வீரத் தியாகி
சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் -
தமிழர் சமுதாயச் சீர்கேடு -
தமிழ்நாடு - பெயர் வைத்தல்.
தம்பி!
நடுநிசி! தூக்கம் வரவில்லை; துக்கம் துளைக்கிறது! வெட்கமும்
வேலாகக் குத்துகிறது; கொழுந்து விட்டெரியும் பெருநெருப்பும்,
அதிலே கிடத்தப்பட்டுள்ள தியாகத் திருமேனியும், தெரிகிறது;
தீ என்னைத் தீண்டாது, தீயோரின் பிடியிலிருந்து நான் விடுதலை
பெற்றுவிட்டேன், தீரமற்றோரே! தெளிவற்றோரே! இனி தீ உங்களைத்தான்
தாக்கும்! வெந்து வேதனைப்படுங்கள்! உணர்ச்சியற்ற உருவாரங்களே!
உண்ண, உடுக்க, இருக்க, வழி கிடைத்தால் போதும் என்று எண்ணி,
அவைதமைப் பெற "எடுபிடியாகவும், இழி நிலையைச் சகித்துக்கொள்ளவும்
சம்மதித்துக் கிடக்கும் சத்தற்ற ஜென்மங்களாகிவிட்டீர்,
சடங்களே! கருகிப் பொடியாகட்டும், எனக்கென்ன! இதோ நான்
கண்மூடி விட்டேன்! இனி உங்களைத் திரும்பிப்பாரேன்! செல்கிறேன்,
சிந்திக்கவும் செயலாற்றவும் திறனற்றுப்போன உம்மைக் காணக்
கூசினேன், இந்த நிலை பெற்றீரே என்றெண்ணிக் குமுறினேன்,
இனி இவர்தம் கூட்டுறவு வேண்டாம் என்று துணிந்தேன், சாவை
வரவேற்றேன்! நான் மறைகிறேன், நீங்கள் உலாவுங்கள்!! நான்
இறந்து படுகிறேன், நீங்கள் இளித்துக் கிடவுங்கள்! எனக்கு
மானம் பெரிது, உயிர் அல்ல; உயிரை இழக்கிறேன்! உலுத்தருக்கு
உயிர்தான் வெல்லம், அதைச் சுமந்துகொண்டு திரியுங்கள்!
சவத்துக்கும் உயிர் உள்ள சடத்துக்கும் என்ன மாறுபாடு?
உணர்ச்சிதானே, இரண்டினையும் வேறுபடுத்திக் காட்டுவது!
உணர்ச்சியற்றுக் கிடக்கும் உம்மை, மாந்தர் என்றும் மறத்
தமிழர் என்றும் கூற என் நா, கூசுகிறது! இதோ இனி நான்
பேசப்போவதில்லை! போகிறேன், பொல்லாங்கும் பழியும், புல்லர்
வாழ்வும் பூசலும் நிரம்பிய இந்த இடத்தைவிட்டே அகன்று செல்கிறேன்!
சாக்கடையில் நீங்கள் உழலுங்கள், சாக்காடு எனக்குச் சாந்தி
அளிக்கட்டும்! பதைக்கிறீர்கள், துடிக்கிறீர்கள்! ஆஹா!
என்கிறீர்கள், ஆகட்டும் என்று ஆர்ப்பரிக்கிறீர்கள்; யார்
தெரியுமா என்று உருட்டுகிறீர்கள், என்ன செய்வேன் தெரியுமா
என்று மிரட்டுகிறீர்கள்; எல்லாம், எதற்கு? ஒரு சிறு பொருள்
உன் கரத்தை விட்டுப் போவதானால்! ஒரு சிறு சொல் உம்மீது
எவனேனும் வீசுகிறானென்றால்! சுயநலத்துக்குக் குந்தகம்
விளைகிறது என்றால், சூரத்தனமாகக் கிளம்புகிறீர்கள். போராடுகிறீர்கள்!
தாயகம் அழிக்கப்படுகிறது, தாயகம் இழிநிலை பெறுகிறது. ஏன்
என்று கேட்கும் துணிவு இல்லை உங்கட்கு! தாயகம் தருக்கரின்காலடியில்
சிக்கிச் சீரழிகிறது; தடுத்திடும் ஆற்றல் இல்லை, உங்களுக்கு!
மொழி அழிக்கப்படுகிறது, உமது விழியிலே நீர் சேரக்கூடக்
காணோம். தன்மானம் அழிக்கப்படுகிறது, தடுத்திடக் கிளம்புகிறீர்களா?
இல்லை! தாளேந்திக்கிடக்கிறீர்கள்! நத்திப் பிழைத்திடவும்,
நமக்கென்ன என்று ஒதுங்கிக் கிடக்கவும், நம்மால் ஆகுமா
என்று பெருமூச்செறியவும் கற்றீரேயன்றிக் கடமை உணர்ச்சியை
எங்கே கொண்டீர்! வீரர் வழி வந்தோரே! வெற்றி முரசு கொட்டினோரே!
தமிழர்காள்! தரணி புகழப் பரணி பாடிய பரம்பரையினரே! கடலில்
கலம் செலுத்தி, கரிப்படைகொண்டு கருங்கற்கோட்டைகளைத்
தூளாக்கி, வேற்படைகொண்டு மாற்றாரை விரட்டி, வாகை சூடிய
வெற்றி வீரர் வழிவந்தோரே! என்றெல்லாம், ஏடு உம்மைக்குறித்து
குறிப்பிடுகிறது; நாடு நலியக் கண்டும், வலியோர் சிலர்
எளியோர்தமை வாட்டிடக்கண்டும் வாய்திறந்து கேட்கவும் வக்கற்றுக்
கிடக்கிறீர்! உம்மோடு, நான் இருக்கச் சம்மதியேன்! உம்மில்
ஒருவனாக இருக்க என் மனம் இடம்தரவில்லை! நான் பிணமாகிறேன்,
பேசும் பிணங்களே! குடும்பம் அழைக்கிறது, சென்று குதூகலமாகக்
காலங் கடத்துங்கள், குட்டவருவான் கொடியோன்! குனிந்து
கிடவுங்கள். குறை கூறாதீர்கள், குண்டாந்தடியுடன் வருவான்,
கோலோச்சுவோரின் ஏவலன், இழிவாகப் பேசுவான், இனிமை, இனிமை!
என்று கூறுங்கள் - இல்லையெனில் இருட்டறையில் தள்ளிப்பூட்டிவிடுவான்!
வாழவேண்டுமே என்பீர், வாழுங்கள், வாழுங்கள், மானம் இழந்து,
உரிமை இழந்து, உணர்ச்சி இழந்து; உயிரைச் சுமந்துகொண்டு
உலவுங்கள்! என்னால் முடியாது! இதோ, நான் மரணத்தைத் தழுவிக்கொண்டேன்!
மலர் தூவிய மஞ்சம் உமக்குக் கிடைக்கக்கூடும், மானத்தை
இழந்த பலருக்குக் கிடைக்கும். எனக்கு இந்த நெருப்புப்
படுக்கைபோதும்! பிடிசாம்பலாகிறேன்! பேதையாய், தலையாட்டிப்
பதுமையாய், அடிமையாய் கிடந்து உழல்வதைக் காட்டிலும் பெருநெருப்புக்கு
என்னை ஒப்படைத்துவிடுவது சாலச்சிறந்தது! எனவே, நான் செல்கிறேன்,
நீங்கள், பூச்சி புழுக்களும், சீச்சீ என்று இகழ்ந்திடும்
விதத்தில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு கிடவுங்கள்! - என்று
நம்மை நோக்கி பெருநெருப்பில் கிடத்தப்பட்டுள்ள பெரியவர்
பேசுவது போன்றதோர் பிரமை ஏற்படுகிறது! அவர் இதுபோலெல்லாம்
நம்மை ஏசி இருக்கக்கூடாதா - ஏசியிருந்தாலாவது, ஒரு வகையில்,
நன்றாக இருந்திருக்கும் அந்தப் பெருங்குணவான், ஒருதுளி
ஏசினாரில்லை, நமது இழிநிலை கண்டு இரக்கப்பட்டு இறந்து
பட்டேனும், நமக்கு உய்யும் வழி கிடைத்திடச் செய்வோம்
என்று எண்ணினாரேயன்றி, ஏடா! மூடர்காள்! என்று சினந்துகொண்டாரில்லை!
இறந்துபட்டார் - நமக்காக இறந்து பட்டார் - நாட்டுக்காக
உயிர் துறந்தார் - நாமெல்லாம் நடைப்பிணமாகிவிட்டோம் என்பதறிந்து
வேதனையுற்றார் - உயிர் துறந்தார்! உயிர் போகிறது - போய்க்கொண்டே
இருக்கிறது என்று அறிந்தார் - விநாடிக்கு விநாடி. மரணவாயிலை
நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார் - சாவை வரவேற்றார்!
நாம் வாழ்கிறோம்! வெட்கமின்றி, வாழ்ந்துகொண்டு கிடக்கிறோம்
- வெந்து சாம்பலாகிவிட்டார் அந்த வீரத்தியாகி! எண்ணும்போது.
இதயத்தை யாரோ சம்மட்டி கொண்டு தாக்குவது போலாகிவிடுகிறது.
இந்த நடுநிசியில், என் நெஞ்சம் நடுக்குறுகிறது, எண்ணம்
ஈட்டியாகிவிடுகிறது - எரிதழல், தெரிகிறது - தியாகியின்
உடல் அதிலே கிடப்பது தெரிகிறது; ஓர் கேலிச் சிரிப்பொலிகூடக்
கேட்கிறது - ஓஹோ! நீ விடுதலைப்படை வரிசையில் உள்ளவனல்லவா?
உரிமை முழக்கமிட்டுக்கொண்டு ஊரூரும் அலைபவனல்லவா? தமிழர்,
தமிழர் என்று மார்தட்டித்தட்டிப் பேசுபவனல்லவா? அகம் என்பாய்,
புறம் என்பாய், ஆற்றல் என்று கூறுவாய், என் ஆன்றோர்,
சான்றோர் என்று புகழ்பாடுவாய், அல்லவா? என்று கேட்டுவிட்டுக்
கேலிச் சிரிப்பொலி கிளப்பி என்னை வாட்டி வதைக்கிறது,
நான் மனக்கண்ணால் காணும் அந்தக் காட்சி இந்த நடுநிசியில்,
என்போல் இதுபற்றி எண்ணி எண்ணி நெஞ்சு புண்ணாகிக்கிடப்போர்
எண்ணற்றவர்கள் என்பதும் தெரிகிறது. ஆனால் எனக்குத் துக்கம்
மட்டுமல்ல; வெட்கம் என்றேன்! உண்மையிலேயே நான் வெட்கப்படுகிறேன்!
- ஏனெனில் இத்தகைய வீரத்தியாக உள்ளம் கொள்ளமுடியுமா உன்னால்
என்று எவரேனும் என்னைக் கேட்டுவிட்டால், நானென்ன பதில்
அளிக்க முடியும்! தலையைக் கவிழ்த்துக் கொள்ளத்தான் வேண்டும்
- பலகோடி மாந்தரில் ஒருவருக்கு மட்டுமே கிட்டக்கூடியது
அந்த வீரத் தியாக உள்ளம், விருதுநகர் சங்கரலிங்கனார்,
அதனைப் பெற்றிருந்தார். பேதை நான், அதனை உணர்ந்துகொள்ளும்
ஆற்றலும் பெற்றேனில்லை! அவர் இறந்துபடுவார் என்று எனக்கு
எண்ணவே இயலாதுபோயிற்று. அவரை நான் கண்டேன்; எனினும்,
அவர் இறந்துபட நேரிடும் என்று எண்ணவில்லை - காரணம். நானோர்
ஏமாளி. நாடு அவரை அந்தநிலை செல்லவிடாது, நாடாள்வோர் அவரைக்
கைவிடமாட்டார்கள், அந்த அளவு கேவலத் தன்மை நாட்டைப் பிடித்துக்கொண்டில்லை,
அவர் கடைசிக் கட்டம் செல்லும் வரையில் கூடக் கன்னெஞ்சம்,
கொண்டிருப்பர், பிறகோ, பழிபாவத்துக்கு அஞ்சியேனும்,
பிற்காலத்துக்குப் பயந்தேனும் அறிவுலகம் ஏசுமே என்று எண்ணியேனும்,
அவர் சாவதைத் தவிர்த்து விடுவதற்கான தக்க முறையினை மேற்கொள்வர்,
என்று என் பேதை நெஞ்சு எண்ணிற்று! பெரு நெருப்புக் கிளம்பிற்று,
அந்தோ! அந்த வீரத்தியாகியை அணைத்துக் கொண்டது - சங்கரலிங்கனார்
நம்மைவிட்டுப் பிரிந்தார்.
எனக்கு அவரை, இதற்குமுன் தெரியாது - நாடு அவர்புகழ் பாடிட,
அவர், "நடுநாயகமாக' இருந்திடவில்லை - எனினும் இன்று நடுநாயகங்களாகிவிட்ட
பலருக்கு அவர் போன்றாரின் ஆற்றல்மிக்க தேசத்தொண்டு பயன்பட்டு
வந்திருக்கிறது. நீண்டகாலமாகக் காங்கிரசில் பணியாற்றியவர்,
காமராஜர் கதர் அணியக் கிளம்புமுன்பே, கைராட்டையில் நூல்
நூற்றவர்; காந்தியார் மகாத்மா ஆகிக்கொண்டிருக்கும்போது,
உடனிருந்து அந்த உயர்வு உருவாவது கண்டு உளமகிழ்ந்தவர்;
வந்தேமாதரம், தேர்தல் தந்திரமான பிறகு அல்ல, அஃது தேசிய
மாமந்திரமாக இருந்த காலத்திலேயே, அந்தக் குறளைக் கற்றுக்களித்தவர்,
"சிறைசென்று நலிந்தவர்' வணிகத்துறையிலும் அவருக்கு வெற்றிதான்;
சங்கரலிங்கனார், பழம் பெரும் தேசபக்தர் வரிசையைச் சேர்ந்தவர்.
இன்றைய நிதி மந்திரிகளுக்கும், சோப்புச் சீமான்களுக்கும்,
அவரைத் தெரிந்திருக்க முடியாது.
மாணிக்கவேலர்கள், அவர் பற்றிக் கேள்விப்பட்டிருக்க முடியாது.
நிச்சயமாக, சேதுபதிகளின் பார்வையில் அவர் பட்டிருந்திருக்க
முடியாது.
இவர்களெல்லாம், நாடு குறித்துக் கவலைகொள்ளும் பக்குவம்
பெறுவதற்குப் பன்னெடு நாட்களுக்கு முன்பே சங்கரலிங்கனார்
"சத்யாக்கிரகி' ஆகிவிட்டார்! ஆனால், அவர் சபை நடுவே இடம்
பிடித்திடும் "சத்காரியத்தில்' ஈடுபடவில்லை! கமிட்டிகளைக்
கைவசப்படுத்தும் வித்தையில் ஈடுபட்டாரில்லை! தலைவர்' ஆக
மறுத்துவிட்டார்; தன்னலமறுத்து தாய்நாட்டுக் காகப்பணியாற்றி,
விடுதலை விழாக்கண்டு வெற்றிக் களிப்பு பெற்று, பெறவேண்டிய
பேறு இதனினும் வேறு உண்டோ என்றெண்ணிப் பெருமிதம் கொண்டு
இருந்த ஒரு பெரியவர்.
தாயின் மணிக்கொடி பாரீர்
அதைத் தாழ்ந்து புகழ்ந்து பணிந்திட வாரீர்!
என்ற தேசிய கீதம் கேட்டு மகிழ்ந்தவர்.
ஏழை என்றும் அடிமை என்றும்
எவனும் இல்லை ஜாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்போர்
இந்தியாவில் இல்லையே!
என்ற சிந்துகேட்டு, செந்தேன் செந்தேன்! இதுநாள் வரை நான்
கேட்டறியாத கீதம் என்று கூறிக்களித்தவர்!
தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில்
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்.
என்ற வீரக்கவிதை கேட்டு, நெஞ்சம் விம்மிடும் நிலையில்
ஆம்! ஆம்! அழிந்துபட்டது ஆங்கில அரசு! செவி குளிரக்கேட்கிறது
சுதந்திர முரசு! இனி, பசியும் பட்டினியும் கொட்டுமோ!
பஞ்சையும் பராரியும் இருப்பரோ! - என்று எண்ணிக் களிநடம்
புரிந்தவர்.
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்
வீணில் உண்டு கொழுத்திருப் போரை
நிந்தனை செய்வோம்.
என்ற கீதம், ஊரூரும் பாடிடத் தேச பக்தர்கள் கிளம்பிடக்
கண்டு, இனி என் நாட்டுக்குப் புதுவாழ்வு நிச்சயமாகிவிட்டது
பொழுது புலர்ந்தது, புதுவாழ்வு மலர்ந்தது, என்று பூரித்துக்
கூறியவர்.
காங்கிரஸ் அரசாள்கிறது, என்ற நிலைகண்டு, இனி ஜெயமுண்டு!
பயமில்லை! மனமே! என்று சிந்துபாடிச்சிந்தை மகிழ்ந்திருந்தார்.
காமராஜர், ஆட்சிப்பீடம்
ஏறி அமரக் கண்டதும், பட்டம் பெற்றறியார், பல்கலைக் கழகம்
பார்த்தறியார், பாரதமாதாவின் சேவையன்றிப் பிறிதோர் பயிற்சியும்
பெற்றார் இல்லை, எனினும், இவர் நாடாள வாய்ப்புக் கிடைத்துவிட்டது,
பாமர மக்கள் பாராளும் காலம் இது - என்ற கவிதா வாக்கியம்,
உண்மையாகி விட்டது; இஃதன்றோ காணக்கிடைக்காத காட்சி என்றெல்லாம்
எண்ணி எண்ணி இறும்பூதெய்தி இருப்பார். ஏன் எனில், காமராஜரும்,
விருதுநகர் - தொண்டர் குழாத்தில் இருந்த தூயமணி!
இவ்வளவு இன்ப நினைவுகளும், பொடிப் பொடியாகும் படியான
பேரிடி அவர் நெஞ்சிலே விழுமென்று யார் கண்டார்கள் -
இந்தப் படுபாவிகள் இவ்வளவு மோசமாகிப் போவார்கள் என்று
நாங்கள் எண்ணவில்லையே! எவ்வளவோ பாடுபட்டு, இவர்கள் ஆட்சிக்கு
வர உழைத்தோம்... எல்லாம் வீணாயிற்றே...
என்று என்னிடம் அவர் கூறியபோது, தம்பி, உள்ளபடி, அவருடைய
கண்களில் நீர் துளிர்த்துக் கொண்டிருக்கக் கண்டேன். அப்போதுகூட,
நான் அவர் இறந்துபடுவார் என்று எண்ணிடவில்லை - காரணம்,
அவர் அவ்வளவு தெளிவாக, உணர்ச்சி வயப்பட்டவராக என்னிடம்
பேசிக்கொண்டிருந்தார் - அறுபது நாட்களுக்கு மேலாகிவிட்டது
உண்ணாவிரதம் துவக்கி - எனினும் என்னிடம் அரைமணி அளவுக்கு
அவர் பேசுகிறார் என்றால், நான் என்ன எண்ணிக்கொள்வது.
இப்போதல்லவா எனக்குப் புரிகிறது, உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்
வேளையிலும் அந்த உத்தமருடைய உள்ளத்தில் அத்துணை உரம் இருந்திருக்கிறது
என்ற உண்மை.
இன்றுபோல் அன்றும் நடுநிசி - நானும், நண்பர்கள் நடராசன்,
மதுரை முத்து ஆகியோரும், அவரைக் காணச் சென்றபோது, விருதுநகரில்,
காங்கிரஸ் தியாகி சங்கரலிங்கம் என்பார் உண்ணாவிரதம் இருந்து
வருகிறார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்தே, எனக்கு
அவரைக் காணச் செல்லவேண்டும் என்று அவா. அன்றுதான் முடிந்தது.
அந்தத்திடலில், நான் பலமுறை பேசியிருக்கிறேன் - கடைவீதியை
ஒட்டி உள்ள மாரியம்மன் கோயில் திடல். வீரம், தியாகம்,
வாழ்க்கையை அர்ப்பணிப்பது, எதற்கும் அஞ்சாமல் கடமையைச்
செய்வது, இன்னல் எதுநேரிடினும் கலங்காம லிருப்பது என்பனபற்றி,
பலர் ஆற்றலுடன் முழக்கமிடுவதற்காக அமைந்துள்ள திடல், நானும்
அங்கு நின்று பேசியிருக் கிறேன் அந்தத் திடலில் வீரமும்
தியாகமும் ஓருருவாகி, சங்கரலிங்கனாராகிக் காட்சி தரும்
என்று, யார் எண்ணியிருந்திருக்க முடியும். அந்தத் திடலில்,
ஒரு சிறு ஓலைக்கொத்துக் குடில் அமைத்துக்கொண்டு, ஒரு
கயிற்றுக் கட்டிலின்மீது அவர் படுத்துக்கொண்டிருக்கக்
கண்டேன். அந்தக் குடிலின் மீது, காங்கிரஸ் கொடி பறந்துகொண்டிருந்தது.
காங்கிரசால் உயர்ந்தவர்கள் ராஜபவனத்தில் சயனித்துக் கொண்டிருக்கக்
காண்கிறோம்; கோட்டைகளில் கொலுவிருக்கக் காண்கிறோம்;
உல்லாச தோட்டக்கச்சேரிகளிலும், நளினிகளின் நாட்டியக்
கச்சேரிகளிலும், உலவிக் களித்திடப் பார்க்கிறோம்; மாளிகைகளிலே
பலர் குடி ஏறிடக் காண்கிறோம், காங்கிரசின் துணையினால்;
இதோ குடிசையில் படுத்துக்கிடக்கிறார், உணவு உட்கொள்ள
மறுத்துத் திங்கள் இரண்டு ஆகிறது. உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும்
நிலையில் கிடக்கிறார், காங்கிரசை வலிவும் பொலிவும் கொள்ளச்செய்யும்
தொண்டாற்றிய வீரர் - முதியவர்.