருந்து ஏற்பாடு செய்ததும், அது முறைப்படி ஏற்பாடாகவில்லை என்ற காரணம் காட்டி, இந்திய அரசு அந்த விருந்தை நிறுத்திவிட உத்திரவு பிறப்பித்ததும் பத்திரிகையில் வந்திருந்தது. நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகத்தில் உள்ள பிரச்சினையோடு ஒட்டியதாக இந்த நிகழ்ச்சி இருந்தது. எனவே, அதுபற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

24-4-1964

இன்று அன்பழகன், ஆங்கிலப் பெருங்கவிஞர் ஷேக்ஸ்பியரின் படம் வரைந்தார். அந்தப் பெருங்கவிஞருடைய 400-வது நினைவு நாள் கட்டுரைகள், படங்கள், இதழ்களில் நிரம்ப வெளியிடப்பட்டுள்ள நேரம்; எனவே இந்த ஓவியம் மிகப் பொருத்தமான நேரத்தில் அமைந்தது. தரமும் நல்லபடி அமைந்துவிட்டது. அன்பழகன் மேற்பார்வையில், அந்த ஓவியத்துக்கு சுந்தரம் வண்ணம் தீட்டினார். புதிய பொலிவு பெற்றிருக்கிறது ஓவியம். ஆங்கில மொழியை எதிர்த்துவந்த தவற்றுக்குக் கழுவாய் தேடிக்கொள்வதுபோல இப்போது நம்முடைய நாட்டு இதழ்கள் அடிக்கடி ஆங்கில மொழியின் அருமை பெருமைகளையும் உலகத் தொடர்புக்கு அம்மொழி மிகமிகத் தேவை என்பதையும் வலியுறுத்தி எழுதிக்கொண்டு வருகின்றன. அந்த "புதிய திருப்பம்' காரணமாகவோ என்னவோ, ஆங்கிலப் பெருங்கவிஞரின் நினைவு நாள் குறித்து இதழ்கள் நிரம்ப அக்கறை காட்டி, பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

டி. டி. கிருஷ்ணமாச்சாரியார் எவ்வளவோ பரவாயில்லை; அடித்துப் பேசி இருக்கிறார்; "இந்தி ஆட்சிமொழியாக இரண்டு தலைமுறைகளாவது பிடிக்கும்; அறுபது ஆண்டுகள் ஆகும்;'' என்று பேசி இருக்கிறார்; இந்த அளவுக்குக்கூடத் துணிவில்லையே நமது முதலமைச்சர் பக்தவத்சலத்திற்கு என்று பொன்னுவேலுவும் மற்றவர்களும் குறைபட்டுக்கொண்டார்கள். உண்மைதான்! டி. டி. கே துணிவுடன் பேசுகிறார்; ஆனால் அதேபோது இது என்னுடைய சொந்தக் கருத்து என்று கூறி இருக்கிறார். அதனை மறந்துவிடக்கூடாது! கட்சி இந்தி ஆதிக்கத்திற்கு முனைகிறது என்று உணரும்போது, இந்தி ஆதிக்கம் கூடாது, தேவையில்லை என்று உள்ளூரக் கருதுபவர்கள், அந்த போக்கை எதிர்த்து வெளியே வந்து பணியாற்றவேண்டுமேயன்றி, கூடிக் குலவிக்கொண்டே, "என்னுடைய சொந்தக் கருத்து, இந்தி கூடாது என்பதுதான்' என்று பேசுவதிலே, நேர்மையோ தக்க பலனோ என்ன இருக்க முடியும் என்று கேட்டேன். "ஏன் சிலர் அப்படி இருக்கிறார்கள்' என்று நண்பர்கள் கேட்டனர். பதவியின் சுவை ஒரு காரணம்; மற்றோர் காரணம், இந்தியை ஆட்சிமொழியாக்குவதில் வெற்றி காண முடியாது என்று ஒரு நம்பிக்கை; மற்றோர் காரணம், நம்முடைய காலம் வரையில் ஆங்கிலம் இருக்கும்; பிறகு எப்படியோ ஆகிவிட்டுப் போகட்டும் என்ற பொறுப்புணராத தன்மை, இவைகளே சிலருடைய போக்குக்குக் காரணம் என்று குறிப்பிட்டேன்.

இன்று, ஜெயப்பிரகாஷ் நாராயணன் 1944லில் லாகூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டபோது எழுதிய நினைவு நிகழ்ச்சிக் குறிப்புகள்பற்றிய புத்தகம் படித்தேன். இதிலே பெரும் பகுதி, பாகிஸ்தான் பிரச்சினைபற்றிய ஜெயப் பிரகாசருடைய கருத்தே நிரம்பி இருக்கிறது. அவர் அப்போது தெரிவித்துள்ள கருத்தைப் பார்க்கும்போது, பாகிஸ்தான் கூடாது என்று மட்டுமல்ல, பாகிஸ்தான் அமையாது என்றும் மிக உறுதியாக அவர் நம்பிக்கொண்டிருந்திருக்கிறார் என்று தெரிகிறது.

நாட்டு விடுதலைக்காக, ஆங்கில ஆதிக்கத்தை அகற்ற பலாத்கார முறைகளையும் பின்பற்றத்தான் வேண்டும் என்ற உறுதியையும், பலாத்காரத்தில் மறைந்திருந்து தாக்கும் முறையில் ஈடுபட்டிருந்தேன் என்று ஒப்புக்கொள்ளும் துணிவும் கொண்டவராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் இருந்திருக்கிறார் என்பது இந்த ஏட்டின் மூலம் தெரிகிறது. அவ்வளவு உரம் படைத்தவர், இன்று, அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட்டிருப்பதும், சர்வோதய இயக்கவாதியாகி இருப்பதும், விசித்திரமான நிகழ்ச்சி என்றே தோன்றுகிறது.

அப்துல்லா பிரச்சினையும், கம்யூனிஸ்டு கட்சியின் உட் போர் பிரச்சினையும், இங்குள்ள எங்களுக்கு, ஒவ்வொரு நாளும், பேசிக்கொள்ளும் பிரச்சினைகளாக உள்ளன. பத்திரிகைகள் கிடைத்த உடன், முதலில், இந்த இரண்டு பிரச்சினைகள் குறித்த பகுதிகளைத்தான், ஆவலுடன் படிக்கிறோம்.

இராஜ்யசபையில் அப்துல்லா பிரச்சினைபற்றிப் பேசிய ஏ. டி. மணி என்பவர், அரசியல் சட்டத்திலே ஒரு தாளைக் கொளுத்துவதாகச் சொன்ன அண்ணாதுரையைச் சிறையில் தள்ளிவிட்டு, இந்திய அரசியல் சட்டத்தைக் காலின்கீழ் போட்டுத் துவைக்கும் அப்துல்லாவை, உலாவர விடுகிறீர்கள்; இது எந்த வகையான நியாயம்? - என்று கேட்டிருக்கிறார். அவரும், வேறு சிலரும் பேசி இருப்பதிலிருந்து, அப்துல்லா எழுப்பிவிட்டுள்ள புயல் குறித்து, பெருத்த கவலையும் பீதியும் பாராளுமன்ற வட்டாரத்திலேயே கிளம்பிவிட்டிருக்கிறது என்று தெரிகிறது. இராஜ்யசபையில் பேசிய ஏ. டி. மணி என்பவர் குறித்து என்னைப் பொன்னுவேல் கேட்டறிந்துகொண்டார் - மணி தமிழகத்தவர். ஐயர். பல ஆண்டுகளுக்கு முன்பே வடநாட்டில் சென்று தங்கிவிட்டவர்; நாகபுரியிலிருந்து நீண்ட பல ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் "இதவாதா' எனும் ஆங்கில நாளிதழ் ஆசிரியர். "இதவாதா' போபால் நகரிலிருந்தும் வெளியிடப்படுகிறது; மணி இப்போது போபாலில் இருந்து வருகிறார்; சுயேச்சை உறுப்பினர்.

அண்ணன்

20-12-1964