“நண்பா! கொடுமைக்கு ஆளான
என் தாயாரின் சோகம் நிரம்பிய கதையை அவர்கள் கூறி முடித்த
பிறகு என் கண்களிலே கொப்புளித்த நீரைத் துடைத்துக்கொண்டேன்
- என் தாயாரை நோக்கி, “அம்மா! பிரேத பரிசோதனை செய்து
பயனில்லை. இனி நடக்க வேண்டியதைக் கவனித்தாக வேண்டும்.
அது என் கடமை. அப்பா, பேராசையால் செய்துவிட்ட பெரிய கேடு,
உன்னைச் சூழ்ந்துகொண்டு கெடுத்துவிட்டது. குற்றவாளியை
நான் கண்டு கண்டேன். தண்டனை மட்டும் தரமுடியாது. நான்,
என் வாழ்நாளில் இதற்குப் பரிகாரம். என் தங்கையின் வாழ்வு
சரியாக அமையும்படி பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இனி
என்னுடையது. அப்பா வருவதற்குள், நீங்கள் இங்கிருந்து புறப்பட்டுவிட
வேண்டும். அவர் கோட்டையூர்க் கிராமத்தைவிட்டு இங்கு குடியேறி
விட்டது போலவே, நமது கிராமத்தவர் வேறு சிலரும் இவ்வூரில்
வந்திருக்கிறார்கள். யாராவது, எப்படியாவது அடையாளம் கண்டுபிடித்துவிட்டால்,
தொல்லை” என்று கூறிப் பணம் உதவினேன். ராதா இப்போது கல்லூரியில்
சேர்ந்திருக்கிறாள்” என்று என் நண்பன் நாகசுந்தரம் கூறி
முடித்தான். எப்போதும் நான் கேட்டிராத அந்த விசித்திரமான
கதை, என் உள்ளத்தை உருக்கிவிட்டது. சாதாரணமாக, விபசாரி
என்ற உடனே யாருக்கும் காமுகனுக்கும்கூடப் கோபம் வரும்.
ஆனால், இப்படி விபசாரப் படுகுழியிலே இடறி விழவேண்டியபடி,
கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் கதையைக் கேட்டால்,
கோபத்திற்குப் பதில் துக்கந்தானே வரும். நான் என் நண்பனின்
சோக நிலையைக் கண்டு பரிதாபப்பட்டதுடன், அவன் தன் பொறுப்பை
உணர்ந்து, பெருந்துறரில் வீழ்ந்த தன் அன்னைக்கும் தங்கைக்கும்
பேருதவி செய்த பெருங்குணத்தைப் பாராட்டினேன்.
நாகசுந்தரம் சொன்னான், “நண்பா? இப்போதுள்ள நிலையைப்
பார். ராதா மாசுமறுவற்றவள் - எழிலுள்ளவள் படிக்கிறாள்
கல்லூரியில் - ஆனால் அவளை என் தங்கை என்று நான் ஏற்றுக்
கொள்வதற்கில்லø - அதனால் அவள் ஒரு கெடுதியும் செய்யாமலேயே
அவளுடைய வாழ்வின் ஆரம்பமே முட்டுக்கட்டை போடப்பட்டதாகி
விடுகிறது. காலில் தளை இடப்பட்டவன் ஓட முயன்றால் இடறி
விழத்தானே வேண்டும்! கறுப்புத் துணிகொண்டு கண்களைக் கட்டிவிட்டு,
காயும் நிலவைக் கண்டு கவிபாடு என்று கேட்பதுபோல, அவளை
விபசாரி மகள் என்று முத்திரை பொறித்துவிட்டு பிறகு, வாழ்விலே
நிம்மதி பெறுவதற்காக, கௌரவம் பெறுவதற்காக, நீ கண்ணுங்கருத்துமாக
இருக்க வேண்டுமென்று கூறிப் பயன் என்ன? அவளுடைய வாழ்வு
களங்கமற்றதாக இருக்க வேண்டுமானால், அவள்மீது பூசப்படும்
கறைகளைக் கண்டு கவலைகொள்ளாத வீரன் வேண்டும், அவளை மணம்
புரிய உன்னை நான் அத்தகைய வீரன் என்று நம்பியே, இவ்வளவு
வேதனை நிரம்பிய விஷயத்தைக் கூறினேன். உலகம் அறியாது இந்த
உண்மையை; நீ அறிவாய். நீ விரும்பினால், ஊராரிடம் கூறி
எனக்கு இழிவுகூட உண்டாக்க முடியும்; தூற்ற முடியும்; வம்பளக்கலாம்;
என்னைக் கேவலப்படுத்தவும் செய்யலாம். இதைத்தான் சாமான்யர்கள்
செய்வார்கள். நீ, தனிக்குணம் உள்ளவன். இல்லையானால், மறைத்து
வைக்கவேண்டிய விஷயத்தை நான் மனந்திறந்து உன்னிடம் கூறியிருக்க
மாட்டேன். என் தாயின் கௌரவம் நசித்துவிட்டது; அதை இனி
மீட்க முடியாது. என் தங்கையின் வாழ்வு சரியாக அமையும்படி
செய்வதுதான் இப்போது நான் ஆற்றக்கூடிய தொண்டு. இதற்கு
உன் உதவி வேண்டும். உன் உள்ளத்தில் ஈரமும் உண்டு, வீரமும்
உண்டு. எனவேதான் உன்னை நாடினேன். பரந்தாமா! என் தங்கை
ராதாவைக் கலியாணம் செய்துகொண்டு அவளுக்குக் கௌரவமான
வாழ்வு அளிக்க வேண்டுகிறேன் - கெஞ்சுகிறேன்.”
நாகசுந்தரம் என்னை அவ்வளவு உருக்கமாகக் கூடக் கேட்டிருக்க
வேண்டியதில்லை. சிறுத்தையால் சின்னாபின்னமாக்கப்பட்ட தாய்
மானுக்கு அருகே, ஏதுமறியாது தாவிக் குதிக்கும் மான் கன்றை,
யார்தான், கண்டதும் காப்பாற்ற முன்வராமலிருப்பார்கள்.
ராதா, விபசாரியின் மகள்! அவளை என் மøவியாக்கிக்கொண்டு,
புது நிலø, கௌரவம், அந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கச்
செய்வேன். விபசாரம் ஒரு குற்றம் - ஆம் - ஆனால், அதற்குத்
தண்டனை, தாய் செய்ததற்காக மகளுக்குத் தருவது தர்மமல்ல.
சமூகம், அடிக்கடி தவறுகள் செய்யும் மக்களைக் கொண்டதுதான்.
தவறு செய்தவர்களையெல்லாம் அடியோடு ஒதுக்கி வைத்துக்கொண்டுபோய்,
அவர்களையே ஒரு பரம்பரையாக்கியும் விட்டால், பிறகு, சமூகம்
வெறும் சாக்கடைச் சேறு நிரம்பிய இடம், அதன் நாற்றத்தைச்
சகிக்கமாட்டாமல் சங்கடப்படும் ஒரு சிறு கூட்டம் - இவை
மட்டும் கொண்டதாகிவிடும். அதுவல்ல சமூகத்தைத் திருத்தும்
வழி. ரங்கம் விபசாரி, ரங்கத்தின் மகள் ராதா! அவளை மீட்பேன்
என்று நான் ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். எந்த மகனும்,
தன் ஆரூயிர் நண்பனிடம்கூடத் தன் தாய் விபசாரியான வேதனை
மிகுந்த கதையைக் கூற மாட்டான். என் நண்பன் என்னிடம் கூறினான்.
அவ்வளவு நம்பிக்கை என்னிடம்.
சில நாட்கள், நாங்களிருவரும் சந்திக்கவில்லை. கோட்டையூரார்,
அதாவது நாகசுந்தரத்தின் அப்பா யாத்திரையிலிருந்து திரும்பினார்.
அதனால், அவர் ஊரிலில்லாத சமயம் நடைபெற்ற வரவு செலவு காரியங்கள்
ஆகியவற்றை அவருக்குக் காட்டவும் கூறவும், என் நண்பனுக்கு
நேரம் சரியாக இருந்தது. நானோ காரியத்தைக் கவனிக்காமலில்லை.
என் நண்பனொருவன், கல்லூரியில் இருந்தான். அவனுடன் கடிதப்
போக்குவரத்து நடத்தினேன் - கல்லூரி நிர்வாகம் - விளையாட்டு
இடம் - விடுதி - படிப்பகம், இப்படிப்பட்ட விஷயங்களைப்
பற்றி, நான் இரண்டு மூன்று கடிதம் போட்டதால் அவனுக்கு
என்ன எண்ணம் ஏற்பட்டதோ தெரியவில்லை. ஒரு கடிதத்தில்,
அவன் ஒரு முறை கல்லூரி ஹாஸ்டலில் வந்து என்னுடன் நாலு
நாள் தங்கிவிட்டுத்தான் போயேன், என்று அழைப்பு அனுப்பி
விட்டான். நான் அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.
எனவே, மகிழ்ந்தேன். நாகசுந்தரத்திடம் சென்று, விஷயத்தைக்
கூறினேன். அவன் சிரித்துவிட்டு, “ஏது! மும்முரமாக ராஜதந்திர
வேலை செய்து வந்திருக்கிறாய். ஆனால், இவ்வளவு சுற்றி வளைத்துக்
காரியம் செய்திருக்க வேண்டியதில்லையே. நானே உன்னை அழைத்துக்
கொண்டு போவதாகத்தான் தீர்மானித்திருக்கிறேன். நாளைய
தினம் நாம் இருவரும் புறப்படுகிறோம். ஒரே நாள்தான் தங்கப்
போகிறோம். ஆனால், அது விசேஷமான நாள். உன் நண்பன் உனக்கு
அந்த விசேஷத்தைப் பற்றி ஒன்றும் கூறவில்லையோ?” என்று
கேட்டான். “இல்லையே! ஹாஸ்டலில் வந்து நாலு நாள் தங்கி
இருக்கலாம் என்று மட்டுந்தான் எழுதினான்” என்றேன்.
“பயல், சாமர்த்தியக்காரன்” என்றான், என் நண்பன்.
நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு ஆசாமி
வந்தான், ஒரு சிறு மூட்டையும், பெட்டியும் தூக்கிக் கொண்டு.
“எல்லாம் கேட்டபடி இருக்கிறதா?” என்று என் நண்பன் கேட்டான்.
“எல்லாம் கிடைத்தது. ஆனால் ‘ஸ்பிரிங்’ சேலை, மட்டும் கிடைக்கவில்லை”
என்றான் வந்த ஆசாமி.
“என்ன நாகு அது? ஸ்பிரிங் சேலையா? அப்படி என்றால்?” என்று
நான் கேட்டேன்.
“தேடித் தேடிப் பார்த்தேன், கிடைக்கவில்லை. முன்பு ரம்பா
சங்கீத சபாவிலே உபயோகித்தார்களாம் அதுபோல. பிறகு யாரும்
உபயோகிக்கவில்லை. மற்றக் கம்பெனியிலெல்லாம்...” என்று
ஏதோ விளக்கம் கூறினான் அந்த ஆள்.
“அது தெரியுமே எனக்கு. இந்த எண்ணெய்க் கலர் சேலை கட்டிக்
கொள்வார்கள் மற்றக் கம்பெனிகளில்” என்று நாகசுந்தரம்
ஏதோ விளக்கம் பேசினான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை.
பெட்டியைத் திறந்தான், கிரீடம், முத்து மாலை, கைவளை, காதுக்கு
லோலாக்கு - இப்படி நாடகச் சாமான்களாக இருந்தன. மூட்டையிலே
சரிகை வேட்டிகள், புடவைகள் இப்படி இருந்தன.
“நாகு, என்னடா இது? கூத்து ஆடப் போகிறாயா?” என்று நான்
கேட்டேன். வந்த ஆசாமி பணம் வாங்கிக் கொண்டு போன பிறகுதான்
நாகசுந்தரம் பதில் சொன்னான்.
“கூத்துப் பார்க்கப் போகிறோம்” என்றான்.
“எங்கே? என்ன கூத்து? அதற்கு நீ ஏன் சாமான்கள் சேகரிக்கிறாய்?”
என்று நான் கேள்விகளை அடுக்கினேன். என் நண்பன், “இவ்வளவுக்கும்
இதோ பார், பதில்” என்று கூறிக்கொண்டு, ஒரு அழைப்பு அட்டையைக்
கொடுத்தான். அதிலே என் மனம் மகிழச் செய்யும் விஷயம் பொறிக்கப்பட்டிருந்தது.
கமலா கன்னியர் கல்லூரி
வைர விழா
மேற்படி விழா திருமதி திலகவதி, எம்.ஏ.,
அவர்கள் தலைமையில் நடைபெறும்.
அன்று மாலை மாணவி ரங்கோன் ராதா எழுதிய
“தாரா”
என்னும் நாடகம் நடத்தப்படும். ராதா, தாரா வேடத்தில் தோன்றுவார்.
அழைப்பிதழ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
அகிலம்,
கல்லூரித் தலைமை ஆசிரியை அழைப்புக் கடிதம் எனக்குக் கிடைத்ததும்
அளவில்லா மகிழ்ச்சி கொண்டேன். நண்பன் அழைப்புக் கடிதத்துடன்
ராதா அனுப்பிய வேறோர் கடிதத்தையும் என்னிடம் தந்தான்.
“அண்ணா, கல்லூரியிலே, வைர விழா. அதில் வெறும் பளபளப்பு
மட்டும் இருக்க வேண்டுமென்று கல்லூரி அதிகாரிகள் எண்ணுகின்றனர்.
எனக்கோ வெறும் ஜொலிப்பு போதாது! உண்மையான மதிப்பு இருக்க
வேண்டும். அப்போதுதான் அது அசல் வைரம் என்று தோன்றுகிறது.
ஆனால், இங்குதானே ரங்கோன் வைரங்கள் ஏராளமாக வாங்குகிறார்கள்!
விழாவிலே, வேடிக்கைகள் இருக்கவேண்டுமென்று பலர் பலவகைத்
திட்டம் கூறினர். நான்தான் நாடம் ஆட வேண்டுமென்று சொன்னேன்.
பிறகு கதையைக் கூறினேன். எங்கள் கல்லூரித் தலைமை ஆசிரியை
அகிலம் அம்மையார் சீறினார்கள். நாடகத்தை நடத்தக் கூடாதென்று,
பல காரணங்கள் காட்டினர்கள். ஒவ்வொரு காரணத்தையும் நான்
மறுத்து, அவர்கள் கொண்ட எண்ணத்தைத் தவறு என்று விளக்கினேன்.
கடைசியில், பணம் அதிகம் செலவாகுமே, கல்லூரியில் பணம் ஏது?
என்று கூறிவிட்டார்கள். நான் இதற்கும் சளைக்கவில்லை. செலவை
மாணவிகளே ஏற்றுக் கொள்வதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று
ஒரு பொய் சொன்னேன். அண்ணா! இந்த வேடிக்கையைப் பார்.
நான் பல உண்மைகளைச் சொன்னதிலே வெற்றி ஏற்படவில்லை. -
ஒரு பொய் சொன்னேன். உடனே வெற்றி! ‘அப்படியானால், தாராளமாக
நாடகத்தை நடத்து, என்று கூறிவிட்டார்கள். பிறகுதான், மாணவிகளைக்
கலந்து பேசினேன். பணம் கொஞ்சம் வசூலாயிற்று; போதாது.
ஆகவே, இந்தக் கடிதத்துடன் உள்ள பட்டியலில் கண்டுள்ள சாமான்களை
வாங்கிக் கொண்டு வரவேண்டுகிறேன். நாடகத்தில் நான் நடிப்பது
இதுதான் முதல் தடவை என்று எண்ணாதீர் அண்ணா! ரங்கோன் பள்ளிக்கூடத்திலேயே
ஒரு முறை நான் சந்திரமதி வேஷம் போட்டு, ‘கெட்ட பெயர்’
எடுத்தவள்.”
இப்படிக்கு,
ராதா
இந்தக் கடிதத்தைப் படித்தானதும் நாடகச் சாமான்களுக்காக
எவ்வளவு செலவாயிற்று, நான் தருகிறேன் அந்தப் பணத்தை எனக்
கேட்கலாமா என்று தோன்றிற்று. பிறகு, அந்த ஆசையை அடக்கிக்
கொண்டேன்.
குறிப்பிட்டபடி நாங்களிருவரும் கல்லூரி சென்றோம். ராதா,
எங்களை அன்போடு வரவேற்றாள். ஒரு இலட்சிய மங்கையிடம் என்னென்ன
கவர்ச்சி, குணம் இருக்கவேண்டுமென்று நான் எதிர்பார்த்தேனோ,
அவ்வளவும் ராதாவிடம் பொருந்தி இருந்தன. நான் எதிர்பாராத
அளவு அவளிடம் சம்பாஷணைச் சமர்த்து இருந்தது. பெரும்பாலான
வீடுகளிலே இந்தச் சம்பாஷணை, கிடையவே கிடையாதல்லவா! உப்புச்
சப்பற்ற பேச்சு, இல்லையானால் ஓங்காரச் கூச்சல்! ஒரு மணி
நேரம், ஓய்வாக உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றி இனிமையாகப்
பேசும் குடும்பம், எங்கே இருக்கிறது; அதிலும் ஒரு ஆணும்
பெண்ணும், மகனும் தாயும், அல்லது அண்ணனும் தங்கையும் அல்லது
புருஷனும் மனைவியும், ஏதோ ஓர் வகைத் தொடர்பு கொண்டவர்கள்;
பேசுவது என்று ஆரம்பித்தால், ஏதாவது சச்சரவில் போய் முடியுமே
தவிர, நிம்மதியாக முடிவதில்லை. பேச முடிவதில்லை - தெரியாததால்
ஒருவருக்கொருவர், ஒவ்வொரு விஷயத்திலும் முரண்பட்ட எண்ணம்,
ஆசை கொண்டவர்கள், எப்படிக் கூடிப் பேச முடியும். பெண்களுக்கும்
ஆண்களுக்கும், வேலைநேரம் போக, பேசிக் கொண்டிருக்கத்
தெரியாததுதான் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? என்பது
தெரியவில்லை. ராதாவிடம், இந்தச் சாமர்த்தியம் இருந்தது
மட்டுமல்ல. அவள் அதனை ஒரு நல்ல ‘கலை’யாக்கி வைத்திருந்தாள்.
பெண், அதிலும் ஒரு இளமங்கை, மேலும் ஒரு கல்லூரிக் கன்னிகை
பேசினால், இனிமையாகத்தானே இருக்கும் - அது ‘கலை’யாகவும்
தோன்றும், கனிரசமாகவும் இருக்கும் என்று கேலி செய்வார்கள்
என்னை. ஆனால் நான் உண்மையைச் சொல்கிறேன் - கல்லூரி கன்னியர்கூட,
சேர்ந்தாற்போல் ஒரு அரைமணி நேரம் இனிமை குறையாமல், அதே
போது ஆபாசம் விளையாமல், பேசக் கற்றவர்கள் அதிகம் பேர்
இல்லை என்பதுதான் என் அபிப்பிராயம். அதிக அனுபவம் இல்லை.
ஆனால் நான் சொல்வது சீக்கிரத்தில் மற்றவர்களால் மறுத்துவிட
முடியாது. பெண்களின் பேச்சிலே குழைவு, நெளிவு, குறுகுறுப்பு,
இனிமை இவை நிரம்ப இருக்கும் - இருக்கத்தானே செய்யும்.
ஆனால், இவை மட்டும் போதுவதில்லை. இவற்றுடன் கொஞ்சம்
மனதுக்குத் தெளியும், நேரம் வீணாக்கப்படவில்லை என்று எண்ணுகின்ற
அளவுக்கு அறிவு மணமும் அதிலே கமழ வேண்டும். ராதா இந்த
அறிவு மணம் கமழும்படி பேசினாள். ஆனால் அந்த மணமும் பலவகை
அல்லவா? சில உண்டே, நெடி’ என்று கூறக்கூடிய அளவுக்கு,
அப்படி அல்ல; மல்லிகையின் மணம் - மணம் - அதுவும் தோட்டத்திலே
மல்லிகை, சற்றுத் தூரத்திலே நாம் - அப்போது உண்டாகுமே
மணம், அதுபோன்ற விதம் - ராதாவின் பேச்சிலே இருந்தது.
அதேபோது நளினம் - உறுதி - அப்பப்பா! இன்பக் கனவே நனவானது
என்று கூறுவேன் - அவள் பேச்சிலே, அவ்வளவும் கலந்து இருந்தது.
ஒரு உதாரணம் பாருங்கள், ராதாவுடன் படித்துக் கொண்டிருந்த
ஒரு மாணவி, ராதா, நான், என் நண்பன், நால்வருமாக உட்கார்ந்து
பேசிக் கொண்டிருந்தோம்; அப்போது பிரிட்டிஷ் ராணிமார்களைப்
பற்றிய பேச்சு வந்தது; நான் ஏதோ ஓர் விஷயத்தைக் குறிப்பிடுவதற்காக,
எலிசபெத் ராணியைப் பற்றிப் பேசினேன். உடனே, ராதாவுடன்
இருந்த அந்தப் பெண் வெடுக்கென்று, “அவளா? ஆண்களை வேட்டையாடினவள்”
என்றாள்! உண்மை இதிலே கொஞ்சம் உண்டு. ஆனால், அந்தப் பெண்,
அதைச் சொன்ன முறை இருக்கிறதே, அது என்னவோ போலிருந்தது.
நான், என்னையுமறியாமல், எலிசபெத்து வக்கீல் வேலை செய்ய
நேரிட்டது. நான் சொன்னேன், “அரசியாக இருந்துகொண்டு பல
கட்சித் தலைவர்களையும் பக்குவமாக நடத்திச் சென்று, அதேபோது
தன் பதவிக்கும் ஆபத்து வராதபடி பரிபாலனம் செய்வது எளிதான
காரியமல்ல. எலிசபெத், இந்தக் காரியத்தை எவ்வளவோ திறமையாக
நடத்தி வந்தது போற்றுதலுக்கு உரியதுதான்” என்றேன். என்
ராதா கன்னத்தில் மெல்ல அறைவது போலப் பேசினாள். “எலிசபெத்
அரசியாக இருந்ததால் உயர்தரமான வேட்டையாடி வர முடிந்தது.
நிலை வேறாக இருந்தால், வேட்டை மட்டும் நின்றிராது; ஆனால்,
வேட்டைக்குரிய பொருள் வேறாக இருந்திருக்கும்” நான் அவள்
பதிலிலே சொக்கினேன். வேறு யாராவது இதே பேச்சைச் சொல்லியிருந்தால்,
அந்த அளவு ரசம்’ எனக்கு ஏற்பட்டிருக்குமா என்பது தெரியாது.
ராதா சொல்லும்போது அதை நான் பெரிதும் ரசித்தேன். எங்கள்
சம்பாஷணை அன்று அதிக நேரம் நடைபெற முடியவில்லை. நாடக வேலைகளை
ராதா கவனிக்க வேண்டி இருந்தது.
நாடகத்தைக் கண்டேன் - நாடகத்தையா? ராதாவின் படம் எப்படிப்பட்டது
என்பதைக் கண்டேன். நான் கேட்ட விஷயங்களை, எவ்வளவோ மறந்துவிட்டிருக்கிறேன்.
கண்டவைகளை மறந்துவிட்டிருக்கிறேன். ஆனால், அந்த நாடகம்!
அதை மட்டும் நான் ஒரு துளியும் மறக்கவில்லை - மறக்க முடியாது.
கல்லூரிப் பொது மண்டபத்திலேதான் நாடகம், சின்ன அளவுதான்,
அதிகமான அலங்காரங்கள் இல்லை - தேவைப்படவுமில்லை. ராதாவின்
திறமை, எந்தக் குறையையும் எவரும் காண முடியாதபடி செய்துவிட்டது.
நாடகம் வேண்டாமென்று ஆரம்பத்திலே பேசிய அகிலம் அம்மையார்
பரவசமானார்கள். நாடகத்திலே ராதாவுக்கு முக்கிய வேஷம்.
அவள்தானே தாரா! ஆஹா! எப்படிப்பட்ட தாராவாகக் காட்சி அளித்தாள்,
என் ராதா! நாடகத்தின் ஒவ்வொரு கட்டமும் எனக்கு இப்போதும்,
கண்ணெதிரே இருக்கிறது. இருந்தாலும், நான் ராதா தந்த குறிப்புப்
புத்தகத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டே, அந்த நாடகத்தை
உங்களுக்குக் கூறுகிறேன்.
முதல் காட்சிவிளக்கொளி மங்கலாக இருக்கிறது. பசும்புற்றரை
மீது தாரா (அதாவது என் ராதா) படுத்துக் கொண்டிருக்கிறாள்.
ரோஜா நிறச் சேலை! தலையிலே மலர்ச்செண்டு! கையிலே காம்புடன்
உள்ள மலர்ந்த தாமரை. அந்தத் தாமரையிலே தன் இதழை வைத்துக்
கொண்டிருக்கிறாள் ராதா.
உள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது.
தாரே! தாரே! தாரோய்!
அந்தக் குரலிலே கடூரமும் நடுக்கமும் கலந்து இருந்தது.
அந்தக் குரலைக் கேட்டும், தாமரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாள்.
ஒரு கிழவர் - அதாவது தாராவின் கணவர் வருகிறார் - முனிவர்
என்று மட்டுமல்ல, முதியவர் என்பது பார்த்ததும் நன்றாகத்
தெரியக்கூடிய நடை நொடி பாவனை! ஒன்று, கூற மறந்துவிட்டேனே,
ராதா கதை மட்டும் எழுதவில்லை, பயிற்சி தந்தவளும் அவளே!
கிழவன், “தாரே” என்றும் மீண்டும் கூப்பிட்டான்.
தாரா, படுத்திருந்த நிலையிலிருந்து மாறி, பசும்புல் தரை
மீதே உட்கார்ந்து, இரு கால்களையும் கைகளால் கட்டிக் கொண்டு
கணவனைப் பார்த்தாள். கிழவனின் முகத்திலே ஒரு களை - தாராவின்
முகத்திலே ஒருவகைப் பயம்.
தாமரையைக் காட்டிக் கேட்டாள். “தாமரை எவ்வளவு அழகாக இருக்கிறது
பார்த்தீர்களா?” என்று.
மனைவிக்கு எதனிடம் பிரியமோ அந்தப் பொருள் தனக்கும் பிரியம்
என்று கூறிக்கொள்ளும் கணவன்மார் ரகம் அவர். ஆகவே, அவர்
தாமரையைப் புகழ ஆரம்பித்தார் - வசனமல்ல - ஒரு நீண்ட கவிதை
- அதுவும், தாரா சலிக்குமளவு - சபையோருங்கூடத்தான் சலித்தனர்.
பாடி முடித்தான பிறகு, பொருளை விளக்க ஆரம்பித்தார் -
பதம் பதமாகப் பிரித்து - நின்று கொண்டிருந்தவர், தாராவின்
பக்கத்திலே உட்கார்ந்து கொண்டார். தாரா, அந்தப் பாட்டு,
அதற்கு அவர் சொன்ன பொருள் விளக்கம் இவைகளைக் கவனித்துக்
கொண்டல்ல, வேறு எங்கேயோ அவளுடைய மனம் சஞ்சரித்துக் கொண்டிருந்தது.
தாராவின் முகபாவம், இதை நன்றாகக் காட்டிற்று.
தாராவாலும் சகிக்க முடியவில்லை சங்கடத்தை - பொருள் விளக்கப்
பேச்சை நிறுத்தினாள், வேறு பேசி.
“ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளக் கவிதை சிறந்த வழியா,
கண்களா?” என்று கேட்டாள் கணவனை நோக்கி.
“இதென்ன கேள்வி? கவிதை என்றால் நீ என்னவென்று எண்ணிக்
கொண்டாய்?” என்று சற்றுச் சுறுசுறுப்புடன் துவக்கினார்
முனிவர்.
“கவிதை ஆராய்ச்சிக்குப் போய்விடாதீர். நான் கேட்பது சாதாரணக்
கேள்வி. ஒரு பொருளை அறிய, ரசிக்க, பாராட்ட, புகழ, விரும்ப,
கண்ணின் துணை தேவையா? கவிதையின் துணை தேவையா?” என்று ‘புட்டுப்
புட்டு’ப் பேசினாள் தாரா.
“இப்படிக் கேட்டால் எப்படிச் சொல்வது?” என்றார் அவர்.
“விளங்கச் சொல்கிறேன். தாராவின் இலாவண்யத்தை அழகாக விளக்கி
ஒரு கவிதையை யாராவது பாடக் கேட்டுத்தான் நீங்கள் தெரிந்துகொள்ள
முடியுமா? அல்லது உமது கண்களைக் கொண்டே நான் ஓர் அழகிதான்
என்பதைத் தெரிந்துகொள்ள முடியுமா?” என்றாள்.
“தாரே! நீ மகா குறும்புக்காரி” என்று அவர் பதில் கூறிக்கொண்டே,
தாரையின் கன்னத்தைக் கிள்ளினார். அவளோ, தாமரையின் ஒரு
இதழைக் கிள்ளிக் கொண்டிருந்தாள்.
“அதுபோலவே, இந்தத் தாமரையின் அழகை எனக்கு விளக்கக் கவிதை
கூறி, களைத்துப் போக வேண்டாம். என் கண்கள் போதும், தாமரøயின்
அழகைக் கண்டு ரசிக்க” என்று கூறிக் கொண்டே எழுந்திருந்தாள்.
இருவரும், போகப் புறப்படும்போது, நாலைந்து வாலிபர்கள்
எதிரே வந்தனர்.
“குருஜீ...”
“என்னடா, தடிப்பயல்களா, சுலோகத்தின் பொருளை ஏழு முறை
சொல்லிய பிறகும்...”
“அதற்கல்ல குருஜீ! ஜுரத்துக்கு ஒரு பச்சிலை தருவீர்களே...”
“ஆமாம்! தாரா பறித்துத் தருவாள்...”
“ஏன், யாருக்கு ஜுரம் என்று தாரா கேட்கிறாளே, காதிலே விழவில்லையோ,
மடையர்கள்?”
“நல்ல ஜுரம்! ஏதேதோ உளறிக்கொண்டு...”
“யாரடா? நீங்கள் உளறுவது...”
“சும்மா இருங்கள். குருவிடம் பேசுவதால் குளறுகிறார்கள்.
தம்பி! தெளிவாகச் சொல். ஜுரம் யாருக்கு?”
“சந்திரனுக்கு!”
“தடிப்பயல்! இரவு, நெடுநேரமாகிறது அவன் தூங்க. உடம்பு
எப்படிக் கெடாமலிருக்கும்.”
“அப்பா! அப்பா! கொஞ்ச நேரம் சும்மா இருமே. தம்பி, ஜுரம்
கடுமையோ?”
“நெருப்பின் மீது கை வைப்பதுபோல் இருக்கிறது அம்மணி.
முதலிலே தலைவலி என்றான், பிறகு ஜுரம் - வர வர வேகமாக வளர்ந்து...”
“பாவம்! ஏன் பயந்திருப்பானோ?”
“பைத்யக்காரி! இந்தப் பிள்ளைகள் வேண்டுமானால் பயப்படும்.
அவனா! மகா நெஞ்சழுத்தக்காரன் - ஏன் பயப்படப் போகிறான்?”
“இல்லை, குருஜீ! அவன்கூடத் தான் பயந்தாங்கொள்ளி. நாங்களாவது
தங்களிடம் மட்டும் பயப்படுவோம் - சந்திரன் அம்மாவிடம்கூடப்
பயப்படுவான்.”
“அவனுடைய அம்மா என்ன எவ்வளவு பொல்லாதவளா?”
“இல்லை, இல்லை. அம்மா என்றால், சந்திரனுடைய அம்õமவல்ல.
தங்களைத்தான் குறிப்பிடுகிறோம்.”
“என்னடா இது! வேடிக்கை. என்னைக் கண்டா சந்திரன் பயப்படுகிறான்?”
“கண்டு பயந்தால்கூடப் பரவாயில்லையே! காணாமலே கூடப் பயப்படுகிறான்.”
“போதும் புத்தியில்லாததுகளே. ஆமாம், ஜுரம் வரக் காரணம்?”
காட்டுக்குளம் இருக்கிறதே, அதிலே...”
“கண்டபடி புரண்டு இருப்பான்.”
“அவன் என்ன எருமையா புரள? ஒரு வாலிவன், தடாகத்திலே விளையாடாமலா
இருப்பான்.”
“நெடுநேரம் இருந்தான். நெடுநேரம் மட்டுமல்ல. நாலைந்து
முறை நீந்தினான், நடுக்குளம் வரை.”
“சரி! சரி! தாரே, நீ அந்தப் பச்சிலையைப் பறித்து இந்தப்
பயலிடம் கொடுத்தனுப்பு. நான் போய்ப் பார்க்கிறேன் சந்திரனை.
டே! பயல்களா, வாருங்கள். அடே! சாமம்! நீ இருந்து பச்சிலையை
வாங்கிக் கொண்டுவா.”
இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு முனிவரும், சீடர்களும், சாமம்
தவிர, போய்விட்டனர். தாரா, அவர்கள் போன பிறகு, சாமத்திடம்
பேசலானாள்.
“நாலைந்து முறை, ஏனடா நீந்தினான்?”
“வேடிக்கைக்குச் செய்தானோ, வேண்டுமென்றே செய்தானோ, தெரியாது
அம்மணி. நடுக்குளம் சென்று திரும்பினான், கையிலே, ஒரு
அழகான தாமரையுடன். எங்களிடம் காட்டி, இது அழகாக இருக்கிறதா
என்று கேட்டான்?”
“யார் சந்திரனா?”
“ஆமாம், அம்மணி.”
“தாமரையை உங்களிடம் காட்டி, இது நன்றாக இருக்கிறதா என்று
கேட்டதும், நீங்கள் தடிப்பயல்கள், எனக்கு உனக்கு என்று
கேட்டிருப்பீர்கள், உங்களுக்கெல்லாம் தாமரை கொண்டுவர
மறுபடியும் நீந்தி இருப்பான்.”
“இல்லை அம்மா! எங்களுக்கு என் தாமரை? நமது சிண்டு இருக்கிறானே,
அவன் சந்திரன் கொண்டுவந்த தாமரையைப் பார்த்துவிட்டு,
அது அழகாக இல்லை, பூர்ணமலர்ச்சி இல்லை என்றான்.”
“யார் சிண்டுவா?”
“ஆமாம்.”
“பிறகு?”
“சந்திரன், அந்தத் தாமரையைக் கசக்கிப் போட்டு விட்டு
வேகமாக ஓடி, மறுபடியும் குளத்திலே வீழ்ந்து, மற்றோர்
தாமரையைப் பறித்துக்கொண்டு வந்து, கோபத்துடன் எங்களிடம்
கட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான்.”
“அது நல்ல தாமரைதானே?”
“ஆமாம். ஆனால், இந்தச் சிண்டு, இது முன்பு கொண்டு வந்ததைவிட
மோசம் என்றான். சிண்டு கேலி செய்கிறான் என்று தெரியாமல்,
மறுபடியும் பாய்ந்தான் குளத்தில்.”
“பாபம்.”
“இப்படி ஐந்து தடவை நடந்தது. சிண்டு கடைசி வரையில் கேலி
செய்வது என்றுதான் இருந்தான். பிறகு அவனே பயந்துபோனான்,
சந்திரன், அதிகம் களைத்துப் போயிருப்பது கண்டு. இது ரொம்ப
அழகானது - சிலாக்கியமானது என்று புகழ்ந்தான். அப்போதுதான்,
சந்திரன் புன்சிரிப்புக் கொண்டான்.”
“அது இந்தத் தாமரைதானே.”
“ஆமாம், தங்களுக்குத்தான் தந்தானா, தாமரையை?”
“ஏன் ஆச்சரியம்? என்ன சொன்னான், யாருக்குத் தரப் போவதாகச்
சொன்னான்.”
“இல்லை... அவனைக் கேட்டோம்...”
“என்ன கேட்டீர்கள்?”
“இப்படித் தேடித் தேடி முதல்தரமான தாமரையாகப் பொறுக்கி
எடுத்து யாருக்குத் தரப் போகிறாய் என்று கேட்டோம்...”
“கேட்டதற்கு அவன் என்ன சொன்னான்?”
“அவனா! என்னவோ போல எங்களைப் பார்த்தான். ஒரு நீண்ட பெருமூச்செறிந்தான்
பிறகு. தழதழத்த குரலில்...”
“தழதழத்த குரலில்”
“அழகுத் தெய்வம்” - என்றான். தாரை புன்சிரிப்புடன் நின்றாள்.
இத்துடன் முதல் காட்சி முடிந்தது.
“அழகுத் தெய்வம் - எவ்வளவு பொருத்தமான பெயர், தாராவுக்கு!
அதிலும் ராதா அந்த வேடம் தாங்கியபோது, பொருத்தம், மிகமிகச்
சோபையுடன் இருந்தது. முதல் காட்சிக்கும் இரண்டும் காட்சிக்கும்
இடையே கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது. கல்லூரி நாடகந்தானே.
எனவே, சீன் மாற்றம், உடை மாற்றம் போன்ற காரியங்களுக்கு
நேரம் பிடித்தது. சாதாரணமாக, இந்தத் தாமதத்தைத் தவிர்க்க
முடிவதில்லை. தன் தங்கையின் அறிவுத்திறனைக் கண்டு, பெருமையுடன்
வீற்றிருந்த எண் நண்பனைக் கண்டேன். இருவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டோம் ஒன்றும் பேசாமல். மற்றவர்கள் பேசினது,
அரை குறையாகக் காதில் வீழ்ந்தது.
அழகுத் தெய்வம்.
மலர்ந்த தாமரை.
கடும் ஜுரம்.
இந்தப் பெண், யாராவது நாடகக்காரியின் மகளோ! இப்படிப்
பலர் பேசிக் கொண்டனர்.
சாந்தி நிகேதனம் - அடையாறு கலாக்ஷேத்திரம் இவைகளைப் பற்றியும்
பேச்சு எழுந்தது. ஆனால், அவை கலாமன்றங்கள்; இது ஒரு கல்லூரி
- வேறு பல அலுவலுக்கிடையே, தயாரிக்கப்பட்ட நாடகம். அந்த
நாடகத்தின் முதல் காட்சி, ரசிகர்களுக்கு, திறமைமிக்க நடிகர்களை,
புகழ் பெற்ற கலா
மண்டங்களை நினைவிற்குக் கொண்டு வந்ததென்றால், தாரா நாடக
அமைப்பின் விசேஷத்தை விவரிக்க வேண்டுமா!
என்னைப் போலவே பலரும், இரண்டாம் காட்சியைக் காணத் துடித்துக்
கொண்டிருந்தனர். முதல் காட்சியைத் தோற்கடித்துவிட்டது
இரண்டாவது காட்சி.
பர்ண சாலை. அதன் வெளிப்பக்கம் ஒரு பலகை. அதன் மீது ஒரு
வாலிபன். அவனருகே மற்றுமிருவர். தளிர் கொண்டு வீசுகிறார்கள்.
வாலிபன் கண்களைத் திறப்பதும் மூடுவதுமாக இருக்கிறான்.
காட்சியின் துவக்கம் இவ்வண்ணமிருந்தது.
“சந்திரா! சந்திரா! என்னப்பா, பயங்காட்டுகிறாயே?” மிகப்
பரிவுடன், இருவரில் ஒருவன் பேசுகிறான். சந்திரன் கண்களைத்
திறந்து அவனைப் பார்க்கிறான். பார்வையா அது - விரகதாபத்தை
விளக்கும் அருமையான பிரசங்கம்!
“வந்துவிட்டார் - வந்துகொண்டே இருக்கிறார் - குரு வருகிறார்”
என்று கூவியபடி இரண்டோர் சீடர்கள் ஓடி வந்தனர். குருவும்
அவர்களைத் தொடர்ந்து வந்தார் - சந்திரன் உடலைத் தொட்டுப்
பார்த்தார் - பிறகு மருந்து என்று கருதிக்கொண்டு, ‘குரு
வேலையை’ச் செய்தார்.
“சொன்னபடி நடப்பதில்லை - காட்டிலே அலைவது - கண்ட கண்ட
தடாகங்களிலே புரளுவது - வரவர, சந்திரா! நீ ரொம்பக் கெட்டுவிட்டாய்!”
சந்திரன் மீண்டுமோர் முறை, பார்வையால் பேசினான் - இம்முறை
சோகம், வெட்கமும் திகைப்பும் கலந்து இருந்தது அந்தப்
பார்வையில்.
இதற்குள், பச்சிலையுடன் வந்து சேர்ந்தான் சீடன். கு முறைப்படி
அதனைச் சாறு பிழிந்து, சந்திரனுக்கு கொடுத்து விட்டு,
அவனுடன் துணைக்கு இருக்கப் பச்சிலை கொண்டு வந்தவனை மட்டும்
அமர்த்திவிட்டு, மற்றச் சீடர்களை அழைத்துக் கொண்டு, ஆஸ்ரமம்
சென்றுவிட்டார். அவர் போன பிறகு, சந்திரன் மெள்ளப் பேசினான்.
“பச்சிலை, நீயா பறித்து வந்தாய்?”
“நானல்ல! நீ யாருக்காகத் தாமரையைப் பறித்து வந்தாயோ,
அதே தாரா பறித்துத் தந்தாள் பச்சிலை.”
கண்களை மீண்டும் மூடினான் - புன்னகை தவழ்ந்தது.
“நோயுமூட்டினாள் - மருந்தும் தந்தாள்.” - துணிந்து கூறினான்
அந்த வார்த்தையை, நண்பன்.
“துஷ்டா” என்றான் சந்திரன்; பேச்சிலே காரமில்லை - முகத்திலே
கோபக் குறியில்லை - குழைவுகூட இலேசாக இருந்தது.
“சந்திரா! நீ இவ்வளவு விரைவிலே மனதைப் பறி கொடுத்துவிடக்
கூடியவனென்று நான் எண்ணியதே இல்லை. உண்மையைக் கூறுகிறேன்.
என் நண்பனாகிய நீ, ஏக்கம் கொண்டிருக்கிறாயே என்று எண்ணும்போது
உன்னிடம் இரக்கம் வருகிறது. என்ற போதிலும், பொதுவாக
எண்ணும் போது, குருவை நினைக்கும்போது, உன் பருவத்தைப்
பார்க்கும் போது, உன் செயல், எனக்குப் பிரமாதமான கோபத்தை
மூட்டுகிறது” என்றான் அந்த நண்பன். தவழும் புன்னகை மறையவில்லை...
சந்திரன் நண்பனின் வார்த்தையைத் திருத்தினான்! ‘சிந்தனை’
- ‘செயல் அல்ல’ என்றான்.
“இந்த விதண்டாவாதம் கிடக்கட்டும் சந்திரா! குரு பத்னியை...”
“அவளுடைய கணவர் என் குரு - ஆமாம் - அந்தத் தொடர்பு துளியும்
கெடவில்லை.”
“படித்த பாடங்களின்படி நட. உபநிஷத் காட்டும் உண்மையின்படி
நட. நான் அதிக காலம் சகித்துக் கொண்டிருக்க மாட்டேன்.
ஏற்கெனவே நோய் வாய்ப்பட்டுள்ள உன்னை, நான் வேறு வேதனைக்குள்ளாக்குகிறேன்
என்று வருத்தப்படாதே, படுகுழியில் விழுமுன்னம் உன்னை எச்சரிக்கிறேன்.
துரோகச் சிந்தனையை விடு. முடியாவிட்டால் இங்கு படிப்பதையாவது
நிறுத்திக்கொண்டு வேறு இடம் சென்றுவிடு.”
“எங்கும் அவள் இருக்கிறாள்!”
“சந்திரா! ஏது வேதத்தை இந்த விகார காரியத்துக்கும் பயப்படுத்தப்
பார்க்கிறாய்.”
“சொல் விளக்கம் வேண்டாமப்பா. நிலைமை விளக்கம் வேண்டும்.
பச்சிலையைப் பறித்துத் தரும்போது, தாரா, என்ன...”
“அவளும் பித்துப் பிடித்தவளாகத்தான் இருக்கிறாள்.”
“ஆஹா! நண்பா, இந்த ஒரு வாசகத்துக்கு நான் என் ஆயுள் உள்ளளவும்
உனக்குச் சேவை செய்யலாம் போலிருக்கிறது. என்னைப் பித்தனாக்கியவள்,
தானும் அதே நிலையில் இருக்கிறாளா! எங்கே தாரா இப்போது?
எங்கே என் அழகுத் தெய்வம்?”
“இதோ வந்துவிட்டேன்.” ஆம்! ராதாவின் குரல்! ஆனால், சந்திரனின்
ஏக்கக் குரலுக்கு அளித்த பதில் அல்ல. குருவின் கூப்பிடும்
சத்தம் கேட்டு, தாரா, பதிலுரைத்தாள் அதுபோல. அதுவரை,
அவள் அந்தப் பர்ணசாலையில் பக்கத்திலே இருந்த மலர்ப் புதரிலே
மறைந்துகொண்டுதான் இருந்தாள். காதல்நோய் கொண்ட கட்டழகனின்
பேச்சைக் காதாரக் கேட்டாள். கட்டளையிடும் உரிமை பெற்ற
கணவனின் குரலைக் கேட்டு, ஓடோடிச் சென்றாள். அவள் உள்ளமோ
நர்த்தனமாடிற்று. இவ்வளவையும் விளக்க, பேச்சு, பாட்டு
ஒன்றும் கிடையாது. தாரா - அதாவது என் ராதா இங்குமங்கும்
ஓடினாள் - இதோ! வந்தேன்! என்று கூவியபடி - புள்ளிமான்
போல. நூற்றுக்கணக்கிலே நாங்கள் இருந்தோம் நாடகத்தைக்
கண்டு களித்தபடி. ராதாவின் பார்வை, யார் மீதேனும் வீழ்ந்ததோ!
இல்லை! எங்கோ சஞ்சரித்தன! என்னென்னவோ பேசின! மூன்றாவது
காட்சி ஆரம்பமாயிற்று. தாராவும், குருவும் குடும்ப வாழ்க்கையை
எப்படி நடத்தி வந்தனர் என்பதை விளக்கும் காட்சி. அதையும்
என் தாரா, அருமையான முறையிலேதான் அமைத்திருந்தாள், இருவருக்குள்
நடைபெறும் சம்பாஷணைகளின் மூலமும், இருவரும் வேறு வேறு
உலகிலே, சஞ்சரித்து வருவதை விளக்கினாள். குரு தன் எதிரே
ஒரு குவியல் ஓலைச்சுவடிகளை வைத்துக் கொண்டிருந்தார் -
ஒன்றைப் பிரித்துப் படிப்பதும், அதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே
ஏதோ புது யோசனை கொண்டவராய், வேறோர் சுவடியை அவசரமாக
எடுத்துப் பிரித்துப் படிப்பதும், விளக்கம் பெற்று மகிழ்வதுமாக
வீற்றிருந்தார் - அவருக்கு அருகே, பலவிதமான மலர்களைத்
தன் எதிரே குவியலாக வைத்துக் கொண்டு தாரா பூத்தொடுத்துக்
கொண்டிருந்தாள் - இடையிடையே நல்ல மல்லி, அழகிய இருவாட்சி,
இவைகளை மாலையுடன் இணைக்காமல், தனியாக எடுத்து வைத்து அழகு
பார்ப்பதுமாக, அவள் காணப்பட்டாள். ஒவ்வோர் சமயம் ஒருவரை
ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் ஏதேனும் பேச வேண்டும்
என்று எண்ணி, என்ன பேசுவது என்று தெரியாததால் திகைத்துக்
கொண்டிருந்த காட்சி, சிறந்த நகைச்சுவைப் பகுதியாக இருந்தது.
இந்தத் திகைப்பைப் போக்க, குரு, மௌனப் படிப்பு முறையை
மாற்றி, உரத்த குரலிலே படிக்கலானார், சுலோகத்தை.
“வசந்தருது மனமோகனம் அளிக்குமோ? என்று கேட்ட ஸ்ரீ மகாலட்சுமியை,
ஸ்ரீமந் நாராயணமூர்த்தி பார்த்து, ஹே! பிரியநாயகி! மனதுக்கு
இசைந்தவளும், மனோஹரியும், மாசற்ற கற்பினளுமான மனைவியுடன்
கூடி வாழும் பேறு பெற்றவனுக்கு, வசந்தருது, ஆண்டுக்கொரு
முறை அல்ல, ஆண்டு முழுவதும், ஆயுள் முழுவதும் உண்டு என்று
பதில் கூற, லட்சுமி தேவியார், தன் பார்த்தாவின் பாகு மொழியை
உண்டு மயங்கினவளாய், அவருடைய மார்பிலே சாய்ந்து கொண்டாள்.”
குரு, சுலோகத்தை ஒரு முறைக்கு இரு முறை, பதம் பதமாகப்
பிரிந்து, படிக்கும்போது பொருள் விளங்கக்கூடிய விதமாகப்
படித்துக் காட்டி. தாரா தன் கருத்தைக் கூறுவாள், அதை ஒட்டிப்
பேசத் தொடங்கலாம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
தாராவோ, குருவின் கருத்தை அறிந்து கொண்டும், கவனியாதவள்
போலிருந்து விட்டாள். ஆனால் சுலோகத்தின் பொருளைக் கண்டு
ரசித்தாள் என்பது அவளுடைய முகபாவத்தில் அழகாக விளங்கிற்று.
கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு குருதேவர். தம் கருத்துக்கேற்ற
வழிப்படி தாரா வராமற் போய்விட்டாலும், அவளுடைய கருத்தின்
வழிப்படி சென்றாவது அவளிடம் பேசுவோம் என்று எண்ணியவராய்,
“தாரா, முல்லைக்கும் இருவாட்சிக்கும், பார்த்த உடனே வித்தியாசம்
தெரிந்து விடுகின்றதோ?” என்று ஒரு கேள்வி கேட்டார். தாரா
அதற்குப் பதில் கூறாமல், முல்லையையும், இருவாட்சியையும்
மாறி மாறிப் பார்த்தாள். குருவுக்குச் சலிப்பும் கோபம்
வந்துவிட்டது.
“தாரே! உனக்கு மலர்களிடம் பிரியம் அதிகம் இருக்கலாம் -
இருக்க வேண்டியதுதான். மங்கையும் மலரும் இணை பிரியாத்
தோழர்கள். ஆயினும், நான், எப்போதேனும், மனச்சந்துஷ்டிக்காக
உன்னிடம் பேசத் துடித்தாலும் அப்போதும், நீ என்னை உதாசீனம்
செய்கிறாயே இது சரியாகுமா?” என்று கேட்டார். அவருடைய பேச்சு,
கோப தவனியில் ஆரம்பமாகி, சோகரசத்தில் போய் முடிந்தது.
தாரா இதற்கு மட்டும் பதிலுரைத்தாள்.
“நான் பேசுவது தங்கள் மனச் சஞ்சலத்தைப் போக்கிச் சந்துஷ்டியைத்
தரும் என்று கூறுகிறீரே, இது எனக்கு நிரம்பச் சந்தோஷம்
அளிக்கிறது” என்றாள்.
“அது தெரிகிறது... வியாக்யானம். என் மனச் சந்துஷ்டிக்காகவேனும்,
ஏன் என்னிடம் பேசக் கூடாது” என்று கோபமாகவே கேட்டார்.
தாரா பதிலுக்குக் கோபித்துக் கொள்ளவில்லை. மலர்க்கூடையை
அவரிடம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, “அவசரமாக வெளியே
சென்று வர வேண்டும் - தயவு செய்து பூத்தொடுத்துக் கொண்டு
இருங்கள்” என்று கூறிவிட்டு வெளியே போகத் தயாரானாள்.
அவளிடம் கோபம் கொண்டிருந்த குருதேவர், தாராவின் ஒரே
ஒரு புன்னகையால் திருப்தி அடைந்துவிட்டார். திருப்தி அடைந்தது
மட்டுமல்ல, தேன் உண்ட வண்டென மயங்கினார். குழந்தை போல
பேசலானார். “தாரே! மலர்மாலை தொடுத்துத் தருகிறேன் நல்ல
முறையிலே. ஆனால், நீ எங்கே போகிறாய், இவ்வளவு அவசரமாக,
இந்த நேரத்தில்?” என்று கேட்டார்.
“ஒரு அருமையான பச்சிலை இருக்கிறது பக்கத்துத் தோட்டத்து
வேலியில். அதைச் சாறு பிழிந்து கொடுத்தால் உடனே, சந்திரனின்
காய்ச்சல் நின்றுவிடும்” என்றாள். கூறிக் கொண்டே வெளியே
சென்றாள்.
பார்க்கப் பார்க்க, தாரா நாடகம் புதுமை நிரம்பியதாகக்
காணப்பட்டதுடன், ராதாவின் மனப்போக்கைச் சித்தரித்துக்
காட்டுவதற்காகவே தீட்டப்பட்டது என்ற எண்ணமும் ஏற்படச்
செய்தது. ஒவ்வொரு காட்சி மூலமும் ராதா, தாராவின் மனப்போரட்டத்தையும்,
சந்திரனின் காதல் வேகத்தால் தன்னைத் தானே இழந்துவிடும்
நிலைக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணுவதையும்
சித்தரிப்பதாகவே இருந்தது.
ஒரு காட்சியை என்னால் என்றுமே மறக்க முடியாது. தாராவும்
அவளுடைய தோழியும் பேசிய காட்சி அது.
“ஆண்கள் மகாவீரர்கள் என்கிறார்களே, அது பொய்யடி, பொய்!”
என்று தாரா கூறினாள் சிரித்துக்கொண்டே.
“அற்புதமான கண்டுபிடிப்போ! வீராதி வீரன் என்று விருது
பெற்றவரானாலும் வேல்விழி மாதரிடம் மண்டியிடுபவர்தான் ஆடவர்
என்பது, யாரறியாதது? புதிதாகக் கண்டறிந்து கூறுகிறாயோ?”
என்று கேட்டாள் தோழி.
“அதுமட்டும் அல்ல! காதலிக்கும்போதுகூட, ஆடவர் கோழைத்தனத்தைக்
கைவிடுவதில்லையடி. சந்திரன் என் மீது எவ்வளவு காதல் கொண்டிருக்கிறான்...
அப்படிப்பட்டவன்... எவ்வளவு பயப்படுகிறான் தெரியுமோ?”
என்று கேட்டாள்.
“ஓஹோ, அதைத்தான் நீ கோழைத்தனம் என்று கூறுகிறாயோ! பாபகாரியம்
புரிய அஞ்சுபவன். கோழையா! என்ன தாரா! வரவர உன் புத்தி
இப்படிக் கோணலாகி விட்டது” என்று கண்டிக்கும் முறையிலே
கூறினாய் தோழி. அப்போது, ராதா, (தாரா வேடத்தில்) ஒரு
பார்வை பார்த்தாள், தோழியை. ஆஹா! அந்தப் பார்வை என்னென்ன
பேசிற்று தெரியுமோ! ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம்கூடப்
பேசலாம், அந்த ஒரு பார்வையின் பொருளைப் பற்றி. அப்படிப்பட்ட
அபூர்வமான பார்வை அது; தோழி, பயந்தே போனாள். “தாரா!
விபரீதமாக எதுவும் செய்துவிடாதே” என்று எச்சரித்தாள் தோழி.
நடந்த விபரீத காரியந்தான், தெரிந்ததாயிற்றே. அதற்குத்
தாராவின் தனிமொழி மூலம் தரப்பட்ட விளக்கம்தான் புதுமையானது.
தாரா, உலவுகிறாள் - விபரீதம் நேரிட்டான பிறகு தனியாக.
அவள் முகத்திலே புன்னகை தவழ்ந்தபடிதான் இருக்கிறது - ஆனால்,
அன்றலர்ந்த மலருமல்ல, வாடிய மலருமல்ல, இரண்டுக்கும் இடையே
உள்ள நிலையில்தான் - மலர் போல் முகம்.
வழியிலே, இருபுறமும் இருந்த செடிகளின் தளிர்களைப் பறிப்பதும்
வீசுவதுமாக, எழுத்தற்ற ஆனால் இனிமையுள்ள இசை ஒலியுடன்
செல்கிறாள்.
ஒரு புன்னை மரத்தடியிலே உட்காருகிறாள். பிறகு பேசுகிறாள்.
“சந்திரா! பழி முழுவதையும் நான் ஏற்றுக் கொண்டேன் - அல்லவா!
- நானாக - மனமுவந்து - துணிந்து - விளைவுகளைக் கூடக் கவனியாமல்,
ஏன்? அந்த இரகசியத்தை உலகம் எங்கே அறியப் போகிறது?”
“நீ என் மீது கொண்டிருந்த காதல், உன்னைச் சில நாட்களில்
தீய்த்துவிட்டே இருக்கும். பாவம்! நீயோ, ஒரு கோழை! கனி,
தானாகக் கரத்தில் வந்து விழட்டும் என்று காத்திருக்கும்
முடவன் போல இருந்தாய்.”
“சந்திரன் என்ன செய்தான் தெரியுமா! ‘குரு பத்னியை...’
என்று தேவலோகம் பேசுமே என்று, அஞ்சினாய்.”
“அந்த அச்சம் இருந்ததே தவிர, குரு பத்னியிடம் காதல் கொள்ளலாமா,
என்ற எண்ணம் மட்டும் பிறக்கவில்லை.”
“ஒரு நாள், நான் தீர்மானித்தேன், ‘ஓஹோ, சந்திரன் பழி
நமக்கும், பலன் தனக்கும் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறான்.
அவனுடைய கோழைத்தனம், ஆடவருக்குள்ள சுபாவத்தின் சாயல்தான்;
சரி! நானே பழியை ஏற்றுக் கொள்
கிறேன். என் கெட்ட நடத்தையாலேயே சந்திரன் கெட்டு
விட்டான் என்று எண்ணக்கூடிய விதமாக, நானே நடந்து
கொள்வேன்’ என்று தீர்மானித்தேன். சந்திரா! நீ என்னைக்
காதலித்தாய். ஆனால், மாசற்றவன் என்று மற்றவர்கள் நினைக்கும்படி,
‘மறைவு’ வேண்டுமென்று எண்ணினாய் நான் பழியை ஏற்றுக்கொண்டேன்.
எனக்கு, அது ஒரு பாரமாகத் தோன்றவில்லை. என் வாழ்வு அவ்வளவு
ருசியற்றுப் போயிருந்தது. காதலின்பத்துக்காக ஏங்கிக்
கிடந்தேன் - கிடைத்த காதலன் கோழையாக இருக்கக் கண்டேன்
- எனவே, நான் துணிந்து பழியை ஏற்றுக் கொண்டேன்.”
இந்தத் தனி மொழியைத் தாரா கூறியபோது, நாடகம் கண்டவர்கள்,
மகிழவில்லை - ஆமோதிக்கும் துணிவு யாருக்குத்தான் வரும்.
“இவளும் ஒரு பெண்தானா! அதிலும் தேவலோகத்தில்! - என்றுதான்
உலகம் என்னைப் பற்றிக் கூறும்” என்று முடித்தாள், தனிமொழியை.
இதற்குக் கொட்டகை அதிர்ந்தது, கரகோஷத்தில் நாடகம் முடிந்தது.
“சுயமரியாதைப் பிரசாரமப்பா இது -” ஒரு பெரியவர் பேசினார்.
“தேவலோக ஆபாச விளக்கம்” - ஒரு பண்டிதர் சொன்னார்.
“இப்படிப்பட்ட இடமா இந்தத் தேவலோகம்!” - ஒரு மூதாட்டி
பேசினாள்.
“ஆண்கள், பழிபாவத்தை எப்படியாவது பெண்கள் மீது சுமத்தி
விடுகிறார்கள்” - ஒரு கல்லூரி மாணவி கூறினாள்.
ராதாவை, நாங்கள் ஒரு அரை மணி நேரத்துக்குப் பிறகு சந்தித்தோம்.
“எனக்கு எண்ணம் சரியாக உருவாகவில்லை. ஆகவே தான் நாடகம்
சற்றுத் தெளிவற்றுப் போயிற்று. என் கருத்து ஆடவர்கள்
தூண்டுபவர்கள் - பெண்கள் அதற்குப் பலியாகி விடுகிறவர்கள்.
உண்மைக் குற்றவாளி, ஆடவர்; பலிபீடத்தில் சாய்பவர்கள்,
பெண்கள் - ஆடவரின் குற்றங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன,
பெண்களின் தவறு எவரும் கண்டிக்கக் கூடிய நிலையில் மன்றத்துக்கு
வந்து விடுகிறது, என்பதை விளக்குவதுதான்” - என்றாள்.
ராதா, நாடகத்தின் மூலமும், அதன் விளக்கமாகக் கூறிய மொழியின்
மூலமும், தன் தாயார் போன்றவர்கள் பழிக்கப் படுகிறார்களேயொழிய,
அவர்களை அந்தக்கதிக்கு ஆளாக்கிய காதகர்கள், மதிப்புடன்
உலவுகிறார்கள், என்ற உண்மையை இடித்துரைக்கிறாள் என்றே
எனக்குப்பட்டது.
விடை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினோம். சுருக்கமாக,
ஆனால் உறுதியுடன். நான் என் தீர்மானத்தை, என் நண்பனிடம்
கூறினேன் - “நண்பா! நான் ராதாவைக் கலியாணம் செய்து கொள்ளச்
சம்மதிக்கிறேன்” என்று.