அறிஞர் அண்ணாவின் பேட்டிகள்


ஒரே கட்சி ஆட்சி இந்தியாவுக்கு ஏற்றதல்ல
(20.04.1967 அன்று போஜனா இதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்)

மூன்று கோரிக்கைகள்:
தனித் திராவிடநாடு கோரிக்கையைக் கைவிட்டபோதிலும், தன் மூன்று அடிப்படைக் கோரிக்கைகளைத் திமுக கைவிடவில்லை.

எங்களுடைய மொழியும் கலாச்சரமும் காப்பாற்றப்டவேண்டும். இந்தியக் கூட்டாட்சிக்குள் எங்கள் மாநிலத்திற்குரிய அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். எங்களுடைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதி மொழி தேவை.

தனிநாடாகப் பிரிந்தால்தான் இத்தகு பாதுகாப்பு கிடைக்கும் என முதலில் நினைத்தோம். ஆனால், சீனப் படையெடுப்பிற்குப் பின் இந்தியாவின் ஒரு பகுதியாகச் செயல்படுவதன் அவசியத்தை உணர்ந்துகொண்டோம்.

ஆதரவுவேர்:
குறிப்பிட்ட தனியொரு கருத்தைப் பரப்பி அதனால் மட்டுமே நாங்கள் பலம் தேடிக்கொண்டதாக நினைப்பது தவறு. எமக்குள்ள ஆதரவு மக்களிடையே ஆழமாக வேர் விட்டிருக்கிறது.

தொடர்புமொழி:
காலப்போக்கில் அனைத்திந்தியாவிற்கும் ஒரு பொதுத் தொடர்பு மொழி உருவாக வேண்டும். அதுவரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கவேண்டும். 14 தேசிய மொழிகளுக்கும் சம மதிப்பு அளிக்கப்படவேண்டும்.

திட்டக்குழு:
இந்தியத் திட்டக்குழு மாநிலங்களிலும் பணியாற்றலாம். மாநிலத் திட்டங்களுக்கு ஆலோசனை கூறும் விதத்தில் திட்டக்குழு செயல்பட்டால், அதை நான் விரும்பி வரவேற்பேன். மாநிலங்களின் வளர்ச்சிக்குத் திட்டக்குழு பக்கபலமாக நின்று அதிக உதவிகளைச் செய்யவேண்டும். அது ஒரு கூட்டமைப்பாகச் செயல்பட வேண்டும். வெறும் திட்டப் பார்வையோடு மட்டுமின்றி மாநில நலத்திற்கான அக்கறைப் பார்வையோடும் மைய அரசு நிதி ஒதுக்குவதற்குத் திட்டக்குழு வழிவகை செய்யவேண்டும்.

திட்டம் வகுத்தல்:
தேசியத் திட்டங்களை வகுப்பதிலும் மாநில சட்டத்திட்டங்களை உருவாக்குவதிலும் மைய அரசின் பொறுப்புணர்ச்சியே தலைமையானது.

கட்டுப்பாடுகளுக்கு உட்படாத இந்த உணர்ச்சியோடு மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை உருவாக்கும் சூழ்நிலை அரும்பவேண்டும். அதற்கேற்ற வகையில் திட்டக்குழுவிலும் மைய அரசின் நிர்வாகத்திலும் மைய அரசுவயமாதல் என்னுங் கொள்கை பின்பற்றக் கூடாது.
மக்களின் விருப்பங்களைக் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில்தான் நாம் திட்டங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் நம் திட்டங்கள் நல்ல பயனை விளைவிக்கும்.
திட்டங்கள் முதலில் சிற்றூர்களில் வகுக்கப்படவேண்டும். பிறகு மாநில அரசு அவைகளைப் பரிசீலிக்க வேண்டும். இறுதியில்தான் மைய அரசு திட்ட அரங்கில் தன் பங்கை ஏற்க வேண்டும். சிற்றூர்களில் தொடங்கப்படும் முன்னேற்ற வேலைகளில் மாநில அரசுகள் ஈடுபட்டு உழைக்க வேண்டும்.

மோதலைத் தவிர்க்க:
மைய-மாநில அரசுக்குக்கிடையே நிலவும் கருத்து வேறுபாட்டினால் ஏற்படும் மோதல் தவிர்க்க முடியாததல்ல. மனம் விட்டுப் பேசுவதின் மூலம் கருத்து வேறுபாடுகளைப் போக்கிக் கொள்ள முடியும்.

ஒரே கட்சி ஆட்சி:
இந்தியாவிற்கு ஒரே கட்சி ஆட்சி ஏற்றதல்ல. ஒரு கூட்டாட்சியில் அந்தக் கூட்டாட்சியை வலியுறுத்தும் அரசியல் சட்டத்தின் கீழ் ஒரு கட்சியாட்சியே எப்போதும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்க முடியாது.
இந்தியக் கூட்டாட்சிக்கு உட்பட்ட பல மாநிலங்களைப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆளும் சூழ்நிலை உருவாகிவிட்டது. பல மாநிலங்களில் கூட்டு அமைச்சரவைகள் ஏற்பட்டிருப்பதை இந்திய அரசியலின் இடைக்காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சி என்று நான் கருதுகிறேன்.

தொடர்பு வரை:
மைய மாநில அரசுகளின் தொடர்பு அதிகப்படுவதற்கு நான் எந்த திட்டத்தையும் கூற விரும்பவில்லை. ஆனால் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்படவேண்டும். பல முதலமைச்சர்கள் கூடிப் பேசுவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் ஆற்றலைப் பெறமுடியும். இத்தகைய நேரடித் தொடர்பு வெறும் அமைப்பு முறைகளைவிட சிறப்பானது.

(20.04.1967 அன்று போஜனா இதழுக்கு அளித்த பேட்டியின் சுருக்கம்)