அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்


குரு பக்தி
1

அமைச்சர் சுப்பிரமணியமும் ஆச்சாரியாரும் -
நேருவும் மொழிவழி அரசும் -
ம.பொ.சி-யின் குரு பக்தி

தம்பி,

இந்தப் பழைய பாடத்தைப் பற்றிப் புதிதாக இப்போது சொல்ல வேண்டியது என்ன இருக்கிறது - என்ன அவசியம் வந்தது - எத்தனையோ பிரச்சினைகள் நெஞ்சைக் குலுக்கும் வகையினதாக உள்ளனவே-அண்ணன் ஏன் இந்தப் பழசுக்குப் போகிறார் என்று எண்ணுகிறாய், தெரியும் எனக்கு. எனக்கும் ‘பழசு’ பிடிக்காதுதான், தெரியுமே உனக்கும்; என்றாலும் எனக்கு ஏனோ இன்று இங்கு வந்தவுடன் (சென்னைக்கு) ‘பழசு’ மீது நினைவு சென்றது - அதற்குக் காரணம் இருக்கிறது - ‘அறிவகத்தில்’ சிறுகுன்றுபோல, பழையதுணிகள் உள்ளன, சிறுசிறு மூட்டைகளாக - நமது தோழர்கள் இங்கு திரட்டியவை. மிகமிகத் தேவையான காரியத்துக்கு இவை பயன்படப் போவதால், பழைய துணிகள்மீது ஒரு பாசமும், அதைத் தொடர்ந்து பொதுவாகவே "பழசு' மீது எண்ணமும் சென்றது - அதன் விளைவு தான், தம்பி, பழைய பிரச்சினையாகிய ‘குரு பக்தி’ மீது என் நினைவு சென்றது.

பிரச்சினை ‘பழசு’; ஆனால் இந்தப் புதிய காலத்திற்கு முற்றிலும் தேவையற்றது என்று தள்ளிவிடக் கூடியதல்ல - பொருளும், பொருள் அறியும் முறையும், பயனும், பயன்காணும் வகையும் புதுப்பிக்கப்பட வேண்டியதாகவோ, பழுதுபார்க்கப் பட வேண்டியதாகவோ இருக்கலாம்; ஆனால், அந்த ‘எண்ணமே’ தேவை இல்லை என்று விரட்டிவிட முடியாதல்லவா? எனவே இன்று ‘குரு பக்தி’யைக் குறித்து நீயும் நானும் எண்ணிப் பார்ப்பது தேவையற்றதுமல்ல, பயனற்றதுமல்ல - உண்மையிலேயே, இந்தப் பிரச்சினையை ஆராய்வதன் மூலம் பயன் தரத்தக்க சில பல கருத்துக்களைப் பெறவும் முடியும்.

தம்பி! குரு என்றவுடன் பழைமையில் மூழ்கிக் கிடப்போரின் மனக்கண்முன், ஜடையும் தாடியும் கொண்ட, வளைந்து தைலம் தீர்ந்து போன உடலுடன் காட்சி தரும் வயோதிகர், மரத்தடியில் ஓர் ஆசனத்தில் அமர்ந்திருப்பதும், அவர் எதிரே ‘சிறுசும் பொடிசு’மாகச் சீடர்கள் பயபக்தியுடன் வீற்றிருப்பதுமான காட்சிதான் தெரியும். அந்தக் காலம் மலையேறிவிட்டது - எனினும் அந்தக் காலம் மீண்டும்வராதா என்று ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஆச்சாரிய ஸ்வாமிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பழைய நாட்களிலே, ‘குரு’மார்கள் ‘பலரகம்’ இருந்திருக் கிறார்கள்; அனைவரும் அறிவர்.

‘கட்டை விரலை வெட்டிக்கொடு காணிக்கையாக என்று கேட்டவரும் இருந்திருக்கிறார், கட்டழகியைச் சீடன் கொட்டி விட்டதைக் கண்டு மட்டற்ற துயருற்ற குருவும் இருந்திருக்கிறார்.

கைகால் பிடித்துவிடவும், கட்டைகள் வெட்டி வரவும், கால் நடைகளை ஓட்டிச் செல்லவும், கறிகாய் நறுக்கித் தரவும் மட்டுமே பயிற்சி பெற்று, பாடம் கிடைத்ததெனப் பர்ணசாலையை விட்டு வெளியேறிய சீடரும் இருந்திருக்கிறார்கள் - குரு, பாடம் சொல்லிக் கொடுக்கும் போதே ‘வெட்டிவா என்றால் கட்டிக் கொண்டு வருகிற’ வகையில், அறிவுத் தெளிவு பெற்று விளங்கிய சீடர்களும் இருந்திருக்கிறார்கள்.

‘பழைய’ நாட்களிலே இருந்த ‘ரகம்’ கிடக்கட்டும், இப்போது உள்ளவர்பற்றி எண்ணிப் பார்ப்பது, உடனடிப் பலனளிக்க உதவுமல்லவா, தம்பி, அதற்குச் சிறிது சிந்தனையைச் செலவிடு.

இப்போது, நிதி அமைச்சராக இருக்கும் கனம் சுப்பிரமணியம் காமராஜர் முதலமைச்சராக இருக்கும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார் - ஆனால் அவர் காமராஜைத் தலைவராகவோ, குருவாகவோ, கொள்பவரல்ல - அவருடைய ‘குருநாதர்’ ஆச்சாரியார்தான்! அவர் அரியாசனத்தில் அமர்ந்திருந்தாலும் சரி, அரிகதா காலட்சேபம் நடத்திக் கொண்டிருந்தாலும் சரி, சுப்பிரமணியனாருக்கு ஆச்சாரியார் மீதுதான் குரு பக்தி; அதை வெளியிட வேண்டிய நேரத்தில், தவறாது செய்கிறார் - சில வேளைகளில் பொருத்தம்கூட இருப்பதில்லை, ஆனால் ‘பக்தி’க்குத்தான் பொருத்தம்கூடப் பார்க்க வேண்டிய தில்லையாமே! அதனால் எந்தச் சமயம் கிடைத்தாலும், தமது குரு பக்தியைக் கொட்டிக் காட்ட, கனம் தவறுவதில்லை.

நாடே குமுறிடத்தக்க கேடொன்று நேரிட்டது - புயற் கொடுமை கேள்விப்பட்டதும் ஓடோடிச் சென்றார் முதல் அமைச்சர் - வெறுங்கையுடன் அல்ல - விதவிதமான பண்டங்களை மூட்டை மூட்டையாக ஏற்றிக் கொண்டும் - உயர்தர அதிகாரிகளை உடன் அழைத்துக் கொண்டும் சென்றார் - கண்ணீரைக் கண்டார், கண்ணீர் சொரிந்தார் - வேகவேகமாக ‘நிவாரண’ வேலைகளைத் தொடங்கினார்: புயற்கொடுமைக்கு ஆளாகியுள்ள மக்கள் புண்ணியவானே என்று அவரை வாழ்த்துகிறார்கள். இது கண்டு, நாமெல்லாம் எதிர்க் கட்சியினர், எனினும் நல்ல இதயம் கொண்டோரை, நற்பணியாற்றுவோரைப் பாராட்டும் பண்பு அறிந்தவர்கள் என்ற முறையில் காமராஜரையும் அவர் நடத்திச் செல்லும் துரைத்தனத்தையும் மனதாரப் பாராட்டுகிறோம். ஆனால் உடனிருந்து பதவி பெற்று வாழ்ந்து வரும் கனம் சுப்பிரமணியனாருக்கு, யார்மீது ‘நினைவு’ செல்கிறது என்கிறாய்! யாரிடம் பாசம், பரிவு,பக்தி, பீறிட்டுக் கொண்டு கிளம்புகிறது என்கிறாய்? முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்றவர்மீதல்ல, எப்புரியில் எது நேரிடினும், ‘முப்புரி’க்கு ஆபத்தேதும் வராமலிருக்கும் வகையில், ஆயாசப்பட வேண்டியதில்லை என்று எண்ணும் ஞானவான் இருக்கிறாரே, ஆச்சாரியார், அவர்மீதுதான் செல்கிறது அமைச்சரின் நினைவு!!

தம்பி! குரு பக்தி - தலைக்கு அவ்வளவு ஏறி இருக்கிறது.

நந்தவனத்திலே, உலவிக் கொண்டிருந்த நாரீமணியை ஒரு "பூதம்' சிறையெடுத்துச்சென்று யாரும் நுழையமுடியாத காட்டிலே இருந்த மாய மாளிகையில் சிறைவைத்துப் பொன்னும் பொருளும் கொட்டிக் காட்டி புன்னகை தந்தால் போதுமென்று கேட்க, நவநிதி கொடுத்தாலும், என் நாதனை நான் மறவேன் என்று அந்த நாரீமணி சொன்னாள் - என்று கதைகளில் படிக்கிறோமல்லவா, அதுபோல, நிதிக்கும் மதிக்கும் அமைச்சரே! என்ன மாறுதல் நேரிடினும், எவர் போனாலும் எவர் புதிதாக வந்தாலும் உமக்கு ஓர் இடம் உண்டு! என்று சொல்லி அமைச்சரவையில், இவருக்குக் காமராஜர் இடமளித்திருந்த போதிலும் இருந்திருந்து,

"வள்ளிக் கணவன் பேரை
வழிப்போக்கர் சொன்னாலும்
உள்ளம் குளிருதடி, சகியே!''

என்று உருகிப் பாடுகிறார், நிதியமைச்சர், குருபக்தி, தம்பி குரு பக்தி!

இவருடைய குருநாதர் ஆச்சாரியார் ஆட்சிக் காலத்திலேயும் புயல் கொடுமை விளைவித்து - என்ன செய்தார் குருநாதர்? பகவத் சோதனை என்று கூறிவிட்டு, மற்றக் காரியங்களைக் கவனிக்கலானார். இரவு பகலென்று பாராமல், வெள்ளம் வெடிப்பு என்று அஞ்சாமல், அந்தஸ்து பற்றித் துளியும் கவனிக்காமல், அவதியுறும் மக்களைக் கண்டு, இன்னலைத் துடைத்திட வேண்டும் என்று காமராஜர் சென்றார் - ஆச்சாரியாரோ - கோட்டையில் கொலுவிருந்தார்! அவருக்கு, இப்போதும், சீடர் நன்றி கூறுகிறார் - குரு பக்தி என்றால் இஃதல்லவா குரு பக்தி!

வெள்ளம் விளைவித்த பெரு நஷ்டத்தால், வேதனைப் பட்டுக் கிடக்கும் மக்களுக்கு மீண்டும் வாழ்வளிக்கும் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், இதற்குப் பெரும் பொருள் செலவாகும் - இதற்கு மத்திய சர்க்கார் - டில்லி தேவர்கள் - பெருந்தொகை உதவ வேண்டுமென்பதை நேருவுக்கு உணர்த்தினார் காமராஜர் - நாட்டிலே காமராஜர் ஆட்சி எத்தகைய அமைதியை (ஆனந்தத்தை அல்ல) ஏற்படுத்தி இருக்கிறது, எதிர்ப்புகள் எந்த அளவுக்குச் சுருங்கிப் போயுள்ளன என்பதை எல்லாம் கண்ட நேருவும், நிவாரணத்துக்காகச் செலவிடப்படும் தொகையில் ‘பாதி’ அளவு மத்திய சர்க்கார் அளிக்கும் என்று தெரிவித்தார்.

இதற்கு யாருக்கு நன்றி கூற வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய் தம்பி!

நம் போன்ற செய்நன்றி மறவாதார் டில்லியின் மனமும் இந்தப் பிரச்சினை சம்பந்தமாக ஓரளவுக்கு இளகும்படி செய்தார் என்பதற்காகக் காமராஜருக்குத்தானே நன்றி கூற வேண்டும் என்று எண்ணுவோம். நிதி அமைச்சர் அப்படி எண்ணவில்லை. அவருடைய மனம், குருநாதன், மீது சென்றது. ஜயனே போற்றி! மெய்யனே போற்றி! போற்றி! உமது ஆசியால், அருளால்தான், இந்தப் பேறு பெற்றோம்! என்று கூறிக் குருவைத்தான் பூஜிக்கிறார்.

‘‘டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகை நிருபரிடம் இந்தத் திங்கள் பத்தாம் தேதி; ‘‘மத்திய சர்க்கார் மனமுவந்து செலவுத் தொகையில் பாதியளவு தர முன்வந்ததற்கு, நாம் ராஜகோபாலாச் சாரியாருக்குத்தான் நன்றி கூற வேண்டும் - ஏனெனில் 1952-ல், இப்படி ஏதேனும் ஒரு விபத்து நேரிட்டால், மத்திய சர்க்கார் பண உதவி தரவேண்டும் என்று ஆச்சாரியார்தான், நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பேசினார் - அதற்கு இணங்கியே, மத்திய சர்க்கார் இந்த உதவி செய்கிறது” என்று கூறியிருக்கிறார்.

பார்த்தாயா, தம்பி! குரு பக்தியை!!

வெள்ளமென்றும் வெடிப்பென்றும் பாராமல் சுற்றிச் சுற்றி வந்தாரே காமராஜர், வீழ்ந்துபட்ட மக்களுக்காக வெந்த மனதுடன் வாடிக்கிடக்கும் மக்களிடம் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாரே, காமராஜர் - அவருக்கல்ல நன்றி! இராஜ கோபாலாச்சாரியாருக்கு நன்றி! ஏன்? 1952-லேயே அவர் இந்த அரிய யோசனையைக் கூறிவிட்டாராம், அதனால். இதுதான் தம்பி கடைந்தெடுத்த குரு பக்தி!!

‘குரு பக்தி’ யைக் கொட்டிக் காட்டியதோடு விட்டுவிட வில்லை, இந்த வீரர். இரண்டு இலாக்காவுக்கல்லவா அமைச்சர். அதுபோலவே இரண்டு சீரியதொண்டு புரிவதை அல்லவா அவர் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார் - ஒன்று குருநாதரையும் அவருடைய கூடாரத்தினரையும் குதூகலப்படச் செய்வது, மற்றொன்று இன எழுச்சியூட்டும் நம்மைக் குத்திக் குதூகலிப்பது. எனவே, குரு பக்தியைக் காணிக்கையாக்கியதும், நம்மைக் குத்தி மகிழ்கிறார் - குத்துவதால் மகிழ்ச்சி எப்படிப் பிறக்கும் என்கிறாயா, தம்பி! சிலருக்கு அப்படி ஒரு நினைப்பு. தாங்கள் குத்துவதால், நமக்கு வலிக்கும், வேதனை அடைவோம், அதைக் கண்டு மகிழ வேண்டும் என்பது. அமைச்சர் சுப்பிரமணியம் அந்த ரகம்.

வடக்கு - தெற்கு என்று வம்பு பேசுகிறவர்கள், வடக்கு தெற்கைப் புறக்கணிக்கிறது என்று கண்டனம் கிளப்புகிறவர்கள் இருக்கிறார்களே, அவர்களுடைய வாயடைத்துப்போகும். - ஏனெனில் தெற்கே நேரிட்ட கொடுமைக்கு, வடக்கு வாரி வாரிக் கொடுக்கிறது - என்கிறார் நிதியார், பாபம்! நமது வாயடைத்துப் போக வேண்டும் என்பது அவருடைய நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை மேலிட்டு இப்படிப் பேசுகிறார் - ஆனால், நிலைமையை அவர் அறிய முயற்சிக்கவில்லை. ஒருவேளை முயன்றும் முடியவில்லையோ! மதிக்கும் அவர் அமைச்சராக்கப் பட்டிருப்பதால், உண்மை நிலையை அறிய அவர் முயற்சித்துப் பார்க்கலாம். முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்றோர் முதுமொழி உண்டல்லவா!

தெற்கிலே அவதி; அதற்கு வடக்கு வாரி வழங்குகிறது! இது தேனாக இருக்கிறது. அமைச்சருக்கு; தெற்கே எழுந்த அவதி துடைக்கப்படுகிறது என்பதால் அல்ல; நமது வாய் அடைக்கப் படும் என்பதால் எவ்வளவு சிறுபிள்ளைத்தனமான எண்ணம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நான் வயதில் அவ்வளவு பெரியவன் அல்ல என்பதால் சொல்லக் கூசுகிறது.

வடக்கு வாரி வழங்குகிறது என்றால், வடக்கே உள்ளவர்கள் பதைத்து எழுந்து பல முனைகளிலும் நிதி திரட்டிக் குவித்து இங்கு அனுப்பியுள்ளனர் என்று எண்ணிவிடச் சொல்கிறார் போலும் !!

இன்றுவரை அதுபோன்ற முயற்சியில், வடக்கே உள்ள பெருந்தலைகளும் ஈடுபடவில்லை, மக்கள் மனமும் உருகிடக் காணோம்; உருகாதது கண்டு நாம் யாரும் ஆச்சரியப் படவுமில்லை.

தமிழகத்தில் இந்தத் தத்தளிப்பு என்று கண்டதும், கடல் கடந்து சென்றுள்ள தமிழர்களுக்குக் கண்ணீர் கொப்பளிக்கிறது. மலாயாவில் நிதி திரட்டுகிறார்கள்.

காபூலிலும் கராச்சியிலும் எந்த அளவுக்குக் கருணை பிறக்குமோ, அதே அளவிலேதான் கல்கத்தாவிலும் டில்லியிலும் பிறந்திடக் காண்கிறோமே அன்றிப் பீகார் பூகம்பம் அசாம் வெள்ளம் ஆகியவற்றின் போது, தெற்கேயுள்ள மக்கள் "குடும்ப பாசம்' கொண்டோர் போலாகிப் பணத்தைத் திரட்டி அனுப்பினார்களே, அதுபோல, இதுபோது வடக்கே யாரும் கிளம்பிடக் காணோம்.

வடக்கே அமைந்திருக்கிற சர்க்கார், பண உதவி தருகிறது என்றால், அது கருணையுமல்ல, கனிவுமாகாது, கடமை - வேறென்ன? நமக்கும் துரைத்தனமாக இருக்கிறது, நமது வரிப்பணத்தையும் தோலைநீக்கிச் சுளையாகக் கொண்டு செல்கிறது. வாழ்விலே வளம் பிறக்கத்தக்க வழியை எல்லாம் தன் கரத்தில் வைத்துக்கொண்டிருக்கிறது. செல்வப் பெருக்கத்துக்கான வாய்ப்பு அவ்வளவும் தன்னிடம் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இயற்கையாய் விளைந்துள்ளகோரம் மிகுந்த இடர்ப்பாட்டிலே சிக்கி நாம் சீரழியும் போது பணம் தரவேண்டிய பொறுப்புக் கூடவா கிடையாது? இதைச் செய்வதால் வடக்கு தெற்கு என்ற பிரச்சினை எப்படி நின்று விடும்? வாயடைத்துப் போகுமோ!! என்ன மந்த மதி? கூர்ந்து பார்க்கும்போது, வடக்கு - தெற்கு என்பது பற்றிய பிரச்சினையின் உண்மையல்லவா, மேலும் பளிச்செனத் தெரிகிறது. நமது தமிழகத்தில் ஒரு பெரும் விபத்து நேரிட்டிருக்கிறது, இலட்சக்கணக்கான மக்கள் துயருற்றுக்கிடக்கின்றனர், கோடிக் கணக்கில் பொருள் நஷ்டம், உயிர்ச் சேதம் உள்ளத்தை வேகவைக்கும் நிலையில், ஐயோ! என்று அலறும் மக்களுக்கு ஆறுதலளிக்க, எல்லாம் இழந்தோமே, ஏதும் அற்றவர் ஆனோமே என்று கதறும் மக்களைத் தேற்ற, பிணக்காடாகிப் போன நஞ்சையை மீட்டிட, ஊர்களை வெள்ளக் காடுகளிலிருந்து வெளியே கொண்டுவர, வீடிழந்தோருக்கு ஒரு குடில் அமைத்துத் தர, இவைகளுக்கான பெரும் செலவுக்கான பணம் நம்மிடம் இல்லையே! தங்கம் விளையும் நாட்டிலே, இதற்குப் பணம் இல்லையே! ஏன்? செல்வம் கொழிக்கும் நாடு தானே, இயற்கையமைப்பின்படி இங்குள்ள நாம், கையேந்தி நிற்கிறோம், கண்ணீரைப் பொழிகிறோம், கருணை நிதி நிறைந்தோரே! எமக்கு வந்துற்ற கொடுமையைக் கண்ணால் பாரும், உதவி புரிந்திட முன்வாரும்! என்று இறைஞ்சி நிற்கிறோம், விளைந்துள்ள பெரு நஷ்டத்தைக் கண்டு, நிலைமையை மீண்டும் சீராக்கப் பல கோடி தேவைப்படுமே என்ன செய்வது, பேழையோ கல்லார் மனம் போலக் காலியாகக் கிடக்கிறது என்றெண்ணி அமைச்சர்கள் திகைக்கிறார்கள். ஏன் இந்த நிலைமை? வடக்குக்கு அடிமைப்பட்டுக்கிடப்பதாலல்லவா? தெற்குத் தேய்ந்து போனதாலல்லவா?

வடக்கு ஆதிக்கம் செலுத்தாமல், இங்குள்ள செல்வத்தைச் சுரண்டாமல், தொழிலைப் பாழ்படுத்தாமல், தெற்கு வளர வழி செய்திருந்தால், நாம் ஏன் இன்று பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் இழிநிலையில் இருக்கப் போகிறோம்? இங்குள்ள மக்களின் உழைப்பு உடலும் உயிரும் ஒன்றியிருக்க மட்டுமே பயன்படுகிறது - துரைத்தனத்துக்கு உள்ள அதிகாரமோ மக்கள் பசியால், போதாமையால், இல்லாமையால், இப்படி ஏதேனும் ஒருவகையில் சாவதற்கு முன்பு, ‘தற்கொலை’ செய்து கொள்ளாமல் தடுத்து நிறுத்திவைக்க மட்டுமே பயன்படும் வகையில் அமைந்திருக்கிறது.