இத்திங்கள்
16, 17 ஆகிய நாட்களில் கோவையில் நடந்த தி.மு.க. தேர்தல்
சிறப்பு மாநாட்டில் அண்ணா அவர்கள் ஆற்றிய தலைமை முடிவுரை
வருமாறு:
“தமிழ்ப் பெருங்குடி மக்கள்
தமிழகத்திலேயிருந்து வெளி மாநிலங்களிலே வாழ்கின்றவர்களும்.
வெளி நாடுகளுக்குச் சென்றிருக்கின்றவர்களும், தங்களுடைய
நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களிடத்திலே
நல்ல நம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்பதையும், அவர்களெல்லாம்
எதிர்பார்க்கின்ற அளவிலேயும், தன்மையிலேயேம், திராவிட முன்னேற்றக்
கழகம் மகத்தான வெற்றியைப் பெற்று நல்வாழ்வு ஏற்படுத்த வேண்டுமென்பதைப்
பற்றியும் எடத்துக் குறிப்பிட்டதை நீங்கள் நினைவிலே வைத்திருப்பீர்கள்
என்று நான் கருதுகிறேன்.
அப்படிப்பட்ட ஒரு நல்ல தேர்தல்
வெற்றியைப் பெற வேண்டுமானால் அடுத்து வரவிருக்கின்ற தேர்தலில்
காங்கிரசுக் கட்சிக்கு எதிரிடையாக உள்ள வாக்குகள் வீணாகச்
சிதறிவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் திராவிட
முன்னேற்றக் கழகம் அக்கறையோடு ஈடுபடுவதைப் போல் மற்றக் கட்சிகளும்
ஈடுபட வேண்டுமென்பதை நான் வலியுறுத்திக் சொன்னேன்.
ஒத்துழைப்பு எப்பொழுதும் கிடைத்தே
தீரும்
அதே நோக்கத்திலே மற்றப் பல
கட்சிகளும் கடந்த சில மாதங்களாகவே அக்கறை காட்டிக்கொ்டு
வருகின்றன குறிப்பாகவும், சிறப்பாகவும் கம்யூனிஸ்டு நண்பர்கள்
நம்முடைய கழகத் தோழர்களிடத்திலே இதுகுறித்துப் பல நாட்கள்
பேசிக்கொண்டு வந்ததை நேற்றைய பொதுக் குழுவிலே நம்முடைய நண்பர்கள்
எடுத்து விளக்கினார்கள். சில தொகுதிகளிலே அவர்களும் இடம்
கேட்டு, நமக்கும் அதே தொகுதிகளில் வாய்ப்பு இருக்கிறது என்று
சொல்லி, அத்தகைய தொகுதிகள் அவர்களுக்கா, நமக்கா என்பதிலே
பேச்சுவார்த்தையில் ஓரளவிற்கு நெருக்கடி நிலைமை இல்லை என்று
சொல்வதற்கில்லை. இருந்தாலும் மேற்கொண்டு பேசவேண்டிய கட்டம்
ஏற்பட்டிருக்கின்றது. அது தொடர்ந்து நடக்குமென்று உறுதியாக
நம்புகிறேன்.
இதுவரையிலே நான் அநத் விஷயத்தில்
பேச்சுவார்த்தைகளில் எப்படி ஈடுபடாமல் இருந்தேனோ, அதைப்போலவே
அதற்காக அமைக்கப்பட்டிருக்கின்ற மூவர் குழுவும், கம்யூனிஸ்டுக்
கட்சிச் சார்பில் வருகின்ற நண்பர்களுடன் தொடர்ந்து அந்தப்
பேச்சிலே ஈடுபடுவார்களென்று நான் உறுதியாக நம்பி, என்னுடைய
ஒத்துழைப்பும், ஆலோசனையும் அவர்களுக்கு எந்த நேரத்தில் கிடைக்க
வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அந்த நேரத்திலேயெல்லாம்
கிடைக்கும் என்பதையும் இந்த நேரத்தில் நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
தேவையற்றது, தீதானது!
அதைப்போலவே, காங்கிரசை எதிர்க்கக்கூடிய
காங்கிரசை வீழ்த்தக்கூடிய, நாட்டிலே நல்ல தொடர்பு கொண்ட
எல்லாக் கட்சிகளும் தங்களுக்குள்ளே இருக்கின்ற கொள்கை விரோதங்கள்
தங்களுக்குள்ளே இருக்கின்ற கொள்கை முரண்பாடுகள் இவைகளை இந்தப்
பிப்ரவரித் திங்கள் வரையில் ஓரளவிற்கு மறந்துவிட வேண்டுமென்று
நான் பெரிதும் ஆசைப்படுகிறேன்.
பொதுவாகத் தமிழ்நாட்டு அரசியல்
மேடைகளில் ஒரு கட்சி மற்றொரு கட்சியைப் பற்றிப் பேசுவதென்பது,
ஆளுகின்ற கட்சியாலே நாட்டிற்கு ஏற்பட்ட அல்லலைப் பற்றியும்,
ஆளுகிற கட்சியாயிருக்கிற காங்கிரசுக் கட்சி எப்படி எதேச்சாதிகாரத்திலே
ஈடுபட்டிருக்கிறதென்பதையும் எடுத்து விளக்குவதைத் தங்களுடைய
பேச்சின் முக்கியப் பகுதியாக எல்லாக் கட்சிகளும் கொள்ள வேண்டுமே
தவிர, ஒரு கட்சிக்கு இன்னொரு கட்சிக்கும் இருக்கிற வித்தியாசத்தைப்
பற்றி மேடைகளிலே பேசிக் கொண்டிருப்பது பிப்ரவரி திங்கள்
வரையில் தேவையற்றது தீதானது குழப்பத்தை விளைவிக்கத் தக்கதென்று
நான் மனதார எண்ணுகின்றேன்.
அதனால், மற்ற எந்த அரசியல்
கட்சிகளும் தங்களுடைய அடிப்படைக் கொள்கைகளை வி்ட்டுவிடத்
தேவையில்லை, உதாரணமாக, “இந்தியா ஒரு நாடாக இருக்க வேண்டும்
– இந்தியாக துண்டாடப்படக் கூடாது – திராவிடநாடு என்பது தேவையற்றது“
என்று கம்யூனிஸ்டுக் கட்சி கருதுகிறது. சுதந்திரா கட்சி
கருதுகிறது. வேறு பல கட்சிகளும் இந்த எண்ணத்தைக் கொண்டிருக்கின்றன.
நேச உறவு பலப்படும்
அதன் காரணமாக அவர்கள் தேர்தல்
பிரச்சார மேடைகளில் தங்களுடைய கருத்துக்களை வலியுறுத்த வேண்டும்
என்ற எண்ணத்தில், திராவிட நாட்டுப் பிரிவினையை அவர்கள் தாக்கிப்
பேசாமலிப்பது, நமக்குள்ளே ஏற்படக் கூடிய நேச உறவைப் பலப்படுத்துவதாக
இருக்க முடியும்.
அதைப்போலவே கம்யூனிஸ்டுக்
கட்சியினுடைய கொள்கைகளில் சிலவற்றிலே திராவிட முன்னேற்றக்
கழகத்திற்குப் பலமான கருத்து வேற்றுமை இருக்கிறது. சுதந்திராக்
கட்சியினுடைய கொள்கைகளில் திராவிட முன்னேற்றக் கழ்கத்திற்கு
நீக்கப்பட முடியாத கருத்து வேற்றுமை இருக்கிறது இவைகளைப்
பற்றி நம்முடைய மேடைகளிலே நாம் – எங்களுக்கும், கம்யூனிஸ்டுக்
கட்சிக்கும் இன்னின்ன வகையிலே வித்தியாசம் இருக்கிறது. சுதந்திராக்
கட்சிக்கும் இன்னின்ன கொள்கைகளிலே மாறுபாடு இருக்கிறது என்று
எடுத்துப் பேசிக் கொண்டிருப்பது, நேரக்கேடு என்பது மட்டுமல்ல
அது நேசக் கேடாகவும் முடியும்.
அரசியல் பண்பாடு அவசியம்!
திராவிட முன்னேற்றக் கழகம்
தனக்கம், மாற்றுக் கட்சியாக உள்ள மற்றக் கட்சிகளுக்கும்
இருக்கின்ற கருத்து வேற்றுமைகளைப் பற்றிப் கபொதுவாகவே மேடைகளில்
பேசுவதில்லை.
அதிலும் குறிப்பாக நான் பேசிக்கொண்டு
வருகின்ற முறையைப் பின்பற்றுகின்ற தோழர்கள், அதே முறையில்
பேசிக்கொண்டு வருவதை நீங்கள் கவனித்தால் இதனை நன்றாகத் தெரிந்து
கொண்டிருக்கலாம்.
காங்கிரசு ஆட்சியிலே உள்ள
கேடுபாடுகளைத்தான் நாங்கள் மிக அதிகமாக எடுத்துக்கொண்டு
வருவது வாடிக்கையாக இருக்கிறதே தவிர, காங்கிரசை எதிர்க்கக்
கூடிய எங்களிடத்திலேயிருந்து மாறுபட்ட மற்றக் கட்சிகளைப்
பற்றி நாங்கள் அதிகம் பேசுவதில்லை. அப்படிப்பட்ட அரசியல்
பண்பாட்டினைப் பிப்ரவரி திங்கள் வரையில் மற்ற மாற்றுக் கட்சிகளும்
மேற்கொள்ள வேண்டுமென்று நான் நிச்சயமாக அவர்களை வேண்டிக்
கேட்டுக் கொள்கிறேன்.
காலத்தைக் கடத்தினர்
ஏனென்றால், சட்டசபையைப் பொறுத்தவரை
காங்கிரசுக் கட்சியை நான் மெத்த வருத்தத்தோடு கவனித்து வந்திருக்கிறேன்.
நாங்கள் ஒரு கருத்தை வலியுறுத்தினால் கம்யூனிஸ்டுக் கட்சியும்அந்தக்
கருத்திலே வேற்றுமைஇருந்தால் பேசுகின்ற நேரத்தில் எங்களுடைய
கருததை மறுப்பார்கள்.
நாங்கள் ஒரு கருத்தை வலியுறுத்தினால்
பிரஜா சோலிஸ்டுக் கட்சிக்கு அதிலே கருத்து வேற்றுமை இருந்தால்
அவர்கள் அதை எடுத்த மறுப்பார்கள்.
அதைப்போலவே அவர்கள் சொல்வதில்
எங்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்தால் எங்கள் கழகத் தோழர்கள்
எழுந்திருந்து அதை மறுத்துப் பேசுவார்கள். இதை எதிரிலிருந்து
கேட்டுக் கொண்டிருக்கின்ற காங்கிரஸ் அமைச்சர்கள், மிக நிம்மதியான
சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு இருப்பதுபோல் அமர்ந்து
கையைக் காட்டி – இவருக்கு அவர் பதில் சொல்வார். எங்களிடத்திலே
வருவதற்குள் எல்லோரும் களைத்துப் போவார்கள் என்ற எண்ணத்திலே
கடந்து ஐந்து ஆண்டுகளாகக் காலத்தை ஓட்டி வந்திருக்கிறார்கள்.
ஓரளவுக்கு நிறுத்துவீர்!
அதே சூழ்நிலை வெளியிலே ஏற்படக்கூடாது
என்பதற்காகத்தான் அரசியல் கட்சிகள் தங்களுக்குள்ளே இருக்கிற
கருத்து வேற்றுமைகளைப் பேசிக் கொள்கின்ற கட்டத்தை ஓரளவு
நிறுத்தி வைத்து, பொதுத் தேர்தல் வருகின்ற காரணத்தினால்
இந்த ஐந்தாண்டுகளில் மட்டுமல்லாமல் பதினைந்து ஆண்டுகளிலே
காங்கிரசுக் கட்சியினுடைய ஆட்சியில் மக்களுக்குக் கிடைத்தவை
யாவை மக்கள் எதிர்ப்பார்த்தவை கிடைக்கப் பெற்றனவா? எந்த
வகையிலே காங்கிரசுக் கட்சியின் ஆட்சியில் அடக்குமுறை அவிழ்த்து
விடப்பட்டிருக்கிறது. விலைவாசிகள் எந்த விதத்திலே கட்சிகளும்
பேசவேண்டுமென்று நான் பொதுவாக எல்லா மாற்றுக் கட்சிகளையும்
பணிவன்போடும் சொந்த உரிமை உணர்ச்சியாடும் விரும்பி வேண்டிக்
கேட்டுக் கொள்கிறேன்.
அந்த வகையிலே ஒரு நேசத் தொடர்பு
இருக்குமானால் நான் நேற்றைய தினம் தெரிவித்ததைப்போல் 1962ஆம்
ஆண்டுத் தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சியினுடைய எதோச்சாதிகாரத்தைத்
தடுத்து நிறுத்தக்கூடிய – அடியோடு ஒழித்துக்கட்டக்கூடிய
கட்டம் திடீரென்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். ஆனால் அது ஏற்படவில்லை
யென்றாலும், தடுத்து நிறுத்தக்கூடிய கட்டம் 1962 தேர்தலிலே
நிச்சயம் ஏற்படுமென்று நான் உறுதியாக நம்பிக்கொண்டிருக்கிறேன்.
உதாரணத்திற்கு ஒன்று!
எப்பொழுதுமே என்னைப் பொறுத்தவரையில்
நான் போடுகின்ற கணக்குகளைச் சற்றுக் குறைவாகத்தான் போடுவது
வாடிக்கை. அதிகக் கணக்குப் போட்டுவிட்டு ஏமாற்றமடைவதை நான்
வாடிக்கையாக வைத்துக் கொண்டிருப்பதில்லை. உதாரணத்திற்குச்
சொல்ல வேண்டுமானால், சென்னை மாநாகராட்சி மன்றத் தேர்தல்
நடைபெற்ற நேரத்தில் நூறு இடங்களுக்குத் தோழர்கள் போட்டியிட்ட
காலத்தில் நான் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன், ஐயோ, அத்தனை
இடங்களுக்கு நிற்காதீர்கள். வெற்றிபெற வாய்ப்பில்லை. என்றெல்லாம்
எடுத்துச் சொன்னேன் என்னிடத்திலே அவர்க்ளுக்குள்ள அன்பு
உணர்ச்சியையும், மரியாதை உணர்ச்சியைம் காட்டுவதன் மூலமாக
என்னிடத்திலே அவர்கள், நீங்கள் சொல்லி விட்டால் நாங்கள்
நிற்காமலே இருக்கிறோம். பல இடங்களை விட்டு விடுகிறோம் என்று
சொன்னார்கள். அவர்களுடைய அன்பிற்கம் நேர்மைக்கும் கட்டுப்பட்ட
நான் உங்களுடைய விருப்பப் படியே நில்லுங்கள் என்று சொன்னேன்.
ஆனால் அப்பொழுது கூட அவர்கள் இந்த அளவிற்கு வெற்றி பெறுவார்களென்று
நான் எதிர்பார்க்கவில்லை.
தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த
அன்றைய தினம் கூட நான், சென்னை நகரத்திலே பல்வேறு வட்டங்களைச்
சுற்றிப் பார்த்து வருகின்ற பொழுது, கூடவந்த நண்பர்கள் கேட்டார்கள்
– இந்த வட்டத்திலே வெற்றி கிடைக்குமா? என்று. இங்கே ஒன்றும்
வெற்றி கிடைக்காது, சும்மாதான் என்று பெரும்பாலான இடங்களைப்
பொறுத்தவரையில் நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மாநகராட்சியைப் கைப்பற்ற...
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட
அன்றைய தினம் நான் காஞ்சிபுரத்திலே இருந்து புறப்படுகிறபொழுது,
ஐந்து இடங்களில் நமக்கு வெற்றி என்று சொன்னார்கள். பரவாயில்லை.
ஐந்து பேராவது இருக்கிறாக்ள் என்று திருப்தியோடு, நான் மோட்டாரிலே
செங்கற்பட்டிற்குப் போனேன். அங்கு எனக்கு ஆசைவிடவில்லை.
இப்போது எத்தனை? என்று கேட்டேன். காஞ்சிபுரத்திலே இருந்தபோது
ஐந்து என்று இருந்த எண்ணிக்கையைச் செங்கற்பட்டில் பன்னிரண்டு
என்கிறார்கள். பரவாயில்லை – பன்னிரண்டு பேராவது வந்திருக்கிறார்கள்
என்று கொஞ்சம் நிமிர்ந்து விழுப்புரம் வரைவில் போனேன் –
விழுப்புரம் போய்க் கேட்டவுடனே முப்பது என்றார்கள். நான்
பயந்தேன். ஏன் பயப்பட்டேன் என்றால், அன்றைய தினம் நான் திருவாருர்
வரை போக வேண்டும். அங்கு போவதற்குள்ளாக இன்னும் எத்தனை பேர்கள்
வந்துவிடுவார்களோ. வந்து விடுவதென்றால் மாநகராட்சியைக் கைப்பற்ற
வேண்டும் என்பார்களே என்ற கவலையால்தான்.
திருவாரூரில் என்னை வரறேற்ற
நம்முடைய கருணாநிதி அவர்கள். என்ன அண்ணா, நான் சொன்னது எப்படி
என்றார். என்ன ஐயா? என்றேன். நாற்பது இடங்களுக்கு மேல் வெற்றி
பெற்றுவிட்டோம். மேயர் நாம்தான் என்றார்.
நான் அவருடைய ஆசையைக் குறைக்க
வேண்டும் என்ற எண்ணத்தில், அன்றுமாலை பேசிய பொதுக் வட்டத்தில்
நாங்கள் பெருவாரியான இடங்களிலே வெற்றிபெற்று வந்திருக்கிறோம்
என்றாலும. நாங்கள் நிச்சயமாக மேயர் பதவிக்கு ஆசைப்படவில்லை
என்று அப்போது சொன்னேன். அப்படிச் சொன்னதன் மூலம் நம்முடைய
தோழர்கள் அந்த ஆசையை விட்டுவிடுவார்கள் என்ற எண்ணிக் கொண்டிருந்தேன்.
அவசியம் ஏற்பட்டதேன்?
ஆனால் இவர்களே சொல்லி எழுதப்பட்டிருந்ததோ
அல்லது தானாக எழுதினார்களோ எனக்கும் தெரியாது. மெயில் பத்திரிகை
ஒரு தலையங்கமே எழுதிவிட்டது. அதில் இவ்வளவு இடங்களில் வெற்றி
பெற்ற பிறகு, பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள விருமபுவதும்
மேயர் பதவி வேண்டமென்று சொல்வதும், ஒரு பொறுப்புள்ள அரசியல்
கட்சிக்கு அழகல்ல என்ற அளவில் தத்துவார்த்தமாக எழுதியது.
ஆகையால் மேயர் பதவியை நாம் கைப்பற்ற வேண்டிய அவசியம் வந்தது.
நான் இதை எதற்குச் சொல்கிறேன்
என்றால், அதிக இடங்கள் வராது என்றுதான் எப்போதும் கருதுவது
வாடிக்கை. என்னுடைய சுபாவம் அப்படி ஆனால், கழகத் தோழர்கள்
நான் பத்து வருமென்று எதிர்பார்த்தால் முப்பதாகப் பொற்றுத்
தருவதை மாநகராட்சித் தேர்தலில் காட்டியிருக்கிறார்கள்.
அதைப்போல், இந்தப் பொதுத்
தேர்தலிலும், நான் எதிர்பார்ப்பதைப்போல் நல்ல பல வெற்றிகள்
கிடைத்து ஆட்சி மன்றத்தைக் கைப்பற்றத் தகக் வாய்ப்புகள்
ஏற்பட்டாலும் ஏற்பட்டு விடக்கூடும். அது ஏற்படுகிறதோ இல்லையோ
– காங்கிரஸ் எதோச்சாதிகாரத்தைத்தடுத்து நிறுத்தக்கூடிய வாய்ப்புகள்
1962 ஆம் ஆண்டுத் தேர்தலில் நிச்சயமாக ஏற்படுமென்று நான்
உறுதியாக நம்புகிறேன்.
இறுதியுமல்ல – முடிவுமல்ல!
ஆகையால், அதற்கேற்ற வகையில்
நாம் பணியாற்ற வேண்டுமென்று நேற்றைய தினம் நான் உங்கைளை
விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டேன். நாளைய தினம் யார்
யார் எந்தெந்த இடத்தில் நிறுத்தப்படுவார்களென்பது பற்றி
ஒரு பட்டியலை வெளியிடுவதாகச் சொன்னேன். இன்று மாலையிலே ஓரளவுக்குப்
பட்டியலை வெளியிடலமென்று நான் இருக்கிறேன். அது இறுதியான
பட்டியல் அல்ல. முடிவான பட்டியலும் அல்ல. அதிலே சிலருடைய
பெயர் இல்லையென்றால் விடுபட்டுவிட்டதென்று பயப்படத் தேவையில்லை.
சில தொகுதிகளைப் பற்றிய குறிப்பில்லையென்றால்,
அத்தொகுதி யாருக்கோ கொடுக்கப்பட்டுவிட்டது என்று பயப்படத்
தேவையில்லை. முதல் தவணையாக ஒரு பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்ட
இருக்கிறது. அதைத் தொடர்ந்து மறுபட்டியலும் அடிக்கடி நான்
முடிவெடுக்கின்ற நேரத்திலெல்லாம் யார் யார் நிறுத்தப்படுவார்களென்று
முறைப்படி அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி, பொதுவான அரசியல் பிரச்சினைகளைப்
பற்றி நாம் இந்த மாநாட்டிலே அலசிப் பார்க்க வேண்டிய அவசியத்தில்
உள்ளபடியே இருக்கின்றோம்.
மதுரையிலே நடைபெற்ற மாநில
மாநாட்டிற்குப் பிறகு நாம் இந்த இடத்திலே ‘தேர்தல் சிறப்பு
மாநாடு‘ என்ற பெயராலே கூடியிருக்கின்றோம்.
ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்கு
முன்பு மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், நாட்டை எதிர்நோக்கியிருக்கும்
பல முக்கியமான பிரச்சினைகள் பற்றி நாம் முடிவெடுத்திருக்கிறோம்.
சந்தேகம் கொண்டவர்கள் மாநாடு
ஐந்து மாதங்களுக்கு முன்னாலே
நாம் மதுரையிலே கூடிய பிறகு நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற
முக்கியமான மாறுதல்களிலே நான் குறிப்பிட்ட விரும்புவது இந்தியப்
பேரரசை நடத்துகிற ஆட்சியாளர்கள் இந்தியப் பேரரசை நடத்திக்
கொண்டு வருகிற்ன காங்கிரசுக்கட்சியினர் – நாட்டிலே தேசிய
ஒருமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமென்ற அவசியத்திலே தள்ளப்பட்டு,
‘இந்தியா ஒரு நாடு‘என்று கடந்த பதினைந்து ஆண்டுகளாக எடுத்துச்
சொல்லி வந்தவர்கள். ‘இந்தியா என்று ஒரு தேசம் இருக்கிறது.
இந்திய மக்கள் என்று ஒருவகை மக்கள் இருக்கிறார்கள். அவர்கள்
ஒரே இன மக்கள்‘ என்று எடுததுச் சொல்லிக் கொண்டு வந்தவர்கள்
– அதிலேயே அவர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டு அல்லது நாட்டிலே
அததைப்பற்றிச் சந்தேகப்படுபவர்கள் இருக்கிறார்கள் என்பதை
அறிந்து ஒரு மாநாட்டைக் கூட்டினார்கள்.
வழிமுறைகளை வகுத்தனர்!
அதற்கு முன்னாலே பண்டித நேருவின்
திருக்குமாரத்தி இந்திரா காந்தியின் தலைமையில் இந்தியத்
தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை அவர்கள் அமைத்திருந்தார்கள்.
அந்தக் குழுவினுடைய ஆலோசனைகளும் ஆராய்ச்சிகளும் முடிவுற்ற
பிறகு அவர்கள், நாட்டிலே இருக்கிற பல்வே்று அரசியல் கட்சித்
தலைவர்களையும் ஒரு மாநாட்டிலே கூட்டி, தேசிய ஒருமைப்பாட்டை
எப்படி ஏற்படுத்த வேண்டும் – எந்தவிதத்திலே உண்டாக்க வேண்டும்
– என்றெல்லாம் ஆலோசித்துப் பார்த்து, அதற்குச் சில வழிமுறைகளை
வகத்துச் சொன்னார்கள்.
அந்த வழிமுறைகள் நாட்டிற்கு
ஏற்றவையா என்பதும், பலன் தரத்தக்கவையா என்பதும் ஒருபுறமிருக்க,
அவர்கள் தேசிய ஒருமைப்பாடு தேவையென்று வற்புறுத்த ஆரம்பித்ததிலேயிருந்து
– தேசிய ஒருமைப்பாட்டை நாம் ஏற்படுத்தித் தீரவேண்டும் என்று
அவர்கள் எடுத்துச் சொல்லி இருப்பதிலேயிருந்து, ‘இந்தியா
ஒரு தேசம், இந்தி மக்கள் ஒரு இன மக்கள்‘ என்று இதுவரையிலே
சொல்லிக் கொண்டு வந்தது நடைமுறைக்கு ஒத்துவருவதில்லை என்பதையும்
ஆளுகிறவர்களே ஒப்புக் கொள்கிற அளவுக்கு உலகுக்கு அறிவிக்கப்பட்டு
உள்ளது.
நமது வழக்குக்கு ஒரு காரணமாக
அமைந்தது
உலகிற்கு அந்த விஷயம் அறிவிக்கப்பட்டு
இருப்பதால் நாம் எடுத்துக் கொண்டிருக்கிற அடிபப்டைக் கருத்து
நாம் எடுத்து விளக்கனிற் அடிப்படை உண்மை, ‘இந்தியா ஒரு தேசமல்ல,
இந்திய மக்கள் ஒரு இன மக்கள் அல்ல. இந்தியா என்பது ஒரு துணைக்
கண்டம். அந்தக் கட்ணத்திலே பிணைக்கப்பட்டிருக்கின்ற திராவிடத்திலே
வசிக்கிற மக்கள் தனியான பண்டைய மக்கள், தனி இயல்புபடைத்த
மக்கள் திராவிட மக்கள் என்று நாம் சொல்லிக் கொண்டு வந்ததற்கு
ஒரு உறுதிப்பாடு ஏற்படுகின்ற வகையில் தேசிய ஒருமைப்பாடு
மாநாடு அல்ல காரணமாக அமைந்திருக்கின்றது.
ஆகையினால் மதுரை மாநாட்டிற்குப்
பிறகு ஐந்து மாதங்களிலே நாம் கூர்ந்து கவனிக்கத்தக்க முக்கியத்துவம்
பெற்ற முக்கியமான பிரச்சினை, ‘தேசிய ஒருமைப்பாடு‘ என்று
ஆடசியாளர்கள் பேசித் தீரவேண்டிய தேசிய ஒருமைப்பாட்டைப் பெற
வேண்டுமென்று – அறிந்து தீரவேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது
முக்கியமாகக் கவனிக்கத்தக்கதாகும்.
கண்டுபிடிக்க இயலவில்லை!
அது மட்டுமல்லாமல், காங்கிரசு
பதினான்கு பதினைந்து ஆண்டுகளாக ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு
கொண்டு வந்த போதிலும், பஞ்சசீலத்தை உலகத்திற்கெல்லாம், அவர்கள்
உபதேசித்துக் கொண்டு வந்த போதிலும், எந்தக் கட்சியினிடத்திலேயேயும்
– எந்த நாட்டினிடத்திலேயும் – எந்த வல்லரசினிடத்திலேயும்
நாங்கள் சேரமாட்டோம். நாங்கள் நடுநிலைமைக் கொள்கைதான் வகிக்கிறோம்‘
என்று பண்டித நேரு அவர்கள் பலமுறை வலியுறுத்தி வந்தாலும்,
உலக அரங்கத்திலே இன்றைய தினம் இந்தியத் துணைக்கட்ணத்திற்கு
யார் உறுதியான நண்பர்கள் – உறுதியற்ற நண்பர்கள் என்று கண்டுபிடிக்க
முடியாத அளவிற்குச் சர்வதேச நிலைமை நாளுக்குநாள் பாழ்பட்டுக்
கொண்டு வருகிறது.
இந்தியாவிலிருந்து நாம் திராவிடத்தைப்
பிரிக்க விரும்புகிறோம் என்பது உண்மைதான் என்றாலும், பிரிந்த
பிறகானாலும் சரி – பிரிவதற்கு இடையிலேயானாலும் சரி – இந்தி
யஎல்லையிலே ஏற்படக்கூடிய நிலைமைகள் நாம் வெகுவாகக் கவனிக்கப்பட
வேண்டிய நம்மைப் பாதிக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகளாகும்.
அந்த விதத்திலே பார்ககிற நேரத்தில், இந்தியாவின் வடகிழக்கு
எல்லையில் சீனா ஏகாதிபத்தியம் என்று சொல்லத்தக்க அளவில்
சீனாவினுடைய ஆக்கிரமிப்பு நடைபெற்று, இநதிய மண்ணுக்குச்
சொந்தமான பெரிய பூபாகம் சீனர்களால் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
எவ்வளவோ நிதானத்தோடு பண்டித நேரு அந்தப் பரிச்சினையைக் கவனித்தாலும்
– அவர்கூடச் சில வேளைகளிலே ஆத்திரப்படத்தக்கவகையிலேயும்,
ஓரளவிற்கு நிதானத்தைப் பெற முடியாதவர்கள் உண்மையிலேயே பயப்படத்தக்க
அளவிலேயும் சீன ஆக்கிரமிப்பு எல்லைப்புறத்திலே நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.
தி.மு.க. முழு ஒத்துழைப்பு
தரும்
இங்கிருந்து நான் பேசிக்கொண்டிருக்கிற
நேரத்திலேயும், நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிற நேரத்திலேயும்
இந்தியாவினுடைய ஒரு எல்லையில் சீனப்படைகள் பாதைகள் அமைப்பதிலும்,
டாங்கிகளைச் செலுத்துவதிலும், பீரங்கிகளை அமைத்துக் கொண்டிருப்பதிலும்
ஈடுபட்டிருப்பதாக பல்வேறு இடங்களிலிருந்தும் தகவல்கள் நாளுக்கு
நாள் வந்து கொண்டிருக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை,
பயங்கரமான வடிவம் எடுக்காமலி்ருக்க வேண்டுமெனத் தி.மு.கழகம்
விரும்புகிறது விரும்புவது மட்டுமல்ல – அப்படிப்பட்ட சூழ்நிலை
உருவெடுக்குமானால் எல்லைப் பாதுகாப்புக்காகத் தி.மு.கழகம்
தன்னாலான முழு ஒத்துழைப்பை ஆட்சியாளருககத் தரும் என்பதையும்
இநத் மாநாடு மூலமாக நாம் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அதைப்போலவே, தீவிரமான பொதுவுடைமைக்கட்சி-பொதுவுடைமைச்
சர்க்காரை அமைத்திருக்கின்ற சீன நாடு இன்றைய தினம் ஒரு ஆக்கிரமிப்பு
என்று உலகத்திலே கருதப்படத் தக்க ஒரு நடவடிக்கையிலே இறங்கியிருப்பது
உள்ளபடி வருந்தத்தக்கது என்பதையும் நாம் எடுத்துச் சால்லாமல்
இருப்பதற்கில்லை.
சீனாவிலே ஏற்பட்ட புதிய ஆட்சி
– சீனாவிலே ஏற்பட்டிருக்கின்ற சமதர்மத் தத்துவ வெற்றிகள்
– இவைகளெல்லாம் எந்த அளவுக்கு நம்முடைய உள்ளத்தை ஈர்க்கத்தக்கதாக
இருக்கின்றனவோ அதே வகையில், சீனா இன்றைய தினம் எல்லைப்புறத்தில்
கால் வைத்திருப்பது சீனாவைப் பற்றிச் சந்தேகிக்கத்தக்க வித்திலேயும்,
சீன நடவடிக்கை அருவறுக்கத்க்க வகையிலேயும் இருக்கிறதென்பதை
நான் எடுத்துச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
இது என்ன போக்கு?
பிரிட்டீஷ் ஏகாதிபத்தியமும்,
அதற்கு அடுத்த வகையிலே வைத்துப் பேசத்தக்க நிலையில் உள்ள
பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் முறையே இந்தியத் துணைக்கண்டத்தையும்,
இந்தியத் துணைக்கண்டத்திலே இருந்த புதுச்சேரிப் பகுதியையும்
பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்துவிட்டு, புதிய சூழ்நிலைக்குத்
தங்களை ஆளாக்கிக் கொண்டதைப்போல், சின்னஞ்சிறு நாடான போர்ச்சுக்கல்
நாடு இன்னமும் மூர்க்கத் தனமாகவும், சர்வாதிகார வெறிபிடித்தும்,
இராணுவத்தை நம்பிக் கொண்டும் கோவாவை இன்னமும் கைப்பற்றி
வைத்துக் ்கொண்டு இருப்பதும், கோவாவில் பயங்கர நிலைமைகைளை
உருவாக்கிக் கொண்டிருப்பதும் நமக்கெல்லாம் உள்ளபடி மனவருத்தத்தைத்
தருவதாக இருக்கிறது.
நான் சமீபத்தில் பம்பாய்க்குச்
சென்றிருந்த நேரத்தில் வழி நெடுக ஹூக்ளியிலிருந்து பம்பாய்
செல்கின்ற வரையில் மோட்டார் கார்களிலே பெரிய பெரிய கார்கள்
– பட்டாளத்துக் கார்கள் பாதைநெடுக வந்த கொண்டிருந்ததைப்
பயங்கரத்தோடு பார்த்துக் கொண்டே போனேன். ஏறக்குறைய இந்திய
இராணுவத்தின் நடமாட்டம் ஹூக்ளி நகரத்திலே இருந்து பம்பாய்
வரையிலே வழி நெடுக இருந்து வந்ததை நாங்கள் பார்த்தோம்.
அக்கிரமங்களைக் கண்டிப்போம்
அந்த அளவிற்கு இராணுவ நடவடிக்கை
எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலே இந்தியாவைக் கொண்டுவந்து
நிறுத்தத்தக்க அளவில் போர்ச்சுக்கல் ஏகாதிபத்தியம் வெறிபிடித்து
அலைவதை இந்த மாநாட்டிலே முன்னேற்றக் கழகத்தின் சார்பில்நாம்
மிக வன்மையாகக் கண்டிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
இது குறித்துத் தி.மு.கழகம்
மாநாடுகளிலே ஏற்கனவே தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது.
இன்றைய தினமும் அதனை வலியுறுத்தி என்னுடைய தலைமையுரயிலேயே
அதனைக் குறிப்பிடவேண்டுமென விரும்பி எடுத்துச் சொன்னேன்.
உணர்ந்து பேசுகின்றனர்
மற்றொரு முக்கியமான பிரச்சினையைப்
பற்றி நாம் இப்போது கவனிக்க வேண்டும். நம்முடைய நாட்டுப்
பிரிவினை கோரிக்கையைப் றற்ி இதுவரையிலே அது கேடு பயப்பது
கிடைக்க முடியாதது. அது காட்டுக்கூச்சல், அது கனவு, என்றெல்லாம்
பேசிக் கொண்டிருந்தவர்கள் இப்போது ‘அது ஒரு முக்கியமான பிரச்சினை,
கவனித்துத் தீரப்பட வேண்டிய பிரச்சினை, தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினை என்ற அளவிற்கு உணர்ந்திருக்கிறார்கள்.
மதுரையிலே நடைபெற்ற அ.இ.கா.
கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பண்டித நேரு,
நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையைப் பற்றியே பேசித் தீரவேண்டிய
அவசியமேற்பட்டது. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை உங்களுடைய
கவனத்திற்குக் கொண்டு வருவீர்களேயானால் நான் சொல்வது விளங்குமெனக்
கருதுகிறேன். அ.இ.கா. கமிட்டியில், தலைவர் சஞ்சீவியார் கொடியேற்று
விழாவை நடத்தி வைத்தார். கொடியேற்றுகிற பொழுது பேச்சில்
அவர் குறிப்பிட்டதுத் திராவிட நாட்டுப் பிரிவினையைப் பற்றி
தான் – விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதைப் பற்றி
அல்ல. காஷ்மீரைப் பற்றி அல்ல. சீனாவைப் பற்றி அல்ல! ாகாடியேற்றுகிற
பொழுது அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது – எதனால் இச்சந்தேகம்?
கொடியேற்றுகிறபொழுதே சஞ்சீவி ரெட்டியார், ‘எத்தனை காலத்துக்கு
இது பறக்குமோ?‘ என்ற சந்தேகத்தோடுதான் ஏற்றியிருக்கிறார்
என எனக்கத் தோன்றுகிறது. ஆகையினால்தான், கொடி மேலே ஏற்றப்படுகிற
நேரத்தில் அவருடைய உள்ளத்திலே நம்மைப் பற்றிய எண்ணம் ஊற
ஆரம்பித்திருக்கிறது. ஊற ஆரம்பித்த பின்அவர், விஷமத்தனமாக
அங்கே பேசியிருக்கிறார். ஏன் அதை விஷமத்தனம் என்று சொல்கிறேனென்றால்,
அது எங்களைப் பாதிக்கும் என்பதால் அல்ல – அது வேறு சிலரைப்
பாதிக்கும் என்பதால்தான்!
காரணம் இதுதான்!
அவர் என்ன பேசினார்? – ‘இந்தத்
தமிழ்நாட்டிலேதான் சிலபேர் நாட்டுப் பிரிவினை கேட்கிறார்கள்,
திராவிடம் அளிக்க வேண்டும் என்று எங்களடைய ஆந்திரத்திலே
யாரும் கோரவில்லை‘ என்று சொல்லித்தான் கொடியேற்றினார். அதன்
உண்மையான கருதது என்ன? – ‘தமிழ் நாட்டை ஆளுகிற காமராசரை
மாகபெரிய சாமர்த்தியசாலி என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களே,
நேரு அவர்களே – இவருக்கு ஒரு சாமர்த்தியமுமில்லை. இவர் இருக்கிறநாட்டிலே
தான் நாட்டுப்பிரிவினை கேட்கிற தி.மு.கழகம் வளருகிறது. எங்களுடைய
ஆந்திரத்திலே அல்ல. ஆகையால் ஆந்திரத்தை விடத் தமிழ்நாட்டிலே
இருக்கிற தலைவர்தான் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்காமல் இருக்கிறார்
என்று நேரு விடத்திலே காமராசரைப் பற்றிக் கோள் மூட்டிவிடுவதாக
அந்தப் பேச்சு அமைந்திருந்த காரணத்தால்தான், ‘அது விஷமத்தனமானது‘
என்று சற்றுக் கடுமையான வார்த்தையை உபயோகிக்க நேரிட்டது,
அப்படிப்பட்ட ஒரு வார்த்தையைச் சொல்லித்தான் அவர் கொடியேற்றினார்.