அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


வெற்றிபுரி செல்ல...
1

தமிழ் நாட்டில் வறுமை -
தேர்தல் கால அரசியல்

தம்பி!

மருத்துவ விடுதிக்கு உன்னை அழைத்துச் செல்லப் போகிறேன், வருகிறாயா? ஒவ்வொரு அண்ணன் தன் உடன் பிறந்தானை, புதிதாகக் கட்டிய மாளிகை, மணம் பரப்பும் மலர் வனம், அருவிக்கரை, என்பன போன்ற இடங்களுக்கு அழைத்துப் போய்க் காட்டுவார்கள் - குறைந்தபட்சம் ஒரு சிற்றுண்டிச் சாலைக்காவது அழைத்துச் செல்வார்கள் - எனக்கும் ஒரு அண்ணன் இருக்கிறானே, மருத்துவமனைக்கு அழைத்துப் போகிறேன் என்று கூறிட, என்று கூறிக் கோபித்துக் கொள்ளாதே, சோகமடையாதே! காரணம் இருக்கிறது, உன்னை அங்கு அழைத்துச் சென்றிட. வா, தம்பி, வா!

அதோ பார்! பாபம்! உடலெங்கும் புண்!! உடனிருந்து அவனுக்கு உபசாரம் செய்து கொண்டிருக்கிறாரே, அண்ணன் போல! அவர் எதிர்வீட்டுக்காரர், அண்ணன் அல்ல! துடி துடிக்கிறான் இளைஞன்.

பயப்படாதே, மகனே! பயப்படாதே! ஆபத்து இல்லை என்று மருத்துவர் கூறுகிறார், பயம் இல்லை, உனக்கு ஒரு குறையும் நேரிடாது! கொஞ்சம் பல்லைக் கடித்துக்கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்! - என்று கனிவுடன் கூறிக் கொண்டே, தளும்பும் தன் கண்ணீரைத் துடைத்துக் கொள் கிறார்களே ஒரு அம்மையார், அவர்கள் அவன் தாய் அல்ல!!

உடனே இங்கே அழைத்து வந்தது நல்லதாயிற்று! பைத்தியக்காரத்தனமாக, எண்ணெய் தடவலாம், பச்சிலை வைத்துக் கட்டலாம் என்று இருந்துவிட்டிருந்தீர்களானால், இந்நேரம் "ஜன்னி' பிறந்து மிக மிக ஆபத்தாகிவிட்டிருக்கும். இப்போது ஒரு பத்து நாள் படுக்கையில் இருக்கவேண்டும், அவ்வளவுதான், உயிருக்கு ஒரு துளியும் ஆபத்து இல்லை - என்று உள்ளன்புடன் பேசுகிறாரே, டாக்டர். அவர் வழக்கமாக வாங்கும் கட்டணத்தை வாங்காதது மட்டுமல்ல, அவரே பணம் போட்டு வாங்கிக்கொடுத்ததுதான், தட்டில் இருக்கும் பழம், மேஜைமீது இருக்கும் வலி வளிக்கும் பானம், எல்லாம்! டாக்டர், இந்த இளைஞனுக்கு நீண்ட நாளாகப் பழக்கமானவரல்ல - முதல் முறையாகத்தான் சந்தித்தார்!!

தெரிகிறது அண்ணா! தெரிகிறது. இவர் யாரோ சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை, அதனாலேதான் அனைவரும் இவ்வளவு கனிவு காட்டுகிறார்கள் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா!

இதோ இந்தத் தனி அறைப் பக்கமாகப் போகலாம் வா, தம்பி!

உஸ்! பேசாதே! மெல்ல நட! - என்று உத்தரவிட்டுக் கொண்டு நிற்கிற இந்த ஆசாமிக்கு, மாதம் அறுபது ரூபாய் சம்பளம்! அதோ இரண்டு நர்சுகள் பேசிக் கொள்கிறார்கள் - என்னவென்று கவனிப்போம்.

"வாடி, லிலி! இனி நீ போய் அந்தச் சனியனைப் பார்த்துக்கொள். எனக்குத் தலைவலிக்கிறது, கண்றாவி''

"கிரேஸ்! எனக்கு மட்டும் வேதனையாக இருக்காதா? என்ன சொல்லுகிறது கிழம்?''

"யார் பேசினார்கள் அதனிடம்! அருகே நெருங்கினாலே, குமுட்டலல்லவா எடுக்கிறது, ஒரே நாற்றம்'' "டாக்டர், என்ன சொல்கிறார்?''

"அவர் ஒன்றும் சொல்லுவதில்லை. வருகிறார், மருந்து பூசுகிறார், கட்டுகிறார்கள். கிழம், இளிக்கிறது. இன்னும் எத்தனை நாள் ஆகும் என்று கேட்கிறது. நானென்ன ஜோதிடனா? என்று அட்சியமாகப் பதில் அளிக்கிறார் டாக்டர்.''

"நல்ல வேலை செய்தார்! ஆமாம். இந்த ஆசாமியிடம் யார்தான் முகம் கொடுத்துப் பேசுவார்கள்?''

லிலியுடன், தம்பி, நாமும், உள்ளே எட்டிப் பார்க்கலாமா? அதோ பார்! உடலிலே பல இடங்களிலே புண்!! ஆசாமிக்கு வலி அதிகம்தான். முகத்திலே பார், சவக்களை என்பார்களே, அப்படி இருக்கிறதல்லவா?

மேலே மின்சார விசிறி இருந்தும், பக்கத்தில் நின்றபடி மயில் விசிறி கொண்டு வீசிக்கொண்டு நிற்கிறானே, அவன் பாபம், நான்கு குழந்தைகளுக்குத் தகப்பன் - நாய் பிழைப்புத்தான்! இருந்தாலும் என்ன செய்வது! என்று சகித்துக் கொண்டு ஊழியம் செய்கிறான்.

அதோ அந்த அலங்கார ஆசனத்தில் அமர்ந்துகொண்டு இருப்பவன், படுக்கையில் உள்ளவருக்கு மருமகன். எப்படி இருக்கிறது என்று விசாரித்துவிட்டுப் போகத்தான் வந்தான். இப்போது அவன் கரத்தில் இருப்பது ஒரு கதைப் புத்தகம் - படத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருக்கிறான்.

தம்பி! இந்த ஆசாமிதான் உண்மையில், சீமான்!

முதலில் கண்டோமே அவன் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவன் - பாட்டாளியாக இருப்பதால் பராரியாகாமலிருப்பவன்! தனி அறையில் உள்ள தனவான் இரும்பு வியாபாரத்தால் கொழுத்தவர் - பெயர் தங்கப்பர். பாட்டாளியாக இருப்பவன், இரும்புப் பட்டறையில் வேலை செய்பவன், பெயர் ஆண்டியப்பன்.

ஆண்டியிடம் இவ்வளவு அன்பு காட்டுகிறார்கள் - உடன் இருப்போர், மருத்துவர், அனைவரும்.

சீமான் தங்கப்பரிடம் மருத்துவரும் மருகரும், பணியாளும் பாங்கியரும், அனைவரும் அருவருப்புக் காட்டுகின்றனர்.

தங்கப்பர், மருத்துவ விடுதிக்கு ஆயிரக்கணக்கில் நன்கொடை கூடத் தரக்கூடும் - வசதி உண்டு.

ஆண்டிக்கு, பழவகையே டாக்டர் தம் செலவில் வாங்கிக் கொடுத்தார்.

காரணம் என்ன, நிலைமைக்கு? எண்ணிப்பார்!

இதிலென்ன சிரமம்? இந்த மருத்துவ விடுதி ஏழைக்கு இரங்கும் நெஞ்சம் படைத்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது; செல்வச் செருக்கர்களைச் சீந்துவதில்லை; சரியான முறைதான் - நல்லது... என்று மகிழ்ச்சியுடன் கூறப்போகிறாய். தம்பி! இங்கு நீ காணும் இந்தப் போக்குக்குக் காரணம், இது அல்ல. இது மட்டுமல்ல.

படுக்கையில் துடித்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன், உடலில் தீப்புண்கள் ஏற்பட இருந்த காரணம் வேறு - சீந்து வாரற்றுச் சாய்ந்து கிடக்கும் அந்தச் சீமானுடைய உடலிலே காணப்படும் புண்களுக்குக் காரணம் வேறு - இந்த இரு வேறு காரணங்கள்தான், இருவேறு விதமான மனப்பான்மையை, காண்போருக்கும் உடன் இருப்போருக்கும் உண்டாக்கிவிட்டிருக்கிறது.

ஆண்டியின் உடலில் ஏற்பட்டுள்ள தீப்புண்களைக் காணும்போது, ஐயோ பாவம்! - என்று இரக்கமும் அன்பும் கலந்த குரலில் கூறுகிறார்கள் - சீமான் தங்கப்பன் உடலில் உள்ள புண்களைக் கண்டதும், "சனியன்! கண்றாவி!'' என்று அருவருப்புடன் பேசுகிறார்கள்.

ஆண்டி உழைத்து அலுத்த நிலையில் தன் குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் - இருட்டும் சமயம் ஐயயோ! என்ற கூக்குரல் கேட்டது, தெருக் கோடியில் ஒரு வீடு, தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது - பலர் பதறினர் - தண்ணீர் இறைத்தனர் - மணல் வாரி வாரி வீசினர். ஒரு மூதாட்டி, தலைவிரி கோலமாக நின்றுகொண்டு, ஐயோ! குழந்தை, தொட்டிலில்... தொட்டிலில் குழந்தை...'' என்று கதறி நிற்கக் கண்டனர் பலரும். பெரு நெருப்பாகிவிட்டது வீடு - உள்ளே நுழைய யாருக்கும் துணிவு இல்லை. உள்ளே ஓடமுயன்ற மூதாட்டியை மட்டும் தடுத்து நிறுத்திவிட்டனர். ஆண்டி வந்தான் - அலறல் கேட்டான் - உள்ளே, குழந்தை, தொட்டிலில் - என்ற மூன்றே வார்த்தைகள்தான் - எதிரே பெரு நெருப்பு - பாய்ந்தோடினான் உள்ளே!

ஐயோ ஐயோ! என்று அலறினர் - ஆண்டியின் காதில் மூதாட்டியின் குரலொலி தவிர, வேறு எதுவும் விழவில்லை.

இரண்டோர் விநாடியில் ஆண்டி, குழந்தையுடன் ஓடி வந்தான் வெளியே! குழந்தையை ஒரு பெரிய சாக்குப்போட்டு மூடி இருந்தான் - குழந்தை பிழைத்தது, ஆண்டியின் உடலெல்லாம் தீப்புண்!!

சீமான் தங்கப்பன் தன் தோட்டத்தில் குடிசை போட்டுக் கொண்டு குடியிருந்து வந்த குற்றேவல்கார முனியனை, பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக அனுப்பிவிட்டு, பசுமாடு இளைத்து விட்டதே , சரியாக தீனி போடுவதில்லையா? என்று அதிகாரம் பேசும் பாவனையில் இரவு எட்டு மணிக்குமேல் குடிசைக்குச் சென்று, "சத்யத்துக்குப் பொதுவாக நடக்கிறோம் எஜமான்! சாமி சாட்சியா, பசுவுக்குச் சரியானபடி தீனி போடுகிறோம் எஜமான். சந்தேகப்படாதீங்க'' என்று சமாதானம் கூறிய குப்பியை...! பசுமாடு, அவள் போட்ட கூச்சலில் மிரண்டு, கட்டு அறுத்துக் கொண்டதுலிசீமான் அதனிடம் சிக்கிக் கொண்டான் - அன்றாடம் தீனிபோட்டு அன்புடன் பராமரிக்கும் குப்பியின் கற்பைக் காப்பாற்றும் கடமையை அந்தப் பசு மேற்கொண்டது - சீமான் உடலிலே புண் இந்த வகையில் ஏற்பட்டது!

ஆண்டியிடம் அனைவரும் அன்பு காட்டுவதற்கும் சீமானிடம் அருவருப்பு அடைவதற்கும் இப்போது காரணம் விளக்கமாகிவிட்டதல்லவா! இந்த விளக்கம் பெறத்தான், நாம் மருத்துவ மனை வந்தோம். இனி வா, தம்பி, வேறோர் காட்சி காண்போம்.

விளக்கம் சரி, அண்ணா! ஆனால் இப்போது இந்தக் காட்சியும் அது அளித்திடும் கருத்துரையும், என்ன காரணத்துக்காக, என்று இப்போது கேட்கவேண்டாம் - மற்றோர் காட்சியையும் பார்த்துவிட்டுப் பேசுவோம்.

அதோ பார், ஏழ்மையாலும் அடியோடு அழித்திட முடியாத அழகும் அதற்குப் பெட்டகமாக விளங்கும் இளமையும் கொண்ட பெண் மயில்!! பொன்னகை ஒன்றுகூட இல்லை - அந்தப் புன்னகை ஒன்று போதாதா என்று அவளைத் தன் குடும்ப விளக்காகப் பெற்ற குணவான் கூறிக் களிப்படைகிறான் போலும். ஆடையிலே அழுக்கு! கூந்தலில் நெய் இல்லை! ஆனால் கண்களிலே ஓர் கனிவு கவர்ச்சி அளிக்கிறது. போனமாத வாடகை பாக்கிக்காக "மூக்குத்தி'யை மார்வாடியிடம் விற்றுவிட்டு, பத்தரை ரூபாய் வாங்கிக்கொண்டு செல்கிறாள் அந்தப் பாவை. கலியாணத்தன்று அவள் அத்தை வீட்டார் கொடுத்த இரவல் நகையைப் போட்டு அலங்கரித்துக்கொண்டு, எடுத்த போட்டோ படத்துக்கு கண்ணாடி போட எண்ணினாள் - அதற்கு இரண்டு ரூபாய் கேட்டான் கடைக்காரன் - அவ்வளவுக்குச் சக்தி இல்லை என்று கூறி விட்டுத் திரும்பினாள். மடியில் இருக்கிறது படம்! வயிற்றிலே தவழ்கிறது செல்வம்!!

"லட்சுமி எங்கேடிம்மா போய்விட்டு, வர்ரே?''

"மார்வாடி கடைக்குத்தான் மாமி''

"எதை வித்துப் போட்டு வந்தூட்டே?''

"மூக்குத்தியை... ...''

"அதுவும் தொலைஞ்சுதா... ...''

"மூக்குத்தி போனா என்ன மாமி! மூக்கு, இருக்குதேல்லோ...''

"போடி, போக்கிரிப் பெண்ணே! மூக்கு இருக்குதாம், மூக்கு! இருக்கு, மூக்கும் முழியும், ராஜாத்திக்கு இருக்கிறது போலத்தான் இருக்கு. இருந்து? தரித்திரம் பிடுங்கித் திங்குதே...'' "அதனாலே என்ன மாமி! நகை போட்டாத்தானா...''

"உன்னோடு யார் பேசுவாங்க... அதிகமாக எதுவும் வேணாம்... மூக்குத்தி, காதுக்குக் கம்மல்... கையிலே ஒரு இரண்டு வளை...'' "கழுத்துமட்டும் என்ன குத்தம் செய்தது, மாமி. இரண்டு "வடம்' செயின் போடக்கூடாதா அதுக்கு...''

"குறும்புக்காரப் பொண்ணு. அதெல்லாம் போட்டா பதினாயிரம் கண்ணுவேணும் பார்க்க, என்பாங்களே, அப்படி இருக்கும். உம்! பகவான் அழகைக் கொடுத்தாரு, அதுக்கு ஏத்த அந்தஸ்து கொடுத்தாரா... ...?''

"போ, மாமி! எத்தனையுன்னுதான் அவரும் கொடுப்பாரு...''

சிரித்துக்கொண்டே செல்கிறாள் லஷ்மி.

"அவலட்சணம்னா, சொல்லி முடியாது, டோய்! அட்டைக் கருப்பு! மாறுகண்ணு! உதடு, தடிம்மனா என்னமோபோல இருக்குது. காது, துளிண்டு, எலி காது போல... செச்சே! இராத்திரி வேளையிலே, பார்த்தா, பயமே வந்துவிடும். அந்தச் சனியனுக்குக் குரல் இருக்கு பாரு, அசல் ஆந்தையேதான்...''

செல்லாயி புருஷன், தம்பி, இதுபோலப் பேசுவது. மெகானிக் மாதவனிடம் பேசுகிறான். யாரைப்பற்றி இந்த வர்ணனை தெரியுமோ? தன் எஜமானருக்கு வந்துள்ள மருமகப் பெண்ணைப்பற்றி. செல்லாயி புருஷன் சிகப்பண்ணனுக்கு, மோட்டார் ஓட்டும் வேலை மோட்டூரார் வீட்டில்!!

அந்த மருமகள் அவ்வளவு அவலட்சணம் என்றானே, வா, போய்ப் பார்ப்போம்.

இதோ இதுதான், மோட்டூரார் மாளிகை! ஊஞ்சலில் தெரிகிறதா, உருவம்... மூக்கும் முழியும், கையும் காலும், சரியாகத் தெரியவில்லையே என்கிறாயா, தம்பி, தெரியாது. எல்லாம் சேர்ந்துதான் ஒரு மாமிசப் பிண்டமாகத் தெரிகிறதல்லவா - மோட்டூரார் மருமகள் கமலாம்பிகாவைக் காண்கிறாய்.

கூடவே நீ காண்பது என்னென்ன தெரியுமா, தம்பி, அதை மறந்துவிடாதே!

காதிலே மூவாயிரம் ரூபாயில் வைரத் தோடு! தலைச் சடையில் ஆயிரத்தைந்நூறு ரூபாய் பெறுமானமுள்ள வைரத் திருகுபில்லை. மூக்குத்திகள் பச்சை! இரண்டாயிரம்! கழுத்திலே புரளும் தங்கமும் வைரமும், பத்தாயிரத்துக்கு மேல் பெறுமானமுள்ளது! இடுப்பில் காணப்படும், ஒட்டியாணத்தைச் செய்யும்போது "பத்தர்' வீட்டிலே, ஒரே சிரிப்பு - இது என்ன இடுப்புக்கா, அல்லது நெல்கொட்டும் குதிருக்கா என்று கேட்டுக் கேலி செய்து, வீட்டார் சிரித்தார்கள்! கல் இழைத்தது! மயில் தெரிகிறதா? அருமையான வேலைப்பாடு! ஆறாயிரம் மதிப்பிடுகிறார்கள். காலில், கமலாம்பிகா அணிந்திருப்பதை, அவர்களாலும் காணமுடியாது, நாமும் பார்க்கமுடியாது; ஆடை தரையிலே புரளுவதால், நகை மறைந்து கிடக்கிறது நமக்குத் தெரியவில்லை! கமலாம்பிகாவின் உடல் அமைப்பு, பாபம், குனிந்து, தன் காலில் உள்ளதைக் காணவிடவில்லை! ஆபரணச் சுமை தாங்கி, தம்பி, இந்தக் கமலாம்பிகா!

செல்லாயிக்கு மூக்குத்தியும் இல்லை - முகம் செந்தாமரையாக இருக்கிறது.

காணச் சகிக்கவில்லை இந்தக் கமலாம்பிகையை - பூட்டியிருக்கும் நகைகளின் மதிப்பு மட்டும் பலப் பல ஆயிரம்!

இந்த அவலட்சணத்துக்கு இவ்வளவு நகை இருக்கிறது! நகைகளின் அழகே பாழாகிறது. இந்தச் சனியன் மேலே பூட்டியதும். மரத்தாலே பாவை செய்து, பூட்டி வைத்தால் கூட, இந்த நகைகளைப் பார்க்க இலட்சணமாக இருக்கும், என்றுகூடப் பேசிக்கொள்கிறார்கள்!

மூக்கும் முழியும் ராஜாத்திபோல இருக்கிறது, செல்லாயிக்கு; மூக்குத்திக்குக்கூட வழி இல்லை!

இதோ, மூலைக்கோயில் காளி உருவாரம் போலக் காணப் படும் கமலாம்பிகையின் உடலில் ஆபரணச் சுமை!!

தம்பி! செல்லாயி, கமலாம்பிகை - இருவரில் யாரைக் கண்டதும், முகம் மலரும் சொல்லு.

ஆண்டி - தங்கப்பன் மருத்துவமனையில்!

செல்லாயி - கமலாம்பிகா அவரவர் மனையில்!!

இந்தக் காட்சிகள், ஏன் நான் காணச் சொன்னேன் தெரியுமா?

தம்பி! நமது முன்னேற்றக் கழகம், தீப்பிடித்துக் கொண்ட குடிசைக்குள்ளே தீரமாக நுழைந்து, தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து காப்பாற்றியதால், உடலெங்கும் தீப்புண் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அனைவராலும் அன்புடன் பராமரிக்கப் பட்டுவரும், ஆண்டியப்பன்!