தம்பி!
சிலர், உயர்நிலை செல்வதற்காக,
ஆட்சியாளர்களுக்கு இனியவர்களாக நடந்துகொள்கிறார்கள் -
நம்மிடம் தனியாகப் பேசும்போது மெத்த உருக்கம் காட்டக்கூடச்
செய்கிறார்கள். நாமே ஏமாந்துவிடுகிறோம், இவர்கள் மேல்
நிலை வருகிறவரையில் இப்படித்தான் இலைமறை காயாக இருப்பார்கள்
- இருக்க வேண்டும் - இவர்களின் நிலைமை வலுவாகிவிட்ட பிறகு,
இவர்கள் முழுக்க முழுக்க நம்மவர் என்று தம்மை விளக்கிக்
காட்டுவார்கள் என்று எண்ணிவிடுகிறோம். ஆனால் "மேல்நிலை'
அடைந்ததும், கிடைத்ததை உறுதிப்படுத்திக் கொள்ளவும் ஊறு
நேரிடாமற் பார்த்துக்கொள்ளவும், இவர்கள் "நம்மவர்' என்பது
துளியும் வெளியே தெரியாதபடி, தம்மை ஆக்கிக்கொண்டுவிடுகிறார்கள்
என்பதுபற்றிப் பேசி, அதற்கான சில எடுத்துக்காட்டுகளும்
கூறினேன். நண்பர் அன்பழகன் இந்த என் கருத்தை வலியுறுத்தத்
தக்க வேறு சில எடுத்துக்காட்டுகளைத் தந்தார்.
இத்தகைய இக்கட்டுகளை, மேல்நிலையினர்
மூட்டி விட்டாலும், மக்கள் நமது கழகத்தை மேலும் மேலும்
ஆதரித்து வருகிறார்கள் என்பதை நடைபெற்ற நகராட்சி - மாநகராட்சி
மன்றத் தேர்தல்கள் எடுத்துக்காட்டிவிட்டன என்பது எங்களுக்கு
பெருத்த உற்சாகமளித்தது. வெளியே நடைபெறும் வெற்றி விழாக்
கூட்டங்களிலே, நாங்கள் கலந்துகொள்ளும் நிலை இல்லை என்றாலும்,
இங்கு இருந்தபடியே, அந்த விழாக் கோலத்தை எண்ணி எண்ணி மகிழ்ச்சி
பெறுகிறோம்.
இன்று, ஐரோப்பாவிலே நிலைபெற்றுவிட்ட
கிருத்துவ மார்க்கத்தில், பிரிவும் பிளவும் ஏற்பட்ட சூழ்நிலையை
விளக்கும் ஒரு வரலாற்றுத் தொடர்புடைய கதையைப் படித்தேன்.
போப்பாண்டவரின் ஆளுகை ஒருபுறம்
- சிற்றரசர்களின் கோலாகலம் மற்றொருபுறம் - சீமான்களின்
கொட்டம் பிறிதோர் பக்கம் - இவைகளுக்கிடையிலே துரத்தப்பட்டும்
இழுக்கப் பட்டும், ஏழை மக்கள் - இருந்த நிலைமையை விளக்கும்
ஏடு.
மார்க்கம், தூய்மையையும்
வாய்மையையும் பாதுகாத்திட மலருகிறது - அதிலே களங்கம் ஏற்பட்டுவிட்டது.
அதனைக் களைந்திட வேண்டும் என்று, எதிர்ப்பு இயக்கம் எழுகிறது
- அந்த எதிர்ப்பு இயக்கம் வெற்றி கண்ட பிறகு, புதிய அக்ரமங்கள்,
புதிய அநீதிகள் முளைவிடுகின்றன.
இந்த நிலைமைபற்றியும்,
அந்த ஏடு தெளிவாக விளக்கம் தருகிறது.
"சாமான்யர்களும்' முறைப்படியும்,
நம்பிக்கையுடனும், தன்னலமற்றும் எழுச்சியுடனும் பணியாற்றினால்,
அக்ரமத்தை எதிர்த்தொழிக்க முடியும் என்ற உண்மையை இந்த
ஏடு கோடிட்டுக் காட்டுகிறது.
முற்றிலும் வேறான காலம்
இது; நமது முறைகளும் வேறு என்றாலும், நமது கழகத்தின் பணியும்
ஒருவிதத்தில், "சாமான்யர்'களின் முயற்சிதானே. எனவே, அதிலே
ஈடுபட்டுள்ள என் போன்றாருக்கு, பல்வேறு காலங்களிலும் இடங்களிலும்,
அக்ரமத்தை எதிர்த்து நிற்க சாமான்யர்கள் மேற்கொண்ட முயற்சிகளைப்பற்றிப்
படித்தறியும்போது, புதிய தெம்பு பிறக்கத்தான் செய்கிறது.
நாம் மேற்கொண்டுள்ள பணி, அக்ரமத்தை எதிர்த்து நடத்தப்படும்
"புனிதப் போர்' எனும் பெருங் காப்பியத்திலே ஒரு பகுதியே
தவிர, முற்றிலும் புதிதானதல்ல என்ற ஒரு பூரிப்பான எண்ணம்,
இன்று எனக்குப் பூங்காற்றாகித் துணைபுரிந்தது.
19-3-1964
காஞ்சிபுரத்தில் வெற்றி,
ஆரணியில் வெற்றி என்ற செந்தேன் இன்று கிடைத்தது. ஆரணித்
தோழர்கள், நான் மருத்துவமனையிலே இருந்தபோது என்னை வந்து
பார்த்தனர். வெற்றி நிச்சயம் என்றும் கூறினர். என்றாலும்
"பெரிய புள்ளிகள்' வேலை செய்து, நிலைமைகளைத் தலைகீழாக
மாற்றிவிட முடியுமல்லவா - ஆகவே, என்ன ஆகிறதோ என்ற கவலை,
மனதைப் பிய்த்தபடிதான் இருந்தது. ஆரணியில் வெற்றி கிடைத்தது
என்ற செய்தியை இதழில் படித்த பிறகு மகிழ்ச்சி உறுதியாயிற்று.
காஞ்சிபுரத்தைப்பற்றியும் ஐயம் கொள்ளவேண்டிய நிலை இல்லை.
என்றாலும், காங்கிரஸ்காரர்கள் பொதுத் தேர்தலில் கையாண்ட
முறைகளைக்கொண்டு, ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சம்
ஒரு பக்கம் இருந்துகொண்டிருந்தது. இதழில் வெற்றிச் செய்தி
கண்ட பிறகு, புதிய உற்சாகம் பிறந்தது.
நான் "பரோலில்' காஞ்சிபுரத்தில்
இருந்தபோது, நமது கழகத் தோழர்கள் என்னிடம் இம் முறை கழகம்
மிகப் பெரிய வெற்றிபெறும் என்று எழுச்சியுடன் கூறினார்கள்.
இப்போது நமது கழகத்தவர் நால்வர் உறுப்பினராக இருக்கிறார்கள்
- அதிகம் வேண்டாம், இந்த முறை எட்டு கழகத்தவர் உறுப்பினரானாலே
போதும், அதுவே பெரிய வெற்றிதான் என்று நான் சொன்னேன்.
நண்பர் சபாபதி, "எட்டா? அதற்கு மேல் வெற்றி கிடைத்தால்
என்ன தருகிறீர்கள்?' என்று "பந்தயம்' பேசினார். "நூறு
ரூபாய் விலையில் ஒரு கைக்கடிகாரம் தருகிறேன்.'' என்று
கூறினேன். நூறு ரூபாய்ச் செலவு வந்துவிட்டது!!
இதனை இங்கே நண்பர்களிடம்
சொன்னபோது, "வாங்கித் தரவேண்டியதுதான்!' என்று கூறினார்கள்.
செலவு, எனக்கல்லவா, இவர்களுக்கு என்ன? வெகு தாராளமாகச்
சொல்லிவிட்டார்கள்!
காஞ்சிபுரத்தில் வெற்றிக்காகப்
பாடுபட்ட நமது தோழர்கள் அனைவருக்கும், நான் நன்றிகூறிக்கொள்கிறேன்.
அமைச்சர் பக்தவத்சலம்,
தம்முடைய ஆதீனத்தில் உள்ள ஊர்களிலே ஒன்று என்று காஞ்சிபுரத்தைக்
கருதிக் கொண்டிருக்கிறார். அங்கு நகராட்சிமன்றம் கழகத்திடம்
வந்திருப்பது தனி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் ஐயமில்லை.
வெற்றிச் செய்திகளால் ஏற்பட்ட
உற்சாகத்தில், என் கரத்திலே "தக்ளி' வெகு வேகமாகச் சுழன்றது.
முன்பு வடார்க்காடு பகுதியில்
வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்தவரும், இப்போது கதர்த்
துறையில் பணி புரிபவருமான அதிகாரி ஒருவர், சிறையில் நூற்பு
வேலை - காகிதம் செய்தல் ஆகியவைகளைப் பார்வையிட இன்று வந்திருந்தார்.
எங்களுடைய நூற்பு வேலையைப்
பார்த்து மகிழ்ந்தார்.
இன்று பிற்பகல், துணை மேயர்
கபாலமூர்த்தி என்னைக் காண வந்திருந்தார்.
இன்று, சென்னை மாநகராட்சி
மன்றத் துணைத் தலைவராக வந்த கபாலமூர்த்தி, இதே சிறையில்
சென்ற ஆண்டு கைதியாக இருந்தவர்தான்!
என்னைப் பார்த்த உடனே மகிழ்ச்சியால்,
குரல் தழதழத்தது கபாலமூர்த்திக்கு.
கபாலி, குமரேசன், ராகவலு
இவர்களுடன், சிந்தாதிரிப் பேட்டைப் பழங்குடி மக்கள் வாழும்
பகுதியில், ஒரு பாலத்துக்குப் பக்கத்திலே, நான் ஒவ்வொரு
மாலையும் பேசிக் கொண்டிருப்பேன் இருபது ஆண்டுகளுக்கு முன்பு
- சிந்தாதிரிப்பேட்டை சுயமரியாதைச் சங்கத்துக்கு நான்
அப்போது தலைவன். எத்தனை உற்சாசம்! என்னென்ன பேச்சு!! அந்த
நாட்களில்! அதே கபாலமூர்த்தி, துணை மேயர்!!
அன்று கபாலியைப் பார்த்தபோது,
பாலத்தருகே உலவிய நாட்கள் நினைவிற்கு வந்தன. பேச இயலவில்லை.
என் எண்ணம் முழுவதையும், விளக்கிட முதுகைத் தட்டிக்கொடுத்தேன்.
என்னிடம் எப்போதுமே கூச்சத்துடன்
நடந்துகொள்ளும் பழக்கம் கபாலிக்கு - இப்போது நான் "கைதி'யாக,
கபாதுணைமேயராக - கூச்சம் மேலும் அதிகமாகிவிட்டது. தேர்தல்
நடைபெற்ற முறைபற்றி ஏதேதோ கேட்க எண்ணினேன் - எனக்கும்
பேச இயலவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதே, பேச்சைவிடப்
பொருள் மிகுந்ததாக இருந்தது.
மேயர், தமது மகனுடைய திருமண
சம்பந்தமாகக் கோவை சென்றிருப்பதாகக் கபாலி கூறினார். சுறுசுறுப்பாகவும்
அக்கறையுடனும் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டேன். பணிபுரிவார்
என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. இன்று "கல்கி'
இதழில், ரா. கணபதி என்பவர் எழுதியிருந்த "ஜயஜய சங்கர'
என்ற தொடர் கட்டுரையைப் படித்தேன். எழுதப்பட்டுள்ளதில்
முழு ஈடுபாடு கொண்டு எழுதியிருக்கிறார். சங்கரர், தமது
காலத்தில், நாட்டிலே தலைவிரித்தாடிய அறுபதுக்கும் மேற்பட்ட
போலி மார்க்கங்களை அழித்து, அத்வைதத்தை நிலைநாட்டினார்
என்பது குறித்து, விளக்க மளித்துள்ளார். சங்கரர் பெற்ற
வெற்றி எத்துணை சிலாக்கிய மானது என்பதையும் எடுத்துக்காட்டியிருக்கிறார்.
ஆனால் ஏற்கனவே எனக்கு ஏற்பட்ட ஒரு எண்ணம். இந்த ஏடு படித்த
பிறகு மேலும் உறுதிப்பட்டது. தூய்மைப்படுத்தும் இயக்கம்
எவ்வளவு வெற்றி பெற்றாலும், மீண்டும் அக்ரமம் - அநீதி
- தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்த முடியவில்லை - சங்கரரின்
திக்விஜயம் - வாதம் - "பீடஸ்தாபிதம்' ஆகியவைகளுக்குப்
பிறகு, அத்வைதம் அரசோச்சிய இடத்திலே "துவைதமும்' - "விசிஷ்டாத்வைதமும்'
மலர்ந்து, மகுடம் சூட்டிக் கொண்டன என்று அறியும்போது,
தூய்மைப்படுத்தும் இயக்கம் பெறும் வெற்றி, மீண்டும் கேடுகள்
தோன்றிட முடியாத நிலையை ஏற்படுத்துவதில்லை என்ற எண்ணம்
வலிவு பெற்றது. அதிலும் சங்கரர் வாதிலே வென்ற இருவர் -
குமாரிலபட்டர் - மண்டனமிசிரர் - ஒருவர் முருகன் - மற்றவர்
பிரம்மா - சங்கரரோ சிவன்! சிவனாரோ, இந்த இருவரையும் பூலோகத்தில்
இவ்விதம் அவதரித்து இருங்கள், நாம் சங்கரராக வந்து உம்மை
வாதில் வீழ்த்துவோம் என்று கூறி அனுப்பினார் என்று சொல்லப்
படுகிறது. ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு "ஏற்பாடு' என்று கருதக்கூடிய
ஒரு நிலை இது எனக்கு என்னமோபோலிருந்தது - சில குத்துச்சண்டை
- குஸ்திச்சண்டை - ஆகியவைகளில், வெற்றி - தோல்விபற்றி
முன்னதாகவே "ஏற்பாடு' செய்து கொள்வார்களாமே! அதுபோல ஒரு
தோற்றமளிக்கிறது - கைலாயத்தில் பேசிக்கொண்டு பூலோகத்திலே
வாதப்போர் நடத்தியது. குமாரிலபட்டரும் - மண்டனமிசிரரும்,
குமரன் பிரமன் என்று இல்லாமல், மார்க்கத் துறையில் வேறு
முறைகளை ஆக்கிய ஆசான்களாக மட்டுமே இருந்திருந்தால், நன்றாக
இருந்திருக்கும் என்று தோன்றிற்று.
ஆனால், எல்லாவற்றுக்கும்
தத்துவார்த்தம் ஏதாகிலும் எடுத்துக் கூறப்படக்கூடும்,
குமாரிலபட்டரும் - மண்டனமிசிரரும் இரு பேரறிவாளர் என்று
மட்டும் இருந்திருப்பின், கூறப்பட்டுள்ள நிகழ்ச்சியின்
நேர்த்தி மேலும் எடுப்பாக இருந்திருக்கும் என்பதனைத்தான்
சொல்கிறேன். முருகனையும் பிரம்மனையும் சிவனார் வாதத்தில்
வென்றார் என்பதிலே வியந்திடவோ, பெருமைப்படவோ என்ன இருக்க
முடியும். ஜயஜய சங்கர என்ற இந்தத் தொடர் கட்டுரையில்,
மிக உருக்கமான பகுதியாக எனக்குப் பட்டது - சங்கரருக்கும்
அவருடைய அன்னைக்கும் நடக்கும் உரையாடல் பகுதி என் சிற்றன்னையின்
நினைவு வந்துவிட்டது. காஞ்சிபுரம் நகராட்சிமன்றத் தலைவராக
அ. க. தங்கவேலர் வந்திருப்பதில் தொத்தா எவ்வளவு பெருமைப்
பட்டிருப்பார்கள் - மகிழ்ந்திருப்பார்கள் என்பதை எண்ணிக்
கொண்டேன். ஒவ்வொரு மாலையும், மணிக்கணக்கில், தொத்தா "அரசியல்'
பேசுவது தங்கவேலரிடம்தானே! தங்கவேலர் நகராட்சி மன்றத்
தலைவரானபோது, "தொத்தா' இருக்க முடியாமற்போய்விட்டதை எண்ணி
வருத்தப்பட்டேன்.
20-3-1964
இன்று காலையில், போலீஸ்
பாதுகாப்புடன் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
டாக்டர் சத்தியநாராயண அவர்கள் என்னைப் பரிசோதிப்பதற்காக
அந்த நாளைக் குறிப்பிட்டிருந்தார். அவர் வரும் நேரத்திற்கு
அரை மணி நேரம் முன்னதாகவே நாங்கள் போய்ச் சேர்ந்ததால்.
அவருடைய அறையில் நான் உட்கார வைக்கப்பட்டேன் - எனக்குப்
பக்கத்தில் போலீஸ் அதிகாரி உட்கார்ந்துகொண்டார்! வலப்புறம்
ஒரு போலீஸ்காரர், இடப்புறம் மற்றொருவர்; துப்பாக்கியுடன்.
டாக்டர் சத்தியநாராயணா
அரை மணி நேரம் கழித்து வந்தார் - என் உடல் நிலையைக் கண்டறிந்து
மகிழ்ச்சி தெரிவித்தார். ஒரு பதினைந்து நிமிட நேரம் அங்கு;
பிறகு புறப்பட்டு சிறைச்சாலை வந்து சேர்ந்தேன்.
என் உடல் நிலையைப் பொறுத்தவரையில்,
எனக்குத் தெரிவதெல்லாம், இடக் கையிலே ஏற்பட்டுவிட்ட "பிடிப்பு'
நீங்குமா என்பதிலேயே சந்தேகம் ஏற்படும்படியாக இருப்பதுதான்.
வபெருமள வு குறைந்திருக்கிறது. ஓரோர் சமயம் வஎடுக்கும்போது,
வெந்நீர் ஒத்தடம் கொடுத்துக்கொள்கிறேன். தோழர் சுந்தரம்
இதனைப் பக்குவமாகச் செய்கிறார். ஒத்தடம் கொடுத்துக்கொள்ளும்போது
வலி குறைகிறது - குறைகிறது என்பதைவிட மறைகிறது என்று சொல்லலாம்
- ஆனால் அடியோடு போய்விடவில்லை.
என்னைக் காண வருகின்றவர்களும்,
இங்கே உள்ள நண்பர்களும் நான் இளைத்துவிட்டதாகச் - சொல்கிறார்கள்
- ஆனால் எனக்கு வலிவுக் குறைவு இருப்பதாகவோ களைப்பு ஏற்படுவதாகவோ
தோன்றவில்லை. வழக்கம்போல் இரவில் நல்ல தூக்கம் இருப்பதில்லை,
பசியும் சரியானபடி இல்லை. மற்றபடி தொல்லையாக எதுவும் இல்லை.
ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1920லில் வேலூர் சிறையில்
மூன்று மாதம் இருந்தது பற்றி ஒரு ஏடு எழுதி இருக்கிறார்கள்
- இங்குதான் கிடைத்தது; படிக்க. அதிலே அவர்கள் குறிப்பிட்டுள்ள
ஒரு விஷயம் மிகப் பொருத்தமானது என்று கூற விரும்புகிறேன்.
சிறை வருகிறவர்களுக்கு, ஒன்று உடல் வலிவு இருக்க வேண்டும்,
மற்றொன்று பாடத் தெரிய வேண்டும் என்று கூறுகிறார். முழுக்க
முழுக்க ஒப்புக்கொள்கிறேன். எனக்கு இந்த இரண்டும் இல்லை.
முன்பெல்லாம் பாடுவேன் வீட்டில் - சிறுவனாக இருந்தபோது
- அதனால் அண்டைப் பக்கம் உள்ளவர்கள் பொறுத்துக்கொண்டார்கள்.
இப்போதாவது பாடுவதாவது, ஆனால் உள்ளபடி பாடத் தெரிந்திருந்தால்
மிக நன்றாகத்தான் இருக்கும். காலம் ஆமையாகிவிடும் இடம்
சிறை. பாடத்தெரிந்து, பாடியபடி இருந்தால், நமக்கும் மகிழ்ச்சி.
கேட்பவர்களுக்கும்
மகிழ்ச்சி.
இங்கு எனக்குப் பாடத் தெரியாததுபோலவேதான்,
மற்றவர்களுக்கும்.
அரக்கோணம் ராமசாமி மட்டும்
பாடுகிறார் - பாடத் தெரிந்தவர் என்று கூறவில்லை - பாடுகிறார்;
அவருக்கு ஒரே ஒரு ரசிகர் - மதியழகன். ஆனால் அதிக நேரம்
பாடுவதில்லை - நல்லவர் - சீக்கிரமாகவே தூங்கிவிடுகிறார்.
இங்கே, நண்பர்களில் ஒருவருக்கும்
உடல் நலம் கெடவில்லை - சிறு கோளாறுகள் மட்டுமே ஏற்படுகின்றன.
மாலை வேளையில் உலவிட வசதியாக இருக்கிறது - இந்தப் பகுதிக்கு
வந்த பிறகு. முன்பு இருந்த பகுதியில் அந்த வசதி இல்லை
என்றாலும், நான் அப்போதும், என் அறைக்குள்ளாகவே உலாவுவதை
வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். நான் மருத்துவ மனையில்
தங்கி இருந்தபோது அன்பர் ம. பொ. சிவஞானம் கூறிய யோசனை
அது. உடல்நலம் பெற, உலவுவது மிகத் துணை செய்யும் என்று
கூறினார். உண்மைதான்.
மருத்துவமனையில் மருந்து
ஏதும் பெறாமலேயேதானே, சிறை திரும்பினேன். சிறையிலே, உடலுக்கு
மட்டுமின்றி உள்ளத்துக்கு வலிவும் களிப்பும் தரத்தக்க
"டானிக்' கிடைத்தது. நெல்லை, தாராபுரம், அரக்கோணம் ஆகிய
இடங்களில் கிடைத்த வெற்றிபற்றிய செய்திகள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு,
நண்பர் ராமசாமியிடம் கடிந்துகொண்டேன் - அரக்கோணம் தேர்தல்
சம்பந்தமாக மேலும் சிறிதளவு அக்கறை செலுத்தியிருக்கவேண்டுமென்று.
ஆம் என்று கூறி வருத்தப்பட்டார். நகராட்சி மன்றத் தலைவர்
தேர்தலில், கழக ஆதரவு பெற்றவர் வெற்றி பெற்றார் என்ற உடன்
அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தந்திகளைக் காட்டிக் காட்டிக்
களிப்படைந்தார். தாராபுரத்தில் கிடைத்த வெற்றிபற்றி நண்பர்
மதியழகனுக்கு ஒரே மகிழ்ச்சி. பட்டக்காரரின் பரிபாலனத்துக்கு
உட்பட்ட பிரதேசம் என்பார்கள், தாராபுரம் பகுதியை; அங்குக்
காங்கிரசுக்கு வீழ்ச்சி. மதியழகன் மகிழ்வதிலே பொருத்தம்
இருக்கத்தான் செய்கிறது. நெல்லை, கழக எழுச்சிமிக்க இடமாகி
வருவதை, இந்தி எதிர்ப்பு மாநாட்டின்போதே நான் கண்டு பெருமிதம்
கொண்டவன். அங்கு நகராட்சி மன்ற தலைவராகக் கழகத் தோழர்
ஒரு இளைஞர், இஸ்லாமிய சமூகத்தினர் வெற்றி பெற்றிருப்பது,
பெருமைக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது. நெல்லை உணவுவிடுதியில்
என்னைச் சூழ்ந்துகொண்டு உற்சாகமாக உரையாடிய கழக நண்பர்களை
எல்லாம், நான் இங்கிருந்தபடியே காண முடிகிறது. ஓடி ஆடிப்
பணியாற்றும் மஸ்தானும், வாடிவிடத்தக்க அளவு பணியாற்றினாலும்
புன்னகையை இழக்காத இரத்தினவேலுப் பாண்டியனும், மற்றத்
தோழர்களும், என் எதிரே நின்றுகொண்டு, "எப்படி அண்ணா! நெல்லை!!''
என்று கேட்பதுபோலவே தோன்றுகிறது. ஆச்சாரியார் இந்தியைப்
புகுத்திய நாட்களிலே தொடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்புக்
கிளர்ச்சியின்போது, நாவலர், சோமசுந்தர பாரதியாருடன், நான்,
நெல்லையில் பிரசாரம் செய்யச் சென்றிருந்த நாட்களை எல்லாம்
எண்ணிக்கொண்டேன்.
என்னுடைய பழம்பெரும் நண்பர்
திருப்பூர் எஸ். ஆர் சுப்பிரமணியம் இன்று என்னைக் காண
வந்திருந்தார். இடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்
என்றாலும் மற்றச் சிலர்போல, என்னிடம் தனிப்பட்ட முறையில்
பகை கக்கினவரல்ல. இப்போது அவர், எப்போதும்போல் நம்மிடம்
கருத்து ஒற்றுமை கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.
திருப்பூரில், நமக்குற்ற "ஒரே' நண்பராக அவர் இருந்த காலம்
ஒன்று உண்டு. இன்று தொழில் துறையில் முனைந்து நிற்கும்
நண்பரிடம், சிறிது நேரம் அளவளாவும் வாய்ப்புக் கிடைத்தது.
முன்பு ஜப்பான் நாட்டுக்குப் போய்விட்டு வந்தபோது அவரைச்
சந்தித்தேன். நமது பயணம்பற்றி ஒரு நூல் எழுத வேண்டும்
என்று கூறியிருந்தேன். அதுபற்றி இப்போதும் கேட்டேன் -
எழுத நேரம் கிடைக்கவில்லை என்றார். நான் சொல்வது அவரை
நூல் எழுதும்படி - அவர் ஈடுபட்டிருப்பது நூலாலைத் தொழில்
- அதனால்தான் நேரம் கிடைக்கவில்லை.