ஜெமீன் ஒழிப்புக்குச், சட்டசபைக்காங்கிரஸ்
காட்சியிலே, பெருவாரியான ஆதரவு கிடைத்தது. ஜெமீன்களை ஒழிப்பது
பற்றி யாரும், ஒரு துளியும், குறைகூறவுமில்லை. மந்திரிகாளா
வெங்கட்ராவ் ஒரு மாநாட்டிலே சொன்னதுபோல், ‘அழுவாரற்று’ப்
போயின இந்த ஜெமீன் கும்பல். ஆனால் அதே சட்ட சபைக் காங்கிரஸ்
கட்சியிலே ஜெமீன் ஒழிப்புடன், இனாம் ஒழிப்பும் சேர்ந்த
உடனே, எதிப்பும் கண்டனமும், சதியும் புரட்சியும், மிரட்டலும்
மேலிடத்துக்குத் தூதும், பல மாகிவிட்டன.
மந்திரிகளிலே, பிளவு மனப்பான்மை! பத்திரிகைகள், ஒன்றிரண்டு
தவிர, மற்றவைகள் அவ்வளவும், இனன்தாரர் பக்கம், கச்சையைவரிந்து
கட்டிக்கொண்டுள்ளன. ஏன்? ஜெமீன்தாரர்கள், ‘முக்காலே மூணுசீசம்
முந்திரை’ பார்ப்பனரல் லாதார். இனாம்தாரர்களிலே, பெரும்பாலானவர்கள்,
பார்ப்பனர்! எதிர்ப்புக்குக் காரணம், இதுதான். பார்ப்பனரின்
சுகபோகத்துக்குக் கேடுகூட அல்ல, கொஞ்சம் ஆட்டம் கண்டுவிடும்
என்ற உடனே, எவ்வளவு எதிர்ப்புக், கண்டனம் கிளம்புகிறது,
எனப்தைக் கவனியுங்கள்! காங்கிரசிலுள்ள தமிழர்களே! இந்த
மனப்பான்மை கொண்டவர்கள், வகுப்புவாதிகள் அல்லவா, சயஜாதி
அபிமானம் கொண்டவர்களால், வகுப்புவாதிகள் அல்லவா, சுயஜாதி
அபிமானம் கொண்டவர்களல்லவா! இவர்கள், இவ்வளவு பச்சையாகத்
தங்கள் ‘ஜாதி’க்கு உதவிசெய்ய ஜல்லடம் கட்டும்போது கூட,
வகுப்புவாதி என்று இவர்களைக்கூற, உனக்கு மனம் வரவில்லை.
ஆனால் அதே போது ஜெமீன்தாரர்கள், பார்ப்பனரல்லாதார் என்ற
காரணத்துக்காக, ஜெமீன் ஒழிப்புக் கூடாது, என்று, திராவிடர்
கழகம் கூறவில்லை. ஜெமீன் முறை கொடியது - எனவே ஒழியத்தான்
வேண்டும் - அந்த முறை ஒழிவதால், சில பார்ப்பனரல்லாத மேட்டுக்
குடியினரின் வாழ்க்கை ஜொலிப்புக் கெட்டுவிட்டால், கேடொன்றில்லை
- ஏழை, வாழ்வான் - அதுவே எமது குறிக்கோள் - ஆகவே, ஜெமீன்.
ஒழிப்பை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று திராவிடர் கழகம்
கூறுகிறது. ஆனால், திராவிடர் கழகத்தை, வகுப்புவதாக்கழகம்
என்று ஏசுகிறார்கள்! உண்மையிலே, வஞ்சனை மிக்க வகுப்புவாதச்
செயல் புரிபவர்களைத், தேசாபிமானி என்றும் கூறுகிறார்கள்
ஏனோ இந்தப்போக்கு.
***
இந்தப் பிரச்னையின் காரணமாக, ஒரளவுக்குக் காங்கிரஸ் தமிழர்களிடையே
விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
ஜெமீன் ஒழிப்புக்குச், சட்டசபைக் காங்கிரஸ் கட்சி, பெருவாரியான
ஆதரவு தந்தது, ஜெமீன்தாரர்கள், பெரும்பாலோர் பார்ப்பனரல்லாதார்
என்ற காரணத்தால். அதே சட்டசபைக் காங்கிரஸ் கட்சி, இனாம்
ஒழிப்புக்கு, எதிர்ப்புக் காட்டுகிறது, இனாம்தாரர்களில்
பெரும்பாலோர், பார்ப்பனர் என் காரணத்தால்.
இந்தப் போக்கு வருந்தத்தக்க விளைவுகளை உண்டாக்கும்.
இனாம்தாரர்களுக்கு, விதி விலக்கு அளிக்கக், காங்கிரஸ்
மேலிடம் கூறுமானால், தென்னாட்டிலே, பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார்
பிரச்னை, பலமுள்ளதாகும்,
என்ற கருத்துள்ள, தந்தி,காங்கிரஸ் மேலிடத்துக்குத் தரப்பட்டிருக்கிறது.
வகுப்புவாத ஸ்தாபனம், எதுவும் தரவில்லை. சென்னைக் காங்கிரஸ்
கமிட்டியினர், தந்தி கொடுத்திருக்கிறார்கள். அவர்களின்
நெஞ்சுறுதியும் நேர்மையும், பாராட்டு தலுக்குரியன. இவ்வளவு
விளக்கமாக நிலையை எடுத்துக் கூறின பிறகு, காங்கிரஸ மேலிடம்,
இனாம்தாரர்களை ஆதரிப்பது என்று தீர்மானித்தால், நிச்சயமாக,
அவர்களின் நோக்கம் பார்ப்பனப் பாதுகாப்புத்தான் என்று
முத்துரங்கங்கள் கூட உணர்ந்து கொள்வார்கள்.
அவனாசிகள் கூட ஆத்திரமடைவார்கள்.
***
ஜாதிப்பற்றுக் காரணமாக, இனாம்தாரர்களை ஆதரிக்கப் பார்ப்பனத்
தலைவர்கள் கிளம்பியது போலவே, தங்கள் செல்வாக்கு நீடித்திருப்பதற்கு,
இனாம்தாரர் முறை இருந்தாக வேண்டும் என்று சில, பார்ப்பனரல்லாத
தலைவர்களும் பாடு படுகிறார்கள். ஜெமீன், மடம், மிட்டா,
மேட்டுக்குடி, இவற்றுக்கு, காவல் புரியவும், ஏவல் செய்யவும்,
கிளம்பியுள்ள சர்தார் வேதரத்னம் போன்றவர்கள், இனாம்தாரருக்காகப்
பரிந்து பேசுகின்றனர்.
தஞ்சை மாவட்டத்திலே, சுமார் 120 கிராமங்கள் உள்ளன, இனாம்
முறைப்படி. இவை, சத்திரம், சாவடி, சமஸ்கிருத பள்ளிக் கூடம்
போன்ற காரியங்களுக்காக, முன்னாளிலேஇருந்த - மூளையில்
மூடுபனி படிந்த முடிமன்னர் சிலரால், ‘இனாம்’ தரப்பட்டவை.
மூளையில் மூடுபனி என்று கடுமையாகக் கூறு கிறோமே என்று
கோபம் பிறக்கக் கூடும், சிலருக்கு ஆனால், இதோ ஓர் எடுத்துக்காட்டு.
இதைக் கவனித்துவிட்டுப் பிறகு கூறட்டும், நாம் கூறினது
கடுமையான வார்த்தையா என்பதை.
***
மிரட்டூர் என்றோர் இனாம் கிராமம் இருக்கிறது. பார்ப்பனர்
களுக்கு இனாம் தரப்பட்டது. இந்த இனாம் ஏன் தரப்பட்டது
என்ற காரணத்தைக் கண்டால், வேடிக்கையும் வேதனையும் ஒன்றை
ஒன்று துரத்திக் கொண்டோடி வரும்.
எப்போதோ ஓர்முறை, சிலபார்ப்பனர்கள், ‘வேருண ஜெபம்’ செய்தார்களாம்;
மழை பெய்ததாம். உடனே மன்னன், மழையை வரவழைத்தமகானுபாவர்களுக்கு,
இந்தக் கிராமத்தை ‘இனாம்’ தந்தானாம். மழைக்கும் மந்திரத்க்கும்
சம்பந்த மிருப்பதாக எண்ணின மன்னனை, மூளையிலே மூடுபனி உள்ளவன்
என்று கூறுவது தவறா!
இப்படித்தான் இருக்கும், பல இனாம்களின், யோக்யதை களை
அலசினால். இவைகளைக் காப்பாற்ற வேண்டுமென்று, நண்பர் நாடிமுத்துவும்
ஓடி ஆடிப் பாடுபடுகிறாராம். ஏனென்று கேட்டேன், ஒரு இனாம்
குடியை. “இது தெரியவில்லையா! தஞ்சாவூர் மாவட்டதிலே நூறு
கிராமங்களுக்கு மேல் உள்ளன, இப்படி இனாம்கள். எல்லாம்
ஜில்லாபோர்டு, சத்திரம் பரிபாலன இலாக்காவின் மேற்பார்வையில்
நடத்தப்பட்டு வருகிறது. இனாம் குடிகளிடம், குத்தகைகள்
எழுதி வாங்க, குத்தகைக்குவிட, அதை யொட்டிய பல நிர்வாகக்
காரியங்களைக் கவனிக்க, ஜில்லாபோர்டுக்கு அதிகாரம் இருப்பதால்,
அதைக் கொண்டு, ஜில்லாவிலே, தேர்தல் சம்பந்தமாகத், தனக்குச்
செல்வாக்கு தேடிக்கொள்ளலாம், என்பது நாடிமுத்து அவர்களின்
நோக்கம். இப்போதும், நாங்கள், சொந்தத்தில் எந்தக் கொள்கை
கொண்டிருந்தாலும், நாடிமுத்துவிடம் கட்டுப்பட்டி ருக்கிறோம்;
இந்தக் காரணத்தாலேதான். இந்தச் செல்வாக்குப் போய்விடுமே,
என்ற பயம் அவருக்கு. ஆகவேதான் அவர் இனாம்தாரர்களின் சார்பாகப்
பேசுகிறார்” என்று கூறினார். தேசபக்தர்களின் திருநோக்கமும்
திருவிளையாடலும், எப்படி எப்படி இருக்கிறதென்பதைக் கவனியுங்கள்.
***
ஒரு ட்.டூ.ச். -தஞ்சை மாவட்டத்தார் - இனாம் குடிகள் அவரைக்
கண்டு, பேசினார்களாம். அவரும், “ஆமப்பா! எனக்குத் தெரியாதா
இனாம் குடிகள் படுகிற கஷ்டம். ஜெமீனில் இருப்பது
போலத்தான், இனாமிலும் இருக்கிறது. நான் உங்களைப்போல
ஏழைதானே. எனக்கு உங்கள் கஷ்டம் தெரியும்” என்று பரிவுடன்
பேசினாராம். பேசினது மட்டுமல்ல, இனாம் குடிகளின் குறை
பாடுகளை விளக்கும் குறிப்பையும், ஜெமீன்களை ஒழிப்பது போலவே,
இனாம் முறையையும் ஒழித்தாக வேண்டியதன் அவசியத்தையும் விளக்கிடும்
அறிக்கையையும் இனாம் குடிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு
போய், மசோதாக் கொண்டுவரும், மந்திரி காளா வெங்கட்ரா
விடம் கொடுத்தாராம். ஆனால் இனாம் குடிகள் சார்பாக இருந்த
இதே ட்.டூ.ச்.; சில தினங்களுக்குள், ‘கரணம்’ போட்டுவிட்டார்!
இனாம்தாரர்களை ஒழிக்கக்கூடாது, அது மகா பாபம், என்று சில
ட்.டூ.ச். -க்கள் கையொப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையிலே,
இவரும் கையொப்பமிட்டார். “ஏன் இந்தக் ‘காரணம்’ அடித்தீரய்யா!”
என்று மனம் நொந்து, இனாம் குடிகள் கேட்டபோது, ட்.டூ.ச்.
என்ன சொன்னாராம் தெரியுமா?
“நானாகவா ‘கரணம்’ போட்டேன். என்ன செய்வேன். அவர் (வேறு
ஒரு பிரபல ட்.டூ.ச். யின் பெயரைக் கூறி) போடச் சொன்னார்,
போட்டேன். போடாவிட்டால் முடியுமா? நான் அவருக்குக் கட்டுப்பட்டுத்தானே
நடக்கவேண்டும். என் நிலைமை உங்களுக்குத் தெரியாதா” என்று
ஒரு மூச்சு அழுது தீர்த்தாராம். இப்படி இருக்கிறது, இந்த
ட்.டூ.ச். க்களின் போக்கு. மந்திரி காளா வெங்கட்ராவே,
மனவேதனையுடன் இருக்கிறாராம்.
“நான், எதிர்பார்க்கவே இல்லை, இவ்வளவு எதிர்ப்பு ஏற்படும்
என்று” - எனச் சொல்லிச் சோகிக்கிறாராம். ஆனால் அந்தச்
சோகத்தினூடே ஓர் உறுதியும் தெரிவித்தாராம். என்னாலான
வரையில் போராடத்தான் போகிறேன். சட்டசபைக் காங்கிரஸ்
கட்சியிலே, யார் என்னைக் கைவிட்டு விட்டாலும் சரி, ஒரே
ஒரு அதிகப்படியான ஒட்டு கிடைத்தாலும் சரி, மசோதாவை, வெற்றி
பெறச் செய்யவே முழு மூச்சாக வேலை செய்வேன். இவ்வளவுக்கும்
பிறகு என் முயற்சியை முறியடித்து விடுவார்களானால், நான்
மந்திரி சபையிலே ஒட்டிக் கொண்டிருக்க மாட்டேன் - ராஜிநாமாச்
செய்துவிடுவேன் - என்றாராம். அந்த உறுதி, பாராட்டுதலுக்குரியது.
***
காளா கொண்டுவரும், மசோதாவை, யாரோ சில கம்யூனிஸ்டுகளும்
ஆந்திரர்களும்தான் ஆதரிக்கிறார்கள். இனாம்தாரர், தமிழ்
நாட்டிலேதான் அதிகம். தமிழ் நாட்டிலேயோ, காளாவின் மசோதாவுக்கு
ஆதரவு இல்லை என்று, ஓர் வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள்.
இது விஷமத்தன மானவது என்பதை விளக்கவும், இனாம்தாரர் ஒழிப்புக்குத்
தமிழகம், இனாம்தாரர் ஒழிப்புக்குத் தமிழகம், ஆதரவு தருகிறது
என்பதைத் தெரிவிக்கவும், தமிழ் நாடு இனாம் குடிகள் மாநாடு
சென்னையில், இம்மாதம் 27ந் தேதி நடை பெற ஏற்பாடாகி இருக்கிறது.
மந்திரி காளா வெங்கட்ராவ் வருகிறார். சிவஞானம், ஜீவானந்தம்,
அண்ணாதுரைø, ஆகியோர், இதிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
மடாதிபதிகள் முகாமை முறியடிக்க, மக்கள் முகாம் அமைக்கும்,
இந்த நன்முயற்சி, காலமறிந்து செய்யப்படுவதாகும்.
இதற்கிடையில், மயிலை வக்கீல்கள் சட்டப்புத்தகத்தைப் புரட்டியவண்ணம்
உள்ளனர். பம்பாய் வக்கீல் முன்ஷியிடம் சிலரும், ஆச்சாரியாரிடம்
வேறு சிலரும், சர். கோபாலசாமி ஐயங்காரிடம் சிலரும், ஓடி
இருக்கிறார்களாம். இந்த இனாம் தாரர் மசோதா, இரண்டிலொன்று
பார்த்துவிடுவது என்ற அளவுக்கு, வேற்றுமை உணர்ச்சிகளைக்
கிளப்பிவிட்டு விடுமோ, என்று அஞ்சக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்னை பற்றிய பேச்சு, எங்கு, எந்த உருவில், யாரால்
பேசப் பட்டாலும், ஒவ்வோர் ஐந்து நிமிஷத்துக்குப் பிறகும்,
“அதுதானே ஐயா அந்த ஈரோட்டுப் பெரியார், இவர்களைக் கண்டித்த
வண்ணம் இருக்கிறார். அவர் சொல்கிறபடி தானே நிலைமை இருக்கு.
பார்ப்பனர்களுக்கு ஒரு துளி இலாபம் குறைகிறது என்றாலும்,
இமயமலையிலிருந்து கன்னியா குமரிவரையிலே, பார்ப்பனர்கள்
ஒன்றுகூடிவிடுகிறார்கள்.” என்று பேசுகின்றனர்.
(திராவிடநாடு - 26-10-1947)