நீ
பிறந்தது வெள்ளிக்கிழமை ராஜா தேசிங்கு!
உன் குதிரை பிறந்ததும் வெள்ளிக்கிழமை! ராஜா தேசிங்கு!!
இந்த நாட்டுப் புறப்பாடல் நண்பர்கட்கு, நினைவிவிருக்கும்.
மறந்தவர்கட்கு இந்தப்பாடலை கவனப்படுத்த நமது மாகாண மந்திரிசபையினர்
ஒரு ‘மகத்தான காரியம் செய்தனர்.
ராஜினமாச் செய்வதற்கு என்று ஒரு நாள் குறிப்பிட்டார். முதலமைச்சர்
பிரகாசம். ஆனால் மறுதினம், குறிப்பிட்ட நாளில் ராஜிநாமாச்
செய்யப் போவதில்லை, ஏனெனில், சகாக்களில் பலர், போயும்
போயும், மங்களகரமான வெள்ளிக்கிழமையிலா, ராஜிநாமா செய்வது
என்று கூறித் தடுத்தனராம்!
எவ்வளவு தெளிவு! எத்தகைய காலத்தில்!!
வெள்ளிக் கிழமையிலே வெளியேறுவது நல்லதல்ல என்ற பாட்டி படத்தைநமது
மந்திரமார்கள் அவ்வளவு நன்றாக அறிவிக்கின்னர் நமக்கெல்லாம்!!
***
நல்ல வேலை, நாளோடு நிறுத்திக் கொண்டார்கள். மாதக் கணக்கும்
பார்த்து,
மாதம் பத்தாகுது
மாறுவதுமாகாது
என்று மார்டித்தழும் பாட்டு எதையாவது கவனத்துக்குக் கொண்டுவந்து,
செச்சே! நமக்குள் ஆயிரம் சண்டை இருந்தாலும் நமது கொள்கையை
விடக்கூடாது, என்று தீர்மானித்து விட்டிருந்தால், குழப்பக்
குழுவிடம் நாடு, மேலும் சில காலம் சிக்கிக்கிடக்க வேண்டி
நேரிட்டிருக்கும்.
***
பத்தாம் மாதம் ‘பதவி பிடிச்சாண்டி மந்திரி உபகண்டத்திலே
சென்னைத்தான்! சென்னை முன்னேறுகிறது! அதை அறிவிக்கப் பத்திரிகைகூட
நடத்துகிறது “நம்ம சர்க்கார்!”பத்து மாதங்கட்கு முன்பு அஞ்சா
நெஞ்சர் - ஆற்றலரசர் - ஆந்திரகேசரி -என்று அர்ச்சிக்கப்பட்டவர்,
இப்போது, பிடிவாதக்காரர் - உருட்டல் மிரட்டல் செய்பவர்
- பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதில் ஆசை கொண்டவர் - என்ற
தூற்றலைச் சுமக்கிறார். இதுபோல், ஒரு கட்சியில் தலைவர்.
அந்தக் கட்சியினரால் இவ்வளவு குறைந்த காலத்தில். “ஏத்தி
இறக்கப்பட்ட” கண்றாவி வேறெங்கும் கிடையாது. அந்தப் பெருமையும்
சென்னைக்குத் தான்!
***
முன்பெல்லாம், “கவர்னர்கள் எங்கள் இஷ்டத்துக்கு மாறாக, உரிமகளில்
தலையிடுகிற விதமாக நடந்தால், நாங்கள் ஒரு கணமும் அதைப் பொறுத்துக்
கொள்ளமாட்டோம் உடனே, தயாராக, ஜேபியில் உள்ள ராஜிநாமாக்
கடிதத்தைக் கவர்னிடம் நீட்டுவோம்” என்று காங்கிரசார் பேசுவார்கள்.
இம்முறையோ... கவர்னர், முன்பு இரந்த எர்ஸ்க்கைனைத் தோற்றுவிட்டார்
இட்லி சட்னி குங்குமம் சூட்மம் கிழமையில் கைதுரை இரண்டறக்
கலக்கத் தமக்குள்ள இஷ்டத்தை வெளிப்படுத்திக் காட்டினார்.
ஆகவே, அவருக்கும் மந்திரி சபைக்கும் தகறாரு எழக்காரணம் ஏற்படவே
இல்லை. “எனது மந்திரிகள்!” என்று பூரிப்புடன் பேசுகிறார்
கவர்னர் - நமது கவர்னர்’ என்று பெருமையாகப் பேசுகிறார்கள்
மந்திரியார்கள். அவ்வளவு ‘சௌஜன்யம்.’ அகிரகாரப் பாஷையில்
குறித்திடுகிறோம். எனவே ராஜினாமாவை அவரிடம் கோபம் கொண்டு
நீட்டவேண்டிய அவசியல் இல்லை. ஆனால், ‘ஒருவருக்கொருவர்’
சண்டை பிடித்துக் கொண்டு, கவர்னிடம், சீட்டை நீட்டிட வேண்டிநேரிட்டது.
கவர்னரோ, அதெல்லாம் வேண்டாம்! கொஞ்சநாள் இருந்து, பட்ஜட்
விஷயம் விளக்க வேண்டியதை விளக்கிவிட்டுப் பிறகு போகலாம்.
ராஜிநாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது, என்று கூறிவிட்டார்,
பிடித்திழுத்துத் தலையில் குட்டுவது என்பார்களே பழமொழி
அது போலாயிற்று இந்த நிலைமை.
***
சென்னையிலே மட்டும் ஏன் இந்தச் சந்திசிரிக்கும் நிலை? மற்றமாகாணங்களிலே
காணோமே! என்று யோசிக்கத் தோன்றும். காங்கிரஸ் தலைவர்
கிருபாளனிகூடக் கேலி செய்கிறால்லவா! ஏன் வடநாட்டிலிலே இந்த
வக்கிரம்’ இல்லை என்று கேட்டால், இங்கு தான் பதவிக்காக,
பத்து விட்டும் சண்டைபோடும் போக்கினர் உள்ளனர். அங்கெல்லாம்
பரமாத் மாக்கள் உள்ளனர் என்று கூறுவார் யாரும் இல்லை! அங்கும்,
இதே கூத்து, இன்னேரம் நடைபெற்றிருக்கும். கெட்டதிலும் ஒருநல்லது
என்பார்களே அதுபோல வடநாட்டுப் பகுதிகளிலே நடைபெறும் வகுப்புக்கலவரம்
அங்குள்ள காங்கிரசாருக்கு, முழுநேரவேலை தருகிறது, எனவே அவர்கள்
ஜடுதிகட்ட, இலாப நஷ்டக்கணக்கபார்க்கநேரமில்லை. மந்திரிகள்
பலரும் விமானமேறி, வட்டமிட்டு, தீப்பிடித் தெரியும் கிராமங்களைக்
காண்கிற காரியத்திலேயே ஈடுபட வேண்டி இருக்கிறது. எனவே தான்
அங்கு இப்போது, ‘சென்னை’ இல்லை சுபாவம், போக்கு, இவைகளின்படி
ஏற்பட்ட மாறுதல் அல்ல! அங்கு அமளிநிலை, எனவே அமைச்சர்களிடம்
தகறாருக்கு நிற்கச்சட்ட சபையினருக்கு நேரமில்லை
***
பிரகாசம் காருவின் மந்திரிசபையின் துவக்கமுதலே உள்எதிர்ப்பு
இருந்துவந்தது, என்று, இன்று காங்கிரஸ் வட்டாரத்தினர் வெளிப்படையாகவே
பேசுகின்றனர். பேசாது வேறொன்றை மறைக்கிறார்கள்! அதாவது,
இனித்துவக்கப்படும் மந்திரிசபையின் கதியும் இதுவேதான், என்பதைக்
கூறாமலிருக்கிறார்கள். பிரகாசம் பட்டபாடு இருக்கிறதே, அது,
பிறக்க இருக்கும் மந்திரிசபையைப் பிடித்தாட்டும் புயலாக
நிச்சயம் மாறித்தான் தீரும். பல நுண்ணறிவாளர்கள் கூறுகிறபடி
வந்துள்ள நோய், பிரகாசத்தை அனுப்பிவிடுவதோடு தீராது புதியமந்திரி
சபையை மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியையே ஆட்டிவைக்கும். ஆமாம்,
“என்வாயால் சொல்லக் கூடாது, ஆனால் சொல்கிறேன். என்ன செய்வேன்.
காங்கிரஸ் இயக்கமானது, மெள்ளமெள்ள, முதலாளிகள் பக்கம்போய்க்
கொண்டிருக்கிறது. இந்த நிலைமை நீடிக்குமானால்- தொழிலாளர்
இயக்கத்தின் மீது தடை உத்தரவு தடியடி, துப்பாக்கிப் பிரயோகம்
போன்ற அடக்குமுறைகளை அவிழ்த்துவிட்டால், தென்னாட்டில் காஙகிரஸ்
இயக்கம், மங்கும்முறையும், மறைந்து போகும், மறைந்து போகும்”
என்று சென்றகிழமை, சென்னையில் பெரியதோர் தொழிலாளர் கூட்டத்திலே,
தோழர் திரு.வி. கலியாணசுந்தரனார் சொன்னார் - சொன்னாரா!
- சபித்தார்!! அவர்கள் அகராதிப்படி சொன்னேன், சபித்தார்
என்று. அவருடைய உள்ளமே அந்தநிலை அடைந் திருக்கிறதென்றால்,
மற்றவர்களின் மனம் என்ன எண்ணும் என்பதை விவரிக்கத் தேவையுமில்லை.
இந்தநிலை அடைந்த காங்கிரசுக்கு, இனி இத்தகைய மந்திரிசபை
மாற்றங்கள் கோட்டிடைக்குள் குத்து வெட்டுசர்வசாதாரணமாகிவிடும்!
பத்து மாதங்களென்ன, அதில் பாதி அளவே போதும் மறுபடியும்
அபிஷேகம் செய்யப்பட்டு பீடமேறும் மந்திரி சபைக்கு. பிரகாசம்காருவின்
பீடம் ஆடுவது, கடைசி அத்தியாயம் அல்ல, முதல் அத்தியாயம்.
***
பிற்போக்காளர்கள் - பதவியில் பிரியர்கள் - என்றெல்லாம்
தூற்றினர் தோழர்கள், ஜஸ்டிஸ் கட்சி ஆண்ட காலத்தில். பதவி
பெரிது என்று கருதுகிறார்கள் - மானம் - ரோஷம் - இவைகளை
மறந்தனர் - என்று கூறினர் முன்பு. மதியாதார் தலைவாசல் மிதிக்க
வேண்டாம், என்ற மூதுரைக்கு மதிப்பளிப்பார் காணோம் இன்று!!
ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் நேரிட்டதை விளக்குவதே,
இப்போது சென்னைக் காங்கிரஸதலைவர்களுக்கு வேலையாக இருக்கிறது.
இத்தனை குழப்பங்களிடையே திட்டங்கள் தீட்டவோ அமுலுக்குக்
கொண்டுவரவோ, சிறுவிரல் அசைத்த சீலர்கள் காணோம்! எல்லாம்
பதவி மயம்! பங்குபோடு கிறவண்ணம் இருக்கிறது. தேசீயம் இன்று,
முதலாளித்துவசதரங்கத்துக்குக் ‘காய்’ ஆகிவிட்டது. ஆணாக குடி
அரசு உரிமைகள் கவனிக்கப்படாமலிருக்கின்றன.
***
பத்தாமாதம் இந்தக் கோரம். இனியும் என்னென்ன நேருமோ, கூறுவதற்கில்லை.
***
இந்தப் பத்துமாதங்களில், வேறு எப்போதும், எங்கும், போடப்
படாத அளவுக்கு, 144 போடப்பட்டாகிவிட்டது. பத்திரிகைக்கு
ஜாமீன் கேட்பது வெகு சகஜமாகிவிட்டது. தடியடி, மிக மிகச்
சகஜமாகிவிட்டது! சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் ஏராளம்!
இத்தகைய நிகழ்ச்சிகள் அடம்வைசாக ஆட்சியின்போது நடைபெற்றிருந்தால்,
அண்டம் அதிரப் பேசியிருப்பர், இதே காங்கிரசார். இன்றோ!
அமைதியை நிலைநாட்டத் தனியாகச் சட்டம் தேவைப்படு‘கறது. அவசர
அவசரமாக இதற்கான முறையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது; இந்த
அளவு, ‘பிரஜா உரிமை’க்குக் கேடு செய்ய வேறு எந்த இடமும்
துணியவில்லை. இங்குதான்.“ சுபத்திரா! ஆமா அவ்வளவு அசகாய
சூரர்கள், ஆளவந்தார்கள்!
பொதுஜன ஊழியர்கள், எவ்வளவோ பொறுத்தாகிவிட்டது. புதிய
மந்திரிசபை ஏற்படும் என்று கூறப்படும் இந்தக்காலம், ஓர்
இடைவெளி; சர்க்கார் எந்த அளவுக்குப் போகத் தயாராகிவிட்டது
என்பது தெளிவாகிவிட்டது. இனி, பொதுமக்களின் உரிமைகளுக்காகப்
பணிபுரிபவர்கள் எந்தக் கட்சியினராயினும் சரியே, தங்கள் நிலைமையினைத்
தெளிவாக்கிக் கொண்டாகவேண்டும். புதிய மந்திரிசபை ஏற்பட்டதும்,
புதிய போக்குக் காணவேண்டும். ஆள் மட்டுமே மாறுகிறது. ஆட்சி
முறை அல்ல. என்றவிதமாக நிலைமை இருக்குமானால் ஒன்று கூறாமல்
சன்யாச கொள்ள வேண்டும், அல்லது உரிமைப்போர் நடத்தும்உரம்
கொண்ட உள்ளத்தை. அதிகாரவர்க்கம் என்னதான் செய்துவிடமுடிகிறது
என்பதைப் பார்த்தாக வேண்டும். எங்கு பார்த்தாலும், எதற்கு
எடுத்தாலும் 144. ஒருமாதம், பதினைந்து நாள், இவ்வண்ணம்!!
வண்டி வண்டியாக ஏடுகளையும் கும்பல்கும்பலாகப் பேச்சாளர்களையும்
வைத்துக் கொண்டிருக்கும் ஒருகட்சி, பிறகட்சிகளின் வாயைமூடிவிட்டுத்
தான், வாழ்க்கையை நடத்தமுடியும் என்ற நிலை இருப்பது, பிறகட்சிகளுக்கு
அல்ல, அந்தப் பெரிய கட்சிக்கேதான் வெட்கக்கேடு! ஏன் கிலி?
உண்மையாகவே ஒரேகட்சி தான் இருக்கவேண்டும் என்ற கோட்பாடு
கொள்ள நினைத்தால், வெளிப்படையாகவே காங்கிரஸ் இதனைத் தெரிவித்துவிடலாமே!
மற்ற இயக்கங்களை தடைகள் போட்டுத் தடுக்க முயற்சிப்பது,
கடல் அலையை நிறுத்த எண்ணம் கசடர் செயலாகுமே! ஏனோ காங்கிரஸ்
கட்சியினர் இதனை உணர மறுக்கிறார்கள். புதிய மந்திரிசபை பிறந்தபிறகேனும்,
புதியமுறையில் ஜனநாயக கோட்பாட்டுக்கு ஏற்றபடி நடந்து கொள்ளமுற்பட
வேண்டும். மாதம் பத்தாகிவிட்டது மக்களின் வாழ்க்கைத்திருத்தி
அமைக்க, வளாக்க ஒருதிட்டமும் கா÷tõம். குறைகளைப் போக்கவில்லை.
கருவில் சிதைந்தன, கனவில் கண்டன, கவைக்குதவாதன, காணமட்டும்
காட்சியாக உள்ளன, என்றவகையிலேயே இதுவரை மந்திரி சபைத்திட்டங்கள்
இருந்து வருகின்றன.
மக்கள் சலிப்படைந்து விட்டார்கள்.
அதனைத் தெளிவாகத் தெரிவிக்க, வசதியற்று இருக்கிற காரணத்துக்காக,
மேலும், மேலும், “மதோன் மத்தர் போக்கு” பலிக்கும் என்று
எண்ணுவது தவறு.
ஆசைபலகாட்டினர், ஆனகாரியம் ஒன்றும் காணோம் - கள்ளுக் கடை
மூடியது தவிர கடைமூடியது, குடியரைத் திருத்த! மக்களில்,
குடிகாரர் மட்டுமே உள்ளனர் என்று மந்திரிசபை கூறாது. மக்களின்
குறைகள் பலஉள; கூறிப்பார்த்தனர். கோரிக்கைகளை விட்டுப்பார்த்தனர்
- தீர்க்கமுன்வரவில்லை.
விவசாய வருமானவரி
ஜெமீன் ஒழிப்பு
நிலவரி திருத்தம்
தொழில்களைச் சர்க்கார் நடத்துவது
ஆசிரியர் குறை தீர்ப்பது
தொழிலாளர் நலனைப்பாதுகாப்பது
இவையும், இவை போன்ற வேறுபலவும் பரணை மீது அடுக்கப்பட்டுவிட்டன
சென்ற இடமெல்லாம், துறைமுகம் அமைக்கிறேன் என்று கூறிவிட்டுவந்தார்,
மந்திரி பக்தவத்சலம்!
ஆசிரியரை நான் அறிவேன், அவர் தம்குறை நீக்குவேன் என்றார்
அவினாசியார்.
கஷ்டப்படும் விவசாயியைக்காப்பாற்றுவேன், ஜெமீன் முறையை ஒழிப்பேன்
என்றார் காந்த்.
மக்களுக்கு ‘நல்வாக்கு’ கொடாத மந்திரியே கிடையாது.
செய்தகாரியம் எவ்வளவு? நெஞ்சில் கைவைத்து மந்திரிமார்கள்,
ஒருவருக்கொருவரே கூறிக்கொள்ளட்டும்.
இந்த இலட்சணத்திலே கர்நாடகக் கொள்கையின் இரப்பிடமாக உள்ளனர்!
வெள்ளிக்கிழமையாம் - நல்ல நாளாம் - ஆகவே அந்த நாளிலே ராஜநாமாச்
செய்ய மந்திரிமார்களும் மனம் இல்லையாம்! காலமெல்லாம் வெள்ளிக்
கிழமையாகவே இருந்துவிடக் கூடாதா என்ற ஆவலுடன் எண்ணும் “கனம்கள்”
கூடஇருக்கக் கூடும். காரியமாற்றாது ‘கனம்’களாக இருப்பது,
வீண் பாரம்! நாடு, நெடுநாட்களுக்குத் தங்காது. இதை அறிந்து,
புதிய உருவம் - புதியமந்திரிசபை, பொது உரிமையை வழங்கியும்,
அரசியல் கைதிகளை விடுதலை செய்தும், நாட்டுக்கு நல்ல சட்டதிட்டங்களை
ஏற்படுத்தியும், நல்லபெயர் எடுக்கவேண்டுகிறோம். இது சாத்யமில்லை
- எமது பண்புக்கும் பயிற்சிக்கம் இது பொருந்தாது என்று
எண்ணுவரேயானால், சிறைச்சாலைகளைச் சற்று விரிவுபடுத்திக்
கொள்ளட்டும் - காங்கிரசல்லாதார் அனைவருக்குமே இடம் அங்கு
கிடைக்கும் விதத்தில்!
உரிமைகளின்றி, உபயோகமுள்ள காரியம் எதுவும் செய்யும் வசதியற்று,
‘ஆமாம் சாமி’ ஆகி, பொது வாழ்வில் இருக்க, எந்த ஊழியரும்
சம்மதிக்கமாட்டார். அந்தவிதமான நிலைமையில் வெளியே உலவுவதைவிட,
சிறையே மேல், என்றே கருதுவான். இதோ, ஒலிக்கிறது, கொடுமுடிக்
கோகிலத்தின் இசை.
“சிறைச்சாலை என்னசெய்யும்?”
(திராவிடநாடு - 23-3-1947)
|