இடையில் கடிதம் எழுதாமைக்குக் காரணம்
ஜோரேசுக்கு "வண்டி'யே "சர்க்கார் மாளிகை' -
எனக்குக் "காஞ்சி'யே "திராவிடநாடு'
இந்தி எதிர்ப்புக்கு மக்கள் பாராட்டு
துதி பாடிக் கிடந்தவர்களின் தூற்றலைப் பொருட்படுத்தாதே!
மூட்டி விடுவோன் -
கேட்டு மருள்வோன் -
மன்றத்தான் -
தெளிவளிப்பான் -
உரையாடல்கள்
கழகம் புயலுக்குத் தப்பி வளைந்திடும் நாணல்
ஆங்கிலமே ஆட்சிமொழி ஆகவேண்டும் என்பார்
கருத்துரைகள்
இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்தவர்களின் கனிவுரைகள்
தம்பி!
நீண்ட பல நாட்களுக்குப்
பிறகு - நாட்களா? - பல திங்களுக்குப் பிறகு மடல் மூலம்
உன்னுடன் அளவளாவி மகிழும் வாய்ப்பினைப் பெறுகிறேன். என்
இதயத்துக்குப் பெரிதும் வேதனை தந்த இடைவெளி. குற்றம் உன்மீது
துளியும் இல்லை. என் நிலை விளைவித்ததே இந்த இடைவெளி. கிழமைதோறும்
நாட்டு நடப்புகளைக் காண்பதால் என் உள்ளத்தில் எழும் எண்ணங்களை
உன்னிடம் எடுத்துக்கூறி, உன் இசைவு எத்தகைய செயல் முறைக்குக்
கிடைக்கும் என்பதனைக் கண்டறியும் சுவைமிக்க சீரிய முயற்சியாக
"தம்பிக்குக் கடிதம்' எனும் இப்பகுதியைத் துவக்கினேன்
- வளர்ந்தது - களிப்புமிகக்கொண்டேன் - உன் மகிழ்ச்சியையும்
நான் அறிவேன்.
ஆனால். . .? - ஆனால் என்ன
அண்ணா! நான் இதழ் பெற மறுத்தேனா? இன்முகம் காட்டத் தவறினேனா?
ஒரு கிழமை மடல் வரத் தவறினாலும், ஏன் வரவில்லை? ஏன் வரவில்லை?
என்று ஆவலுடன் கேட்காதிருந்தேனா? ஆனால் என்ற ஆபத்தான வார்த்தையைப்
போடுகிறாயே! என்மீதா தவறு இருக்கிறது? - என்று, தம்பி!
கேட்கத் துடிக்கிறாய், உணர்கிறேன்; ஆனால், அந்தக் கேள்வியுடன்
கோபத்தை அல்ல, கனிவினைத் தான் கலந்து தருகிறாய் - என்னிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ள ஓராயிரம் தொல்லைகள் நிரம்பிய பணியினைக்
குறித்து உனக்கே தெரியுமே. கடுமையான பணியாற்றுவதற்கு இடையிலேயும்,
உனக்கு மடல் எழுதவும், கதை, கட்டுரை, உரையாடல் போன்ற வடிவங்களில்
என் எண்ணங்களை வெளியிடவும் நான் தயங்கினதுமில்லை - அஃது
எனக்குப் பளுவான வேலையாகவும் தோன்றினதில்லை - சொல்லப்போனால்,
மனத்திலே ஏற்பட்டு விடும் சுமையும், அதனாலேற்படும் சோர்வும்,
உனக்காக எழுதும்போது பெருமளவு குறைந்துபோவதுடன், புதிய
தெம்பும் பிறந்திடுகிறது - ஆகவே இடையில், இதழ் நிறுத்தப்பட்டதற்குக்
காரணம், எனக்கு எழுத நேரமும் நினைப்பும் கிடைக்கவில்லை
என்பதுமல்ல, எழுதுவதால் களைப்பும் இளைப்பும் ஏற்பட்டு
விட்டது என்பதுமல்ல. இதழ் நடத்தும் நிர்வாகப் பொறுப்பினைப்
பார்த்துக்கொள்ள, முட்டுப்பாடின்றி நடத்திச் செல்ல எனக்கு
நேரம் கிடைக்காததும், அதன் காரணமாக ஏற்பட்ட பொருளாதார
நெருக்கடியுமே, திராவிட நாடு இதழ் நிறுத்தப்பட்டதற்குக்
காரணம். எனக்கு மட்டுமே தொல்லை தந்த நிலைமைகளைப்பற்றித்
தம்பி! உன்னிடம் சொல்லி, உன் மனதுக்குச் சங்கடத்தை உண்டாக்க
விரும்பவில்லை; பல்வேறு காரணங்களால், "திராவிட நாடு' நிறுத்தப்பட்டது;
பல திங்களாகிவிட்டதால், "திராவிட நாடு' என்ற பெயருடன்
இதழ் நடத்தத் துரைத்தனம் அளித்திருந்த அனுமதி காலாவதி
யாகிவிட்டது. மீண்டும் அதே பெயருடன் இதழ் நடத்தத் துரைத்தனத்தாரை
அணுகும் முயற்சி நடைபெற்றவண்ணம் இருக்கிறது - நண்பர் செழியன்
ங. ட. அதற்காவன செய்வதாகக் கூறியுள்ளார் - என்றாலும்,
அதற்கான "உத்தரவு' கிடைத்திட எத்தனை காலமாகுமோ, யார் கண்டார்கள்!
துரைத்தனத் தாருக்குத் தான் என்மீது அளவுகடந்த அன்பாயிற்றே!!
அறிவாயே!! அதனால், நான் சிறையில் இருந்தபோது, என் இளையமகன்
இளங்கோவன், "காஞ்சி' எனும் பெயரில் கிழமை இதழ் "இலக்கிய
இதழ்' நடத்த - பெற்றிருந்த அனுமதியைப் பயன்படுத்தி, என்
பணியினைத் தொடர்ந்திட முனைகின்றேன். "திராவிட நாடு' இதழ்
நடத்தத் துரைத்தன அனுமதி கிடைத்ததும், அந்தப் பெயருடன்
இதழ் வெளிவரும் - "காஞ்சி' இலக்கிய இதழாகிவிடும். இந்த
நல்ல நம்பிக்கையுடன் நான் முன்பு "திராவிட நாடு', இதழில்
தந்து வந்தவைகளை இனி, "காஞ்சி' இதழ் மூலம் தர உன் இசைவு
கிடைத்திடும் என்று எதிர்பார்த்து, பணியினைத் துவக்குகிறேன்.
தம்பி! எப்போதோ படித்த ஒரு
வரலாற்றுத் துணுக்கு நினைவிற்கு வருகிறது. தென் அமெரிக்க
பூபாகத்தில் மெக்சிகோ நாட்டில் விடுதலைப்போர் நடாத்திய
"ஜோரேஸ்' எனும் மாவீரன், தலைநகர் இழந்து, அரசாங்க அலுவலகம்
இழந்து, குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு வண்டியிலேறி, காட்டுப்பகுதிக்குச்
செல்கிறான்; உடன் இருந்த தோழர்கள் கேட்கிறார்கள், "சர்க்கார்
மாளிகை பறிபோய்விட்டதே, இனி சர்க்காரை எங்கிருந்து நாம்
நடத்துவது?'' என்று; ஜோரேஸ், பதிலுரைத்தான், "நாம் இருக்கும்
இடம்தான் சர்க்கார் மாளிகை! முன்பு கற்களால் கட்டப்பட்ட
மாளிகையிலிருந்துகொண்டு சர்க்காரை நடத்திவந்தோம்; அது
மீண்டும் நம் கைவசமாகும் வரை இந்த "வண்டி'தான் சர்க்கார்
மாளிகை!'' என்று.
கோபித்துக்கொள்ளப் போகிறார்கள்
தம்பி! பார்! பார்! இந்த அண்ணாத்துரை எத்தனை ஆணவத்துடன்
தன்னை ஜோரேசுடன் ஒப்பிட்டுக்கொள்கிறான் என்று. நான் கூறியதிலே
எனக்கும் ஜோரேசுக்கும் அல்ல; அந்த மாவீரன் சர்க்கார் மாளிகையாக,
வண்டியைப் பயன்படுத்திக்கொண்டது வரையிலே மட்டுமே உவமை
என்று கூறி, அவர்களின் கோபத்தைக் குறைத்துக்கொள்ளச் சொல்லிவிடு
- தம்பி! ஜோரேஸ், வண்டியைச் சர்க்கார் மாளிகையாக்கிக்கொண்டதுபோல,
நான், நிலைமை காரணமாக, காஞ்சி இதழை "திராவிட நாடு' இதழாகப்
பயன்படுத்திக்கொள்கிறேன்.
இரவு ஒரு மணிக்கு விழுப்புரம்
கூட்டத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பினேன் - அதற்குப்
பிறகும் தூக்கம் பிடிக்கவில்லை - மூன்று நாட்களாக, திருச்சி
- பெரம்பலூர் - விழுப்புரம் ஆகிய இடங்களில், இந்தி எதிர்ப்பு
அறப்போரில் ஈடுபட்டு, சிறை சென்று திரும்பிய தோழர்களை
வாழ்த்தி வரவேற்கும் விழாக்களில் கலந்து கொண்டதால் கிடைத்த
உற்சாகம் என்னைத் தூங்கவிட வில்லை. எத்துணை ஆர்வத்துடன்
இருக்கின்றனர் சிறை சென்று வந்துள்ள நம் தோழர்கள், மக்களின்
அன்பு எத்தகைய மன நெகிழ்ச்சியைத் தருகிறது! சிற்றூர்களிலே
எல்லாம் கூடக் காண்கிறேன் ஒரு புது எழுச்சி, மகிழ்ச்சி.
பல மிகக்கொண்ட ஒரு ஆட்சி, பிடிவாத உணர்ச்சியுடன் இந்தி
ஆதிக்கத்தைப் புகுத்தும்போது, இன்னமும் போதுமான அளவு இதழ்களின்
நல்லாதரவைப் பெற முடியாத நிலையிலே உள்ள நமது கழகம், துணிந்து
நின்று அந்த ஆதிக்கத்தை எதிர்ப்பது கண்டு, மக்கள் மனதாரப்
பாராட்டுகிறார்கள்.
இவர்களின் எதிர்ப்பும் இல்லை
என்றால். . .! என்று எண்ணிப் பெருமூச்செறிபவர்களும்,
இவர்களின் எதிர்ப்பினால்
அல்லவா, இந்தி ஆதிக்கக் காரர்கள், கருப்பஞ்சாற்றிலே குழைத்துத்
தருகிறார்கள் கடுவிஷத்தை என்று கூறுபவர்களும்,
இவர்களின் எதிர்ப்புக் கண்டும்,
சர்க்கார் தன் போக்கை மாற்றிக்கொள்ள மறுக்கிறதே என்று
கூறி ஆயாசப்படுபவர்களும்,
பாவம், இளைஞர்கள்! இன்பவாழ்வில்
ஈடுபடவேண்டிய வயதினர்! சிறைக்கொடுமைக்குத் தம்மைத்தாமே
ஆளாக்கிக் கொண்டார்கள்; அவர்கள் சிறையிலே மேற்கொண்ட இன்னல்களை
ஒரு நொடியிலே மறந்துவிடத் தக்கவிதத்தில், நமது இதயத்திலிருந்து
எழுந்திடும் அன்பினைச் சொரிவோம் என்ற உணர்ச்சி கொள்பவர்களும்,
நாட்டு மொழி, பாட்டு மொழி,
வீட்டு மொழி என்றெல்லாம் பிறர் பேசுகிறார்கள், விரிவுரையாற்றுகிறார்கள்,
போற்றுகிறார்கள், புகழாரம் சூட்டுகிறார்கள், எனினும் வேற்றுமொழி
வேங்கை எனப் புகுவதுகண்டு விரட்டிட முன் வருகிறார்களில்லை.
இந்த இளைஞர்களோ, எமது மொழியை அழித்திடவும், எமது வாழ்க்கை
நிலையினைக் கெடுத்திடவும் வந்திடும் இந்தியினை எத்தனை
இன்னல்கள் எமைத் தாக்கிடக் கிளம்பிடினும், எதிர்த்தே நிற்போம்
என்று சூளுரைத்துச் செயல் படுகின்றனரே; இத்தகையார் "இரண்டாங்கட்டிலும்'
இன்பத் தமிழ் அழிப்பார் கூடத்திலும் இருந்திடும் நிலை
உளதே; இந்தக் கொடுமையினை மாற்றிடும் நன்னாளே, பொன்னாள்,
அது எந்நாள், எந்நாள்? என்று ஆவலுடன் கேட்ட வண்ணமுள்ளனர்
பல்லாயிரவர்.
தம்பி! சிறை சென்று திரும்பிடும்
தோழர்களில் பலருக்கு உடல் நலிவு இருந்திடக் காண்கிறேன்
- நானே அப்படித்தான் - ஆனால் உள்ளப்பாங்கோ! நாம் தூய்மையான,
தேவையான, நியாயமான ஒரு அறப்போரில் ஈடுபட்டிருக்கிறோம்
என்ற எழுச்சிமிகு எண்ணத்தை உள்ளம் ஏந்திக்கொண்டிருக்கக்
காண்கிறேன் - பெருமிதம் கொள்கிறேன்.
சிறையிலே உடல்நலக் குறைவு
ஏதேனும் ஏற்பட்டதோ? - என்று கேட்கிறேன், விழுப்புரம் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் சண்முகம் அவர்களை - அவர் இளைஞர் அல்ல
- அவர் கூறுகிறார், "அதெல்லாம் இல்லை இருந்தாலும் பரவாயில்லை''
- என்று கூறும்போது முகத்திலே புதியதோர் பொலிவு மலரக்
காண்கிறேன். மருத்துவமனையில் கிடத்தப்பட்டிருந்த அன்பில்
தர்மலிங்கம் - இன்றும் முழு அளவு நலம் பெற்றுவிட்டார்
என்று கூறுவதற்கில்லை - அவரைக் கேட்கிறேன் என்ன? என்று,
"ஒன்றுமில்லை! நன்றாக இருக்கிறேன்'' என்கிறார்; வழக்கமாக
அவர் பார்வையிலே ஒரு மிரட்சி தெரியும், இப்போது ஒரு புது
விதக் கனிவே பிறந்திருக்கிறது சிறைச்சாலை அறச்சாலையாகி
விட்டிருக்கிறது, தம்பி! அங்குச் சென்று திரும்பியவர்கள்
செந்தமிழ்க்குத் தீமை வந்த காலை நாம் நம்மாலான செயலினைச்
செய்தோம் என்ற உணர்ச்சி பொங்கிடும் நிலை பெற்றுள்ளனர்
அறப்போர் வெற்றி ஈட்டித் தருகிறது என்பதற்கு இதனைச் சிறந்ததோர்
சான்றாக நான் கொள்கிறேன். சிறைக்கஞ்சா உள்ளமும், சிறைக்
கொடுமைகளைக் கண்ட பிறகும் சலிப்புப் பெறாத மனமும் ஏற்பட்டுக்கொண்டு
வருவது, கழகத்திற்குக் கிடைத்திடும் புதியதோர் கருவூலமென்பேன்.
இத்தகைய அறப்போர் வீரர்தம்
மனப்போக்கு பற்றியே ஆங்கிலக் கவிஞரொருவர்,
கருங்கற் சுவரும் காவற்
கூடமாகுமோ
இரும்புக் கம்பியும் பெருஞ் சிறையாகுமோ
தூய்மை மனத்தன் விடுதலை வீரன் புகும்
சிறைச்சாலை தானும் அறச்சாலை ஆகுமே.
என்று கூறினார்.
இத்தகைய மனப்பான்மையின்
மாண்பினை அறிந்துகொள்ள இயலாதார் கடாவுகின்றனர், "போராட்டமா!
எப்போது வெற்றிபெறும்'' என்பதாக.
காகிதத்தால் பூ செய்து,
அதற்குக் கவர்ச்சிமிகு வண்ணம் பூசி, சிறிதளவு நறுமணமும்
தடவி, அங்காடிக்குக் கூடை கூடையாகக் கொண்டு செல்வது எளிது
- நேரமும் அதிகம் பிடிக்காது. ஆனால் அதனை எவர் கொள்வர்?
எதற்கு அது பயன்படும்? காகித மலர்க்குவியல் கடை நிரம்ப
வைத்திருக் கின்றேன், காணவாரீர்! பெற்றுச் செல்வீர்! பெருமகிழ்வு
கொள்வீர்! என்று கூவிக்கூவி விற்றாலும், அந்த இடத்தைப்
பூக்கடை என்று எவரும் கூறிடார். எளிதாகச் செய்திடக்கூடியது
காகிதமலர் - மல்லியும், முல்லையும், மருக்கொழுந்தும் பிறவும்
எளிதிலே கிடைத்திடத்தக்க முறை இல்லை. பாத்தி எடுத்து,
பண்படுத்தி, பதியம் வைத்து, பலநாள் பாடுபட்ட பிறகே, மலர்
கிடைத்திடும். கரத்திலே முள் தைக்கும், காலிலே கல் தாக்கும்,
கோடையின் கொடுமை, மாரியின் மருட்டுத் தன்மை என்பவைகளைத்
தாங்கிக்கொள்ள வேண்டும், மணமிகு முல்லை பெற; கிடைத்திடின்
மணம் இனிமை தரும், கிடைக்கு முன்பு பொறுமையுடன் வேலை செய்தாக
வேண்டும்.
நாம் மேற்கொண்டுள்ள செயல்,
காகிதப்பூ செய்திடுவது போன்றது அல்ல; முல்லை பூத்திடும்
பூங்கா அமைப்பது போன்றதாகும். பல்வேறு வகையான வலிவினைத்
தேக்கி வைத்துக்கொண்டு, துரைத்தனத்தார், இந்தி ஆதிக்கத்தைப்
புகுத்துகின்றனர்; அதனை எதிர்க்கும் நம்மிடம், தூய்மையும்,
நேர்மையும், அஞ்சாமையும், துவளாமையும், அவசரப்படாத தன்மையும்,
நம்பிக்கையும் படைக்கலன்களாக உள்ளன. இந்த இரு தரப்புக்கும்
இடையில் எழும் "போராட்டம்', முள்ளு முனையிலே மூன்று குளம்
வெட்டிடும் மாயத்தைத் துணைகொண்டது அல்ல; பிடி சாபம்! என்று
சபித்திடும் தபோபலத்தைத் துணைக் கொண்டதும் அல்ல. தொடர்ந்து
பணியாற்றுவது, துவளாமல் கிளர்ச்சி நடத்துவது, பொறுப்புடன்
அறப்போர் நடாத்துவது எனும் முறையில் அமைந்திருப்பது. வெள்ளியன்று
விதை தூவி செவ்வாயன்று அறுவடை செய்திடும் விதமாக ஒரு விசித்திர
வெற்றியை இதிலே, ஏமாளிகளன்றிப் பிறர் எதிர்பார்க்க மாட்டார்கள்.
காலம் வரவேண்டும்; காலம் கனிய வேண்டும்; காலத்தைக் கனிந்திடச்
செய்ய வேண்டும், வெற்றியை ஈட்டிட. தம்பி! நமது தோழர்களின்
தியாக உணர்வு, காலத்தைக் கனிந்திடச் செய்யும் என்பதிலே
எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது; நான் சிறைமீண்டு,
கலந்துகொண்ட விழாக்கள் என் நம்பிக்கையை மேலும் வலுவுள்ளதாக்கி
இருக்கிறது.
ஒரு இயக்கம், எதிர்ப்பைத்
தாங்கிக்கொள்ள, சில காலத்திற்கெல்லாம் பயிற்சி பெற்றுவிடும்,
பக்குவம் பெற்றுவிடும். ஆனால், ஏளனத்தைத் தாங்கிக்கொள்ளும்
மனப்போக்கு எளிதில் வளராது; அதிலும் எதையேனும் மென்று
தின்றபடி காலத்தைக் கொன்று கிடப்பவர்கள், இடம் தமதாக ஏதேதோ
செய்து பார்த்துக் கிட்டாது போகும்போது எட்டடுக்கு மாடியிலே
பெட்டி தூக்கும் வேலையேனும் பெற்று, மேலிடம் சென்று விட்டேன்
என்று நாநடம்புரிபவர்கள், ஏளனமொழியினை எடுத்து வீசிடும்போது,
கனகமணிக் கட்டி-லே படுத்துத் துயிலும் காதற் கிழத்தியையும்
அவள் ஈன்ற கனியையும் விட்டுப் பிரிந்து, காரிருளில் கானகம்
சென்று, ஊர் அழிக்கப் புறப்பட்ட கடும் புலியை வேட்டையாடச்
சென்றிடும் வீரன்போல, இனிக்க இனிக்கப்பேசி, இல்லமதில்
இருந்திட வாய்ப்பும் வசதியும் நிரம்பப் பெற்றிருந்தும்,
கடுஞ்சிறை ஏகியேனும் கன்னித் தமிழ் காத்திடுவோம் என்று
கடமை உணர்ச்சியுடன் பணியாற்றி வருபவரை ஏளனம் பல பேசிடும்போது,
தாங்கிக்கொள்வ தென்பது மிகமிகக் கடினம் - ஆனால், தாங்கிக்கொண்டாலன்றி
அந்த இயக்கம் தணலில் தங்கம்போலாவது முடியாது - ஆகவே, தாங்கிக்கொள்ளத்தான்
வேண்டும் என்று நான் கூறியபோது கேட்டுக் கொதித்தவரும்
கோபம் கொப்பளிக்கும் நிலை பெற்றவரும் உண்டு - என்றாலும்,
என்னிடம் அவரெலாம் கொண்டுள்ள உள்ளன்பு காரணமாக, என்ன செய்வது!
சொல்கிறான் அண்ணன்! சோற்றுத் துருத்திகளின் சொல்லம்பைத்
தாங்கிக்கொள்வோம்! என்று முடிவெடுத்து, தாங்கிக்கொள்ளும்
உரம்பெற்றுவிட்டனர். நமது கழகம் இந்தக் கட்டம் சென்றிருப்பதனை
நான் மிகமிக முக்கியமானதாகக் கொள்கிறேன்.
ஏளன மொழி எரிச்சலூட்டும்
- எரிச்சல் நம்மைச் சுடுசொல் வீசிடுவோராக்கிவிடும் - சுடுசொல்
வீசிடினோ, நாம், சோர்வகல மது அருந்திட முனைவோன் இறுதியில்
தானே மதுக்குடமாகிடுதல்போல, சுடுசொல் விசிட முனைந்துவிட்டால்,
தெளிவு, கனிவு, அறம், அன்பு, நெறி, நேர்மை யாவும் பட்டுப்போய்விடும்.
குறிக்கோள் கெட்டுப் போய்விடும், நாடு நம்மைக் கைவிட்டுவிட்டு,
இவனும் காட்டானாகத்தான் இருக்கிறான்! ஆந்தை அலறுவதை ஆயிரமுறை
கேட்டிடினும் குயில் தன் குரலோசையை மாற்றிக்கொள்கிறதா!
எவரெவரோ ஏளனமொழியில் பேசுகிறார், ஏசுகிறார் என்பதற்காக,
இவர்கள் வெகுண்டு அதே முறையை, அதே மொழியை மேற்கொள்வதா?
மேற்கொள்கிறார்கள் எனின், இவர்கள் அவர்கள் போன்றார் என்பதன்றி
வேறென்ன கூறமுடியும் என்று தீர்ப்பளித்திடும். நமது தோழர்கள்
இந்தத் தெளிவு பெற்றதால், தூற்றுவோர் தூற்றட்டும், அதிலும்
இவர்கள் துதிபாடிக்கிடந்தவர்கள் இன்று தூற்றித் திரிகிறார்கள்,
இதனை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை, அவர்கள் நாப்பறை
கொட்டட்டும், நாம் நமது யாழொலியைக் கெடுத்துக் கொள்ளலாகாது
என்ற உறுதி பெற்றுவிட்டனர்.
எதிர்ப்பு, ஏளனம் எனும்
இரு கூராயுதங்களும் முனை மழுங்கிப் போய்விட்டதனை, தம்பி!
நாமே காண்கின்றோம்; களிப்பும் கொள்கின்றோம். சிலர், தமது
முறை பலன் தரவில்லை என்பதனை அறிந்தும், வேறு முறை அறியாத
காரணத்தால், பொய்த்துப்போன முறையையே மேற்கொண்டுள்ளனர்
- இன்னமும். மக்கள் விரும்பவில்லை, கொள்ள மறுக்கின்றனர்
என்பதை அறிந்த பின்பும் காஞ்சிரம், தன்னிடம் சுவை கூட்டிக்
கொள்ள முடிகிறதோ!
ஆனால், எனக்குத் தம்பி!
நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. தமது நடையும் முறையும்
பலன் தாராததனை உணர்ந்து ஓர் நாள் வெட்கித் தலைகுனிந்து
தமது நெஞ்சத்துக்குத் தாமே வேண்டுகோள் விடுத்துக்கொள்ளப்
போகின்றனர், இன்று வாய் வலிக்க வம்பு பேசிடுவோர்.
அவர்கள் அந்நிலை பெறினும்
பெறாது போயினும், ஏளனத்தையும் ஏசலையும் தாங்கிக்கொள்ளும்
மனநிலை நமக்குக் கிடைத்திருப்பதை நாம் மாற்றிக்கொள்ளலாகாது
- புள்ளிமான் காட்டுப்பன்றியின் உறுமலைப் பெறாது - எந்நாளும்.
எரிச்சலூட்டும் ஏளனம் பலனற்றது
கண்டவர்கள், இட்டுக் கட்டுவதும், ஒட்டி உருவாக்குவதும்,
பலன் தருமென்று கருதி, அந்த "வித்தை'யையும் செய்து காட்டுகின்றனர்
- அதிலும் அவர்கள் காண்பது தோல்வியே.
போராட்டம் வலிவிழந்துவிட்டது,
பொலிவிழந்து விட்டது, போற்றுவார் இல்லை, துணை நிற்பார்
இல்லை, பிசுபிசுத்துவிட்டது, மதமதத்துவிட்டது என்றெல்லாம்
பேசிப் பார்க்கின்றனர்.
இந்தியை எதிர்த்து இத்தனை
வீராவேசமாகப் பேசுகிறார்களே இந்த வாய்ச்சொல் வீரர்கள்!
கச்சையை வரிந்து கட்டிக்கொண்டு களம்புகாமல், கவாத்து பழகுவதும்,
அணிவகுப்பு நடாத்துவதும், கருத்தறிவதும் என்ற முறையில்
காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்களே, கவைக்குதவாதார்!
கண்டீரே! காளையர்காள்! கடுங்கோபம் எழவில்லையோ உமக்கு!
வழி காட்டத் தெரியாதவர்களை நம்பி நாசமாகிறீர்களே! போர்!
போர்! என்று முழக்கமிடுங்கள்; புறப்படு! புறப்படு! என்று
எக்காளமிடுங்கள்! புறப்படாவிட்டால், வெளியேறுங்கள்! வீரர்கள்
நிரம்ப உள்ள கோட்டம் வாருங்கள்! என்றெல்லாம் வீரம் பேசினவர்களை
நாடு பார்த்தது; நாம் போரிடமாட்டோம், நமக்கு இல்லை அதற்கான
நாடி முறுக்கு என்று சிலராவது நம்புவார்களா என்று மோப்பம்
பிடித்துக் கிடந்தவர்களையும் நாம் அறிவோம்! இன்றோ நாம்
போரில் ஈடுபட்டிருக்கிறோம் இந்தி ஆதிக்கத்தால் ஏற்படும்
பொல்லாங்கினை எதிர்த்து; துந்துபி முழக்கினோர், கொம்பு
ஊதினோர், என்ன செய்கின்றனர்? எதற்காக இந்தப் போராட்டம்
- தேவை இல்லை - பொருள் இல்லை - என்று பேசுகின்றனர்!! நாடு
நகைத்திடாதிருக்க முடியுமா? நாட்டிலுள்ளோரில் சிலருக்கேனும்
தோன்றாதா, "வீரப்பா! வீரப்பா! வெட்டிப் பேச்சு ஏனப்பா!
இந்தி எதிர்ப்பு பொது அப்பா! சந்து நின்று நீ சொன்னதப்பா!!
கொளுத்துகிறார் கழகத்தார்! இந்தி ஆதிக்கத்தைக் கொளுத்தி
வீரம் நிலைநாட்டப்பா! தூற்றித் திரிவது போதுமப்பா, தொடுத்திடப்பா
இந்தி எதிர்ப்புப் போர்!!'' என்று கேட்க. ஆனால் யாரும்
கேட்கவில்லை - ஏனென்கிறாயோ தம்பி - கேட்பதே நேரக்கேடு
என்று கருதுகிறார்கள்! அறப்போரில் ஈடுபடுகிறார்கள் ஆர்வமிக்கோர்;
நிலைமை காரணமாக அறப்போரில் ஈடுபட இயலாதவர்கள் ஆதரவு தருகின்றனர்;
சிறைசென்று திரும்பிடும் செம்மல்களை வாழ்த்தி வரவேற்கிறார்கள்;
கழுத்தை நெரித்துக் கொன்று போடும் துணிவு இந்த நெஞ்சத்துக்கும்,
வலிவு இந்தக் கரங்களுக்கும் உண்டு என்று முழக்கமிட்டவர்கள்
இந்தி ஆதிக்கம் புகுத்திடுவோரின் காற்சிலம்பின் ஓசைபற்றிப்
பாடுகின்றனர், ஒய்யாரம்பற்றிப் பேசுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம்
அமைதியான அரசியலில் ஈடுபட்டிருக்கும்போது, வீரதீரம் அற்றது
இந்தக் கழகம், வெட்டிப் பேச்சுப் பேசிக்கொண்டிருக்கிறது
என்று கூறுவதும், காலமறிந்து கடமை உணர்ந்து, கஷ்ட நஷ்டம்
ஏற்கும் துணிவுடன் கிளர்ச்சி நடாத்திடக் கிளம்பிடும்போது,
எதற்கு வீண் ஆரவாரம்! எதற்கு இந்த அமளி! போராட்டத்திற்குப்
பொருள் இல்லை! என்று பேசுவதும், மயக்க மொழி கேட்டு மெய்யென
நம்பிக்கொள்பவர்களிடம் சென்று கழகத்தின் கொள்கை, செயல்முறை,
கிளர்ச்சி ஆகியவைபற்றி ஐயப்பாடுகளை மூட்டி விடுவதுமான
காரியத்தைத் தமது "அபாரமான' திறமையைத் துணைகொண்டு அமைச்சர்கள்
செய்து பார்க்கிறார்கள்.
போர் என்கிறார்களே, எங்கே
நடக்கிறது, போர்!
வெற்றி என்கிறார்களே, எங்கே
தெரிகிறது அந்த வெற்றி! எல்லாம் பொய்யுரை! கற்பனை! மனப்பிராந்தி
- என்று பேசிப் பார்க்கின்றனர்.
காலமறிந்து, நிலைமை புரிந்து,
தன்வலி மாற்றார் வலி சீர்தூக்கிப் பார்த்து, கழகம் தன்
செயல் முறைகளை வகுத்துக் கொள்கிறது. வரிசைப்படுத்திக்கொள்கிறது,
நிலைத்து நின்று பணிபுரிய, எவ்வப்போது என்னென்ன விதமான
முறைகளை மேற்கொள்ளவேண்டுமென்று, திட்டமிட்டுப் பணியாற்றி
வருகிறது இந்த முறை காரணமாக, மாற்றார் வெட்டிடும் படுகுழியில்
வீழ்ந்து அழிந்துபடாமல், சூது வலையில் சிக்கிடாமல். முன்பின்,
வலம், இடம், மேல் கீழ், தன்வலி, துணைவலி, காலம் நிலைமை
என்பவைகளைக் கணக்கெடுத்து, எதனை எப்போது எவ்விதம் எவரெவர்
செய்து முடிப்பது என்று திட்டம் வகுத்துக்கொண்டு செயலாற்றுகிறது.
இதனைத் திரித்துக் கூறியும் வருகின்றனர், மக்கள் தெளிவு
பெறமாட்டார்கள் என்ற தப்பு எண்ணத்தில்.
பொய்! பொய்! முழுப்பொய்!
கலப்படமற்ற பொய் - என்று உரத்த குரலிலே கூவினான் - கோபம்
அல்ல - கோபம் கொண்டவன்போல! "மூட்டி விடுவான்!''
எது பொய்? என்ன பொய்? என்று
சிறிது அச்சத்துடன் கேட்டான், கேட்டு மருள்வான்.
என்ன சொன்னான் உன்னுடைய
மன்றத்தான்? என்று கேட்டான் மூட்டிவிடுவான்; திருக்குளத்தில்
செந்தாமரை மலர்ந்து இருக்கிறது, அழகாக! என்று சொன்னானல்லவா?
என்றான்.