அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு
அண்ணா பதில்
சென்னை, மார்ச் 14 – இன்று
சட்டமன்றத்தில் நடந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் திருமதி.
சத்தியவாணிமுத்து அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் “பரம்பிக்குளம்
தண்ணீரைத் தமிழ்நாட்டுக்குத் தரமுடியாது என்று கேரளத்தில்
புதிதாகப் பதவியேற்றிருக்கும் அமைச்சரவை தெரிவித்திருக்கிறது“
என்று குறிப்பிடுகையில் நிதியமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள்
குறுக்கிட்டுத் தரமுடியாது என்று அங்கத்தினருடைய கட்சிப்
பத்திரிகைகளில் வந்திருக்கும் செய்தியை ஆதாரமாக அவர்கள்
தரமுடியாது என்ற சொல்லவில்லை. இன்னும் முடிவாகத் திட்டம்
வகுக்கப்படவில்லை எல்லாம் முடிவானதும் திட்டம் துவக்கப்படும்
என்றார்.
உடனே அண்ணா அவர்கள் பம்பாயிலிருந்து
வெளிவரும் “டைம்ஸ் ஆப் இந்தியா“ பத்திரிகையில் வந்த செய்தியை
வைத்துத் தான் அம்மையார் பேசியதாகக் குறிப்பிட்டார்கள்.
அமைச்சர் சில பத்திரிகைகளில்
தவறாக எழுதப்படுவதை வைத்துக் கொண்டு பேச வேண்டாம் என்று
கேட்டுக் கொள்ளுகிறேன். பரம்பிக்குளம் தண்ணீர் நமக்க வரவேண்டாம்
என்ற எண்ணம் அவர்கள் கட்சிக்கு இருக்கலாம். அதனால்தான் இவ்வாறு
பேசுகிறார்கள் போலும்.
அண்ணா பம்பாய் பத்திரிகை மட்டுமல்ல,
தமிழ்நாட்டுத் தேசீயத் தினசரி பத்திரிகை ஒன்றும் இவ்வாறு
குறிப்பிட்டுத் தலையங்கம் தீட்டியுள்ளது.
அமைச்சர் – தங்கள் கட்சிக்கு
இந்த எண்ணம் இருப்பதால் தான் இவ்வாறு பேசுகிறார்கள். அச்செய்தியை
ஆதாரம் காட்டிப் பேசுகிறார்கள் என்று எண்ணுகிறார்கள்.
அண்ணா – அப்படிப்பட்ட எண்ணம்
கட்சிக்குக் கிடையாது. அப்படி அதைத் தடுத்து நிறுத்தம் ஆற்றலும்
எங்களுக்கு இல்லை என்பதை அமைச்சர் அவர்களுக்குத் தெரிவித்துக்
கொள்கிறேன்.
அமைச்சர் – அப்படியானால் சந்தோஷம்.
(நம்நாடு - 15.3.1960)