அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெள்ளை மாளிகையில் - 1
1

வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதர் !
"டாம் மாமா விடுதி'யின் கருத்துகள் "டிரம்' (முரசு) எனும் நீக்கிரோவின் கதை
நீக்கிரோக்களின் உயர்வுக்கு எடுத்துக்காட்டு:
புக்கர் டி. வாஷிங்டன் இர்விங் வாலாஸ் எழுதிய "மனிதன்' ஏடு கூறும் கதை

தம்பி,

வெள்ளை மாளிகை சென்றிடலாம் வருகின்றாயா? ஆமாம்! அமெரிக்க அரசு அதிபர் கொலுவிருக்கும் அழகு மணிமாடம்தான். அங்கா? நாமா? என்று மலைக்காதே! நாம் யார்? மனிதரில்லையா!! மனிதருக்காக அமைவதுதானே மாடம் கூடம் மணிமண்டபம் மாளிகை என்பவை யாவும்; மாளிகையின் நிறமும் பெயரும் எதுவாக இருந்தால் என்ன - வெள்ளை - சிவப்பு - பச்சை - நீலம் - இவை பல்வேறு வகையான வண்ணங்கள், வேறென்ன? அமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு "வெள்ளை மாளிகை' என்று பெயர் இருப்ப தாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன!

மேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம்! ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.

வெள்ளை மாளிகையில் ஓர் கருப்பு மனிதர்! - என்று நான் கூறுகிறேன், ஆனால், தம்பி! அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; மனிதன் என்பதே தலைப்பு.

நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே! அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்ற தலைப்பிட்டுள்ளார். அந்த "மனிதனை'க் காண்பதற்காகவே, உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன்; அங்கு யாராரோ இருந்தனர்; ஆனால், மனிதன் கொலுவிருக்கும் மாளிகையாக இருந்திடும் நிலையை இந்த "ஏடு' மூலமே காணமுடியும். கண்டேன், களிப்புற்றேன்; எண்ண எண்ண இனித்திடும் கருத்துண்டேன்; அந்தச் சுவையை நான், தம்பி! உன்னுடனன்றி வேறு எவருடன் கலந்துண்பதிலே மகிழ்ச்சி பெற்றிடுவேன். அதனால் உன்னிடம் கூறுகிறேன்; மேலும் உன்னிடம் கூறுவதென்பது உயர் கருத்துகளின் பெட்டகம் போன்ற மனம் படைத்த இலட்சியவாதியிடம் கூறுவதென் றல்லவா பொருள் படுகிறது; அதனால் கூறுகிறேன்.

இப்போது அந்த வெள்ளை மாளிகையில் அமர்ந்து அரசோச்சுபவர் லிண்டன் ஜான்சன்; அறிவாய். அவர் சென்ற திங்கள் பெருமிதத்துடன் பேருரையாற்றி இருக்கிறார், உலகிலேயே நமது நாடுதான் செல்வம் மிகுதியாக உள்ள நாடு என்று; பழக்கப்பட்ட "பாஷை' விரும்புவோருக்காகச் சொல்லுகிறேன். "குபேரபுரி'.

அந்தக் "குபேரபுரி'யின் அதிபராகக் கொலுவிருக்கும் ஜான்சன், இப்போது உள்ளது போன்ற வளம் - செல்வப் பெருக்கம் - இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை - அந்தச் செல்வம் மேலும் மேலும் வளருகிறது, "நமது நாட்டு மக்களின் வாழ்க்கையைப் பூந்தோட்டமாக்கிடத்தக்க அளவு மட்டுமல்ல, உலகம் முழுவதிலுமே, மணம் வீசும் வாழ்வு மலரச் செய்திடத் தக்க அளவுக்கு'' என்று பூரிப்புடன் பேசியிருக்கிறார்.

இப்போதே, தம்பி! அந்த அமெரிக்கப் பணம் நடமாடாத நாடு இல்லை என்று கூறலாம்; அந்த நாட்டை நாடாத தலைவர்கள் இல்லை என்று சொல்லலாம். யாரோ ஒரு கணக்குச் சொன்னார்கள், இந்தியாவிலே மக்கள் சாப்பிடும் உணவில் எட்டுக் கவளத்தில் ஒன்று அமெரிக்கா கொடுப்பது என்று. எனவே, ஜான்சன், அமெரிக்காவின் அளவுகடந்த செல்வம் இந்த அவனி முழுவதும் ஆனந்த வாழ்வு மலரச் செய்ய உதவிடும் என்று கூறிக் கொள்ள உரிமை பெற்றிருக்கிறார். அமெரிக்காவை எதிர்பார்த்துத்தானா நம் வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டிய கடமை, கையேந்துபவர்களுக்கு இருக்கிறது. அது ஒரு தனிப் பிரச்சினை. இப்போது ஜான்சன் கூறியிருப்பதிலே நாம் கவனித்துப் பார்க்க வேண்டிய பகுதி அமெரிக்காவில் இன்றுள்ள செல்வ மிகுதி. அது மறுக்க முடியாத உண்மை. பணத்திலே புரளுகிறார்கள் என்று கதைகளிலே எழுதுகிறார்களே, அது மெய்யான நிலைமையாக இருக்கிறது அமெரிக்காவில்.

ஒரு கணக்குக் காட்டுகிறேன். பார்த்துத் தெரிந்து கொள்ளேன், நிலைமையை.

இன்று அமெரிக்காவில் உள்ள மோட்டார் கார்களின் எண்ணிக்கை 690 இலட்சம்! டெலிபோன்கள் 890 இலட்சம்! டெ-விஷன் செட்டுகள் 600 இலட்சம்! உல்லாசப் படகுகள் 70 இலட்சம்! அமெரிக்க மக்கள் ஆண்டொன்றுக்கு இப்போது செலவிடும் பணம் இருக்கிறதே, வாழ்க்கை நடத்த உல்லாசம் பெற, எவ்வளவு தொகை தெரியுமா, தம்பி! எச்சரிக்கையாக இரு. மயக்கம் வந்துவிடப் போகிறது, அவர்கள் செலவிடும் பணம் ரூபாய்!! 1985500000000! இவ்வளவு ரூபாய்கள் செலவிடுகிறார்கள் ஒரே வருடத்தில் பணத்திலே புரள்கிறார்கள் என்று ஏன் சொல்லக்கூடாது!!

தம்பி! ஓய்வு நாட்கள் உள்ளனவே. இயற்கை அழகு காண, செயற்கைச் சேட்டைகளைச் சுவைக்க, மலையுச்சி ஏற, கடலிலே குடைந்தாட, இவ்விதமான இன்பப் பொழுதுபோக்கு, இதற்கு மட்டும் இந்த ஆண்டு அமெரிக்க மக்கள் செலவிடும் தொகை 14,250 கோடி ரூபாயாம்! கேட்டனையா! செயற்கை நீச்சல் குளங்கள் மட்டும் சென்ற ஆண்டு புதிதாக 50,000 அமைத்திருக்கிறார்களாமே!

பணம் இந்த அளவு புரளும்போது, என்னென்ன சாமான்கள்தான் அவர்கள் வாங்கமாட்டார்கள்! இங்கு நமக்கிருக்கிற தரித்திர நிலை, மகன் சட்டை தைத்தால் தகப்பன் மேல் வேட்டியை ஒட்டுப்போட்டுப் போட்டுக் கொள்ளும் நிலையையும், மகளுக்குச் சேலை வாங்கினால் தாய் சாயம் போனதைத் துவைத்துக் கட்டிக் கொள்ள வேண்டிய நிலையையும் மூட்டிவிடுகிறது. அங்கே பணம் படுத்துகிறபாடு, என்ன வாங்கலாம், எவ்வளவு வாங்கலாம் என்ற மன அரிப்பைத் தருகிறது. பண்டங்களை விற்பனை செய்பவர்கள், தத்தமது சரக்குகளை வாங்கும்படி மக்களைத் தூண்டிட விளம்பரம் செய்கிறார்கள். அந்த விளம்பரச் செலவுக்காக மட்டும் வணிகர்கள் செலவிடும் தொகை, ஒரு ஆண்டுக்கு 6850 கோடி ரூபாயாம். 3

இதைப் போல முன்பு ஒருமுறை பணம் புரண்டது. உச்சிக்குச் சென்று உருண்டு கீழே விழுவதுபோல, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது; அது 1929லில் என்று எச்சரிக்கை தந்துள்ளனர் சிலர். ஆனால், பல பொருளாதார நிபுணர்கள் அவ்விதமான பயத்துக்குத் துளியும் ஆதாரம் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். இதுபற்றிக் கருத்து வேற்றுமை இருப்பினும், இன்றைய செல்வப் பெருக்கம் பற்றி மட்டும் யாரும் மறுப்புத் தெரிவிக்கவில்லை.

அத்தகைய அமெரிக்க நாட்டின் ஆட்சிபீடம் அமைந்துள்ள இடம் வெள்ளை மாளிகை!

ஆட்சிப் பீடம் உள்ள இடத்துக்குத்தான் வெள்ளை மாளிகை என்று பெயர் இருக்கிறது. ஆனால், அந்த ஆட்சியிலே உள்ளவர்கள் அனைவரின் நிறமும் வெள்ளையல்ல; கருநிறம் கொண்டவர்கள் இருக்கிறார்கள்; நீக்ரோ மக்கள்.

நிறம் கருப்பு, இனம் நீக்ரோ, பூர்வீகம் ஆப்பிரிக்கா கண்டம்; ஆனால், அவர்கள் அமெரிக்கர்கள்; சட்டம் சொல்லுகிறது; ஆபிரகாம் லிங்கன் அவர்களும் அமெரிக்கர் களே என்று வார்த்தைகளை வீசி மட்டுமல்ல ஒரு பெரிய பயங்கரமான உள்நாட்டுப் போர் நடாத்தியே கூறிட வேண்டி நேரிட்டது. "சரி'' என்றனர்; உதடு அசைந்தது தம்பி! உதடு! உள்ளம் இருக்கிறதே அதிலே புற்றரவு புகுந்து கொண்டுதான் இருக்கிறது, சாகவில்லை; சாகடிக்கவும் முடியவில்லை. அதனைச் சாகடிக்கத் துணிந்து கிளம்பிய கென்னடியைக் கொடியோர் கொன்று விட்டனர், பதறப் பதற; பக்கம் இருந்த அவர் துணைவியார் ஜாக்குலீன் துடிக்கத் துடிக்க.

இறவாப் புகழ் பெற்றுவிட்ட கென்னடி இதே வெள்ளை மாளிகையிலேதான் தங்கி ஆட்சி நடாத்தி வந்தார். அந்த வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார். "மனிதன்' எனும் ஏடு எழுதியுள்ள இர்விங் வாலாஸ் என்பவர் அந்தப் புத்தகத்தைப் படித்ததிலிருந்து எனக்கு ஒரே ஆவல், உன்னிடம் கூற வேண்டும் என்று. ஆனால், அந்த ஏட்டிலே கூறப்பட்டுள்ள கருத்தின் முழுப் பொருளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், "கருப்பு மனிதர்கள்', வெள்ளை மாளிகை உள்ள நாட்டில் எப்படி நடத்தப்பட்டு வந்தார்கள், எப்படி நடத்தப்பட்டு வருகிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொண்டாக வேண்டும் "நீக்ரோ'க்களின் பிரச்சினையின் வேதனை நிரம்பிய உண்மைகளை உணர்ந்தால் மட்டுமே, இர்விங் வாலஸ் தீட்டியுள்ள காவியம் போன்ற ஏட்டின் கருத்து பயனளிக்கும், பொருள் விளங்கும். வெள்ளைப் புலி என்பது விளங்க வேண்டுமானால், புலியைப் பற்றியும் வெள்ளை நிறம் பற்றியும் புரிந்திருக்க வேண்டுமல்லவா? தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார் என்று பிரான்சு நாட்டிலே உள்ளவரிடம் சொன்னால் முழுப் பொருள் விளங்குமா? தீண்டாமைக் கொடுமையின் கேடுகளையும், தில்லை தீட்சிதர் என்ற முறையின் தன்மையையும், காலவேகம் இந்த இரண்டு நிலைமைகளையும் மாற்றி விட்டிருப்பதனையும் அறிந்தவர்கள் மட்டுமே தில்லைத் தீட்சிதர் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டுக்குத் தலைமை வகித்தார் என்ற வாசகத்தின் முழுப் பொருளையும் உணர முடியும், அது போலத்தான் "மனிதன்' எனும் அந்த ஏட்டிலே உள்ளவற்றினை முழு அளவில் உணர வேண்டுமானால், அந்த ஏட்டிலே இல்லாத வேறு பல ஏடுகளிலே உள்ள பல உண்மைகளையும் நிலைமைகளையும் கூறியாக வேண்டும். ஆகவே, தம்பி! இந்த ஏடு என்னை உன்னிடம் வேறு பல ஏடுகளைப் பற்றிய நினைவுகளையும் கூறிடச் செய்கிறது.

ஒரு நல்ல உயிருள்ள ஏட்டுக்கு இதுவே சிறந்த இலக்கணம் என்று கூடக் கூறலாம்.

"டாம் மாமாவின் விடுதி' என்று ஒரு ஏடு, நீக்ரோ பிரச்சினையை உருக்கத்துடன் எடுத்துக் கூறுவது. அது "அந்த நாட்களில்' புரட்சி ஏடு! இன்றுள்ள அமெரிக்க நீக்ரோக்கள், "டாம் மாமா' என்றால் சண்டைக்கு வருவார்கள்! அந்த ஏட்டின் கருத்து நீக்ரோக்களுக்கு விடுதலை வாங்கித் தராது; அது அடிமை வாழ்க்கைக்கு ஒரு அலங்கார மெருகேற்றும் தந்திரத் திட்டம் என்று கூறுகிறார்கள்.

எந்த அளவுக்கு மனம் வெதும்பிக் கிடக்கிறது; ஆத்திரம் பீறிட்டுக் கிளம்பி விட்டிருக்கிறது என்றால், வெள்ளையர் எங்களைச் சம உரிமையுடன் நடத்தவே மாட்டார்கள்; எனவே, எமக்கென்று அமெரிக்காவில் ஒரு தனி நாடு அமைத்துக் கொடுத்திடுக! என்று கேட்கின்ற அளவுக்குச் சென்றிருக்கிறது. இன்னும் சிலர், நாங்கள் அமெரிக்காவில் இருக்கிறோம். ஆனால், அமெரிக்கர் அல்ல, அமெரிக்கர் ஆகவும் முடியாது; தேவையுமில்லை; நாங்கள் நீக்ரோக்கள்; எங்கள் தாயகம் ஆப்பிரிக்கா; நாங்கள் அங்குச் சென்று, "எங்கள் இரத்தத்தின் இரத்தமாக உள்ள நீக்ரோ இனத்தாருடன் சேர்ந்து வாழ்ந்து கொள்கிறோம். இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தால் போதும் என்று கேட்கத் தலைப்பட்டு விட்டனர்.

இத்தகைய நிலைமை இருந்திடுவது உணரப்பட்டால்தான், வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதர் என்பதன் பொருள் விளங்கும்.

அமெரிக்க அரசு, நீக்ரோக்களில் தகுதி மிகுந்த சிலருக்கு உயர் பதவி கொடுத்திருக்கிறது. கீர்த்தி மிக்க வழக்கறிஞர்கள், கை தேர்ந்த மருத்துவர்கள், வளமான வாழ்க்கை நடாத்தும் வணிகர்கள் நீக்ரோக்களில் இருக்கிறார்கள். அதுபோலவே அரசாங்க அலுவலிலும் திறமை மிக்க அதிகாரிகளாகச் சில நீக்ரோக்கள் இருக்கிறார்கள்.

சென்ற திங்கள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஜான்சன், அமைச்சரவையிலேயே ஒரு நீக்ரோவுக்கு இடம் கொடுத்திருக்கிறார்.

இந்தச் சம்பவங்கள் உலகத்தாருக்கு, பாராட்டுதலுக் குரியதாக, வாழ்த்தி வரவேற்கத்தக்கதாகத் தென்படுவதற்குக் காரணம், இவை கோபுரக் கலசங்கள் போலப் பளபளப்பாகத் தெரிபவை; உலகின் கண்களுக்குச் சரியான அளவிலே தெரியாமல் உள்ள, அமெரிக்கக் கருப்பர்களின் பொதுவான வாழ்க்கையிலே ஏற்றப்பட்டிருக்கும் இழிவுகள், சிறுமைகள், கொடுமைகள், இன்னல்கள் மலைபோல உள்ளன.

இத்தகைய நிலையிலே உள்ள கருப்பர்களிலே சிலர், டாக்டர்களாவதும், வழக்கறிஞராவதும், அரசாங்க அதிகாரிக ளாவதும், அமைச்சர் அவையிலே இடம் பெறுவதும், நடைபெறக் கூடாதன நடந்து விட்டன என்ற பட்டியலைச் சேர்ந்தவை; மலடி வயிற்று மகன்! புதையல் எடுத்த தனம்!

அமைச்சர் அவையிலே இடம் பெற்றுவிடுவதே "அதிசயம்' "அதிர்ச்சி தரத்தக்க மாறுதல்' என்று கருதப்படுகிறது என்றால், ஒரு "கருப்பு மனிதர்' வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும்.

துணிந்து, ஆனால் தூயநோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கே கூட, அதிகதூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்து விடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள், நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல் ஒரு கருப்பரை, குடிஅரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.

கற்பனை வளம் குறைவாக உள்ளவர்கள், ஒரு கருப்பர் வெள்ளை மாளிகையில் அதிபராக அமர்ந்தது போன்ற கனவு கண்டார்; அந்தக் கனவில். . . என்று எழுதியிருந்திருப்பார்கள். இர்விங் வாலஸ் நல்ல கற்பனைச் செறிவு இருப்பதால், நடந்திருக்கக் கூடும் என்று அனைவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விதமான ஒரு நிகழ்ச்சிச் சூழ்நிலையைக் காட்டி, வெள்ளை மாளிகையில் கருப்பு மனிதரை இருந்திடச் செய்திருக்கிறார்.

தம்பி! அமெரிக்காவிலேயே இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் நிறம் கருப்பு என்பதால், அவர்களை ஓட்டல்களில் - படக்காட்சிக் கொட்டகைகளில் - கல்விக்கூடங்களில் - மருத்துவமனைகளில் - பிரித்து வைக்கிறார்கள்; இத்தனைக்கும் இப்படிச் செய்யக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. நீக்ரோக்களுக்குக் கல்விக்கூடங்களில் வெள்ளையருடன் சேர்ந்து படிக்கச் சட்டம் உரிமை அளிக்கிறது; ஆனால் நிறவெறி தடுக்கிறது; போலீஸ் துணையுடன் மட்டுமே கருப்பு மாணவர்கள் அந்தக் கல்விக்கூடங்கள் செல்ல முடிகிறது அங்குத் தரப்படும் பாடமோ "அனைவரும் சமம்'' என்பது. எத்தனை போலித்தனமான நடவடிக்கை!! எத்தனை காலமாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது! தலைமுறை தலைமுறையாக இந்தக் கொடுமையை அனுபவித்துக் கொண்டு வரும் நீக்ரோ மக்கள், வெள்ளையரிடம் எப்படித்தான் "நட்புறவு' காட்ட முடியும்! பெரும்பாலும் முடிவதில்லை; காட்டப்படும் "நட்புறவில்' பெருமளவு "நடிப்பாக'வே இருந்துவருகிறது, வேறு எப்படி இருக்க முடியும்?

அன்புரை, அறிவுரை, விளக்கவுரை எல்லாம் ஏடுகளிலே நிரப்பித் தந்துள்ளனர்; இப்போதும் தந்தபடி உள்ளனர்.

அமெரிக்காவில் "நீக்ரோக்கள்' பற்றி "முற்போக்காளர்' கூடத் தமது கருத்தினைக் கூறும்போது, அங்கு உள்ள நிறவெறியர்களின் ஆத்திரத்தை அதிக அளவில் கிளறிவிடாத முறையிலே பக்குவமாகவே கூற வேண்டி நேரிட்டது. அதற்கே "புருவத்தை நெறிப்போரும்' "புண்படப் பேசுவோரும்' தாக்க வருவோரும் கிளம்புவர்.

"நீக்ரோக்கள்' மனித இனத்திலே தாழ்ந்தவர்கள்; அமெரிக்கர்களை விட "மட்டம்', அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர் அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை.

"நீக்ரோக்கள்' அமெரிக்கரின் "உடைமைகள்'. எனவே அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை, சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா என்று பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா.

"என் உடைமை! இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன். குப்பைமேட்டிலும் வீசுவேன், இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை!'' என்று வீடு காடு, மாடு வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்ரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா? அமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமைபெற்ற மாந்தர் என்று அல்ல. வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்தது.

கர்த்தரின் சம்மதம் இந்த ஏற்பாட்டுக்கு உண்டு என்று உபதேசம் செய்தவர்களும், இது நாம் இயற்றியுள்ள சட்டம் என்று வாதாடி வெற்றி பெற்றவர்களும் இருந்து வந்தது கூட வியப்பல்ல; ஆமாம், நாம் "ஐயா'வின் "உடைமை'தான், என்ன செய்யவும் அவருக்கு உரிமை உண்டு என்று நம்பிக் கிடந்திடும் நிலையில் நீக்ரோக்களும் இருந்தனர்! திடுக்கிடச் செய்திடும் வியப்பு இஃதன்றோ?

தம்பி! அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல ஏடுகளிலே ஒன்று "டிரம்' (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது? இரத்தக் கண்ணீர் விடவேண்டும் அந்த வேதனையை உணரும்போது.

"டிரம்' என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல்! அங்கு அவன் ஒரு அரசாளும் உரிமை பெற்ற மரபினன் கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள்; அமெரிக்கப் பண்ணையாருக்கு! அமெரிக்காவில் பருத்தி கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும் கண்ணீரும் கூடத்தான். அப்படி ஒரு பண்ணையில் "டிரம்' பாடுபட்ட சோகக் காதைதானே இது என்று எண்ணுகிறாயா தம்பி! அதுதான் இல்லை. இந்த "டிரம்' வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில்! உற்பத்திப் பண்ணையில்! விளங்கவில்லையா? விளங்காது சுலபத்தில், விளங்கினாலோ வேதனை உணர்ச்சி அடங்க நெடுநேரம் பிடிக்கும்.

ஆப்பிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள் - கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம் - அப்போது அவர்கள் வியாபாரிகள்! கடலிலே வலைவீசி மீன் பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லையா, மான்களையும் காட்டுப் பன்றிகளையும், வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.

விலை கொடுத்து வாங்கிய அடிமை உழைத்து உழைத்து ஓடாகி, உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்து போய் விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாகவாக இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டுவந்து விற்பதற்க ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது; புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாகவாக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்து கொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்து கொண்டே வந்தது.

அதிகச் செலவு, வலிவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவிலிருந்து புதிது புதிதாக, தொகை தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக் கொண்டு வருவதை விட அமெரிக்காவிலே இடம்பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே, உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன? அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே "பிறப்பு' அதிக மானால், புதிய புதிய அடிமைகள் கிடைப்பார்களல்லவா என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, "நீக்ரோ உற்பத்திப் பண்ணை' அமைத்தான்;

கோழிப்பண்ணை, ஆட்டுப் பண்ணை, மாட்டுப் பண்ணை நடத்துபவர்கள் தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும் தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதை விட, அவர்கள் ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படி செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.

நீக்ரோப் பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல் வலிவளிக்கும் உணவு அளித்துத் தனிவிடுதிகளில் இருந்திடச் செய்து - அது போன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்திரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையானால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிற வரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தகக உணவளித்து வருவது குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது! இப்படி ஒரு பண்ணையே நடத்தினான் அந்தப் பாதகன்.

கணவன் - மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய் - மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்படவிடுவதில்லை; ஆண் - பெண் - குழந்தை என்ற ஒரு "தொடர்' ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது அந்தப் பண்ணையில், தயாரிக்கப்பட்ட "அடிமை' என்றால் கிராக்கி அதிகம்; பேசிக் கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு பழைய கோட்டைக் காளை, மூரா எருமை என்று "ரகம்' பற்றி. அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்!!

இந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி! "முரசு' என்ற நீக்ரோ வா-பன்! அடிமைச் சந்தைக்கு "ஆட்களை'ப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக.